முதலும் முடிவும்

ஜான் கால்ஸ்வொர்த்தி

     மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த, வாசிப்பதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீதும், நல்ல வேலைப்பாடு அமைந்த கீழைப் பிரதேச முக்காலியின் மீதும் தனது வெளிச்சத்தைச் சிதறியது. நல்ல கொடுமையான மாரிக்காலம். ஜன்னல்கள் எல்லாம் நன்றாக அடைக்கப்பட்டு, திரையால் மூடப்பட்டிருந்தன. முகடும் மரத்தினாலானது. சுவரில் வரிசை வரிசையாகத் தோல் அட்டை போட்ட புத்தகங்கள். குளிர் காய்வதற்காக மூட்டப்பட்ட தீயும் வெளிச்சமும் அந்த விறைத்துப்போகும் 'குளிர் பாலைவனத்துப் பிரதேசத்து' ரம்மியமான பொழில் என்று கூறவேண்டும். கோர்ட்டின் வேலைக் களைப்புத் தீருமட்டிலும் அதிக ஓய்வு எடுத்துக் கொள்ளுவதில் கீத் டரான்டிற்கு மிகுந்த பிரியம். காலில் துருக்கிப் பாதரட்சையணிந்து, அந்த இருட்டுடன் கூடும் அக்கினி ஒளியில் அவன் உட்கார்ந்திருந்தான். நல்ல ஓவியக்காரன், அவனது முகத்தின் அமைப்பைக் கண்டால், சித்திரக் கோலைக் கீழே வைக்கமாட்டான் என்பது திண்ணம். செதுக்கி வைத்தது போன்ற, ஆனால் சிறிது வெளிறிய முகம், கருத்த புருவம்; கண்கள் சாம்பல் வர்ணமோ அல்லது சிறிது சிவப்புக் கலந்ததோ என்று கூறும்படியானவை. நாள் பூராவும் வக்கீல்கள் அணிய வேண்டிய பொய்ச் சிகையை அணிந்தும் வழுக்கை விழவில்லை. அந்த அறையில் இருக்கும்பொழுது வேலைக் கவலைகளைப் பற்றி நினைப்பதே கிடையாது. அவன் வக்கீல்; வாழ்க்கையில் மனித நுட்பத்தினால் ஆகும் பின்னல்களை அறிவுக் கத்தியால் பிரித்து, வேண்டாதவற்றை விலக்குவதே அவன் வேலை; சோர்வை அளிக்கக் கூடிய வேலைதான். ஆனால், அந்த அறையில் அவன் தனது மூளையை அலட்டிக் கொள்வதில்லை. ஆமாம்! அன்று நடந்த கேஸில் தன் கட்சிக்காரன் பொய் சொன்னான் என்று அவனுக்குப் பட்டது. அதனால் கேஸை வாதாட மறுத்துவிடலாம் என்று கூட முடிவிற்கு வந்துவிட்டான். முதலிலிருந்தே அந்தப் பலவீனமான பேர்வழியின் அரைகுறைப் பதில்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆழமான மனவுறுதியிலிருந்து எழாத ஒப்புப் பேச்சும், பலவீனத்தினால் பிறக்கும் அனுதாபமும் நிறைந்த இக்காலத்தில், இந்த மாதிரி ஆசாமிகளுக்குக் குறைவில்லை. உதவாக்கரைகள்! பிரயோஜனமற்ற பிரகிருதிகள்!

     வாசிப்பதற்கு மூன்று புத்தகங்கள் எடுத்திருந்தான். வால்டேர்: அந்தப் பிரெஞ்சு எழுத்தாளனின் தர்க்கத்தைப் பிளந்து எறியும் குத்தல் நடையில் அவனுக்கு ஒரு மோகம், இரண்டாவது, பர்ட்டன் எழுதிய யாத்திரைகள், மூன்றாவது, ஸ்டீவென்ஸன் எழுதிய புது அராபிய இரவுகள். அன்று இரவில் மனத்தை உற்சாகப்படுத்தக் கூடிய புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். கோர்ட்டிலே ஏராளமான கூட்டம். வரும்பொழுது, வழியிலே ஈரம் சுவறிய காற்று. அன்று அவனுக்கு வீடு வெறிச்சென்று இருப்பதாகப் பட்டது.

     விளக்கைச் சிறிது இறக்கிவிட்டு, குளிர் காய்வதற்காக நெருப்பின் பக்கம் திரும்பினான். அன்று டெலாஸன் வீட்டு விருந்திற்குப் போகுமுன் சிறிது கண்ணயர்ந்தால் என்ன! அப்பொழுது பள்ளிக்கூட விடுமுறையாக இருந்தது. தனது மகள் மெய்ஸி, வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதா என்று நினைத்தான். கீத் டரான்டின் மனைவி இறந்து வெகுகாலமாகி விட்டது; வீட்டில் பெண் பழக்கத்தை இழந்து நெடுநாளாகி விட்டது; ஆனால் அன்று இரவு துருதுருவென்று வரும் தன் மகள் இல்லாதது ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. சிலருக்குப் பெண்ணின் தோழமை எவ்வளவு அவசியமாக இருக்கிறது! ஆமாம். தம்பி லாரன்ஸ் - எல்லாவற்றையும் பெண்களால் தொலைத்தான்! மனவுறுதிகூடப் போய்விட்டது. வம்சத்தில் இருந்துவரும் ஸ்காட்லாந்து இரத்தம் இவனைப் பாதுகாத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்; ஆனால், ஸ்காட்லாந்துக்காரன் தறிகெட்டு ஆட ஆரம்பித்தால் அவனை யார் தடுக்க முடியும்? ஒரே தாயின் குழந்தைகள்தான். தங்கள் இருவருக்குள்ளும் அவ்வளவு வித்தியாசம்! தனது வெற்றிக்கெல்லாம் தாயின் வம்சம்தான் காரணம் என்ற கீத் டரான்ட் நினைத்தான்.

     உடனே அவனது மனம் சட்ட விபரத்தில், அவனது மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒன்றின் மீது சென்றது. தனக்குத் தவறு ஏற்படுவதே இல்லை என்ற அகங்காரம் உடையவன் கீத் டரான்ட். ஆனால் அன்று, தான் கொடுத்த ஆலோசனை சரியானதுதான் என்று அவன் மனம் திருப்தியடையவில்லை. ஒரு முடிவான அபிப்பிராயத்திற்கு வரச் சக்தியில்லாதவன், அல்லது சந்தேகமிருந்தாலும் அபிப்பிராயத்தைத் தைரியமாகக் கொடுக்க சக்தியற்றவன் வக்கீல் தொழிலில் பிரபலமடைய முடியாது. ஏன், வேறு எந்த வேலையிலுமே ஈடுபடமுடியாது. அனுபவம் முதிர முதிர அவனுக்கு எதைப்பற்றியும் ஒரு திடமான அபிப்ராயம் அல்லது திடசித்தத்தில் ஏற்படும் செய்கை இருக்க வேண்டும் என்பது உறுதியாயிற்று. ஒரு வார்த்தை, அதன் பின் ஒரு அடி! இல்லை இல்லை! முதலில் ஒரு போடு. பின்னரே வார்த்தைகள். இதுதான் வெற்றியை அளிக்கும். சந்தேகம், தயங்குதல், உணர்ச்சி! ஒளியற்ற - இவை புதிய நாகரிகத்தின் பேர்போன வழி! சீச்சீ! கீத் டரான்டின் அழகிய முகத்தில் ஒரு கோரமான ராக்ஷஸப் புன்சிரிப்பு உதயமாயிற்று. அல்லது விளக்கின் மங்கிய வெளிச்சம்தான் இந்தக் கோர நடனங்களை முகத்தின்மீது ஆடுகிறதா? அதுவும் மெதுவாக மறைந்து முகத்தில் சோர்வு தேங்கியது. அவன் கண் அயர்ந்தான்.

     வெளிச்சத்திற்கப்புறம் ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்ச்சி அவனைத் திடுக்கிட்டு விழிக்க வைத்தது. "யாரது" என்று எழுந்தான். விளக்குத் திரியைப் பிரகாசமடையும்படி உயர்த்திவிட்டு, "யார் அங்கே?" என்றான் மறுபடியும்.

     "நான் தான் - லாரி" என்றது ஒரு குரல் கதவுப்புறத்தில்.

     தூக்கத்திலிருந்து திடீரென்று விழுத்ததினாலோ அல்லது குரலின் தொனியினாலோ கீத் டரான்டிற்கு நடுக்கமெடுத்தது.

     "சிறிது கண்ணயர்ந்து விட்டேன்! வா! உள்ளே வா!"

     கீத் டரான்ட் எழுந்திருக்கக் கூட இல்லை. தலையைக் கூடத் திருப்பவில்லை. அரைக் கண் போட்டபடி சகோதரனை எதிர்பார்த்தான். லாரன்ஸ் இவனைக் காண வருவது எப்பொழுதும் நல்ல காலத்திற்கல்ல. அவன் 'மூசு மூசென்று' சுவாசிப்பதையும், பக்கத்தில் சாராய நாற்றம் பரவுவதையும் கீத் டரான்ட் உணர்ந்தான். இங்கு வரும்போதாவது குடிக்காமல் வரக்கூடாதா! கொஞ்சமும் மரியாதையற்ற சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. உடனே சடக்கென்று: - "உம்! லாரி! என்ன நடந்தது?" என்று கேட்டான்.

     அவன் வரும்பொழுதெல்லாம் ஏதாவது 'நடவாமல்' இருக்காது. எவ்வளவு தூரம் இவனது அசட்டுத்தனங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு போகிறோம் என்று கீத் டரான்டிற்கு ஆச்சரியம் ஏற்படுவதுண்டு. எல்லாம் இரத்தப் பிணிப்புத்தான். அவனது புத்தி, இந்த அனுதாபம் எல்லாம் பலவீனத்தின் அறிகுறி என்று எத்தனை தடவையோ இடித்துக் கூறியிருக்கிறது. இப்பொழுதும் குடித்துவிட்டா வந்திருக்கிறான்? ஏன் வெளியில் நின்று தயங்குகிறான்?

     "உள்ளே வந்து உட்காரேன்" என்றான் கீத் டரான்ட்.

     அவன் உள்ளே வருகிறான்; ஆனால் வெளிச்சத்திற்கு ஒதுங்கி சுவரோரமாக வருகிறான். இடைக்குக் கீழ் விளக்கின் ஒளிபட்டது. ஆனால் முகமெல்லாம் இருட்டில்தான்.

     "உடம்பிற்கு என்னடா?"

     தலையசைப்பைத் தவிர வேறு பதில் இல்லை. வெளிச்சத்திலிருந்த கை இருளில் மறைந்து இருட்டில் பேய் போன்ற தலையைத் தடவியது. விஸ்கி நாற்றம் அதிகமாயிற்று.

     "அவன் குடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறான். புதிதாக வந்த பட்லர் இவனைப் பார்த்தால்? இவனுக்கு நடந்து கொள்ளக்கூட..." என்று நினைத்தான்.

     ஆமாம்!

     அந்த உருவம் ஏதோ ஒரு பெருந் துயரத்தில் இருப்பது போல் பெருமூச்செறிந்தது. கீத் டரான்டிற்கு இவன் மௌனமாக நிற்பதின் காரணத்தைக் கூடக் கேட்கவில்லையே என்று தைத்தது. சடக்கென்று எழுந்து நின்றான். என்ன கேட்கிறோம் என்பதைக்கூட யோசிக்காமல், "என்னடா கொலை செய்தவன் மாதிரி நிற்கிறாயே? வாயடைத்து விட்டதா?" என்றான்.

     சில நிமிஷம் பதில் இல்லை. சுவாசமும் தாறுமாறாகக் கேட்டது. பின் மெதுவாக, "ஆமாம்" என்ற பதில் வந்தது.

     விபரீதமான சம்பவத்தின் இயற்கைக்குப் போதுமான நிலைமை. அது உண்மை என்ற மனப்பான்மையை உள்ளம் ஏற்காது. அதனால்தான் கீத் டரான்டும் நம்பாது, "ஆமாம், நீ குடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறாய்" என்றான்.

     உடனே அவன் மனதில் பயம் தட்டியது.

     "நீ என்ன சொல்லுகிறாய்? இங்கே வா, உடம்பிற்கு என்ன?"

     உடனே அவனது சகோதரன் தள்ளாடி வெளிச்சத்தின் முன்பு ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

     கீத் இரண்டடி எட்டி வைத்து சகோதரன் முகத்தைக் கவனித்தான். அவன் கூறியது உண்மைதான். அந்தக் கண்களில் தோன்றிய பயக்குறி, ஆச்சரியக் குறி, வெறும் நடிப்பினால் ஏற்படாது. அந்தக் கண்களைப் பார்ப்பதே இதயத்தை நசுக்கிவிடும். உண்மையான சோகமே அந்தப் பார்வையைக் கொண்டுவரும். கீத் இதயத்தில் தோன்றிய இரக்கம் கும்பிய கோபமாக மாறியது.

     "இதென்னடா? இதென்ன அசட்டுத்தனம்?"

     ஆனால் குரல் இறங்கியது. கதவினண்டையில் சென்று தாளிட்டிருக்கிறதா என்று கவனித்தான். லாரன்ஸ் நாற்காலியை முன்பக்கம் இழுத்து குளிர்காயப் போட்டிருக்கும் தீயின் முன்பு குனிந்து சரிந்து உட்கார்ந்துவிட்டான். கன்னங்களில் சதையற்று எலும்புகள் தெரிந்தன. கீத் அவனது தோளின் மீது கையை வைத்து, "என்ன லாரி! தைரியமாக இரு! அளக்காதே, நடந்ததைச் சொல்" என்றான்.

     "ஆம்! அது நிஜந்தான்; நான் ஒருவரைக் கொன்று விட்டேன்."

     "ஏன் இங்கு வந்தாய்? என்னிடம் ஏன் இதைச் சொல்லுகிறாய்?"

     "பின் யாரிடம் சொல்ல? இனி என்ன செய்வது? நேரே போலீஸாரிடம் என்னை ஒப்பித்துக் கொள்ளட்டுமா? - அல்லது - "

     இவன் சொல்வதெல்லாம் நிஜந்தானா? இனி என்ன செய்வது என்று கீத் டரான்டிற்கு இதயத்தில் தைத்தது.

     "சொல்லு! இது எப்படி நடந்தது? - இந்த விஷயந்தான்" என்றான் கீத் அமைதியாக.

     இக்கேள்வி நடந்த உண்மையைக் கோரமான பேய்க் கனவுடன் இணைத்தது.

     "எப்பொழுது நடந்தது?"

     "நேற்று இரவு"

     லாரி பொய் சொல்லத் தெரியாத குழந்தை என்பதை அவன் முகக்குறி காட்டியது. கோர்ட்டில் குறுக்குக் கேள்விகளை இவனால் எப்படித் தாங்கமுடியும்?

     "எப்படி? எங்கு? முதலிலிருந்து நடந்ததைச் சொல். முதலில் இந்தக் காப்பியைச் சாப்பிடு. சிறிதாவது குழப்பம் தீரும்" என்றான் கீத் மெதுவாக.

     "உம்! இதுதான் - சில மாதங்களாக ஒரு பெண்ணை எனக்குத் தெரியும்..."

     பெண்கள்! கீத் பல்லைக் கடித்துக்கொண்டு, "அப்புறம்?" என்றான்.

     "அவள் தகப்பன் போலிஷ் ஜாதியான். அவளைப் பதினாறு வயதில் விட்டுவிட்டு இறந்துபோனான். வாலன் என்ற அமெரிக்கன், அதிலும் கலப்பு ஜாதி, அந்த வீட்டில்தான் வசித்து வந்தான். அவன் அவளைக் கலியாணம் செய்து கொண்டான், அல்லது செய்து கொண்டதாகப் பாவனை செய்தான். அவள் மிகவும் அழகானவள். அவளுக்குக் கையில் ஆறுமாதக் குழந்தை. வயிற்றில் கர்ப்பம். அந்தச் சமயம் அவளைவிட்டு ஓடிப்போய் விட்டான். பிரசவித்த குழந்தையும் இறந்தது. அந்தச் சமயம் அவளும் செத்துப் பிழைத்தாள். பின்பு வேறு ஒருவன் அவளைக் கைப்பிடிக்கும்வரை பட்டினி - அவனுடன் இரண்டு வருஷம் வசித்தாள். பின்பு வாலன் திரும்பி வந்து அவளை மறுபடியும் இழுத்துக் கொண்டான். அந்த முரடன் ஒன்றுமில்லாததற்கு எல்லாம் அவளைக் குத்துயிராய்க் குலையுயிராய் அடிப்பான். மறுபடியும் அவளை விட்டு ஓடிப்போய் விட்டான். பின்பு அவளது மூத்த குழந்தையும் இறந்து போயிற்று. நான் அவளைச் சந்திக்கும்பொழுது விபச்சாரத்திலேயே இறங்கிவிட்டாள்..."

     பேசிக்கொண்டே வந்தவன் திடீரென்று கீத் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

     "சத்தியமாகச் சொல்லுகிறேன். அவளைப்போன்ற உண்மையுள்ள, நல்ல குணமுள்ள பெண்ணை நான் பார்த்ததே கிடையாது! அவளுக்கு இருபது வயது கூட நிரம்பவில்லை. நேற்று இரவு அங்கு போனேன். அந்த முரடன் வாலன் அவள் இருக்குமிடத்தைக் கண்டு கொண்டான். அவன் நேற்று வாயில் வந்தபடி ஏசிக்கொண்டு என்னைத் தொலைத்து விட நெருங்கினான். நெற்றியைப்பார் - நான் அவன் கழுத்தைப் பிடித்து நெருக்கினேன் - பிடியை விட்டவுடன் - "

     "அப்புறம்?"

     "இறந்துவிட்டான். பின்புதான் அவளும் பின்புறமிருந்து தொங்கிக்கொண்டிருந்தாள் என்று தெரியும்."

     லாரன்ஸ் மறுபடியும் கையை நெரித்தான்.

     "அப்புறம் என்ன செய்தாய்?"

     "அதன் பக்கத்தில் நெடுநேரம் உட்கார்ந்திருந்தோம்; அப்புறம் அதை என் முதுகில் சுமந்து தெருவழியாகக் கொண்டு போய் மூலையில் இருக்கும் கமான் வளைவின் கீழ் போட்டுவிட்டேன்."

     "எவ்வளவு தூரம்?"

     "சுமார் 50 கெஜம் இருக்கும்"

     "யாரும் உன்னைப் பார்த்தார்களா?"

     "இல்லை"

     "நேரம் என்ன?"

     "மூன்று."

     "அப்புறம்?"

     "அவளிடம் சென்றேன்."

     "அட கஷ்டமே, ஏன் அங்கு போனாய்?"

     "தனியாக இருக்க அவள் பயந்தாள்; எனக்கும் அப்படித்தான் இருந்தது."

     "அவள் வீடு எங்கே?"

     "சோஹோவில் 42 நெ. பரோ தெரு."

     "கமான் வளைவு இருக்குமிடம்?"

     "குளோவ் சந்து மூலை"

     "அட தெய்வமே! ஏன்! அதைப் பேப்பரில் படித்தேனே?"

     மேஜையிலிருந்து பத்திரிகையை எடுத்துக் குறிப்பிட்ட பகுதியை வாசித்தான். குளோவ் சந்திலிருக்கும் கமான் வளைவின் கீழ் இன்று காலை ஒரு மனிதனுடைய பிரேதம் காணப்பட்டது. கழுத்திலிருக்கும் அடையாளங்களில் இருந்து விபரீதமான முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பிரேதத்தின் மீது அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய ஒன்றும் காணப்படவில்லை. களவும் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

     அது உண்மைதான். கொலை! அதுவும் தன் சகோதரனால்! சடக்கென்று அவன் பக்கத்தில் திரும்பி, "பேப்பரில் படித்துவிட்டுக் குடிவெறியில் கனவு கண்டிருக்கிறாய்! ஞாபகமிருக்கட்டும்! வெறுங்கனவு!"

     "கீத், அது வெறுங் கனவாக இருந்திருக்கலாகாதா? வெறுங்கனவாக இருந்திருக்கலாகாதா?"

     கீத், தன் கைகளை நெரித்துக் கொண்டான்.

     "பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?"

     "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது."

     அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்டல், பாரியர் தெரு, லண்டன்" என்ற விலாசமிடப்பட்டிருந்தது.

     "அதைத் தீயில் போடு" என்றான் கீத். அப்படிச் சொல்லும் பொழுது அவனது மனம் சுருக்கென்று தைத்தது.

     அதைத் தீயிலிருந்து எடுக்க கீத் முயன்றான். இந்த உத்தரவினால், தீயிலிட வேண்டுமென்று கூறியதினால், இந்த - இந்த... த்துடன் கலந்து கொண்டான். மறுபடியும் அதை எடுக்க முயற்சிக்கவில்லை. கடிதம் கருத்து, சுருண்டு சாம்பலாயிற்று.

     "ஏனடா அதை என்னிடம் வந்து சொன்னாய்?" என்று மறுபடியும் கேட்டான் கீத்.

     "உனக்குத் தான் இந்த விஷயங்களைப் பற்றித் தெரியும். அவனைக் கொல்லவேண்டுமென்றா நினைத்தேன்! நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன் கீத். நான் என்ன செய்யட்டும்?"

     என்ன சிறுபிள்ளைத்தனம்! என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறான்! லாரியின் புத்திக்கு என்ன சொல்வது.

     "உன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்று நீ நினைக்கிறாயா?"

     "அந்தத் தெருவே இருண்ட தெரு, வெளியில் யாருமில்லை!"

     "இரண்டாந்தரம் அவளை விட்டு எப்பொழுது சென்றாய்?"

     "ஏழு மணி இருக்கும்"

     "எங்கே போனாய்?"

     "நேராக என் ரூமிற்கு."

     "பிட்ஜ்ராய் தெருவிலிருப்பதா?"

     "ஆமாம்!"

     "நீ வருகிறதை யாரும் பார்த்தார்களா?"

     "இல்லை"

     "அதற்கப்புறம் என்ன செய்தாய்?"

     "உட்கார்ந்திருந்தேன்"

     "வெளியே போகவில்லையா?"

     "இல்லை"

     "அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லையா?"

     "இல்லை"

     "அதற்கப்புறம் அவள் என்ன செய்தாள் என்று உனக்குத் தெரியாதா?"

     "தெரியாது"

     "அவள் உன்னைக் காட்டிக் கொடுப்பாளா?"

     "ஒரு காலமும் இல்லை!"

     "பயத்தில் உளறிக் கொட்டிவிடுவாளா?"

     "மாட்டாள்"

     "நீ அவளுடன் சம்பந்தம் வைத்திருக்கிறாய் என்று யாருக்காவது தெரியுமா?"

     "ஒருவருக்கும் தெரியாது."

     "ஒருவருக்கும்?"

     "யாருக்குத் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்?"

     "நீ முதலில் அவள் வீட்டின் உள்ளே போகும்போது யாராவது பார்த்தார்களா?"

     "இல்லை. அவள் கீழே வசிக்கிறாள். சாவி என்னிடம் இருக்கிறது."

     "அவற்றை என்னிடம் கொடு. அவளை உன்னுடன் சம்பந்தப்படுத்தக்கூடிய வேறு பொருள்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா?"

     "வேறு ஒன்றும் கிடையாது."

     "உன்னுடைய அறையில்...?"

     "கிடையாது."

     "புகைப்படம், கடிதங்கள்?"

     "கிடையாது."

     "நினைத்துப் பார்த்துச் சொல்."

     "இல்லை."

     "இரண்டாவது தடவை சென்றபொழுதும் உன்னை ஒருவரும் பார்க்கவில்லையே?"

     "இல்லை."

     "காலையில் அங்கிருந்து வரும்பொழுதும் ஒருவரும் கவனிக்கவில்லையே?"

     "இல்லை"

     "அதுவும் உன் அதிர்ஷ்டந்தான். இப்படி உட்கார். நான் சிறிது யோசிக்க வேண்டும்."

     யோசிக்க வேண்டும்! கை கடந்த இந்த விபரீதத்தைப் பற்றி யோசிப்பு என்ன இருக்கிறது! அவனால் யோசிக்க முடியவில்லை - சிந்தனை கவிய மாட்டேன் என்றது. மறுபடியும் கேள்வி போட ஆரம்பித்தான்.

     "மறுபடியும் அவன் வந்தது அந்தத் தடவைதானா?"

     "ஆமாம்."

     "அவள் அப்படி உனக்குச் சொன்னாளா?"

     "ஆமாம்."

     "அவள் அங்கிருக்கிறாளென்று அவன் எப்படிக் கண்டான்?"

     "எனக்குத் தெரியாது."

     "எவ்வளவு குடித்திருந்தாய்?"

     "நான் குடிக்கவில்லை."

     "எவ்வளவுதான் குடித்திருந்தாய்?"

     "இரண்டு பாட்டில் கிளாரட் - அது ஒன்றும் பிரமாதம் இல்லை."

     "அவனைக் கொல்ல வேண்டுமென்ற நினைப்பு உனக்குக் கிடையாது என்று நீ கூறுகிறாய்?"

     "இல்லை, கடவுள் சத்தியமாக."

     "அதுவும் நல்லதற்குத்தான். ஏன் பிணத்தைப் போடுவதற்குக் கமான் வளைவை நினைத்தாய்?"

     "அதுதான் முதலாவதாக என் கண்ணுக்குப் பட்ட நல்ல இருண்ட இடம்."

     "அவன் முகக்குறி கழுத்து நெரிக்கப்பட்டதுபோலக் காணப்பட்டதா?"

     "அதைக் கேட்காதே!"

     "அப்படித்தானா?"

     "ஆமாம்."

     "அவன் உடைகளில் அடையாளம் ஏதாவது இருக்கிறதா என்று கவனித்தாயா?"

     "இல்லை."

     "ஏன் கவனிக்கவில்லை?"

     "ஏன் கவனிக்கவில்லை! தெய்வமே இந்த வேலையை நீ செய்திருந்தால்."

     "அவன் முகம் கோரமாக மாறியிருந்தது என்கிறாயே? பார்த்தால் அடையாளங் கண்டுபிடிக்க முடியுமா?"

     "எனக்குத் தெரியாது!"

     "அவனுடன் கடைசியாக அவள் வாழ்ந்தாளே அது எங்கே?"

     "திட்டமாக எனக்குத் தெரியாது; பிலிம்க்கோ என்று நினைக்கிறேன்."

     "சோஹோ அல்லவே?"

     "இல்லை."

     "சோஹோவிற்கு வந்து எத்தனை காலம் இருக்கும்?"

     "ஏறக்குறைய ஒரு வருஷம்"

     "அந்தக் காலம் முழுவதும் அதே வீட்டில்தானா?"

     "ஆமாம்."

     "அந்த வீட்டிலோ அல்லது அந்தத் தெருவிலோ அவளை அவனது மனைவி என்று அடையாளம் கண்டு சொல்லக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?"

     "இல்லை என்று நினைக்கிறேன்."

     "அவனுக்கு என்ன வேலை?"

     "வேலையா, ஊர்ப் போக்கிரி."

     "அப்படியா! ரொம்ப நாள் தண்ணீருக்கு அப்புறம் அயலூரில் கழிப்பான் போல?"

     "ஆமாம்"

     "போலீசாருக்கு அவனைத் தெரியுமா?"

     "அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது."

     "சரி நான் சொல்வதைக் கேள். இங்கிருந்து நேராகப் போய் உன் அறையிலேயே இரு; நான் நாளைக் காலை உன்னிடம் வரும்வரை எங்கும் போகக்கூடாது. ஜாக்கிரதை. சத்தியம் செய்து கொடு."

     "சத்தியமாக நான் வெளியே போகமாட்டேன்."

     "இப்பொழுது ஒரு விருந்திற்குப் போகவேண்டும். நான் இதைப்பற்றி யோசனை செய்கிறேன். குடிக்காதே. யாரிடமும் பேசாதே. ஆனால், தைரியமாக இரு."

     "அண்ணா! எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வா."

     என்ன வெளிறிய முகம்; என்ன சோகம் தேங்கிய கண்கள்; கைகளில் என்ன நடுக்கம்; வெறுப்பு, கோபம், பயம் எல்லாம் கீத் டரான்டை வாட்டினாலும், அவன் இதயத்தில் சிறிது இரக்கம் தோன்றியது. சகோதரன் தோளில் கையை வைத்து, "தைரியமாக இரு; தைரியந்தான் வேண்டும்" என்றான்.

     உடனே அவன் மனதில் 'தைரியமா, அட தெய்வமே! அது எனக்கு எவ்வளவு வேண்டும்?' என்று தோன்றியது.

*****

     லாரன்ஸ் டரான்ட் சகோதரன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, முதலில் வேகமாக, பின் மெதுவாக, அப்புறம் வேகமாக வடக்கு நோக்கி நடந்தான். ஏனெனில், சித்த உறுதியினால் ஒரு சமயத்தில் ஒரே காரியத்தை சாதிக்கத் திறமை வாய்ந்தவர்கள் இருப்பதுபோல், அது இல்லாமையால் சிலர் இப்பொழுது ஒன்றும், சிறிது கழித்து மற்றொன்றுமாக அதே தீவிர கதியில் செய்வார்கள், இந்த மாதிரி மனிதர்களுக்கு விபத்து சித்தவுறுதி யின்மையினால் ஏற்பட்டால், இருக்கும் உறுதியையும் இழப்பதற்கு வேறு காரணம் தேவையில்லை.

     "அதற்கென்ன, நாளைக்கு நாம் சாகத்தான் போகிறோம்" என்ற மனப்பான்மை ஏற்படுகிறது. கீத்திடம் சென்று, காரியத்தைச் சொல்ல வேண்டும் என்ற முயற்சி அவனைக் களைப்பித்து பலத்தை இழப்பித்தது. அந்த மூன்று உணர்ச்சிகளுக்கு ஏற்பவே, அவனது நடையின் கதியும் இருந்தது. சகோதரன் வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, நேரே தன் வீட்டிற்குச் சென்று கீத் டரான்ட் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே புறப்பட்டான். சிறிது தூரம் செல்லு முன் ஏற்பட்ட மனச்சோர்வு, தற்கொலை செய்து கொள்ளக்கூடிய மனப்பான்மையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் பாசங்கூட இந்தச் சோர்வை எதிர்த்து நிற்கச் சக்தியற்று விட்டது. ஏன் இந்த வியர்த்தமான வாழ்க்கையை நீடிக்க வேண்டும்? ஏன்?

     லாரன்ஸ் தனது செய்கையின் நிலைக்களமான தெருவின் பக்கம் நெருங்கினான். மனது பழைய நினைவுகளில் சென்று சென்று கவிந்து கடைசியாக அவனது நினைவின் முற்றுப்புள்ளியாக அந்த சமீபத்திய கோர சம்பவத்தில் முடிவடைந்தது.

     எதிரில் தென்பட்ட மருந்துக்கடை ஆறுதலையளித்தது. விஷமாத்திரையைச் சட்டை ஓரத்தில் மறைத்துக்கொண்டே இனி நடமாட வேண்டும்! என்ன மன நிம்மதியைத் தரும் நினைவு? பயத்தை அவர்களும் அனுபவிக்கட்டும். நாக்கில் நரம்பில்லாது பேசுபவர்களுக்கு அப்பொழுது தெரியும்! களைப்பை நீக்க, மருந்து குடிக்கக் கடையில் ஏறினான்.

     "நன்றாகத் தூக்கம் இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டு மருந்தைக் கொடுத்தான் கடைக்காரன்.

     "இல்லை"

     மருந்துக் கடைக்காரன் வாழ்க்கையே விசித்திரமானது. இந்த மனித யந்திரமும் ஒடிந்து விழாதபடி, நாள் முழுவதும் மாத்திரையும் பஸ்பமும் விற்பதுதானே! நல்ல வேடிக்கையான வியாபாரம்!

     அங்கிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான்! கொலை செய்தவனுக்கு அவ்வளவு அழகான முகம் அவசியமில்லைதான். மனச்சோர்வு கொஞ்சம் குறைந்தது. வெளியே இறங்கி வேகமாக நடந்தான்.

     மனதிலே ஏதோ அமுக்குவதுபோல கனமும் அதே சமயத்தில் ஒரு கலகலப்பும் இருந்தது. இந்தப் பெண்ணும் கீத்தும் அவன் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கினர்.

     அந்தப் பிரேதத்தைப் போட்ட பழைய இடத்திற்குப் போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஒரு பேய் ஆசை அவனை உந்தித் தள்ளியது. பரோ தெருவைத் தாண்டி அந்தச் சந்தில் திரும்பினான். அங்கு ஒரே ஆள்தான் தென்பட்டான். கூனிக் குறுகிய மனிதன் ஒருவன் அந்த மங்கிய வெளிச்சத்தில் அவனை நோக்கி வந்தான். வறுமையின் கோலமாக பார்ப்பதற்கு பயங்கரமான, ஆனால் பரிதாபகரமான நொண்டி.

     "என்ன அண்ணா! உமக்குப் 'போறாத' காலம்போல் இருக்கிறது!" என்றான் லாரன்ஸ்.

     அவனது சிரிப்பு, வயல்களில் பட்சி விரட்ட வைத்த துணிப் பதுமையின் சிரிப்பு மாதிரியிருந்தது.

     "அதிர்ஷ்டமும் செழிப்பும் என் பாதையில் எதிர்ப்படவில்லை. நான் வாழ்க்கையின் தோல்வி. எப்பொழுதுமே தோல்விதான். நான் ஒரு காலத்தில் பாதிரியாக இருந்தேன் என்றால் நம்புவாயா?" என்றான் அந்த நொண்டி.

     லாரன்ஸ் ஒரு ஷில்லிங்கை எடுத்து நீட்டினான். அந்த அன்னியன் வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்து விட்டு, "நீயே வைத்துக்கொள். உன்னிடம் இருப்பதைவிட என்னிடம் ஜாஸ்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என் மீது இவ்வளவு சிரத்தை காண்பித்ததற்காக வந்தனம். கீழே விழுந்து போனவனுக்கு, பணத்தை விட இது எவ்வளவோ ஜாஸ்தி."

     "சொல்லுவது நிஜந்தான்."

     "ஆமாம், வெறுமனே நாளை நீடிப்பதைவிட இப்பொழுதே சாகத் தயார். எனது மதிப்பை இழந்தேன். ஒருவன் தன் மதிப்பை இழக்காமல் எத்தனை நாள் பட்டினி இருக்கமுடியும் என்று ஆச்சரியப்படுவேன். ரொம்பக்காலமல்ல! என் வார்த்தையை நீ நம்பு. ரொம்பக் காலமல்ல" என்றான். மேலும் அதே குரலில், "நீ அந்தக் கொலையைப் பற்றிப் பேப்பரில் படித்தாயா? இங்குதான் நடந்தது. இப்பொழுதுதான் அந்த இடத்தைப் பார்த்தேன்."

     "நானும் படித்தேன்" என்று லாரன்ஸ் வாயிலிருந்து வெளிவர இருந்தது. அவன் பயத்தினால் அதை அடக்கினான்.

     "இனியாவது நல்ல அதிர்ஷ்டம் வரட்டும். போய் வருகிறேன்" என்று சொல்லி வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றான். தொண்டையில் ஒரு பேய்ச் சிரிப்புக் கிடந்து விம்மியது. இந்தத் துணிப் பதுமைகள் கூட என் கொலையைப் பற்றியே பேசுகின்றன!

*****

     சிலருடைய மனவுறுதி விசித்திரமானது. பத்து மணிக்குத் தூக்குமேடையில் தொங்க வேண்டியதாகத் தண்டிக்கப்பட்டாலும் எட்டு மணி வரை சித்தம் கலையாமல் நிதானமாகச் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி மனிதர்கள்தான் உலகத்தில் முன்னேறி வருகிறவர்கள். இவர்கள்தான் பாதிரிகளாகவும் பத்திரிகாசிரியர்களாகவும், நீதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும், பெரிய தளகர்த்தர்களாகவும், பணம் லேவாதேவி செய்பவர்களாகவும், நல்ல சேவை செய்யக் கூடியவர்களாகவும் வருவர். அவர்கள் கற்பனையை நினைத்த மாத்திரத்தில் அகற்றி உணர்ச்சியை அறிவிற்கு அடிமைப்படுத்தி வேலை செய்யக் கூடியவர்கள். அஸ்தமன வேளையில் அழகு லாகிரியிலே தலையசைக்கும் வயல்புறங்களில் நிற்கும்பொழுது, யாரும் மேற்படி ஆசாமிகளைப் பற்றி நினைப்பதில்லை.

     அன்று டெசானில் விருந்து சாப்பிட்டு வெளிவரும் வரை, கீத் டரான்ட், மேற்படி வர்க்கத்தில் ஒருவராக இருக்க வேண்டிய அவசியமிருந்தது.

     அங்கிருந்து புறப்பட்டதும் கீத் மனது ஒரு வழியாகச் சாவதானமாகப் பாயவில்லை. அன்று கேட்ட விபரச் சுழலில் இறங்கியது. ஒருபுறம் சகோதரன்; மற்றொருபுறம் சமூகப் பாதுகாப்பின் சின்னமான நியாயம். நீதி ஒருபுறம், மற்றொருபுறம் இரத்த பந்தத்தின் பாசம் என்ற சுய பாதுகாப்பு.

     அவனுக்கு ஆலோசனை சொல்லுமுன்... என்ன நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சுயமாக ஆராய வேண்டும். குளோவ் சந்தையையும் அந்தக் கமான் வளைவையும் பார்க்க வேண்டும். கீத் டரான்டின் கால்கள் பரோ தெருவில் திரும்பியது. நேராக ஒரு முறை அந்தக் கோடி வரை நடந்து சென்று திரும்பினான். 42-ம் நம்பர் வீடு சிறியதுதான். சுவரிலே வியாபார விளம்பரங்கள். அடைத்த ஜன்னல்கள். இதிலிருந்து எந்தப் பக்கம் லாரி பிரேதத்தைத் தூக்கிச் சென்றான்? 50 அடிகளுக்கப்புறம் அப்பா என்ன இருட்டு, சந்து இருப்பதாகவே தெரியவில்லையே! இதுதானா குளோவ் சந்து! சந்து என்று கூடச் சொல்லமுடியாது. தெருவில் சிறிய இடைவெளி. அந்தக் கமான் வளைவுப் பக்கத்திலேயே வந்துவிட்டான்.

     "இங்கேதான் சாமி; இந்த இடத்தில்தான்" என்றது ஒரு சிறு குரல். திடுக்கிட்டுக் குளறாமல் சாவதானமாக அவனைத் திரும்பி ஏறிட்டுப் பார்க்க, தனது மனோசக்தியின் திறமைகளை எல்லாம் ஒருங்கே துணை கொள்ள வேண்டியிருந்தது.

     "இங்கேதான் சவத்தைக் கண்டு பிடித்தார்கள். இந்தா - இதோ இருக்கே இந்த இடம்தான். அவனை இன்னம் பிடிக்கலே! ரொம்பக் கெட்டிக்காரன் சாமி!"

     இருளில் பார்த்துப் பழகிய பின் தான், அதைச் சொன்னவன் சிறு பையன் - பத்திரிகை விற்பவன் - அந்த இடத்திலேயே நின்று வியாபாரம் நடத்துகிறவன் என்று கீத் கண்டான். அவனிடமிருந்து ஒரு பத்திரிகை வாங்கித் தெரு மூலையிலிருந்த மங்கிய விளக்கில் படித்தான். கொலை செய்யப்பட்டவனைப் பற்றி அடையாளம் ஒன்றும் தெரியவில்லை என்று கண்டிருந்தது.

     இந்தத் தெருவிலும் ஒரு போலீஸ்காரன் எதிரே வருவதைக் கீத் கண்டான். அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மறுபடியும் பரோ தெருவிற்குத் திரும்பி நடந்தான். 42-ம் நெம்பர் வீடும் சமீபித்தது. அவளை ஏன் பார்க்கலாகாது? நேராகச் சென்று கதவைத் தட்டினான். பதில் இல்லை. கையிலிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து, உள்ளே சென்றான். உள்ளே கும்மிருட்டு.

     "நீயா லாரன்ஸ்?" என்றது ஒரு பெண் குரல்.

     கீத், பதிலளிக்காது மின்சார விளக்கு உத்தேசமாக இருக்கும் இடத்தில் கையை வைத்துத் தடவினான்.

     "ஏன் கதவைத் தட்டினாய்? நான் பயந்தே போனேன். விளக்கைப் போடேன்! ஏன் தயங்குகிறாய்?" என்றது அக்குரல் மறுபடியும். திடீரென்று தன்னை யாரோ தழுவுவது போல் கீத் உணர்ந்தான்.

     "ஐயோ! இதாரது?" பயந்தலறியது அக்குரல்.

     நல்ல காலம்! மின்சாரப் பொத்தான் கையில் தென்பட்டது. அமுக்கினான். வெளிச்சம் வந்தது; சின்ன அறை. சிறிது தூரத்தில் ஒரு திரை. பின்புறம் படுக்கை போலும். வறுமையிலே அழகுணர்ச்சியைச் சாந்தி செய்ய முயலும் பரிதாபகரமான முயற்சி.

     அவள் முகமோ வெளிறி பயத்தில் கண்கள் விறைத்துப் போனது போல் திறந்தபடி நின்றன. அவள் உருவமோ, துன்பத்தால், பலவீனத்தால் பாதுகாப்பை எதிர்பார்த்து மடியும் மலரின் சோகவிலாஸம் நிறைந்த உருவம். உணர்ச்சி என்ற விஷயத்தை அறவே மடிய வைத்த, கீத் டரான்ட் மனதிலும் சிறிது இரக்கம் தளிர்த்தது.

     "பயப்படாதே. உனக்குக் கெடுதி செய்ய வரவில்லை. உட்கார்ந்து பேசட்டுமா? லாரன்ஸ் என்னை நம்பாவிட்டால் இதைக் கொடுப்பானா?" என்று சாவிக் கொத்தைக் காண்பித்தான்.

     அவள் அசையவில்லை. பதில் பேசவில்லை.

     "ஏன் உட்கார். பயப்படுத்தி விட்டேனா?" என்றான் கீத் மறுபடியும்.

     அதற்கும் அவள் அசையவில்லை; ஆனால் மெதுவாக "நீங்கள் யார்?" என்றாள்.

     அந்தப் பயத்தை உணர்ந்த கீத் முன் ஜாக்கிரதையையும் இழந்து, "நான் லாரன்ஸ் உடைய சகோதரன்" என்றான்.

     பயம் அகன்றது போல ஒரு பெருமூச்சு வந்தது.

     சிறிது நேரம் கழித்து "உனக்கென்ன வயது?" என்றான்.

     "எனக்கு இருபதாகிறது."

     "என் சகோதரன் மீது உனக்கு மிகுந்த பற்றுதலோ?"

     "அவருக்காக உயிரையும் கொடுப்பேன்."

     அவளது குரலைச் சந்தேகிக்க முடியாது. சித்தத்திலிருந்து வெளிப்பட்ட உறுதியான சொல்.

     கீத் அவளைப் பற்றிய விபரங்களைக் கேட்டான்; சம்பவத்தைப் பற்றிக் கேட்டான். அவள் குழந்தைபோல மறைக்காமல் பதிலளித்து வந்தாள். அவளது பேச்சில் இலைமறை காய்போல், ஆனால் பிணிப்புவிடாத பொற் சரடு போன்ற, லாரன்ஸ் மீது அவளுக்கிருந்த ஒருவித பக்தி, பாசம், அவனைக் காப்பாற்ற உயிரையும் கொடுக்க முன்வரும் மனவுறுதி எல்லாம் வெளிப்பட்டன.

     அவளைப் பொறுத்தவரை கவலையில்லை; அவளைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

*****

     மறுநாட்காலை கீத் பத்திரிகையை வாசிக்கும்பொழுது திடுக்கிட்டான். பத்திரிகையில் ஒருவன் கைது செய்யப்பட்டதாகக் கண்டிருந்தது. சரி, எதிர்பார்த்த இடி விழுந்து விட்டது.

     எதற்கும் சகோதரன் வசிக்கும் இடத்திற்குச் சென்று விஷயத்தை அறியவேண்டுமென்று வேகமாகச் சென்றான்.

     லாரன்ஸின் வேலைக்காரன் அறிவித்த செய்தி அவன் மனதில் பாலை வார்த்தது. வேறு யாரையோ கைது செய்து விட்டார்கள்!

     உள்ளே சென்றதும், கீத் தனது சகோதரன் படுக்கையின் மீது உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

     "நீ நாளைக்கு அர்ஜன்டைனாவிற்குப் புறப்பட வேண்டும். தயாராகு. நல்ல காலம். வேறு யாரையோ கைது செய்திருக்கின்றனர்!" என்றான் கீத்.

     "என்ன?"

     மறுபடியும் லாரன்ஸ் "என்ன?" என்று உரத்துக் கேட்டான்.

     இந்த முட்டாளிடம் இதையேன் சொன்னேன் என்று நினைத்துக் கொண்டான் கீத்.

     "அவன் நிரபராதி. அவனுக்கு அபாயமில்லை; போலீசார் எப்பொழுதும் இப்படித்தான்; அது என் அதிர்ஷ்டம்" என்றான் கீத்.

     சகோதரனைச் சமாதானப்படுத்திவிட்டு, கீத் பாங்கியில் 400 பவுன் எடுத்தான். நோட்டுகள் ஒரு வேளை காட்டிக்கொடுத்து விடுமோ?

     அன்று மாலை சிறிது நிம்மதி ஏற்பட்டது. அன்று கோர்ட்டில் கீத் நன்றாக விவாதித்தான்.

     மாலையில் கீத் அவனைப் பார்க்க வரும்வரை லாரன்ஸ் மனம் ஒரு நிலைப்படவில்லை. தனக்காக ஒரு நிரபராதி அகப்பட்டுக் கொண்டான்...

     கீத் நேரே உள்ளே வந்து புறப்படுவதற்குப் பணத்தைக் கொடுத்தான்.

     "நான் இருந்து பார்த்துவிட்டுத்தான் போகப் போகிறேன்."

     கீத் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை.

     "கீத் என்னை மன்னித்துக்கொள்! எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மன்னித்துக்கொள்" என்றான்.

     கீத் ஒன்றும் பதிலளிக்கவில்லை. வெளியே அகன்றான்.

     கடைசியாகத் தீர்ப்பும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவனைத் தண்டித்து விட்டார்கள். என்ன அநியாயம்!

     கீத் சகோதரனைத் தேடி அப்பெண் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவள்தான் வந்து கதவைத் திறந்தாள். சகோதரன் மனப்போக்கை ஒருவாறு அறிந்த கீத் அவளிடம் லாரன்ஸை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்தான். அவள் மனசிலும் அந்தச் சிறைத் தண்டனை பெற்றவன் மீது இரக்கம் இருப்பதை அறிந்தான்.

     பேசி முடியவில்லை, லாரன்ஸே வந்துவிட்டான்.

     இருவரும் பேசவில்லை.

     இருவருக்கும் தீர்ப்பைப் பற்றியே மனதில் வாதித்தது.

     "நாளை வரை ஒன்றும் செய்வதில்லை என்று சத்தியம் செய்து கொடு" என்றான் கீத்.

     "சத்தியம் செய்" என்றான் கீத் மறுபடியும்.

     "சத்தியம்" என்றான் லாரன்ஸ்!

*****

     அன்று இரவு லாரன்ஸும் அவளும் நெடுநேரம் குடித்துச் சந்தோஷமாக இருந்தனர். பத்து மணி இருக்கும், அவள் படுக்கைக்குச் சென்றாள்.

     பின்பு லாரன்ஸ் விளக்கடியில் உட்கார்ந்துகொண்டு என்னவோ எழுதிக் கொண்டிருந்தான்.

     அதுவும் முடிந்தது.

     இப்பொழுது விளக்கு புஷ்பம், ஒளி...

     ஆனால் இனி?

     திரையின் பக்கத்திலிருந்து அந்தப் பெண் கவனித்திருந்தாள்...

*****

     கீத் கிளப்பிலிருந்து திரும்பும்பொழுது என்னவோ தோன்றியது. மனதிலே தீர்ப்பின் அநீதி உறுத்திக் கொண்டிருந்தது. பையினுள் கையை விட்டுகொண்டு நடந்தான். என்னமோ கையில் சில்லென்று பட்டது. பழைய சாவி! லாரன்ஸ் கொடுத்தது. பரோ தெருவிற்குப் போக வேண்டுமென்று நேரே அங்கு திரும்பி நடந்தான்.

     வெளிக்கதவு அடைத்துக் கிடந்தது. உள்ளே விளக்கு வெளிச்சம். தட்டினால் பதில் இல்லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். விளக்கு எரிந்தபடி இருக்கிறது. புஷ்பங்கள், பாட்டில்கள், கோலாகலம்! குடிவெறியா? இருவரும் படுத்திருந்தனர். "லாரன்ஸ்! லாரன்ஸ்!" என்று கூப்பிட்டான். பதில் இல்லை.

     சந்தேகம் உதித்தது.

     மேலே கையை வைத்தான்.

     சில்லென்று விறைத்துப் போயிருந்தனர். பக்கத்தில் ஒரு கடிதம் மெத்தையின் மீது குத்தப்பட்டிருந்தது.

     அதுதான், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பத்திரம்.

     கீத் அவ்வளவையும் வாசித்தான்!

     கைகளிலிருந்து அந்தத் தாள்கள் விழுந்தன. அவன் மனக்கண் முன்பு தனது வாழ்க்கையின் குலைவு படமாக விரிந்தது.

     சடக்கென்று குனிந்து அந்தப் பத்திரத்தைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கினான்.