தந்தை மகற்காற்றும் உதவி

லூயி கௌப்ரஸ் - ஹாலந்து

     டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்... (நான் நாடகத்தைக் குறிப்பிடுகிறேன்.)

     டோ னா எல்வைரா தன்னுடைய ஒரே புத்திரனான டான் ஜுவானிடோ வுடன் தன்னந் தனியாக விடப்பட்டாள். அவள்தான் உங்களுக்குத் தெரியுமே, பர்கோஸ் என்ற இடத்தில் வசித்து வந்தாள். கண்டபடி அலையும் புருஷனோடு ரொம்பக் கஷ்டப்பட்டாள். அந்த அம்மாள் ஜெஸூட் பாதிரிகளிடம் தன் புத்திரனை வளர்க்க விட்டாள். தகப்பனாரைப் போல் கெட்டலையாமல் ஒழுங்காக நடக்கப் பழகிக் கொள்வான் என்பது அந்த அம்மாளுடைய நம்பிக்கை. ஜெஸூட் பாதிரிகளைப் பற்றி நான் ஏதோ விரும்பத்தகாத விஷயங்களைப் பற்றிப் பேசுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது; டான் ஜுவானிடோ வையும் பற்றித்தான். ஏன், யாரைப் பற்றியுமே ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் ஜெஸூட் பாதிரிகளின் சாமியார் பள்ளிக்கூட முத்திரை டான் ஜுவானிடோ வின் முகத்தில் அப்படியே பதிந்தது. அவன், மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு எப்போதும் ஒருவருடனும் பேசாமல், ஏதோ மற்றவர்களுக்காக இரக்கப்பட்டுச் சிரிக்கிற மாதிரி நடந்து கொள்வான். வாலிபக் களை அப்படியிருந்தது அவனுக்கு.

     தகப்பனார் குஷி ஆசாமி. பெண்களைக் கற்பழிப்பதும் பாவம் செய்வதும் ரொம்ப ராஜாங்கமாக நடத்தினவன். அவன் மகன் உள்ளொன்று புறம் ஒன்றாகப் பகட்டு வேஷம் போடும் ஆசாமி ஆகிவிடுவான் போலிருந்தது. முகம் களையுள்ளதுதான்! கறுத்த மயிர்; ஆனால் படிந்து கிடந்தது. டான் ஜுவானுக்கு அது சிங்கத்தின் பிடரி மாதிரி அப்படியே உலுப்பிக்கொண்டு நிற்கும். அதைத் தடவி விடுவதற்காக அந்தக் காலத்திலே தவம் கிடப்பார்கள் பெண்கள். டான் ஜுவானிடோ வஞ்சகனாகிவிடவில்லை. நிஜமாகவே பக்திமானாகி விட்டான். நரகத்தில் வேதனைப்படும் தன் தகப்பனாரின் ஆத்மா விடுதலையடையும்படி இடைவிடாமல் பிரார்த்தனை பண்ண ஆரம்பித்துவிட்டான். டோ னா எல்வைரா எப்பொழுதுமே கொஞ்சம் அசமந்தம். புருஷன் மனசில், ஒரு பாறாங்கல்லாகவேயிருந்தாள். அவளும் கடைசியில் செத்துப் போனாள். டான் ஜுவானிடோ , நரகத்தில் கிடக்கும் தன் தகப்பனாரின் குற்றங்களுக்காக, தன் ஆயுள் முழுவதும் தவம் கிடப்பான் போலத் தோன்றியது. அந்தச் சமயத்தில் டோ னா எல்வைராவின் ஆத்மா மோக்ஷத்தை நோக்கிப் பறந்து சென்றது. அங்கிருப்பவர்கள் கூட இவளைக் கொஞ்சம் அசமந்தம் என்றுதான் எண்ணினார்கள். தாய்க்காக வருந்துவது, தகப்பனாருக்காகப் பிரார்த்தனை பண்ணுவது, பர்கோஸ் தெருக்களை அளந்து பார்ப்பது மாதிரி அடியெடுத்து வைப்பது, இப்படியாக டான் ஜுவானிடோ தன் வாழ்க்கைப் பாதையில் நடந்தான். அப்புறம் வாலிபம் மாறாதிருக்கும் சமயத்திலேயே சேனாதிபதியின் மருமகளைக் கலியாணம் செய்து கொண்டான். சேனாதிபதி யார் தெரியுமா? டோ னா அன்னாவின் தந்தை. அந்தப் பெண்ணும் டான் ஜுவானால் ஏறக்குறையக் கற்பழிக்கப்பட்டவள். சிநேகிதர்களும் சொந்தக்காரர்களுமே இந்த இரண்டு குடும்பங்களுக்குமுள்ள சண்டையைத் தீர்த்து வைக்க இந்தக் கலியாணத்தை முடித்து வைத்தார்கள். கலியாணமும் பர்கோஸில் நடைபெற்றது.

     அவளுக்குப் பெயர் டோ னா ஸோல். நல்ல யுவதி. கற்பனை கொஞ்சம் ஜாஸ்தி. பெயருக்கேற்ற பெண் என்று சொல்வார்கள். கண்கள் இரண்டும் கறுப்புச் சூரியன் மாதிரிப் பிரகாசித்தனவாம். அவளுடைய பொன்னிறமான தலைமயிர் சூரிய ஒளியில் தகதகவென்று பிரகாசித்தது. அவளுடைய ஆத்மாவில் நிறைந்த சூரிய ஒளி, வாலிப நரம்புகளில் பாய்ந்து துடிதுடித்து ஓடியதாம். டான் ஜுவானால் ஏமாற்றப்படவில்லையாயினும் அவனைப்பற்றி ரொம்பக் கேள்விப்பட்டிருக்கிறாள். நல்லது, புருஷனுடைய தகப்பனார் மேல் அந்தரங்கமான பாசம் கூட உண்டு. அதனால் தான் டான் ஜுவானிடோ வைத்தான் கலியாணம் செய்துகொள்ள வேண்டும் என்று வறுபுறுத்தப்பட்ட போது ஆட்சேபியாமல் பேசாமல் விட்டாள். ஸெவயில் பிரதேசத்தில் கணவனோடு வசித்தாள்.

     அந்தக் காலத்தில் டான் ஜுவான் விருந்து நடத்தின அதே மண்டபத்தில் எதிரும் புதிருமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஜுவானிடோ சாப்பிட ஆரம்பிக்குமுன் கண்ணை மூடிக்கொண்டு பக்தி சிரத்தையாகப் பிரார்த்தனை பூஜை செய்வான். டோ னா ஸோல், தலையைக் குனிந்துகொண்டு இருபது வருடங்களுக்கு முன் டான் ஜுவானை விழுங்க வெடித்தத் தரையை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் பேசுவதில்லை. சாப்பாடானதும், அந்த வாலிபத் தம்பதிகள் படுக்கையறைக்குப் போவார்கள். டான் ஜுவானிடோ , கறுப்பு வெல்வெட்டும் கறுப்பு மெத்தையுமாக, தன்னுடைய இருண்ட மனதிற்கேற்றபடி அலங்காரம் செய்திருந்த படுக்கையறையை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கனவு கண்ட குதூகல ராத்திரிக்கும் இதற்கும் எவ்வளவோ தூரம். பெரிய கப்பல் மேல்தட்டு மாதிரி இருக்கும் படுக்கையில் படுத்திருக்கும்போது லேசாகத் தலையைச் சரிந்து நன்றாக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் ஜுவானிடோ வின் முதுகுப்புறத்தைப் பார்ப்பாள். தாம்பத்ய வாழ்க்கையின் மர்மங்களைப்பற்றிக் குறைந்த பக்ஷம் ஒருமணி நேரமாவது ஆழ்ந்து யோசித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் தூங்கிவிடுவாள். அறையே இருட்டு; அதில் மெத்தையும் இருட்டு; டான் ஜுவானிடோ வின் முதுகுப்புறமோ இருட்டுப் பிழம்பு. தூரத்து மாடத்தில் சிலுவை மாதாவின் இரண்டு விக்ரகங்களின் முன்புள்ள மினுக்மினுக்கென்ற கைவிளக்கு இன்னம் அதிகச் சாயமேற்றியது. பகற்பொழுதிலும் அவள் அடிக்கடி தலையை அசைத்து ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டுக் கொண்டாள். மனத்தில் கவலை அதிகமாயிற்று. புருஷன் பக்திமான், ஒழுக்கத்தில் சிறந்தவன் என்பதைப் பூரணமாகத் தெரிந்துக்கொண்டாள். தகப்பனாருக்காகப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கும் இவன் முறை பிசகாதவன் என்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை. தன்னை ஏமாற்றாது இருந்தாலும் என்ன? தம்பத்ய முதுகுதான் வெல்வெட் இருட்டில் அவள் கண்டது. அவளுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் குழம்பின. முழந்தாள் பணியிட்டு - மாதாவுக்கன்று - தான் அந்தரங்கத்தில் கௌரவித்த டான் ஜுவானை நோக்கிப் பிரார்த்தனை செய்தாள்.

     அழகும் கவலையும் குடிகொண்ட அந்தச் சிறிய மனைவி தான் செய்வது பாவமென்று தெரிந்துகொள்ளவில்லை. டான் ஜுவானுக்கு அவள் பிரார்த்தனை காதில் கேட்டது. அதாவது அவன் ஆத்மாவுக்கு. டான் ஜுவானுடைய ஆத்மா நரகலோக சிகிச்சையில் சுத்தம் செய்யப்பட்டு, மோக்ஷ ராஜ்யத்தின் பரிபூரண கிருபையால் புண்ணிய மெருகு ஏற்றப்படுவதற்காக, இடைலோக மண்டலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. கந்தகத் தீ நாக்குகள் அவனை இன்னும் பூரணமாக புண்ணியவானாக்கிவிடவில்லை. மருமகளின் பிரார்த்தனை காதில் கேட்டதால் இடைலோக மண்டல அதிகாரியிடையே கலந்து ஆலோசனை செய்து, அவளுக்கு உதவி செய்வது என்று தீர்மானித்தான்.

     டான் ஜுவான் கொஞ்சம் மிதமிஞ்சியே மோசமாக இருந்திருக்கலாம், அதைப்போல டான் ஜுவானிடோ சிறிது நல்லவனாக இருந்தான். இந்த நல்லது கெட்டது என்ற பிரச்னையே விசித்திரமானதுதான். இந்தப் பூலோகத்திலுள்ளவர்களுக்கு அதைப்பற்றித் தெளிவாகத் தெரியாது. பூலோகம், நரகலோகம், மோக்ஷலோகம் எல்லாவற்றிலும் அப்படித்தான். அது எப்படியிருந்தாலும், கெட்டவனான டான் ஜுவான் நல்லவனான தன் மகன் டான் ஜுவானிடோ வைக் கொஞ்சம் ஆசைகாட்ட இடைலோக அதிகாரவர்க்கத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டான்.

     ஒருநாள் மாலை டான் ஜுவானிடோ ஸெவயில் நகரத்தின் இருண்ட தெருக்கள் வழியாக - அந்தக் காலத்திலெல்லாம் ஜல்தியாகவே இருட்டிவிடும் - கைதேர்ந்த சிற்பி குற்றமற்றபடி வகுத்து வைத்தது போன்ற டோ னாஸோலின் சிறிய முதுகுப் பக்கத்தில் தன் புனிதமான முதுகைக் கிடத்தி வைக்கும் எண்ணத்துடன், நடந்துகொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் திடீரென்று தரை வெடித்துக்கொண்டு - அந்தக் காலத்திலெல்லாம் ஆத்மாக்களெல்லாம் பூமியைப் பொத்துக் கொண்டுதான் வந்தன - தகப்பனாருடைய ஆத்மா செக்கச் செவேலென்று தோன்றியது. மகன் ரொம்பப் பயந்து போனான். கிரேக்கத் தீயில் மூடிநின்ற பெரியவர், கொஞ்சம் வெந்து போனது மாதிரி காணப்பட்டாலும், பழைய குஷி நடை போகவில்லை. புனிதமான பேதுருவின் வரவை எதிர்பார்த்து, தன்னுடைய பாவத்தையெல்லாம் தேய்த்துத் தேய்த்துக் கழுவிவிட்டான். இருந்தாலும் பையன் தகப்பனாரைக் கண்டு பயந்துபோனான். ஆனால் டான் ஜுவான் மகனுடைய பயத்தைத் தெளிவித்தான். முதலில் தேஜோமயமாகத் தோன்றிய பின்பு மகன் பக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் உரு மறைந்து நடந்து வந்தான். தகப்பனாரின் சூட்சுமக்கை மகனுடைய தோள்களைத் தழுவியது. காதில் ரகசியமாகச் சொன்னான். "நீர்தான் என் தகப்பனாரா?" என்றான் ஜுவானிடோ , பயந்து அரைக்கண் போட்டுக்கொண்டு.

     "நான்தானப்பா உன் தகப்பனார். உனக்கு அடையாளம் தெரியாது. கடைசியாக உன்னைப் பார்க்க உன் முன் தோன்றிவிட்டேன். என்னைக் கண்டு பயப்படாதே; நிஜமாக, உண்மையாக, நான் புண்ணியவானாகிக்கொண்டு வருகிறேன். போன வெள்ளிக்கிழமை சாபத் இரவில் உன்னைப் போல் 'பிரம்மச்சாரி' யாகவே இருந்தேன் - வேறு வழி இல்லை என்பதற்காக அன்று. அங்கே மேலே இருக்கிறவர்கள் எல்லோரும் என்மேல் ரொம்பத் திருப்திப்பட்டு வருகிறார்கள். உன் தாயார், - அந்த அசமந்தமான ஆத்மாவைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும். அவள் எனக்கேற்ற ஸ்திரீயல்லள். என் மருமகளைப்போல் எனக்கு ஒரு மனைவி கிடைத்திருந்தால்..."

     இப்படியாக டான் ஜுவான் மகனுடைய காதில் உபதேசம் செய்து கொண்டே போனான். தெருவில் வருகிறவர் போகிறவர்களுக்கு உயிரோடு நடக்கும் மகனோடு தகப்பனாரின் ஆத்மா கூடச் செல்லுகிறது என்பது தெரியாது. எல்லோரும் குறை சொல்லும் தன் தகப்பனார் அப்படி ரொம்பக் கெட்டவரில்லை என்பதை டான் ஜுவானிடோ படிப்படியாகத் தெரிந்து கொண்டான்.

     "நான் ஜெஸூட் பாதிரிகள் பள்ளிக்கூடத்திற்குப் போனது கிடையாது. இருந்தாலும் அவர்கள் சரியாகத்தான் படித்துக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன சொல்லட்டும்? சிறு வயதிலேயே என்னை அடக்க ஒருவரும் கிடையாது. சிறு வயதிலேயே என்னை முதலில் கெடுத்தவள் என் ஆயா. என் பெற்றோர் என்னைப் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக இருட்டறையில் அடைத்துப் போட்டனர்; அதுதான் சாப்பாட்டு மண்டபத்திலிருக்கிறதே அதுதான் அந்த அறை. அதன் வழியாகத்தான் நரகத்திற்குப் போனேன். மோஸார்ட் நாடகத்தில் இதை ரொம்ப நன்றாகக் காண்பிப்பார்கள். அதாவது, மோஸார்ட் இனிமேல் என்னைப் பற்றி நாடகம் எழுதப் போகிறானே அதில். மேலும் என்னைப் பற்றி இன்னொருவன் கூட ஒரு பெரிய காவியம் எழுதுவான். அவன் பெயர் பைரன். அவனுடைய காவியம் காதலின் நெருப்பையும் கக்கும். அப்பா, மகனே! உன்னைப் பற்றிக் காவியம் தான் யார் எழுதப் போகிறார்கள்...!" என்றது டான் ஜுவான் ஆத்மா.

     "ஓ, அன்பான தந்தையே! நான் உம்மைவிட ரொம்ப யோக்யமானவனாக இருக்கவில்லையா?" என்று கேட்டான் ஜுவானிடோ .

     "அப்பா மகனே, யோக்யமென்றால் என்ன, அயோக்கியத்தனமென்றால் என்ன?" என்று கேட்டது டான் ஜுவானின் அந்தப் பிசாசு.

     அப்புறம் வெகு நேரம் அந்த மௌனமான ஸெவயில் பாதையில் மகனுக்கு நீண்ட உபதேசம் செய்துகொண்டு சென்றது. டான் ஜுவானிடோ கவனமாகக் கேட்டான். சில சமயத்தில் ஆமோதிப்பது போல், தலையையும் அசைத்துக் கொண்டான்.

     ஒரு நர்ஸ் சமாசாரம் கேட்ட பிறகு, "இரண்டாவது நபர் யார்?" என்று பையன் கேட்டான், தகப்பனாரைப் பார்த்து. டான் ஜுவான் தன்னுடைய மகனுக்குத் தன் பழைய காதல் கதைகளையெல்லாம் சொன்னான். கடைசியாக மகன் ஜுவானிடோ , அந்தத் தத்தாரியான தந்தைப் பிசாசின் கதைகளையெல்லாம் புத்திசாலித்தன முள்ளவன் எப்படி வெறுக்க வேண்டுமோ அப்படி வெறுத்தான். ஏனென்றால் அவன் மனத்தில் என்னென்னமோ தோன்ற ஆரம்பித்துவிட்டது.

     "இப்படி யாராவது தந்தை மகற்காற்றும் உதவியை வீணாக்குவார்களா? அது உடம்பிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்து வராது. உன்னைப் போல் காவிய - ஆத்மா படைத்தவர்களுக்குத்தான் அது சரி. பின்னால் கவிராயர்களுக்குப் பாடுவதற்கு வேறு என்ன இருக்கிறது? இருந்தாலும் நான் ஒப்புக்கொள்வது என்னவென்றால்..."

     டான் ஜுவானிடோ என்ன ஒப்புக்கொண்டான் என்பதை இப்போது நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆனால் கலியாணத்தைப் பற்றி, அதைத் தெய்வீகத் தர்மசாஸ்திர சமூக ஸ்தாபன அம்சங்களாக ஆராய்ந்து தகப்பனார் சொன்ன அபிப்பிராயங்கள் அவனை யோசிக்க வைத்தன.

     "அருமை மகனே, என் சொத்தெல்லாம் அழிந்து போனதை நீ மறந்துவிடக்கூடாது. கடைசியாக நான் நடத்தின விருந்துக்கு 50,000 டுக்கட் (புராதன காலத்து நாணயம்) செலவாயிற்று. அதுதான் ஒரேயடியாக ஏறக்குறைய..."

     "ஆமாம், என் தாயாரைத் தம்படியில்லாமல் விட்டுச் சென்றீரே!" என்றான் பையன்.

     "உன் மனைவி பணக்காரியல்லவா?" என்று திடீரென்று கேட்டான் டான் ஜுவான்.

     "எங்களுக்கு ஒரு கஷ்டமுமில்லை" என்றான் டான் ஜுவானிடோ .

     "அவள் விவாகரத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்பது உனக்குத் தெரியுமா? மனது வைத்தால் செய்து விடுவாள்."

     டான் ஜுவானிடோ திடுக்கிட்டான். "அப்பா, என்ன சொல்லுகிறீர்? நிஜமா? நல்ல காலம் எனக்கு எச்சரிக்கை கொடுத்தீர். உமது உணர்ச்சி என்னையும் பணிய வைத்துவிட்டதே!" என்றான் மகன்.

     "அப்படியா? நிஜமா?" என்று கேட்டான் தகப்பன்.

     "நான் அப்படித்தான் நினைக்கிறேன். திட்டமாக அப்படித்தான்!" என்றான் பையன்.

     "அப்படியானால் நேரே வீட்டிற்குப் போ. உன் மனைவி காத்திருக்கிறாள்" என்று, அடைத்த வாசல் கதவு வழியாக, தனது அதீத சக்தியால் மகனை உள்ளே தள்ளினான் டான் ஜுவான்.

     டான் ஜுவான் வெளியில் நின்று யோசனையில் ஆழ்ந்தான். "அவன் நல்ல யோக்யமான கணவனாக இருப்பான். குற்றமற்ற கணவன். அவனுடைய தாயார் குணம் கொஞ்சம் இருக்கிறது. தகப்பனார் குணமும் இல்லாமலில்லை..."

     ஒளிப் பிழம்பாகத் தெரு வெடிக்கவும், பூமியுள் மறைந்தான் டான் ஜுவான்.

*****

     அன்றிரவு சூரியன் - குஞ்சு போன்ற டோ னா ஸோல் கணவன் முகத்தோடு முகம் வைத்துப் படுத்துக்கொண்டிருந்தாள்.

     மறுநாள் இருட்டு வெல்வெட்டும் கறுப்பு மெத்தையும் எடுத்து எறியப்பட்டு புது மோஸ்தரில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது அந்த அறையில்.