பால்தஸார்

அனதோல் பிரான்ஸ் - பிரான்ஸ்

     "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தி
     யுண்டு என்று நினைத்தார்கள்"

-தெர்த்தூலியன்

     அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன் கறுப்பாக இருந்தாலும் அழகன்; களங்கமற்றவன்; தாராளமான உள்ளமுடையவன்.

     அவன் சிம்மாசனமேறிய மூன்றாவது வருஷத்தில், அதாவது அவனது இருபத்திரண்டாவது வயதில், தன் நாட்டைவிட்டு ஷெபா தேசத்து அரசியான பால்கிஸ் அரசியைக் காணச் சென்றான். அவன் தன்னுடன் செம்போடிஸ் என்ற மதகுருவையும், மென்கரா என்ற பணியாளனையும் துணையாகக் கொண்டு சென்றான். அவன் பரிவாரங்கள் எழுபத்தைந்து ஒட்டகச் சுமை வாசனைத் திரவியங்களும், யானைத் தந்தங்களும், தங்கமும் சுமந்து சென்றன.

     இவ்வாறு அவர்கள் பிரயாணம் செய்யும்பொழுது, செம்போடிஸ், அரசனுக்கு வான சாஸ்திரத்தையும், நவரத்தினங்களைப் பற்றிய இரகசியத்தையும் கற்பித்தான். மென்கரா என்ற அடிமை, பக்திப் பாடல்களைப் பாடி அரசனை மகிழ்விக்க முயன்றான். ஆனால், பால்தஸார், இவர்களுடைய முயற்சியைச் சட்டை செய்யாது, பாலைவனத்தின் ஓரத்தில் காதுகளை நெரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஓநாய்களைப் பார்த்து பொழுது போக்கிக்கொண்டு சென்றான்.

     பனிரண்டு நாள் பிரயாணத்தின் பிறகு, பால்தஸார் ரோஜா புஷ்பங்களின் வாசனை, காற்றுடன் கலந்து வருவதை உணர்ந்தான். சிறிது நேரத்தில் அவர்கள் ஷெபா நகரத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நந்தவனங்களை அணுகினார்கள். போகும் வழியெல்லாம் நன்றாக மலர்ந்த மாதுளை மரத்தடியில் கூத்திட்டு விளையாடும் யுவதிகளைப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

     "தெய்வத்தை நோக்கிச் செய்யும் பிரார்த்தனைதான் நடனம்" என்றான் செம்போடிஸ்.

     "இந்த யுவதிகளை விற்றால் நல்ல பணம் வரும்" என்றான் அடிமை மென்கரா.

     இவர்கள் நகரத்தினுள் சென்றதும், அங்குள்ள பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களையும், குவிக்கப்பட்டிருக்கும் பொருள்களையும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

     ரதங்களும், கூலிகளும், பொதி கழுதைகளும் நிறைந்த வீதிகளின் வழியாக நெடுந்தூரம் சென்று, பளிங்குச் சுவர்களும், தங்கக் கலசங்கள் ஏற்றிய சிவந்த கோபுர வாயிலும் உடைய பால்கிஸ் அரசியின் அரண்மனை முன்பு வந்தனர்.

     ஷெபா அரசி, வாசனை பரிமளித்து, முத்துப்போல் உதிரும் செயற்கையூற்றுக்கள் நிறைந்த நிலா முற்றத்தில் நின்று, அவர்களை வரவேற்றாள்.

     அரசி, புன்சிரிப்புடன், சர்வாபரண பூஷிதையாய், அவர்கள் முன்பு வந்து நின்றாள்.

     அவளைப் பார்த்ததும் பால்தஸாரின் மனம் கலங்கியது. கனவுக்கும் ஆசைக்கும் மீறிய அழகுடன், தேஜஸுடன், அவள் அவன் முன் தோன்றினாள்.

     "அரசே! நல்ல வியாபார ஒப்பந்தம் ஒன்று அரசியிடம் செய்துகொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று செம்போடிஸ் இரகசியமாகக் கூறினான்.

     "ஆண்மகனின் காதலைப் பெறுவதற்கு மந்திர சக்தியை உபயோக்கிறாள் என்று கூறுகிறார்கள், அரசே! ஜாக்கிரதையாக இருங்கள்" என்றான் அடிமை மென்கரா.

     பிறகு அரசியைச் சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, குருவும் அடிமையும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

     பால்கிஸுடன் தனியாக விடப்பட்ட பால்தஸார் பேச வாயெடுத்தான். வார்த்தை வரவில்லை; "எனது மௌனத்தினால் அரசிக்கு கோபம் வந்துவிடும்" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

     ஆனால், அரசி கோபப்படாது, புன்சிரிப்புடனேயே இருந்தாள். அவளே முதலில் பேசினாள். அவள் குரல் கானத்தினும் இனிமையாக இருந்தது.

     "வாருங்கள்! என் பக்கத்தில் வந்து உட்காருங்கள்!" என்று வெண்மையான, மெல்லிய ஒளிரேகை போன்ற சிறு விரல்களால், தன் பக்கத்தில் தரையிலிருந்த சிவந்த மெத்தையைச் சுட்டிக் காட்டினாள். பால்தஸார் பெருமூச்சுடன், அதில் அமர்ந்து, மெத்தையை இரு கையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "இவ்விரண்டு மெத்தைகளும் ராக்ஷஸ பலமுள்ள உனது எதிரிகளாக இருந்திருந்தால், அவர்கள் கழுத்தைத் திருகிவிடுவேன்" என்றான்.

     அவன் இப்படிக் கூறும்பொழுது மெத்தைகளைப் பிடித்த பிடிப்பினால், அவை கிழிந்து உள்ளிருந்த பஞ்சிறகுகள் வெண்பனி மேகம்போல் சிதறி எழுந்தன. அவற்றில் ஒன்று அந்தரத்தில் சற்று மிதந்து மெதுவாக அரசியின் மார்பில் வந்து தங்கியது.

     "அரசே! உங்களுக்கு ராக்ஷஸர் மீது அவ்வளவு கோபம் என்ன?" என்றாள் பால்கிஸ் அரசி.

     "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றான் பால்தஸார்.

     "உங்கள் தலைநகரிலுள்ள கிணற்று ஜலம் நன்றாயிருக்குமா?" என்றாள் அரசி.

     "ஆமாம்" என்றான் பால்தஸார், சிறிது ஆச்சரியப்பட்டு.

     "எதியோபியாவில் பழ வற்றல்களைச் சேமித்துவைக்க என்ன செய்கிறார்கள் என்று அறிய எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றாள் அரசி மீண்டும்.

     அரசனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.

     "சொல்லுங்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள் அரசி.

     அரசன், வெகு கஷ்டப்பட்டு ஆலோசனை செய்து, எப்படி எதியோபியப் பரிசாரகர்கள் தேனில் பழ வற்றல்களைப் பதனம் செய்கிறார்கள் என்பதை விஸ்தரிக்க முயன்றான். அரசி அதைக் கவனிக்கவில்லை. திடீரென்று இடைமறித்து,

     "அரசே! தாங்கள் கான்டஸ் அரசியைக் காதலிப்பதாகக் கூறுகிறார்களே! அவள் என்னைவிட மிகுந்த அழகா? ஏமாற்றாதீர்கள்!" என்றாள்.

     "உன்னைவிட மிகுந்த அழகா!" என்று சொல்லிக் கொண்டே, அவள் காலடியில் விழுந்து, "அது எப்படி இருக்க முடியும்?" என்றான் பால்தஸார்.

     "பிறகு அவள் கண்கள், அவள் கரங்கள், அவள் நிறம், அவள் கழுத்து?" என்றாள் மீண்டும்.

     பால்தஸார் அவளை நோக்கிக் கையை விரித்துக் கொண்டு, "உனது மார்பில் தங்கி நிற்கும் பஞ்சு இறகை எனக்கு அளித்தால், எனது ராஜ்யத்தில் பாதியையும், செம்போடிஸையும் மென்கராவையும் உனக்கு அளித்து விடுவேன்" என்று ஆவேசத்துடன் கூறினான்.

     ஆனால், அவள் எழுந்து கலகலத்த சிரிப்புடன் ஓடிச் சென்று விட்டாள்.

     குருவும் அடிமையும் திரும்பி வந்த பொழுது, தங்கள் எஜமானன் தனது குணத்திற்கு மாறாக ஆழ்ந்த யோசனையிலிருப்பதைக் கண்டனர்.

     "அரசே! வியாபார ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டீர்களா?" என்றார் குரு.

     அன்று பால்தஸார் ஷெபா அரசியுடன் விருந்துண்டு, அந்த நாட்டின் பேரீச்ச மதுவை யருந்தினான்.

     "பிறகு, கான்டஸ் அரசி என்னைப் போல் அழகியல்ல என்பது உண்மைதானா?" என்று அரசி, இருவரும் புசித்துக் கொண்டிருக்கும்பொழுது, கேட்டாள்.

     "கான்டஸ் அரசி கறுப்பி" என்று பதில் சொன்னான் பால்தஸார்.

     "கறுப்பாக இருந்தால் அழகில்லாமலா போய்விடும்?"

     "பால்கிஸ்!" என்றான் பால்தஸார்.

     அவன் மேற்கொண்டு வேறு ஒன்றும் சொல்லவில்லை; அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்தான்; அவனுடைய முத்தத்தின் வேகத்தில் அவளது தலை அண்ணாந்தது. ஆனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைக் கண்டுவிட்டான். பிறகு மெதுவாக, கொஞ்சுதலாக, குழந்தையைத் தேற்றுவது போல் அவளைத் தேற்றினான். அவளைத் தனது மலர் என்றும், சிறு நட்சத்திரம் என்றும் கொஞ்சினான்.

     "ஏன் அழுகிறாய்? உனது கண்ணீர் அகல நான் என்ன செய்ய வேண்டும்? உனது ஆசையைச் சொல், உடனே நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் பால்தஸார்.

     அவள் அழுகையை நிறுத்திச் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். அவளது ஆசையைத் தெரிவிக்கும்படி வெகு நேரம் கெஞ்சினான். கடைசியாக அவள் பதிலளித்தாள்.

     "எனக்குப் பயம் என்பது என்னவென்று தெரிய வேண்டும்!"

     முதலில் பால்தஸாருக்கு என்னவென்று அர்த்தமாகவில்லை. அவள் பிறகு மெதுவாக, என்னவென்று அறிய முடியாத அபாயத்தைத் தான் அநுபவிக்க ஆசைப்படுவதாகவும், ஆனால் ஷெபாவின் தெய்வங்களும், வீரர்களும் தனக்கு இதை அறிந்து கொள்ள முடியாதபடி தன்னைக் காப்பாற்றி வருவதாகவும் கூறினாள்.

     "ஆனால், இரவில் பயத்தின் குளிர்ந்த சாயை படவேண்டும் என்றும், தலைமயிர், தறிகெட்ட மிரட்சியால், அலங்கோலமாக நிமிர்ந்து குச்சலெடுத்து நிற்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அப்பா! பயத்தை அநுபவிப்பதில் என்ன சுகம் இருக்கிறது!" என்று பெருமூச்செறிந்தாள்.

     சாமள வர்ணனான பால்தஸாரின் கழுத்தில், தன் மெல்லிய கரங்களை வளைத்து, குழந்தைகளின் குதலை மொழியில், "இரவாகி விட்டதே, மாறுவேஷம் போட்டுக் கொண்டு நாம் நகரத்தைச் சுற்றி வருவோமா? நீங்கள் வருகிறீர்களா?" என்றாள்.

     அவன் ஒப்புக் கொண்டான். அவள் ஜன்னலண்டையில் ஓடி வெளியே எட்டிப் பார்த்தாள்.

     "ஒரு பிச்சைக்காரன் அரண்மனைச் சுவரில் சாய்ந்தபடி தூங்கிக் கிடக்கிறான்; அவனிடம் உங்களுடைய உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள், சீக்கிரம், நானும் உடையை மாற்றிக் கொண்டு தயாராகிறேன்" என்றாள்.

     அவள் விருந்து மண்டபத்தை விட்டுக் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் கைகளைக் கொட்டிக் கொண்டு வெளியே ஓடினாள்.

     பால்தஸார், பிச்சைக்காரனுடன் தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு, தயாராகக் காத்திருந்தான். அரசி சாதாரணப் பணிப்பெண்ணின் உடையில் அவனைச் சந்தித்தாள்.

     "வாருங்கள்" என்று அவனைப் பல கதவுகள் வழியாக அரண்மனைப் புறத்திலிருந்த வயலுக்கு அழைத்துச் சென்றாள்.

*****

     அன்றிரவு இருள் அதிகமாக இருந்தது. இருட்டில் பால்கிஸ் பார்வைக்கு உயரத்தில் குறுகியவளாகக் காணப்பட்டாள்.

     அவள் அவனை ஊர் காலாடிகளும் வேசைகளும் வந்து சேரும் ஒரு கள்ளுக் கடைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்து, அலங்கோலமாகக் கிடக்கும் நாற்றம் பிடித்த மனிதக் கூட்டத்தைப் பார்த்தனர். கடைக்காரன், ஒரு சாக்கின் மீது சாய்ந்து கொண்டு குடிவெறியர்களை ஒற்றைக் கண்ணினால் கவனித்து வந்தான்.

     பால்கிஸ், கூரையிலிருந்து சரம்போலக் கோத்துத் தொங்கும் உப்பில் ஊறவைத்த மீன்களைப் பார்த்து, "அவற்றை வெங்காயத் துகையலுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்று சுட்டிக் காட்டினாள்.

     பால்தஸார் கட்டளையிட்டான். ஆனால் அவள் சாப்பிட்டபிறகுதான் பணம் கொண்டு வரவில்லை என்ற ஞாபகம் அவனுக்கு வந்தது. ஆனால் அவன் கவலை கொள்ளவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் நழுவி விடலாம் என்று நினைத்தான். ஆனால், கடைக்காரன் வழியை மறித்துக்கொண்டு, அடிமைப் பயல் என்றும், காசுக்குதவாத பெட்டைக் கழுதை என்றும் இருவரையும் வைதான். பால்தஸார் ஒரு குத்துக் குத்தி அவனைக் கீழே வீழ்த்தி விட்டான்.

     உடனே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர், கையிலிருந்த கத்தியை உருவி அவர்கள் மீது வீசி எறிந்தனர். ஆனால் சாமள வர்ணமுள்ள எகிப்திய அரசன், வெங்காயம் அரைக்கும் கல்லை எடுத்து எதிரிகளின் மீது வீசி, இருவரையும் கீழே வீழ்த்தி, மற்றவர்களைப் புறங்காட்டச் செய்தான். இவ்வளவு சண்டையிலும் பால்கிஸ் அரசியின் தேகத்தின் ஸ்பரிசம் அவனுக்கு ராக்ஷஸ பலத்தையளித்தது.

     கடைக்காரனது நண்பர்கள் அருகில் வரப் பயப்பட்டு அங்கிருந்தே பாத்திரங்களையும் கைக்ககப்பட்ட ஒவ்வொன்றையும் அவன் மீது எறிந்தனர். அவர்கள் எறிந்த பெரிய பாத்திரம் ஒன்று பால்தஸார் மண்டையில் தாக்கியுடைந்து காயப்படுத்தியது. ஒரு நிமிஷம் சித்தப்பிரமை பிடித்தவன் போல் நின்றான். அவ்வளவுதான்! மறுநிமிஷம் அந்தப் பாத்திரம் இன்னும் பன்மடங்கு வேகத்துடன் எதிரிகளை நோக்கிச் சென்றது. இந்தப் பாத்திரம் விழுந்த களேபரத்தில் பால்கிஸைத் தன் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினான். இருண்ட சந்துகளில் ஒருவரும் இல்லை. இரவின் அமைதி பூமியைச் சூழ்ந்தது. துரத்தி வந்தவர்களின் குரல்கள் தூரத்தில் மடிந்தன. சிறிது நேரத்தில் ஒரு சப்தமும் இல்லை. பால்தஸாரின் நெற்றியில் இருந்து வடிந்த ரத்தத்துளி ஒன்று, பால்கிஸின் மார்பில் சொட்டென்று விழுந்தது.

     "அரசே! உங்களைக் காதலிக்கிறேன்" என்றாள் பால்கிஸ்.

     மேகப் படலத்திலிருந்து விடுபட்ட சந்திரனொளியில், அவளது பாதி மூடிய கண்களின் அமிர்தமயமான பிரதிபலிப்பைக் கண்டான். இருவரும் ஜலம் வற்றிய ஓடையில் இறங்கினர். பால்தஸாரின் கால் தடுக்கியது. இருவரும் இறுகப் பிடித்த வண்ணம் ஓடையில் மெத்தென்றிருந்த பாசிப் படலத்தில் விழுந்தனர். அவர்கள் எல்லையற்ற இன்பத்தில் மிதந்தனர். வாழ்க்கையின் போக்கு நின்றது. இம்மாதிரி நிலையற்ற நிலையில் இருக்கும்பொழுது, மான்கூட்டம் தண்ணீர் குடிக்க வந்து, அவர்களது மௌனத் தழுவலைக் கலைத்தது.

     அச்சமயம் அவ்வழியாகச் சென்ற கள்ளர் கூட்டமொன்று இருவரையும் பார்த்துவிட்டது.

     "இருவரும் ஏழைகளானாலும், அழகாக இருக்கிறார்கள், நல்ல விலைக்கு விற்கலாம்" என்று கழுதையின் பின் கட்டியிழுத்துச் சென்றனர்.

     கட்டப்பட்ட கறுப்பு நிறமுள்ள அரசன், திருடர்களைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினான். ஆனால், குளிரில் நடுங்கும் பால்கிஸ், பார்க்க முடியாத ஏதோ ஒன்றைப் பார்த்தவள் போல், புன்சிரிப்புடன் பின் தொடர்ந்தாள்.

     ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண்டைக் கொடுத்தனர். பால்தஸார் உண்ண மறுத்துவிட்டான். பால்கிஸ் பசியுடன் அதைச் சாப்பிட்டாள்.

     அவள் திடீரென்று சிரித்தாள். கள்ளர் கூட்டத் தலைவன் "ஏன் சிரித்தாய்" என்று கேட்க,

     "உங்களை எல்லாம் தூக்கிலிடுவேன் என்ற நினைப்பு வந்ததும் சிரித்தேன்" என்றாள்.

     "அப்படியா! அடுக்களைப் புழுக்கை போன்ற உன் வாயிலிருந்தா இது வருகிறது. ஆமாம், அந்தக் கறுப்பன் உதவியால் எங்களைத் தூக்கிலிடுவாயாக்கும்" என்றான் கள்வர் தலைவன்.

     பால்தஸார், கோபாவேசனாய், அவன் மீது பாய்ந்து, மூச்சுப் போகும்படி கழுத்தை நெருக்கினான்.

     ஆனால் மற்றவன், கத்தியை உருவி, அவன் உடலில் குத்திவிட்டான். அரசன் மண்ணில் உருண்டான். தரையில் கிடக்கும்பொழுது பால்கிஸைக் கடைசிப் பார்வையாக விழிக்க, கண்களில் ஒளி மழுங்கியது.

     இச்சமயம் ஒரு படையின் அரவம் கேட்டது. தனது மெய்க்காப்பாளனான ஆப்னர், காவலாட்கள் சகிதம் வந்து விட்டான் என்று பால்கிஸ் அறிந்தாள்.

     ஆப்னர் மூன்று தடவை அவள் முன்பு நமஸ்கரித்தான்; பல்லக்கை அவள் பக்கம் வரும்படி உத்தரவிட்டான்; அச்சமயம் காவலாட்கள் திருடர்களைப் பிடித்துக் கட்டினர்.

     அரசி கள்வர் தலைவனை நோக்கி, "உனக்கு நான் வீணாக வாக்குக் கொடுத்ததாக இப்பொழுது குறை கூறமாட்டாய் அல்லவா?" என்றாள்.

     ஆப்னர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த செம்போடிஸும், மென்கராவும், தங்கள் அரசன் குத்துண்டு கிடப்பதைக் கண்டதும், கூக்குரலிட்டு அவனிடம் ஓடினர். வைத்தியத்தில் தேர்ந்த செம்போடிஸ், அரசனுக்கு உணர்விருக்கிறது என்று கண்டு, காயங்களுக்கு கட்டுகள் கட்டினான். மென்கரா அரசனின் வாயில் இருந்த நுரையைத் துடைத்தான். இருவரும் மெதுவாக அவனை அரசியின் மாளிகைக்கு எடுத்துச் சென்றனர்.

     பதினைந்து நாட்கள் வரை பால்தஸார் ஜன்னி கண்டு பிதற்றினான். பாத்திரத்தைப் பற்றியும், பால்கிஸைப் பற்றியும், ஓடையின் பாசி மெத்தையைப் பற்றியும் உளறினான். பதினாறாவது நாள் கண் விழித்ததும் தன் பக்கத்தில் செம்போடிஸும் மென்கராவும் இருப்பதைக் கண்டு, "அவள் எங்கே? அவள் என்ன செய்கிறாள்?" என்று கேட்டான்.

     "அரசே! அவள் கோமக்ன ராஜனுடன் இருக்கிறாள்" என்றான் மென்கரா.

     "வியாபாரத்தைப் பற்றி இருவரும் கலந்து பேசிக் கொள்ளுகிறார்களோ, என்னவோ?" என்றார் குரு செம்போடிஸ்.

     "நீங்கள் எழுந்திருக்கக் கூடாது; எழுந்தால் ஜுரம் அதிகமாகும்" என்றான் அடிமை மென்கரா.

     "நான் அவளைப் பார்க்க வேண்டும்" என்று கூறிக்கொண்டு, அவளுடைய அந்தப்புரத்திற்குள் ஓடினான். அவளது சயன அறையைச் சமீபித்ததும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கோமக்ன அரசன் வருவதைக் கண்ணுற்றான். பால்கிஸ், புன்சிரிப்புடன் கண்களை மூடியபடி, சிவந்த மெத்தையில் சாய்ந்திருந்தாள்.

     "பால்கிஸ், எனது பால்கிஸ்!" என்று கூப்பிட்டான் பால்தஸார்.

     அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கனவை நீடிக்க வைப்பது மாதிரித் தோன்றினாள்.

     பால்தஸார் அவளை நெருங்கிக் கைகளைப் பற்றினான்; அவள் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

     "உனக்கென்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

     "நீயா இப்படிக் கேட்கிறாய்!" என்றான் பால்தஸார். அவன் கண்களில் நீர் ததும்பியது.

     அவள் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

     தன்னைப் பற்றியும், இரவில் ஓடையில் நடந்ததையும் மறந்துவிட்டாள் என்று உணர்ந்தான் பால்தஸார்.

     "அரசே! உண்மையாக நீர் கூறுவது விளங்கவில்லை. பேரீச்ச மது தங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் கனவு கண்டிருக்க வேண்டும்" என்றாள்.

     "என்ன! உனது முத்தங்கள், எனது தேகத்தில் குறியிட்ட கத்தி, இவைகளும் கனவுகளா?" என்றான் அரசன் கையைப் பிசைந்துகொண்டு.

     அவள் எழுந்தாள். ஆபரணங்கள் கலங்கிச் சப்தித்தன.

     "அரசே! சபை கூடும் நேரமாகிவிட்டது. தங்களது நோயுற்ற மூளையின் கனவுகளை ஆராய நேரமில்லை. தூங்குங்கள்; போய் வாருங்கள்."

     பால்தஸார் எங்கோ இழுக்கப்படுகிறதாக நினைத்தான். தனது பலவீனத்தை அக்கொடுமையான பெண்ணின் முன்பு காட்டப் பிரியப்படாமல் தனது அறைக்கு ஓடினான். காயம், மறுபடியும் திறந்துவிட்டது; மயங்கினான்.

*****

     மூன்று வாரங்கள் மரணமடைந்தவன் போல் மயங்கிக் கிடந்தான். இருபத்தோராவது நாள் பிரக்ஞையடைந்த அரசன் தன் பக்கத்திலிருந்த செம்போடிஸின் கைகளைப் பற்றிக்கொண்டு,

     "என்ன சந்தோஷமாக இருக்கிறீர்கள்? ஒருவர் கிழம், மற்றவன் வயதாகிவிடாமலேயே அதன் தன்மையைப் பெற்று விட்டான். அப்படியல்ல! உலகத்தில் இன்பமே கிடையாது. எல்லாம் கொடுமையின் சாயை. காதல் ஒரு தீமை; பால்கிஸ் கெட்டவள்!" என்றான்.

     "ஞானம் இன்பத்தை அளிக்கிறது" என்றான் செம்போடிஸ்.

     "நான் அதைப் பெற முயல்கிறேன். முதலில் நான் எதியோபியாவிற்குச் செல்லவேண்டும்." தான் காதலித்த எல்லாவற்றையும் இழந்ததினால் ஞானமார்க்கத்தில் செல்ல, குருவாக சன்னியாசத்தை ஏற்றான். இந்த மனவுறுதி அவனுக்குள் ஓர் அமைதியைக் கொடுத்தது. ஒவ்வொரு மாலையிலும் தன் அரண்மனை முற்றத்திலிருந்து, தனது நண்பர்களான செம்போடிஸ், மென்கரா - இவர்களுடன், வானத்தின் இரகசியத்தைத் துருவிக்கொண்டும், அல்லது சந்திரனொளியில் - நீல நதியில் - மரத்தினடியில் மிதக்கும் முதலைகளைப் பார்த்துக்கொண்டும் காலம் கழித்தான்.

     "இயற்கையின் அழகிற்கு எல்லை கிடையாது. அதை அநுபவிப்பதிலும் களைப்புத் தோன்றவதில்லை" என்றான் செம்போடிஸ்.

     "சந்தேகமில்லை; ஆனால், இயற்கையில் முதலை, பேரீச்சமரம் - இவற்றை விட அழகான பொருள்களும் இருக்கின்றன" என்றான் பால்தஸார்.

     அப்பொழுது அவன் பால்கிஸைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.

     ஆனால், மிகவும் முதிர்ந்தவனான செம்போடிஸ், "நீல நதியின் உற்பத்தியின் அதிசயத்தை உனக்குச் சொன்னேன். மனிதன் இவற்றை அறிவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான்" என்றான்.

     "மனிதன் காதலிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான்" என்றான் பால்தஸார். "விவரிக்க முடியாதவை உலகில் இருக்கின்றன" என்றான் பால்தஸார் மீண்டும்.

     "அவை என்னவோ?" என்றான் செம்போடிஸ்.

     "ஒரு ஸ்திரீயின் பொய்" என்றான் அரசன்.

     பால்தஸார், குருவாக உத்தேசித்ததினால், வானத்து இரகசியங்களை அறிய ஒரு பெரிய கோபுரம் ஒன்று சமைத்தான். அதைக் கட்டுவதற்கு இரண்டு வருஷங்கள் பிடித்தன. அதிலிருந்து செம்போடிஸுடன் தத்துவ விசாரணை செய்ய முற்பட்டான். இதனால் அவனுக்கு பால்கிஸை மறக்க முடிந்தது.

     இப்படித் தத்துவ விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள், பால்தஸார், குருவைப் பார்த்து, "எனது ஜோஸியத்தைத் திட்டமாகக் கணிப்பாயா? தவறினால் உன் தலையைப் பணயமாக வைக்க வேண்டும்" என்றான்.

     "ஞானம் தவறற்றது; அதைக் கற்றவர்கள் தவறுவது சகஜம்" என்றான் செம்போடிஸ்.

     பால்தஸாருக்கு இயற்கையறிவு உண்டு. "உண்மைதான் தெய்வீகமானது; தெய்வீகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. வீணாக உண்மையைத் தேடியலைகிறோம். இருந்தாலும் நான் ஒரு புதிய நட்சத்திரத்தை வானத்தில் கண்டேன். அது அழகானது, ஜீவனுள்ளது. அது சுடர்விடும்பொழுது தெய்வத்தின் நேத்திரம் போல மெதுவாகக் கண் சிமிட்டுகிறது. பார்! அது நம்மை நோக்குகிறது" என்றான் அரசன்.

     செம்போடிஸ் அதைப் பார்க்கவில்லை; ஏனெனில் அவன் அதைப் பார்க்க விரும்பவில்லை. அறிவும் முதிர்ச்சியும் பெற்ற அவன் புதியவற்றை ஏற்க விரும்பவில்லை.

     இரவின் அகண்டாகாரமான மௌனத்தில், பால்தஸார், "இன்பம்! இன்பம்! எல்லையற்ற இன்பம்! அந்த நட்சத்திரத்தின் சாயையில் பிறக்கிறவன் அதிர்ஷ்டசாலி!" என்று திரும்பத் திரும்பக் கூறினான்.

     எதியோபிய தேசத்தின் சுற்றுப்புறத்தில் அரசன் பால்கிஸைக் காதலிக்கவில்லை என்ற வதந்திகள் பரவின.

     இந்தச் செய்தி ஷெபா தேசத்திற்கு எட்டியதும், பால்கிஸ், தான் ஏமாற்றப்பட்டவள்போல் கனத்த கோபங் கொண்டாள். தனது நாட்டையும் நகரத்தையும் மறந்து கொண்டிருக்கிற கோமக்ன அரசன் முன்பு சென்று, "நண்ப, நான் இப்பொழுது கேட்டது என்னவென்று தெரியுமா? பால்தஸார் என்னைக் காதலிப்பதை விட்டு விட்டானாம்!" என்றாள்.

     "நாம் இருவரும் காதலிக்கும்பொழுது அதைப்பற்றி என்ன இப்பொழுது?" என்றான் கோமக்ன அரசன்.

     "இந்தக் கறுப்பன் என்னை அவமதித்ததாக நீ கருதவில்லையா?"

     "இல்லை! நான் அப்படி நினைக்கவில்லை!" என்றான் கோமக்ன அரசன்.

     உடனே அவனை அவமதித்து வெளியே துரத்திவிட்டு, "எதியோபியாவிற்குப் பிரயாணம்" என்று முதல் மந்திரியிடம் உத்தரவிட்டாள்.

     "இன்றிரவே புறப்பட வேண்டும்; இல்லாவிட்டால் உன் தலை போய்விடும்" என்று மீண்டும் உத்தரவிட்டாள் பால்கிஸ்.

     ஆனால், அவள் தனிமையாக இருக்கும்பொழுது விம்மி விம்மியழுதாள்.

     "ஐயோ, நான் அவரைக் காதலிக்கிறேன்! அவர் என்னை ஒதுக்கி விட்டாரே, அவரைக் காதலிக்கிறேன்!" என்று உள்ளத்திலிருந்த துயரம் வெளிப்பட்டது.

     ஒருநாள் இரவு அந்த அற்புதமான நட்சத்திரத்தைப் பார்த்திருந்த பால்தஸார், தரையை நோக்கும் பொழுது, தூரத்தில் பாலைவனத்தில் மத்தியில் எறும்புச் சாரை போல் ஒன்று நெருங்குவதைக் கண்டான். அது நெருங்க நெருங்க, குதிரை, ஒட்டகம், யானை இவற்றின் கூட்டம் என்று அறிந்தான். கூட்டம் நகரத்தின் எல்லையையடைந்தது. அது ஷெபா அரசியின் பரிவாரங்கள் என்பதையும், ஷெபா அரசி அத்துடன் வருவதையும் கண்டு மனத்தில் பெரும் கலக்கமடைந்தான். அச்சமயம் நட்சத்திரம் அதிக ஒளியுடன் உச்சியில் பிரகாசித்தது. கீழே பல்லக்கில் வரும் பால்கிஸ் அரசி, சர்வாபரண பூஷிதையாக, நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்தாள்.

     பால்தஸார் தன்னை அவள் பக்கமாக ஏதோ ஒரு பெரிய கொடிய சக்தி இழுப்பதாக உணர்ந்தான். இருந்தாலும், தன் முழு பலத்துடனும் தலையைத் திருப்பி, நட்சத்திரத்தைப் பார்த்தான். அச்சமயம் நட்சத்திரம் கூறுகிறது...

     "மோட்சத்தின் அதிபதியின் கடாட்சத்தால் பூமியின் மக்களுக்கு சாந்தியும் நட்பும் உண்டாகுக!

     "மிர் என்ற வாசனைத் திரவியத்தை எடுத்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வா; நான் இப்பொழுது உன்னை இவ்வுலகில் பிறக்கப் போகும் குழந்தையிடம் சேர்ப்பிக்கிறேன். அக்குழந்தை அரசர்க்கரசனாக விளங்கும். துன்பப்பட்டவருக்கு உற்ற துணையாக இருக்கும்!

     "அவன் உன்னை அழைக்கிறான். உனது ஆத்மா, உன் முகத்தைப் போல் கறுப்பாக இருக்கலாம். ஆனால் உனது உள்ளம் குழந்தையின் உள்ளம் போல் களங்கமற்றது.

     "அவன் உன்னிடம். 'வறுமையைக் கடைப்பிடி, அதுதான் உண்மையான செல்வம்' என்று கூறுவான். 'பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான் உண்மையான இன்பம் இருக்கிறது. எனக்கு அன்பு செய், நான் தான் அன்பு' என்றும் கூறுவான்."

     இல்வார்த்தைகளுக்குப் பின் தெய்வீகமான அமைதி ஒளிப் பிரவாகமாக அவன் முகத்தில் பிரதிபலித்தது.

     பால்தஸார் இன்ப வெளியில் அதைக் கேட்டான். புதிய மனிதனாகி விட்டான்.

     அவன் பக்கத்தில் செம்போடிஸும், மென்கராவும் காலில் விழுந்து அடிபணிந்தனர்.

     பால்கிஸ் அரசி அவனைக் கவனித்தாள். அவன் இனி தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டான் என்றும் தெய்வீக அன்பு நிறைந்த இடத்தில் தனக்கு இடமிருக்காது என்றும் உணர்ந்தாள். கோபத் தீ பறக்க, தேசத்திற்குத் திரும்பும்படி பரிவாரத்திற்கு உத்தரவிட்டாள்.

     நட்சத்திரத்தின் குரல் நின்றதும், தோழர்கள் கோபுரத்தை விட்டு இறங்கினர். மிர் என்ற வாசனைத் திரவியம் தயாரித்துக் கொண்டு நட்சத்திரத்தின் பாதையில் சென்றனர்; பல நாடுகளைக் கடந்தனர்; எப்பொழுதும் நட்சத்திரம் முன்னே சென்றது.

     ஒரு நாள் இரண்டு சாலைகள் சந்திக்குமிடத்தில், இரண்டு அரசர்கள் பரிவாரங்களுடன் வருவதைக் கண்டனர்; அதில் ஒருவன் வாலிபன். அவன் பால்தஸாரை வரவேற்று, "எனது பெயர் காஸ்பர்; நான் ஒரு அரசன்; யூதேயா தேசத்தில், பெத்லெகமில் பிறக்கப்போகும் குழந்தைக்குத் தங்கத்தைப் பரிசாகக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

     இரண்டாவது அரசன் கிழவன்; வெள்ளைத் தாடி அவனது மார்பை மறைத்தது.

     "எனது பெயர் மெல்ஷியார். நான் ஒரு அரசன். உலகத்தின் சத்திய வஸ்துவான குழந்தைக்கு வாசனைத் தூபம் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

     "நானும் நீங்கள் சொல்லும் வழியில் தான் செல்லுகிறேன்; நான் காமத்தை வென்றேன். நட்சத்திரம் வழி காட்டுகிறது!" என்றான் பால்தஸார்.

     "நான் பெருமையை வென்றேன்; அதனால் தான் அழைக்கப்பட்டேன்" என்றான் மெல்ஷியார்.

     "நான் கொடுமையை வென்றேன்; அதனால் தான் நான் அழைக்கப்பட்டேன்" என்றான் காஸ்பர்.

     மூவரும் ஒன்றாகச் சென்றனர். நட்சத்திரம், கிழக்குத் திக்கில், குழந்தையிருக்கும் இடம்வரை சென்று, அதற்கு மேல் நிலைத்து நின்றது. நட்சத்திரம் நிற்பதைக் கண்டு அவர்கள் ஆனந்தப்பட்டனர்.

     வீட்டிற்குள் சென்றதும், மேரியையும் கண்டு, குழந்தையையும் கண்டு, குழந்தையை வணங்கினர். விவிலிய நூலில் கூறியபடி, தங்கள் பேழைகளைத் திறந்து தங்கத்தையும், வாசனைத் தூபத்தையும், வாசனைத் தைலத்தையும் கொடுத்தனர்.