உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள் 1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங்கினார்கள். அதிலே ஒரு நல்ல வீடு கட்டினார்கள்; வெளியே பார்த்தால் 'மேற்கத்தி' மோஸ்தர்; ஆனால் வீட்டுக்குள்ளே எல்லாம் ஜப்பானிய 'வளமுறைதான்'; - தரையில் பாய், கடுதாசித் திரை எல்லாம். ஆனால் முன்கூடத்தை மட்டும் மேற்கத்தி மோஸ்தரில் ஜோடித்து நாற்காலி மேஜை போட்டிருந்தார்கள். தரையில் மரப்பலைகையைப் பாவி இருந்தார்கள். அதற்கு மேலே சீனக் கம்பளத்தை விரித்தார்கள். தற்காலத்தில் பிரபலம் பெற்ற ஜப்பானிய சிற்பிகள் செய்த சிலைகள், சித்திரக்காரர்கள் தீட்டிய படங்கள் எல்லாவற்றையும் வாங்கி முன்கூடத்தை அலங்கரித்தார்கள். "இந்தக் காலத்திலே எல்லோரும் பியானோ ஒன்று வாங்கி இந்த மாதிரி அறைகளில் வைத்திருக்கிறார்களே" என்று கொண்டு ஒரு பியானோ வாத்தியத்தையும் வாங்கி வைத்தார்கள். மூத்த பெண்ணுக்கு இனிமேல் பியானோ கற்றுக் கொடுப்பது என்றால் முடியாது. ஆகையால் மூன்றாவது பெண்ணையும் கடைசிப் பெண்ணையும் (ஒன்பது வயசு) பியானோ கற்றுக் கொள்ள அனுப்பினார்கள், இன்னும் கொஞ்ச நாளில் வீட்டில் பியானோ சத்தம் கேட்கும்; அப்படிக் கேட்பதும் பெரிய குடும்பத்துக்கு அடையாளம் என நினைத்து திருப்தி அடைந்தார்கள். வீட்டுக்கு டெலிபோன் வைக்கவும் மறக்கவில்லை; டெலிபோன் நம்பரை கொட்டை எழுத்தில் வீட்டுவாசல் கதவில் பதிக்கவும் மறக்கவில்லை. இனிமேல் மக்களை போட்டோ எடுக்கவேண்டும். எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிடைத்துவிடுமா? பெண்கள் படங்களைப் பிடிப்பதில் ரொம்பக் கெட்டிக்காரன் என்று டோ க்கியோ முழுவதிலுமே பேர்வாங்கிய ஒரு புகைப்படக்காரனிடம் மக்களை அழைத்துக்கொண்டு போனார்கள். ரொம்பக் காக்கப் போட்டுவிட்டான்; அழகழகான பூங்கொத்துக்கள் மாதிரி உடையுடுத்து அலங்காரம் செய்து கொண்டு பல பெண்கள் இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் முறையும் வந்தது. அவர்கள் மக்கள் சிரித்த முகத்தோடும் மலர்ச்சியோடும் இருக்க வேண்டும்; தவிரவும் குளுமையும் களங்கமற்ற தன்மையும் முகம் நிறைந்தாற் போல் இருக்க வேண்டும். படத்திலே உடம்பு புஷ்டியாக - கூடுமானவரை புஷ்டியாகத் தெரிய வேண்டும்; ஏனென்றால் அவள் கொஞ்சம் ஒன்றை நாடி; 'நோஞ்சான் என்று நினைத்து விடக்கூடாது.' போட்டோ பிடிக்கிறவன் இதை எல்லாவற்றையும் புரிந்து கொண்டான். ஐந்து வாரங்கள் கவலையோடு காத்திருந்த பிற்பாடு டோ க்கியோவிலேயே ரொம்பப் பெரிய 'பில்' - எதுக்கென்றாலும் அவ்வளவு பெரிசு இருக்காது - அவர்களுக்கு வந்து சேர்ந்தது. படம் வந்தது; படமும் பாதகமில்லை; இதுதானே முதல் தடவை. பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பது என்றால் பெற்றோர் யார் என்று பார்க்கமாட்டார்களா? அதற்காக நல்லபடி உடுத்துக் கொள்ள வேண்டும்; கூடியவரை அன்னியோன்னியமாக நடந்து கொள்ளுவது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். சண்டை போட்டுக் கொள்ளுவதை நிறுத்திக் கொண்டார்கள். இரண்டு பேரும் அடிக்கடி குழந்தையைக் கட்டிக்கொண்டோ , அல்லது இரண்டு பேர் மட்டும் தனியாகவோ உலாவப் போனார்கள். புருஷன் இரண்டு வருஷத்திற்கு முன் செய்தது மாதிரி பெண்டாட்டி கருப்பு 'பர்' மயிர் வாங்குவதைத் தடுக்கவில்லை. ஒரு வைர மோதிரம் கூட வாங்கிக் கொடுத்து விட்டான். நாடகம் பார்க்கப் போனார்கள்; மூத்த மகளையும் அழைத்துக்கொண்டு போனார்கள்; அவர்கள் பேஸ் பால் விளையாட்டு, நாடகம், சினிமா எல்லாவற்றிற்கும் போனார்கள். தாங்கள் தற்காலத்திய நாகரிகப் பெற்றோர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளுவதற்குப் பேச விஷயங்களாவது வேண்டாமா? மூத்த மகளை அதே போட்டோ கிராபர் இடண்டாந் தடவையும் எடுத்தான்; மூன்று மாசம் கழித்து எடுத்தார்கள்; அது ரொம்ப நன்றாக வந்திருந்தது. பழைய காலத்து நீண்ட கிமோனோ அங்கியும், 'ஒபி' ஜரிகை காலரும் போட்டிருந்தாலும் புஷ்டியாக ஆரோக்கியமாக, மலர்ந்த முகத்துடன் படத்தில் விழுந்திருந்தாள். பன்னிரண்டு காப்பிகள் (நகல்கள்) எடுக்கும்படி உத்திரவு கொடுத்து அவைகளை வாங்கி நண்பர்கள், சொந்தக்காரர்கள் முதலியோரிடை வினியோகித்தார்கள். 2 படம் கிடைத்த இரண்டு மூன்று நாட்களுக்கு அப்புறம் "உங்களுக்கு ஒரு நல்ல சமாச்சாரம் சொல்லப் போகிறேன்" என்றார் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர். இப்பொழுதுதான் பாசாகி பட்டம் பெற்று சர்வகலாசாலையிலிருந்து வெளிவந்திருக்கிறான். தகப்பனார் பணக்காரர். ஆணும் பெண்ணுமாக எட்டுக் குழந்தைகள் அதில் மூத்த பையன் இந்த வாலிபன்; பையன் சர்வகலாசாலையில் பட்டம் வாங்கியவுடனேயே சர்க்கார் நிதி இலாகாவில் வேலை கிடைத்து விட்டது. வேலை கிடைக்காத இந்தக் காலத்தில் இது அதிசயமல்லவா! ஆணும் பெண்ணுமாக எட்டு அண்ணன் தங்கைமாரா? மூத்தவன் என்றால் நல்லதுதான்; ஏனென்றால் பாரம்பரிய சொத்தில் அவனுக்குத்தான் பங்கு ஜாஸ்தி; இருந்தாலும் மற்ற குழந்தைகள் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டால் அவனும் அவன் மனைவியும்தானே குடும்பத்துக்குப் பெரியவன் என்ற ஹோதாவில் தலையிட வேண்டியிருக்கும். நம்ம பொண் ரொம்ப சிறிசு; கல்யாணமாகி பெரிய குடும்பத்தை நடத்த அதற்கு திறமை போதாது; மேலும் இப்பொழுது தானே ஹைஸ்கூல் படிப்பை முடித்திருக்கிறாள்; கலியாணம் பண்ணி வைப்பது என்றால் இன்னும் எவ்வளவோ சொல்லி வைக்க வேண்டும்; "இப்பொழுது அந்த யோசனையில்லை" என்று சொல்லி மரியாதையாகத் தட்டிக் கழித்து விட்டார்கள். மகளும் சர்வகலாசாலையில் பட்டம் வாங்கினாள்; பெற்றோர்கள் நன்றாக நாஸூக்காக உடை உடுத்திக் கொண்டார்கள்; ஒரு மோட்டார் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அவள் வாசித்த ஹைஸ்கூல்களுக்கெல்லாம் போய் சொல்லிக் கொடுத்த வாத்திமார்களுக்கெல்லாம் திருப்தியான பரிசு, ஒவ்வொருவருக்கும் கொடுத்து விட்டு வந்தார்கள். காரணம், உபாத்தியாயர்கள் தம் பெண்ணைப் பற்றி நல்லபடியாகவே சிபாரிசு செய்வார்கள் என்பதுதான். பிறகு அவளுக்கு தேநீர்ச் சடங்கு, பூ அலங்காரம், நோஹ் பாடுவது (நலங்கு பாட்டு மாதிரி), பின்னல் வேலை, எழுத்து வேலை, மேற்கத்தி சுயம்பாகம், தையல் வேலை எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். அவளுக்கு மேற்கத்தி, ஜப்பானிய வள முறைகள் இரண்டும் தெரிந்திருக்க வேண்டாமா? யார் மாப்பிள்ளையாக வரப் போகிறான் என்று என்ன கண்டார்கள். ஜப்பானிய தேநீர் விருந்தென்றால் நீள கிமோனோவைப் (ஜப்பானிய பெண்கள் அணியும் நீள அங்கி) போட்டுக் கொண்டு போனாள்; பேஸ் பால் விளையாட்டுக்கு அழைப்பு வந்தால் தானே தைத்து வைத்துக் கொண்டிருக்கும் அன்னிய மோஸ்தர் உடைகளை அணிந்து கொண்டு சென்றாள்; விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தால், பிரஞ்சு முறையில் மகள் செய்து வைத்த பக்ஷணத்தை அவர்கள் முன்னிலையில் புகழ்ந்தார்கள்; அதுவும் பியானோ மேல் ஜோடித்து வைத்த புஷ்பமும், திரைகளும், குஷன்கள் மேல் போட்டுள்ள பூ வேலைகள் எல்லாம் அவள் செய்தது தான். அவள் திறமைகளை எல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாமா; கூடுமானவரை எல்லாவிதமான திறமைகளையும் பெறும்படி செய்ய வேண்டாமா? இரண்டாம் முறை ஒரு வரன் வந்தது. அவன் ஒரு என்ஜினியர். அவனும் பணக்காரக் குடும்பத்தில் மூத்த பையன்; ஆனால் வேலை காரணமாக அவன் எப்பொழுதும் பிரயாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அதனாலே அவன் மனைவி அவனது பெற்றோருடன் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டியிராது. விவரங்களைப் பார்த்தால் நட்புத் தட்டுகிறது; ஆனால் ஐந்தடி மூன்றங்குலந்தான் உயரமாம். அவளும் அதே உயரம். "பெண்ணுக்கு ஏற்ற வளர்த்திக்கு மேல் இருக்கிறார்" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம் நெட்டை அபேட்சகரும் வந்தார். ஐந்தடி எட்டங்குளம்; அனிகாவா வம்சத்தைச் சேர்ந்த பிரபு. கேட்டபொழுதே மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மகளுக்கு இந்தப் பேறு கிடைப்பதென்றால் சும்மாவா? அவருக்கு நந்தவனம் போடுவதிலும், புஷ்பச் செடி வளர்ப்பிலும் அபாரப் பித்தாம். தம்முடைய மாளிகையில் நந்தவனமும், உஷ்ணப் பிரதேசப் பூச்செடிகளுக்கு என்று செயற்கை உஷ்ணம் கொடுக்கும் 'பூ வீடும்' வைத்து நடத்துகிறாராம். தாயாருடனும் சகோதரிகளுடனும் வசிக்கிறாராம். பேச்சு ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார்கள். மாப்பிள்ளை வீட்டார்கள் நிபந்தனைகள் என்னவோ? ஜமீன்தாரணியம்மாள், பெண் வீட்டுக்கு வரும்பொழுது சீர் வகைகளில் எட்டுச் சொருகு உள்ள அலமாரி, மூன்று பெரிய பெட்டி, இதுக்கேற்ற துணிவகைகள் கொண்டு வரவேண்டும் என்பதாகத் 'தரகன்' சொன்னான். அன்னிய மோஸ்தர் உடைகள் கூடவே கூடாதாம். அவள் கொண்டு வரும் சாமான்கள் அவள் இஷ்டம்போல் விற்கக் கூடியதாக இருக்க வேண்டுமாம். தவிரவும் வருஷத்திற்கு இரண்டு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமாம்; வருஷப் பிறப்பின்போதும், வருஷ மத்தியிலுமாக இரண்டுதரம் அவர்களுக்குக் கடுதாசி எழுதலாமாம்; வருஷத்திற்கு ஒரு தடவை ரொம்பவும் அன்னியோன்னியமான சிநேகிதைகளைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமாம். இதற்குமேல் இஷ்டப்படி வெளியே போகவோ எழுதவோ அனுமதி கிடையாதாம். "இந்த மாதிரி பிடிவாதம் பிடித்த பழம் பசலிகளுக்குப் பெண்ணைக் கொடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள். பொறாமை பிடித்த, குருட்டுத்தனமான தங்களது பெருமையாலும் ஞான விருத்தி விவகார ஞான சூன்யத்தாலும் படிப்படியாக வறுமையில் அழுந்திக் கொண்டிருக்கும் பிரபுக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ள உலகத்தில் உள்ள செல்வம் பூராவும் கொடுத்தாலும் முடியாது என்று விட்டுவிட்டார்கள். 3 அப்புறம் புதுசாப் பணம் படைத்த குடும்பம் பெண் கேட்டு வந்தது. தகப்பனார் ஒரு பெரிய தொழிற்சாலை வைத்து நடத்துகிறார். பத்து லட்சம் 'என்' (ஜப்பானிய நாணயம்) ஆஸ்தி என்று தரகன் சொன்னான். மாப்பிள்ளை இப்பொழுதுதான் இம்பீரியல் சர்வகலாசாலையிலிருந்து ஹானர்ஸ் பட்டத்துடன் வெளியே வந்திருக்கிறான். பார்க்கிறதுக்கு அழகாக இருப்பான்; நெட்டையாகவும் இருப்பான். பையனும் தகப்பனார் கூட அதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் உண்டு. சகோதரன் கிடையாது. சொத்து முழுவதும் அவனைத்தான் சேரும். தரகனிடம் மகளின் படத்தையும் பள்ளிக்கூட மார்க்குகளையும் கொடுத்தனுப்பினார்கள். ஒரு வாரம் கழித்து தரகன் திரும்பி வந்து மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதை அந்தக் குடும்பம் விரும்புவதாகச் சொன்னாள். 'அவசரப்படாதே' என சிறிது அச்சத்தோடு சொன்னார்கள். ஒவ்வொருவர் அந்தஸ்தையும் அறிந்து சொல்லும் இரகசிய விசாரணை இலாகாவுக்கு மனுச் செய்து கொண்டிருந்தார்கள். அது வரட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும் என தரகுகாரியிடம் சொன்னார்கள். தகவல் வந்தது. அவருக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் 'என்' இருக்கலாம். அவருக்கு இரண்டு வைப்பாட்டிமார் உண்டு. அந்த வழியில் ஐந்து குழந்தைகளும் உண்டு. சொத்துக்கு வாரிசான வாலிபன் ஒரு ஹோட்டல் பணிப்பெண்ணிடம் 'சம்பந்தம்' வைத்துக் கொண்டிருந்தான். அது போதாதா? பார்த்ததும் நடுநடுங்கினார்கள். ஆதி முதலே தரகர்மேல் சம்பந்தம். அவள் முழுக்கிற முழியைப் பார்த்தாலே பழைய காலத்து நினைப்புள்ளவள்; அவளுக்குக் கலியாணம் என்றால் இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்படும் வெறும் தொடர்புதான். கலியாணத்திற்கு அப்புறம் கமிஷன் வாங்கிய பின் அந்தப் பொறுப்பைப் பற்றி அவள் ஜவாப்தாரியல்ல. 'தரகச்சி' வார்த்தையில் சவாரி செய்வதா' என நினைத்தார்கள். அப்புறம் பல அபேட்சகர்கள் வந்தார்கள். ஒரு கெட்டிக்கார ஏழை வாலிபன்; அவனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. கொஞ்சம் கனமாகவே ஸ்ரீதனம் கொண்டு வந்தால் பொருட்படுத்துவான்; ஆனால் இப்பொழுதுதான் எத்தனையோ பேர் அந்த மாதிரி கிடைக்குமே. பெண்டாட்டியின் பணத்தை வைத்துக்கொண்டு முன்னுக்கு வருவது, பிறகு அதை மறந்துவிட்டு வைப்பாட்டிகளை விலைக்கு வாங்குவது. அப்புறம் ஒரு வாலிப நீதிபதி. வயசு இருபத்தி ஒன்பதுதான். இருந்தாலும் ஒன்பது வருஷ வித்தியாசம் இருக்குமே. ஒன்பது அதிர்ஷ்டம் கெட்ட எண். ஒன்பது வயசு வித்தியாசமுள்ள தம்பதிகள் வயசாகும் வரை ஒன்றாக வாழ்ந்ததில்லை. அப்புறம் ஒரு காலேஜ் புரொபஸர். சம்பளமும் ரொம்பக் கொஞ்சந்தான். பிறகு ஒரு ராணுவ உத்தியோகஸ்தர்; ஒரு பேரன் (பிரபு அந்தஸ்து) வேண்டாம் ஐயா; சோல்ஜர்கள் பேச்சே நமக்கு வேண்டாம். "பொண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பது என்றால் என்ன சிரமம்" என பெற்றோர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். மூன்று வருஷமாக ஆகிறதே. இன்னும் எத்தனை நாள் இந்த மன உளைச்சல். இரண்டாவது பெண்ணுக்கும் கலியாணத்துக்கு வயதாகிவிட்டது. குழந்தைகளை வேனிற்காலம் முழுவதும் கடல் கரை சுகவாசஸ்தலத்திற்கு அழைத்துக்கொண்டு போவது என்று தீர்மானித்தார்கள். மூத்த பெண் ரொம்ப ஒற்றை நாடியாகவும் இளைத்துப் போனவள் போலவும் காணப்பட்டாள். வேனிற்காலத்தில் இந்த மாதிரிப் பெண்களே நாஸுக் இல்லை. 4 இப்படியாகத் தாயார் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நாஸுக்கான கடல்கரை சுக வாசஸ்தலத்திற்குச் சென்றாள். வேனிற்காலம் முழுமையும் அங்கேயே தங்கினார்கள். தகப்பனார் மட்டும் வாரக் கடைசியில் வந்து போய்க் கொண்டிருந்தார். புருஷனை விட்டுத் தனியாக இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஏவின வேலைக்கு ஏன் என்று கேட்க ஹோட்டலில் பணியாட்கள். சுகமாகத்தான் இருக்கிறது என நினைத்தாள் தாயார். மகள் கலியாண வயசில் இருப்பதினால் அல்லவா இந்தப் பாக்கியம். "வெயிலிலே உடம்பைக் கருக வைத்துக் கொள்ள வேண்டாம்; மாப்பிள்ளைக்கு ஏற்ற வாலிபன் வருகிறானா என்று கவனி!" என்று தகப்பனார் தாயாருக்கு உத்தரவு போட்டார். ஆனால் தாயாருக்கு அங்கு தென்பட்ட வாலிபர்களிடம் பேசவோ அல்லது பழக்கப்படுத்திக் கொள்ளவோ தைரியம் போதவில்லை. அவளால் செய்ய முடிந்தது எல்லாம் இதுதான்; மகளை அழகாகச் சீவி சிங்காரித்து கடல்கரைக்கு 'உலாவ' அழைத்துக்கொண்டு போவாள். நல்ல வம்சத்தில் பிறந்த கற்பனை மிகுந்த வாலிபன் யாராவது மகளைக் கண்டதும் காதல் கொள்ளுவான் என்று நம்பினாள். மகளுக்கு ஸ்நான உடை ஏற்றதாக இல்லை; தகப்பனார் ரொம்ப பணத்திற்குத்தான் வாங்கிக் கொடுத்தார்; ஆகையால் வாலிபர்கள் தென்பட்டால்தான் அதை உடுத்துக்கொண்டு குளிப்பதற்கு மகளை அனுமதிப்பாள் தாயார். உடன் பலன் ஏதும் ஏற்படவில்லை; ஆனால் தகப்பனாரும் தாயாரும் 'குழந்தையை' மறுபடியும் ஊருக்கு அழைத்துக் கொண்டு போகையில் கொஞ்சம் திடமாக இருப்பது கண்டு திருப்தி அடைந்தார்கள். ரொம்பச் செலவில் குஷியாகக் கழிந்த 'விடுமுறை'யைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். செலவைக் கொண்டு வந்த வேனில் நல்ல பலனைத்தான் அளித்தது என்று பேசிக் கொண்டார்கள். "வாஸ்தவமாகவே நல்ல சமாசாரம்" என்று சொன்னார் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர். வாலிபன் பாங்கி குமாஸ்தா; ஆனால் தகப்பனார் தென்கடல் வர்த்தகக் கம்பெனி ஒன்றில் டைரக்டர்; குடும்பத்தில் மூன்று ஆண் குழந்தைகள்; இவர் இரண்டாவது; தவிர ஒரு பெண்ணும் உண்டு. அவன் இம்பீரியல் சர்வகலாசாலையில் பட்டதாரி; இருபத்தியேழு வயசு. நெட்டையாக, அழகாக இருப்பான். அவனுடைய அண்ணா ஒரு பேரனுடைய மகளைக் கலியாணம் செய்து கொண்டு சமுத்திரக் கரையருகில் உள்ள தங்கள் சிறு வீட்டில் மனைவியுடனும் மகனுடனும் வசித்து வருகிறான்; ஏனென்றால் மோட்டார் விபத்தில், நிரந்தர வியாதியஸ்தனாக ஆகிவிட்டான். "இரண்டாவது பிள்ளை; மூத்தவன் வியாதியில் படுத்துவிட்டான்..." தகப்பனார் இரண்டையும் எடைபோட்டுப் பார்த்தார். சொத்தில் முக்கால்வாசி மூத்தவனுக்குப் போகும்; அவன் இறந்தால் அவனுடைய மகனுக்குப் போகும். இரண்டாவது மகனும் தன் மனைவியும் டோ க்கியோவில் பெற்றோருடன் வசித்து அவர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும்; ஆனால் குடும்பச் சொத்து கிடைக்காது. இது நியாயமா. தகப்பன் தான் நல்ல சொத்தும் பிரபலமும் வாய்ந்தவராச்சே. யோசித்துப் பார்க்கிறோம்... அந்தஸ்து விவர அறிவிப்பு ஸ்தாபனத்திற்கு மனுச் செய்து கொண்டார்கள்; தகவல்கள் வருமாறு; குடும்ப சொத்து ஐந்து லட்சம். உறவினரும் நல்ல செயலில் இருக்கிறார்கள்; வைப்பாட்டியோ, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குடும்ப வியாதியோ கிடையாது. பையனும் யோக்கியமாகவே நடந்து வந்திருக்கிறான். எல்லாம் விரும்பத்தக்கதாகத்தான் இருந்தது. அந்த ஐந்து லட்சத்தில் எவ்வளவு இந்தப் பையனுக்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்; அதைப்பற்றிக் கேட்பது மரியாதையா? எல்லா அம்சங்களிலும் பூரணமாகத் திருப்தி ஏற்படுகிறது என்றால் நடக்கிற காரியமா? மகள் கலியாணமாகும் பருவத்தை இப்பவும் பரிசீலனையிலேயே கழித்துவிடுவதா? நான்கையும் யோசித்துவிட்டு வாலிபனைப் பார்க்க வேணும் என்றனர்; அதன் அர்த்தம் என்ன; மகளை அவனுக்குக் கலியாணம் செய்து கொடுக்கத் தயார் என்பதுதான். எதிர்த்தரப்பிலிருந்தும் 'சரி' என்றே பதில் வந்தது. 5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, அன்று விடியற்காலை அழகு நிபுணி பெரிய அலங்காரப் பெட்டியும் கையுமாக வந்தாள். அவள் பெண்ணின் முகத்தைக் கழுவி 'மாலீஸ்' செய்து வர்ணம் ஏற்றினாள். தலை மயிரை தற்கால நாகரிக மோஸ்தரில் நெற்றியிலே சுருள்சுருளாக விழும்படி சீவிப் பணிய வைத்தாள். அடுக்கடுக்காகக் கண்ணைப் பறிக்கும் பட்டு கிமோனோவை அணிவித்து அகலமான 'ஒபி' உத்தரியத்தை வைத்து இறுகக் கட்டினாள். பெண் நாணத்தால் முகம் சிவந்து முழு நேரமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மோட்டார் காரில் நாடகக் கொட்டகைக்குப் போனார்கள்; 'பாக்ஸுகளுள்' மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாய்த்தரையில் போட்ட குஷன் மெத்தைகளில் உட்கார்ந்தார்கள். அப்பொழுதுதான் திரை உயரச் சென்றது. ஆனால் பல வர்ணப் படாடோ ப உடைகளில் தோன்றியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கக்கூட சிரத்தை கொள்ளவில்லை. அப்புறம் அந்தக் கோஷ்டியும் வந்தது; ஜப்பானிய சம்பிரதாய உடையில் பெற்றோர்கள்; நாஸுக் வெட்டுகளில் தைக்கப்பட்ட மேற்கத்தி உடையில் அழகான அந்த வாலிபன் வந்தான். தரகர் தம்பதிகளும் அவர்களுடன் வந்து அறிமுகம் செய்து வைத்தார்கள். பெண் நாணத்தால் குனிந்த முகத்தை நிமிரவே இல்லை; சமயா சமயங்களில் புன்சிரிப்புடன் தலை வணங்கினாள். வாலிபனும் அவன் பெற்றோர்களும் அவள் முகத்தைப் பார்த்தார்களோ என்னவோ! மறுநாள் தரகரும் அவர் மனைவியும் வந்தார்கள். ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் பார்த்தார்கள். சீர்வரிசை பரிமாறிக்கொள்ளும் தினத்தையும் கலியாண நாளையும் நிச்சயித்தனர். முன்னது நவம்பர் மூன்றாந்தேதி என்றும் மற்றது டிசம்பர் பதினைந்தாம் தேதி என்றும் நிச்சயித்தார்கள். 'காயை உருட்டியாகிவிட்டது' என்றார்கள் பெறோர்; பெண்ணை இருளடித்துப் போன விதி என்ற பாதாளத்தில் உருட்டியது மாதிரிக் கருதினார்கள். அவர்கள் முக்கியமாக அவளது தகப்பனார் சோகத்திற்கு ஆட்பட்டார்; பிரமாதமான அசட்டு நம்பிக்கைகள் எல்லாம் அவரைக் கவ்விக் கொண்டன. முதல் நட்சத்திரத்தின் வர்ணம் வெள்ளை (அது மகளின் ஜன்ம நட்சத்திரம்) ரொம்ப அதிர்ஷ்டமுள்ளது; மூன்றாவது நட்சத்திரம் (மாப்பிள்ளையாக வரப்போகிறவரின் நட்சத்திரம்) நீல வர்ணமுடையது; இரண்டிற்கும் ஒரு பொருத்தம் உண்டு என்றது பஞ்சாங்கம். ராசி மண்டல சின்னங்களைப் பொறுத்தவரை மகளுடையது கோழி; வரப்போகும் வரனுடையது புதி - இரண்டின் இணைப்பும் கெடுதல் அல்லவே அல்ல. முதல் வெண் நட்சத்திர ஸ்திரீக்கு நவம்பர் மூன்றாந் தேதி ரொம்ப சுகமான தினம்; டிசம்பர் பதினைந்தாம் தேதியோ அந்த வருஷத்தில் யாவருக்கும் அதிர்ஷ்டம் மிகுந்த தினம். எல்லாம் பொருத்தமாகத்தான் இருந்தது; இருந்தாலும் தகப்பனாருக்கு என்னவோ கவலைதான். சாமான்களைத் தனித்தனி இலாகாவாகப் பிரித்து நிர்வகிக்கும் பெரிய கடை ஒன்றுக்கு அவர்கள் சென்று நிச்சயதார்த்த சீர்வரிசைகளை வாங்கினார்கள். மறுநாள் எல்லா சாமான்களும் சடங்குகளுக்கு உபயோகிக்கக்கூடிய மாதிரியில் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. பெரிய மரப்பெட்டியில் இங்கிலீஷ் 'செர்ஜ்' கம்பளித்துணி சுருணையாகச் சுருட்டி வைக்கப்பட்டு, நல்ல முரட்டு வெள்ளைக் கடுதாசியில் பொதிந்து ஜரிகை நாடாக்களில் கட்டி 'ஷின்டோ ' மரவையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த இங்கிலீஷ் செர்ஜ் மாப்பிள்ளைக்கு நாஸுக்கான ஸூட் தைக்க; ரொம்பவும் நாகரீகமான சீர். சம்பந்திகளின் வாடாத செழிப்புக்கு அடையாளமாக வெள்ளை சிகப்பு வர்ணங்களில் காகித விசிறிகள். அந்தக் குடும்பத்தில் ஒன்று விட்ட மைத்துனன் வரை எல்லோருடைய பெயரையும் கிரமமாகப் பட்டியல் செய்து சேர்த்து 'வாழ்த்தி' வைக்கப்பட்டது. இவை தரகர் வீட்டில் வைத்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு இடுப்பில் சுற்ற வேண்டிய அகலமான 'ஒபி' உத்தரியத்தை அழகாக வைத்துக் கொடுத்தார்கள். நிச்சயதார்த்த சீர்களை மாற்றிக் கொண்டபின் கலியாண பந்தத்தை யாரும் மீற முடியாது; கூடாது. மாப்பிள்ளை வீட்டுக்காரரும் விவேகிகள், லௌகிகம் தெரிந்தவர்கள்; பெண் கொண்டுவர வேண்டிய சீதனம் முதலியவை பற்றி 'அறுத்துப்' பேசவில்லை. இது பெண்ணின் தகப்பனாருக்கு ரொம்பத் திருப்தியாக இருந்தது; தகப்பனார் லோகம் தெரிந்தவர்; அனுபவசாலி. சீர்களைக் குறைந்த அளவில் வைத்துக்கொண்டு சீதனத் தொகையை அழியாத என்றைக்கும் பணமாக்கக்கூடிய பங்குகள், பத்திரங்களாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். பணத்தை ரொக்கமாகக் கொடுத்தால், - தான் மனைவியிடம் அந்தக் காலத்தில் நடந்து கொண்டதை வைத்து நினைத்து 'ஷோக்' சுந்தரிகளுடன் விளையாடி விடுவதற்கு வசதி செய்வதாகும் என நினைத்தார். விலையுயர்ந்த துணி மணிகளில்தான் ஆபத்தில்லை; மேலும் மாப்பிள்ளையின் அண்ணன் மனைவி பெரிய குடும்பத்துப் பெண். அவள் கொண்டு வந்த திருமண ஜவுளி வகைகளை விட இவளுக்கு விலையுயர்ந்ததாக இருந்தால் தான் இவளைத் துச்சமாக நினைத்து அவமதிக்காமல் இருப்பாள்" என்று தாயார் தினசரி இரவும் பகலும் கலியாணச் சாமான்கள் வாங்கப் போகும் பொழுது எல்லாம் சொன்னாள். வெள்ளி, தங்கம் சீல்வைத்த கருங்காலி அலமாரி ஐந்து சொருகு உள்ளது - அது நிறைய கணக்கில்லாமல் பட்டுக் கிமோனோ அங்கி; ஜரிகைப் பின்னல் வேலைகள் செய்த ஒபி உத்தரியங்கள்; அலமாரியைத் திறந்து பார்த்தால் வானவில்லை எல்லாம் மடித்து 'இஸ்திரி' போட்டு பெட்டியில் மடக்கி வைத்த மாதிரி இருக்கும். தலைவாரி சீவி முடித்துக் கொள்ள ஒரு தனி மேஜை; அதிலே முத்துப் பதித்த ஆமையோட்டுக் கொண்டை ஊசிகள். நீலக்கல், பவளராகங்கள். இன்னும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய படுக்கை மெத்தை, தலையணை, தேனீர் செட்டுகள், மேற்கத்தி மோஸ்தரில் அமைந்த வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டு சாமான்கள், பாத்திர வகைகள். இதற்கப்புறம் ஒரு பெரிய பெட்டியும் சேர்க்கப்பட்டது. இதில் மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றவுடன் தன்னுடைய பெற்றோர், உறவினர், பந்துக்கள், சிநேகிதர்கள், ஊழியர்கள் முதலியோருக்குப் பரிசாக வழங்க வேண்டிய பட்டு, ஜரிகைப் பெட்டி, கொண்டை ஊசி, வெண்கலத் தாலங்கள், பொம்மைகள் முதலியன நிறைத்து வைக்கப்பட்டது. எல்லாம் மொத்தம் ஐம்பத்தியைந்து பேருக்குப் பரிசுகள். மணப்பெண் ஜவுளி வகைக்கு மட்டும் இருபத்தி ஐயாயிரம் என செலவாச்சு; "என் அருமந்த மகளுடன் இவ்வளவையும் கொடுக்க வேண்டுமே" என தகப்பனார் பெருமூச்சு விட்டார். இவை எல்லாவற்றையும் மாப்பிள்ளை வீட்டார் எடுத்துக்கொண்டு போகுமுன் பெண்ணின் அத்தை, சித்தி, மைத்துனிமாருக்கெல்லாம் காட்டப்பட்டது. ஒவ்வொரு சாமானும் என்ன விலையாச்சு என்று சுற்றி நின்ற சொந்தக்காரர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்; அலங்கார உடையணிந்த ஊழியர் தலையிலேற்றி ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என விரும்பினார்; ஆனால் டோ க்கியோவில் அந்தப் பழக்கம் பழசாப் போச்சு; அதனால் கலியாணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக இரண்டு மோட்டார் லாரிகள் நிறைய ஏற்றி அங்கு கொண்டு போனார்கள்; சம்பிரதாயப்படி சீர்வகைச் சாமான்களை பெண்ணின் தகப்பனார் இனம் இனமாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு விவரப்பட்டியலையும் சாவிக் கொத்தையும் ஒப்படைத்தார். கலியாணச் சடங்கின்போது பெண்ணுக்கு மேலங்கியைப் போடுவதில்லையென்ற உறுதிமொழியை பெண்ணின் பெற்றோர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரரிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார்கள். இந்த மேலங்கியை ஒரே தடவைதான் உபயோகிக்க முடியும். அதில் ஜரிகை, பின்னல், சித்திர வேலை எல்லாம் சேர்த்து பல நூறு 'என்னுக்கு' செலவு இழுத்துவிட்டது. மேலும் டோ க்கியோவில் இந்தக் காலத்தில் அதைப் போடும் வழக்கமே போய்விட்டது. மணப்பெண்ணுக்கு, 'கைகள்' தரையில் புரளும் சம்பிரதாயக் கிமோனோ அங்கி அணிவிக்கப்பட்டது. அங்கியின் 'உடல்' கறுப்பு; ஆனால் சவுக்கையின் ஊசி இலைகள், பழங்கொத்துகள், மூங்கில் இலைகள் இவை நிறைத்து பின்னப்பட்டிருந்தன. கற்பு, உறுதி, தன்னடக்கம் மூன்றின் உருவங்கள் அவை மூன்றும். அந்த உடைக்குள் வெள்ளை, சிகப்பு கிமோனோ அங்கிகளைப் போட்டிருந்தார்கள்; சம்பிரதாய 'ஒபி' உத்தரீயம் தங்க - வெள்ளி ஜரிகையில் மின்னியது. கேசம் மணப்பெண்ணுக்குரிய சம்பிரதாயக் கொண்டையிடப்பட்டு ஊசி குத்தப்பட்டிருந்தது. கொண்டையை மறைக்க வெள்ளைச் சல்லாப்பட்டு முக்காடு இட்டார்கள். இந்த முக்காடு பெண்ணின் பணிவைக் குறிக்கிறது. கொண்டை பெண்ணுக்குரிய பொறுமைக் குணத்தைக் காட்டுகிறது. கணவன் பரஸ்திரீ நாட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிந்தாலும், தன் வாழ்வு முழுவதும் அந்தப் பொறாமையை மறைத்துக் கொள்வதாக உறுதி கொடுப்பதற்கு அடையாளம் அந்த முக்காடு. இவ்வளவு கேவலமான அர்த்தம் பொதிந்த முக்காட்டைப் போடுவதில் பெண்ணின் தகப்பனாருக்கு சிறிது அதிருப்தி; 'என்னடா காட்டுமிராண்டிப் பழக்கம்' என வாழையடி வாழையாக வந்த சடங்கைப் பற்றி நினைத்தார்; எப்படியானாலும் எந்த நிலைமையையும் பொறுமையுடன் சகிப்பது தான் பெண்ணுக்கு அழகு. பெண்ணைப் பழைய முறையில் சிங்காரித்து மேற்கத்தி மோஸ்தரில் ஸூட் போட்ட வாலிபன் கையில் பிடித்துக் கொடுப்பது விபரீதமாகப் படவில்லை. மகள் மேல் ஆசை தழுவும் தகப்பனாருக்கு ஏன், அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவருக்காவது அது விபரீதமாகப் படவில்லை. நாகரிக டோ க்கியோவில் அந்த மாதிரி தான் எல்லா இடத்திலும் கலியாணம் நடக்கிறது. 6 கலியாணச் சடங்கு அமாதராஸு என்ற சூர்ய தேவியின் மகாலயத்தில் நடந்தது. தேவியின் (ஜப்பானில் சூரியன் பெண் தெய்வம். ரசக்குறைவு இல்லாமல் இருக்க சூரியனுக்கு பெண்பாலை உபயோகிப்பதற்குப் பதிலாக சூரியதேவி எனக் குறிப்பிட்டிருக்கிறேன்) சன்னிதானத்தில் ஷின்டோ அர்ச்சகர்கள் தம்பதிகளைப் பரிசுத்தப்படுத்தினார்கள்; உற்றார் உறவினர் சகாகி மரக்கொப்புகளை அவர்கள் தலை மீது வீசினார்கள். பிரதம அர்ச்சகர் தேவியையும் அவள் பரிவாரமான எண்பது லட்சம் தெய்வங்களையும் அழைக்க மூன்று முறை கைகளைத் தட்டினார். பவித்திரமான அரிசி பானத்தை மண் கலசத்தில் அளித்தார்; தம்பதிகள் அதை மூன்று முறை அருந்தினார்கள். சம்பந்தி ஐக்கியத்தைக் காட்ட இருதிறத்து உறவினரும் கலசங்கள் பரிமாறிக் கொண்டனர். 'இட்டிலிகள்', பட்சணங்கள், பழவகைகள், காய்கறிகள் மலைமலையாக சன்னிதானத்தில் குவிக்கப்பட்டன. ஷின்டோ இசை புராதன சுருதிகளைத் தாங்கி எழுந்தன. ஷின்டோ திருமணக் கிரியைக்குப் பிறகு, டோ க்கியோவிலேயே மேற்கத்தி மோஸ்தருக்குப் பேர் பெற்ற இம்பீரியல் ஹோட்டல் விருந்து மண்டபத்தில் மறுவீட்டு விருந்து நடந்தது. சம்பந்திகள் விருந்தினர் யாவரும் ஹோட்டலுக்கு மோட்டாரில் சென்றார்கள். தம்பதிகள் இருவரும் ஒரு காரில் தரகுத் தம்பதிகள் துணைவர தனியாகச் சென்றார்கள். வரவேற்பு மண்டபத்திற்கு வருமுன் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட தோழிகள் திருமண உடையைக் கழற்றி இளம் லவங்கப் பட்டை வர்ணத்தில் உள்ள பூப்போட்ட பட்டாடையை அணிவித்தார்கள். மண்டபத்தின் நடுவே போடப்பட்ட பெரிய மேஜையின் மத்தியில் மாப்பிள்ளைக்கு அருகில் உட்கார வைக்கப்பட்டாள். அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் தரகரும் அவர் மனைவியும் உட்கார்ந்து கொண்டார்கள். இருநூறு விருந்தினருக்கு மேல் வந்திருந்தார்கள். ஆண்கள் மேற்கத்தி மோஸ்தர் 'குருவிலால்' சட்டையிலும், கலியாணமான ஸ்திரீகள் கறுப்பு கிமோனோ அங்கியிலும், கலியாணமாகாத பெண்கள் பல வர்ண கிமோனோக்களிலும் வந்திருந்தனர். விருந்து மேற்கத்தி மோஸ்தரில் இருந்தது. இரு சம்பந்தி வீட்டுக்காரர்களும் பழக்கமில்லாத கத்தியும் 'முள்ளும்' உபயோகித்து உணவு வகைகளுடன் போராடினார்கள்; மதுவும் வான்கோழிக் கறியுமானாலும் சாப்பிடும் போது பேசுவது மரியாதைக் குறைவு. சாப்பாடு முடிந்தது. பழங்கள் பரிமாறப்படும் போது தரகுத் தம்பதிகள் எழுந்து நின்றார்கள். மணமகனும் மணப்பெண்ணும் எழுந்து நின்றார்கள். தரகர், தம்பதிகளை விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைத்து இருவருடைய படிப்பு, திறமை பற்றிய விவரங்களை வாசித்து, விருந்தினர் யாவரும் அநுபவம் இல்லாத இந்த யுவ தம்பதிகளுக்கு வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என புத்தி சொல்ல வேண்டும் என்று பேசி முடித்தார். விருந்தினர் சார்பாகச் சில பெரியவர்கள், எழுந்து ஆசி கூறினார்கள்; ஐஸ்கிரீமும் காப்பியும் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் மணப்பெண் மாமியாருடனும் தரகர் மனைவியுடனும் உள்ளே சென்றாள். உள்ளே சென்று குளித்து, முகத்தில் அப்பியிருந்த வெள்ளை வர்ணத்தைத் தேய்த்துக் கழுவினாள். கலியாணக் கொண்டை அவிழ்க்கப்பட்டு மின்சார விசிறியால் உலர்த்திக் கோதப்பட்டு தற்கால மோஸ்தர்படி சுருள் சுருளாகச் சித்தரிக்கப்பட்டது; முந்தியைப் போல் அடியோடு சம்பிரதாயத்தைப் பின்பற்றாமலும் ஆனால் அதைவிட்டு அடியோடு விலகாமலும் உள்ள ஒரு கிமோனோ அங்கியை அணிந்துகொண்டாள். அவள் இப்பொழுது திருமண - யாத்திரைக்குத் தயார். (திருமண யாத்திரை என்பது மேற்கத்தி வழக்கம். கலியாணமானவுடன் தம்பதிகள் பரஸ்பரம் அறிந்துகொள்ள தனியாக யாத்திரை செய்தல் வாழ்வின் தாம்பத்ய யாத்திரைக்கு உருவகம்.) தாயாரும் தகப்பனாரும் கவலையுடன் காத்திருந்தனர். யாத்திரை உடையில் மாமியாருடன் அவள் வருவதைக் கண்டதும் பெற்றோர் இருவருடைய உள்ளத்தில் பொறாமையும் தோல்வியும் ஆழமாகக் குத்தியது. சம்பந்திகளை மரியாதையாக வணங்கினார்கள். "பெண் சிறிசு; அனுபவமில்லாதவள், சம்பந்தியவர்கள் ரெண்டுபேரும் தாட்சண்யமில்லாது கண்டிப்பாக வளர்க்க வேண்டும்" என வேண்டிக் கொண்டார்கள். மோட்டார் தயாராக வாசலில் நின்றது. விருந்தினர்கள் ஹோட்டல் முகப்பில் நின்று வழியனுப்பினார்கள்; தம்பதிகள் டோ க்கியோ ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். 9-15க்குச் செல்லும் அடாமி பிளாட்பாரத்தில் தயாராக நின்றது. பூமாலைகளில் புதையுண்டு முதல் வகுப்பு வண்டியில் உட்கார்ந்திருந்தார்கள். வருஷம் முழுவதிலும் இதுவே ரொம்ப அதிர்ஷ்டம் வாய்ந்த நாளாகையால் அன்று பல ஜோடிகளுக்குக் கலியாணம் நடந்திருந்தது; அவர்களைப் போல முதல் இரவை மகாஅடாமி ஹோட்டலில் கழிக்க தீர்மானித்து இருந்தார்கள்; ஏனெனால் இது ஜப்பானிய முறையில் அல்லாமல் பெரிய சுவர்கள் வைத்த அறைகளும் சாவியும் தாழ்ப்பாளும் உள்ள கதவுகளும் அமைந்த ஹோட்டல்; ஜப்பானிய ஹோட்டல் என்றால் கடுதாசித் திரைதான் போட்டிருக்கும். மேலும் அந்த ஹோட்டலில் சுகமாக வென்னீரில் ஸ்நானம் செய்ய வசதியுண்டு. மறுநாள் மலைச்சாரல்களிலும் கடற்கரையிலும் கைகோர்த்து உலாவித்திரிய வசதியுண்டு. குதூகலம் நிறைந்த வாலிபர்கள் மேற்கத்தி ஸூட் அணிந்திருந்தனர்; நாணங்கனிவால் சிவந்த புதுமணப் பெண்கள் சிவந்த கிமோனோ அணிந்திருந்தனர்; சிகப்பு மாரிக்கு அடுத்த வர்ணம்; உறவினரிடம் வழியனுப்பிக் கொள்ள ஜன்னல் வழியாகத் தலை நீட்டினர். "ஒரு ஜோடியிலிருந்து மற்றொரு ஜோடியை அடையாளம் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம்" என பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். "அவள் புருஷன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; ஒரு தடவை தவறிவிட்டால், அப்புறம் அவனை அடையாளம் கண்டு கொள்ளுவாளோ என்னவோ." அவனை ஒரு முறை தானே இதற்கு முன் பார்த்திருக்கிறாள் என்ற கவலை பெற்றோருக்கு. பெண்ணின் முகம் 'தூங்கி' இருந்தது. அவள் உள்ளே தலையை இழுத்தாள்; வண்டியும் புறப்பட்டது. "அவள் போய்விட்டாள்; இனி வேறு ஒரு குடும்பத்திற்குச் சொந்தம்" என வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு, ஈடு செய்து கொள்ள முடியாத தங்கள் நஷ்டத்தைப் பற்றிச் சிந்தித்தார்கள். |