உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
டைமன் கண்ட உண்மை ஷேக்ஸ்பியர் (1564-1616) ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும் உண்டு; சாணக்கியர்கள், வீரர்கள், கொலைகாரர்கள், முட்டாள்கள், தேவதைகள், வெறியர்கள் யாவரும் உண்டு. அவர் உலகத்தில், முடிவில் அறத்துக்கே வெற்றி. ஷேக்ஸ்பியர் 1564-ல் வார்விஷயரில் உள்ள ஸ்டாபோர்ட் - ஆன் - அவான் - (அவான் நதிக்கரையில் உள்ள ஸ்டாபோர்ட்) என்ற ஊரில் செயலுள்ள குடும்பத்தில் பிறந்தார். 1616-ஆம் வருஷம் அந்த ஸ்டோ போர்ட் - ஆன் - அவானிலேயே செயலுள்ள பிரபலஸ்தராக உயிர் துறந்தார். சிறுபோதில் அவரது குடும்பம் நொடிந்து விட்டது. அவர் மணவினை சொத்தைக் கொண்டு வந்தாலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. அத்துமீறி ஒரு காட்டில் மான் வேட்டையாடியதாலோ மற்றெந்தக் காரணத்தினாலோ ஊரைவிட்டு வெளியேறும்படி நேர்ந்தது. லண்டனில் முதலில் பழைய நாடகங்களைத் திருத்திக் கொடுப்பவனாகவும், நடிகனாகவும், நாடகாசிரியனாகவும், பிறகு நாடக இலக்கியத்தின் சாம்ராட்டாகவும் பேரும் புகழும் பணமும் சம்பாதித்தார். பிறகு அந்திம காலத்தைச் சுகவாசியாகக் கழிக்க, பிறந்தவூர் திரும்பினார். கைப்பழக்கம் முதிர்ந்து உலகின் ஆழ்ந்த புதிர்களை எடுத்து நாடகங்களாக அமைத்த காலத்தில் பிறந்த நாடகங்கள் கீழே தந்திருக்கும் மூன்றும். 'டெம்பஸ்ட்' என்ற நாடகத்தில் அவர் பிராஸ்ரோவாக வந்து உலக நாடகமேடையில் பிரியா விடை பெற்றுக் கொள்ளுகிறார் என்று சொல்லுவார்கள். மூன்று நாடகங்கள்: டைமன் கண்ட உண்மை(Timon of Athens), மணிமந்திரத் தீவு(The Tempest), தருமதேவதையின் துரும்பு(Hamlet). ***** டைமன், குபேர சம்பத்துடையவன். கிரேக்க நாகரிகத்தின் நாற்றங்கால் என்று சொல்லவேண்டிய ஏதென்ஸ் நகரத்தின் பிரதான பிரஜை. உலகத்தின் சௌபாக்கியங்கள் யாவும் அவன் காலடியில் கிடந்தன. பணம் இருந்தால் மட்டும் போதுமா? மாரிபோல இரு கைகளாலும் வாரி வழங்கும் மனமும் இருந்தது. அவன் மாளிகையிலே நண்பர்களுக்கு ஓயாத விருந்து. எடுத்த வார்த்தைக்கெல்லாம் பரிசு. அவனுடைய வாழ்க்கையே பெருங் களியாட்டமாக இருந்தது. ஏதென்ஸ் நகரத்தின் குடியாட்சியில் அவனுக்கு சொல் சக்தி உந்து; ஏனென்றால் நகரத்துச் சேனையில் தலைமை வகித்துப் போர் புரிந்து, பவித்திரமான வடுக்கள் பெற்றவன். டைமனை ஏதென்ஸ் நகரின் அதிர்ஷ்ட தேவதை என்றே சொல்ல வேண்டும். அவன் வீட்டில் "ஐயோ" என்று வருகிறவன் மனம் ஒடிந்து திரும்பமாட்டான். பாட்டுக்கட்டி வரும் கவிராயரும், பலநிறப் படம் தீட்டி வரும் ஓவியக்காரரும் பட்டினியோடு திரும்பியதில்லை. நகை வியாபாரிகளுக்கு அவன் முற்றத்தில் கொள்ளை லாபம். டைமன் அவ்வூரில் மூன்று பேரைத் தன் உயிருக்குயிரான நண்பர்களாக மதித்திருந்தான். அவன் வீட்டுக்கு அவர்கள் விருந்தாடி வந்து பரிசில் பெற்றுப் போகாத நாள் கிடையது. ஆனால், அவர்கள் அவனைப் பணம் காய்ச்சி மரம் என்று நினைத்திருந்தார்கள். அவன் புன்சிரிப்பின் தண்மையிலே தளிர்த்தார்கள். டைமன், வாரி வழங்கும் துருதுருப்புக் கொண்டவனாதலால், இரண்டு கைகளாலும் கடன் வாங்கி வந்தான். வென்டிட்டஸ் என்ற நண்பன் ஒருவன் கடன்காரன் கையில் சிக்கிக் கொண்டான்; உடனே அவனை மீட்க டைமனின் பணம் விரைகிறது. ஒரு ஏழைக் கிழவன்; அவனுக்கு ஒரு மகள். அவளை டைமனுடைய வேலைக்காரன் காதலிக்கிறான். கிழவனுக்கோ, தட்டுத் தூக்குகிறவன் தன் மகளைக் கலியாணம் செய்து கொள்வதா என்ற எண்ணம். இந்தச் செய்தி காதில் விழுந்ததும் அந்த இரண்டு இளம் ஜோடிகளும் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய பணத்தை வேலைக்காரனுக்குக் கொடுத்து, அவனை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, கலியாணமும் செய்து வைக்கிறான். டைமனுக்கு வாழ்விலே கஷ்டம் தெரியவில்லை. பணத்தின் சிக்கல்கள், மனிதகுணத்தின் ஆழம் - இவற்றைத் அறிந்து கொள்ள அவகாசம் இல்லை; அப்படிப் பெரியதொரு கேளிக்கையாக இருந்தது அவன் வாழ்வு. ஆனால் அவனுடைய கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், அவனது ஆசைகள் ஓடும் திசையின் போக்கு அறிந்து அவற்றை நடத்தி வைப்பது போன்றவை அவனுடைய மாளிகைக் கணக்குப் பிள்ளையான பிளாவியஸ். அவன் யோக்கியன். டைமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டின் விபரீதம் எங்கு வந்து விடியும் என்பதை உணர்ந்தவன்; எஜமானிடத்தில் மாறாத பாசம் வைத்த பணியாளன். ஏதென்ஸ் நகரத்தைக் காப்பதற்காக, முன்பு டைமன் தலைமையில் நடைபெற்ற போரில், துணையாக நின்ற அல்க்கிப்யாடிஸ் சேனாதிபதிக்கு டைமனிடம் உண்மையான நட்பும் விசுவாசமும் உண்டு. அவன் இப்போது எதென்ஸ் நகரக் குடியாட்சியின் ஸ்தானாபதி. ஆனால் நகரக் குடியாட்சியோ உளுத்துப்போனதொரு செனேட் சபையின் நிர்வாகத்தின்கீழ் சிக்கிக் கிடந்தது. சபை அங்கத்தினர்களோ உடலும் நெஞ்சும் வரண்ட பேர் வழிகள். பணத்தை குட்டி போடவிட்டுப் பெருக்குவதிலேயே பொழுதையும் வயதையும் கழிப்பவர்கள். இவர்களுக்கு டைமன் என்றால் பிடிக்காது. 'கெவுரதை பிடித்த பயல், படாடோ பக்காரன்' என்று வெறுப்பார்கள். டைமனுடைய கிரகம் உச்சத்திலிருக்கும்வரை அவனை இவர்களது வெறுப்புத் தீண்டுவதற்குத் திராணியற்று முடங்கிக் கிடந்தது. இந்த நகரத்தின் கோலாகல வாழ்வுக்கும் சீர்கேட்டுக்கும் மாற்று மருந்து போல ஒரு சித்தாந்தி நடமாடித் திரிந்தான். லோகத்தின் பகட்டு, படாடோ பம், நம்பிக்கை மோசடி இவற்றைக் குத்திக் குத்திக் காண்பிக்கும் சுபாவம் உள்ளவன். அழையா விருந்தினனாக எல்லா இடங்களிலும் நுழைவான்! திட்டுவான்! தூற்றுவான். மனிதர்கள் என்றால் சகல துர்க்குணங்களுக்கும் தாயகமான "கெட்ட ஜாதி" பிராணி என்று நினைப்பவன். வலியப் போய் ஒருவன் முன்னால் உட்கார்ந்து கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி திட்டுவான். ஏதென்ஸ்வாசிகள் தங்களுக்குப் பொழுது போகாவிட்டால், இவனது திட்டுக்களை உல்லாசமாக இரசிப்பார்கள். இவன் பெயர் அப்பெமெண்ட்ஸ். இவனுக்கு ஒரு சீடன் உண்டு. அவன் பெயர் முட்டாள். செல்வம் என்பது என்ன வற்றாத ஊற்றா? டைமனுக்கும் பணமுடை என்ன என்பது தெரியும் சமயம் வந்தது. ஒரு நாள் வேட்டையாடிவிட்டு உற்சாகமாக விருந்துக்குத் திரும்புகிறான் டைமன். கடன்காரர்களுடைய வேலைக்காரர்கள் பணத்துக்கு அவனிடம் நேரில் இடைமறித்துக் கேட்கிறார்கள். சிறிது மண் கரைந்தால் போதுமல்லவா? கரை உடைத்துக் கொண்டது போல் நாலா திசையிலும் கடன்காரர்கள் பிச்சுப் பிடுங்குகிறார்கள். கணக்குப்பிள்ளை பிளாவியஸ் எத்தனையோ நாள் அவர்களை சால்ஜாப்புச் சொல்லி அனுப்பிப் பார்த்தான். கடன்காரர்கள் எத்தனை நாட்கள் தான் பொறுத்திருப்பார்கள்? டைமனோ "கொடு கொடு" என்பதைத் தவிர கணக்குப் பார்க்க உட்காரவில்லை. டைமனுக்கு உட்கார்ந்து கணக்கைப் பார்த்ததும் அச்சமாகத் தானிருந்தது. இத்தனை நாள் ஏன் சொல்லவில்லை என்று கோபிக்கிறான். சொல்லுவதற்கு வாயெடுக்க விட்டால்தானே? பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் என்ன பிரமாதம். உயிர்த் தோழர்களுக்கும், உதவி பெற்றவர்களுக்கும் ஆள் அனுப்புகிறான். அவர்களுக்கு என்ன பைத்தியமா! "இப்பொழுதில்லையே." "ஒரு மணி நேரத்துக்கு முன் வந்திருக்கக் கூடாதா?" "என் பணம் வேறு ஒரு இடத்தில் சிக்கிக் கிடக்கிறதே." "ஐயோ பாவம், டைமனுக்கா இப்படி வரவேணும்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். "இத்தனை நாள் வெறும் அந்தரத்தில் அல்லவா நடமாடிக் கொண்டிருந்தோம். தடுமாறிய காலுக்குத் தாங்கல் இல்லை" என்ற உண்மை டைமனை நிலை குலையச் செய்கிறது. அவனுடைய சித்தம் கலங்கிவிடுகிறது. ஒரே நாளில் பிச்சைக்காரனாகி, இத்தனை நாள் கூடிக் குலாவியவர்கள் ஏறெடுத்தும் பார்க்காமல் போனால் யாருக்குத்தான் மூளை கலங்கிவிடாது. மனம் கைத்துப்போய் நண்பர்களை மறுபடியும் விருந்துக்கு அழைக்கும்படி பிளாவியஸுக்கு உத்தரவு போடுகிறான். தலைவனுடைய கோபத்தைச் சமாளித்துக் கொண்டு வந்த கணக்குப் பிள்ளைக்கு, இன்னுமா வெறித்தனம் என்று படுகிறது. "போ, போய் அழைத்துக் கொண்டு வா" என்று கர்ஜிக்கும்போது என்ன செய்ய முடியும்? அழைப்பைக் கண்ட நண்பர்கள், டைமன் அடியோடு அழிந்துவிடவில்லை என்று நினைக்கிறார்கள். அவனுடைய மனம் கள்ளங் கபடு அற்றது, பிறரைச் சந்தேகிக்காதது என்பது அவர்களுக்குத் தெரியும். பஞ்சப்பாட்டுப் பாடி இன்னும் கிடைக்கிறதைத் தட்டிக்கொண்டு போகலாம் என்று நினைக்கிறார்கள். ருசி கண்ட பூனைகள் அல்லவா? டைமன் மாளிகைக்கு ஒவ்வொருவராக வந்து பழைய கும்பல் கூடுகிறது. அதிதிகளுக்கு மூடியிட்ட பாத்திரங்களில் பரிமாறப்பட்டிருக்கிறது. நம்மை அயர வைத்து மகிழ வைக்கப் புதுமாதிரியான பரிசில் வந்திருக்கும் என்று மனப்பால் குடிக்கிறது இந்தச் சீலைப்பேன் கும்பல். "தகுதிக்குத் தக்கபடி விருந்து; கொடுக்கிற விருந்தை ஏற்று இன்புறுங்கள்; கொடுக்கிறவனை நினைக்க வேண்டாம்! இருபது பேர் கூடினால், இருபது பேரில் யோக்கியர்களே இருக்கக்கூடாது; லோகம் அப்படி. அழைப்புப் பற்றி எனக்குக் கவலையில்லை; பாத்திரத்தைத் திறந்து நக்குங்களடா நாய்களா" என்கிறான் டைமன். பாத்திரத்தில் மூடி வைத்திருந்தது வெறும் வெந்நீர்தான். வெந்நீரை இந்த அயோக்கியக் கும்பல்மேல் ஊற்றி அடித்துத் துரத்தி விடுகிறான் டைமன். இதற்கிடையே அல்க்கிப்யாடிஸ், தன்னுடைய நண்பனுக்காக செனேட் சபையில் பரிந்து பேசுகிறான்; வரட்டுக் கிழங்கள் அவனையும் நாடுகடத்தி விடுகின்றன. டைமன் மீதும் கடுந்தண்டனை விதிக்கப் போவதாகக் கொக்கரிப்பு. அதற்காக அவன் காத்திருந்தால்தானே. மனிதர்களுடன் கூடி வாழ்வதைவிட, மிருகங்களிடை காட்டில் திரிவது நல்லது என்று நாகரிகத்தின் பகட்டை பசையற்ற தன்மையை வைது கொண்டே போய்விடுகிறான். சித்தம் கலங்கிக் காட்டில் மனம்போனபடி நடமாடித் திரிகிறான் டைமன். அவன் உள்ளம் அக்கினியாகக் கொதிக்கிறது. லோகமானது அன்பு, பற்று என்பவை சற்றும் தளிர்விடமுடியாத சுடுகாடாகத் தோன்றுகிறது அவனுக்கு. மிஸ்ஆந்த்ரபாஸ் என்று தனக்குப் பெயர் ஒன்று வைத்துக் கொண்டு உலகத்தையும் அதன் தீய தன்மைகளையுமே திட்டுபவனாகக் காலத்தைக் கழிக்கிறான். வெறிகொண்ட மனதுக்குக் குழிதோண்டும் குணம் ஒன்று ஏற்பட்டு விடுகிறது. இவன் இவ்வாறு தோண்டிக் கொண்டிருக்கையில் ஒரு புதையல் கிடைக்கிறது. மனம் கலங்கிய டைமனுக்குத் தங்கத்தின் உபயோகம் புதுமாதிரியாகப் படுகிறது. உலகத்தை அழிக்க, அதை நாசம் செய்ய உபயோகப்படுத்த வேண்டும். கடற்கரை அருகிலே உள்ள குகை ஒன்றில் டைமன் குடியிருக்கிறான். இந்தச் சமயத்தில் அல்க்கிப்யாடிஸ் தன்னுடைய சைனியத்துடனும் வைப்பாட்டிகள் இருவருடனும் அங்கு வருகிறான். டைமன் மனதுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துப் போகவேண்டும் என்ற ஆசை. டைமனைக் கொடுமைப்படுத்திய ஏதென்ஸ் பட்டினத்தின்மேல் படை எடுத்துச் சென்று அதை அடக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் டைமனுடைய மனம் அடியோடு சிதைந்து விட்டது. அல்க்கிப்யாடிஸையும் அவனுடன் வந்த இரு பெண்களையும் வாய்க்கு வந்தபடி வைகிறான். ஈவு இரக்கம் காட்டாமல், ஏதென்ஸ் கிழம், குஞ்சு, பெண் என்ற பேதம் பாராமல் கொல்லு என்று கூவுகிறான். லோகத்தில் நோயைப் பரப்பும்படி, பெண்களுக்கு அறிவுரை கூறி கண்டெடுத்த பொன்னைக் கொடுக்கிறான். இவன் போனபிறகு அப்பமெண்டாஸ் வருகிறான். "யாரடா என் வேஷத்தைப் போட்டுக்கொண்டு உலகத்தைத் தூற்றுகிறவன்?" என்று கோபிக்கிறான். இரண்டு பேரும் மனமார வாயார வைது கொள்கிறார்கள். "உன் மேல் ஒரு கல்லெடுத்து அடித்தால், கல் நஷ்டம்" என்கிறான் டைமன். "அடே! உன்னை ஏமாற்றியவனைப்போல் வேஷம் போட்டு அவனை ஏமாற்று. அதுதான் லோக சம்பிரதயம்" என்றான் அப்பமெண்டாஸ். "நாயே" "பேயே" என்று திட்டிக்கொள்கிறார்கள். "நீடூழி வாழ்ந்து உன் கசப்பைக் கட்டிக்கொண்டு அழு" என்று ஆசீர்வதிக்கிறான் அப்பமெண்டாஸ். "நீடூழி வாழ்ந்து பிறகு செத்துத் தொலை" என்று மறு ஆசீர்வாதம் கொடுக்கிறான் டைமன். டைமனிடம் இன்னும் பணம் இருக்கிறது என்ற இரகசியம் எப்படியோ பரவி விடுகிறது. அவனிடம் கொள்ளையடிக்கலாம் என்று சில திருடர்கள் வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து லோகத்தைக் கொள்ளையடிக்கும்படி சொல்லியனுப்புகிறான். "லோகமே ஒரு பெரும் திருட்டு; சந்திரன் சூரியனிடமிருந்து வெளிச்சத்தைத் திருடுகிறது; சூரியனும் திருடன்; கடலிலிருந்து தண்ணீரைத் திருடுகிறான்; உலகமும் திருடுகிறது; உங்களைப் பிடித்துக்கட்டும் சட்டம் அதுவும் திருடுகிறது! இதோ இன்னும் பொன் இருக்கிறது; எடுத்துக்கொண்டு போய் இன்னும் கொள்ளையடியுங்கள்" என்று அனுப்புகிறான். டைமன் பித்தம் பிடித்துப் புறப்பட்டுவிட்டதைக் கண்டு மனம் நொந்துபோன பிளாவியஸ் இவனைத் தேடிக்கொண்டு கடைசியாக இந்தக் குகைக்கு வந்து சேருகிறான். கோலாகலமாக வாழ்ந்துவந்த டைமன் இருக்கும் நிலையைக் கண்டதும் அவனது நெஞ்சம் வெதும்புகிறது. தன்னிடம் பணம் இருக்கிறது; இன்னும் பழையபடி அவரிடம் பணியாளாக வேலைபார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். "லோகத்திலேயுள்ள தனி யோக்கியனே! இதோ என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது; அதை எடுத்துக்கொண்டு போய்ச் சேர்; மனுஷன் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை; நாயை பட்சமாகப் பார்த்துக் கொள்; மனுஷனுக்குக் கொடுக்காதே" என்று பதில் கொடுக்கிறான் டைமன். "வேறு ஒன்றும் வேண்டாம். உமது பக்கத்திலிருந்து ஆறுதல் சொல்ல அனுமதி கொடுங்கள்" என்று கெஞ்சுகிறான் பிளாவியஸ். "சாபத்துக்குப் பயம் இருக்குமானால் இங்கே இருந்து ஓடிப்போ, இந்தப் பக்கம் தலைகாட்டாதே" என்று சொல்லிவிடுகிறான். டைமனிடம் பணம் இருக்கிறதென்ற செய்தி ஏதென்ஸ் ஊரெங்கும் பரவி விடுகிறது. கவிராயரும், படம் போடுகிறவனும் இவனைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். கூழைக்கும்பிடு போட்டு, வாயாரப் புகழ்கிறார்கள். கவிராயர் தம் கற்பனைச் சரடுகளை எல்லாம் அள்ளி வீசுகிறார். கொஞ்ச நேரம் இவர்களை நையாண்டி செய்துவிட்டு, "சில தீயோர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் போக்கிவிட்டால் உங்களுக்குப் பொன் தருகிறேன்" என்கிறான் டைமன். "சொல்லுங்கள், நிமிஷத்தில் தீர்த்துவிட்டு மற்ற வேலை பார்க்கிறோம்" என்று ஆரவாரம் செய்கிறது இந்தக் கற்பனைக் கும்பல். "நீங்கள்தானடா அந்த அயோக்கியர்கள்" என்று அவர்களை உதைத்து விரட்டி விடுகிறான். இந்த நிலையில் அல்க்கிப்யாடிஸின் சைன்யம் ஏதென்ஸ் நகரை நெருங்குகிறது. பீதியடித்துப் போன செனேட் சபைக்கு டைமன் ஞாபகம் வருகிறது. அவன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவனை அழைத்து வந்து, அவனது வீரத்தை உபயோகித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறது. மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சமாதானம் செய்து டைமனை அழைத்துப் போவதற்காக, ஏதென்ஸிலிருந்து இரண்டு செனேட்டர்கள் வருகிறார்கள். பிளாவியஸ், அவர்களை அழைத்துக்கொண்டு வருகிறான். ஆனால் எச்சரிக்கிறான் - டைமன் யாரையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்று. இருந்தாலும் ஆசை யாரை விட்டது, அதுவும் அபாயம் பின்புறம் நின்று துரத்தும் போது. குகைக்கு வெளியே வந்து நின்று கொண்டு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். "அடே நாசமாய்ப் போக; நாக்குப் புழுத்துப்போக" என்று ஏசிக்கொண்டு வெளியே வருகிறான். ஏதென்ஸ் நகரத்தின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறார்கள். அல்க்கிப்யாடிஸின் சீற்றத்தைத் தடுக்கத் தாங்களே வந்து தலைமை பூண்டு சேனையை நடத்திச் செல்லவேண்டும் என்று கோருகிறார்கள். அல்க்கிப்யாடிஸிடம் இதைச் சொல்லுங்கள்: "அவன் எப்படி கொலை செய்து குடலைப் பிடுங்கி எறிந்தாலும் டைமனுக்குக் கவலையில்லை; கிழவர்களை, கன்னிகளை, வாலிபர்களைக் கொன்று யுத்தம் என்ற யாக குண்டத்தில் போடட்டும்; டைமனுக்குக் கவலையில்லை. பணக்காரக் கடவுள்கள் எங்களைக் காப்பாற்றும்; திருடர்கள், பணக்காரர்களைக் காப்பாற்றுவதைப் போல" என்று சொல்லுகிறான் டைமன். "அவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை; திரும்பிப் போங்கள்" என்று சொல்லுகிறான் பிளாவியஸ். "ஏதென்ஸ் நாசமாக போகிறதென்றால் வருத்தமாகத் தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் தாய்நாடு அல்லவா" என்று ஆரம்பிக்கிறான் டைமன். செனேட்டர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. "பிரபுவே" என்று வாயார வாழ்த்துகிறார்கள். "ஏதென்ஸ் நகரவாசிகளிடம் இதைப் போய்ச் சொல்லுங்கள். இங்கே ஒரு பெரிய மரம் செழித்து வளர்ந்திருக்கிறது. அதை என்னுடைய உபயோகத்திற்காக வெட்டிவிடலாம் என்றிருக்கிறேன். ஏதென்ஸ் மக்கள் எல்லோரும், அவகாசத்தை நழுவ விடாமல் சீக்கிரம் வந்து அந்த மரத்தில் தூக்குப் போட்டுக் கொள்ளட்டும்; பிறகு மரம் இருக்காது" என்று கிண்டல் செய்கிறான் டைமன். "அவரிடம் பேசிப் பயனில்லை. அவர் இப்படியேதான் சொல்லிக் கொண்டிருப்பார்" என்கின்றான் பிளாவியஸ். "டைமன் கடற்கரையருகே அழியாத மாளிகை கட்டிக்கொண்டான்; கடல் அலைகள் அந்த மாளிகையைத் தினசரி குளிப்பாட்டும்; என்னுடைய கல்லறைக் குத்துக்கல், கைத்த வார்த்தைகளில் நோய்க்கும் போருக்கும் மிஞ்சுகிறவர்களைச் சபிக்கும் என்று ஏதென்ஸுக்குச் சொல்லுங்கள், டைமன் ஆட்சி முடிந்தது." அல்க்கிப்யாடிஸ் ஏதென்ஸ் நகரத்தின் மதில்களை எட்டி விட்டான். தொடை நடுங்கித் தலைவர்கள் சரணாகதி செய்துவிட்டார்கள். டைமனுக்குக் கொடுமை இழைத்தவர்களுக்கு அவர்கள் வகுத்த சட்டமே நியாயம் சொல்லும் என்று எச்சரிக்கிறான். எதற்கும் சம்மதிக்கிறார்கள்; யுத்த மில்லாவிட்டால் போதும். ஆனால் வெற்றிக்கு முந்திவிட்டான் டைமன். அவனைத் தேடிச்சென்ற சோல்ஜர் அங்கு ஒரு கல்லறையைத் தான் பார்க்கிறான். அதிலே "இங்கு கிடக்கிறது ஒரு சடலம்; என் பெயரைக் கேட்காதே; லோகத்தில் எஞ்சிய தீயோர்கள் நாசமாய்ப் போக. உலகம் வெறுத்த டைமன் கூறுவது இது. ஆசை தீரச் சபித்துவிட்டுப் போ. நிற்காதே போ" என்று பொறித்திருந்தது. தாராளமாக வழங்கிய கை, மண்ணாகி மக்கிச் சபிக்கிறது. |