உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 18 காலைப்பரிதியின் செங்கதிர்கள் அன்றாடம் கடற்கரையில் அரங்கேறும் காட்சிகளைக் காண விரைந்து வருகின்றன. ‘இந்நாள் உன் மைந்தருக்கு நான் அளந்திருக்கும் படி. பார்த்துக் கொள்’ என்று கடலலைகள் கரையை அலப்புகின்றன. மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் ஊர்த் தொழிலாளரும் ஆண்களும் பெண்களுமாக மொய்க்கும் கரையில், சாளையும், களரும், காரலும், நகரையும், கிளிமீனும், கீச்சாமீனும், குரங்கு மீனும், சப்பளி மீனும் பன்னாகத் தாழையும், பல்கிளிஞ்சானும் வண்ண அழகுகளாய் இரைந்து கிடக்கும் கரையில், அந்நாள் அப்பன் இருதயமும் மகன் மரியானும் நாயகராகத் திழக, ஆழ்கடலில் ஆயிரங்கால் தூண்டிலிட்டுப் பெரிய மீன்களைப் பிடித்து வந்திருக்கின்றனர். பல தூண்டில்களில் இரையை வைத்து விசிறிபோல் வீசி ஒன்றாக இணைத்து நங்கூரமிட்டுக் கொண்டு ஒரு பகலும் இரவும் காத்திருந்து போராடி, சிறியதும் பெரியவையுமாக, நான்கடி, மூன்றடி நீளங்களுக்குக் குறையாமல் ஐந்து சுறாக்களைப் பிடித்து வந்திருக்கின்றனர். ஸ்ரா...! ஸ்ரா...! பெரிசு...! என்று காற்றில் அலைகள் மந்திரிக்கும் குரல்கள் எத்துணை ஆனந்தத்தை இதயத்தில் நிரப்புகின்றன! கரையில் மரம் ஒதுங்குமுன் மீன்களை மணலில் வெற்றி வீரர்களாக இழுத்துப் போடுகின்றனர். துவிக் குத்தகைக்காரர் விரைந்து வருகிறார் - மொத்தம் பதினைந்து துவிகள்... மரியான் மரத்தைச் செல்லமாகத் தொட்டு முத்தமிட்டு விட்டு அதைக் கரையேற்றும் பொறுப்பைப் பாச்சல் பிள்ளைகளுக்கு விட்டுவிட்டு விரைந்து மீனின் பக்கம் வருகிறான். “ஆரும் கிட்ட வராண்டாம்! இது எங்கக்க சொத்து... எங்கக்க உரிமை... உரிமை...” என்று முழக்குகிறான். “என்னியலேய், எங்கக்க சொந்தம்? நாலாயிர ரூபாய்க்குக் குத்தவைவிட்டுப் புடிச்சிருக்கே... போயி சாமியிடம் மோதிக்க! துவி எங்கக்க சொத்து!...” வளைந்த கத்தியுடன் மீரான் வருகிறான். “தொட்டிய இப்பம் கொலவுழுகும்!...” வாள் வீச்சாகக் குரல் ஒலிக்கிறது. அந்த மாமிசங்களை இழுத்துக் கொண்டு வந்த முறுகிய ஆவேசம் அவனுள்ளிருந்து வெறிக் குரலாக வெடித்து வருகிறது. கண்கள் சிவப்பேற, உடலின் செம்மை மினுமினுக்க, உருட்சியும் திரட்சியுமான கருங்காலித் தசைகள் விம்மித் துடிக்க, காண்போரை அச்சங் கொள்ளச் செய்யும் வடிவினனாகத் திகழ்கிறான் மரியான். அவன் அவர்கள் கண்முன்பே, தன் கச்சையிலிருந்து உருவி எடுத்த கத்தியின் வளைந்த அலகினால் ஒவ்வொரு மீனின் செதில்களையும் - துடுப்பையும் வெட்டி எடுக்கிறான். எண்ணெயும் தண்ணீருமாய் கோத்துக் கொண்ட சுருள் முடிகள் நெற்றியில் தவழ, அவன் அவற்றைத் தனியாக வைக்கிறான். அவனைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் இருப்பது போன்று, யாரும் அணுக முடியாததோர் அச்சம் நிலவுகிறது. இவர்கள் துவி கொடுக்கமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துத் துணிச்சலாகக் கொச்சிக்காரனுக்கு அவற்றை விற்கத் தொடங்கிய பிறகு, இன்றே இவ்வளவு துவிகள் சேர்ந்திருக்கின்றன. அதுவும் உளுவைச் சுறா. எல்லாம் உளுவைத் துவி; முதல் கிளாஸ்!... “இந்தப் பயலுவ, கடக்கரைய ரெண்டு பண்ணுறானுவ; மீன யாரும் ஏலம் வுடப் போகாதிங்க! போனிங்க...? கொல... கொலவுழும்? வாங்குவாரில்லாம அழுவிப் புழுக்கட்டும்! கடல்ல இழுத்து வுட்டாத்தான் புத்திவரும்! வெள்ளாடுறானுவளா?...” என்று ஜபமாலையான் சவால் விடுகிறான். ஐசக் துவிகளை வலைப் பையில் போட்டுக் கொண்டு நிற்கிறான். அவனை அப்பால் செல்லவிடாமல் எதிர்க்கட்சி சூழ்கிறது. பிச்சைமுத்துப்பாட்டாவுக்கு ஏலம் கூற வருவதற்கு இயலாமல் இடுப்புப்பிடி நோவாக இருக்கிறது. ஏலி, வஞ்சிர மீன் ஒன்றை வாங்கி வந்து அவரிடம் கண்டம் போடக் கொடுத்திருக்கிறாள். கடற்கரையைப் பார்த்த குடிலின் வாயிலில் அவர் கத்தியால் அதை வெட்டிக் கொண்டும், இன்னொரு கையால் மீனின் மஞ்ஞையை வழித்து அருகிலுள்ள நாய் நக்கக் கொடுத்துக் கொண்டுமிருக்கையில் பிள்ளைகள் செய்தியைக் கொண்டு ஓடி வருகின்றனர். “ஸியா? உளுவைச்சுறா, நெம்பப் பட்டிருக்கி. மரியானண்ணே, இருதயம் மாம மரத்துல. குத்தகைச் சாயபு, கோயில் பாட்டியாளுங்க குக்கி விளிக்கியா... மரியானண்ண துவியை வெட்டிச்சி. பொறவு எல்லாம் கூடிட்டு கொண்டு போக ஏலாதுண்டு பட பொருத நிக்கியா...” சுருக்சுருக்கென்று மீனைக் கண்டமிட்ட கை நிற்கிறது. கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப் போன ஏலி பதறி வருகிறாள். அவளுடைய சீடை எமனாக வந்து பீற்றரின் நாவையும் சொல்லையும் பறித்துச் சென்ற பிறகு அவள் கடற்கரைக்குத் தின்பண்டம் செய்து கொண்டு போய் விற்பதில்லை. மீன் வாங்கி வந்து கண்டம் போட்டுக் கூறுகட்டி விற்றோ, உப்புப் போட்டு உலர் மீன் விற்றோ காசு தேடுகிறாள். சிறு பிள்ளைகள் கொண்டு வரும் மீன்களையே சில்லறைக்கு வாங்கி நாடார்விளையில் கொண்டு கொடுத்து வியாபாரம் செய்கிறாள். “ஸியா...? நீங்க... எந்திரிச்சிப் போவ ஏலாதா...? என்னக்கப் பயமா இருக்கி... தூண்டிக்கெளிக்கி ஈசாக்கோலு எல்லாம் வச்சிட்டு அடிச்சிக்கிடுதாண்ணு சந்தியாகு பொஞ்சாதி சொல்லிட்டு ஓடுதா...” பாட்டாவுக்கு இடுப்புப் பிடி நினைவே இல்லை. துள்ளினாற் போன்று எழுந்திருக்கிறார். மார்பின் தளர்ந்த சதை குலுங்க, மணலில் கால் பதிய அவர் விரைகிறார். பெஞ்ஜமின் ஈரத்தலையும் உருட்டிக்கட்டிய கைலியும் திறந்த மார்புமாகக் கைகலப்பை விலக்க முயலுகிறான். ஜபமாலையானின் கையில் இரத்தம் ஒழுகுகிறது. இருதயம் மாமன் மணலில் சுருண்டு கிடக்கிறார். ஆத்தா கத்துகிறாள். சம்சலம்மா யாரையோ வைது தீர்க்கிறாள். சிலுவை மொடுதவம் கையில் தடியுடன் ஒண்ணரைக் கண்ணனுடன் தான் கோயில் கட்சியாள் என்ற மட்டில் இவர்களை வேரறுக்க வேண்டும் என்று சூளுரைக்கிறான். “இந்த வருசன் எனக்கு அம்புட்டும் நஷ்டமாயிட்டு வருவு மாப்ள. படிக்கிப் பாதித் துவிண்ணாலும் குடுக்கச் சொல்லும், நாலாயிரம் குத்தவை எடுத்திருக்கே...” என்று பெரிய சாயபு வந்து பெஞ்ஜமினிடம் நயமாகக் கேட்கிறார். “உம்மிய நாங்க குத்தவை கேட்டுக் கட்டச் சொன்னமா? போன வருசம் ஏலம் வுடு முன்னமே நாங்க தீருமானமாச் சொல்லிப்போட்டம்...” பெஞ்ஜமின் உறுதியாகச் சொல்லிவிட்டு, ஐசக்கிடமிருந்து துவிப்பையை வாங்கிக் கொண்டு நடக்கிறான். “தரகனாரே? நீ ஏ இந்த மயிராங்கிட்டக் கெஞ்சுதிய? போலீசக் கூட்டிட்டுவாலே! இவனுவளக் குறுக்க முறிச்சிப் போடுவம்?...” என்று சிலுவை மொடுதவம் குடிமகன் சக்கிரியாஸூக்கு உத்தரவிடுகிறான். அப்போது இன்னாசியின் படை, தடியும் கோடரியுமாகக் கடற்கரையை நோக்கி வருகிறது. பச்சையைப் பறி கொடுத்தவன் மற்றவனைப் பழிவாங்க இதுவல்லவா தருணம்? அந்தக் கூட்டத்தைக் கண்ட சாயபு மீரான் அனைவரும் பின்வாங்குகின்றனர். கொச்சிக்காரச் சம்பை இறால்பையுடன் வேடிக்கை பார்க்க நிற்கிறான். பயமறியாத இளம்பிள்ளைகள், சில சிறுமியர் ஆங்காங்கு மணலில் கிடக்கும் மீனையே பார்த்தவாறு நிற்கின்றனர். மரியான் புகையிலையைக் கிள்ளி வாயில் போட்டு அதக்கிக் கொண்டு மணலில் எச்சிலைத் துப்புகிறான். ‘நாம நெத்தத்தக் கக்கித் தொளில் செஞ்சி இளுத்திட்டு வாரம். குத்தவை எடுத்தானாம்...’ மீன்கள் வாயைத் திறந்து கொண்டு கிடக்கின்றன. ஈக்கள் அவற்றின் தூண்டில் மாட்டிய காயத்தில் கசியும் இரத்தத்தில் கடற்கரை மீன்வாடியில் குழுமும் மனிதக் கூட்டத்தைப்போல் மொய்த்திருக்கின்றன. ஆனால், அப்போது மீனை ஏலம் கூறப் பிச்சைமுத்துப்பாட்டா வந்தாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளை அங்கே இழுக்கும் கவர்ச்சியோ வேகமோ இல்லை. இன்னாசியின் படை மணலில் காவலர்போல் கம்பு குத்தி நிற்கிறது. “பாட்டா? நீரு ஏலம் கூவும்... எல்லாம் வாங்க? மீன் ஏலம் வுடுதா...” என்று சார்லஸ் கூவியழைக்கிறான் வியாபாரிகளை. சைக்கிளில் பெரிய மீன் கூடைகளுடன் கொச்சிக்காரச் சம்பைகள் இங்கொருவர், அங்கொருவராகச் சிலர் வந்து நிற்கின்றனர். “மக்கா? மாதா ஆசீரிருக்கு. நாம முடிவு பண்ணினா பண்ணதுதா. மடிப் பெட்டிய இப்படிக் குடு லே!” என்று பிச்சைமுத்துப்பாட்டா அவனை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் அப்பனோ, “என்னம்ப்பு முடிவு...? ஒரு பய தொடக்கூடாதுண்டு இவெ சொன்னா, அவனுவ, ஒரு வியாபாரி தொடமாட்டாண்ணு முடுக்கிட்டுப் போயிட்டா?...” என்று பிரலாபிக்கிறார். “அவனுவளக் கொல்லணும். நம்ப எனத்துக்கே துரோகம் செய்யிறானுவ. அவெ வியாபாரி லட்சக் கணக்கில் பணம் மொடக்கிறா. நம்ம ஒழப்பில... நீ ஒண்ணும் முசிக்காண்டாம் மக்கா... இன்னக்கி மட்டும் வியாபாரி ஆரும் வராம போவட்டும். இவனுவள மீனு கண்டம் வய்க்கிறாப்பல வச்சிருவம். நாய்க்கிப் பெறந்தவனுவ, துரோவிப் பயலுவ!” பாட்டா கத்திக் கொண்டிருக்கிறார். மீனுக்குக் காவலாக நிற்பது போல் நிற்கும் மரியானுக்கு உள்ளத்தில் எரிமலை ஒன்று குமுறிக் கொண்டிருக்கிறது. உச்சிக்கு மேல் ஏலம் கூறிப் போட்டி மேலிட, விலை உயர்ந்து போகும் வாய்ப்பு இல்லாமல் கொச்சிக்காரச் சம்பை, துவி, மீன்கள் எல்லாவற்றையும் இருநூறுக்கு எடுத்துச் செல்கிறார். போட்டி இருந்திருந்தால் இன்னும் நூறு ரூபாய் வந்திருக்கும். மீனை விலை கூறிவிட்டுத் திரும்புகையில் அந்தக் கடற்கரையையே அழித்துவிடப் போதுமான ஆவேசம் அவனுள் கொந்தளிக்கிறது. சரியான ஏலம் போடப் போட்டி வந்திருந்தால் இன்னும் நூறு... நூறு ரூபாய்...? சென்ற ஆண்டில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் அனைவரும் அவர்கள் பக்கமிருந்தார்கள். இப்போது பயப்படுகிறார்கள்? ஏனெனில் வியாபாரிகள் கோயிலுக்கு எதிராக முளைப்பவர்களுக்கு ஆதரவு காட்டினால் வாழ முடியாது... ஞானஸ்நானத்திலிருந்து, மையவாடியில் இடம் கிடைப்பது வரையிலும் தகராறாகி விடுகிறது. அடக்க இயலாமல் ஆற்றாமை பொங்கி வருகிறது. கடல்... அதன் வலிமை இந்தக் கோயிலை விடப் பெரிதல்லவா? சாமியைவிடப் பெரிதல்லவா... கடல்... அதுவே மாதா. அதுவே பிதா... அதுவே கடவுள். அதை விட இவன் என்ன? கடல் அவனை ஆசீர்வதிக்கிறது; காற்று அவனுக்கு ஆசீரருளுகிறது. அவன் முன்பு... சிறு பையனாக இருக்கையில் ஒருமுறை கையில் துட்டுடன் இப்போது நாகர்கோயிலில் வாத்தியாராகத் தொழில் செய்யப் போய்விட்ட நாடார்ப் பையன் அருள் தாசுடன் வடை வாங்கித் தின்றுவிட்டுச் சாராயமும் குடித்தான். பழக்கமில்லாதபடி தலை சுற்றி வாந்தியெடுத்தவனுக்கு அந்த அனுபவம் மிகவும் வெறுப்பாக இருந்தது. மறு சனிக்கிழமை, நல்ல பிள்ளையாகச் சாமியிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்து கொண்டான். இன்று அப்பன் சாராயம் ஊற்றித் தருகிறார். இரு நூறு கிடைத்திருக்கிறது. இரண்டு நாட்கள் கடலில் போராடி மீன் கொண்டு வந்திருக்கின்றனர். ஆத்தா பொடிக்காரல் கருவாட்டை வறுத்து வைத்திருக்கிறாள். அதைக் கடித்துக் கொண்டு குடிக்கும் அப்பன் மகனிடம், ‘குடிலே - ஒடம்பு லேசாயிரும்...’ என்று ஊக்குவிக்கிறார். அவன் குடிக்கிறான். அன்றுபோல ஓங்கரித்து வரவில்லை. இரண்டு ‘கிளாஸ்’ பருகியதும் ‘சூர்’ பிடிக்கிறது. உள்ளே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. வெளியே நிலா அடிக்கிறது. மணற்கரை சொப்பனபுரி போல் விரிந்திருக்கிறது. வெளியே செயமணியும் மேரியும் சார்லசும் குந்திக்கொண்டு ஏதோ கதை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவன் இலக்கு இல்லாதபடி சுக்கானில்லாத மரம் போல் மிதந்து செல்கிறான். கடலலைகள் ஏற்றியும் இறக்கியும் அவனை மிதந்து செல்லக் கொண்டு செல்வது போன்றே செல்கிறான். கோயில் முன் எட்வின் வழக்கம் போல் கொடிக் கம்பத்தினருகில் நின்று பேசுகிறான். “சவோதர சவோதரிகளே... இப்பம் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... சவாசு! கை தட்டு மாப்ளே! கைதட்டு!” அவனைப் பிடித்துக் கொள்கிறான் எட்வின். இவன் கையைப் பலமாகத் தட்டுகிறான். “சவாசு மாப்ளே! சவாசு!” “சவோதர சவோதரியளே! இந்தப் பாதிரிப் பயல் அயோக்கியன். இவெ கிறீஸ்துநாதர் சொன்னாருண்டு சொல்றான். கிறீஸ்துநாதர் எங்கிய இருக்காரு?...” கேள்வியைக் கேட்டுவிட்டுக் கையை ஒரு பக்கம் சுட்டிக் காட்டுகிறான். “அதா கடல்ல இருக்கார். ஆமா... கடல்ல... கடல்ல மச்சம் தானிருக்குன்னு நீங்க சொல்றிய. நாஞ் சொல்லுதேன், மச்சமிருக்குண்ணு. மச்சம் பிடிப்பவனுக்கு மிச்சமில்ல... கேட்டுக்கும் மாப்ள. அதனால, அந்தப் பாதிரிப்பயல, ஒளிச்சிக் கெட்டணும்... வாரும் மாப்ள...? படை பொருதுவம்! போர்... போர்...” அவர்கள் இருவரும் பாதிரியாரின் பங்களாவுக்கு முன் சென்று மண்ணை வாரி எறிகின்றனர். பிறகு வாயில் கேட்டின் மீதேறி நின்று ‘சாமியார் ஒழிக...’ என்று எட்வின் முறை வைக்க, மரியானும் சேர்ந்து கத்துகிறான். கதவைத் திறந்து கொண்டு தடியுடன் ‘சீடப்பிள்ளை’ வெளிப்படவே இருவரும் மணலில் ஓடுகின்றனர். மரியானுக்கு நல்லறிவு இல்லை. ஓட்டமும் நிலையாக இல்லை. தடுமாறிக் கொண்டும் விழுந்து கொண்டும் பழக்க வேகத்தில் ஏலியின் குடிலுக்கு வருகிறான். வாயிற்படியில் பனநார்க் கட்டிலில் படுத்திருக்கும் பிச்சமுத்துப்பாட்டாவின் மீது விழுகிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|