அத்தியாயம் - 22

     பஸ் ஆத்தூர் பாலத்தைக் கடக்கையில் தாமிரபரணியின் மேல் தவழ்ந்து வரும் நீர்க்காற்று உடலில் படும்போது அந்தக் குளிர்ச்சி புத்துணர்ச்சியை அளிக்கிறது. வயல்களில் பசுமை முதிர்ந்த மணிகள் தலைசாய்த்திருக்கின்றன. சென்ற ஆண்டு ஆண்டகையைப் பார்க்க வந்த பிறகு, பெஞ்ஜமினும் மற்றவர்களும் கூடிப் பேச, இரண்டு முறைகள் அவன் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறான். கடற்கரை ஊர்களை விட்டுத் திருநெல்வேலி, நாகர்கோவில் என்று சென்றாலும் கூட போலீசான் அவர்களைத் தனியே இனம் கண்டு கொள்வானோ என்ற அச்சம் மேலிடுகிறது. ஊரை விட்டு, தொழிலை விட்டு வந்த பின்னர், எங்கெங்கோ கூலி வேலை செய்து வயிறு பிழைத்திருக்கிறான். உடன்குடி, சாத்தான்குளம் என்று வயற்கரைகளில் கூலி வேலை செய்தான்; மூட்டை தூக்கினான். சென்ற சில நாட்களாக சாஹுபுரத்தில் கட்டிடம் கட்டும் இடத்தில் கூலி வேலை கிடைத்தது. எங்குமே பத்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. சவரஞ் செய்யாமல் முடி வளர்த்திருக்கிறான்.

     தூத்துக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் தலையில் துணியைப் போட்டுக் கொண்டுதான் அடிப்பாடாக வருகிறான். பெரிய பஜார் வீதியைக் கடந்து வருகையிலும் கூட அச்சமாக இருக்கிறது. கடல் தொழிலாளிகளை முகத்தையும் தசைமுறுகிய உறுப்புகளையும் கண்டே இனம் புரிந்து கொண்டு விடுவார்கள் பிறர். நீண்ட சந்துகளிலும் குறுகலான தெருக்களிலும் புகுந்து கடற்கரைப் பக்கம் பெரிய கோயிலுக்கு அடுத்த சந்தில் நுழைகிறான். காலை நேரத்தின் சுறுசுறுப்பு எங்கும் இயக்கமாக இருக்கிறது. கோயிலில் யாருக்கோ துக்கமணி அடிக்கிறார்கள். அவன் குறிப்பிட்ட திருப்பத்தில் திரும்பிக் குறுகலான அத்தெருவில், ஒரு பச்சைக் கிராதி வீட்டின் வாயிலில் சாக்கடையை மூடிய படியில் நிற்கிறான். எட்வின் அங்கே பீடி குடித்துக் கொண்டு குந்தியிருக்கிறான்.

     “உள்ளார யாரிருக்கா?”

     “சாமுவல். ஊருக்கா போயி வார?”

     “இல்ல...”

     “லயனலப் பாத்தியா?”

     “பாக்க இல்லியே?”

     “பின்ன சேதி சொன்னது ஆரு?”

     “பெஞ்ஜமின் தா. சீட்டு அனுப்பியிருந்தாரு லாரிக்கார்ட்ட. நான் சாஹுபுரத்தில் இருந்தம்...”

     “ஒங்கப்பச்சிய சாமியார் வூட்டதா வச்சி அடிச்சிருக்கானுவ.”

     “ஆரு சொன்னது?...”

     “சாமுவல் தா. உள்ளார போவம் வா!”

     ஒரு குறுகிய மர ஏணிப்படியிலேறி மச்சுக்குச் செல்கின்றனர். அங்கு பாயில் சாமுவல் படுத்துறங்குகிறான். சிறு அறை.

     கீழே இருவரும் அமர்ந்து கொள்கின்றனர்.

     “ஊருக்குப் போயிட்டு வந்திருக்கா. ஒரு சீட்டுக் குடுத்திருக்கானுவளாம். அது இல்லாம நடமாடினா, அடிச்சிப் போடுறானுவளாம். மூணு மாசமா, உன்னக்க அப்பச்சி, அகுஸ்தீன், இன்னாசி இன்னு யாரெல்லாமோ, உள்ள போட்டு அடி அடிண்ணு அடிச்சி நம்மப்பத்தின ஔவுசாரிச்சிருக்கானுவ. ஆரும் சொல்ல இல்ல. பொறவு, ஏலி இல்ல ஏலி, அதாம்ப ஒன்னக்க பொம்பிள, அவ... தா ஊரில நம்ம வூடுங்களுக்கெல்லாம் தவ தண்ணி எடுத்துக் குடுத்திருக்குதாம். ஐசக்கு பொஞ்சாதிய அடிச்சி இடுப்புக்குக் கீழ் புண்ணாக்கெடக்குதாம். எங்க வூட்டுக் காரியயும் அடிச்சானுவளாம். பேய் ராச்சியம் நடக்குதுண்ணு சொன்னா. எனக்கு இருப்பாவே இல்ல. நாம எல்லாம் ஆம்பிளகளா? எதுக்காவ இப்பிடி ஒளிஞ்சி வாழுதோம்? ஒரு கிளாசு சாராயம் கூடக் கெடயாது. இப்பிடி வாழுதக் காட்டி சாவலாம். இன்னக்கி நம்ம தலவர் வந்ததும் ரெண்டுல ஒண்ணு கேட்டு அவரு இப்பமும் ‘ஆக்‌ஷன்’ வாணான்னு சொன்னா, நா இவுரு தலமைவுட்டு நேராப் போயி அந்தப் போலீசுக்கார, சாமி எல்லாரையும் கூண்டோடு இருட்டு ஸ்தலத்துக்கு அனுப்பிட்டு செயிலுக்குண்ணாலும் போவ...”

     இவன் குரல் கேட்டு சாமுவல் எழுந்து உட்காருகிறான்.

     “மரியானா...?”

     கண்களைத் துடைத்துக் கொள்கிறான் சாமுவல்.

     “ஆமா, ஊரில ஆரெல்லாம் பாத்தே?...”

     “அல்லாரையும் பாத்தேன். சீலயச் சுத்திட்டுப்போ, அப்பத்தான் கருக்கல்ல போயி வந்திரலாண்ணு பெஞ்ஜமின் சொன்னா.”

     “நா போயி இவெ வீட்டுச் சந்தில நிற்கிறப்ப ஒரு போலீசுக்கார இவம் பொஞ்சாதி கிட்டக்காச்சுதா, ஆரு வந்ததுண்டு. ஆரும் வரலியே யேசுவே - கடல் சத்தியமா ஆரும் வரலண்ணு இவெ மாமியா கெடந்து கெஞ்சுதா. நா அப்படியே அவனக் கழுத்தப் புடிச்சிருப்பே. ஆனா, அவனுவ அதிகம் பேரு - கட்சி கட்டிட்டு கொழுத்துத் திரியறானுவ. இப்பமே நம்ம ஊரில நம்ம கூட இருந்து நம்ம தொழில் செய்யிறவனுவ நம்ம கூட சேராமதானே இப்பிடி அல்லாடுறோம்? நம்ம மரமெல்லாம் ஒடச்சிருக்கிறானுவ, மொடுதவமும் பிச்சையாவும் புதுமரம் வச்சிருக்கிறானுவ, பெஞ்சமினண்ண மரத்த ஆழக்கடல்ல கொண்டு போயி விட்டுட்டானுவண்ணு தெரியிது. செபஸ்தி சொன்னா, நீ தெரிஞ்சாப்பல காட்டிக்காதே. நா போது. ஊரில ஒருத்தருக்கொருத்தன் மோசஞ் செய்யிறானுவண்ணு.”

     மாடிப்படியில் சத்தம் கேட்கிறது.

     பெஞ்ஜமின், ஆல்பர்ட், ஐசக், பூபாலன், குரூஸ், பிச்சை. பெஞ்ஜமினைத் தவிர மற்றவர் யாரையும் அத்தனை நாட்களில் அவன் பார்த்திருக்கவில்லை.

     பெஞ்ஜமினின் முகத்தில் பத்து நாட்களுக்குச் சவரம் செய்யாத முடி. கண்கள் உறங்காததால் சிவந்து சோர்ந்திருக்கின்றன.

     “மரியான் எப்பம் வந்த...?”

     “பத்து நிமிசமிருக்கும்... இனியும் இந்தால ஒளிச்சி மறச்சிப் பிடிக்கிறது செரிண்டு தோணல மச்சான்...!”

     “ஆமா, ஊரில பெண்டு பிள்ளைகள், அவனுவகிட்ட அடிகொள்ள வுட்டுப்போட்டு நாம உசுரு புளைக்கிற சீவியம் ஒரு சீவியமா? இத்தக் காட்டிலும் நாந்துக்கிட்டு சாவலாம்!”

     “ஒங்கக்க பொண்டு புள்ளயள்ளாம் பாளையங்கோட்டக்கி அனுப்பிச்சிக் குடுத்திருக்கீரு. எங்கக்கு எங்கள நாங்கதானே பேணிக்கணும்...?” மாறி மாறி எட்வினும் மரியானும் பாய்கின்றனர்.

     “நீங்கல்லாம் அல்லாம் சொல்லுவீங்க. போயி கண்டமானிக்கும் அடிச்சி ஒடச்சித்தா இப்ப கேசு அது இதுண்ணு போலீசு வந்ததே. போலீசை நாம ஞாயத்துக்குக் கூப்பிட்டு வச்சுக்கப் போவ, சாமி லஞ்சம் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்கிட்டா. நம்ம அதிர்ஷ்டம், முன்ன இருந்த அந்த சாயபு இனிஸ்பெட்டரு அப்பமே மாத்திப் போயிட்டா. இப்பம் வக்கீலக் கலந்து நடவடிக்கை எடுக்கத் தீருமானம் செஞ்சிட்டம். பெரி... காரியம் செய்யிறப்ப சுதானம் வேணும். ஆத்திரப்பட்டா சிக்கலாப் போவுதில்ல?”

     “கன்னிபுரக் கடக்கரையில போலீசு வெறியாட்டமிண்டு, சாமியார் குடுத்திருக்கும் சீட்டை போட்டோ பிடிச்சிப் பேப்பரில போட ஏற்பாடு செய்திருக்கே. நம்ம போராட்டம் நியாயமிண்ணு வெளி ஒலகம் தெரிஞ்சிக்கணுமில்ல?... இப்ப ஒரு சங்கட்டம் என்னண்ணா, நாம இப்பிடியே இருந்தா ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுண்ணு வக்கீல், தாசில்தார் எல்லாரும் சொல்றாங்க. ஏண்ணா, இப்பம் போலீசுக்காரரக் கைக்குள்ள போட்டுட்டாங்க. யாரானும் எதானும் கேட்டா, எங்க சர்ச்சு, அதுக்குரோதமா நடக்கிற ஆளுவண்ணு சொன்னா, மத விஷயத்தில் தலையிட வெளியாளுகளுக்கு உரிமை இல்லேம்பாங்க. ஆனபடியால, நீங்க கிறிஸ்தவத்தை விட்டு இந்துவாயி மாறிட்டீங்கண்ணா, தைரியமா வழக்குக் கொடுத்து, இந்தத் தெறிப்புக் குத்தகைய நிப்பாட்ட முடியும்னு சொல்லுறாங்க. அதுதான் இப்ப யோசனை. கிறிஸ்தவத்த விட்டு நாம விலகறோம்னாத்தா, முடியும். ஒரே வழி அதான். நானும் ஒங்ககிட்ட கேட்டு முடிவு செஞ்சிரணுமிண்டுதா வாரக் காட்டினம்...”

     “பெரி... கிறீஸ்தவம், மனிசனைப் பிழைக்கவுடாத மதம் என்ன மதம்? விலகுவம் மச்சா? அப்படித்தா அந்த பாதிரிப் பயலுவளுக்குப் புத்தி காட்டணும்...” என்று எட்வின் கருவுகிறான்.

     “அப்பிடி லேசா இந்துவாயிட்டம்னு சொன்னா அவங்க சேத்துக்குவாங்களா? அத்தை ரோசிச்சிப்பாரு மாப்ள, பொறவு அதுமில்ல, இதுமில்லண்ணு ஆயிப்போவும்? நாம நாலு பேரு இந்து வாயிட்டமிண்ணு அந்தக் காரயில இருந்தா சாமியாரு வாழ வுடுவாரா?”

     “அது அப்பிடிக் கொண்ணுமாயிடாது, ஒரு நூறு இருநூறு பேருக்குக் கொறமாய இந்துவாயி, வெளியே இருக்கிற பெரிய கூட்டத்தில நாம சேந்திருவம். அப்பிடிக்கொண்ணும் விட்டிர மாட்டாங்க. இந்து பரிஷத்துண்ணு ஒண்ணிருக்கி. அவங்கத்தா இப்ப இந்தால சேரலாண்ணு சொல்லி, எல்லா ஒத்தாசையும் செய்யிறம்ணு சொல்லுறாங்க. நாமல்லாம் ஆதியில இந்துவா யிருந்தவங்கதானே? சவேரியார் காலத்தில வந்து கிறிஸ்தவமாக்கினாரு. அதனால் மேக்கொண்டு திட்டமாச் சொல்லி, கேசு கொடுக்கணும். நீங்க என்ன சொல்றீங்க. சொல்லும்...”

     “நாங்க என்னத்தச் சொல்ல? மச்சான் எதாலும் ஒரு நடவடிக்கை முடிவா எடுக்கணும். நீட்டிட்டே போனா, பொஞ்சாதிபுள்ள, குடும்பம் ஒண்ணிருக்காது... கடக்கரயே மையவாடியாயிரும்...” என்று மரியான் முடிக்கிறான்.

     “இதுநாள் பொறுத்தம்... இப்பமும் ஒரே ஒரு தபா... பால்சாமி நமக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா இருக்கிறவரு. அவருக்கிட்டப் போயி, விசயமெல்லாம் சொல்லுவம். இம்மாட்டு அநியாயம் நடக்கு. நாங்க இந்துவாயிரப்போறம். பொறவு நீரு விதனப்பட வேண்டாமிண்டு சொல்லிட்டு வரணும். ஏண்ணா, அவரு நிச்சயமா இத - சாமியின் அக்குருவங்களை ஆதரிக்க மாட்டார். நம்ம மேல ஒரு தாங்கல் அவருக்கும் இருக்கக் கூடாது...”

     மரியானுக்கு அப்பன், ‘கிறிஸ்தவம் பால் சாமியிட்டதா இருக்கு’ என்று சொல்வது நினைவில் மின்னுகிறது.

     “அது சரி. அவரு எங்கேயிருக்காரு. நாம போயிப் பாக்க?”

     “ஒடம்பு சொகமில்லாம தாசரு மடத்தில தங்கியிருக்காராம். அங்கிய போயிப் பாக்கப் போறம். மொதிலியே நசரேன் அங்கே போயி நாம வாரதச் சொல்லியிருப்பான். இப்பம் நாம எல்லாம் அங்கிட்டுப் போவம்...”

     ஆல்பர்ட் கீழிறங்கிச் சென்று தேநீர் வாங்கி வருகிறான். மிக இனிமையாக இருக்கிறது. சைக்கிள்களிலும், லாரியிலுமாக அவர்கள் உச்சிப் பொழுதுக்கு தாசர் மடம் செல்கின்றனர். சுற்றுச் சுவருக்குள் பூமரங்கள் நிலத்தில் பொன்னிதழ்களைப் பரப்பியிருக்கின்றன. அரளி கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கின்றன. பெரிய அழிக்கதவுக்கு நேராக சிறு கோயில்.

     “அதா, காரு நிக்கி. நசரேனக்க பொஞ்சாதி பாரு...” குரூஸ் பிச்சையின் கிசுகிசுப்பு மரியானை வேறு பக்கம் நோக்கச் செய்கிறது. மரத்தடியில் அழகிய கருநீலம் காரொன்று நிற்கிறது. நீலப்பட்டுச் சேலையணிந்த பெண்ணொருத்தி வெளியே நிற்கிறாள். நசரேன் இவர்களை நோக்கி வருகிறான்.

     நசரேன்... பழைய நசரேனா? பாம்புத்தோல் போன்ற மினுமினுத்த நாகரிகச் சட்டையும் சராயும், ஜோடும் அணிந்திருக்கிறான். முடியை எண்ணெய் தொட்டு அழகாக வாரி, அரும்பு மீசையை அழகாகக் கத்தரித்துக் கொண்டு விளங்குகிறான். கையில் பெரிய மோதிரம்; அகன்ற பட்டையுடன் கடியாரம்... அவனுடைய பெண்சாதியா அவள்? நீண்ட கூந்தலை அழகாக வாரிச் சேர்த்து, சாமியார் பங்களாத் திரைச்சீலையைக் கட்டினாற் போன்று வளையமிட்டுக் கட்டியிருக்கிறாள். செவிகளில் பொன் வளையங்கள்; கழுத்தில் மெல்லிய சங்கிலி; கையில் மெல்லிய இரு வளையல்கள்... ஆஸ்பத்திரியில் அவன் பார்த்த டாக்டரம்மா மாதிரியல்லவோ இருக்கிறாள்?

     “வணக்கம்... வணக்கம்...” என்று எல்லோருக்கும் கை குவிக்கிறாள். வாட்ட சாட்டமாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் முகம் களங்கமில்லாத மலர்ச்சியுடன் விளங்குகிறது. அவர்கள் எல்லோரும் பால் சாமியைத் தேடி வராந்தாவின் பக்கம் செல்லுமுன் அவரே அவர்களை எதிர் நோக்கி மரத்தடியில் வந்து நிற்கிறார். மடத்துப் பணியாளன் ஒரு நாற்காலியை அங்கு கொண்டு வந்து போடுகிறான்.

     “தோத்திரம் ஃபாதர்...!” என்று நசரேன், அவன் மனைவி, பெஞ்ஜமின் எல்லோரும் முழந்தாளிட்டு முதலில் ஆசிவாங்க நிற்கின்றனர்.

     “காட் ப்ளஸ் யூ சில்ட்ரன்!”

     வெளுத்து மெலிந்திருக்கும் சாமியின் கண்களில் மென்மையாம் ஒளி பூக்கிறது. ஒவ்வொருவராக அவர் நினைவு கூறுகிறார்.

     “ஆல்பர்ட்... நீ மரியானில்லை? அப்பா இருதய ராஜ் எப்படியிருக்கிறாரு? முன்ன பையனுக்கு நாக்கு வெடி வெடிச்சிக் கிளிஞ்சி போச்சிண்ணு சொல்லிச்சி ஸிஸ்டர், பேச்சு வருதா?”

     அவருடைய கனிவு மொழிகள் மரியானின் உள்ளத்தைத் தொடுகின்றன.

     “பேச்சொண்ணும் வார இல்ல சாமி?”

     “இங்கே தெரிஞ்ச அம்மா ஒருத்தர் அமெரிக்கா போயி வந்து ஸ்பீச் தெரபீன்னு தச்சிருக்கு. நான் லட்டர் தாரேன். கொண்டிட்டுப்போயி காட்டு. பேசுவான்...”

     “சரி, சாமி...!”

     “உன் தங்கச்சிதானே ஸிஸ்டர் யோசலின் கூட இருந்திச்சி?”

     “ஆமா சாமி, கன்யா ஸ்திரீயாப் போவு...”

     சிறிது நேரம் அங்கு மௌனம் படுதா விரிக்கிறது. எப்படி எதைத் துவங்குவதென்று தெரியவில்லை. பெஞ்ஜமின் தயங்கித் தயங்கி ஆரம்பிக்கிறான்.

     “ஃபாதர் நாங்களெல்லாரும் கன்னிபுரக்கரையை விட்டு தொழிலைவிட்டு நாலு மாசமா அலையிறம்...”

     சாமியின் முகத்தில் ஒரு புன்னகை கீற்றாக மலர்ந்து மறைகிறது.

     “உங்க கரையில்தான் பெரிய வரலாறு நடத்திட்டிருக்கிறீங்களே?”

     “அது விஷயமாகத்தான் உங்களிடம் வந்திருக்கிறோம் ஃபாதர்! துவி, அஞ்சுமீன் தெறிப்பில் எங்களுக்குச் சேர வேண்டியது அதிகம் போயிடுது. வலையெல்லாம் நல்லபடி முன்னேற்றமாயும், தொழிலில் நாங்க விருத்திக்கு வர ஏலாதபடி எல்லாம் கோயில் மகமைண்ணு வாரப்ப, நாங்க கஷ்டப்படுறம். இது சரியில்ல, மினக்கடை செய்யும் ஆளு வருசத்துக்கு ஆறுரூவாதா வரிகட்டுறா. அதுபோல நாங்களும் கட்டுறோம். கூடுதலாவே கூடக் கட்டுறோம். துவி முழுசும் எடுக்கக் கூடாதுண்ணு ரொம்பக் கேட்டோம். நாங்க சண்டை போடணுமிண்ணு இஷ்டப்படல. ஆண்டகையைப் பாத்துப் பேச வந்தம். போன பண்டியலுக்கு முன்ன அவரு பேச மறுத்திட்டார். பின்ன வேற வழியில்ல. தெறிப்புக்குத்தவை ஏத்துக்கலன்னோம். சிலரைத் திருச்சபையிலேந்து விலக்கம் செஞ்சு அறிக்கை படிச்சாரு சாமி. அத்தோடு கொலையெல்லாம் விழுந்து போச்சி. எங்கள்ள ஒரு பெரியவரை எதிர் பார்ட்டி கொன்னிட்டாங்க. பொதைக்க மையவாடில எடமில்லேன்னாங்க. நாங்க கதவ ஒடிச்சி மையவாடில கொண்டு புதைச்சோம்...”

     சாமி முகத்தில் சலனமில்லாமல் அவன் கூறும் விவரங்கள் அனைத்தையும் கேட்கிறார். போலீஸ் வந்திருப்பதையும் ஊரில் நிகழும் நாசச் செயல்களையும் கேட்கிறார். சிலுவைப் பிச்சையான் தன்னை இரும்புருளை போட்டு உருட்டிக் காயத்துடன் முட்புதரில் போட்டு விட்டட்தைச் சொல்லி தன் காயங்களைத் துணியை நீக்கிக் காட்டுகிறான்.

     “உங்களைத்தான் நம்பி நாங்க வந்திருக்கிறோம் சாமி. சாமியின் மனசு எங்களுக்குத் தெரியும். இப்படியெல்லாம் அநீதம் நடக்கம், கிறிஸ்துநாதர் திருச்சபை இடங்கொடுக்குண்டு நாங்க நம்பல. ஆனா எங்க கஷ்டப்பாடுகளுக்கு ஒரு முடிவு வேணில்ல? குடிமகன் சண்ட வந்து கிட்டத்தட்ட வருசமாவுது. கட்டுமரமெல்லாம் கொளுத்தியும் வெட்டியும் பாழ் பண்ணியிருக்காங்க. எங்க மரமொண்ணை ஆழில கொண்டுவிட்டு அது பாம்பன்ல சேந்திருக்குண்டு தகவல் தெரிஞ்சிருக்கு. போயிப்பாக்கல. ‘கஸ்டம்’காரங்க வச்சிருக்காங்களாம். பெண்டு பிள்ளையெல்லாம் பட்டினி, அடி கொண்டும் மான நஷ்டப்பட்டும் தவிக்கிறாங்க. நானும் இது விசயமா பல பேரிடம் புத்தி விசாரிச்சப்ப இது மத சம்பந்தப்பட்டிருப்பதால வெளியாளுங்க கேக்க முடியாது. நீங்க அந்த மதத்தை விட்டு வந்திட்டீங்கண்ணா கேக்கலாம். துவி கொடுக்க மாட்டாங்கண்ணு வாதாடலாம்ங்கறாங்க. எங்களுக்கு இப்ப திருச்சபையில எடமும் இல்ல. இந்துவாயிப் போறதா முடிவு செஞ்சிட்டு உங்ககிட்ட வந்திருக்கிறோம் சாமி!”

     சாமியார் நெடுநேரம் எதுவும் பேசவில்லை.

     பிறகு எழுந்து உள்ளே செல்கிறார். சிறிது நேரம் சென்று திரும்பி வருகிறார்.

     “நீங்கல்லாம் இங்கியே இருங்க. நான் போயி இப்பம் ஆண்டகையிடம் இது விசயம் பேசுகிறேன். பிறகு அவசியமானால் நீங்களும் வரலாம்!”

     பெஞ்ஜமின் நசரேனைப் பார்க்கிறான்.

     “ஆமா, வண்டியில ஃபாதரை நாம் கூட்டிப்போவம், மற்றவர் இங்கே இருக்கட்டும்...”

     பெஞ்ஜமின் அங்கு நிற்கும் நீலக் காரின் கதவைத் திறந்து சாமியைப் பின்பக்கம் ஏறி அமரச் செய்கிறான். பிறகு நசரேனின் பெண்சாதி அந்த முன் சீட்டை மடிக்க பெஞ்ஜமினும் பின்னே அமருகிறான். அவள் ஓட்டும் ஆசனத்தில் அமர்ந்து கொள்கிறாள். அவள் அருகில் நசரேனும் ஓரத்தில் எட்வினும் அமர்ந்து கொள்ள வண்டி செல்கிறது. மரியான் ஓர் அழகிய கனவு போல் அந்தக் கார் வாயிலை விட்டுச் செல்வதையே பார்த்து நிற்கிறான்.