உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 13 கடற்கரை மீன்வாடியில் காக்கைகளின் சந்தடியும் வியாபாரச் சந்தடியும் அலைகளின் ஓசையும் எவ்வாறு ஒழுங்கின்மைக்கு மாதிரியாக விளங்குமோ அத்தகையதொரு கத்தலும், ஆவேச மொழிகளும் அந்தக் கூட்டத்தில் கலகலக்கின்றன. பங்களாவிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில் சாமியார் அமர்ந்திருக்கிறார். சிலர் மணலில் குந்தியிருக்கின்றனர். சிலர் எழுந்து நிற்கின்றனர். வயிரமேறிய தசை தளர்ந்தாலும் இன்னமும் உறுதி குலையவில்லை என்று வீம்புடன் நிற்கும் கடல் தொழிலாளிகள், முகத்தில் மீசை அரும்பாத இளம் பிள்ளைகள், வாலிபத்தின் கிளர்ச்சியில் துடிக்கும் உதடுகளும் தோள்களுமாக எழும்பி நிற்பவர், பிறந்த மேனியுடன் மணலில் விளையாடும் சிறு குழந்தைகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றனர். பெண்கள் எட்டியுள்ள வீடுகளில் வாயில்களில் நின்றவாறு வேடிக்கை பார்க்கின்றனர். காவல்துறையினர் இருவரும் முன்னேற்பாடாக வந்திருக்கின்றனர். பெஞ்ஜமின் முடியைப் பளபளக்க வாரிக்கொண்டு, நீல சட்டையும் கைலியுமாக, அங்கே குழுமியிருக்கும் இளந் தலைமுறையினரின் ஒன்றுபட்ட கருத்தை வெளியிடும் குரலாக ஒலிக்கிறான். “ஃபாதர் யோசனை செய்வதற்கு இதில் ஒண்ணும் புரியாதது இல்லை. நாங்கள் பல தடவைகள் உங்களிடம் இது விஷயம் பேசிய பிறகுதான் நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம். முன்போல் வலை தட்டுமடி இல்லை. விலைகள் அதிகமாகிவிட்டன. வாழ்க்கைச் செலவு ரொம்ப உயர்ந்து போச்சு. எங்கள் பெண்களுக்குச் சீதனம் தந்து கல்யாணம் கட்ட முடிவதில்லை. ஒரு வலை செட் அறுநூறு, எழுநூறு என்று தொழிலுக்கே அதிக முதல் முடக்க வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்தில் துவி ஒரு அல்ப விலைக்குத்தான் போயிற்று. இப்பம்...” சாமி அவன் முழுவதும் பேச விடாமல் குறுக்கிடுகிறார். “இதெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பயனில்லை. கோயிலுக்குச் சேர வேண்டிய வரிக்கு அந்த நாள் இந்த நாளிண்ணு கிடையாது. பங்குக் கோயில் உங்களுடைய ஆத்தும சீவியத்துக்காகவே ஏற்பட்டது. நீங்கள் பாவ வாழ்வு வாழாமல் நல்ல கிறிஸ்தவர்களாகச் சங்கையுடன் வாழ்ந்து மோட்சத்துக்குப் போக வேண்டும் என்பதற்காகவே சில விதிகளை, சவேரியார் சுவாமிகள் ஒழுங்கு செய்தார். கஷ்டப்பாடு என்று சொல்கிறீர்கள். கஷ்டப்பாடு உங்களுக்கு மட்டும்தானா? கஷ்டப்பாடுகள் என்று பாவ எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள்; உண்மையை மறைக்கிறீர்கள்; பொய் சொல்கிறீர்கள்; திருச்சபையும் பங்குக் கோயிலும் இன்றியமையாததாகின்றன. நிச்சயமாகத் தேவையாகின்றன. ஆதியில் இந்தக் கடல்துறை ஊர்களில் மக்கள் இருந்த போதிலும் புனித சவேரியார் சுவாமிகள் வரும் காலம் வரையிலும் விசுவாச வாழ்வுக்காக நல்ல வழிகள் பற்றி மறை தழுவி எதுவும் தெரியாதவர்களாகவே இருந்தார்கள். விசுவாசப் பிரமாணம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், பத்துக் கற்பனைகள் இதெல்லாம் கற்றுக் கொடுக்கவும், பலி பூசை நிறைவேற்றவும் யாருமே இங்கு இல்லை. அவர் வந்த பிறகுதான் பரவர் விசுவாச வாழ்வில் மலர்ச்சி வந்தது. அந்தக் காலத்தில் மக்களாகவே ஒப்புக் கொண்டு கோயிலுக்கும் பங்குக்கும் இந்த வருமானங்களில் பங்கென்று பட்டயம் எழுதி வைக்கப்பட்டது. உங்களுடைய வரிகளில் சுமை குறைக்க முன்னம் செவ்வாய்க்கிழமைகளில் பாதிப் பங்கைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டுமென்றிருந்ததை நிறுத்தியாயிற்று. இப்போது இன்னும் இருக்கும் வரிகளையும், நீங்கள் அதிகமாகக் குடிப்பதற்கும் ஆடம்பரச் செலவுகள் செய்வதற்குமாக நிறுத்த வேண்டும் என்கிறீர்கள். இது நியாயம் இல்லை...” சாமியார் இலக்கண சுத்தமாகப் பேசும் மொழிகள் பலருக்கும் புரியாமலிருந்தாலும், அவர் துவிக்குத்தகையை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை என்று மட்டும் புரிந்தாலும், சாமியாரின் நாவிலிருந்து பிறப்பது வேத மந்திரம் என்ற பக்தி விசுவாச உணர்வுடன் முதியவர் கேட்கின்றனர். மரியானுக்கு பெஞ்சமின் துவி என்று உச்சரிக்குமுன் சாமி குறுக்கிட்டுப் பாய்ந்ததில் ஆத்திரம். இப்போது அவன் சாமியைக் குறுக்கிடுகிறான். “அப்பம் துவி ஆறு காசுக்குப் போவ இல்ல. இப்ப துவி ஆறு ரூபாயிலேந்து மீனுக்கு மேல வெல போவுது. அத்தை அப்பிடியே கோயிலுக்குண்டு குடுப்பது என்னம்ப்பு நாயம்?” “சாமியார் பேசுமுன்ன நாய் போலப் பாயுறா! சொம்மா இருறா நாய்ப்பயலே?” என்று ஜெபமாலையான் அடக்குகிறான். “நீ சொம்மா இரிலே! எதிர்க்கட்சியாடுதான், துரோகி!” என்று திட்டுகிறார் பிச்சைமுத்துப்பாட்டா. பெஞ்சமின் கை தட்டி அமர்த்துகிறான். “நமக்குள்ள ஏன் சண்டை போடுறீங்க? சண்டை போட்டுக்கிட்டா மேன்மையில்ல. சாமியிடம் நான் கேட்டுக்கிடறது இதுதான். சமரசமா நீங்களும் விட்டுக் கொடுக்கணும். ஒவ்வொரு நாளும் கடல் தொழிலாளி உயிரைப் பணயம் வச்சுப் போறான். போவும் போது இன்ன வருமிண்டு நிச்சயமில்ல. கிடைக்கும்; கிடைக்காமயும் இருக்கும். நம்ம நெனப்புக்கு எட்டாத சங்கல்பம் அது. மடக்கலை வரும் போது மரியாண்ணு சொல்லுதோம். சுழலியில் லோலுப்படும் போது அற்புதம் புரிந்த அந்தோணியாரேண்ணு பிச்சை கேக்கிறோம். எங்க விசுவாசம் ஆதிக்கடவுள், சமுத்திரம் ரெண்டிலும் நிலச்சிருக்கு. இப்பம் பீஸ் வலை வச்சித் தொழில் செஞ்சாத்தான் நல்லது. முன்ன ஒரு தட்டுமடி பார்லபட்டுக் கிழிஞ்சிச்சிண்ணா நஷ்டம் அதிகமில்ல. இப்ப நூத்துக்கணக்கா, ஆயிரக்கணக்கா நஷ்டம். இங்கே கடல்கரையில் நீங்க கணக்கெடுத்துப் பார்த்தா, நூத்துக்கு அறுபது பொம்பிள மேல தாலி இருக்காது. இதெல்லாம் சாமி, கொஞ்சம் யோசித்துப் பார்த்து, அந்த வியாபாரிகளைப் போல் நாங்களும் வரி கட்டினால் போதுமிண்ணு வருஷாந்தர வரியாகப் பத்து ரூபாய் வாங்கிட்டு மற்ற குத்தவைகளை நிப்பாட்டுவதை நாயமாச் செய்யணமிண்டு சொல்றேன்...” பிச்சைமுத்துவும், எட்வினும், அகுஸ்தீனும் முகமலர்ந்து கேட்கின்றனர். “சவாசு, பெஞ்ஜமின் மச்சான்! சாமியிடம் இப்படி விசயம் எடுத்துப் பேச இம்மாட்டும் ஆருக்குத் தெரியும்? நினைச்சா மயிரு மட்டைண்ணு வாயில கொட்டிருவம்!” என்று குருஸ் பாராட்டுகிறான். சாமிக்கு முகம் சிறுத்துப் போகிறது. ‘இவர்கள் சொல்லுவதெல்லாம் நியாயம் நியாயம்’ என்று மனம் மந்திரிக்கிறது. என்றாலும் இப்படி விட்டுக் கொடுக்கலாமா? திருச்சபையின் பங்குக் கோயில்களின் பெருவாரியான வருமானம் அல்லவோ இது? தமது வாழ்க்கையை இவ்வாறு ஒரு வெள்ளை அங்கிக்குள் சிறைப்படுத்திக் கொண்டு நியாயமான வேட்கைகளைக் கொன்று கொண்டு வாழும் வாழ்வில் இதைத் தவிர வேறென்ன லாபம்? குருப்பட்டம் பெற்று இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதற்குக் காரணமே வாழ்க்கையின் பொருளாதார வறுமையின் அவல நிலையிலிருந்து மேலோங்க வேண்டும் என்பதனாலல்லவோ? கடல் மீது சென்று பாடுபடும் இவர்கள் குழந்தைகளைப் போல் அவ்வப்போதைய உணர்ச்சிகளுக்கேற்பத் தங்களை வெளியிட்டுக் கொண்டு விடுவார்கள். அப்படி ஓர் எழுச்சி தான் இது. இதை அடக்கிவிட வேண்டும் என்று எண்ணுகிறார். “நீங்கள் கேட்பது இயலாத காரியம். நீங்கள் அபராதம் கட்டவில்லையென்றால், ஞானஸ்நானம், கல்யாணம், மரித்தோர் கடன் என்று சாமியார் வருவதற்கில்லை...” சாமியார் சட்டென்று எழுந்து விட்டார். இருதயம் எழுந்து நிற்கிறார். “அவரு அம்மாட்டுக்கு விட்டுக் கொடுப்பாரா? இந்தப் பயலுவ என்னமோ கோழி சிலும்புதாப்பல சிலும்புறானுவ!” கூட்டத்தில் கசமுசவென்றும் உரத்தும் குரல்கள் மோதிக் கொள்கின்றன. பெஞ்ஜமின் சாமியாரைத் தொடர்ந்து சென்று அவரை நிறுத்த முயலுகிறான். “சாமி, நீங்க சமரசமா ஒரு ஏற்பாட்டுக்கு வரணமிண்ணு தானே கூட்டம் போட்டம்? நீங்க கோவிச்சிட்டுப் போயிட்டா எப்படி?...” “இங்கே யாரும் கோபிக்க இல்லை. நீங்க கேட்பது நடக்காதது. இது சவேரியார் காலத்திலேந்து வரும் நடப்பு. இப்போது அதை மாற்ற முடியாது...” “ஃபாதர், ஆண்டகையிடம் சொல்லி எதானும் ஏற்பாடு செய்யக் கூடாதா?” சாமியார் கையை விரிக்கிறார். “நீங்க ஆண்டகையிடம் போய்ச் சொல்லுங்க. எனக்கு விரோதமில்ல. ஆனால் இது திருச்சபையைச் சேர்ந்த எல்லாத் துறை ஊரிலும் உள்ள நடைமுறை. அதை அப்படி மாற்றிவிட முடியாது...” “ஆண்டகை தூத்துக்குடியில்தானே இருக்கிறாரு? நாங்களே ஆண்டகையிடம் போய்க் கேக்கிறோம்...” “ஆண்டகை இப்போது எங்கிருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. நீங்கள் போய்ச் சொல்லுங்க, எனக்கு ஆட்சேபமில்லை.” சாமியார் அங்கி விசிற வேகமாக நடந்து பங்களாவுக்குள் நுழைகிறார். பெஞ்ஜமின் திரும்பி வருகையில் சூரியனின் மாலைக் கதிர்கள் அவனுடைய குழம்பிய முகத்தில் விழுகின்றன. கூட்டத்தில் அதிருப்திக் குரல்கள் உயருகின்றன; ஏசல்களும் பூசல்களும் தலை காட்டுகின்றன காவல் துறையாளர் இருவரும் இருக்கின்றனர். ஆனால் அவர்களே அஞ்சிவிடுமளவுக்கு இவர்களிடம் வன்முறைக் கிளர்ச்சி தோன்றிவிடும். “கிளிச்சான், இவெ. சாமியாரிட்ட இவெ மயிரு ஒண்ணுஞ் செல்லாது...” என்று சாமுவல் கூற, எட்வின் அவனைப் பிடித்துத் தள்ள, மற்ற இருவர் சவால்விட, கலகலப்பு கைகலப்பில் கொண்டு விடுகிறது. போலீஸ்காரர் புகுந்து விலக்குகின்றனர். பெஞ்ஜமினின் நெற்றி வரிகள் ஆழ்ந்து போகின்றன. “நீங்க எல்லாம் அமைச்சலாயிருக்கணும். நாம் இப்பம் நாயம் சொல்லுதோம். இதுல எதும் அநியாயமிருந்தா அவ நம்பிக்கைப் படணும். ஆண்டகையிட்ட நம்ம வழக்கைக் கொண்டிட்டுப் போவம் - நம்ம சகலைக்குத் தெரிஞ்சவரு, வித்யாவதி ஊரில் போலீசு இனிஸ்பெட்டரு. அவரிட்ட நா இப்படிண்டு விசயம் சொல்லித்தான் இன்னைக்கே ரெண்டு பேர அனுப்பித் தந்தாங்க. அவரு அண்ணைக்குச் சொன்னாரு, நீரு ஒண்ணும் கவலிக்க வேணாம். இதொண்ணும் சரிப்படலேண்ணா நாம ஆண்டகையிட்டப் போவம், நானும் கூட வாரன்னு சொல்லியிருக்கிறாரு. நாம அந்தால ஒரு பிளசர் எடுத்திட்டுத் தூத்துக்குடி போயி - நாம முக்கியமா ஒரு நாலஞ்சு பேரு போயி ஆண்டகையப் பாத்து நம்ம வழக்கைச் சொல்லுவம்...” பிச்சைமுத்துப்பாட்டா திறந்த வாயுடன் அவனையே பார்க்கிறார். எம்பிட்டு மேதையும் கெல்பும் துணிச்சலும் இந்தப் பயலுக்கு? இவெப்பனும் அவரைப்போல் கடல் தொழில் செய்தவர்தாம். அவருடைய பிள்ளைகள் யாருமே கடல் வாழ்வில் ஒட்டாமல் போய்விட்டார்கள். உப்பு ஒட்டாத, ‘நன்னி’யில்லாத வாழ்வு! ஆண்டவங் கிருவையால இந்தப்பய நல்லாயிருக்கணும். தனக்கு உடம்புல உப்பும் பெலமும் குடுத்த மண்ணுக்கும் தண்ணிக்கும் மனுஷ ஒறவுக்கும் நன்னியோட நல்லது செய்யணுமிண்டு நினைக்கான்... பிச்சைமுத்துப்பாட்டா கண்களில் நீர் கசிய உணர்ச்சிவசப்பட்டுப் பெஞ்ஜமினின் தோளில் கை போட்டுக் கொள்கிறார். “மக்கா, கடலு மேலியே வட்டமிட்டுக்கேரும் புள்ளைப் போல, கரைக்குப் போவப் பெலமில்லாத புள்ளைப்போல, வெளி ஒலவ வெவகாரம் தெரியாம வாழுறம். கரைக்குப் போகவும் பெலமில்லாம பாஞ்செடுக்கவும் பலமில்லாம தண்ணி மேல மெதக்கும் சீதாப்புள்ளுவ போல, ஒலவ வெவகாரத்தில், மனுஷனாட்டுப் பெறந்த பல கோடிகளும் நமக்கு வேண்டப்பட்டவராயிருக்கணுமிண்டு கிறிஸ்து நாதர் சொல்லல?...” அந்த முதியவரின் உள்ளத்திலோடும் உணர்ச்சிக் கோலங்களைப் பெஞ்ஜமின் முழுதும் புரிந்து கொள்ளவில்லை. எனினும் பெற்ற மக்களின் தொடர்பு துறந்து அந்தக் கடற்கரையே நிலைத்த இடமென்று வாழத் துணிந்த இவருடைய ஒட்டுறவு அவனது நெஞ்சின் மென்மையான உணர்வுகளைத் தொட்டு உயிர்க்கச் செய்கிறது. இந்தக் கரையில் கடல் தொழில் செய்ய வந்திருக்கும் அனைவரையும் அவர் அறிவார். அவர்களையே அவர் தம் பிள்ளைகளாகக் கருதுகிறார்! “நீங்க எங்க பேச்சு நியாயமிண்ணு எங்ககூட இருப்பதே பெலம் தாத்தா!” என்று கரைகிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|