மார்க்ஹீம்

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் - இங்கிலாந்து

     "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறுவோம். சில மோசமான பேர்வழிகளும் நம்மிடம் வந்து சேருவார்கள். அப்பொழுது எங்கள் ஒழுக்கத்தால் லாபத்தைப் பெறுவோம்" என்றான் அந்த வியாபாரி.

     மார்க்ஹீம் அப்பொழுதுதான் கண்கூசும் வெளியிலிலிருந்து கடைக்குள் நுழைந்தான். கண் கூச்சம் கடையில் இருட்டுத் திரள்களை எழுப்பிப் பார்வையை மறைத்தது. அந்த வார்த்தைகள் அவனை முகத்தைத் திருப்பிக்கொள்ளச் செய்தன. மேலும் கடைக்காரக் கிழவன் கையில் பிடித்திருந்த தீபத்தை அவன் முகத்திற்கு நேராகப் பிடித்தான்.

     கடைக்காரன் 'களுக்'கென்று சிரித்தான். "இன்றைக்கு கிரிஸ்மஸ். நான் தனியாகக் கடையை அடைக்கப் போகும் சமயத்தையும், நான் வியாபாரம் செய்ய விரும்பாத சமயத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறாய். சரி, அதற்கும் கணக்குப் போடுவேன் என்று தெரிந்துகொள். இந்தச் சமயத்தில் தினசரிக் கணக்கை முடித்து விடுவேன். அந்த நேரம் நஷ்டமாகிவிட்டது. அதற்கும் நீ சேர்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் இன்றைக்கு நீ மரியாதையில்லாமலே என்னுடன் நடந்துகொள்கிறாய். அதையும் உன் கணக்கில் சேர்த்துக் கொள். என்னிடம் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விற்பனை செய்ய விரும்பாதவனிடம் எப்பொழுதும் நான் தட்டுக்கெட்ட கேள்விகளைப் போட்டுத் தொந்தரவு செய்வதில்லை!" என்று சொல்லி, அந்த வியாபாரி மறுபடியும் 'களுக்'கென்று சிரித்துக்கொண்டான். பிறகு குரலை மாற்றி, கொஞ்சம் நம்பிக்கையற்ற கேவலம் தொனிக்க, "நீ கொண்டு வந்திருக்கும் சாமான் உன்னிடம் எப்படி வந்தது என்று நீ எப்பொழுதும் சொல்லுகிற மாதிரி சொல்லு பார்க்கலாம்? இன்னும் காலியாகவில்லையா? உனது சித்தப்பா பெட்டியும் அவரும் அதிசயமானவர்கள்தான்!" என்றான் அந்தக் கடைக்காரன்.

     கடைக்காரன் சிறிது குட்டையானவன். கண்களில் மூக்குக் கண்ணாடி. தோள் பட்டைகள் சிறிது அகன்றவை. அவன் தனது கால் சட்டை விரல்களின் மீது உன்னி நின்று கொண்டு, மார்க்ஹீம் சொல்லுவதை எல்லாம் நம்பாதவன் போலத் தலையை அசைத்து, 'ஆமாம்' போட்டுக் கொண்டிருந்தான். மார்க்ஹீமுக்கு அவனைப் பார்க்கச் சகிக்கவில்லை. பரிதாபத்துடனும் சிறிது பயத்துடனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

     "இந்தவிசை உமது யூகம் தவறு. இன்று விற்க வரவில்லை; வாங்குவதற்கு வந்திருக்கிறேன். இன்று என்னிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை. என் சித்தப்பா பெட்டியும் காலியாகிவிட்டது. அதில் இன்னும் சாமான்கள் இருந்தாலும் நான் விற்பதற்குத் தயாரில்லை. எனக்கு பாங்கி லேவாதேவியில் நல்ல வருமானம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எனது வேலை மிகவும் சுருக்கமானது. எனது ஸ்திரீ நண்பர் ஒருவருக்கு ஏற்ற கிரிஸ்மஸ் வெகுமதி ஒன்று வாங்க வந்திருக்கிறேன்." பேசுவதில் சிறிது உற்சாகமடைந்தவன் போல் மார்க்ஹீம் இன்னும் அதிகமாக விஸ்தரிக்க ஆரம்பித்தான்: "ஆமாம், இந்த நேரத்திலே உம்மை வந்து தொந்தரவு செய்வதற்கு எனக்கு வருத்தந்தான். நான் நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். என்னமோ நேரமில்லாது போய்விட்டது. இன்றைக்கு நடக்கும் விருந்தில் நான் அதைக் கொண்டு போகவேண்டும். நல்ல பணம் வரக்கூடிய இடத்தில் கலியாணம் செய்து கொள்ளப் போகும்பொழுது இந்தக் கவலையீனம் அதைத் தடை செய்துவிடக் கூடாதல்லவா?"

     இருவரும் சிறிது மௌனமாக இருந்தனர். கடைக்காரன் இவனுடைய வார்த்தைகளை நம்பாதவன் போல் விழித்தான். அந்த அறையிலே எந்த இருட்டு மூலையிலிருந்தோ 'டக், டக்' என்ற கடிகாரச் சப்தமும், வெளியே போகும் வண்டிகளின் சப்தமுமே அறையின் மௌனத்தின் கனத்தை அதிகமாகக் காண்பித்தன.

     "சரிதான் ஐயா, நீ சொல்லுகிறபடியே இருக்கட்டும். நீயும் பழைய வாடிக்கைக்காரன். உனக்கு நல்ல சம்பந்தம் ஏற்படும்பொழுது நானா அதைத் தடை செய்ய வேண்டும்? இதோ இருக்கிறதே இந்த முகம் பார்க்கும் கண்ணாடி, இது உன் ஸ்திரீ நண்பருக்கு ஏற்ற பரிசு தான். 15-வது நூற்றாண்டுச் சாமான். அதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அதை விற்றவரின் பெயரை மட்டிலும் கூற முடியாது. அந்த மனிதனும், உன்னைப்போல், ஒரு சித்தப்பாவின் ஒரே வாரிசு!"

     கடைக்காரக் கிழவன் தனது கரடுமுரடான தொனியில் பேசிக் கொண்டே, அந்தக் கண்ணாடியை எடுக்கக் குனிந்தான். அவன் குனிந்ததுதான் தாமதம், மார்க்ஹீமின் உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை பதறித் துடித்தது. அவனது உள்ளத்தின் கோபத்தின் பேய்க்கூத்து, கட்டுக் கடங்காது, முகத்தில் பிரதிபலித்தது. அதுவும் ஒரு கணந்தான் - கோடை இடிபோல் வந்து மறைந்தது. அவன் முகக் கண்ணாடியை வாங்கும் பொழுது கைகள் மட்டிலும் சிறிது நடுங்கின.

     "கண்ணாடி?" என்றான் கம்மிய குரலில்; "கண்ணாடியா கிரிஸ்மஸுக்குக் கொடுப்பது! ஏன் கொடுக்கலாகாது?" என்று கேட்டுக் கொண்டான் மீண்டும்.

     "ஏன் கொடுக்கலாகாது? கண்ணாடி கொடுத்தால் என்ன?" என்றான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அவனை ஒரு விபரீதப் பார்வையுடன் பார்த்தான். "ஏனென்றா என்னைக் கேட்கிறீர்? ஏன் - நீர் தான் பாருமே! நீரே பாருமே! உமக்கு அதைப் பார்க்கப் பிடித்திருக்கிறதா? யாருக்குத்தான் அதைப் பார்க்கப் பிடிக்கும்?" என்றான் மார்க்ஹீம்.

     மார்க்ஹீம் கண்ணாடியை அவன் முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்தபொழுது திடுக்கிட்டுப் பின்னடைந்தான்; ஆனால் மார்க்ஹீம் கையில் கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கண்டபின் சிரித்துக்கொண்டு, "உனக்குக் கிடைக்கும் மணப்பெண் மனத்தைத் திருப்தி செய்வது லேசான காரியமல்ல போலிருக்கிறதே!" என்றான்.

     "நான் உம்மிடம் ஒரு கிரிஸ்மஸ் வெகுமதிக்கு ஏற்ற பொருள் கேட்டால், இதை - பல நூற்றாண்டுகளின் பாபங்களை, அசட்டுத்தனங்களை - என்னிடம் கொடுக்கிறீர்! இது என்ன அர்த்தம்! உமது மண்டையில் மூளையிருக்கிறதா, சொல்லும். உம்மைப்பற்றி எனக்குச் சொல்லும்! நீர் தர்மசிந்தையுள்ளவரா?"

     கடைக்காரன் அவனைக் கூர்ந்து கவனித்தான். மார்க்ஹீம் இதைச் சொல்லிவிட்டுச் சிரிக்காமல் இருந்தது அவனுக்கு அதிசயமாக இருந்தது. வேடிக்கைச் சிரிப்பிற்குப் பதிலாக, ஏதோ ஓர் நம்பிக்கையின் ஆசை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது கடைக்காரனுக்கு.

     "உன் எண்ணம் என்ன?" என்றான் கடைக்காரன்.

     "தர்ம சிந்தையில்லையா?" என்றான் மற்றவன், சோர்ந்த மனத்துடன். "தர்ம சிந்தையில்லை, பக்தியில்லை, தாட்சண்யம், ஒழுங்கு ஒன்றுமில்லை; பணத்தைப் பெருக்கக் கையிருக்கிறது, அதை மூடிவைக்க இரும்புப் பெட்டியிருக்கிறது! அவ்வளவுதானா! ஹே, தெய்வமே! அட மனிதனே! இவ்வளவுதானா!"

     சிறிது கோபப்பட்டவன்போல் ஆரம்பித்த கடைக்காரன், சிரித்துக்கொண்டு, "உனக்குக் காதலால் பாட்டில் கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டது!" என்றான்.

     "அப்படியா!" என்று தலையை ஆட்டிக்கொண்டு, "நீர் எப்பொழுதாவது யாரையாவது காதலித்திருக்கிறீரா? அதையாவது சொல்லும், பார்ப்போம்!" என்றான் மார்க்ஹீம்.

     "நானா! இந்த அசட்டுத்தனத்திற்கு எனக்கு நேரமும் கிடையாது. பிரியமும் கிடையாது! வெறும் பேச்சிற்கு நேரமில்லை. இந்தக் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுகிறாயா, என்ன?" என்றான் கடைக்காரன்.

     "அதற்குள் என்ன அவசரம்! இப்படி நின்று பேசிக்கொண்டு நிற்கப் பிரியமில்லையா! வாழ்க்கையில் ஆபத்துக்கள் அதிகம். அதனால் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டு நான் ஓடுவது கிடையாது. ஆமாம் இந்த மாதிரி ரொம்பச் சாதாரணமான இன்பத்திலிருந்தும் கூட ஓடிவிடப் பிரியம் கிடையாது. நாம் எல்லோரும், கிடைக்கும் இன்பங்களை, மரத்தில் தொங்கும் மனிதனைப் போல், விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிஷமும் பிடித்துத் தொங்கும் கிளை. கிளைக்கும் தரைக்கும் நெடுந்தூரம். கீழே விழுந்தால் பிறகு மனிதன் என்ற பெயர் கிடையாது. அதனால்தான் பேச்சில் இன்பமிருக்கிறது. இரண்டு பேரும் பேசுவோமே! ஏன் ஒருவரையொருவர் திரைபோட்டு மறைத்துக்கொள்ள வேண்டும்? நமது ரகசியங்களைச் சொல்லிக் கொள்ளுவோம். யார் கண்டார்கள்? ஒருவேளந நமக்குள் சிநேகம் கூட ஏற்பட்டு விடலாம்!"

     "ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள்! சாமான் வாங்க வேண்டுமானால் வாங்கு, அல்லது கடையைவிட்டு இறங்கு!"

     "ஆமாம்! ஆமாம்! அசட்டுத்தனம் போதும்! ஜோலியைப் பார்ப்போம்! வேறு ஏதாவதொன்றைக் காண்பி."

     கடைக்காரன் கையிலிருந்த கண்ணாடியை வைப்பதற்குக் குனிந்தான். சிறிது மயிர் கண்ணில் வந்து விழுந்து மறைந்தது. மார்க்ஹீம் சட்டைப் பையில் கையை விட்டுக்கொண்டு அவன் பக்கத்தில் நகர்ந்தான். மூச்செடுத்து நிமிர்ந்தான். அச்சமயத்தில், அவன் முகத்தில் பயம், மனவுறுதி, மனக்கவர்ச்சி, வெறுப்பு - எல்லாம் அலைமேல் அலையாகப் பிரதிபலித்து மறைந்தன. மேல் உதடு சிறிது உயர்ந்தது. இறுகிய பல் வெளியே தெரிந்தது.

     "இது உனக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே கடைக்காரன் நிமிர்ந்தான். மார்க்ஹீம் பின்புறமிருந்து அவன் மீது பாய்ந்தான். மெல்லிய கட்டாரி பளிச்சென்று மின்னி மறைந்தது. கடைக்காரன் கோழிக் குஞ்சு போல் தத்தளித்தான். அவனது கபாலம் இரும்புப் பெட்டியில் இடித்தது. பிடிப்பு விடப்பட்ட சக்கைப்போல் தரையில் அப்படியே குனிந்து சாய்ந்தான்.

     காலத்தின் கதியைச் சிறு சிறு சப்தங்கள் அறிவித்தன. வெளியிலிருந்து வரும் சப்தங்கள் பலவிதமாகக் குழம்பிக் கேட்டன. கடிகாரத்தின் 'டக் டக்' என்ற இடையறாத சப்தம் இந்தக் குழம்பிவரும் சப்த அலைகளின் முடிவற்ற முற்றுப்புள்ளிகள் போலச் சிதறின வெளியே தடதடவென்று ஓடும் ஒரு இளஞைனின் காலடிச் சப்தம்; மார்க்ஹீமைத் தனது சுற்று நிலைமைகளைக் கவனிக்கும்படி செய்து, அவனுடைய திக்பிரமை ஏற்ற உள் மனத்தை விழிக்க வைத்தது. மூலையில் நின்று அசைந்து எரியும் மெழுகுத்திரியின் ஒளி அறையில் சப்தமற்ற சலனத்தை உண்டு பண்ணியது. அகண்டாகாரமான கடலின் அலை இயக்கங்கள் போல, அறையில் குவிந்து கிடக்கும் சாமான்களின் சாயைகளும், இருட்டுப் படலங்களும், உச்சுவாச நிச்சுவாசத்தால் சுருங்கி விடுவதுபோல், விளக்கொளியின் அசைவினால் இயங்கிக்கொண்டிருந்தன. சீனத் தெய்வங்களும், படங்களும், அலைமீது தோன்றியசையும் பிரதிபிம்பங்கள் போல, நர்த்தனம் செய்து கொண்டிருந்தன. உட்கதவு திறந்து, உள்ளே ஒளிந்திருந்த இருள் திரட்சிகளின் வழியாக வெளியிலிருந்து எட்டிப் பார்க்கும் ஆட்காட்டி விரல் போன்ற, வெளிச்சக் கோட்டைக் காண்பித்தது.

     மார்க்ஹீமின் கண்கள் இந்தப் பயப் பிராந்திகளிலிருந்து திரும்பி, தனது செய்கையின் விளைவின் மீது விழுந்தது. அந்த உடலம் குவிந்து கை கால்களைப் பரப்பிக் கிடந்த வண்ணம், அது உயிருடன் இருக்கும்பொழுது எவ்வளவு கேவலமாக வாழ்ந்ததோ அதைவிடப் பன்மடங்கு கேவலமாக, கூம்பிச் சாம்பிக் கிடந்தது. கருமித்தனத்தின் எல்லையை விளக்கும் உடைகளில், கோரமாகக் கை கால்களை விரித்தபடி உமி மூட்டை மாதிரி கிடந்தான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அதைப் பார்ப்பதற்கு அஞ்சினான்! இருந்தாலும் அதில் என்ன இருக்கிறது பயப்படுவதற்கு? அவன், விழித்த கண் விழித்தபடி, அந்தக் கேவலமான உடல் பொதிந்த துணி மூட்டையை நோக்கிக் கொண்டிருக்கும்பொழுது, சிறிது சிறிதாகத் தேங்கும் இரத்தக் குளம், உணர்ச்சி ஏற்பட்ட குரல்களாக மாறிற்று. அது இங்குதான் கிடக்கவேண்டும். அதற்குச் சூட்சுமமான சலனங்கள் கிடையாது. அது கண்டுபிடிக்கும்வரை இங்குதான் கிடக்கவேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால் - பிறகு? இந்த உயிரற்ற சதை இங்கிலாந்து முழுவதிலும் எதிரொலித்து, ஒரு பெருங் கூக்குரலை எழுப்புமல்லவா? 'பிடி, பிடி' என்ற கூக்குரல்! இறந்தாலும், இறக்காவிட்டாலும் அது இன்னும் எதிரிதான். "மூளை அகன்றாலும் காலம் அதுதான்" என்று நினைத்தான். இவ்வார்த்தைகள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இச்செய்கை நிறைவேறிய காலம்; எதிரிக்கு முற்றுப்புள்ளி போடப்பட்ட காலம்; அது கொலைகாரனுக்குப் பிரதானமான வினாடியாகிவிட்டது!

     இவ்வெண்ணம் மனத்தைவிட்டு அகலவில்லை. வெளியிலிருந்து மெதுவாக எட்டும் விதவிதமான சப்தங்கள் மணிக்கூண்டின் கணீரென்ற ஒலியில் அமுங்கின. கோவில் மணிக்கூண்டு மத்தியானம் மணி மூன்று என்பதை உலோகத் தொனியில் ஆகாசத்தில் பரப்பியது.

     ஆயிரம் நாவுகள் அந்த நிசப்தமான அறையில் ஒலிப்பது அவனைத் தடுமாறச் செய்தது. மனக்குறளியைக் கட்டுப்படுத்தி, ஒருவாறு எழுந்து, மெழுகுதிரி விளக்கை எடுத்துக்கொண்டு, அங்குமிங்குமாக நடந்தான். அவன் பின்புறத்தில் சாயைத் திரள்கள் முற்றுகையிட்டன. தற்செயலாகக் கண்ணில்படும் பிரதிபிம்பங்கள் அவன் உள்ளத்தையே தூக்கிவாரிப் போட்டன. சுற்றிலும் இருந்த பலவிதமான நிலைக் கண்ணாடிகளில் அவனுடைய பிரதிபிம்பங்கள், ஆயிரம் ஆயிரம் ஒற்றர்கள் போல், அவனைக் கவனித்தன. அவன் கண்களே அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன. மெதுவாகத் தரையில் படும் அவன் காலடிகள் அறையின் நிசப்தத்தில் பன்மடங்காகப் பெருகி ஒலி செய்தன. இருந்தாலும் அங்கிருந்த சாமான்களை எடுத்துத் தனது ஜேபிகளை நிறைக்க ஆரம்பித்தான். ஆனால் அவனது உள்மனம் அவன் செய்யும் காரியங்களில் ஆயிரம் குற்றங்களை இடித்திடித்துக் கண்பித்தது. வரும் சமயம் இதைவிடச் சிறிது அமைதியான காலமாக இருந்திருக்க வேண்டும்; வேறிடத்தில் இருந்ததாக நிரூபிக்கச் சாட்சியம் முன்பே தயாரித்திருக்க வேண்டும்; கட்டாரியை உபயோகித்தது தவறு; ஆனால் முன் ஜாக்கிரதையாக அந்தக் கடைக்கரனைக் கையநயும், காலையும் கட்டி, வாயில் துணியைத் திணித்திருந்தால் போதும் - இந்தக் கொலை அனாவசியம். இல்லை! தைரியமாக அவனது வேலைக்காரனையும் சேர்த்துக் கொலை செய்திருக்க வேண்டும். மொத்தமாக இப்பொழுது செய்ததற்கு மாறாக எல்லாவற்றையும் நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்தது செய்தாகி விட்டது. அதற்காக உயிரைக் கொடுத்து உள்ளத்தைத் தின்னும் கவலைப்பேய்க்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை; சென்ற காலத்தை மாற்றியமைக்க யாருக்கு முடியும்? இச்சமயத்தில் இவ்வளவு தீவிரமான மனஓட்டத்தின் முன்பு, மோட்டு வளைகளில் சரசரவென்று ஓடும் எலியின் சப்தம், சித்த உலகத்தின் திசை மூலைகளில் தறி கெட்ட மிருக பயத்தை எழுப்பியது. போலீஸ்காரனின் கைகள் அவன் தோள்களின் மீது இரும்புக் கவசம் மாதிரி விழும். தூண்டிலில் அகப்பட்ட மீன் போல அவனது நரம்புகள் துள்ளித் துடிக்கும்; அவன் கண் முன்பு, ஒன்றின் பின் ஒன்றாகத் துக்காந்தகாரமான பல விஷயங்கள் ஊர்வலமாகத் தாவிச் செல்லுகின்றன. அவற்றில் நீதிஸ்தலம், சிறைச்சாலை, தூக்குமேடை, கறுப்பு சவப்பெட்டி - எல்லாம் தெரிந்தன.

     முற்றுகையிடும் எதிரிக் கணங்கள் போல் தெருவில் நடமாடும் மனிதர்களின் மீதிருந்த பயம் அவன் சித்தத்தை அமுக்கியது. இங்கு ஏற்பட்ட சண்டையின் சப்தம் சிறிதாவது அவர்கள் காதில் எட்டியிருக்க வேண்டும். உள்ளே என்ன நடக்கிறதென்ற ஆவல்தான். பின்னர் அவர்களைக் கதவைச் சுற்றி மொய்க்கும்படி செய்துவிடுமே! ஆமாம்! பக்கத்து வீடுகளில், கிரிஸ்மஸ் பண்டிகையைத் தன்னந்தனியாகக் கொண்டாட வேண்டிய தலைவிதியிருக்கிறவர்கள், பழைய நினைவுகளிலே பண்டிகையின் குதூகலத்தைத் திருப்தி செய்து கொள்ள வேண்டியவர்கள், இச்சிறு சப்தத்தைக் கேட்டுக் கேட்டு கூர்ந்து கவனித்துச் செவி சாய்த்துக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். கூட்டம் நிறைந்த குடும்பமானால்தான் என்ன! தாயார் விரலைத் தூக்கிச் சைகை செய்தால் எல்லாரும் மௌனமாயிருந்து கேட்கத்தான் செய்வார்கள்! இவர்களுடைய இச்செய்கைகளால்தான் இவனது கழுத்துக்கயிறு பின்னப் படுகிறது. சில சமயம் தன்னால் வேகமாக நடக்க முடியாது என்று நினைத்தான். கையிலிருந்த விலையுயர்ந்த சாமான்கள் நடக்கும்பொழுது கணகணவென்று மணிபோல் ஒலித்தன.

     கடிகாரச் சப்தம் கூட அவனுக்கு அச்சத்தை அதிகரித்தது. அதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தான். அவனுடைய பயம் வேறு எல்லைக்குத் தாவியது. கடிகார ஒலி நின்றதும் அந்த அறையின் நிசப்தம் அவனுடைய பயப் பிராந்தியை அதிகப்படுத்தியது; தன் வீட்டில் பயமில்லாது இயற்கையாக நடப்பவன் போல் பாவனை செய்யவேண்டும் என்றும், பயந்து பதுங்கக் கூடாது என்றும், அவனுக்குப் பட்டது.

     அவன் மனம் பல பக்கங்களில் பயத்தால் உந்தப்பட்டது. சித்தத்தின் ஒரு பகுதி தைரியத்தையும் தந்திரத்தையும் விடாது கொண்டிருந்தது; மற்றொரு பகுதி அச்சத்தின் ஜுரத்தால் மூளைக் கோளாற்றின் எல்லைக் கோட்டில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவன் மனத்தில் ஒரு பிரமை ஆழமாக வேரூன்றியது. வெளியிலே ஆட்கள் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று காரைச் சுவர்களைக் கடந்து இரகசியத்தை அறிய முயலுகிறார்கள் என்று அவன் மனம் நம்பிப் பயந்தது. ஆனால் வீட்டினுள் இவன் தனியாகவா இருக்கிறான்! தான் தனியாக இருப்பதாக அவனுக்குத் தெரியும். வேலைக்காரி வெளியே செல்லுவதை அவனே கண்ணால் பார்த்தான். அந்தக் கடையில் தனியாக இருப்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவனது கற்பனைக்கு அந்தக் கட்டிடத்தில் யாரோ மெதுவாக நடப்பது போல் பட்டது. சுற்றும் முற்றும் பார்த்துத் திக்பிரமை அடைந்தவன் போல விழித்துக்கொண்டு நின்றான். கடையிருந்த அறையில் வெளிச்சம் அதிகமில்லை; ஆனால் மங்கலான ஒளிப் பிழம்பின் மத்தியில், சாயை போல ஒன்று தோன்றவில்லையா?

     திடீரென்று தெருப் பக்கத்தில் யாரோ வெளிக்கதவைத் தடதடவென்று தட்டிக்கொண்டு கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. வெளியில் நின்ற ஆசாமி கொஞ்சம் குஷிப் பேர்வழி போலும்! கேலியாகவும் வேடிக்கையாகவும் கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். மார்க்ஹீம் பயத்தால் பனிக்கட்டியாகச் சமைந்தான். அவன் கூக்குரலின் எல்லையைக் கடந்து நிசப்தக் கடலில் மறைந்தான். இந்தப் புயற் சப்தத்திலும் கேட்கக்கூடிய அவனது பெயர் வெறும் சப்த கோளமாக அர்த்தமற்று மறைந்தது. வெளியில் கதவைத் தட்டிய மனிதனும் நம்பிக்கையை யிழந்து அகன்றான்.

     இந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டும் எல்லையிலிருந்து சீக்கிரத்தில் அகலவேண்டும். லண்டனின் எண்ணத்தொலையாத தொகுதியில் மறைந்து நாளின் மற்றொரு எல்லையில் கலங்கமற்ற துறைமுகமான படுக்கைக்குச் சென்றால்தான் பாதுகாப்பு உண்டு. இப்பொழுது ஒருவன் வந்தான். இதைவிட விடாக்கண்டனான மற்றொருவனும் வரக்கூடுமல்லவா? காரியத்தைச் செய்து அதன் பயனை அநுபவிக்காது போனால், முயற்சியும் சகிக்க முடியாத தோல்விதானே. மார்க்ஹீமுக்குப் பணம் அவசியம்; அதை எடுப்பதற்கு வழி சாவிதான். திறந்த கதவு வழியாக எட்டிப் பார்த்தான். அங்கு இன்னும் சாயைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மனத்தில் சிறிதும் வெறுப்புத் தோன்றாது, (ஆனால் அவனது வயிறு சிறிது குமட்டல் எடுத்தது) தனது கை வேலையின் விளைவினிடம் நெருங்கினான். அதில் மனிதக் களை அகன்று விட்டது. அந்தப் பிரேதம் உமி மூட்டை மாதிரி மடிந்து தரையில் கிடந்தது. இருந்தாலும் அவன் மனது அதனிடம் நெருங்க ஒப்பவில்லை. அதைத் தொடுவதென்றாலோ அரோசிகமாக இருந்தது. சவத்தைத் தோளைப் பிடித்து உயர்த்தி மலத்திக் கிடத்தினான். பிரேதம், தொடுவதற்கு இலேசாக, கொளகொளவென்று நழுவி விழுந்தது. முகத்திலே களையே இல்லை. மெழுகுப் பதுமை மாதிரி யிருந்தது. ஒரு புறக் கபோலத்தில் இரத்தக் கறை படர்ந்திருந்தது. மார்க்ஹீமுக்கு அந்தக் கறை ஒன்றுதான் வெறுப்பைத் தந்தது. அந்தக் கறை அவனது மனத்தைக் குழந்தைப் பருவத்தில் பதிந்த நினைவுக் களஞ்சியத்திற்குச் செலுத்திச் சென்றது. அன்று ஒரு பொம்மலாட்டக்காரன், கொட்டு மேளத்துடன், கொலைகாரப் பதுமைகளைக் காண்பித்துப் பணம் பறித்துக் கொண்டிருந்தான். அவன் காட்டிய அந்தப் பதுமைச் சவங்களைப்போல் கிடந்தான் இந்தக் கடைக்காரனும். அன்று கேட்ட பாட்டின் மெட்டு அவன் மனத்தில் உதித்தது; முதன் முதலாக அவனது நெஞ்சத்தில் உதைப்புத் தட்டியது. மன வெறுப்பின் குமட்டலும், காலில் பலவீனமும் அவனைத் தாக்கின. இவற்றை அகற்றி, மனத்தை உடனே திடப்படுத்த வேண்டும்.

     இந்த நினைவுகளினின்று மிரண்டு விலகுவதைவிட நேர் நின்று மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எதிர்ப்பதே நல்லது என்று புலப்பட்டது. சற்று நேரத்திற்கு முன்பு பேசி, வாதாடி, ஆசைகளின் நிலைக்களமாக இருந்த முகம், வெளிறி, ஒன்றுமற்ற வெறுமையின் பகைப்புலமாக இருந்தது. கடிகாரத்தின் பெண்டுலத்தில் விரலை வைத்து அதன் ஓட்டத்தைத் தடை செய்வது போல், இந்த ஜீவ துண்டத்தின் போக்கும் தடை செய்யப்பட்டது. எவ்வளவு தான் துருவி ஆராய்ந்தாலும் அவன் உள்ளத்தில் தன் குரூர செய்கையின் இடிப்புத் தோன்றாதிருப்பதின் காரணம் அவனுக்குப் புலப்படவில்லை. உலகத்தை இன்பமயமாக்கக் கூடிய வசதிகள் எத்தனையோ இருந்தும், இத்தனை காலமும் வாழாத, ஆனால் இப்பொழுது உயிரற்றுக் கிடக்கும், அந்தக் கடைக்காரன் பேரில் சிறிது இரக்கம் தோன்றியது.

     மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கையில் சாவிக் கொத்தை எடுத்த வண்ணம். கடையின் திறந்த உட்கதவின் பக்கம் சென்றான். வெளியே மழை சிறு தூறலாக ஆரம்பித்துப் பிறகு தடதடவென்று பொழிய ஆரம்பித்தது. நீர் கொட்டும் அந்தகாரக் குகையில், சாயையின் திரட்சிகளும், வெளி மழையின் எதிரொலிப்புக்களும் உள்ளத்தைத் திணற வைக்கும் நிசப்தத்தைப் போக்கின. மார்க்ஹீம் கதவண்டை சென்றவுடன் யாரோ ஒருவர் பின்வாங்குவது போலும், ஒரு சாயை அகலுவது போலும் அவனுக்குப் பட்டது.

     எங்கு பார்த்தாலும் யாரோ ஒருவர் நடமாடுவது போலும், தனது செய்கைகளைக் கவனிப்பது போலும், மார்க்ஹீம் மனத்தில் ஒரு பிரமையை உண்டாக்கியது. கதவைத் தாண்டி மேல் மெத்தைக்குச் சென்றான். அங்கு சிறிது வெளிச்சம் அதிகமாக இருந்தது. வெளிக் குரல்கள் மழைச் சப்தத்துடன் கலந்து சிறிது அதிகமாகக் கேட்டன. ஆனால் அவனைத் தொடர்ந்து கவனிக்கும் அந்தச் சூட்சுமப் பேர்வழியின் ஓசை அகன்றபாடில்லை. சுவர்களும், கூரையும் கொலைக்களத்திலேயே தன்னைச் சிறை செய்வதாக மார்க்ஹீம் நினைத்தான்.

     இவ்விடத்தை விட்டு ஓடிச்சென்று தனது படுக்கையில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பயப்பிராந்தி அவனை உந்தித் தள்ளியது. இயற்கையின் தடை செய்ய முடியாத நியதிகளுக்குப் பயந்தான். ஒரு வேளை அவை தனது குற்றத்தின் சாட்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே காப்பாற்றி வைத்திருந்தால், மனித ஜீவியத் தொடர்பின் பிணிப்புச் சங்கிலி அற்று விடுமோ என்ற அமானுஷ்ய பயம். அவனை உந்தியது. இந்தக் கோரமான சதுரங்க விளையாட்டை இயற்கையுடன் மிகவும் திறமையாகவே விளையாடினான். தோற்கடிக்கப்பட்ட கொடுங்கோலன், தனது வீழ்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து இழுப்பது போல, நியதிகளின் நிலைக்களமான இயற்கை, சதுரங்கப் பலகையைக் கவிழ்த்து, தொடர்பின் பிணிப்பை வெட்டினால்? நெப்போலியன் போன்ற பெரிய வீரர்களும் இந்த இயற்கையின் விபரீதமான சதிக்கு ஆளானார்கள். மார்க்ஹீமுக்கும் அந்தக் கதி ஏற்பட்டு, இப்பொழுது அவனது குற்றத்தைப் பொதிந்து வைக்கும் இருளும் சுவரும், தம் இயற்கைக் குணங்களை விட்டுவிட்டு, அவனுக்குச் சதி செய்தாலும் செய்யும். இவற்றிற்கே மார்க்ஹீம் பயந்தான். கடவுளைப் பற்றி அவன் அவ்வளவாகப் பயப்படவில்லை. மனித நாற்றமே இல்லாத அங்கு தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தான்.

     கதவைச் சாத்திவிட்டு, அந்த அறையில் தாறுமாறாகக் கிடக்கும் சாமான்களிடையில், தான் தேடிவந்த வஸ்துவைத் துருவி ஆராய்ந்தான். ஆனால் அவனது கடைக்கண் சாத்தப்பட்ட கதவின் மீது இருந்து கொண்டே இருந்தது. இப்படித் தேடுவதிலேயே ஒரு சோர்வு. அந்த வேலை வியர்த்தம் என்ற நினைப்பு ஏற்பட்டது. மார்க்ஹீமுக்கு மழையின் ஒரே விதமான சளசளப்பு மனத்தில் சிறிது மகிழ்ச்சியை உண்டாக்கியது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு பியானோவின் இன்னிசை பிரார்த்தனைக் கீதமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து களங்கமற்ற குழந்தைக் குரல்கள் பிரார்த்தனைக் கீதங்கள் பாடின.

     புன்சிரிப்புடன் அதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே சாவிகளை ஆராய்ந்தான். அவனுடைய உள்ளம் அவனது குழந்தைப் பருவத்தின் நினைவுகளில் ஓடித்திளைத்தது. ஆமாம், அது எவ்வளவு சுகமான இன்பமான காலம்! என்ன விளையாட்டுக்கள், ஆட்டங்கள் - மோட்ச லோகந்தான் அது!

     மார்க்ஹீம் உள்ளம் இவ்வாறு சென்ற காலத்திலும் தற்சமயச் செய்கையிலும் திளைத்துக் கொண்டிருக்கும்பொழுது, இறுகிய பனிக்கட்டியும், உருகிய இரும்புக் குழம்பும் ரத்தக் குழாய்களில் தொடர்ந்து செலுத்தப்பட்டது போல துள்ளிப் பதறித் துடித்துக் கல்லாயச் சமைந்து நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

     பயம் என்ற கிட்டி அவனை இறுக்கியது. என்ன? இறந்தவன் நடந்து வருகிறானா, அல்லது அரசாங்க அதிகாரிகள் அவனைத் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்ல வந்துவிட்டனரா? கதவு திறந்தது. ஒரு முகம், அவனை ஏறிட்டுப் பார்த்து, வெகு நாள் பழக்கம்போல் புன்சிரிப்புடன் தலையை அசைத்தது. பின்னர் கதவு சாத்திக் கொண்டது. பயம் கட்டை மீறியது. மார்க்ஹீம் ஊளையிட்டான். இந்தச் சப்தத்தைக் கேட்டு அந்த ஆசாமி திரும்பி வந்து, "என்னைக் கூப்பிட்டாயா?" என்றான்.

     விழித்த கண் விழித்தபடியே, மார்க்ஹீம் அந்த அந்நியன் முகத்தை நோக்கினான். கண்களில் மேகப் படலம் போல் என்னவோ மறைத்தது. அந்த அந்நியனது உருவமும், சுற்றி நிற்கும் பதுமைகள் போல், விளக்கொளியில் அசைந்தாடியது. சமயாசமயத்தில் அந்த அந்நியன் தன்னைப் போல இருப்பதாக நினைத்தான். ஆனால் அவனுடைய உள்ளத்திலுள்ள பயத்தின் பிண்டம் போல, எதிரிலிருப்பவன் மனிதனல்லன், தெய்வமும் அல்லன் என்ற எண்ணம் தோன்றி அமுங்கியது.

     "பணத்தைத் தேடுகிறாயா?" என்றது அவ்வுருவம்! குரலும் பேச்சும் சாதாரண மரியாதையை வழங்கின.

     மார்க்ஹீம் பதிலளிக்கவில்லை.

     "வேலைக்காரி சீக்கிரத்தில் வந்துவிடுவாள். மார்க்ஹீமை அவள் இங்கு கண்டால் பின் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டுவதில்லை!" என்றது அவ்வுருவம்.

     "என்னைத் தெரியுமா?" என்றான் கொலைகாரன்.

     "உன்பேரில் வெகுகாலமாக எனக்குப் பிரியம்; உனக்கு உதவி செய்யவேண்டும் என்று உன்னைப் பல நாளாகத் தேடி வருகிறேன்."

     "நீ யார்? பைசாசமா?" என்றான் மார்க்ஹீம்.

     "நான் யாராக இருந்தால் என்ன? அதனால் நான் உனக்குச் செய்யப்போகும் உதவி தடுக்கப்படப் போகிறதா?" என்றது அவ்வுருவம்.

     "நீ யார் என்று தெரிந்தால்தான் உனது உதவிக்குப் பயன் உண்டு. உனக்கு இன்னும் என்னைத் தெரியாது. நல்ல காலமாக உனக்கு என்னைத் தெரியாது!" என்றான் மார்க்ஹீம்.

     "உன்னை எனக்குத் தெரியும்; உனது ஆத்மாவை எனக்குத் தெரியும்" என்றது அவ்வுருவம்.

     "தெரியுமா? அவதூற்றின் விபரீதந்தான் எனது வாழ்க்கை. இயற்கையின் ஓர் பெரும் பொய்யாக நான் ஜீவித்தேன். எல்லோரும் அப்படித்தான்; உண்மையில் எல்லோரையும் அமுக்க முயலும் இப்பொய் வேடத்தை விட நல்லவர்கள்தான். தம்மைக் கட்டுப்படுத்தும் திடம் மட்டிலும் இருந்தால் எல்லோரும் வீரர்கள்தான்; அடியார்கள்தான். நான் எல்லோரையும் விடக் கீழ்த்தரமானவன். காரணம் எனக்கும் என் கடவுளுக்கும் தெரியும். அவகாசம் இருந்தால் எனது அந்தரங்கத்தை வெளியிடுவேன்."

     "எனக்கா?" என்றது அவ்வுருவம்.

     "உனக்கும், எல்லாருக்கும். நான் ராக்ஷச ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்தேன். சந்தர்ப்பம் என்ற அரக்கன் என்னை என் தாயின் கர்ப்பத்திலிருந்து பிய்த்து எறிந்தான். எனது செய்கையைப் பார்த்து நியாயம் பேசுகிறாய். சிறிது எனது உள்ளத்தைப் பார்க்கலாகாதா? இவ்விதமான பாவச் செயல்கள் எனக்கு எவ்வளவு வெறுப்பு அளிக்கின்றன! உனக்குத் தெரியவில்லையா? கோணல் வாதம் எனது மனத்தைக் குழப்பிக் கெடுக்கவில்லை என்று உனக்குத் தெரியவில்லை? நான் விருப்பில்லாது இக்காரியங்களைச் செய்யும் பாபிஷ்டன் என்று உனக்குத் தெரியவில்லையா?" என்றான் மார்க்ஹீம்.

     "நீ சொல்லுவதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. காலமாகிறது. வேலைக்காரி வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். அவள் வருவது தூக்குமேடையே உன்னை எதிர் நோக்கி வருவது என்று உணர்ந்து கொள். உனக்கு நான் உதவி செய்யட்டுமா? பணம் எங்கிருக்கிறது என்று உனக்குச் சொல்லட்டுமா?"

     "அதற்குப் பதிலாக நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான் மார்க்ஹீம்.

     "உனக்கு எனது உதவி ஒரு கிரிஸ்மஸ் வெகுமதி."

     "உன் கையிலிருந்து நான் ஒன்றையும் ஏற்க மாட்டேன். தாகத்தால் மடிவதானாலும் உன் கையிலிருந்து ஒரு சிரங்கை தண்ணீர்கூட வேண்டாம்."

     "நீ வேண்டுமானால் சாகும்பொழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்; அதற்கு நான் தடை செய்யவில்லை" என்றது அவ்வுருவம்.

     "நீ அதன் சக்தியை நம்பவில்லை போலும்!' என்றான் மார்க்ஹீம்.

     "நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எனது பார்வை வேறு. இத்தனை நாள் எனது சேவையைச் செய்துவிட்டு, நான் கடைசியாக உதவியளிக்க வரும்பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு, கடைசியில் பாவ மன்னிப்புடன் இறப்பதே சரி. இது உன் பின்னால் நிற்கும் பலவீனர்களுக்கு ஊக்கமளிக்கும். எனது உதவியை ஏற்றுக் கொள். நான் வரும்பொழுதும் அப்படிப்பட்ட ஒரு இடத்திலிருந்துதான் வருகிறேன். அது மிகவும் இலகு," என்றது அவ்வுருவம்.

     "நீ என்ன நினைக்கிறாய்? பாவம்! பாவம்! பாவம்! இதைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு ஆசையில்லையா? மனிதர்களைப்பற்றி உன் அநுபவம் இதுதானா? கொலைக் குற்றம் மனத்தின் ஈரத்தை ஒரேயடியாக வற்ற அடித்து விடும் என்பது உன் நினைப்பா?" என்று பதறினான் மார்க்ஹீம்.

     "எனக்குக் கொலை என்பது பிரத்தியேகப் பகுதியில்லை; எல்லாப் பாவங்களும் கொலைதான். வாழ்க்கை என்பதே ஒரு போர் என்று உனக்குத் தெரியாதா? உன் வம்சம் - அதுதான் இந்த மனித வர்க்கம் - முழுகும் கப்பலில் ஒன்றையொன்று பிய்த்துத் தின்னும் எலிக் கூட்டங்கள்தானே! பாவங்களை நான் செய்கையாகக் கவனிப்பதில்லை. பிந்திய வாழ்க்கையை அவற்றின் தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறேன். தாயை எதிர்க்கும் மகளின் செய்கைக்கும் உனது கொலைச் செய்கைக்கும் என்னிடம் வித்தியாசம் கிடையாது. நான் ஒரு மனிதனுடைய பாவங்களை மட்டிலுமா தொடர்ந்து கவனிக்கிறேன் என்று நினைக்கிறாய்? புண்ணியத்தையும் கவனிக்கத்தான் செய்கிறேன். இவை இரண்டும் சங்கார தெய்வத்தின் பட்டயத்தின் இரு முனைகள். பாவம் செய்கையில் இல்லை; குணத்தில் தான். பாவிகள் என் அன்பர்கள்; அவர்களுடைய செய்கையின் விளைவுகள்தான் காலத்தின் நீர்வீழ்ச்சியில் மிகுந்த பலனை யளிப்பவை; நீ கடைக்காரனைக் கொன்றதினாலும், நீ மார்க்ஹீம் ஆனதினாலும் உனக்கு உதவி செய்யப்போகிறேன்" என்றது அவ்வுருவம்.

     "நான் என் உள்ளத்தைத் திறந்து காண்பிக்கிறேன். இச் செய்கை எனது கடைசிக் குற்றம். எத்தனையோ விஷயங்களை உணர்ந்தேன். இதுதான் எனது மகத்தான அநுபவம். இன்று இச்செய்கையிலிருந்து புதிய மனவுறுதியும் சக்தியும் பெற்றிருக்கிறேன். இனி எனக்கு விடுதலைதான். என் செய்கைகளுக்குத் தளை கிடையாது. அதோ இருக்கிறது எனது பழைய வாழ்வு; இனி என் விதியின் நரகத்தை நோக்கிச் செல்வேன்" என்றான் மார்க்ஹீம்.

     அந்த அந்நிய உருவம் தனது முழு பலத்தையும் உபயோகித்து அவனைத் தூண்டியது; மார்க்ஹீம் தனது கடைசிச் சக்திவரை போராடினான்.

     கடைசியாக, "என் கடமை என்னவென்று எனக்குத் தெரிகிறது; என் கண்கள் திறந்துவிட்டன," என்றான் மார்க்ஹீம்.

     அச்சமயம் வெளிக்கதவு தடதடவென்று ஒலித்தது.

     "அதோடு வேலைக்காரி வந்துவிட்டாள்; கீழே சென்று எஜமானனுக்கு உடலுக்கு குணமில்லை என்று சொல்லி அவளையும் உள்ளேயழைத்து உன் கை வேலையைக் காண்பி! சீக்கிரம்!" என்றது அவ்வுருவம்.

     "இனியுமா? துன்பம் இழைக்காவிட்டால் சும்மா இருப்பதற்கு எனக்குத் திறமையிருக்கிறது. எனது நல்ல நோக்கங்கள் எல்லாம் பசையற்ற பாலைவனமாயின. ஆனால் எனக்கு இன்னும் சக்தியும் மனவுறுதியும் இருக்கிறது. பார்!" என்றான் மார்க்ஹீம்.

     எதிரிலிருந்தவன் முகத்தில் ஒரு தெய்வீகக் களை, அன்பு கனிந்த பார்வை ஏற்பட்டது. இந்த மாறுதல்களைக் கவனியாது கீழே இறங்கினான். இப்பொழுது வாழ்க்கை அவனை ஆசையுடன் இழுக்கவில்லை. மங்கிய ஒளியில் பிரேதத்தைக் கவனித்தான். கடைக்காரனைப் பற்றிய நினைவுகள் மனத்தில் குவிந்தன. வெளியே தடதடவென்ற தட்டல் மறுபடியும் கேட்டது.

     புன்சிரிப்புடன் கதவைத் திறந்து, எதிரிலிருந்த வேலைக்காரியைப் பார்த்து, "எஜமானரைக் கொன்றுவிட்டேன்; போய்ப் போலீஸாரை அழைத்து வா!" என்றான் மார்க்ஹீம்.