அத்தியாயம் - 15

     கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரவை முன்னிட்டு ஊரெங்கிலும் ஓர் கோலாகலம் எதிரொலிக்கிறது. செபஸ்தி நாடார் கடையில் மத்தாப்புக்களும் வாணங்களும் பட்டாசு வெடிகளும் வந்து நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் வண்ணக் காகிதத் தோரணங்கள் அமைப்பதிலும், நட்சத்திர ஒளிக் கூண்டுகள் கட்டித் தொங்க விடுவதிலும் இளைஞரும் முதியோரும் உற்சாகமாயிருக்கின்றனர். வலைகளும் கருவாட்டு மீன்களும் பரத்தியிருக்க ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் குந்தாணியும் உலக்கையுமாகப் பெண்கள் அரிசிமாவிடிக்கும் ஓசை பட்டாசுச் சத்தத்துக்கு இணையக் கேட்கிறது. மேட்டுத் தெருவின் வீடுகளில் பாலன் ஜோடிக்க பிள்ளைகள் சவுக்குத் தோப்பை நாடிச் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்கின்றனர். பிலாப் பெட்டியில் பாலிகை தெளித்து, காற்றும் வெயிலும் பட வெளியே வைக்கின்றனர். நாடார் குடிகளில் பாலிகைப் பெட்டிகளை வைத்து, கன்னிப் பெண்கள் முற்றத்தில் மரியன்னை மைந்தனின் புகழ் பாடிக் கும்மி அடிக்கின்றனர். ‘கோதம்பு’ அரைக்கவும், பண்டியல் சாமான் வாங்கவும், பெண்கள் கூடங்குளத்துக்கோ, இடையன் குடிக்கோ அணியணியாகச் செல்கின்றனர். லயனலின் ஜீப்பில் மாலை நேரங்களில் இருபது பேருக்குக் குறையாமல் அடைத்துக் கொண்டு செல்கின்றனர். பெஞ்ஜமினின் வீட்டில் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிக் கொண்ட அவன் தந்தை அண்ணன் தங்கை என்று வீடு கொள்ளாத கூட்டம் நிறைந்திருக்கிறது. நசரேனின் வீட்டில் எல்லோரும் தூத்துக்குடி போய் விட்டார்கள். ஜான் மட்டும் இருபத்து மூன்றாந் தேதி மாலையில் தொழிலுக்குச் சென்று வந்த பிறகு செல்கிறான்.

     மரியான் ஆலந்தலை மாமன் மகள் கல்யாண ஓலை வாசிப்புக்குப் போய்விட்டு, திருக்கை வலையை நானூரு என்று பேசி வாங்கிவிட்டான். திருச்செந்தூரில் சென்று பெண்களுக்குச் சேலை ரவிக்கை, தம்பிகளுக்கு நிஜார் சட்டை அப்பனுக்கும் தனக்கும் வேட்டி துண்டு, எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். வலைக்கு இன்னமும் நூறு ரூபாயை அடுத்த மாதம் கட்டிவிடுவதாகச் சொல்லிப் பெற்று வந்திருக்கிறான்.

     ஆத்தா, அரிசி மாவிடித்து, முட்டையை உடைத்து ஊற்றி, தேங்காய்ப்பால் குழைத்துப் பணியாரம் செய்கிறாள். கொக்குசு அச்சை மாவில் முக்கிக் காயும் எண்ணெயில் போட்டு, பொன்னின் பூச்சக்கரங்களாகப் பணியாரத்தை எடுத்து வைக்கிறாள். அதிரசம் சுடுகிறாள். சுரூபம் இருக்கும் கண்ணாடிக் கூண்டையும், முன் வாயிலையும் வண்ணக் காகிதத் தோரணங்கள் கட்டி மேரியும் செயமணியும் அலங்கரிக்கின்றனர். சிவப்பு நட்சத்திரக் கூண்டில் சிறு விளக்கேற்றி வெளியே தொங்க விடுகின்றனர். விடிந்தால் பெருநாள். அன்று அப்பன் விடியலில் தொழிலுக்குச் சென்று, பிற்பகல் மூன்று மணிக்கு வந்திருக்கிறார். மரியானோ, இரண்டு மணிக்கே வந்துவிட்டான். தெருவெல்லாம் தேங்காய் எண்ணெய் காயும் மணமும், வெல்லப் பாகின் மணமும் கவிர்ச்சியே இங்கு கிடையாது என்றியம்பும் வண்ணம் நாசியை நிரப்புகின்றன.

     தபாலாபிசுக்காரரின் தம்பி மோசே, கரால் பாடும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் புதிய புதிய பாடல்களைப் புனைந்து பயிற்சி கொடுப்பான். இப்போதும் அந்த வீட்டில் இருந்து பாட்டுக்குரல்கள் கேட்கின்றன. கன்னிபுரம் சிறிய ஊராக இருந்தாலும், லாரியை ஜோடித்து, ஐயன் பிறப்பை ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். அதற்கென்று மின்னாற்றலைத் தரும் பொறியும், விளக்கு மாலைகளும் தனியாக இணைத்திருப்பார்கள். இவ்வாண்டு லயனலின் ஜீப்பில் இந்தக் காட்சி ஊர்வலம் நிகழ இருக்கிறது.

     மைக்கு செட்டு கோயிலின் முன் கீதங்களை இசைக்கத் துவங்கிவிட்டது. உள்ளே பாலன் குடிலை சோடித்துக் கொண்டிருக்கின்றனர். கோயிலின் நாற்புறங்களிலும் குளுமையான ஒளி பரவிக் கிடக்கிறது. ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு மரியான் மீண்டும் வீட்டுக்கே வருகிறான். வாயிலில் மேரி வண்ணப் பொடிகள் தூவிக் கோலமிடுகிறாள்.

     அப்பன் வழக்கம் போல் குடித்திருக்கிறார்.

     “லில்லிப் பொண்ணு இருந்திச்சிண்ணா, நெல்லா இரிக்கும். அது கன்யாஸ்திரீயாப் போவு. அந்த ரோசித்தாப் பொண்ணை இங்கே மரியானுக்குக் கெட்டணுமுண்டிருந்தம். அதும் கூடிச்சில்லை. இப்பம், இவள நசரேனுக்குக் கெட்டுறதும் கூடிச்சில்லை.” எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு முணமுணக்கையில் ஆத்தா தட்டில் ஒரு அதிரசமும், பணியாரமும் கொண்டு வருகிறாள். “இன்னாரும்...”

     அப்பன் அதை எடுக்கிறார். கண்களில் நீர் கசிகிறது.

     “பண்டியலுக்கும் அவ வார இல்ல பாத்தியா?”

     ஆத்தாளுக்கும் கண்கள் பசைக்கின்றன.

     “அப்பமே நான் படிக்கப் போடண்டாமிண்ணே. கடல் மேல போறவனைக் கெட்டுறவளுக்கு என்ன படிப்பு? கன்யாஸ்திரீங்க கூடமே இருந்து தா, இப்பிடியாயிட்டா...”

     “இந்த வீட்டிலேந்து அவ ஈசனுக்கு மணவாட்டியாப் போறாண்ணா, இந்தக் குடும்பத்துக்கு மாதாவின் ஆசீர் இருக்கில்லிய?...”

     அவள் தேவதை போல் வெள்ளையுடுப்புடன் வருவது காண்பது போல் - அப்பன் உருகிப் போகிறார்.

     “என்னிய இரிந்தாலும் இவ பண்டியலுக்கு வராண்டாமா? ஆத்தா, அப்பச்சி உடப்பிறப்பு ஆரையும் பாக்கண்டாமா? போன சித்திர லீவுக்கு வந்ததுதா...”

     “இருக்கும். அவதா எளுதிப் போட்டாளே? அலவாய்க்கரையில பாவ எண்ணம் கொண்டு பாக்குறவந்தானே அம்புட்டுப் பயலுவளும்! உந்நத சங்கீதம் கேக்கும் ஒரு வாழுக்குப்போறா அவ. இன்றறுதி அவளுக்காவ ஒரு துட்டு படிப்புக்குண்டு நாம செலவு செய்யல...”

     “அதனாலதா கன்யாஸ்திரீமாருக்கே சொந்தமிண்டு ஆயிற்றா...” என்று ஆத்தா ஆற்றாமையுடன் புலம்புகிறாள்.

     “எல்லாரும் ஆசப்படும் லோகத்திலிருக்கிற சுகங்கள்ளாம் வேண்டாமிண்டு வய்க்கிணமிண்ணா, எம்மாட்டு மனசில தெம்பிருக்கணும்! இந்தக் கடக்கரையில இவ போல ஆரும் வாழு பாவமிண்டு சொல்லல. கடல் அலையில்லாம இருக்குமா? அதுக்காவ மர மெறக்க ஏலாதுண்டு கடல் கரையில பொறந்தவெ கூசி நிப்பானா? வாழு பாவந்தா. பாவத்தில நுலஞ்சி செயிக்கிறதுதாஞ்சுகிர்தம். பாவத்திலதாஞ் சுகம். பாவத்திலதாங் குடும்பம். எல்லாப் பயலுவளும் பொண்ணுகளும் இப்படித்தான் நினய்க்கா. எல்லாப் பொண்ணுவளும் இப்பிடித்தா ஒடலை ஒரு ஆம்பிளய்க்குக் குடுக்கா. ஆனா, இவ பாவமிண்டு நினக்யா...”

     அப்பன் திரும்பத் திரும்ப அதை மொழிகையில் மரியானுக்குக் கண்களில் நீர் திரண்டு வருகிறது.

     “இன்னிக்கு எம்புட்டிலே மீன்பாடு?”

     “றால் கொஞ்சம் - பொறவு அயில, சாள, இதுகதா... மொத்தம் பத்து ரூவாயிக்குள்ள. பண்டியல் கழிஞ்சி திருக்கை வலை கொண்டிட்டு ஆழ் கடல் போவலாம்...”

     “அண்ணே, படய்க்கம் வாங்கக் காசுண்ணே?”

     பீற்றர் கை நீட்டுகிறான்.

     “வாணாலே. அந்தப் பயலுக்கு ஒரு சல்லி குடுக்காதே! அவெ, அஞ்சு ரூவாக்கி வெடி வாங்கி கரியாக்கியிருக்கான்” என்று ஆத்தா தடுத்துவிட்டு அவனுக்கும் பலகாரம் கொண்டு வருகிறாள்.

     செயமணி, நாடார் விளையிலிருந்து ஒரு வாழைக் குலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருகிறான். சார்லசும் அவளுடன் போயிருந்திருக்கிறான். பன ஓலைக்குப் போய்ப் பழக்கமான சிநேகிதி வீட்டிலிருந்து வாங்கி வருகிறாள்.

     அவன் அதிரசத்தையும் பணியாரத்தையும் உண்டு கோபியைப் பருகுகிறான்.

     அன்றிரவு யாருமே உறங்கமாட்டார்கள்.

     வாடைக் காற்றில் குறுகிப் போர்த்துக் கொண்டு உறங்கும் குழந்தைகளை எழுப்பிக் கொண்டு கோயிலுக்குப் போவார்கள்.

     ‘இஸ்பிரி சாந்துவுக்கு நமஸ்காரம்’ என்ற பாட்டை மைக்கு தேன்குரலில் வான் முழுவதும் காற்றிலே ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. மரியானுக்கு ஒரு டிரான்சிஸ்டர் பெட்டி வாங்க வேண்டுமென்று கூட ஆசை. எத்தனையோ ஆசைகள்.

     லில்லி கல்யாணமென்பதில்லை... ஆனால், மேரி... மேரியும் தான் வளர்ந்து விட்டாள். அவள் வயசுக்கு வந்து மைக்கு செட் போட்டுக் கொண்டாடியது இப்போது போல் தோன்றினாலும் இரண்டு பண்டிகைகள் ஓடிவிட்டன. செயமணிக்கு அந்த விழா செய்யவில்லை. அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்; பணமுமில்லை. மேட்டுத் தெரு மக்கள் இதெல்லாம் அநாகரிகம் என்று செய்வதில்லை. இரண்டு நழுவினால் மூன்றாவது கூடலாம். ஜானுக்கு மேரியைக் கட்டலாம்...

     அவன் மீண்டும் எழுந்து வெளியே வருகிறான். கிணற்றுக் கரையில் ஜெசிந்தா, “பண்டியலா மச்சான்?” என்று கேட்கிறாள்.

     எவ்வளவு மெலிந்து போய் விட்டான்! “விருந்தாளிங்க வந்திருக்குப் போல?”

     “ஆருமில்ல, மாமிதான், பெருமணல்லேந்து வந்திருக்கா...”

     பொழுது இருளின் வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. முகம் நன்றாகத் தெரியவில்லை. பிச்சமுத்துப்பாட்டா காகித நட்சத்திரம் வாங்கிக் கொண்டு இரு பேரப்பிள்ளைகளுடன் நடக்கிறார். விளக்கடியில் அவனைப் பார்க்கிறார்.

     “ஆருலே? மரியானா? தூத்துக்குடிலேந்து ஃபிரான்ஸ்கா பண்டியலுக்கு வந்திருக்காலே! அவ பிள்ளைங்க...”

     கழுத்தில் சங்கிலி, சட்டை, தலையில் கட்டிய ரிப்பன்... ஒரு பெண், ஒரு பையன் ஏழு வயசும் அஞ்சு வயசும்...

     “ஏலிப் பொண்ணைத் தேடிட்டுப் போறியாலே? போ, போ... பண்டியல் வந்திருக்கு...” என்று கண்களைச் சிமிட்டிக் கேலி செய்கிறார்.

     அவனுக்கு வெட்கமாக இருக்கிறது. அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை! புயலில் சேதமுற்ற வீட்டைப் பூசி மெழுகி, அந்தச் சுவருக்கு வெள்ளையும் தீட்டிப் புதுப்பித்திருக்கிறாள். வாழ்வில் அவள் பற்றும் தாங்கலெல்லாம் நழுவிப் போனாலும் வாழ்வின் மீது நம்பிக்கை மாயாமல் நிமிர்ந்து முனைகிறாள்.

     அப்போதுதான் நல்ல நீரெடுக்கப் போய் வந்த ஏலி அவனைக் கண்டதும் முகம் மலரக் கதவைத் திறக்கிறாள். இருட்டில், பீற்றர் அவனைத் தொடர்ந்தே வந்திருப்பதை மரியான் அப்போதுதான் காண்கிறான். கோபத்துடன் “எங்கியலே வந்தே?” என்று அதட்டுகிறான்.

     “படய்க்கம் (பட்டாசு) வாங்கத் துட்டுக்குடண்ணே!”

     மரியான் தன் சட்டைப்பையிலிருந்து எட்டணா நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறான்.

     “போ லே!”

     இவன் ஆத்தாளிடம் சென்று தான் அங்கு வந்திருப்பதைக் கூறி விடுவானோ என்ற அச்சம்... ஏலி உள்ளிருந்தபடியே மகிழ்ச்சி கரை புரள, “அவெ... இங்கிய வரக்காட்டும்... லே, மக்கா...! வாலே...” என்று அழைக்கிறாள். பீற்றர் வருகிறான். புதிய சராயும், உள்ளே செருகிய சட்டையுமாக. இப்போதே புதிய உடுப்புப் போட்டுக் கொண்டு, முடியில் எண்ணெய் தொட்டுச் சீவிக் கொண்டிருக்கிறான். மரியானைப் போலவே அச்சு, மாநிறம்; வட்ட முகம்; சுருள் முடி...

     பூசைக்குப் பூகு முன் உறக்கம் வந்துவிடும். உற்சாகச் சக்தியை முன்பே பரபரப்பாகக் கரைத்து விடுவார்கள். இந்தப் பிள்ளைப் பருவம்தான் எத்துணை இனிமையானது! கவலையற்றது!

     மரியான் அங்கே நார்க் கட்டிலில் அமர்ந்தபடியே, “லே, ஆத்தாகிட்டப் போயிச் சொல்லாதே! சொன்னியோ கொண்ணிருவே!” என்று கட்டளை பிறப்பிக்கிறான்.

     ஏலி ஏனத்தைத் திறந்து கைநிறைய வெல்லச்சீடை எடுத்துக் கொடுக்கிறாள். அவன் அவற்றை வாங்கிச் சராயின் இரு பக்கத்துப் பைகளிலும் நிரப்பிக் கொள்கிறான். ஒரு பெரிய பழம் வேறு. பையன் வாழைப்பழத்தை உரித்துக் கொண்டு ஓடிப் போகிறான்.

     ஏலி முடியைச் சீவிக் கட்டிக் கொண்டு, பழைய வாயில் சேலையைத்தான் உடுத்தியிருக்கிறாள். கண்களில் ஒரு புத்தொளி. இதழ்களில் ஒரு மென்மையான நாணம் கவிந்த புன்னகை... இவளுக்குப் பண்டிகைக்கென்று ஒரு சேலையும் ஜாக்கெட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் திருக்கை வலை வாங்கிவிட்டதால் பணம் ஒதுக்க இயலவில்லை. சட்டைப் பையில் ஒரு பத்து ரூபாய் நோட்டு மட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறான். அந்நாள் ஆண்டகையிடம் விஷயம் பேசிச் சுமுகமாய்த் தீர்ந்திருந்தால், அவன் உற்சாகமாக அங்கேயே துணியெல்லாம் வாங்கி வருவதாக ஏலிக்கும் வாங்குவதாகப் பணம் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தான். எதுவும் திட்டமிட்டபடி நடப்பதில்லை.

     “என்னம்ப்பு யோசனை செய்றீம்?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்குத் தட்டில் சீடையும் முறுக்கும் பழமும் வைத்துக் கொடுக்கிறாள். பிறகு அவளுடைய தகரப் பெட்டியைத் திறந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொண்டு வருகிறாள்.

     பச்சையில் பெரிய பெரிய இலைகள் போட்ட வாயில் சேலை; மினுமினுப்பான பச்சைத்துணி, ரவிக்கைக்கு.

     “என்னக்கு, சீலை, ஸியா மூட்டக்காரர்கிட்ட வாங்கித் தந்திச்சி, இருவது ரூவா. ஜாக்கெட் துணி மூணு ரூவா... நல்லாயிருக்கா?...” அவன் மௌனமாகக் கையால் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

     “இதத் தச்சிக் குடுக்கிறானாண்டு அந்த சூசையிட்டப் போன. அவெ எப்பிடியோ பாத்திட்டு, பொறவு வாரன் வூட்டுக்கு, அளவெடுக்கண்ணா, அவனைக் கொல்லலாமிண்டு வந்திச்சி...” அவளுடைய கரிய விழிகள் ஈரமாகின்றன.

     “ஸியாகிட்டச் சொன்ன. அந்தப்பய முழியைத் தோண்டிப் போடறமின்னாரு. ஃபிரான்சிஸ்கா அக்கா, நாத் தச்சுத்தருவே. ஆனா, மிசின் தூத்துக்குடில இருக்கு, தச்சிக்குடுத்தனுப்புறேங்கா...” முட்களாய் குத்தும் ஒரு சமுதாயத்தில், மென்மை மிகுந்த அவள் வாழத் துடிப்பதை நினைக்கையில் மரியானுக்குத் தானே குற்றவாளியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. அவன் எழுந்து அவளைத் தாங்கி ஆறுதல் கூறுகிறான்.

     “ஏலியா, நீ வருத்தப்படாண்டாம். நான் எப்பவும் உன்னக்க நெனப்பாகவே இருக்கே. லில்லிப்பொண்ணு பண்டியலுக்கு வார இல்ல. அவ கன்யாஸ்திரீயாப் போறமிண்டு எழுத்தனுப்பியிருக்கா. வூட்ட பண்டியலாவே இல்ல. கொஞ்சம் பொறுத்திரு. நாம எப்பிடியும் கெட்டிப்போம். பின்ன ஒரு பய மூச்சுப் பரியமாட்டா. எதுனாலும் எவனாலும் பேசுனா, அவென வெட்டி வரிப்புலியனுக்கு எரயாப் போடுவம்... ஓம் மனசு எனக்குத் தெரியும்... ஏனளுகாபுள்ள?...”

     அவள் கண்களைத் துடைக்கிறான்.

     அவள் முகத்தில் சம்மனசுகள் இறங்கிவிட்டாற் போன்று அழகிய ஒளி பரவுகிறது. காகிதப் பொட்டலத்திலிருந்து அவனுக்கு வாங்கி வைத்திருக்கும் கைலியையும் கூரான காலர் வைத்த சட்டையையும் பிரிக்கிறாள்.

     “ஸியாதாம் நாஞ் சொன்னமிண்டு இது வாங்கியாச்சு வந்ததா... இது ஒங்கக்க புடிச்சிருக்கா? நல்லாயிருக்கா?...”

     பச்சைக்கரை போட்ட அந்த வேட்டியையும் வழுவழுவென்று ஈரம் ஒட்டாத அழுக்கு ஒட்டாத அந்த நீலக் கலர் சட்டையையும் பார்த்து அவன் கண்கள் கசிகின்றன.

     “நீ இம்புட்டுப் பிரியம் என்னிட்ட ஏம் வச்சிருக்கியே, நா ஒன்னக்க ஒண்ணுமே செய்யலியே?...” என்று கரைந்து போகிறான்.

     “நீங்க ஒண்ணும் செய்யாண்டாம், ராசா. எனக்குப் பாடு படச் சீவனிருக்கி. அந்த அலவாய்க்கரயில, ஒவ்வொருத்தனும் துரிச்சிப் பாக்கறப்பதா நா குறுகிக் குன்னிப் போற. ஒருக்க காவலவிட்டு நா ஓடி வந்தே. பாவம் செஞ்சே. பின்னக்க நீ காவலில்லாம நில்லு. உன்னிய கழுவுகள் கொத்தட்டும். பாவிண்டு மனிசங்க சொல்லால சொல்லட்டுமிண்டு தனிச்சி நிக்கேன்...” அவள் விழி இதழ்களும், உதடுகளும் கண்ணுக்குத் தெரியாத காற்றில் துடிக்கும் தூசிபோல் துடித்து, கண்ணீரைக் கன்னங்களில் புதிதாகப் பெருக்குகின்றன.

     அந்தக் கரிப்புக் கன்னங்களில் அவன் முகம் பதிகிறது.

     “நானும் பாவஞ் செய்தேண்ணு எம்மேல கோவிச்சிக்கிறியா ஏலி?... நீ கவலிக்காத. நிச்சியமா நாம கெட்டிக்கத்தாம் போறம். ஒரு விடியக்காலயில, மஸனாவிக் கெட்டா, நா ஒனக்குத் தாலி கெட்டுவே...”

     கடல் அலைகள் சூழ்ந்து அவர்களுக்கு ஆசீர் அருளுவது போன்று செவிகளில் அலையோசை துல்லியமாக விழுகிறது. விர்ரென்று காற்றுப் புகுந்து நடுக்க ரோமாஞ்னம் உண்டாகிறது.

     அடுப்பிலே அவள் காப்பிக்கு வைத்த நீர் கொதித்து வற்றுகிறது. காய்ந்த முட்செடிச் சுள்ளிகள் எரிந்து தணிந்து சாம்பல் நீறுபூத்துவிட்டன.

     இந்த உலகு மறந்த நிலையில் கடலோசையின் மலர்மாலைகள் மட்டுமே அவர்களுக்கு உண்மையாகத் தோற்றுகின்றன.

     கணங்கள் நழுவினவா, யுகங்கள் தேய்ந்தனவா என்று உணர்வில் உறுத்தாத அந்த நிலையில் எங்கோ கனவுலகின் ஆழத்தில் ஒலிப்பதுபோல் குரல்கள் ஒலிக்கின்றன.

     ஒரு தாயின் ஓலம்...

     “ஐயோ, புள்ள... எம்புள்ள...!” துருப்பிடித்த ஆணி, குருதி புண்ணில் இறங்குவது போன்று அக்குரல் அவனுடைய பிரக்ஞையைக் குத்திக் கனவு நிலையைக் கலைக்கிறது.

     யார் யாரோ பேசும் குரல்கள்.

     “ஏதேனம் சண்டையா? கை கலப்பா?...”

     அவன் சரேலென்று குடிலின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகிறான். பன மட்டைகள் உராயும் ஓசையும் கடலலைகளின் ஓசையும் பின்னணிக்குச் செல்ல, முன்னணியில் பல குரல்கள் மோதுகின்றன. அவன் மணலில் கால்கள் பதிய, கலவரமடைந்த இதயம் குலுங்க, விரைந்து கோயில் பக்கம் நடக்கிறான். என்ன கூட்டம்? கோலாகலங்களான ஆரவாரங்களும், உயர்ந்த ஒலி பெருக்கியிலிருந்தெழும்பிய தேன் குரலின் கீத ஒலிகளும் ஒரு தாயின் ஓலத்துக்கு இடமளிக்க மடிந்து வீழ்கின்றன.

     “படய்க்கம் வாங்கக் காசு இப்பம்தானேலே கேட்டே. ஐயோ, மாதாவே நானென்ன பாவஞ்செய்தேண்டு இப்பிடிக்க தெண்டனை குடுத்தே...!”

     உடலின் ஒவ்வொரு அணுவும் பீதியில் விறைத்து நிற்க மரியான் அது ஆத்தாளின் குரலென்று உணருகிறான்.

     “என்னம்ப்பு... என்னிய என்னாச்சி?” அவன் நா தடுமாறுகிறது.

     “மரியானா? உன்னக்க தம்பி... பீற்றர்தா. பய சீடையைப் பாக்கெட்டுக்குள்ளற வச்சிட்டுக் கடையிலா அடிபடய்க்கம் வாங்கியிருக்கான். ஒரு கையில படய்க்கம் - ஒரு கையில சீட, சீடைய வாயில போட்டிட்டுப் படய்க்கத்தக் கீழே போட்டிட்டு வந்திருக்கியா, தவறிப் போயி, படய்க்கத்த வாயில வீசிக்கிட்டா...”

     “ஐயோ...!”

     ஆயிரம் சாட்டைகளால் அவனை வீசினாற்போல் அந்த ஒலி பிறக்கிறது. அந்த அடி படய்க்கம் தன்னையே துண்டு துண்டாக்கிவிட்டாற்போல் வேதனை தோன்றுகிறது. மறுநிமிடம் அவன் கூட்டத்தை நோக்கிப் பாய்கிறான்.