2

     தொழிலுக்குச் சென்று வந்ததும் கையுடன் தெற்குக் கோடியில் உள்ள பெரிய கிணற்றில் குளித்துவிட்டுத்தான் அநேகமாகப் பலரும் வீடு திரும்புவார்கள். அதிகாலையில் தொழில் செய்யும் நாட்களில் கட்டுமரத்தில் உணவு ஏதும் அவர்கள் அநேகமாக எடுத்துச் செல்வது வழக்கமில்லை. குளித்து நீராகாரம் அருந்திவிட்டு வெயிலில் பாயையும், வலைகளையும் காய வைத்துக் கொண்டு, அன்றாடம் அறுந்த பகுதிகளைப் பார்த்துச் செப்பம் செய்ய வேண்டும்.

     மரியான் அந்தக் கடற்கரையில் அபூர்வமான ஒரு இளைஞன். அவன் குடிக்கச் செல்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன், குரல் உடைந்து வாலிபம் மீறி வரும் கிளர்ச்சியுடன் அவனைப் போன்ற பிள்ளைகள் சிலருடன் அவன் பனவிளையில் சென்று குடித்தான். முதலிலேயே அவனுக்குக் குமட்டிக் கொண்டு எப்படியோ வந்தது. வாயிலெடுத்துக் கொண்டு சாய்ந்து விட்டான். நள்ளிரவுக்கு மேல் அவன் ஆடிக் கொண்டு வீடு வந்த போது ஆத்தா அவனை மொத்தி விட்டாள். இதெல்லாம் கடற்கரையில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிகளே. ஆனால், மரியானுக்கு அதற்குப் பிறகு கள், சாராயம் என்று யார் குடிக்கத் தூண்டினாலும் உடனிருக்கப் பிடிக்காமல் போய்விட்டது.

     வீட்டு வாயிலில் பீற்றர் வலையைக் கோட்மாலில் கட்டியபடியே கொண்டு போட்டிருக்கிறான். கருவாட்டுப் பெட்டி கீழே சாய்க்கப் பெறாமல் வெயிலுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மணல் முற்றத்தை அடுத்த சிறிய ஓலைக் கூரைத் தாழ்வரை; நடு விடென்ற பகுதி சுமாரான கூடம், பின்னால் ஒரு ஓரமாகக் குசினி. அது ஓட்டுக் கட்டிடமல்ல; புறக்கடை வாயில் வழியே கடலை எப்போதும் பார்க்கலாம். புறக்கடையில், உரல், குந்தாணி, முன்னாள் கட்டுமரம் இருந்ததை அறிவிக்கும் வகையில் அடக்காவிக்கட்டை, பாய்க்குத் தூர் (* தூர் - புளியங்கொட்டையின் தோலிலிருந்து தயாரிக்கப் பெறும் சாயம்.) நனைத்து வைக்கும் பெரிய ஆமை ஓடு, கிழிந்த வலைகளின் குவியல் என்று உபயோகமுள்ளதும் இல்லாதவைகளுமான, எறிய மனம் வராத சாமான்கள் இடம் பெறும் முற்றம். வலப்பக்க அடுத்த சந்திலுள்ள பொதுக் கிணற்றிலிருந்துதான் புழங்க நீர் கொண்டு வரவேண்டும். நல்ல குடிநீர்க் கிணற்றுக்குக் கோயில் பக்கம் உள்ள பொதுக் கிணற்றுக்கோ செல்ல வேண்டும்.

     பின் முற்றத்தில் கொடிகளைக் கட்டி மேரி துணி துவைத்து உலர்த்தியிருக்கிறாள். அவள் துணி துவைக்காத நாள் கிடையாது. போன பிறவியில், இவள் வண்ணாத்தியாகப் பிறந்திருக்க வேண்டும்! வாசலிலிருந்தே பூப்போட்ட சேலை தெரிகிறது. “அண்ணே, தொடாதே, அளுக்காயிரும்...” என்று அருகில் போனாலே எச்சரிக்கை செய்வாள்.

     “ஏக்கி, மேரி? சருவத்தில் வெந்நி இருக்கா? குளிக்கத் தண்ணி வச்சியா? பசி எடுக்கு...”

     அப்பன் அப்போது நார்க்கட்டிலில் ஓர் இருமலுடன் எழுந்து உட்காருகிறார். அவனுடைய இன்னொரு தங்கை, செயமணி, நாடார் விளையிலிருந்து பன ஓலைகளுடன் வருகிறாள். இந்த ஓலைகளைச் சன்னமாகக் கிழித்து அந்த நாரினால் பெட்டிகளும் தட்டுகளும் முடைந்து செபஸ்தி நாடாரிடம் கொடுக்கிறார்கள். நாகர்கோயில், தூத்துக்குடி என்று அவன் கடைகளில் விற்க இதை வாங்குகிறான். இவர்களுக்கு வாரத்தில் நான்கு, ஐந்து என்று பணம் வருகிறது. செயமணி பள்ளிக்கூடத்தில் ஏழுக்கு மேல் படிக்கவில்லை. இந்த வருஷம் எட்டுப் போக வேண்டும். மேரி இரண்டு வருஷம் முன்பே எட்டு முடித்துவிட்டு ஜோசஃபின் சிஸ்டருடன் கள்ளிகுளம் கான்வென்டில் பத்து படித்து டிரெயினிங் எடுக்கப் போவதாக இருக்கிறாள். அவளைத்தான் நசரேனுக்குக் கட்டுவதாக முடிவு செய்திருக்கின்றனர்.

     கடைசித் தம்பி சார்லசு, கையில் நாலைந்து நகரை மீன்களும், சட்டைப் பையில் வேர்க்கடலையுமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டு அப்போது வருகிறான்.

     மரியான் அவனைப் பிடித்திழுத்து வேர்க்கடலைகளை எடுத்துக் கொண்டு, “நவரையா? சுட்டிக் கொண்டா. நல்ல தீயில போடு...!” என்று அனுப்புகிறான்.

     “ஏக்கி மேரி, குசுனில என்ன பண்ணுதா இவெ? எம்பிட்டு நேரமாச்சு, நா கருப்பட்டித் தண்ணிகேட்டு... இந்த இருமலு...” என்று அப்பன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமுகிறார்.

     “காரலவிச்சிச் (*காரல் - சிறுமீன் வகை) சாறெடுத்துத் தாரேண்டு உங்காத்தா சொல்லுதா. ஆனா, அவக்குப் பொளுதெங்கே இருக்யு? கரெக்குப் போவுறதும், கடய்க்குப் போவுறதும், கருவாடு போடுறதும், எந்தக் களுத வெள்ளாடு குட்டி பிதுக்கறாப்பல பிதுக்கினாலும் இவ மருத்துவம் பார்க்கப் போவுறதும்... எங்கியலேய் உன்னாத்தா?...”

     மேரி லோட்டாவில் சுக்கும் மல்லியும் கருப்பட்டியும் கலந்து இறுத்த கசாயத்தைக் கொண்டு வருகிறாள்.

     “ன்னாருங்க...”

     அப்பன் அதைப் பருகிவிட்டு லோட்டாவை மகளிடம் தருகிறார். காய்ச்சலடித்து, இப்போதான் தேறி வருகிறார். அப்பன் ஒரு நாள் கூடக் காரணமின்றிக் கடலுக்குப் போகாமலிருந்ததுமில்லை. முழுசாக ஒரு மாசத்துக்கு மேலாகி விட்டது. காலெல்லாம் வெளுத்துப் போயிருக்கிறது. முகத்திலும் செம்மை வாய்ந்த உரம் கரைந்து விட, கண்கள் குழிய, முகத்தில் தாடி ஏற, அப்பனைப் பார்க்கவே அடையாளம் தெரியவில்லை.

     “குடிமவெ இன்னாசிய வரச் சொல்லிச் சவரஞ் செஞ்சிக்கணும்...” என்று முகத்தைத் தடவிக் கொண்டவராக அவனிடம், “ஏன் லேய், இன்னிக்குப் பாடு எம்புட்டு?...” என்று கேட்கிறார்.

     மரியான் வேர்க்கடலைத் தொலியை ஒதுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறான்.

     “ஒண்ணும் வாசீல்ல. சொந்த மரத்தில் தொழில் செய்யணும் - கோயில் தெறிப்பு. குடிமவமீனு அது இதுண்டு போயி, ஆளுக்குப் பாதிண்ணா, இந்த மீன் படுற காலத்திலும் நாளுக்குப் பத்து ரூபா இல்லேண்ண? அவனக்க மரம்; சம்மாட்டியாட்டம் பேசுதா!” (*சம்மாட்டி - கட்டுமரச் சொந்தக்காரன்)

     அவனுடைய உள் மனதில் நசரேனுடைய தாய் கூறிய சொல் இப்போதும் ‘சுருக்’கென்று உறுத்துகிறது.

     ‘கிளாசாளுங்களுக்குச் சமமா ‘நிக்கிறோம்’ என்று சொன்னாளே?’

     “ரொம்பக் கெருவம் பிடிச்ச பொம்பள... நாம தன்னத் தான் பேணிக்கிட்டு நிக்கிறதுதாஞ் சரி...”

     அப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.

     “என்னிய லேய், திடீர்ன்னு? என்னாச்சி?”

     “நமக்கு ஒரு மரம் கூட்டணும். பெஞ்சமின் மச்சாங்கூடச் சொன்னா. சர்க்காரு கடங்குடுத்து வள்ளங்கூட வாங்கலாமிண்ணு...”

     “அது லாஞ்சில்ல? அஞ்சு வருச முன்னியே நசரேன் அப்பா கூட ஆளுக்கு நூறுதான். கட்டிவய்ப்போமிண்ணாரு. பின்ன சருக்கார் நாலாயிரம் கடன் தந்து போட்டுக் குடுக்காங்க. தொழிலுக்கு விருத்தியிருக்கும். வருசமுளுக்க மட (*மட - மடை - கடலில் சேறாக உள்ள பகுதி) பாத்துத் தொளில் செய்யமிண்ணாரு. பெஞ்சமின் கெட்டினா, சந்தியாகு கெட்டினா. ஆருக்கும் ஒண்ணும் இது வரய்க்கும் வார இல்ல. லாஞ்சி அப்படியே கவருமென்டு கடனுக்குக் குடுத்தாலும், இங்கிய தொழில் செய்ய முடியாது லேய், ஊரோடு ஒத்து வாழு...”

     “இல்லியப்பா. நாம இப்பம் சர்க்காரு கடன் குடுக்குதாண்டு விசாரிச்சி, தனிச்சு மரமோ வள்ளமோ, லாஞ்சோ வாங்கணும்...”

     அவனுக்குத் தன்னை அவள் கூலியாள் என்று சொன்னது பிடிக்கவில்லை. வலை போடுவதிலும், இழுப்பதிலும், அவன் சிறந்த தொழில்காரனென்று பெயர் பெற்றவன். நசரேன் புறதலையில் நின்று மரத்தைச் செலுத்தினாலும் ஆணையிடும் நிலையிலிருந்தாலும், வலை வைப்பதிலும் இழுப்பதிலும் இவனைப் போல் அவ்வளவுக்குத் திறமில்லாதவன். பீடியைக் குடித்துக் கொண்டு தான் ஆணையிடுவதற்கே நிற்பதாக அவனுக்கு இப்போது தோன்றுகிறது.

     “அதென்னலேய் நிக்கிறது? வட்டக்காரன்னாலும் ஆணத்துக்கு மீனெடுத்திட்டு. முன்னப்பின்னப் பாத்து வட்டக்காசு வாங்கிக்கிடுவா. சர்க்காருக்கு மாசத் தவனை தலய அடவு வச்சானும் கட்டித் தீரணுமில்ல?”

     “அப்பா, வட்டக்காரம் பேச்ச எடுக்காதேயும்! அவெ என்ன செய்யிறா? சம்மாட்டி - சொந்தக்காரன்னாலும் மரம் பாரில பட்டு ஒடஞ்சாலும், வலகிளிஞ்சாலும் பொஞ்சாதி தாலிய வித்துண்ணாலும் நட்டம் குடுக்கான். இவெ ஒண்ணுமில்லாம ரிஷ்டுவாட்சும், உருமாலுமா கடக்கரயில வந்து நம்ம பாட்டைக் கொள்ளடிக்யா. ஆறில ஒண்ணு வட்டக்காசு, பின்ன இவெ கடன் வேற அப்படியே நிக்கு... சர்க்காரு அப்பிடியில்ல, அதில நாயமிருக்கும். தொழில் வாரப்ப தவணை கட்டுறம்?”

     “அட போலேய், சர்க்காரு கடன் அம்மாட்டும் சுளுவா வந்திடுமா? வட்டக்காரரைப் பேசுதே. இந்தக் கரயில அட்டியில்லாம எப்பம் போனாலும் பணத்தக் குடுக்கிறவம் பின்ன ஆரு? கடம் வாங்கி லாஞ்சு வாங்குவே. பொறவு வல...? அதுக்கு வட்டக்காரங்கிட்டப் போவியா?...”

     செயமணி பன ஓலையை மிக அழகாக நார் கிழிப்பதைப் பார்த்துக் கொண்டே எதுவும் பேசத் தோன்றாமல் மரியான் நிற்கிறான். யார் மீதென்று சொல்லத் தெரியாதோர் ஆத்திரம் பொங்குகிறது.

     “ஒரு பய மரத்தில ஏறுதோமின்னுதான் கூலி, கிளாசாளு, அது இதுண்டு பேசுதா அந்தப் பொம்பிள? நசரேண்ட ஆத்தா?”

     அப்பனுக்கு இப்போதுதான் புரிகிறது.

     “சொல்லிட்டா என்னியலேய்? மரக்காரன், வலைக்காரன், வள்ளக்காரன் எல்லாம் கடலை நம்பிக் கஞ்சி குடிக்கிறவதா. இன்னைக்கு வரும்; நாளைக்குப் போவும். கடலை நம்பியிருக்கிறவனுக்கு எதுலே சாசுவதம்? ஒண்ணில்லாம போவே. கடல் நாச்சி மடி நிறைய அள்ளிக்கண்ணு குடுப்ப. ஒருக்க, கெளுத பட்டிச்சி பாரு... செங்கலடுக்கி வச்சாப்பல. அத்தினிக்கத்தினை உசரம் அவலம் - மடி இளுக்குது கீள. நசரேண்ட அப்பெ அம்புரோசு மச்சானும் நானுந்தான் இளுத்தோம் வலய. அந்த ஒரே நாளில, நாலு நூறு அந்தக் காலத்தில் சம்பாதிச்சோம் லேய். தட்டு மடியில! (*தட்டுமடி - பழைய நாளைய வலை) த்தா பெரிய இலுப்பா (*இலுப்பா - ஒரு வகைச் சுறாமீன்) கட்டி இழுத்திட்டு வந்திருக்கோம். மரத்துல தூக்கி வக்ய முடியாது பளு... வள்ளச் சொந்தக்காரனுக்கு லாப நஷ்டமிண்டு பயம். இன்னிக்குப் பாடு இருக்காது. வல பாரில பட்டு அந்து போவும். அவந்தா கடன்பட்டுப் புதுவலை வாங்கி வருவா. மக்யாநாளு அந்நூறு ரூபா மீன்படும். அப்ப வலக்காரனுக்கும் தண்டுக்காரனுக்கும் (* தண்டுக்காரன் - கொம்பால் கட்டுமரத்தைச் செலுத்துபவன்) மொதநா நஷ்டத்தைக் கணக்காக்கிக் குறைக்கிறானா? இல்ல, முந்தினநா நஷ்டம் அவனோட, இன்னக்கு பங்கு, இன்னக்கிப்படி... இன்னைக்கிக் கடல் நாச்சி குடுக்கும். நாளாக்கிப் பட்டினி போட்டாலும் போடும். அது நாளயப் பாடு. இதான்லேய் கடல் தொழிலாளிக்கு வரச்ச வரை. கடப்புறத்தில் காத்தையும் அலையையும் எதிர்த்து ஆழில போறவனுக்கு, ரோதமும் பகையும் உண்மயாம்படியே கெடயாதுண்டு வச்சிக்க. கோவம், பாவம் எல்லாம் இந்தக் கரையோட. தண்ணில போகையில, மன்னாடி மன்னாடிதா. (* மன்னாடி - படகுத் தலைவன்) காணாக்காரன் காணாக்காரந்தா. (* காணாக்காரன் - கட்டுமரத் தலைவன்). வலக்காரன் வலக்காரந்தா. (*வலக்காரன் - வலைக்காரன்) அவெஞ் சொல்லுக்குக் கட்டுப்படுகிறது தொழில். அங்கிய போய் ஒருத்தம் பேச்சு ஒருத்தன் கேக்க மாட்டோமிண்ணா தொழிலா நடக்கும்?...”

     “அது சரிதாப்பா, இப்பம் இல்லையிண்டு நாஞ் சொன்னனா?”

     “பின்ன எதுக்குச் சொணங்குத? அவ உசந்த எடத்திலேந்து வந்தவ. அவங்கல்லாம் ஸ்லோன்ல ‘ஸ்டீவ்டோரா’ ஆயிரம் ஆயிரமாச் சம்பாதிச்ச குடும்பம். இப்பம் கூட அவ அண்ணன் தம்பி, சித்தாத்தா பெரியாத்தா மக்க எல்லாம் ஸ்லோன்லயும் இருக்காங்க. தூத்துக்குடியில வியாபாரம் பண்ணுறாங்க. புன்னக்காயல்ல பெரீ... யவூடு நாம் போயிருக்யே. அவ கிளாசாளுன்னா என்னாயிரிச்சி? தண்ணிமேல கோடைக்காத்துக்கு முன்ன மரம் மறியறப்ப மரக்காரன் காணாக்காரண்ணும் வலைக்காரன் தண்டுக்காரண்ணும் வித்தியாசமில்லலேய்! இதுக்குப் போயி சல்லியப்படுதே?...”

     “அண்ணெ, வெந்நி எடுத்து வச்சிருக்கே... துணி மேல தெறிக்யாம குளிச்சிக்க...” என்று மேரி குரல் கொடுக்கிறாள்.

     “இவெ பெரிய கவுணரு மவெண்ணு நெனப்பு. துணியெல்லாம் எடுத்துப் போடு. இல்லாட்டி வெளியே வந்து இந்தப்புறம் குளிப்பே...”

     “ஆத்தா சிலம்பும், கருவாடு காய வய்க்கணும் அண்ணே. நாந்துணியெல்லாம் ஒதுக்கிப் போடுறே...” என்று பின்புறக் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய பூப்போட்ட வாயில் சேலை, பாவாடை, பிளவுஸ், பாடீஸ், செயமணியின் பாவாடை, அப்பனின் லுங்கி எல்லாவற்றையும் ஒதுக்கிப் போடுகிறாள் மேரி.

     பாய்த்துண்டைத் தூக்கியும் குத்தி வைத்தும் தண்டு வலித்தும் துடுப்புப் போட்டும் வலை இழுத்தும் தசைகள் இயங்கி நொம்பரப்படுவதை மறக்கவே கடல் தொழிலாலர் எல்லோரும் திருட்டுச் சாரயத்தை நாடுகின்றனர் என்பது முடிவான தீர்ப்பு. மீன் குட்டிபோல் கடலிலேயே முக்குளித்துத் துள்ளும் சிறு பிராயத்தில் அந்த அயர்ச்சியும் நோவும் உறைக்காது. ஆனால் வாலிபம் கிளர்ந்து மண்ணின் உப்புக்கள் உணர்வில் உறைக்க வேக எழுச்சிகள் சக்திகளாய் வெளிப்படும் காலத்தில், பாடுபட்டு அயர்வு காண்பதற்கு ஒரு மாற்றையும் நாடுகிறான். அப்போது உடலின் ஆற்றலும் வேட்கைகளுமே அவனை ஆட்டிப் படைக்கின்றன. மரியான் சாராயத்தை நாடுவதில்லை. ஆத்தாள் அவனுக்குக் கடல் பாடு கண்டு வரும் போது சருவம் நிறைய வெந்நீரைக் காய வைத்து மேலே ஊற்றுவாள்.

     சருவத்து நீரை வாளியிலும் தொட்டியிலும் வளாவிக் கொண்டு அவன் குளிக்கிறான்.

     அவன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே ஆத்தா வந்து விடுகிறாள். கரையில் மீனெடுத்து, மேட்டுத் தெருவில் வாத்தியார் வீடு, தபாலாபீசு மாஷ்டர் வீடு, நாடார் விளை என்று விற்று விட்டு, கடையில் தேவையான உப்பு புளி எண்ணெய் என்று வாங்கி வந்திருப்பாள். இவனுடைய பணத்தை மேரியிடம் தான் கொடுத்திருக்கிறான்.

     குளித்துவிட்டு வந்ததும் நேராக அவன் குசினிக்குள் நுழைகிறான். கிழங்கு போல் மாவாக, நெருப்பிலிட்டுச் சுட்ட நகரை மீனைத் தம்பி அடுப்படியில் தின்று கொண்டிருக்கிறான்.

     ஆத்தா கூடையில் இலைப் பொதியில் அவனுக்காக வாங்கி வந்திருக்கும் ஆச்சிகடை இட்டிலிகளையும், துவையலையும் வைக்கிறாள். அடுப்பிலே இப்போதுதான் அரிசி போட்டிருக்கிறாள் மேரி. நீர்ச்சோறு கருவாடும் இட்டிலியும் பசித்தீயை அவிக்கையில் சிவப்பி நாய் அப்போதுதான் சோலிமுடிந்து வந்தாற் போன்று நேராக அவனிடம் குசினியில் வந்து ஒட்டிக் கொண்டு படுக்கிறது.

     “ந்தா. போ...!” என்று ஆத்தா விரட்டிவிட்டு, ஆணம் கூட்ட மசாலைப் பொருள்களை எடுத்து வைக்கிறாள்.

     அது போகாது. குட்டியாக இருந்த நாளிலேயே கொண்டு வந்த நாய் அது. அவன் உண்ணும் போது ஒரு துண்டு மீனானும் அவனிடமிருந்து பெற வேண்டும்.

     வயிறு நிறைந்ததும் வாயிற் பக்கம் ஆத்தா கருவாடு காய வைப்பதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தவனாகப் பீடியைப் பற்ற வைத்துக் கொள்கிறான். உப்பிட்ட சாளை. வெயில் தீவிரமாக இல்லை. இனி நினைத்தால் வானம் மூடிக்கொண்டு தூற்றல் போடும் நாட்கள். கருவாட்டு வியாபாரம் எதுவும் செய்ய இயலாது.

     ஆத்தா அப்பனைப் போல் வாய் திறந்து பேச மாட்டாள். நசரேன் ஆத்தாளுக்கும் இவளுக்கும் எத்தனை வித்தியாசம்? இவளுக்குப் பிறந்த வீட்டிலும் வண்மை கிடையாது. சித்தாத்தா மகன் ஒருவர் ஆல்ந்தலையில் கொஞ்சம் செயலாக இருக்கிறார். வேறு யாரும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. குடிக்கக் காசில்லை என்றால், இந்த அப்பன் அவளை முடியைப் பிடித்து இழுத்து அடிப்பார். குடித்துவிட்டுச் சில நாட்களில் எங்கேனும் நிலை மறந்து விழுந்திருப்பார். யாரேனும் தாங்கலாகக் கூட்டி வருவார்கள். ஆத்தா ஒரு பெருமூச்செறிவாளே ஒழிய எதுவும் பேசிவிடமாட்டாள். அப்பனுக்குக் கையில் காசு கிடைத்த நாளில், குடித்துவிட்டுச் சந்தோஷம் கொண்டாடுகையில் ஆத்தாளிடம் சல்லாபம் செய்வதையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். “ஏக்கி, நமக்குக் கலியாணங்கெட்டி இருபத்தஞ்சு வருசமாவப் போவு. அத்தைக் கொண்டாடணும். பெரி...சாக் கொண்டாடணும்... அப்பமும் ஒயினும் காணிக்கை வச்சி, சாமிகிட்டக் குடும்பத்தோட ஆசிர் வாங்கணும்... எல்லாம் சுவடிச்சி... தனி பூசை...” என்று வித்தாரமாக நீட்டுவார்.

     ஆனால் ஆத்தாளின் சேலையில் அழுக்கு; தலை சீவி முடிவதில்லை. கன்னங்கள் தேய்ந்து, கண்கள் குழி விழுந்து, மெலிந்து கிடக்கிறாள்.

     சட்டென்று ஏலியின் நினைவு வந்து விடுகிறது.

     அவளும் இப்படித்தான் மெலிந்து கிடக்கிறாள். அவள்... இப்போது... உள்ளமெல்லாம் கதகதப்பாக நிறைகிறது.

     வலைகளை விரித்து வெயிலில் போடுகையில் ஆத்தா அவளிடம், “எதுக்காவலேய் ரெண்டு பேரும் கட்டி உருண்டிங்க? கோயில் தெறிப்புக்குக் கள்ளம் செஞ்சு துட்டு மிச்சம் புடிக்கிறீங்களாலேய்?...” என்று கேட்கிறாள்.

     அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டாற் போலிருக்கிறது. ஆத்தாளைத் திரும்பியே பாராமல், வலையில் அறுந்துபோன பொத்தலைப் பரிசீலனை செய்கிறான்.

     “இப்பிடித் துட்டு மிச்சம் புடிச்சி, கண்ட களுதய்க்கும் கொண்டு கொடுக்கே?...”

     அவன் முகம் ஜிவுஜிவென்று சொலிக்கிறது.

     “என்னம்பும் சொல்லிப் போடாதேயும்! ஆருக்குக் கொண்டு குடுக்யா? மேரியிட்டக் குடுத்தேம்...”

     அப்போது நசரேனின் குட்டித் தங்கை, லிஸிப்பெண் வருகிறாள். “மரியானண்ணயக் கூட்டிவரச் சொல்லிச்சி ஆத்தா. மாமெ வந்திருக்யா...”

     அவன் நிமிர்ந்து பார்க்கிறான். அம்மையைப் போல் இந்தத் தங்கை அழகுப் பெண். குண்டு முகம்; உருண்டைக் கண்கள். கிறிஸ்து பிறந்த நாளில், இவளை மாதாவைப் போல் ஜோடித்து ஒரு வருஷம் தீபாலங்கார வண்டியில் ஏற்றி ஊர்வலம் கொண்டு வந்தார்கள்.

     “எந்த மாமெ...?”

     “என்னக்க மாமெ... மச்சாது மாமெ... தூத்துக்குடிலேந்து வந்திருக்யா... பிளசர் காருல...”

     மரியான் உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறான். ‘பிளசர்’ காரில் வந்து இருக்கும் மாமன் அவனை எதற்குக் கூப்பிட வேண்டும்?

     “போயி என்னியெண்டு கேட்டிட்டு வா லேய்!”

     ஆத்தா முந்திக் கொள்கிறாள். நசரேனுக்கு லில்லியைக் கட்டி வைத்துவிட வேண்டும். அவனுக்கும் அவள் மீது ஈடுபாடு தான். சென்ற லீவுக்கு அவள் இங்கு வந்திருந்த போது தினமும் எதானும் காரணம் கொண்டு வருவான். அவள் தான் ‘கன்யாஸ்திரீகள்’ கூடவே இருந்து இருந்து எப்போது பார்த்தாலும் படிப்பதும், தனியே உட்காருவதுமாகப் பிடிகொடாமல் இருந்தாள். “என்ன படிப்பு இனியும் அவளுக்கு? போய்க் கூட்டி வந்துவிட வேண்டும். கடனோ, உடனோ வாங்கிக் கல்யாணம்...”

     ஆத்தா மீனைக் கொத்தவரும் காக்கையை ஓட்டுகிறாள். மரியான் முற்றம் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறான்.