மணியோசை

ஜப்பான்

     "நான் சாவதற்குப் பயப்படவில்லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி.

     "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?"

     வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கணவன் சொன்னான்: "உனக்குப் பதிலாக யாரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள்; நீ போய்விட்டால் கலியாணமே செய்து கொள்ளமாட்டேன்."

     அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது மனப்பூர்வமாகத்தான் சொன்னான்; அவள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு.

     "இது ஸாமுராய் வாக்குத்தானே" என்று கேட்டாள் மனைவி.

     "சத்தியமாகச் சொல்லுகிறேன். இது ஸாமுராயின் வாக்குத்தான்" என்று முகத்தைத் தடவிக் கொடுத்தான் கணவன்.

     "அப்படியானால் நம்முடைய தோட்டத்திலேயே என்னை அடக்கம் செய்து விடுவீர்களா? அந்தக் கோடியிலே நாம் இரண்டு பேரும் நட்டு வைத்தோமே அந்தச் சீமை வாதுமை நிழலில். வெகுநாட்களாகவே இதைக் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை; நீங்கள் ஒரு வேளை கலியாணம் செய்து கொண்டால், என்னுடைய கல்லறை, வீட்டருகில் இருப்பது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் வேறொருத்தி வரமாட்டாள் என்று வாக்குக் கொடுத்து விட்டீர்களே, அதனால் என் ஆசையைச் சொன்னேன். நான் தோட்டத்திலிருந்தால், உங்கள் குரல் கேட்கும்; வசந்தத்துப் பூக்களைப் பார்க்கவும் முடியும்" என்றாள்.

     "உன் ஆசையை நடத்தி வைக்கிறேன்; இப்பொழுதே ஏன் அடக்கத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன் உடம்புக்கு அவ்வளவு மோசமில்லையே?" என்றான்.

     "எனக்கு நம்பிக்கை இல்லை. காலையிலே நான் செத்துப் போவேன்... நீங்கள் என்னைத் தோட்டத்தில் தானே புதைத்து விடுவீர்கள்?" என்று மறுபடியும் கேட்டாள்.

     "ஆமாம்; நாம் நட்டு வைத்த அந்தச் சீமை வாதுமை நிழலில்... உனக்கு அழகான கல்லறை கட்டி வைக்கிறேன்" என்றான் கணவன்.

     "எனக்கு ஒரு மணி கொடுப்பீர்களா?"

     "மணியா... என்ன மணி?"

     "ஆமாம்; மணிதான். என்னுடன் ஒரு மணியையும் - புத்த பிக்ஷுக்கள் கொண்டு நடக்கிறார்களே - அந்த மாதிரி மணி ஒன்றையும் என்னுடன் வைத்து அடக்கம் பண்ணி விடுங்கள்."

     "மணியும் தருகிறேன்; வேறு என்ன வேண்டும் உனக்கு?"

     "இனி ஒன்றும் வேண்டாம். இருக்கிறவரை என்னை ஆசையோடு வைத்திருந்தீர்கள்; இனிமேல் சந்தோஷமாக செத்துப் போவேன்" என்று சொல்லிக் கண்ணை மூடினாள். உயிர் அகன்றது. செத்தும் தூங்குவது போலத்தான் கிடந்தாள். முகத்திலே ஒரு புன்சிரிப்பு இருந்தது.

     அவள் ஆசைப்பட்டபடி தோட்டத்திலே அவளை அடக்கம் பண்ணினார்கள். அழகான கல்லறை கட்டினார்கள். "கருணாஸாகர மாளிகையில், ஒளி மிகுந்த சீமை வாதுமை நிழல் மண்டபத்தில் வாழும் பெரியக்காள்" என சிலா சாசனம் பண்ணுவித்தார்கள்.

*****

     மனைவி செத்த பனிரெண்டு மாதங்களுக்குள் ஸாமுராயின் உற்றார் உறவினர்கள் அவனை மறுபடியும் கலியாணம் பண்ணிக் கொள்ளும்படி நிர்ப்பந்தப்படுத்தினார்கள். "உனக்கு என்ன வயதாகிவிட்டதா; கலியாணம் செய்து கொள்வது ஸாமுராய் கடமை அல்லவா. குழந்தை குட்டி இல்லாமல் நீ மாண்டு போனால் பித்ருக்களை வழிபடுவதற்கு யார் இருக்கிறார்கள்?" என்று சொல்லி நெருக்கினார்கள்.

     இடைவிடாது புத்தி சொல்லி அவனைக் கலியாணம் செய்து கொள்ள வைத்தார்கள். பெண்ணுக்கு வயது பதினேழுதான். மூங்கையாக நின்று இடித்துக் காட்டும் கல்லறைத் தோட்டத்தில் நின்றும், அவளையும் ஆசையோடு நடத்த முடியும் என்று கண்டான்.

2

     கலியாணமாகி ஏழு நாட்கள் வரை புதுப்பெண்ணின் குதூகலத்தைப் பாழ்படுத்த எதுவும் நிகழவில்லை. ஏழாவது நாளன்று, கணவனுக்கு இராத்திரி நேரத்தில் அரண்மனைக் காவல் செய்ய வேண்டி ஏற்பட்டது. அன்று மாலையிலேயே, ஏதோ காரணமற்ற பயம் அவள் மனசை கவ்வியது. தூங்கலாம் என்று படுத்தபோது தூக்கம் வரவில்லை. புயலுக்கு முந்திய புழுக்கம் மாதிரி உள்ள ஒரு சூழ்நிலை அவளை அமுக்கியது.

     நடுநிசி. ரிஷப நேரம். வெளியிலே இருட்டில் ஒரு மணிச் சத்தம் கேட்டது. இந்த அர்த்தராத்திரியிலே யார் ஸாமுராய் வீதிவழியாகப் போகக்கூடும் என்று அதிசயப்பட்டாள். சற்று நேரம் கழித்து மணிச்சத்தம் அருகில் கேட்டது. ஒரு வேளை அந்த யாத்திரிகன் வீட்டுக்குத்தான் வருகிறானோ. ஆனால் ஏன் அவன் புறவாசல் வழியாக வரவேண்டும்? அங்கே பாதையே கிடையாதே... திடீரென்று நாய்கள் அழுது ஓலமிட்டன. என்ன பயங்கரமாக பிலாக்கணம் தொடுக்கின்றன. பேய்க்கனவு போல் பயம் அவளது மனசைக் கவ்வியது... ஆமாம் மணிச்சத்தம் தோட்டத்தில்தான் கேட்கிறது... எழுந்திருந்து சென்று வேலைக்காரனை எழுப்ப விரும்பினாள். எழுந்திருக்க முடியவில்லை... குரல் கொடுக்க முடியவில்லை... வாயிலிருந்து சத்தம் எழமாட்டேன் என்கிறது. ஆனால் மணிச்சத்தமோ வீட்டை நெருங்கிக்கொண்டே இருந்தது. நாய்கள் என்னமாக அலறுகின்றன? வீட்டுக்குள்ளே ஏதோ நிழல் நுழைந்த மாதிரி ஒருத்தி வந்தாள். கதவும் தட்டியும் தாளிட்டு இறுகித்தான் மூடிக்கிடந்தன. பிணவுடை தரித்து கையிலே ஒரு மணியேந்தி ஒருத்தி நுழைந்தாள். அவளுக்கு கண் இல்லை. வெறும் குழிதான் இருள் தேக்கியது. அவள் செத்து நெடுங்காலமாயிற்று. அவிழ்ந்து கிடந்த கூந்தல் முகத்தில் விழுந்து தொங்கியது. கண்ணில்லா முகத்தாள், மயிர்ச்செறிவூடே நாக்கு இல்லாமல் பேசினாள்.

     "இந்த வீட்டிலே நீ இருக்கக்கூடாது. இதற்கு நான் தான் எஜமானி. நீ போய்த்தானாக வேண்டும். ஏன் போகிறாய் என்று நீ யாரிடமும் சொல்லக் கூடாது. நீ அவரிடம் சொன்னால் உன்னைச் சுக்கு நூறாகப் பிய்த்து விடுவேன்."

     இப்படிச் சொல்லிவிட்டு அவள் மறைந்து விட்டாள். புதுப்பெண் பயத்தினால் பிரக்ஞையிழந்தாள். விடியும் வரை அப்படியே கிடந்தாள்.

     பட்டப்பகலில், நேற்று ராத்திரி கண்டதும் கேட்டதும் நிஜமா பிரமையா என்று அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது. எச்சரிக்கை அவள் நெஞ்சை அழுத்தியது. அதனால் புருஷனிடமோ வேறு யாரிடமோ தான் கண்டதைச் சொல்ல அவள் துணியவில்லை. வெறும் துர்ச்சொப்பனம். அதுதான் உடம்புக்குப் பண்ணியது எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

     ஆனால் மறுநாள் இரவு. சந்தேகத்துக்கு இடமற்றுப் போய்விட்டது. ரிஷப நேரம் வந்ததும் மறுபடியும் நாய்கள் அழுகுரல் தொடுத்தன. மறுபடியும் மணிச்சத்தம் கேட்டது. தோட்டத்திலிருந்து வீட்டை நெருங்கியது. மணியோசை கேட்டதும் அவள் எழுந்திருக்க எவ்வளவோ முயன்றாள். மறுபடியும் நேற்று வந்த அவள் வந்தாள்.

     "நீ போய்விட வேண்டும். ஏன் போகிறாய் என்று நீ யாரிடமும் சொல்லக்கூடாது. நீ அவரிடம் ரகசியமாகச் சொன்னாலும் உன்னை நான் கிழித்தெறிந்து விடுவேன்!"

     இந்தத் தடவை அவள் படுக்கைக்குக் கிட்டவே வந்து விட்டாள். குனிந்து முணுமுணுத்தாள். கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.

     மறுநாள் காலை ஸாமுராய் அரண்மனையிலிருந்து வந்ததும் மனைவி அவனைத் தெண்டனிட்டு வணங்கி "எனது நன்றி கெட்ட நடவடிக்கைக்காகவும், வாக்குத் துடுக்குக்காகவும் தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் என் வீட்டுக்குப் போக வேண்டும். உடனே நான் போய்விட வேண்டும்" என்றாள்.

     "உனக்கு இங்கே என்ன குறை?" என்று அவன் ஆச்சரியப்பட்டுக் கேட்டான். "நான் இங்கே இல்லாதபோது யாராவது உன்னைத் துன்பப்படுத்தினார்களா?" என்றான்.

     "அப்படியொன்றுமில்லை" என்று அவள் விம்மி விம்மி அழுதாள். "எல்லோரும் என்னை அன்பாகத்தான் நடத்துகிறார்கள்; ஆனால் நான் தங்களுக்கு பெண்டாட்டியாக இருக்க முடியாது. நான் போக வேண்டும்" என்றாள்.

     "அடி என் பெண்ணே, இந்த வீட்டில் உனக்கு வேதனையாக இருக்கிறது என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. யாரும் குறைவாக நடத்தாவிட்டால் நீ போக வேண்டிய காரணம் என்ன? நீ விவாகத்தை ரத்து பண்ணிக்கொள்ளத்தான் விரும்புகிறாயோ?"

     "என்னை நீங்கள் விலக்கிவிடாவிட்டால் நான் செத்துப் போவேன்" என்று அவள் நடுங்கி அழுதாள்.

     அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். இந்த விபரீத நடத்தைக்குக் காரணம் என்னவென்று யோசித்து யோசித்துப் பார்த்தான். கடைசியாக மனசில் உள்ளதைக் காட்டிக் கொள்ளாதபடி பின்வருமாறு பதில் சொன்னான்.

     "உன் மேல் குற்றமில்லாதபோது உன்னை உன் ஜனங்களிடம் அனுப்பி விடுவது மகாகேவலமான காரியம். காரணத்தைச் சொல்லு; கௌரவமாக விவகாரத்தை நான் விளக்குவதற்கு ஒரு வழி சொல்லு; உனக்கு விவாகரத்துப் பத்திரம் எழுதித் தந்துவிடுகிறேன். சரியான காரணத்தைச் சொல்லாமல் நான் உன்னை அனுப்பிவிட மாட்டேன். குடும்பத்தின் கௌரவத்துக்கு ஹானி வரக்கூடாது" என்றான்.

     வேறு வழி இல்லாமல் நடந்ததைச் சொல்ல வேண்டியதாயிற்று. எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக "நான் தங்களிடம் சொல்லி விட்டேனா, இனிமேல் அவள் என்னை நிச்சயமாகக் கொன்றே போடுவாள்" என்று அழுதாள்.

     ஸாமுராய் தீரன்; பேய் பிசாசுகளை நம்புகிறவனில்ல; இருந்தாலும் அந்த க்ஷணத்தில் அவன் திடுக்கிட்டுப் போனான். ஆனால் பயத்துக்குச் சாதாரண காரணங்களை எடுத்துக் காட்டினான். அதைத் தீர்ப்பதற்கு மனதிற்குள் ஒரு யோஜனை தட்டியது.

     "நீ அதிகமாகப் பயந்து விட்டிருக்கிறாய். யாரோ உன்னிடம் ஏதோ அசட்டுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த வீட்டில் நீ பேய்க் கனவு கண்டாய் என்பதற்காக நான் உன்னைத் தள்ளி வைத்து விட முடியுமா? நானில்லாதபோது நீ இந்த மாதிரி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாய் என்பது தெரிய கஷ்டமாக இருக்கிறது. இன்றிரவும் நான் அரண்மனைக்குப் போக வேண்டும். ஆனால் உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டேன். என்னுடைய பணியாட்கள் இருவரை உன் அறையிலேயே தூங்காமலிருந்து காவல் செய்யச் சொல்லுகிறேன். நீ நிம்மதியாகத் தூங்கலாம். அவர்கள் யோக்கியர்கள்; தீரர்கள்" என்றான்.

     இணக்கமாகப் பேசி அவளுடைய பயத்தைத் தெளிவித்தான். அவளும் வீட்டில் இருக்கச் சம்மதித்தாள். தன் பயத்தை நினைக்க தனக்கே வெட்கமாக இருந்தது அவளுக்கு.

3

     இளமனைவியைப் பாதுகாக்க நிறுத்திச் சென்ற காவலாளிகள் தீரர்கள்; பெண்களையும் சிசுக்களையும் பாதுகாப்பதில் அனுபவம் உள்ளவர்கள். அவளது மனசை உல்லாசப்படுத்த வேடிக்கையான கதைகளைச் சொன்னார்கள். அவள் பயத்தை மறந்துவிட்டாள். தூங்குவதற்குப் படுத்துக் கொண்டாள். காவலாளிகள் இருவரும் அதே அறையில் ஒரு தட்டிக்குப் பின்னால் உட்கார்ந்து தூங்காமல் இரவைக் கழிப்பதற்காக தாயமாடினார்கள். தூங்குகிறவள் விழித்துக் கொள்ளாமலிருக்க மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். அவளும் தொட்டில் குழந்தை மாதிரி தூங்கினாள்.

     மறுபடியும் ரிஷப நேரம் வந்தது. பயந்து அலறிக் கொண்டு எழுந்தாள். ஏனென்றால் அவளது காதருகில் மணியோசை கேட்டது... அது நெருங்கி விட்டது. இன்னும் நெருங்குகிறது... எழுந்து கூக்குரலிட்டாள்... ஆனால் அந்த அறையில் கூச்சலே இல்லை... மரணத்தின் மௌனம் நிலவியது... மௌனம் வளர்ந்தது... மௌனம் கனத்தது... காவலாளிகளிடம் ஓடினாள்... தாயக் கட்டத்தின் முன் அவர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவரையொருவர் நிலை குத்திய கண்ணுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கூச்சலிட்டாள்... அவர்களை உலுப்பினாள். அவர்கள் விரைத்துப் போயிருந்தார்கள்.

     பிறகு அவர்களிருவரும், மணியோசையைத் தாமும் கேட்டதாகவும், அவளது கூச்சல் காதில் விழுந்தது என்றும், அவள் தொட்ட ஸ்பரிசம் கூடத் தெரிந்தது என்றும் ஆனால் தங்களுக்கு எழவோ பேசவோ முடியவில்லை என்றும் சொன்னார்கள். அதன் பிறகு காதும் கண்ணும் செயலற்றுப் போயிருந்தும் கடுந்தூக்கம் கவ்வியதாம்.

*****

     உதய நேரத்தில் படுக்கையறைக்குள் புகுந்த ஸாமுராய் மங்கி மடியும் தீபவொளியில் மனைவியின் தலையற்ற முண்டத்தைக் கண்டான். அது ரத்த வெள்ளத்தில் இருந்தது. முடியாத தாய விளையாட்டு பாதியில் நிறுத்தப்பட்டு காவலாளிகள் உட்கார்ந்தபடி தூங்கினார்கள். எஜமானனுடைய கூக்குரல் கேட்க துள்ளி எழுந்தார்கள். தரையில் கிடந்த கோரத்தைக் கண்டு மருண்டார்கள்...

     தலையை எங்கும் காணவில்லை. உடற்குறை, தலை துண்டிக்கப்படவில்லை, திருகிப் பிய்த்து அகற்றப்பட்டது என்பதைக் காட்டியது. ரத்தம் சொட்டு சொட்டாக வெளிக்கூடத்துக்குச் சென்றது. புயல் கதவுகளை யாரோ பிய்த்து அகற்றி இருக்கிறார்கள். புல் தரையில் ரத்தக் கசிவைத் தொடர்ந்து சென்றார்கள் மூவரும்; மணல் வழியாகச் சென்றது. அல்லிக் குளத்து ஓரமாகச் சென்றது. மூங்கில் செடியடியில் சென்றது. திடீரென்று வௌவால் மாதிரிக் கிரீச்சிடும் பேயுருவம் ஒன்றைக் கண்டார்கள். நெடுங்காலத்துக்கு முன் புதையுண்ட அவளுடைய உருவம் கல்லறைக்கு அருகே நின்றது. ஒரு கையில் மணியும் மறுகையில் ரத்தம் சொட்டும் தலையுமிருந்தது. காவலாட்களில் ஒருவன் புத்த நாமத்தைச் சொல்லிக்கொண்டு கத்தியை வீசினான். உடனே அது பொலபொலவென்று உதிர்ந்து விழுந்தது. சவத்துணியும் எலும்புமாயிருந்தாள். சிதறின மணியும் ஓசையுடன் கீழே விழுந்து உருண்டது. ஆனால் தசையற்ற வலது கை, மணிக்கட்டிலிருந்து இற்று விழுந்தாலும் துடித்தது; ரத்தம் சொட்டும் தலையை எலும்பு விரல்கள் விடவில்லை, விழுந்த பாகங்களை பழுப்பு நண்டு கவ்விய மாதிரி...

     "இது கொடுமையான கதை, செத்தவர்கள் இருப்பவர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது சரியானால், இதில் ஆண்மகன் தானே ஜவாப்தாரி" என்று கதை சொல்லியவரிடம் சொன்னேன்.

     "ஆண்கள் இப்படி நினைக்கிறார்கள்; ஆனால் பெண்களின் மனசு வேறுவிதம்" என்றார் அவர்.

     அவர் சொன்னது வாஸ்தவம்.

     (இது இஜுமோ கதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. ஸாமுராய் என்பவர்கள் ஜப்பானில் க்ஷத்திரியர்கள் மாதிரி.

     நடுநிசிக்கு ஜப்பானியர் ரிஷப நேரம் என்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது.)