உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அதிகாலை நிக்கோலாய் டிக்கனோவ் 1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷயத்தைப் புரிந்து கொண்ட பிரமையைத் தோற்றுவிக்கும் ஒருவித வெளிச்சக் குழப்பம்; ஆயுதபாணிகளாகப் பலர் நகரத்துக்கு உள்ளேயும், உள்ளிருந்து வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் ரணகளத்துக்குப் போகிறார்களோ அல்லது அங்கிருந்துதான் வருகிறார்களா என்பது தெளிவுபடவில்லை. குட்டித்தளம் ஒன்று கூபூஜில்லாவுக்கு அனுப்பப்பட்டது. அதன் உத்தியோகம் ஓடிப்போன முஸல்மான் குடியானவர்களை ஊருக்குத் திரும்பி வந்து வீடும் குடித்தனமுமாகக் குடியிருந்து, ஏற்கனவே காற்றைப் புசித்து ஜீவித்து வரும் பாக்கூ வாசிகளுக்குத் தானியச் சாகுபடி செய்யும்படி தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தத் தளமானது எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வீதாச்சாரமிட்டது போல அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு வந்தது. நிர்வாக இலாகா போட்ட உத்தரவைக் காற்றுவாக்கில் விட்டுவிட்டு, தன் தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு நடையைக் கட்டி விடுவதிலேயே அதிகக் கவனம் காட்டினார்கள் அந்தத் தளத்தைச் சேர்ந்தவர்கள். மாஜி பாங்கி குமாஸ்தாவும் சோல்ஜருமான குருட்டிக்காவ் என்பவன் தன்னால் முடிந்தவரை அந்தத் தளத்தை நடத்திக்கொண்டு போனான். ஒருநாள் மாலை அந்தத் தளம் மலைச்சரிவின் அருகாமையில் போகும்போது துருக்கியர் அதைச் சூழ்ந்து கொண்டார்கள். திக்காலுக்கொன்றாக இரண்டொரு முறை சுட்ட பிறகு, குருட்டிக்காவ் தளத்துடன் வந்த ஏக ஸ்திரி ஜாதியான டாஷாவைப் பார்த்து தன்னுடைய மொண்ணைக் கத்தியின் முனையில் அவள் வசமிருந்த மிகவும் வெண்மையான கைக்குட்டையைக் கட்டச் சொன்னான். வைதுகொண்டும், சபித்துக்கொண்டும், அவனுடைய சோல்ஜர்கள், துருக்கியத் துருப்புக்களைத் தொடர்ந்து காலையிழுத்துப் போட்டனர்; துருக்கியத் துருப்புகளின் சோர்வுக்கும் குறைவில்லை. துருக்கிய உதவித் தளபதி நீலக்கண்ணாடி அணிந்து ஒற்றன் மாதிரி விளங்கும் செம்பட்டைச் சிகையுள்ள மனிதன். அவன் குருட்டிக்காவையும் அவனுடையை உதவித் தளபதியையும் டாஷாவையும் தணிந்து தஞ்சமான கூறையுடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். கருக்கல் வெளிச்சம் இயங்கும் ஒரு அறைக்குள் நுழைந்தார்கள். அதன் மத்தியில் உள்ள மேஜைமீது தடியான ரபிவே மெழுகுவர்த்தி குத்தி நிறுத்தப்பட்டு எரிந்து வழிந்தது. வர்த்தி வெளிச்சத்தைச் சூழ இதர கைதிகளும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தத் தளத்துடன் வந்த விவசாய நிபுணன், ஒரு தபால் உத்தியோகஸ்தர், ஒரு உத்தியோகஸ்தரின் விதவை - இவள் மட்டும் மெய்ஸ் அரிசி வைத்துச் செய்த பெரிய ரொட்டித் துண்டை சர்வ சம்மாரம் செய்துகொண்டிருந்தாள் - எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். "மறுபடியும் சண்டைக் கெடுபிடியைப் பார்க்கிறோம், அன்ட்ரூய்ஷா" என்று டாஷா வெகு உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு, தன் பைக்குள்ளிருந்த சின்ன முகக் கண்ணாடிக்காகத் துழாவினாள். குருட்டிக்காவின் முழுப் பெயர் அன்ட்ரூய்ஷா குருட்டிக்காவ். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த கம்பிபோட்ட கைக்குட்டையை அவிழ்த்தான். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் குளிர் உறைக்க ஆரம்பித்ததினால், அதை மறுபடியும் கட்டிக்கொண்டான். காலைத் தூக்கி பூட்ஸில் படிந்திருந்த புழுதியைக் கந்தை ஒன்று கொண்டு துடைத்தான். குருட்டிக்காவ் அறையில் அங்குமிங்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். இரட்டைக் குழல் தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்று கழுத்தைச் சுற்றிய வாரில் தொங்கி அவனுடைய நெஞ்சில் இடித்துக் கொண்டிருந்தது. அவனிடமிருந்த ஆயுதங்களெல்லாம் பிடுங்கிவிட்டார்கள். "என் இஷ்டப்படி, எனக்கே எனக்கு என்று நான் சொல்லிக்கொள்ளக்கூடிய நிலைமையில் வாழுவதுதான் என் விருப்பம். என்னை ஏன் பாங்கியிலிருந்து இழுத்துப் போட்டார்கள்? நான், - குருட்டிக்காவ் - என்ன சோல்ஜரா? என்னை, என்ன நெப்போலியன் என்று கெரன்ஸ்கி என்று நினைத்துக்கொண்டார்களா? கடைசியாகப் பித்துக்குளித்தனமாக அகப்பட்டுக்கொண்டு முழிக்கிறேன். என்னமோ ஜெர்மன்காரன் பெட்ரோகிராடைப் பிடித்துக்கொண்டார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். பிடித்துக்கொள்ளட்டுமே, எனக்கென்ன, என்னைச் சும்மா விட்டுவிடுன்னுதானே கேட்கிறேன். சமயத்திலே வெள்ளைக் கொடியைக் காட்டியிருக்காது போனால் என்னைக் கொன்றே போட்டிருப்பார்கள். அது ஒனக்கு எப்படியிருக்கும்? எனக்கென்னமோ பிடிக்கல்லே..." என்று ஆத்திரத்தை உலுப்பி கொட்டிக் கொண்டிருந்தான். "அன்ட்ரூய்ஷா, ஆத்திரப்படாதே. இந்தா ஒரு முத்தம் வேணும்னாலும் வாங்கிக்கோ. இம்மாதிரி அகப்பட்டுக் கொள்கிறது வேடிக்கையாக இல்லை" என்றாள் டாஷா. "வேடிக்கையா வித்தாரமா, நாவல் படிச்சுப் படிச்சு இந்தப் பெண்டுக மூளையைக் கரியடுப்லேதான் போடணும்" என்று குருட்டிக்காவ் கூச்சல் போட்டான். அந்தச் சமயத்தில், இவனைச் சிறைப் பிடித்த துருக்கிய ராணுவ உத்தியோகஸ்தர் உள்ளே நுழைந்தார். "அந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கொடுத்து விடு. அது ராணுவ சொத்து"ன்னு ரஷ்ய பாஷையில் முரட்டுத் தனமாகச் சொன்னான். "ஏன்? என் கால்சட்டை எடுத்துக்கோ, என் பூட்ஸை எடுத்துக்கோ, என் தொப்பியை எடுத்துக்கோ, அதுவும் ராணுவச் சொத்துதான்" என்று கத்திக் கொண்டு குருட்டிக்காவ் குதித்தான். "உனக்கு வெட்கமில்லையா? தூரதிருஷ்டிக் கண்ணாடியை வச்சுக்கொண்டு யாரையாவது சுட முடியுமா" என்றாள் டாஷா. துருக்கியன் முகத்தில் அசட்டுக்களை தட்டியது. அவளுக்குப் பதில் சொல்லப்போவது போல, டாஷாவையே விரைத்துப் பார்த்தான். "பாக்ஷா, கூப்பிடுகிறார் வா, நட" என்று உத்தரவு போட்டான். அவனுடைய கண்கள் நீலக் கண்ணாடிக்குப் பின்னால் கொந்தளித்தன. பாக்ஷா பாசறை நடுவில் போடப்பட்ட நெருப்புக்கு எதிரே மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே பிரபல ஷெய்க் ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரபல அரபு பண்டிதர், பெயர் நாஷிமுத்தீன் ஹாட்ஸின்ஸ்கி. பாக்ஷாவானவர் நாஷிமுத்தீன் கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாஷிமுத்தீன் சந்தேகத்துடன், தலையசைத்து ஆமோதித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். "ரேகை சாஸ்திரம் வருங்காலக் குழப்பம் பற்றியது" என்று தொடர்ந்து பேசிக்கொண்டு போனார் பாக்ஷா. ஆனால் குருட்டிக்காவ் முகம் சுழிப்பதைக் கண்டு கொண்டார். நீலக் கண்ணாடிகளையும் பார்த்தார். தலையை நிமிர்த்தி நெருப்புக்கு மறுபுறம் பார்வையைச் செலுத்தி மடமடவென்றும் அமைதியாகவும் சில வார்த்தைகளைச் சொன்னார். "பாஷா, உன் வசம் இருக்கும் சம்பளத் தொகையை ஒப்புவித்து விடும்படி உத்தரவு போடுகிறார்" என்று தர்ஜமா செய்தான் நீலக்கண்ணாடிக்காரன். "யாரிடம் ஒப்புக் கொடுக்க? வேண்டுமானால் பாங்கியில் என் ஆபீஸ் அறையில் 20-ந் தேதி வந்து என்னைப் பார். இங்கே நான் யாரிடம் கொடுக்கிறது? அது கிடக்கட்டும் எப்படிக் கொடுப்பது? எனக்கு இரண்டு கட்சியும் ஒன்றுதான். இப்படியிருக்கும்போது என்னை ஏன் இந்தக் கேள்வியைப் போட்டு வதைக்கிறீர்கள்? கேட்கிறதா, இரண்டு கட்சியும் ஒன்றுதான். நான் இரண்டுக்கும் பொது, எனக்கொன்றும் தெரியாது." துருக்கியன் இன்னும் சற்று உரத்த குரலில் உத்தரவை மறுபடியும் சொன்னான். "சண்டை ஆரம்பமாகுமுன் உன்னுடைய தளங்களிடை சம்பளத்தைப் பட்டுவாடா செய்ய உனக்கு அவகாசம் கிடைக்கவில்லை என்பது பாக்ஷாவுக்குத் தெரியும்." "எந்தச் சண்டைக்கு முன்னாலே? என்ன பேத்துகிறாய்? அந்த புளுகெல்லாம் என்கிட்ட விட்டுப் பார்க்காதே. அளந்து கொட்டாதே. சண்டை எதுவும் நடக்கவில்லை." "உன்னுடைய தளத்துக்கு இங்கேயே, இப்போதே சம்பளத்தைப் பட்டுவாடாச் செய்யவேண்டும் என்று பாக்ஷா உத்தரவு போடுகிறார்" என்று அந்தத் துருக்கியன் மறுபடியும் வற்புறுத்துகிறான். "ரொம்பச் சந்தோஷம்" என்று தோளைக் குலுக்கிக் கொண்டான் குருட்டிக்காவ். "இந்த நெருப்பு முன்னாலே இந்த இடத்திலே என்ன உங்கள் பாக்ஷா சம்பளம் பட்டுவாடா பண்ணுவதைப் பார்த்ததே கிடையாதோ? ஆனால் உன்னுடைய சிப்பந்தி கிட்ட அல்லவா சம்பளப் பணம்..." உதவி லெப்டினன்ட் தருவிக்கப்பட்டான். நெருப்பில் இன்னும் சில உலர்ந்த கொப்புகள் போடப்பட்டன. சோல்ஜர்கள் வரிசையாக நின்றார்கள். காசு பெறாத காகிதப் பணத்தை மௌனமாக வாங்கிக் கொண்டார்கள். அதில் கெரன்ஸ்கி ரூபிள்களும் (ரூபிள்: ரஷிய நாணயம்) கலந்திருந்தது. வாங்கி முண்டும் முடிச்சுமான கைக்குள் வைத்துக் கசக்கி அடக்கினார்கள் உதவி லெட்டினன்ட் பட்டியலின் பெயர்களுக்கெதிரே குறிபோட்டுப் பதிவு செய்து கொண்டான். பாக்ஷா சுருட்டுப் பிடித்தபடி, அரைக்கண் போட்டு இந்த நபர்கள் இருளுக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். குருட்டிக்காவ் திரும்பியபொழுது, டாஷா, அந்த நீலக் கண்ணாடிக்காரனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான். "இதுவும் வேறெயா? நானோ வெளியே போக முடியாது. அந்தப் பயல்கூட என்ன பேச்சோ?" என்று உறுமினான். "கத்தாதே. நீ பேசறதெல்லாம் அவனுக்குப் புரிகிறது. அவன் பேர் ஆலி ஹஸன்." துருக்கியன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு வெளியேறினான். உத்தியோகஸ்தனுடைய விதவை வெறும் ஜலபானமாக இருந்த தேயிலைப் பானத்தைப் புட்டியிலிருந்து குடித்துக் கொண்டிருந்தாள். அந்த விவசாய நிபுணர், செக்காவ் கதைகள் படித்துப் பொழுதைக் கழித்தார். உதவி லெப்டினன்டும், தபால் அதிகாரியும் வீட்டில் போட்டு முளைக்க வைத்த புகையிலைத் தழையைத் தமக்குள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக் கொண்டார்கள். ஆலிஹஸன் மறுபடியும் உள்ளே வந்தான். "பெண்டுகள் வேறு ஆண் பிள்ளைகள் வேறு என்று தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்று பாக்ஷா உத்தரவு கொடுத்திருக்கிறார்" என்றான். "ஒன் இஷ்டம்" என்று மறு பக்கத்தைப் புரட்டினார் விவசாய நிபுணர். "பெண்டுகள் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தாத் தேவலையென்றல்லவா நினைத்தோம்" என்று மூலையிலிருந்து கொண்டு கத்தினான் தபால் உத்தியோகஸ்தன். "உம், நாங்களும் ஒரு காலத்திலே கட்டுமஸ்தா இருந்தவங்கதான்" என்றான் உதவி லெப்டினன்ட். குருட்டிக்காவ் அந்தத் துருக்கியன் எதிரில் போய் நின்று கொண்டு அவன் முகத்தருகில் முஷ்டியைக் குலுக்கினான். "அதோ அங்கே இருக்கே அந்தப் பெண் ஜன்மம் அதை வேண்டுமானால் அப்புறப்படுத்து" என்று சாயா குடித்துக் கொண்டிருக்கும் கிழவியைச் சுட்டிக்காட்டிவிட்டு, "இவளை அகற்ற முயன்றாயோ" டாஷாவைக் கையில் பிடித்துக் கொண்டபடி, "தூரதிருஷ்டிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு சண்டைபோடுவேன். கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கடுதாசி எழுதுவேன். பாக்ஷாகிட்ட, என் கூட வேண்டுமானால் வா, அவருடைய மூஞ்சிக்கு நேரே இதைச் சொல்லுவேன்; சொல்லத்தான் செய்வேன். அவருக்குச் சுருட்டுக் குடிக்கத்தான் தெரியும், உத்தியோகம் பார்க்கத் தெரியவில்லை என்று நிச்சயமாகச் சொல்லுவேன்" என்று கூறினான். "நானும் கூடப் போவேன்" என்றாள் டாஷா. கிழவியையும் கையைப் பிடித்து இழுத்து, "நீயும் போய் பாக்ஷாவிடம் புகார் செய். இந்த அவமானத்தைச் சகித்துக்கொண்டு கிடப்பதா? எழுந்திரு போகலாம்" என்று கூப்பிட்டாள். நெருப்பு இடம் பெயரவில்லை அதே இடத்தில்தான் எரிந்து கொண்டிருந்தது. பாக்ஷா இப்போது தன்னுடைய இடது கையுடன் நாஷிமுத்தீனுடையதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு உரத்த குரலில் "ஆள்காட்டி விரலிலிருந்து மை விரலுக்கு மெல்லிய ரேகைகள் ஓடுகின்றன. எபஸ்டி உமக்கு மண்டையில் அடி விழுந்து காயமேற்படும் என்று அதற்கு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். பாக்ஷாவோடு வாதம் பண்ண நாஷிமுத்தீனுக்கு ஆசை கிடையாது. நிலச்சுவான்தாராக இருப்பதோடு மந்திரியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. நளினமாக அரபு பிரயோகித்து ஆட்சேபித்துக் கொண்டார். "நான் ஐரோப்பாவிலே ஐந்து வருஷம் இருந்திருக்கிறேன், என்னை நம்பும். அங்கெல்லாம் இந்த ரேகை சாஸ்திரம், பெரியதொரு சித்தாந்தமாகிவிட்டது" என்றார் பாக்ஷா. இந்தச் சமயத்திலே இளமை ததும்பும் டாஷாவின் செக்கக் கனிந்த முகம் நெருப்பிடையே எழும் பீனிக்ஸ் புல்போலத் தோன்றுகிறது. "இந்தப் பெண் யார், என்று பாக்ஷா கேட்கிறார்" என்றான் ஆலி ஹஸன். "அவள் என் பெண்டாட்டி" என்றான் குருட்டிக்காவ் அவசர அவசரமாக. "அங்கே நிற்கிற அவள் யார்... அவளும் உன் பெண்டாட்டிதானா" என்று கிண்டலாகக் கேட்டான் துருக்கியன். "அவள் என் பாட்டியார். துருக்கியப் பட்டாளத்து ஆபீஸரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நேராகக் கன்னியாஸ்திரீ மடத்திலிருந்து வந்திருக்கிறாள்?" என்றான் குருட்டிக்காவ். துருக்கியன் மீசையை உறுவி விட்டுக்கொண்டு கைகளை நெறநெறவென்று நெரித்தான். டாஷாவின் அழகை ரசித்தபடி, பாக்ஷா, "இந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "அவளுக்குத் தன் புருஷனைவிட்டுப் பிரிந்து போக வேண்டும் என்று ஆசை. அவன் எப்போதும் மொணமொண என்று கொண்டே இருக்கிறானாம். பேய்போல நடக்கிறானாம்" என்று ஆலி அவசர அவசரமாகத் தர்ஜமாச் செய்தான். "அது சரியான தர்ஜமா அல்ல" என நாஷிமுத்தீன் விடுதலை பெற்ற தன் கையை முழங்காலில் தட்டினான். "அப்படியல்ல, அவள் புருஷனோடேயே இருக்க ஆசைப்படுகிறாள்" பாக்ஷா சுருட்டில் ஒட்டி நின்ற சாம்பலை, நாஷிமுத்தீன் சட்டையில் தட்டிக் கீழே உதறினார். "நான் ரஷ்யாகூடச் சண்டை போடவில்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். இன்னும் மோசமான விவகாரங்களிலிருந்து அவர்களைத் தப்புவிக்க என் பாதுகாப்பில் அழைத்துக்கொண்டேன் என்று சொல்லுங்கள் ஆலி ஹஸன். முன்போல இல்லாமல் நாளைக்கு ஏதாவது ஒரு வண்டியை அமர்த்தி இந்த இரு பெண்டுகளையும் அதில் உட்காரவை; அவர்களையும் மற்றக் கைதிகளையும் நாளைக்கு நூஹூவுக்கு அனுப்பப் போகிறேன். கேட்கிறதா? அவர்கள் கைதிகள்தான்; என்றாலும் கௌரவமான கைதிகள். இரவு இவர்களிடம் சொல். முன்போல உன் சொந்தத்திலே தர்ஜமா செய்யாதே. ஜாக்கிரதையாக இருக்கட்டும்" என்றார். டாஷா, பாக்ஷாவுக்குத் தலை வணங்கினாள். ஒரு கையில் தொலைக் கண்ணாடிகளை இறுகப் பிடித்துக் கொண்டபடி குருட்டிக்காவ் ஸல்யூட் செய்தான். ஆனால் டாஷா வீட்டுக்குள் நுழையும் போது ஆலி ஹஸன் அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "என் கூட வந்துவிடு, சுகமாக இருக்கலாம்" என்றான். "கையை விடு, இருக்கிற இடத்தில் சௌகரியமாகத்தான் இருக்கிறது" என்று இரகசியமாகக் கைகளை உதறித் தட்டி விட்டாள் டாஷா. அவள் கிள்ளின கிள்ளில் துருக்கியன் உதறியடித்துக் கத்திக்கொண்டு துள்ளினான். வண்டி கனமானது. அதை இழுப்பதற்குப் பூட்டிய இரு குதிரைகளோ சன்னமானவை. சக்கரம் சற்று சுழன்றால் வண்டி பூட்டோ டு குலுங்கியது. அவ்வளவு ஒடசல். அதன் ஆயுசைக் கண்டு ஆலி ஹஸன் ஆத்திரப்பட்டான். வழி ரொம்பவும் குறுகலாக இருந்ததால், வண்டிக்குப் பின்னால் லொங்கு லொங்கு என்று தொடர்ந்தான். ஜாடை காட்டினான், சிரித்தான், விரல்களை முத்தமிட்டுக் காட்டினான், வாய் ஓயாது பேசினான். வண்டி நின்ற இடங்களில் எல்லாம் டாஷாவைக் கைகொடுத்து வண்டியை விட்டு இறக்கி விட்டான். அந்தக் கும்பலில் எஜமான கொட்டம் போட்டான். அவனை அவமானப் படுத்துவதற்காக குருட்டிக்காவ் தொலைக் கண்ணாடியை மாற்றிப் பிடித்துக்கொண்டு அதன் வழியாகப் பார்த்தான். பிம்பம் துருக்கியனைக் கொசுவாக்கியது. அதற்கப்புறம் குருட்டிக்காவ், வழி காட்டிச் செல்லும் பரிவாரக் கோஷ்டித் தலைவனான போடாவி என்பவனுடன் பேச்சுக் கொடுத்து உறவு பண்ணிக்கொண்டான். அந்த நபர் இவனுடைய தளத்தில் இவனுக்குக் கீழே சேவை செய்தான். போடாவியும் உறவு கொண்டாட குர்ட்டிக்காவ் நெஞ்சின் கொதிப்பை எல்லாம் அவனிடம் திறந்து கொட்டினான். வழிகாட்டியாகப் போவதுடன், இராத்திரியில் தங்குமிடம் தேடிக் கொடுக்கும் வேலையும் போடாவிக்கு ஒப்புவிக்கப்பட்டிருந்தது. "நாம் அந்தக் கிராமத்தில் தங்காமல் நெடுகப் போய்விடுவோம். அங்கே போனால் நம் தலையைக் கொய்து போடுவார்கள். அது கலகக்காரக் கிராமம். ரஷ்யர்கள் என்று தெரிந்தால் யாரிடமும் தாட்சண்யம் காட்டமாட்டார்கள்" என்றான் போடாவி. இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். விவசாய நிபுணரையும் தபால் உத்யோகஸ்தரையும் பாக்ஷா, கூபூவில் வைத்தே விடுதலை செய்து விட்டார். உதவித் தளபதி 'டிமிக்கி' கொடுத்துவிட்டுக் கம்பி நீட்டினான். மலை ஜாதிப் பையன் ஒருவனிடம் குத்துக்கத்தி ஒன்றை குருட்டிக்காவ் வாங்கி பூட்ஸுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டான். ஆலி ஹஸன் வெகுமானத்திற்கு மேல் வெகுமானமாக, டாஷாவுக்குக் கொடுத்துக் குவித்துக் கொண்டிருந்தான். பாசிமணி, பழைய அபூர்வ நாணயங்கள், மலர்கள், அபூர்வமான ரத்தினக் கல்லுகள் எல்லாம் கைமாறின. "வாங்கிக் கொள்ளாமல் இருப்பாயா மாட்டாயா" என்று குருட்டிக்காவ் கோபாவேசத்துடன் கத்தினான். "அவனை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? அவன் யோக்கியஸ்தன்" என்றாள் டாஷா. "ஆமாம் ரொம்ப யோக்கியஸ்தன்" என்று பதிலுக்கு இரைந்துகொண்டு தொலைக் கண்ணாடியைத் தூக்கிப் பயமுறுத்தினான். "நீ அவன்கூடக் கண்ணடித்துக் கொண்டிருந்தால் நூஹூஹரைப் பார்க்கமாட்டே" என்றான். "நானும் அங்கே போவேன். நீயும் அங்கே என்கூட வரத்தான் போறே" என்றாள் டாஷா. கூட வந்த ரஷ்யர்கள் எங்கோ வாங்கிவந்த மட்டமான வோட்கா சாராயத்தைக் குருட்டிக்காவ் குடித்துவிட்டு போதையுடன் டாஷாவிடம் போனான். "என்கிட்ட வராதே. போ. எங்கிட்ட வராதே. குடிகாரனுக்குப் பொறக்கிற கொழந்தை குடிகாரனாகத்தான் இருக்கும்" என்றாள். "ஆமாம் அதுவும் நெசந்தான்" என்று சொல்லிவிட்டு அகன்று போய் போடாவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். இந்த மாதிரியாக இவர்கள் எத்தனையோ கிராமங்களைத் தாண்டிச் சென்றார்கள். வழியிலே எல்லாருக்கும் சளிபிடித்துக் கொள்ளத் தும்மிக் கொண்டும் இருமிக்கொண்டும் நடந்தார்கள். வாய் குழற குருட்டிக்காவ், போடாவியிடம், "அந்தத் துருக்கிப் பயலை எனக்காகத் தொலைத்துப்போடு" என்றான். "அப்படியே தீத்துப்புடவா? அவன் உன்னை என்ன செய்தான்?" "என் பெண்டாட்டியைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறான்." "ஆஹா, டாஷா" என்று பல்லிளித்தான் போடாவி. "அவனை விரட்டிப்புடு, கொல்ல வேண்டாம்" என்றான் குருட்டிக்காவ். "அவனை வழியில் எங்காவது தங்க வைத்துவிடு. அந்தப் பயல் தொல்லையில்லாமல் நூஹூவுக்குப் போய்ச் சேருவோம்." "இப்பவே செய்கிறேன்" என்றான் போடாவி. போகிற வழிநெடுக அவன் நாள் முழுதும் பாதையில் எதையோ தேடிக்கொண்டு வந்தான். அன்று மாலை காரட் கிழங்கு போன்ற ஒரு வேரைக் குருட்டிக்காவிடம் கொடுத்து, "இதை இடித்துக் காபியில் போட்டுக் கொடுத்துவிடு. அப்புறம் டாஷா நமக்குத்தான்" என்றான். கண்ணை ஒரு சொருகுச் சொருகிச் சுழற்றிவிட்டு வெளியே போனான். குருட்டிக்காவ் நினைவு ரொம்ப ஆழமாகப் பாய்ந்து யோசித்தது. "டாஷா நமக்குத்தான்" என்றானே அதற்கு என்ன அர்த்தம்? டாஷா, ஆலி ஹஸனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். துருக்கியன், குடிசையின் நடுத்தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். அவன் பல்லும் கண்ணும் மகிழ்ச்சியைத்தான் கொப்பளித்துக் கொண்டிருந்தன. நீலக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டான். "காலையிலே எங்ககூடக் காப்பி சாப்பிட வா" என்றாள் டாஷா. "உன் புருஷன் தான் சங்கடப்படுகிறானே" என்றான் துருக்கியன். அவள் திரும்பிக் குருட்டிக்காவ் முகத்தில் பார்வையைப் பதிய வைத்துச் சிரித்தாள். மறுநாள் காலை குருட்டிக்காவ் உட்கார்ந்து காப்பிக் கிண்ணத்துக்குள் பார்வையைச் சொருகிக் கொண்டிருந்தான். அவன் எதிரே காப்பி சுடச்சுட வரிசையாக ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. டாஷா கண்ணாடி எதிரில் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி, அவளுடைய உடையைத் தொட்டுப் தொட்டுப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். குருட்டிக்காவ் வெளியே ஆளரவம் கேட்டுக் கோப்பைக்குள் பொடித்த வேரைப் போட்டான். நான்கு பேர் மூலை திரும்பி வந்தார்கள். அவர்கள் ஆலி ஹஸனைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவன் பல்லை நெறநெறவென்று கடித்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். "பே கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டார்" என்றான் அந்த நால்வரில் ஒருவன். ஹஸன், டாஷாவைப் பார்த்து, அவள் சார்பாகத் தன் கைகளை முத்தம் கொடுத்துக் கொண்டான். போடாவி ஊருக்குள் போய், ஒரு நாட்டு வைத்தியனை அழைத்து வந்தான். வைத்தியனுக்குத் தலைகால் தெரியவில்லை. இவ்வளவு பெரிய மனிதனுக்கு வைத்தியம் செய்வதா? மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டது. நோயாளியைத் தன் வீட்டுக்கே தூக்கிக்கொண்டு போய்விடவேண்டும் என்று உத்தரவு போட்டான். ஆலி ஹஸன் தாகத்துக்குக் கேட்டான். குருட்டிக்காவ், பொடி கலந்த காப்பியைத் தன் காலடியில் ஊற்றிவிட்டான். "உன்னுடைய புருஷன் கொடுமைக்காரன்" என்று சொல்லிக்கொண்டே தன் பதவியை உதவி உத்தியோகஸ்தன் வசம் ஒப்புக் கொடுத்தான். ஆலி ஹஸனைப் பின்னால் தங்க வைத்துவிட்டு இவர்கள் புறப்பட்டபின், "டாஷா, உன்கிட்ட ஒரு விஷயம் பேசியாகணும். என் இஷ்டப்படி வாழணும். இந்த மலையும் காடும் எனக்குப் பிடிக்கவே பிடிக்கலை. எனக்கு நன்றாகக் கணக்குப் பதியத் தெரியும். இந்தா எனக்கு இந்த ஜெனரல் உத்தியோகம் பார்க்கத் தெரியாது. நான் நம்பக்கூடிய பெண் எனக்கு வேண்டும். எதிர் வருகிற பயல்களிடம் எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவள் அல்ல" என்றான். "வாயைப் பொத்திக்கோ அன்ட்ரீய்; லொழ்கோ மொயெவை மறந்து போனியா?" என்று சொல்லிக்கொண்டு கைகளை வைத்து அவன் வாயைப் பொத்தினாள். "அவனைப்பத்தி என்ன இப்போ, மறைத்து மறைத்து என்ன சொல்லுகிறாய்" என்று அவள் கையைத் தட்டிவிட்டுக் கத்தினான் குருட்டிக்காவ். "லொழ்கோ மொயெவ் பத்தி என்னவா? அவன் ரொம்ப சரஸமாப் பேசுவான். சோல்ஜர், துரோகி, துருக்கியர்கூடச் சேர்ந்துகொண்டான்" என்று மீண்டும் இரைந்தான் குருட்டிக்காவ். "அவன் ஒரு காலத்திலே என்னெக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் வேறு ஒரு பொக்கிஷத்தை எனக்கென்று எடுத்துக்கொண்டேன்." இந்தச் சமயம் பார்த்துப் போடாவி வண்டியை ஓட்டிச் செல்லும்படி உத்தரவு போட்டான். வண்டி திரும்பும் ஒவ்வொரு மூலையிலும் எங்கே அந்தத் துருக்கிப்பயல் வந்துவிடப் போகிறானோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தான். "நீயெல்லாம் இந்த இயற்கையழகைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டும். அந்த அபூர்வமான தழைகளைப் பாரு" என்றாள் டாஷா. "ஊருக்கு ஊர் மரம் மட்டை ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும். உன் மரத்தையும் சோலையையும் பார்த்தாச்சு. அப்புறம் வேறே என்னத்தைப் பார்க்க வேண்டும்?" "அந்த மேகத்தைப் பார்; எவ்வளவு அழகாக இருக்கிறது? கவுத்துவச்ச வாணலிச் சட்டி மாதிரி வட்டமா இருக்கு பாரு." "மேகம் என்றால் நீராவி எல்லாம் சேர்ந்து குவியலாகச் சேர்ந்திருப்பதுதான். அதைத்தவிர அங்கொன்றுமில்லை." "போ, போ, உனக்கு என் பேரில் பிரியமே இல்லை" என்று பெருமூச்சு விட்டாள் டாஷா. அவன் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய குதிரையை முன்னால் ஓட்டிச் சென்றுவிட்டான். போடாவி அவனுக்குக் கொடுத்தது ஒரு நொண்டிக் குதிரை. அவனுக்குக் குதிரைச் சவாரியில் நல்ல பழக்கமில்லாததினால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் சொப்பனத்தில் எல்லாம் பாங்கியையும் பெட்டியடியையும் கணக்குப் புத்தகத்தையுமே கண்டு ஏங்கினான். "உனக்கு ஒரு பெண்ணின் மேல் ஆசை என்றால் அவளுக்காக நீ சண்டைப் போடத் தயாராக இருக்க வேண்டும்" என்று அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள் டாஷா. "யாருகூடச் சண்டைபோட? என்ன சொல்றே? புரியலியே. நான் தான் உயிரோட இருக்கிறதற்காக மல்லாடினேன். அப்பறம் ரஷ்யாவுக்காக, தாயான ரஷ்யாவுக்காகச் சண்டை போட்டேன். அப்புறம் புரட்சிக்காகச் சண்டைப் போட்டேன். அப்புறந்தான் சிறைபிடித்துக் கொண்டார்கள். அங்கே கூட எனக்கு ஓய்வு கிடையாதா? இனிமே நான் ஒரு பெண்ணுக்காக வேறே சண்டை போட வேண்டும் போலிருக்கிறது. எவளுக்கு?" "எனக்காகத்தான்" என்றாள் டாஷா. "உனக்காகவா? அந்தத் துருக்கிய ஜாதி அமிஞ்சிப் பயல்தான் காலை ஒடித்துக் கொண்டானே?" "அடெ, என்ன முட்டாளாட்டம் பேசுகிறே. நான் அந்தத் துருக்கியனைப் பத்தியே யோசிக்கலே. போடாவி என்ன...?" "போடாவிக்கு என்ன? போடாவிக்கு என்ன இப்போ? அவனும் விளையாட ஆரம்பிச்சுட்டானா? நீயே ஒப்புக் கொள்ளுகிறாயா? அட கர்மமே..." டாஷா அவன் கன்னத்திலறைந்துவிட்டு ஓடிவிட்டாள். "இவள் கூத்தே ஒரு கூத்துத்தான். என்னை இவள் ஒரேடியாக நாசமடிக்கப் போகிறாள். ஏன் இவள் கையில் சிக்கிக் கொண்டேன். கையிலிருப்பதோ குறுங்கத்தி. அப்படி இருந்தாலும் இவளுக்காக நான் சண்டை போட்டு ஆக வேணுமாம். இதுவும் நல்ல கூத்துத்தான்" என்று நினைத்தான் குருட்டிக்காவ். மறுநாள் முழுவதும் வண்டியைச் சுற்றி வட்டமிட்டான் போடாவி. டாஷாவுடன் வாய் ஓயாமல் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு மலர்கள், அதிசயமான கல்லுகள், கிராமத்திலிருந்து பால் முதலியவற்றை அடிக்கடி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீச்சுக் கீச்சு என்று குருவி மாதிரி பேசுவதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வந்தாள் டாஷா. "இதென்னடா கதையா இருக்கு. குடியும் குடித்தனமுமாக வளர்ந்த பெண் இப்படியும் இருப்பாளோ? இவளுக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து தெம்பு வருகிறது. கண்ட கண்ட பேரையெல்லாம் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டுதான் நிற்க வேண்டுமோ? நானோ வாடி வதங்கிப் போகிறேனே. கொஞ்சமேனும் ஏறெடுத்துப் பார்த்தாளா" என்று ஏங்கினான் குருட்டிக்காவ். மந்திரத்தில் கட்டுண்டவன்போல் போடாவி வண்டிக்குப் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் வண்டியை ரொம்பவும் நெருங்கிச் சவாரி செய்துகொண்டு வருகிறான் என நினைத்துக் கொண்டால், "டேய் போடாவி" என்று குருட்டிக்காவ் கூப்பிடிவான். "என்னைக் கூப்பிட்டாயா? என்ன?" என்று குதிரையை நிறுத்திக்கொண்டு திரும்புவான் போடாவி. "சரி சரி, இப்போ ஒன்றுமில்லை" என்பான் குருட்டிக்காவ். அடுத்த நிமிஷம் "அடே போடாவி" என்று கூப்பிட்டுவான். இப்படியாக ஒரு வாரகாலம் பிரயாணம் செய்தபின் நூஹூவுக்கு வந்து சேர்ந்தார்கள். கவசம் அடித்துக் கொடுக்கும் பட்டறை ஒன்றிற்கு மேல் உள்ள மாடியறை ஒன்று குருட்டிக்காவுக்கும் டாஷாவுக்கும் ஒழித்து விடப்பட்டது. போடாவி வழி சொல்லிக்கொள்ள அங்கே வந்தான். அவனுக்குப் பாலேடும், தர்பூஸ் பழமும், ரொட்டியும் கொடுத்திருந்தார்கள். யுத்தகளத்துக்குப் போகும்படி அவனுக்கு உத்தரவு. "உன் சின்ன சிங்காரக் கையைக் கொடுத்து அவனுக்குப் போக விடை கொடுத்து வழிஅனுப்பிக்கோ" என்றான் குருட்டிக்காவ். அவன் மனத்தில் பாரம் கொஞ்சம் இறங்கிய மாதிரி இருந்தது. "அவன் வேண்டுமானால் எனக்காகக் கொஞ்சம் சண்டை போடட்டுமே. எப்பொழுதும் நான் தானா சண்டைக்குப் போகவேண்டும்?" குருட்டிக்காவ், கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வரத் தெருவில் இறங்கினான். வழியிலே கமாண்டரின் உதவி உத்தியோகஸ்தனாக இருந்த ஒரு ஜெர்மன் ஆபீஸரைச் சந்தித்தான். "என் பேர் ஆட்டோ ஸ்டர்னர்" என்று ஞாபகமூட்டிக்கொண்டு கையை நீட்டினான் அந்த ஜெர்மானியன். "யாரு, எனக்குத் தெரியவில்லையே?" என்று கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான் குருட்டிக்காவ். "எனக்கு ஒரு அட்சரம் ஜெர்மன் பாஷை தெரியாது என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது" என்றான் மீண்டும். "என் பெயர் ஆட்டோ ஸ்டர்னர். உன்னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன்" என்று சுத்தமான ரஷ்ய பாஷையில் இரைந்தான் அந்த ஜெர்மானியன். "என் பெயர் குருட்டிக்காவ். உனக்கு எப்படி இந்த மாதிரி சுத்தமாக ரஷ்ய பாஷை பேசத் தெரிந்தது. ரொம்ப அதிசயமாக இருக்கே. அரசியல் தோரணையில் உன்னைச் சந்தேகப்பட்டு நான் கேட்கவில்லை. நான் ஒரு பாங்கி குமாஸ்தா. அதுதான் இந்தச் சிரத்தைக்குக் காரணம். எங்க பாங்கிலே நாலைந்து பாஷைகள் பேசக்கூடியவர்கள் இருந்தார்கள்" என்றான். "நீ எப்பொழுதாவது பெட்ரோகிராடில் இருந்ததுண்டா?" என்றான் அந்த ஜெர்மானியன். இருவருமாகத் திரும்பி குருட்டிக்காவ் இருந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். "சண்டைக்கு முன்னாலே கொஞ்ச காலம் அங்கே இருந்ததுண்டு." "ஆர்க்கெட் என்ற இடத்துக்கு எதிராக பாஸேஜ் என்று ஒரு கட்டடம் இருந்ததே ஞாபகம் இருக்கா? பெரிய கண்ணாடிக் கடை." "ஆமாம், ஆமாம். லொட்டு லொஸுக்கு எல்லாம் விற்றுக் கொண்டிருப்பார்களே அந்தக் கடை. தொப்பி முதல் தேக்கரண்டிவரை அங்கே கிடைக்கும்..." "அந்தக் கடைதான்" என்று உற்சாகத்தோடு எதிரொலித்தான் அந்த ஜெர்மானியன். "ஒனக்கு அந்த இடம் நன்றாக ஞாபகத்திலிருக்கிறது போலிருக்கே. பாஸேஜிலிருந்து வெளியே வரும் போது இடது பக்கமாகத் திரும்பினால், முதல் கடை என்னுடையதுதான். எங்கப்பா பெயர் ஸ்டர்னர். எனாமல், செப்புப் பாத்திரங்கள் விற்றுக்கொண்டிருப்பார்." டாஷா பொழுதைக் கழிக்கத் தனியாகச் சீட்டாடிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜெர்மன்காரன் முகம் மலர்ந்தது. "நீ எப்படி ஜெர்மன் ராணுவத்தில் சிக்கிக் கொண்டாய்? உன்னையும் சிறைப்பிடித்துக் கொண்டார்களா?" என்று கேட்டான் குருட்டிக்காவ். "என்னை ஒருவரும் சிறைப்பிடிக்கவில்லை. நான் பிறந்ததும் வளர்ந்ததும் பீட்டர்ஸ்பர்க்தான். இருந்தாலும் நான் ஜெர்மானியன். அதுக்காக ஜெர்மனிக்குப் போனேன். அப்புறம் பெல்ஜியம், பிரான்ஸ், ஸெர்பியா, போலந்து, ருமேனியா, கிரிமியா, காகஸஸ் எல்லாத்தையும் ஜெயித்தேன். பெர்ஷியாவையும் ஜெயிக்கத்தான் ஆசை. ஆனால் அவ்வளவு தூரம் முடியாது என்றுதான் நினைக்கிறேன்" என்றான் ஆட்டோ ஸ்டர்னர். "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான் குருட்டிக்காவ் கவலையோடு. "உனக்குச் சண்டை போடுவது என்றால் ரொம்பப் பிரியம் போலத் தெரிகிறது" என்றான் தொடர்ந்து. "என் தந்தையார் நாட்டைப் பாதுகாக்கச் சண்டை போடத்தான் செய்வேன். வாழ்விலேயே மகாவஸ்து அழகுதான்" என்று சொல்லிவிட்டு டாஷாவையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்டர்னர். "என்னப்பா என்னமோ சொல்லுகிறாய்? நீ பிறந்தது பெட்ரோகிராடில் இல்லையா, உன் தந்தையர் நாடு..." "அன்ட்ரீய் பேசத் தெரியாமல் பேத்தாதே. நீ சும்மா வாயை மூடிக்கொண்டு கிட, காப்டன் ஸ்டர்னர் எத்தனையோ அழகிகளைப் பார்த்திருப்பார்" என்றாள் டாஷா. "இதோ நாங்க புறப்பட்டாச்சு. தர்பூஸ் பழத்தை அறுக்க ஏதாவதிருந்தால் கொடு" என்று சொன்னான் குருட்டிக்காவ். "சிரமப்பட வேண்டாம். என்னிடம் மடக்குக் கத்தியிருக்கிறது; பெண்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லுகிறேன் கேளு." ராணுவ தர்பார் கோலாகல வெடிச் சத்தங்களுடன் நூஹு நகருக்குள் பாக்ஷாவும் பிரவேசித்தார். வந்து களைப்பாறினார். இன்னும் கொஞ்சம் பீரங்கிவாணம் விட்டார். சிப்பாய்கள் சம்பளத்தை உயர்த்தினார். நிம்மதியாகக் குருட்டிக்காவ் அறையில் பொழுது கழிந்தது. டாஷா இடுப்பில் சுற்றிப் போட்டிருந்த கைகளை அகற்றிவிட்டு, பாக்கூவுக்குப் போனதும் பாங்கியில் வேலை பார்க்கப் போவதாகவும், குருட்டிக்காவ் குஞ்சு கிடக்கும் தொட்டிலை அவள் ஆட்டிக் கொண்டிருப்பாள் என்றும் சொன்னான். ஒருநாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தபோது போடாவி திரும்பி வந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது தொப்பலாக நனைந்து போயிருந்தான். குருவிக் குஞ்சு மாதிரி வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு சட்டைப்பையுள் இருந்த கடிதம் ஒன்றை வெளியே எடுத்தான். "லொழ்கோ மோயெவ் என்ற ஒரு உத்தியோகஸ்தர், ஸுல்தானுக்குக் கீழே வேலை பார்க்கிறார். பிறப்பில் ரஷ்யர். அந்த மனிதன் உன்னைப்பற்றி பாக்ஷாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். வாசித்துப்பார்" என்றான் போடாவி. கடுதாசி முத்திரையை உடைத்துப் பார்க்கக் குருட்டிக்காவுக்குக் கை நடுங்கியது, தலை சுழன்றது. டாஷா கடுதாசி உறையைக் கிழித்து அதை எடுத்துக் கீழே விட்டெறிந்தாள். "அதிலே பிரமாதமாக ஒன்றுமில்லை. ராணுவ முகாம் பொக்கிஷத்தைக் கொள்ளையடித்து விட்டாய் என்றும், ஐயாயிரம் தங்கம் உன் பையிலிருக்கிறது என்றும் அதில் எழுதியிருக்கிறது. என்னை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதை கட்டியிருக்கிறான்" என்றாள் டாஷா. "நானா திருடன்! அயோக்கிய ராஸ்கல்" என்று உறுமிக்கொண்டு ஆவேசத்துடன் அறையைச் சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தான். "இனிமேல் என்ன செய்வேன். இந்தப் பயல்கள் என்னைச் சுட்டுத் தள்ளிவிடுவார்களே. பாத்தியா. வரவன் போறவனையெல்லாம் பாத்து நீ பல்லிளிக்கப் போய், என் தலையில் வந்து விடிகிறது. நான் அப்பவே சொன்னேன். இப்போ உனக்குத் திருப்திதானே. என்னைச் சுட்டுத் தள்ளுவார்கள்; என் காரியம் முடிஞ்சது" என்றான் குருட்டிக்காவ். டாஷா கண்ணீர் விட்டு அழுதாள். "நான் தான் அந்தக் கடுதாசியைக் கொண்டு வந்து விட்டேனே. அதைக் கிழித்துப் போட்டாச்சே" என்று போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு கடுதாசியைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்தான். திக்பிரமை தெளிந்து குருட்டிக்காவ், "அதைக் கிழித்துப் போட்டு விட்டாயே! இனிமேல் அதற்குப் பதில் கொண்டு போக வேண்டாமா? என்ன செய்யப் போகிறாய்?" என்றான். "பதிலா? நான் திரும்பிப் போகும்பொழுது பதில் எதுவும் பார்த்துக்கொள்வேன்" என்றான் போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு. டாஷா அப்படியே அவன்மேல் விழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டாள். "டாஷா, நன்றியைக் காட்டிக்கொள்ள, அது கொஞ்சம் அனாவசியந்தான்" என்றான் குருட்டிக்காவ். ஆவேசத்தில் உடம்பு நடுங்கியது. இருந்தாலும், "போடாவி, நான் உனக்குக் கடமைப்பட்டவன் தான். இந்த மாதிரி அநியாயமாக அந்த அயோக்கியன் குற்றம் சாட்டுவான் என்று யார் நினைத்தார்கள்? அவனே இங்கு வந்துவிட்டானானால்?" என்றான் மீண்டும். "அப்படி வரமாட்டான், எனக்காகக் காத்திருப்பான். அங்கே ஓயாமல் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது" என்றான் போடாவி. அன்று சாயங்காலம், பாக்ஷாவின் சிப்பந்தி ஒருவன் வந்து சாப்பிடக் குருட்டிக்காவை பாக்ஷா அழைத்திருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். "போச்சு, குடிகெட்டதா? அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். கிழக்கு நாட்டார் பேமாளங்கள்தான் உனக்குத் தெரியுமே. முதலிலே ஒரு கோப்பை சாயா, அப்புறம் சித்திரவதைதான். பெற்ற தாய்க்கும் அடையாளம் தெரியாதபடி குதறித் தள்ளி விடுவார்கள். எனக்கோ பலமில்லை. அழுது விழுந்து கொண்டு தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து விடுவேன்" என்று கண்ணீர்விட்டான் குருட்டிக்காவ். "நம்மகிட்ட தங்கம் ஏது? அதெல்லாம் பொய்யில்லை?" என்றாள் டாஷா. "பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன்னைக் காட்டிக்கொடுப்பேன்; என்னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா?" என்றான் குருட்டிக்காவ். "சீ போ. அசட்டுத்தனமாய் உளறாதே. என் கொண்டை ஊசி எங்கேயிருக்குன்னு தேடிப்பாரு. நானும் உன் கூட பாக்ஷாவிடம் வருகிறேன். ஒருவேளை அவருக்கும் என்மேல் ஜோர் பிறந்திருக்கலாம்" என்றாள். ஸ்டர்னர் துபாஷாக இருந்து பாக்ஷாவுக்கு தர்ஜமாச் செய்தான். டாஷா சிரித்தாள். பாக்ஷா அவளுடைய கை பார்க்க ஆரம்பித்தார். ஸ்டர்னர் அவள் காதில் 'கீழக் கோடி' அசப்பியங்களில் அவள் காதுக்குள் தர்ஜமாச் செய்தான். பாக்ஷா அவளுடைய கையைத் தடவிக்கொண்டே அரபு காவியங்களை அலற ஆரம்பித்தார். அன்றிரவு, கம்பளியை இழுத்துப் போட்டுக்கொண்டு மூடிப் படுத்திருந்த குருட்டிக்காவ். அதை அப்புறம் தள்ளிப் போட்டுவிட்டு, தலையை நீட்டிக்கொண்டு அவளை வைய ஆரம்பித்தான். எல்லாவற்றையும் சீர்தூக்கி அளந்து பார்த்தாகிவிட்டதாகவும், தான் எவ்விதத்திலும் பாக்ஷாவுக்குச் சமனிடை இல்லையென்றும், அவள் கழுத்தை அறுத்துப்போடுவதுதான் நல்லதென்றும் தீர்மானித்து விட்டதாக அறிவித்தான். "வாலக்கீலை ஆட்டினால் கண்ணை நோண்டி எடுத்து விடுவேன்" என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்கலானாள் டாஷா. குருட்டிக்காவ் சபித்தான். கண்ணீர் விட்டான். ஆர்யிஸ் குருட்டிக்காவ் பிரபஞ்சத்தை ஐந்துமுறை வலம் வருமுன் போடாவியும், கையில் ஒரு கடுதாசியுடன் தலை வாசலில் வந்து ஆஜரானான். "அவன் இன்னொரு கடுதாசி எழுதியிருக்கிறான். அதையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று காலைத் தேய்த்தான் போடாவி. குருட்டிக்காவ் அந்தக் கடுதாசியைப் படித்தான். அவனுடைய தலை சுழன்றது. போடாவி அடிசாய்ந்த மரம் போல் அவன் கண்களுக்கு ஆடினான். அந்தக் கடுதாசியில் லொழ்கோ மொயெவ், "அங்கே இருக்கும் ரஷ்யக் கைதியும் சிப்பாயுமான குருட்டிக்காவ், ஒரு போல்ஷ்விக், சதிகாரன். துருக்கியத் துருப்புகளிடை கொஞ்சங் கொஞ்சமாக அதிருப்தியைப் பரப்பி வருகிறான் என்பதற்கு அசைக்க முடியாத சாட்சியங்கள் இருக்கின்றன" என்று எழுதியிருந்தான். டாஷா அந்தக் கடுதாசியை எரித்துப் போட்டுவிட்டு, போடாவி காதில் ஏதோ ஓதினாள். குருட்டிக்காவ் ஏகமாக பீதியடித்துப்போய் நடமாட ஆரம்பித்தான். நாலு நாளைக்கு ஒரு தடவை முறை ஜுரம் மாதிரி தபால் பிசாசாகக் கடிதமும் கையுமாக ஆஜராக ஆரம்பித்தான் போடாவி. "அதைப் படிக்காதே, ஒன்றுமில்லை" என்று அதைப் பிடுங்கி டாஷா கிழித்து எறிந்துவிடுவாள். அப்படிச் சொல்லியும் குருட்டிக்காவ், அவற்றின் சில கடுதாசிகளை வாசிக்காமல் விடவில்லை. குற்றச்சாட்டுகள் கடிதத்துக்குக் கடிதம் ஆரோகணக்கிரமத்தில், சதிகாரன், சூழ்ச்சிக்காரன், சர்வதேச விஷமி, ஒற்றன், அராஜகன், ராஜாங்க கலாட்டாக்களைக் கிளப்பி அதில் லாபம் தட்டி ஜீவிப்பவன் என்றெல்லாம் வளர்ந்துகொண்டு சென்றது. திடீரென்று, ஈசல் மறைவது மாதிரி, பருவம் மடிவதுபோல போடாவி வருகையும் அஸ்தமித்தது. எதிர்பாராதபடி அது நின்றுபோயிற்று. ஆட்டோ ஸ்டர்னர் அவர்களை வந்து கண்டு போய்க் கொண்டிருந்தான். வந்து உட்கார்ந்தான். ஆனால், அவன் போட்ட சண்டையும் வீரமும் மணிக்கணக்காகக் கொப்பும் கிளையுமாகத் தழைத்துக் கொண்டிருக்கும். அவன் ஜெயித்த நாடுகள் கணக்கிலடங்காது. ஜெயங்கள் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. ஆனால் ஒரே பல்லவிதான். சண்டை - ரணகளம் - பிரேதக்காடு - ஜயப்பிரவேசம் - ஒயின் - பெண்கள் - இத்யாதி, இத்யாதி - கீறல் விழுந்த கிராம போன் தட்டு மாதிரி, கதை கேட்டுக்கொண்டே தூங்கிப் போவான் குருட்டிக்காவ், கண்ணை முழித்துப் பார்க்கும்போதும் ரணகளம் - பிரேதக்காடு - ஜயப்பிரவேசம் - ஒயின் - பெண்கள் விவகாரம். அதே மாதிரி வேறு ஒரு பட்டணத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கும் - டாஷா சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒருநாள் ஸ்டர்னர் வீட்டுக்குள் வந்து மூட்டை கட்டிக்கொண்டு தயாராகும்படி டாஷாவிடம் சொன்னான். பாக்ஷா அங்கேயிருக்கும் சோல்ஜர்கள் அல்லாத சாதாரணக் கைதிகளை, ஜியார்ஜியாவுக்கு ஆர்மேனிய சிப்பாய்த்தளம் ஒன்றின் பந்தோபஸ்தில் அனுப்பிவிட உத்தரவு போட்டுவிட்டாராம். "என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் மூட்டை கீட்டை கட்ட வேண்டாமா?" என்றான் குருட்டிக்காவ். "நீ எங்கேயும் போகப் போவதில்லை. சாதாக் கைதிகளும் ஆர்மேனிய சிப்பாய்களும்தான் அனுப்பப்படுகிறார்கள். நீ ஆர்மேனியனுமல்ல, சாதாரணக் கைதியுமல்ல" என்றான் ஸ்டர்னர். "இவன் என்னுடைய பெண்டாட்டியைத் தட்டிக்கொண்டு ஓடிவிடப் பார்க்கிறான். எனக்கு இந்தத் தந்திரம் எல்லாம் தெரியும். சரி, சரி, நீ சிங்காரித்துக்கொண்டு தயாரா இரு. ஆனால் நீ எந்தப் பக்கம் போகப்போறே என்பது பின்னால் தெரியும். நானே நேரில் போய் இந்தப் பாக்ஷாவைப் பார்க்கிறேன்" என்று குருட்டிக்காவ் ஊளையிட்டான். உள்ளம் கொதிக்க அவன் வெளியே ஓடினான். சதுக்கத்தின் மத்தியில் மடக்கு நாற்காலியில் பாக்ஷா உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிராக ரஷ்ய யுத்த கைதிகளின் தூதர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள். "உங்களிடை ஆர்மேனியர் யாரும் உண்டா?" என்றார் பாக்ஷா. "ஆமாம் இருக்கிறார்கள்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள். "நீங்கள் ஜியார்ஜியாவுக்குப் போகிறதுதானே. அங்கே போனால் எல்லோரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்" என்றார் பாக்ஷா. ஆர்மேனியர்கள் புருவத்தை நெரித்துக்கொண்டு மௌனமாக நின்றார்கள். ரஷ்ய சோல்ஜர் ஒருவன் வரிசையிலிருந்து முன்னுக்கு வந்து தன் செம்பட்டைத் தாடியைச் சொரிந்து கொண்டு நின்றான். "மாட்சிமை தங்கிய எஜமானே, தோழர் பாக்ஷாவே, அவர்களை எங்களிடமிருந்து பிரித்துத் தனியாக அனுப்பினால், ஒன்றுமில்லாத விவகாரத்துக்கு எல்லாம் கழுத்து அறுப்புண்டு போகும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." ஸ்டர்னர் மொழிபெயர்த்துச் சொன்னான். பாக்ஷாவுக்குக் கோபம் ஆவேசமாகப் பொங்கியது. "ஏன் அப்படி நீ நினைக்க வேண்டும்?" என்று கேட்டார். "இதைப்பற்றி யோசிக்கவே வேண்டாம். இந்த விவகாரம் எங்கே பார்த்தாலும் நடக்கிறது. ஆனால் இந்த இடத்திலே ஆண்டவனுடைய உத்தரவு அப்படி. அவர்கள் போனால் அப்புறம் கீச்சுப்பீச்சுதான்." "கீச்சுப்பீச்சு என்றால்..." என்றார் பாக்ஷா. "குருவிகள் கீச்சுப்பீச்சு என்று கத்திக்கொண்டு பறந்து போகிற மாதிரி ஜீவன் ஓடிவிடும் என்றான்" என ஸ்டர்னர் ஆயஸம் பண்ணினான். இந்த உத்பிரேட்சை பாக்ஷா மனதைக் குளிரவைத்துவிட்டது. "அப்படியானால் சரி, நீங்கள் எல்லோரும் ஒன்றாகப் போக வேண்டியதுதான். ஆனால் நாளைக்கு அல்ல. யோசித்துச் சொல்கிறேன்" என்றார் பாக்ஷா. மகிழ்ச்சியில் குதி போட்டுக்கொண்டு குருட்டிக்காவ் வீடு திரும்பினான். பாக்ஷாவின் சிப்பந்தி டாஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். இருவரும் தர்பூஸ் பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாக்ஷா, சாயா சாப்பிட்டுவிட்டுப் போகும்படி குருட்டிக்காவுக்கும் அவனது மனைவிக்கும் அழைப்பு விட்டிருந்தார். தூங்கிக் கொண்டிருந்தவன், நடுராத்திரியில் விழுத்துக்கொண்டு, அவள் பக்கமாகத் திரும்பி, "இந்த விவகாரத்தை முடிச்சுப்பிட்டுத்தான் தூங்கவேண்டும். நீயோ எப்பப் பார்த்தாலும் நான் என்னுடைய பெண்டாட்டியைக் காப்பாத்திக்கொள்ளச் சண்டை போட வேண்டும் என்று சொல்லுக்கொண்டிருக்கிறாய். இன்னிக்கு அந்த மாதிரிச் சண்டை போட்டாச்சு. இன்னும் தொடை நடுங்கிக்கொண்டிருக்கிறது" என்றான். "என்கூட இருக்கும்போது உனக்குப் பைத்தியம் பிடித்துவிடக்கூடாது. இன்னும் வேறே என்னவெல்லாம் செய்யப்போகிறதாக நீ நினைத்துக் கொண்டிருந்தாய்" என்று டாஷா இடைமறித்து வெகு கண்டிப்பாக கேட்டாள். "பாக்ஷாவைக் கத்தியால் குத்த அப்போ நான் நேரே ஓடினேன். கால் பூட்ஸடியிலே அதைச் சொருகித் தயாராக வைத்துக் கொண்டிருந்தேன். பாக்ஷா தன்னைத் தப்ப வைத்துக்கொண்டார். உத்தரவை ரத்துப்பண்ணி ஒருவரும் ஜியார்ஜியாவுக்குப் போக வேண்டியதில்லை என்றார்" என்றான் குருட்டிக்காவ். "அந்தக் கத்தி எங்கே? எந்த ஜெனரலாவது பூட்சுக்குள்ளே கத்தியை வைத்துக்கொண்டு நடப்பானா? நாளையிலிருந்து என் கூட நடக்கிறதென்றால் நீ அந்தக் கத்தியை வைத்துக்கொண்டு வரக்கூடாது. இதுதானா நீ சொல்லிக்கொண்டிருக்கிற பாதுகாப்பு? பாக்ஷாதான் என் கூடக் கொஞ்சம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப்போய்விட்டது? கை பார்க்கத்தானே செய்தார். ஏதேதோ கோடு சொல்லுகிறதாக உளறிக்கொட்டினார். அவ்வளவுதானே!" என்று இரைந்தாள் டாஷா. "நல்ல கதையாகப் போச்சு. இப்போ அப்படிச் சொல்லுகிறே. இத்தனை காலமான பிறகா இந்த மாதிரி. நல்ல தொல்லையடா. நானோ யோக்கியமான பிரஜை. சாந்தமான மனுஷன். என்னைப் பிடித்து சோல்ஜராக்கி என்னிடம் உத்தரவு போட்டா. பிறகு என்னைச் சிப்பாய்த் தலைவனாக்கி உத்தரவு போடும்படி சொன்னா. அப்புறம் புரட்சி வருகிறது. என்மேலே உத்தரவு போடுகிறது. அப்புறம் சோவியத் சர்க்கார். இப்போது நான் உத்தரவு போடுகிறேன். அப்புறம் துருக்கிக்காரர்கள் எனக்கு உத்தரவு போடுகிறார்கள். அப்புறம் பாக்ஷாக்கள் கோடையிடி மாதிரி என் தலையில் உதிருகிறார்கள். அத்தைப்பாட்டி கதைகேட்டபோதுதான் அவர்கள் யார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ என்னடான்னா வந்து மடக்கு நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டு என் பெண்டாட்டிக்குக் கை பார்க்கிறான். உனக்கு அது சர்வ சாதாரணமாகப் படுகிறது. நாளைக்கு ஆப்பிரிக்காவிலே இருந்து ஒரு மந்தைக் குரங்குகள் வரும். அதுகளையும் பார்த்துப் பல்லையிளிக்கப் போறியாக்கும்" என்றான் குருட்டிக்காவ். "போதும் போதும் வாயை மூடிக்கோ. பார்த்தவாள் எல்லார் கண்களுக்கும் கவர்ச்சியாக இருக்கிறேன் என்பதில் நீ பெருமை கொள்ள வேண்டாமா? மலைக்காட்டுப் போடாவி கண்களுக்குக்கூட என் அழகு புரிகிறதே" என்றாள் டாஷா. "என்ன?" என்று போர்வையை உதறித் தள்ளிவிட்டுத் துள்ளி உட்கார்ந்தான் குருட்டிக்காவ். "காட்டுமிராண்டி போடாவி என்று அவன் பெயரையும் சேர்த்துக் கொள்ளுகிறாயே, அர்த்தம் என்ன?" "நேற்றுச் சாயங்காலம் வந்து என்னை மலையூருக்குத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் விடுவது என்று நிச்சயம் பண்ணியிருந்தான் போடாவி" என்றான் டாஷா. "டாஷா என்ன பேச்சுப் பேசறே" என்றான் குருட்டிக்காவ். "என்ன சொல்லுகிறேனா? அட முட்டாள் அன்ட்ரீஸ், இது புரியலியா. நல்ல தெளிவான ரஷ்ய பாஷையில்தானே சொல்லுகிறேன். பெண்களுக்கு என்ன பிடிக்கும்? நிஜத்தை எப்பப் பார்த்தாலும் சொல்லிக்கொண்டிருக்கும் காமிராவா, அல்லது வாட்டசாட்டமா சட்டை போட்ட புருஷனா?" "ரொம்ப சரி" என்று சொல்லிக்கொண்டு பூட்ஸுக்குள் கைகளை விட்டுத் துழாவ ஆரம்பித்தான் குருட்டிக்காவ். "என்ன, ரொம்ப சரி. என் பேரில் உனக்கு விசேஷ பாத்யதை என்ன இருக்கிறது? நீதான் இன்னும் என்னைக் கலியாணம் செய்துகொண்டு புருஷன் ஆகவில்லையே. இது எனக்குத் தெரியும், உனக்குத் தெரியும்." "என்ன, என்ன சொல்லிக் காட்டுகிறாய் என்று நினைத்துப் பார்த்துப் பேசுகிறாயா?" என்று பளிச்சென்று அவள் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு கேட்டான் குருட்டிக்காவ். "வாயைப் பிளந்து கொண்டிருக்காதே. எனக்கு இஷ்டமான பேரைப் பொறுக்கி எடுத்துக்கொள்ள இப்போ எத்தனையோ பேர் இருக்கிறார்கள். போடாவி, அப்புறம் பாக்ஷா. இன்னும் வேற எத்தனையோ பேரும் உண்டு." குருட்டிக்காவ் போர்வையை இழுத்து மூடிப் படுத்துக்கொண்டு அவள் வார்த்தைகளைச் செவியேற்க மறுத்துவிட்டான். இந்த நாசமாய்ப்போன வக்கீல் பாக்கூ பாங்க் குமாஸ்தாவான இவன், அடிமாண்டு போகாமல் ஆற்றாமையைச் சொல்லி ஆறுதல் அடைய ஒரே ஒருவன் தான் இருந்தான். அவன் ஐரோப்பியன், ஜெர்மன். இந்த மிலேச்சர்களிடம் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கும் ஒரு ஐரோப்பிய ஜீவனுடைய சங்கடங்களை அவனே உணர முடியும். போர்வைக்குள் கிடந்து குமையும் குருட்டிக்காவ் அவனை எப்படியும் போய்ப் பார்த்தே தீருவது என்று நிச்சயம் பண்ணிக் கொண்டான். விடியற்காலை எழுந்ததும் முதல் வேலையாக ஆட்டோ ஸ்டர்னரைப் போய்ப் பார்த்தான். அந்த ஜெர்மானியன் தன் அறையில் உட்கார்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கிராமபோன் ஒன்றின் நாட்டிய மெட்டு சுழன்று கொண்டிருந்தது. "உன்னைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ரொம்பப் பெரிய சமாச்சாரம் வைத்திருக்கிறேன், கேள். இந்த ஊரிலே போடாவி என்ற ஒரு நாட்டுப்புறத்தான் அலைந்து கொண்டிருந்தானே தெரியுமா?" "உம்... உம்..." என்று இழுத்தான் குருட்டிக்காவ். "நல்ல கிராமபோனாக வைத்திருக்கிறாயே" என்று பேச்சைத் திருப்பப் பார்த்தான். "ரொம்பப் பெரிய சமாச்சாரம். இந்தப் போடாவி என்கிறவன் நமக்குத் தபால் கொண்டு வருகிறவன். அவன் இங்கு ஒரு கடுதாசி கொண்டு வந்ததில்லை. ஆனால் அவன் கொண்டு வந்த சிலவற்றை..." என்று சொல்லிக்கொண்டு ஸ்டர்னர் அவன் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தான். "சில சமயத்தில் கணக்குகளை..." என்று விழுங்கி விழுங்கிப் பேசினான் குருட்டிக்காவ். "என்ன சொன்னாய்?" "சில சமயங்களில் கணக்குகள் வரவு செலவு தீர்த்துக் கட்ட முடியாமலிருக்கும்" என்று வரண்ட வார்த்தைகள் வெளிவந்தன. "என்ன கணக்குகள்?" ஸ்டர்னர் ஆச்சரியமுற்றான். "அவன் பணம் கொடுக்கல் வாங்கல் ஏஜண்டல்ல. வெறும் தபால் சுமக்கும் நாட்டுப் புறத்தான். இதைக் கேளு, அவன் அவைகளை என்ன செய்தான் என்பது தெரியவில்லை. ஆனால் அதில் சிலவற்றில்..." "ஆமாம் அதில் சிலவற்றில் பணம் இருந்தது..." என்று பீதி பிடித்த குருட்டிக்காவ் சொல்லி முடித்தான். "நீ பெட்டியடி குமாஸ்தாதான் போ. அதிலே பணம் இல்லை. அதை விட முக்கியமான விஷயங்கள், இரகசிய அறிக்கைகள் இருந்தன." "அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் குருட்டிக்காவ் வெளிறிப்போய். "அவனைக் கைது செய்யும்படி உத்தரவிட்டோம்" என்றான் ஸ்டர்னர். குருட்டிக்காவ் தலை சுழன்றது. கத்தும் கிராமபோன் குழலுக்குள் பார்வையைச் செலுத்தினான். "ஆனால் அவன் மேலதிகாரி லொழ்கோ மோயெவைக் கொன்று போட்டுவிட்டு மலைக்கு ஓடிவிட்டான். இது பெரிய சமாச்சாரமல்ல." "கொன்றுவிட்டானா?" என்று மெல்ல எதிரொலித்தான் குருட்டிக்காவ். வார்த்தைகள் அவன் மனத்தில் பதியவில்லை. முகத்தில் வியர்வை ஆறாகப் பிரவாகமெடுத்தது. "ஆமாம். அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஜன்னல் வழியாகக் குதித்து ஓடிவிட்டான். ஆட்டை வெட்டிச் சாய்க்கிற மாதிரி கொன்று கிடத்திவிட்டான். உனக்கு உடம்புக்கென்ன? என்னமோ ஒரு மாதிரியாக இருக்கிறாயே. ஒரு நிமிஷம் கொஞ்சம் பொறு. மது கொண்டுவரச் சொல்லுகிறேன். இதில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் மேலதிகாரிகள். நீ ஏன் இப்படிச் சங்கடப்பட வேண்டும்? நீ என்ன துருக்கியனா? உனக்கு ஒரு பெண்டாட்டிதானே உண்டு?" என்று சொல்லிக்கொண்டு வாய்விட்டு கலகலவென்று சிரித்தான் ஸ்டர்னர். "நீ பொதிந்து பொதிந்து என்னமோ சொல்லுகிறாயே, அதன் அர்த்தம் என்ன?" என்றான் குருட்டிக்காவ். "அர்த்தம் ஒன்றுமில்லை" என வெடுக்கென பதில் அளித்தான் ஸ்டர்னர். "உனக்கும் எனக்கும் கொஞ்சம் ஒயின் ஊற்றிக்கொண்டு வருகிறேன். சாப்பிடுவோம்." குருட்டிக்காவ் ஒரு கிளாஸ் ஒயினையும் ஒரே மடக்காகக் குடித்து விட்டான். "என்ன யாரையும் நினைத்துப் பார்க்கிறதில்லையா? இந்த உலகத்து அழகிகளை நினைத்துக்கொண்டு அருந்துகிறேன்" என ஸ்டர்னர் கிளாஸை உயர்த்தினான். "எனக்குச் சொந்தம் என்று நான் சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரு வாழ்வை நினைத்து அருந்துகிறேன். அதாவது என்னை யாரும் தொந்திரவு படுத்தாத ஒரு வாழ்வுக்கு" என்றான் குருட்டிக்காவ். இந்த நினைவுக்கு "மரியாதை" செலுத்த ஒரு கிளாஸில் இன்னும் கொஞ்சம் ஒயின் அவனுக்கு ஊற்றிக் கொடுத்தான். பிறகு இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்துத் தானும் ஊற்றிக் கொண்டான். "உன் கலியாண தினத்தின் ஞாபகத்திற்குக் கொஞ்சம் அருந்துவோம்" என்று கண்ணைச் சுடக்கடித்தான் ஸ்டர்னர். "நீ சொல்வதன் அர்த்தம் புரியவில்லையே?" என்றான் குருட்டிக்காவ். "உன் ஆயுசிலேயே மிகவும் சந்தோஷமான நாளுக்கு என்று சொல்லுகிறேன். உன் பெண்டாட்டி பேரில் எனக்கு ரொம்பப் பிரியம்" என்றான் ஸ்டர்னர். "என்ன சொல்லுகிறாய்? நல்லா காதில் விழவில்லையே, என்ன சொன்னாய்?" என்றான் குருட்டிக்காவ். "கல்மிஷமில்லாத நினைப்பு அப்பா, அது ஜெர்மனியர் சம்பிரதாயம், அவ்வளவுதான். உங்க கலியாண நாளை நினைத்து அருந்துவோம். அது எந்தத் தேதி?" என்றான் ஸ்டர்னர். ஸ்டர்னர் மேஜைமேல் சாய்ந்து அவனைப் பார்த்தான். அவன் கண்கள் கொஞ்சம் கருத்தது. குருட்டிக்காவ் மீது பக்கென்று வியர்வை அரும்பி அவனைக் குளிப்பாட்டியது. கலியாண தேதியை அந்த ஜெர்மானியனுக்குச் சொல்வதென்றால் சாத்தியமில்லை. ஏனென்றால் தன் சம்பந்தப்படி சட்ட பூர்வமானதாக்கிக்கொள்ள அவன் பதிவு செய்து கொள்ளவில்லை. டாஷா, அவன் கூட யாத்திரை வருகிறதென்றால் நல்ல யோசனைதான் என்றான். சம்மதித்துக் கூட வந்தாள். அவ்வளவுதான். இருண்ட குழியடியில் அகப்பட்டுக்கொண்டவன் போல விழித்தான் குருட்டிக்காவ். "ஏன் தயங்குகிறாய்? ஒருவேளை போடாவி மாதிரி நீயும் எங்களை ஏமாற்றி வருகிறாயா? டாஷா உன் மனைவியே அல்லவா?" என்று கேட்டுவிட்டுக் கைகளைத் தட்டினான் ஸ்டர்னர். உள்ளே ஒரு வேலைக்காரன் வந்தான். ஸ்டர்னர் அவன் காதில் இரகசியமாக ஏதோ உத்தரவு போட்டான். வந்த துருக்கியன் அந்தரப் பிறவி போல அனாயசமாக மறைந்தான். "நீ என்னமோ எதிலாவது என்னைச் சிக்கவைத்து விடலாமென்று யோசிக்கிறாப்போல இருக்கே. அது நல்லா இருக்கா, கௌரவமான ஒரு மனிதன் செய்கிற வேலையா" என்றான் குருட்டிக்காவ். குடியே முழுகிப்போச்சு என்ற நினைப்புத் தவிர அவன் மனத்தில் வேறு எதுவும் இல்லை. "நானா. எனக்கு கௌரவம்தான் பெரிது. சரி நாம்..." "செம்டம்பர் ஒன்பதாந்தேதி" என்று குருட்டிக்காவ் ஒரு தேதியைச் சொன்னான் டாஷா அவனுடன் ஓடி வந்துவிட்ட தேதி அது. "செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கு" என்று நினைவு தேங்கிய வார்த்தைகளைச் சொன்னான் ஸ்டர்னர். குருட்டிக்காவுக்குத் திடீரென்று மனப்பாரம் இறங்கியது போல் இருந்தது. "டாஷா நல்ல அழகி என்பதை நீயும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவளுக்குக் காலும் கையும் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?" என்றான் குருட்டிக்காவ். "எனக்குத் தெரியும்" என்றான் ஸ்டர்னர் அமைதியாக. "உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான் குருட்டிக்காவ். மூன்றாவது கிளாஸிலேயே அவன் மூளை கழன்றுவிட்டது. "புதுசாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டவாள் எல்லாரும் அப்படித்தான் பேத்துவார்கள். அதைப்பற்றி நாம் இப்போ சர்ச்சை பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நீ பூர்ஷூவா மாதிரி பேசுகிறாய். அவ்வளவுதான். அதற்கென்ன, அவளுக்கென்ன இப்போது?" "அவள் இப்பொழுது ரொம்பப் பெரிய ஆபத்திலே சிக்கி இருக்கிறாள்" என்று உளறிக்கொட்டினான் குருட்டிக்காவ். "ஆபத்தா? என்ன ஆபத்து? கூரை இடிந்துவிழுந்துவிடும் என்று பயப்படுகிறாயா, அல்லது கொலைகாரர்கள் உன்னை இரகசியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்களா?" "இரண்டும் இல்லை. நீ ஒரு ஐரோப்பியன். நான் சொன்னால் புரிந்து கொள்ளுவாய். இங்கே இருக்கும் ஆண்பிள்ளைப் பசங்கள் எல்லாம் அவளைத் தொடர்ந்து திரிகிறார்கள்" என்றான் குருட்டிக்காவ். "ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில்லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவு வேறு போட்டுவிட்டார்." "அந்த ஆயுதங்களை வேண்டுமானால் அவரே வைத்துக் கொள்ளட்டும்" என்றான் குருட்டிக்காவ். பாக்ஷாவுக்கு வியாதி என்று கேட்டதும் அவன் மனத்துக்குச் சங்கடமாக இருந்தது. "திடீரென்று எப்படி வியாதி வந்துவிட்டது? அவர்தான் புஸ்தகம் மாதிரி கைரேகைகளைப் படித்துவிடுவாரே. தன் கையை ஏன் அவர் பார்த்துக் கொள்ளக்கூடாது?" இந்தச் சமயத்தில் ஸ்டர்னருடைய வேலைக்காரன் வந்து அவனுடைய காதுக்குள் ஏதோ ஓதினான். ஜெர்மானியன் மறுபடியும் கிளாஸ்களை நிறைத்துவிட்டு அதிசயமான குரலில், "இப்போ உம்ம மனைவியை நினைத்து அருந்துவோம்" என்றான். "சரி, இவனும் அவள் மேல் கண்வைத்துவிட்டான்" என்று உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்தான் குருட்டிக்காவ். "இந்தப் பயல்தான் அவள் வலையில் தலைகுப்புற விழுந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். என் கதி அதோ கதிதான்." கிளாஸை ஏந்திய கை நடுங்கியது. டாஷா வாசல் சன்னலில் நின்று கொண்டு பாடிக்கொண்டிருந்தாள். "உன்னை என்னிடமிருந்து பிரித்து விடுவார்கள். அப்புறம் நீ யாரோ நான் யாரோ" என்பது அந்தப் பாட்டின் அர்த்தம். அவன் உள்ளே நுழைந்ததும் பாடுவதை நிறுத்திக் கொண்டாள். தள்ளாடிக் கொண்டே வந்து கீழே விரித்திருந்த ஜமுக்காளத்தின் பேரில் உட்கார்ந்து கொண்டான் குருட்டிக்காவ். அமிதமான போதையால் முகம் நீலம் பாரித்திருந்தது. அவளிடம் சென்றான். முதுகில் இரண்டு அறை கொடுத்தாள். "ஏன் இப்படிக் குடித்துவிட்டு வந்தாய்? நம்ம கலியாணத் தேதி என்னவென்று ஸ்டர்னர் ஏன் ஒரு துருக்கிப் பயலை ஏவிக் கேட்டுவிட்டான்? இஷ்டமிருந்தால் சொல்லு?" என்றாள் டாஷா. குருட்டிக்காவ் மூஞ்சி நீலத்திலிருந்து பீதி பிடிக்கும் பச்சை பூத்தது. "ஸ்டர்னர் சொல்லிவிட்டானா? சரிதான் நம்ம கதி அதோ கதிதான்." "எப்பப் பார்த்தாலும் அதோ கதியாகப் போனதாக ஊளையிடத்தான் உனக்குத் தெரியும். நீ இப்படிப் பேசும்போதெல்லாம் எனக்குத் தும்மணும்போல வருது" என்றாள் டாஷா. குருட்டிக்காவ் பரிதாபகரமாகக் கை விரித்தான். "கொஞ்சம் பொறுத்துக்கோ. எத்தனையோ வருஷத்துக்கு முந்தி கணக்குத்தான் என்னைக் கொல்லும் என்று சொன்னார்கள். அப்போ நான் பாங்கியிலே வேலை செய்து கொண்டிருக்கும்போது, தப்பாய் பதிந்து வேலைக்குக் கத்தி வைத்துக்கொள்வேன் என்று நினைத்தேன். ஆனால் இப்பொத்தான் எனக்குப் புரிஞ்சுது. ஒரே ஒரு எண், ஒரு சின்ன எண் நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது. இப்பத்தான் நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நம்ம கல்யாணத்தேதி என்ன? கேட்டுத் தெரிந்துகொண்டு அப்புறம் நிம்மதியாக இருந்து தொலைக்கிறேன்" என்றான் குருட்டிக்காவ். "செப்டம்பர் ஒன்பதாம் தேதி என்று நான் அவனிடம் சொல்லி வைத்தேன்" என்றாள் டாஷா. "என்ன!" என்று ஆச்சரியத்தால் கத்திக்கொண்டு காலும் கையும் கொப்பும் கிளையுமாக உயர நிற்க ஜமுக்காளத்தில் உதறியடித்துக் கொண்டு சரிந்தான். "என்ன? இந்த காலத்திலேயும் அதிசயங்கள் நடக்குதா?" என்றான் மீண்டும். "என்ன உளறிக் கொட்டுகிறாய். புத்தியாய்ப் பேசு. செத்த தவக்களை மாதிரி காலையும் கையையும் விரித்துக் கொண்டு கிடக்காதே" என்று கூறினாள் டாஷா. "டாஷா, தீரச் செயல்கள், வீரச்செயல்கள் செய்ய வேண்டும் என்று அவைகளைத் தேடிக்கொண்டு அலைபவனல்ல நான். எனக்கு அதிலே கொஞ்சங்கூட பிரியமில்லை. ஆனால் என்ன நடந்திருக்கிறது தெரியுமா? நானோ சாதாரணப் பிரஜை. ஆயிரத்தில் ஒன்று. நானோ வாதம் பண்ணுகிறதில்லை. சர்ச்சை பண்ணுகிறதில்லை. எல்லாம் அந்தக் காலத்திலேயே நடந்த மாதிரி நடக்கட்டும் என்று சொல்கிறதில்லை. ஆனாக்க எல்லாம் நடக்கட்டும் என்றுதான் சொல்லுவேன். டாஷா, உனக்கு ஞாபகமிருக்கா. அப்போது ஒரு சண்டையில யாரோ ஒருத்தன் கொய்த தலை ஒன்றை என் காலடியில் கொண்டு வந்து போட்டானே, அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? அதை உச்சி மயிரநப் பிடித்துத் தூக்கி வேலி ஓரத்தில் கொண்டுபோய் வைத்தேன். யாருக்கு ஆசையோ அவர்கள் அதை எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் இப்பொ, இப்பொ என்ன செய்யறதென்றே புரியல்லே" என்றான் குருட்டிக்காவ். "சரிதான் உனக்கு இது தெரியாதா? உன் பெண்டாட்டியை உன்னிடமிருந்து தட்டிக்கொண்டு ஓட, அவளைக் கெடுத்துவிட, குடித்துக் குடித்து சீ என்று போகும்படி அவளைச் சாயாக் குடிக்க வைக்கிறார்கள். என்ன செய்வது? என்று தெரியவில்லை என்று நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்." "எனக்குக் களேபரம் எதுவுமில்லாமல் சாகத் தெரியும். வேறு என்ன எனக்குத் தெரியும்?" என்றான் குருட்டிக்காவ். "மறுபடியும் பழைய கதையை ஆரம்பித்துவிட்டாயே. என்னைக் காப்பாற்று என்று நான் ஒரு ஆண்பிள்ளையிடம் கேட்டால், எனக்குச் சாகத்தான் தெரியும் என்று சொல்லுகிறவனிடம் என்னத்தைச் சொல்கிறது? அப்படியானால் செத்துத் தொலை. எக்கேடும் கெட்டு நாசமாய்ப்போ. இத்தனை பலம் கொண்ட உனக்கு ஒரு பெண்ணைக் காப்பாற்றத் தெம்பில்லையா?" என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிப்போனாள். அவன் ஜமுக்காளத்தில் "செத்த தவளை" மாதிரி கிடந்தான். தலையைப் பிடித்துக்கொண்டு யோசனை செய்தான். பகல் கழிந்தது. நன்றாக இருட்டின பிற்பாடு முற்றத்தில் காலடிச் சப்தம் கேட்டது. எழுந்து ஜன்னலண்டை போனான். முற்றத்தில் அவனுடைய மனைவியும் ஸ்டர்னரும் நின்றுகொண்டிருந்தார்கள். வெளிவாசலில் குதிரைத் தலைகள் தெரிந்தன. "அவர்கள் ஓடிப்போகிறார்களாக்கும். சரிதான் ஓடிப்போகட்டுமே. வேறு எதையாவது யோசிப்போம்" என்று சொல்லிக்கொண்டே இறங்கி முற்றத்திற்கு வந்தான். ஸ்டர்னர் உதட்டில் விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான். "சரி, நீ நினைத்ததை முடித்தாயா?" என்று சொல்லிக்கொண்டு டாஷா அவன் கைகளை முத்தமிட்டாள். அவன் அவளைப் பலமாக இழுத்துத் தழுவ பற்கள் இடிபட்டன. ஸ்டர்னர் ஒரு குதிரையைக் குருட்டிக்காவ் முன்னால் கொண்டு நிறுத்தி, "உங்கள் ரெண்டு பேரையும் நகரத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டு போய் விட்டுவிடுவார்கள்" என்றான். டாஷாவும் குருட்டிக்காவும் மௌனமாகக் குதிரை மேல் ஏறிக்கொண்டார்கள். ஸ்டர்னருடைய வேலைக்காரன் குதிரையின் லகானைப் பிடித்து அழைத்துச் சென்றான். ஜனநடமாட்டமில்லாத சந்துபொந்துகள் வழியாக அவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். ஊருக்கு வெளியே வந்து சேர்ந்ததும் இரண்டு குதிரைகளையும் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக ஒரு வரிசையில் நிறுத்திவிட்டு மறைந்தான். "இதற்கு என்ன அர்த்தம்" என்றான் குருட்டிக்காவ். குதிரைமேல் சற்று நகர்ந்து உட்காரவும் பயப்பட்டான் அவன். அங்கு படி காலிலிருந்து நழுவியது. கட்டை விரல் இருளில் நுழைந்து துழாவி வெகு சிரமப்பட்டான் குருட்டிக்காவ். "அர்த்தமா? அட முட்டாளே, உபயோகமில்லாத கந்தல் களுக்காணி மூட்டை, அட வடிகட்டின அசடே, கட்டித் தங்கமே, அதோ தெரியுது பார் வெளிச்சம், அந்தக் கிராமத்துக்கு நாம் விடியறதுக்கு முன்னாலே போய்ச் சேரணும்... புரிஞ்சுதா? குதிரையை ஜாக்கிரதையாக நடத்திக்கொண்டு போ." "சரி" என்றான். குதிரைகள் நடந்தன. வீட்டுக்குள் அந்தத் தொலைக் கண்ணாடிகளை வைத்துவிட்டு வந்துவிட்டோ மென்று திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. நினைக்க நினைக்க வெட்கமாக இருந்தது. இந்த உணர்ச்சி படிப்படியாக வளர ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி தேசாலத்திற்கு அப்புறம் அவனையே ஆட்படுத்தியது. குதிரைகள் நாலு பாதைச் சந்தியை எட்டின. "இப்பொழுது பேசுவதற்கு எனக்கு அவகாசம் உண்டு..." என்று ஆவேசம் கொண்டவனைப்போல் ஆரம்பித்தான் குருட்டிக்காவ். "நான் ஒன்று சொல்லித்தான் தீர வேண்டும். நான் ஒரு பெண்ணுக்காகச் சண்டை போட்டுப் பார்த்தேன். அது ஒண்ணுமில்லாமல் போச்சு. ஒருத்தனுக்கு விஷம் கொடுக்கணும்னு ப்ளான் போட்டேன். அவன் காலை ஒடித்துக் கொண்டான். இன்னொரு போட்டிக்காரனைக் கண்டு மிரண்டேன். அந்த அப்பாவிப் பயலைக் கொன்று போட்டார்கள். நாலாவது நபரைக் கத்தியால் குத்த நினைத்தேன். அவனுக்கு வயிற்றுக் கடுப்புக் கண்டது. ஐந்தாவது நபரை நம்பவே இல்லை. அவன் பூரண யோக்யனாக இருந்தான். ஈ, கொசு ஆடாத இந்தக் கிராமத்திலே ஆறாவது ஏழாவது எட்டாவது நபர்களைச் சந்திக்கத்தான் போகிறேன். என்ன நேருமோ எனக்கே தெரியவில்லை. இனி மேற்கொண்டும் இப்படிச் சுமந்துகொண்டு போக எனக்குப் பலம் இல்லை. நான் கதாநாயகனாகப் பிறக்கவில்லை. என் குடும்பத்திலேயே பரம்பரையாகக் காசநோய் உண்டு. இனிமேல் என்னால் தாங்க முடியாது" என்று சொல்லிக் கண்ணீர் விட்டான். கண்ணீர் குதிரையின் கழுத்தில் உதிர்ந்தது. திடீரென்று ஒற்றைக்கொரு துளியாக மழை பெய்வதைக்கண்டு ஆச்சரியத்தால் தலையை நிமிர்த்தியது. பிறகு அந்த ஸ்திரி தன் குதிரையைப் பக்கத்தில் கொண்டு நெருங்க அது அவன் காலில் இடிபட்டது. டாஷா கைகளை நீட்டி அவனுடைய குதிரையின் லகானைப் பற்றிக்கொண்டாள். விசேட உரை சாம்பல் பூத்த ஆட்டு மந்தை டிப்ஸில் என்ற இடத்தில் உள்ள ஷோட்டா ரஸ்டா வேலி குடியேற்றத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. மந்தையின் இடுக்குகளில் கிடாக்களின் தாடி தரையைப் பெருக்கியது. துணிச்சலான குட்டி டிராம் லயன்கிட்டே நெருங்கிவிட்டால், செம்பட்டை படிந்த மந்தைக் காவல் நாய்கள் அங்குமிங்கும் ஓடிக் குரைத்து அவற்றை வழிக்குக் கொண்டுவந்தன. தாங்க முடியாத புழுதிப் பொம்மலில் தும்மிக்கொண்டு குருட்டிக்காவிடம் இது என்ன என்று கேட்டேன். "இந்த மந்தைகள் மேய்ச்சலுக்காக ஆட்டிடையர்களுடன் இடத்துக்கிடம் போகும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. இப்பொழுது பட்டணத்துக்குள் வந்துவிட்டன. வெகு சீக்கிரமாகப் பட்டணத்தைக் கடந்து ஆகவேண்டும். அதற்காகத்தான் பட்டணத்துக்கு உள்ளே குறுக்காக விழுந்து ஓடுகின்றன. நாடகக் கொட்டகையைத் தாண்டிக்கொண்டு கடைசி ஆடு போகும்போது பொழுது சாய்ந்து இருட்டிவிட்டது. "நேரமாகிவிட்டது. சாயங்காலம் பார்க்கவேண்டிய கடமைகளைக் கவனிக்கப் பாங்கிக்குப் போக வேண்டும். நான் உழைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் சீட்டுக் கொடுத்து விடுவார்கள்..." என்றான் குருட்டிக்காவ். சிறிது தொலைவிலே, ஒரு சின்ன வேலிக்கு மறுபுறத்தில் ஆபீஸ் 'அமர்த்தலுடன்' ஒரு சர்ச் நின்றது. பைஜாந்திய மனையடி சாஸ்திரத்தைக் காப்பி அடித்த தினுசில் கட்டப்பட்ட புராதனக் கட்டுக்கோப்பு. கருங்கல் அடுக்கு வரிசைகள் மங்கலாகப் பளபளக்கும் கலசங்களாகப் பூத்தன. கட்டடத்தின்மேல் சன்னலில் வெளிச்சம் தெரிந்தது. நிர்க்கதியானது போல் மௌனமேறிய கருங்கல் முன் மண்டபத்தின் வழியாக உள்ளே சென்றோம். சமய சம்பிரதாயத்திற்கும் அந்தஸ்துடன் கூடிய கிறீச்சலுடன் செப்புத் தகடு பதித்த செதுக்குளிச் சிற்பம் மலிந்த கதவு உட்புறம் நோக்கித் திறக்க நாங்களும் உள்ளே நுழைந்தோம். அவசர அவசரமாக வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. வெறிச்சோடிக் கிடக்கும் சர்ச்சின் மத்தியில், சாப்பாட்டுக்கடை மாதிரி மேஜைகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. வாலிப கம்யூனிஸ்டுகள். மேஜையருகில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து சதுரங்கம் முதலிய விளையாட்டுகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். அகண்டாகாரமான வயல்வெளியின் நிசப்தம் அங்கு குடியேறியிருந்தது. சுவரில் அகழ்ந்திருந்த மாடல்கள் இரண்டில் ஸாக்ரடீஸ் சிலையும் கோகோல் சிலையும் எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. சர்ச் விதானத்தில் பொருளாதார சூத்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. சுவர்களில் புகைப்படங்களும் விளம்பரங்களும் ஒட்டப்பட்டிருந்தன. மையக் கலசத்தின் குடைவுக்குள் நீளமான தாடியுடைய ஒரு கிழவன் படம் தீட்டப்பட்டிருந்தது. அவனுடைய தாடிச்சிக்கலில் இரண்டு புறாக்கள் அகப்பட்டுத் தத்தளித்தன. அவன் அந்தக் காலத்தில் கடவுளாக இருந்தான். "சாம்பிராணி வாசனையிலே சதுரங்கம் விளையாட நான் அடிக்கடி வருவது வழக்கம். பொதுவாகப் பார்க்கப்போனால், என் வாழ்வு அப்படிக்கு ஒன்றும் மோசமில்லை. சுமாராக சுகமாகத்தான் இருக்கிறது. சமயம் கிடைத்தபோது நீயும் இங்கே வா என்று சொல்லி வைக்க விரும்புகிறேன். இங்கே நல்ல ஆட்டக்காரர் பலர் உண்டு. கலசத்தில் தொங்குகிற கிழவனைத்தான் கூப்பிட்டுக்கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. அவன் அவர்களுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறான்" என்று குருட்டிக்காவ் பிரமாத ரகசியம் எதையோ ஓதுவதுபோலக் காதுக்குள் குசுகுசுவென்றான். "ஏன் இப்படிக் குசுகுசு என்கிறாய்?" என்று நான் குரல் கொடுத்தேன். "ஏன் இப்படிக் குசுகுசு என்கிறாய்?" எனக் கலசத்திலிருந்து கிழவன் கத்தினான். "ஏன் குசுகுசு என்கிறாய்?" ஸாக்ரடீஸும், கோகோலும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் மாடங்களிலிருந்து கத்தினார்கள். "நல்ல அபூர்வமான வேலைப்பாடு! சப்தத்தை அபூர்வ கோணங்களிலிருந்து திருப்பிவிட கணக்குப் போட்டுக் கட்டியிருக்கிறார்கள்" என்றேன். "இந்தச் சர்ச்சில் இருந்த சப்தத்தை இப்படித் தெறிக்கவிடாமல் அமுக்கி, வந்த சிலைகளும் விரிப்பும் அகற்றப்பட்டபோது எதிரொலியைக் காதுகொடுத்துக் கேட்க முடியல்லே" என்று சொல்லிக்கொண்டு குருட்டிக்காவ் என்னைப் பலிபீடத்தினருகில் அழைத்துச் சென்றான். "இந்த இடத்தில் நாடகம் போட முடியாது. ஆனால் மௌன பிலிம் காட்சி நடத்த சௌகரியமாக இருக்கும்" என்றான். பலி மேடையில் மூன்று மேஜைகள் போடப்பட்டிருந்தன. மூன்றின் பேரிலும் விலாசமிட்டிருந்தது. காம்ரேட் யாஸ்ட்ரெப் மேஜை, காம்ரேட் பிரான் டாஷ்விலி மேஜை, காம்ரேட் கிரான்ட்ஸ் மேஜை. அவைகளை எல்லாம் பார்த்துவிட்டு வெளியேறி நடந்தோம். மாலையிருட்டு மயங்கி வந்து கொண்டிருந்தது. பூக்கடை ஒன்றில் வெள்ளை மஸ்லின் உடுத்திய ஒருத்தி எங்களுக்காகக் காத்திருந்தாள். "என் மனைவி காம்ரேட் டாஷா" என்று குருட்டிக்காவ் அறிமுகம் செய்துவைத்தான். "உம்முடைய மனைவி கலகலப்பாக உழைப்பவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றேன். "கலகலப்பு இருக்கலாம். உழைப்பைப்பற்றி அவ்வளவாகச் சொல்வதற்கில்லை. ஒரு தடவை ஒருவன் ஏறியிருந்த குதிரையின் லகானைப் பிடித்து அதை வேறு திசையில் திருப்பினதென்னவோ உண்மை" என்றாள். "லகான் இல்லை, சேணத்தைப் பிடித்துக்கொண்டு" என்று திருத்தினான் குருட்டிக்காவ். "கடிவாளமோ" என்றேன் நான். "அது என்னமோ எனக்குப் பெயர் எல்லாம் தெரியாது. தொழிலாளர் தேகப்பயிற்சிக் கூடத்திற்குப் போகிறேன். உங்களுக்கு வேறு ஒரு வேலையும் இல்லை என்றால் என்னை அங்கே அழைத்துச் செல்லலாம்" என்றாள். |