உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 12 கார்த்திகை முடிந்து மார்கழி பிறந்ததுமே வாடைக் காற்றின் தணுப்பு அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கடல் தொழிலாளரைக் குறுக்கி நடுக்க வாட்டுகிறது. புயலில் கீற்றுப்போன தாழ்வரைகளைப் புதிய கீற்றுக்கள் போட்டுக் கட்டவில்லை. புறக்கடைக் கதவைச் சற்றுத் திறந்தாலும் அப்பன் கோபிக்கிறார். “யாருட்டீ கதவைத் தெறந்து போடுதீங்க? வாடைக்கொந்தல் தாங்க இல்ல...” என்று இரு கைகளையும் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறார். அந்தப் போர்வைக்குள் சார்லசும் முடங்கி இருக்கிறான். மேரி, செயமணி, பீற்றர் எல்லாரும் கட்டிப் பிணைந்து கொண்டு கவடில்லாமல் உறங்குகின்றனர். ஆத்தா கோழிமுட்டைச் சிம்னியைப் பெரிதாக்கிக் கொண்டு குசினிக்குச் செல்கிறாள். மரியானும் குறுகிக்கொண்டுதான் கிடக்கிறான். பழக்கத்தில் விழிப்பு வந்து விடுகிறதேயொழிய, ‘இந்தக் காலையில் படுத்திருக்கும் சுகம் துறந்து ஏன் தான் தொழிலுக்குப் போக வேண்டுமோ’ என்ற அலுப்பு மேலிடுகிறது. ஆனால்... படுத்து முடங்கிவிட்டால் தொழில் முடங்கும். தொழிலில்லை என்றால் ஏது வாழ்க்கை? காற்றின் ஓலமும் கடலின் இரைச்சலும் அவர்களுடைய வாழ்க்கையின் ஜீவாதார நிலைகள். கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக அப்பனும் மடிக்காரராகத் தொழிலுக்குப் போகிறார். ஒரு கணக்காக இன்னாருடைய மரத்துக்கென்று போவதில்லை என்றாலும் தேர்ந்த அநுபவம் வாய்ந்த தொழில்காரராகையால், எவரும் அவரைக் கூப்பிடுகிறார்கள். ரொசாரியோவுடனோ, ஐசக்குடனோ, அல்லது பெஞ்ஜமின் மரத்திலோ கூலி கிடைத்துவிடுகிறது. குடிக்கக் காசு வைத்துக் கொண்டு மீதி என்ன இருந்தாலும் அதைச் செயமணியிடம் கொடுத்து விடுகிறார். அவளிடம் போனாலும் மேரியிடம் போனாலும் காசு கரைந்து விடாது. மேரிக்கானாலும் கூடங்குளம், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி என்று யாரேனும் போனால், ‘நாடா, ஸ்லைடு, மணிமாலை’ என்று அழகுப் பொருள்கள் வாங்கிவரச் சொல்லும் ஆசை உண்டு. செயமணிக்கு அந்தச் சபலமும் கிடையாது. அவள் பிலப்பெட்டி முடைந்து காசு சேர்ப்பதுதான் வாழ்வென்றே நினைத்தாற்போல் அதிலேயே நாள் முழுவதும் ஈடுபடுகிறாள். அன்றாடம் ஐந்து ரூபாயேனும் தேறும். நசரேன் நடுக்கடலில் பேசியிருக்கிறான். எனவே, பணத்தைச் சேர்த்துக் கொண்டு விடவேண்டும். வாடைக் காலத்தில் அவ்வளவுக்கு மீன் படும் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப்பின் மாசி, பங்குனி ‘தங்காலம்’, நீரோட்டம் அடங்கிக் கிடக்கும். சிறு மீன்களை விட பெரிய மீன்களைத்தான் பிடிக்கப் போக வேண்டும். தூண்டில்... அல்லது திருக்கை வலை ‘பிரய்ந்தால்’ தொழிலுக்கு முடக்கமிருக்காது... திருக்கை வலைக்குத்தான் பணம். திருக்கை நிறைய விழக்கூடும்; அல்லது சுறாவும் விழலாம். துவி... நல்ல விலை. கல்யாணத்தைப் பற்றிப் பிறகு சிந்திக்கலாம். திருக்கை வலையைப் பற்றிக் கோட்டை கட்டிக் கொண்டு அவன் எழுந்து சில்லென்ற நீரில் முகம் கழுவிக் கொள்கிறான். குசினியில் ஆத்தா ஒரு முட்டை அவித்து வைத்திருக்கிறாள்? கோப்பி இறுத்துவிடும் போது அவன் அங்கே போகிறான். “மக்கா...” முட்டைத் தோட்டை உரித்தவாறு அவள் ஆந்தரிகமாக அவனை அழைக்கிறாள். அவனிடம் ஏதேனும் ‘சங்கதி’ சொல்ல வேண்டுமென்றால் தொழிலுக்குச் செல்லு முன்பான இந்த நேரத்தைத்தான் அவள் தேர்ந்து கொள்வது வழக்கம். “என்னம்ப்பு?” ஆத்தா நிமிராமலே பேசுகிறாள். “நேத்து கூத்தங் குளியிலேந்து சந்தியாகு கொழுந்தியா வந்திருந்தா. அவ அக்கா மவ மேபல் பொண்ணை ஒன்னக்கக் கெட்டலாமிண்டு கேக்க வந்திருந்தா...” அவனிடமிருந்து எதிரொலி பிரிகிறதா என்று பார்க்க நிறுத்துகிறாள். எதிரொலி வரவில்லை. “பொண்ணு நீ கூடப் பாத்திருக்கே கோயில் திருநாளுக்கு வந்திருந்தா. கறுப்பில்ல. செவப்பாவே கட்டுமத்தியா இருக்கா. வேலை எல்லாம் செய்யிவா, ஆறு படிச்சிருக்கா. பத்துபவன் நகை போட்டு, சீதனமா ஆயிரமும் தரேங்கா. நமக்குத் தக்கனயான எடம். அப்பனெண்ணவோ அமலோர்ப்பவத்தும் மக ரூபி ரூபிண்ணு சொல்றாரு. அவ இங்கே சம்பந்தக்காரியாவாளா?...” அவன் முட்டையைத் தின்றுவிட்டுக் கோபித் தண்ணீரைப் பருகிக் கொண்டு இருக்கிறான். “மக்கா, நீ நெல்லபடியா நல்ல பொண்ணைக் கட்டி மேம்மையா இருக்கணும். வூடு நெரச்சிப் புள்ளிங்க பெறணும்... நீ அந்த ஏலிச் சிறுக்கியிட்டப் போறத நிறுத்தலியேண்டு மனசுக்கு நெம்பச் சடவாயிருக்கு. அவ கெட்டு ஊறின பண்டம். நாம நெல்லது நினைச்சாக் கூட, மாதாவே அந்தப் பிள்ளைகூடத் தக்காம எடுத்திட்டா. மக்கா, ஆத்தா மனம் அப்பெ மனம் நோவ நடக்கக்கூடாது...” மரியானால் அந்தச் சொற்கள் எதையும் ஏற்க இயலவில்லை. கடலின் மேலமர்ந்திருக்கையில் இரைச்சலின் மேல் தவழ்ந்து வரும் சொற்களாக நிலைக்காமல் போகின்றன. ஏலியின் மீது என்ன குற்றம்? ஒரு பெண் ஒரு ஆணுக்கு இன்றியமையாதவளாக இருக்கிறாள். அவன் அவளுடன் சுகித்திருக்கும்படி ஒரு நேரம் வந்து விட்டது. அவள் அவனை நேசிக்கிறாள். அவள் அவனைத் தொட்ட பிறகு வேறு யாருக்கும் கதவு திறப்பதில்லை. ஸ்டெல்லா மாமி, திடீரென்று கைகால் வீங்கி மரணமடைந்த பிறகு, பிச்சைமுத்துப்பாட்டா இவளுடைய குடில் வாயிலில் தான் கிடக்கிறார். குடிலுக்குப் பன ஓலை போட்டு மண்பூசிக் கட்டி விட்டாள். அவனுக்கு அவள் மீண்டும் மக்களைப் பெற்றுத் தரமாட்டாளா? அவன் தொழிலுக்குச் சென்று திரும்புகையில் நேசமுகம் காட்டிக் குளிக்கச் சுடுநீர் வைத்து ஊற்ற மாட்டாளா? ‘ஒங்கக்க ஆத்தா புள்ளக்குக் கும்பாதிரி ஆத்தாளா இருக்கணமிண்டு ஆச’ என்று அவள் மொழிந்ததை அவன் ஆத்தாளிடம் கூறவே அஞ்சினான். ஆனால் யாரோ ஒரு தெரியாத மேபல் பொண்ணு... அவள் எப்படி இருப்பாளோ? ஒரு பெண் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள் - அல்லது பாதுகாப்பில் இருக்கிறாள் என்பதனால் மட்டும் ஆண்களைத் தூண்டில் இரை போல் ஆசை கொள்ளச் செய்யும் ஒரு ‘வீச்சத்தை’ மனசிலோ, உடம்பிலோ வைத்துக் கொள்ளாதவள் என்று சொல்ல முடியுமோ? அத்தகையதொரு தன்மை ரோசிதாவிடம் உண்டு. வேறு பல பெண்களிடம் அது இருக்கிறது. ஆனால் ஏலி... அவளுக்கு அது இல்லை. அவள் வேறு ஆண்களுக்குத் தன்னை உடன்படும்படி செய்திருந்தாலும் அது அவளுடைய ஆதரவின்மையான நிலையால் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள்தாம். காவலில்லாத தோட்டத்தில் கள்ளன் புகுந்து கனியைப் பறித்தால் அது மரத்தின் குற்றமாமோ? அவனும் கூட அன்று சினிமா பார்த்துவிட்டுத் தனிமையில் அவளுடன் வந்திருக்கவில்லையெனில் அவள் வீட்டுக்குள் சென்றிருக்கமாட்டானாக இருக்கும். கிணற்றடியிலும், மீன் வாடியிலும் தென்படும் எத்தனையோ குமரிப் பெண்களில் வேறு எவளேனும் ஒருத்தியுடன் அத்தகைய சந்தர்ப்பம் நேரிட்டிருக்கலாம். ஏலி மட்டும் எப்படிக் குற்றமுள்ளவள்? அவளை ஏன் அவன் தனக்குரியவளாக மணம் செய்து கொள்ளக் கூடாது? “ஏலி நல்ல பொண்ணுதா ஆத்தா. எனக்கு ஏலியாட்டு இப்ப வேற ஆரும் நல்ல பொண்ணிண்டு தோணல...” வானில் குமுறிய மேகம் தலையில் வந்து விழுந்தாற் போன்று ஆத்தா அதிர்ச்சியடைகிறாள். ‘சிறுக்கி அம்மாட்டுக்கு மோகம் குடுக்க என்னக்க பயல என்ன செய்திருப்பா? மாதாவே?’ என்று மனசோடு குலுங்கிப் போகிறாள். “மக்கா, நமக்கு அது கொறவு. வேணாம். அந்தச் சிறுக்கிய மறந்து போயிறு. நம்ம வீட்டில மூணு பொட்டப் புள்ளய வச்சிட்டிருக்கம். சம்பந்ததாரியா நல்ல குடும்பத்துக்காரவ வராண்டாமாலே?” மரியான் அமைதியாக வாயைத் துண்டினால் துடைத்துக் கொள்கிறான். “நசரேன் கடல் மேல நிண்ணு வாக்குக் கொடுத்திருக்கான். லில்லிப் பொண்ணை அவன் கட்டிப்பான்...” “நாம் போன அண்ணிக்கு யேசம்மா மொவம் கொடுத்தே பேச இல்ல, நீ வேசப் பொண்ணைத் தொடுப்பு வச்சிட்டிருக்யேணுதா அவ பேச இல்ல...” ஆத்தா குமுறி வெடிக்கிறாள். அவன் செவிகளிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கோட்மாலில் கட்டிய வலைகளையும், மிதப்புக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு புறக்கடை வாயில் வழி இறங்கிச் செல்கிறான். வாடைக்காற்று சில்லென்று முகத்திலடிக்கிறது. ஆத்தா பிரமைபிடித்து நிற்கிறாள். இது ஒரு சாபக்கேடா?... குடிப்பழக்கமில்லை என்று உள்ளூறப் பெருமிதம் கொண்டிருந்தாளே? குடிகேடி, எங்கிருந்து சைத்தானாக வந்து சேர்ந்தாள்! தன் மகனுக்கு எவ்வாறு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடக்குமென்று கனவு கண்டிருந்தாள்! அப்பனோ, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்! இந்தப் பயல் இவ்வாறு ஒரு உறுதியில் நிற்கிறானென்றால் இடிந்து விடுவாரே! வாலிபத்தின் இரத்தச் சூட்டில் ஆண்களும் பெண்களும் இவ்வாறு கூடிப்போவது நடப்பதுதான். ஆனால், கல்யாணம் என்ற பந்தத்துக்கு ஒப்பாக அது ஆகுமா?... இப்படி இது வலுவடையும் என்று அவளுக்கு அந்நாள் தெரிந்திருந்தால் அவளுக்குப் பேறு காலமென்று அந்தப் பிண்டத்தை இழுத்துப் போடப் போயிருக்கமாட்டாளே? அவள் மகன் எங்கோ ஒரு பெண்ணுடன் சுகிக்கப் போகிறான் என்று அலட்சியமாக மட்டும் இருந்து விட்டாளே? குழந்தை வெளிவராமல் மரித்திருக்கும். அவளும் ஜன்னி கண்டு... மரித்திருப்பாள்... ஏசுவே! அவளுடைய பாட்டனார் மூன்று பெண்களைக் கட்டினார். அவளுடைய தாயைத் தவிர மற்ற இருவரும் வயிற்றுப் பிள்ளை கீழே விழாமலே மரித்தார்களாம். வயிற்றிலே பிள்ளை மரித்து இழுப்பு வருவதும், பின்னால் பிழைக்காமல் தாயே போவதும் நடக்கக் கூடியதுதான். அவள் மரித்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை எல்லாம் அன்னையுள்ளம் எண்ணமிடுகிறது. நசரேனின் ஆத்தாளிடம் கிறிஸ்துமஸ் பண்டியலுக்குப் பிறகு மீண்டும் போய்க் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டும்; அதற்குள் பண்டியலுக்கு அந்தப் பெண்ணும் வருவாள்... என்றெல்லாம் நினைத்திருந்தாளே? இப்போது... அவளை, அந்தச் சிறுக்கியைத் தன் மகனின் நல்வாழ்வுப் பாதையிலிருந்து எப்படி அகற்றுவது? பொழுது வெளுத்துவிட்டது. கோழிகள் ஒவ்வொன்றாக முறை வைக்கின்றன. அப்பன் எழுந்து உட்காருகிறார். “மக்கா...? மரியான் போய்விட்டானா? ஒரு கொரல் என்னியும் எளுப்பியிருக்கக் கூடாது?...” போர்வைக்கடியில் சார்லசைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கிறார் மெள்ள. “நீரு ஒறங்கிட்டிருந்தீரு; பய பயண்ணிரிம். அவெ பெரிய கல்லாத் தூக்கித்தலமாட்டில போட்டிட்டா... பாவிப்பய, வேசக்கழுதயப் புடிச்சிற்றுப் போவேண்றா, ஒம்ம புத்திதா ஒம் பயலுக்குமிருக்கி... எலே, வேணாம். மேபல் பொண்ணு அழவாயிருக்கா, பத்து பவுனும் போட்டு சீதனம் ஆயிரமும் குடுக்கோங்கா, தூமை குடிச்சான், வாணாமிண்ணு போறான், அவளக் கொல்லணும் போல நெஞ்சு ஆத்திரமாயிருக்கி. எம் பொன்னான பயல, கெடுத்து வச்சிருக்கா, மூதி...!” அவளுடைய ஆற்றாமை அடங்கவேயில்லை. “மாமி, எதுக்காவ விடியலிலேயே மாமாவைக் காச்சுறீம்!” ஐசக்கு பாய்த்தண்டு தோளில் தங்க, மணற்கரையில் நின்று மாமாவுக்குக் குரல் கொடுக்க வந்திருக்கிறான். “மாமாவை ஒண்ணும் பேச இல்ல. அந்த மூளி. எம் மவெக்கு வலவிரிச்சிப் புடிச்சிருக்யா. அந்த வலயக் கிளிச்செறிவ நா...” கடல் கொந்தளிக்கும் போது சீறுவது போல் சீறுகிறாள் அவள். ஐசக்கு சிரிக்கிறான். “மாமி மரியானண்ணய யா ஏசுறீம்?” “ஆமா, அந்தப்பய குடிக்காம இருந்துதான் தப்பிதமாப் போச்சி. புருசன் இன்னொரு பொம்பிளகிட்டப் போயிரக்கூடாதுண்டுதா எல்லாப் பொண்டுவளும் இப்பம் அவளவுளுவளே சாராயம் வாங்கி வந்து வக்கிறாளுவ...” என்று அப்பன் எழுந்து சந்துப் பக்கம் இயற்கைக்கடன் கழிக்கப் போகிறார். கடல் - கரை, பாடு - தளர்வு - உடலின் வேட்கைகள் என்று மனிதன் எவ்வாறு முட்டி மோதுகிறான்! காலையில் ஆத்தா மீன் வாங்கக் கரைக்குச் செல்கையில், ஏலி அலுமினியம் வட்டையில் வடையும் பணியமும் போட்டுக் கொண்டு கூட்டம் நிரம்பும் இடத்துக்கு வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். பிச்சைமுத்துப்பாட்டா ஏலம் கூறும் இடத்தில்தான் அவள் வழக்கமாக நகர்ந்து செல்வாள். இன்று அவள் வரும்போது அவளை எவ்வாறேனும் சண்டைக்கிழுக்க வேண்டும் என்ற கொதிப்புடன் ஆத்தா மணலில் குந்தியிருக்கிறாள். ஏலிக்கு அந்த அம்மையைப் பார்க்கையிலேயே முகத்தில் ஒளி பரவும். ஆனால் அணுகுவதற்கு இடமில்லாமலே ஆத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுப்புடன் நகர்ந்து போவாள். இன்று, ஏலிக்கு நெருங்கி ‘தோத்திரம்’ என்று சொல்லத் தோன்றுகிறது. ஆத்தா பேய்போல் அவள் மீது பாய்ந்து வட்டையை எகிறித் தள்ளுகிறாள். மணலில் வடைகள் சிதறி விழுகின்றன. அடுத்து அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்துக் கன்னத்தில் அறைகிறாள். “சாமி... சாமி... மாதாவே...” என்று அவல் அலற, கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளும், நண்டு பிடிக்கும் சிறுவர் சிறுமியரும், நோட்டுப் புத்தகமும் கையுமாக நிற்கும் வியாபாரிகளும், வட்டக்காரரும் ஓடி வருகின்றனர். “நாரச் செறுக்கி, ஊர்ப்பயலுவ மானமா வாழ முடியாம கெடுக்கா!...” அவள் உடல் துடிக்கிறது. முடி அவிழ்ந்து அலங்கோலமாக விழுகிறது. சேலைத் தலைப்புக் கட்டவிழ்ந்து மணலில் புரளுகிறது. வட்டக்காரர் நெருங்கி, “ஏனாத்தா இம்மாட்டுக் கோவம் அந்தப் பொண்ணுமேல?” என்று சிரித்துக் கொண்டு விசாரிக்கிறார். “ஒங்கக்க பயகிட்ட கோவிச்சிக்கறத வுட்டு, பாவம் அந்தப் பொண்ணு...” என்று யாரோ ஒருவன் எரிகிற கொள்ளிக்கு நெய் வார்க்கிறான். ஏலி துயரத்தை அடக்கிக் கொண்டு மணலில் காக்கை கொத்தச் சிதறிய பண்டங்களை மணலைத் தட்டி வட்டையில் போடுகிறாள். ஆத்தாளுக்கு வாய் ஓயவில்லை. “தொலைஞ்சு போட்டி, எங்கியாலும் தொலஞ்சு போட்டி” என்று கத்துகிறாள். மரங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சைக்கிள் வியாபாரிகள் - கத்தியோடு துவிக் குத்தகைக்காரர் - ஒண்ணரைக்கண்ணன் - எல்லோரும் அவரவர் அலுவலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆயிரமாயிரமாய் ஆழ்கடல் உயிர்கள் துடித்துச் சாகும் மணலில் மனித மனத்தின் உணர்ச்சிகளும் குருதி முனையில்தான் கொப்புளிக்கின்றன. வட்டக்காரர், வியாபாரி, தொழிலாளி இவர்களுக்கிடையே எந்தக் கணத்திலும் வார்த்தைகள் தடித்துவிடக்கூடும். பணப் பிரிவினை - கொடுக்கல் வாங்கல்களில் மயிரிழையின் வித்தியாசத்திலும் கூடக் கொழுந்து விட்டெரியப் பகை உணர்வுகள் மூண்டுவிடும். இன்று மரங்கள் திரும்பி வந்து அந்த அரங்கின் திரை விலகு முன்பே ஆத்தா இந்தக் காட்சியைக் கடை விரித்துவிட்டாள். பிச்சமுத்துப்பாட்டா செய்தியறிந்து வந்து கத்தரினாளைச் சாடுகிறார். “உம்பயலைக் கலியாணம் கெட்டிப் பூட்டி வச்சிக்க. அத்தப் போட்டு அடிக்கே? அறிவு கெட்ட ஜென்மம்?...” “நீ அழுவாத மகளே, இந்தக் கரையில மேலிக்கு யாரேனும் எந்தப் பேய் மவளேனும் உம்மேல கைய வய்க்கட்டும், ஒடிச்சி எறியுதேன்!” என்று கத்துகிறார். கடற்கரையில் மேலோட்டமாகக் கிளரும் உணர்ச்சிகளே எத்தகைய நாக் கூசும் சொற்களைக் காற்றிலே பரப்புகின்றன? ஆனால் அலைவாய்க்கரை இவற்றைச் சட்டை செய்யாமலே மேலும் மேஉம் தன் ஓலத்தையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று எல்லா வலைகளிலும் மீன் விழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் களர் மீன்கள் - சூடை, பன்னாகத்தாழை என்று கலப்படமாகச் சில, மொத்தமாக ஆறு ரூபாய்க்குக் கூடத் தேறவில்லை. ஆத்தாளிடம், இரண்டு ரூபாய் மரியான் கொடுத்தான். ஒரே சண்டை; ஏச்சுகளும் வசைகளும், வீட்டுக்குள் நுழையப் பிடிக்காமல் மரியானை வெறுக்கச் செய்கின்றன. கடற்கரையிலேயே வலைகளைப் பிரித்துப் போட்டு, நூல் குச்சியுடன் உட்கார்ந்து விட்டான். ஜானும் வந்து சேருகிறான், வலைகளைச் சீராக்க. வலை பாரில் பட்டு ஒரு மூலையில் கிழிந்திருக்கிறது. பனி வெய்யில் மாலை நேரத்தைப் பொன்முலாம் பூசிக் கொண்டிருக்கிறது. “அண்ணே, தங்காலத்துக்கு முன்ன திருக்கை வலை பிரஞ்சுக்கணும். ஒருமால் நூலெடுத்திட்டு வந்தா, இங்கே நாமே கூலி கொடுத்துப் பிராஞ்சுக்கலாம்...” என்று ஜான் கூறுகிறான். அப்போது மணலில் புதைய புதைய நடந்து ஒருவர் அவர்களருகே வருகிறார். கருத்த முகம் உப்பியிருக்கிறது. மேலே பட்டுச் சட்டை; இடையில் வேட்டி உருமாலணிந்து கொண்டிருக்கிறார். “வாரும் வாரும் கும்பாதிரியாரே? தோத்திரம்; என்னம்பு இம்மாந்தூரம்?” என்று மரியான் வரவேற்கிறான். “உங்களத்தான் தேடி வந்தேன். வீட்ட அந்தப் பொண்ணுவதான் இருக்கி. ஆத்தா, அப்பச்சி ரெண்டுபேரையும் காணம். அப்பச்சிக்கு ஒடம்பு வாசியா? கடலுக்குப் போறாரா?...” ஜான் நிமிர்ந்து பார்த்துவிட்டு தோத்திரம் சொல்கிறான். “ஆலந்தலை மாமனில்ல...?” “ஆமா!... என்ன விசேசம்?” “தெரசாளுக்குக் கலியாணம். வர ஞாயிறு ஓலவாசிப்பு...” “மாப்ள எங்கிய...?” “தூத்துக்குடி உப்பு ஆபீசில வேலையாயிருக்யா. படிச்சிருக்கிறான். எல்லாமே படிச்சவங்க. கடல் தொழில் ஆருக்குமில்ல.” “சீதனம் என்ன குடுக்கீரு?” “அஞ்சாயிரம், மாப்பிள்ளைக்குச் செயின் போடுறம். அவங்க வதிலுக்கு மச்சானுக்குச் செயினும் பொண்ணுக்கு மோதரமும் போடுறாங்க... நானும் தெரசாளக் கட்டிக் குடுத்திட்டு, பையங்கூடப் போயிரலாமிண்டிருக்கே. செலவுக்குப் பணமும் வேணம். அதனால இந்தப் பருவலையெல்லாம் வித்துப் போடுதேன்...” மரியான் இப்போது நிமிர்ந்து அவரைப் பார்க்கிறான். அவர் மணலில் குந்திக் கொள்கிறார். “அதா, கோளாவலை வாளைவலை - திருக்கை வலை எல்லாம் மூணு செட்டு இருக்கி. ஒண்ணொண்ணும் எட்டுப் பீஸ் செட்டு. திருக்கை இப்பம் ஒல்லுனது - எட்டு நூறாச்சி...” “திருக்கைய நா வாங்கிக்கிற மாமா. ஒரு வெல சொல்லிக் குடுத்திரும். தெரசாள நா கெட்டியிருந்தா சொம்மாவே குடுத்திருப்பீர்...” என்று மீசையைப் பல்லுக்கிழுத்துக் கடித்தவாறு சிரிக்கிறான் மரியான். “எடுத்துக்க. பறவாசிப்புக்கு வந்திற்று, வலையப் பாத்து எடுத்துக்க!...” “மரம்?” “மரம் ரொம்பப் பழசாப் போச்சி, கொங்கை ஒடஞ்சி ஒக்கப் பண்ணினது. அங்கியே நானூறுக்குக் குடுக்கறேன். வலையும் அவங்களே எடுத்துப்பாங்கன்னாலும் இங்கே வந்து ஒங்களை எல்லாம் பார்த்திட்டுப் போவமிண்டு வந்தே. ஊரை விட்டுத் தொலவாப் போயிற்றா வாரப் போவ முடியுமா?” “எங்கே, தோமை எங்கே இருக்கானிப்பம்?” “மட்றாசில அவந்தா வீடு கெட்டியிருக்கா. குவார்ட்டஸ் வேற குடுத்திருக்யா ரயிலில. இந்தப் பொண்ணைக் கெட்டிக் குடுக்கற வரய்க்கும் தான் கடல் பாடுன்னிருந்த...” “அப்ப வாரும் வீட்டுக்குப் போவலாம்...” வலைகளை ஜான் வசம் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு அவரை அழைத்து வருகிறான். இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இவருக்கு; எல்லோரையும் கட்டிக் கொடுத்து, படிக்க வைத்து, ஆளாக்கிவிட்டார். இவர் மனைவி சொத்துக்காரி. சீதனமாகத் தோப்பு, தோட்டம் வந்தது. இவரும் குடிக்க மாட்டார். அவளும் சிக்கனமாக ஆடம்பரமில்லாமல் வாழத் தெரிந்தவளென்று ஆத்தா சொல்வாள். பையன்கள் இருவரும் அப்போதே ஒருவன் பி.ஏ.யும், மற்றவன் எம்.ஏ.யும் படித்து விட்டனர். தோமஸ்தான் ரயிலில் வேலையாக இருக்கிறான். ஆன்ட்ரூஸ், காலேஜில் வாத்தியாராக இருக்கிறானாம். பெண்களில் மூத்தவள் திருநெல்வேலியில் இருக்கிறாள். மருமகன் பள்ளிக்கூட வாத்தியார். இரண்டாவது பெண் மதுரையில் இருக்கிறாள். மருமகன் மில்லாபீசில் வேலை செய்கிறான். இந்தத் தெரசாளை ஆத்தாள் தன் மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான்கு வருஷங்களுக்கு முன்னரே கேட்டிருக்கிறாள். ‘கடல் தொழிலாளிக்கு இவளை மட்டும் கொடுக்கணுமா’ என்று மாமி கூறினாளாம். ஆத்தாளுக்கு அந்தச் சொல்லே அவமதிப்பாகத் தோன்றியது. ஏன் மரியானும் கூட அப்போது அப்படித்தான் நினைத்தான். கடல் தொழில் செய்பவன் எந்த விதத்தில் குறைந்து போகிறான்? இவர்கள் நாலெழுத்துப் படித்து விட்டு வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு காலில் தூசி படாமல் மேனியில் காற்றுப்படாமல் ‘ரூம்பு’க்குள் உட்கார்ந்து வேலை செய்வது மட்டும் எப்படிக் ‘கௌரவம்’ என்றாகும்? அலை கடலில் செல்வதில் உள்ள ஆனந்தங்கள் அதில் உண்டா? மனிதர் வாடைவிட்டகன்று ஆழிக்கருநீலத்தில் மரம் ஆடியும் குதித்தாற் போல் வழுகியும் செல்கையில் மனம் கட்டுக்கடங்காததொரு பரவசப்பட்டு வானில் பறக்கும் புள்ளாக மாறும். ஆணாகப் பிறந்ததன் இலட்சியமே அந்த ஆண்டவன் அளித்திருக்கும் பலத்தையும் தசை வலியையும் இயற்கையின் வேகங்கள் எதிர்த்து வருகையில் ஈடு கொடுத்துக் கொள்ளும்படியாக ஒரு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதுதானல்லவா? நாள் முழுதும் பெண்பிள்ளை போல் நான்கு சுவர்களுக்குள்ளமர்ந்து கையையும் காலையும் மாவு பொம்மை போல் வைத்துக் கொள்ளவா ஆணுக்குப் பலமும் வீரியமும் ஆண்டவன் அளித்திருக்கிறான்?... ஆத்தா வீட்டில் தானிருக்கிறாள். ஆனால் வாராது வந்திருக்கும் மாமனைக் கூட முகமலர்ந்து உபசரிக்கவில்லை. பூச்சிக்கடி பட்டாற்போல் சுணங்கிக் கிடக்கிறாள். மேரிதான் கோபியும் பழமும் வைத்து உபசாரம் செய்கிறாள். “கதரினாளுக்கு ஒடம்பு வாசில்லியா?...” என்று கேட்கிறார் அவர். “ஒடம்பு மனசு ஒண்ணுந்தா வாசீல்ல. நாங்கல்லாம் எழிமைக்காரவங்க. எப்படி எப்படியோ இருப்பம்...” நிட்டூரமாக ஆத்தா வந்தவரைக் குத்தும் பேச்சு மரியானுக்குப் பிடிக்கவில்லை. வெளியே தாழ்வரையில் அமர்ந்து ஊர் நிலவரம் பேசுகிறார்கள். அப்பன் கடலிலிருந்து வருகிறார். அவருக்கும் அன்று அதிகமாகப் பாடு இல்லை என்று தோன்றுகிறது. “ஆரு?...” என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார். “சால்மோன் மாம... ஆலந்தலையிலேந்து வந்திருக்காரு. தெரசாளுக்குக் கலியாணம்...” “அதுக்கென்ன? அவுங்கல்லாம் நமக்குச் சம்மதயில்லியே? பின்ன எங்கிய வந்தா?...” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார். மரியான் மாமனைச் சமாதானப்படுத்தும் வகையில் அவருடன் நடந்து செல்கிறான். வட்டக்காரர் வீடு வரையிலும் செல்கையில் திருக்கை வலையைத் தான் உடனே வந்து வாங்கிக் கொள்வதாகவும், பெரியவர்கள் நடத்தைக்காக மனத்தாபப்படுவதாகவும் சொல்லிவிட்டு வருகிறான். திரும்பி வருகையில் ஆத்தா பெருங்குரலெடுத்து அழ, அப்பன் அவளை அடித்துக் கொண்டிருக்கிறார். மேரியும் செயமணியும் செய்வதறியாமல் வாசலில் வந்து, “ஜெசிந்தா அக்கா? எட்வின் அண்ணே...” என்று கத்துகின்றனர். “அண்ணே... அப்பச்சி குடிச்சிட்டு ஆத்தாளைப் போட்டு அடிக்கி...” அவன் உள்ளே செல்கையில் அப்பன் வெறி தணிந்து கட்டிலில் விழுகிறார். ஆத்தா கண்ணீரைச் சிந்திக் கொண்டு அழுகிறாள். மரியானுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. “எதுக்காவ இப்பம் ஆத்தாளைப் போட்டு அடித்தீரு? ஒமக்கு அறுவு இருக்கா...?” என்று கத்தினான். “அவெவ வீட்டில அவெவ பொஞ்சாதிய அடிக்காம யாரை அடிப்பா? போ லே...” என்று திட்டுகிறார் அவர் பதிலுக்கு. “போவட்டும், ஏனிப்பம் அளுது சாவறீங்க? அவரு கொணந்தா தெரியுமே? ஏன் வாக்கொடுக்கணும்?... வரவர ரொம்ப மோசமாப் போச்சி. வூட்ட ஆயிரமிருந்தாலும் வந்த விருந்தாளியிட்டவா காட்டுவீரு...? மரியாதயில்ல?...” ஆத்தா பதிலுக்கு எதுவும் சொல்லாமல், மேலே சுரூபமிருக்கும் கண்ணாடி கூண்டின் பின்னிருந்து ஒரு கடுதாசியை எடுத்து அவன் முன் போடுகிறாள். அவன் துணுக்குற்று எடுக்கிறான். “ஏக்கி, மேரி, விளக்கேத்திக் கொண்டா!...” “யாரு? லில்லியா எழுதிருக்கு? பண்டியலுக்கு வார இல்லையா?...” மேரி பெரிய சிம்னியை ஏற்றிக் கொண்டு வருகிறாள். கடிதம் இதுதான்... “தேவரீர் அப்பச்சி, அம்மா, அண்ணன் எல்லோருக்கும் லில்லி வணக்கம் செய்து தோத்திரம் சொல்லிக் கொண்டு எழுதுவது. இப்போது நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸிஸ்டர் யோஸிலின், ஸிஸ்டர் ஃபிரான்ஸிஸ்கா ஆகியோர் என்னிடம் பிரியமாக இருந்து கவனிக்கிறார்கள். எனது எதிர்காலத்தில் மிகவும் கருத்துள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய அன்புமயமான வாழ்க்கையைப் பார்த்து எனக்கும் அதுமாதிரி இறைபணியும் தொண்டும் செய்து கொண்டு, கன்னி வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் மேலிடுகிறது! எத்தனையோ பேரைப்போல் திருமணம் செய்து கொண்டு நான் நித்திய நரகத்தில் விழ விரும்பவில்லை. கல்யாணம் செய்து கொள்வதும் பிறகு பிள்ளைகளைப் பெறுவதும், கள் குடித்துவிட்டு வரும் புருஷனிடம் அடிபடுவதும், அழுக்கும் மலமுமாகச் சீவிப்பதும் ஒரு வாழ்க்கையா?... நான் நாள்தோறும் ஜபம் செய்கிறேன். மேலே கல்வி கற்க விருப்பமாக இருக்கிறேன். நான் படித்து, துன்புறும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ‘மதர்’ எனக்கு இங்கே அறிவுரை கூறுகிறார். எனக்கு மேலும் மேலும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. மேலும் நசரேன் ஃபர்னாந்து என்னைப் பார்க்க வருவது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே, நான் பண்டியலுக்கு வந்தால் பாவத்தில் முழுகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் கிறிஸ்துமஸுக்கு ஸிஸ்டருடன் கோயமுத்தூர் போகிறேன். நான் மேலும் தோத்திரம் சொல்கிறேன். எனக்கு உங்கள் அருளாசியைத் தாருங்கள். என் அன்பை மேரி, ஜயமணி, பீற்றர், சார்லஸ் எல்லோருக்கும் தெரிவிக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு ஏப்ரல் மாசம் வருகிறேன். அன்பு வணக்கங்கள் லில்லி இருதயம் ஜபமணி அவன் சிறிது நேரம் சிலைபோல் அசைவற்றுப் போகிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|