அத்தியாயம் - 23

     நெஞ்சில் கிளர்ந்த உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறான். காரை அவள் ஓட்டிச் செல்கிறாள். தேவதைபோல் - ராணி போல் - இவன் லாஞ்சி சொந்தக்காரனாகி விட்டான் - சூட்டுப் போட்டு இங்கிலீசு பேசுகிறான்!

     ‘சே... அவங்கிட்ட ஏன் பொறாமைப்படணும்? நசரேன் நல்லவன். அவன் லில்லிப் பொண்ணைக் கட்டிக்கிறேண்ணுதா சொன்னான். கொடுப்பனயில்ல... ஆனா, வாழ்க்கையில எப்படியும் முன்னுக்குப் போவணும். மிசின் போட்டுன்னு அவன் போகலேண்ணா இவர்களுடந்தான் சீரழிஞ்சிட்டிருப்பான்!’

     ஆல்பர்ட்டும் சாமுவலும் குத்திப் பேசுகின்றனர்.

     “நசரேன் எப்பிடியாயிட்டாம் பாத்தியா? மாமனுக்கு நாலு லாஞ்சி இருக்கி. மன்னாரு மடையில இப்ப தொளிலு. பொஞ்சாதி பாத்தியா? அப்பச்சியவச்சிக் காரோட்டுதா. புருசனவச்சி ஓட்டுதா...”

     “நசரேனக்க ஆத்தா மருமவளோட எப்படியிருக்கா?”

     “படிச்ச பொண்ணு. சண்ட போட ஏலுமா? ஸ்லோன் யாபாரம் செஞ்சி சேத்த பணம் இப்பம் லாஞ்சில போட்டிருக்காவ. வலை நாலு, வாலாத்த, எல்லாம் வியாபாரம் மொத்தமா இவெ அண்ணெ ஒத்தன் சாளையப் பதம் பண்ணி டின்னில அடச்சு மேல்நாட்டுக்கு அனுப்ப ஃபாட்டரி வய்க்கப் போறானாம். அமரிக்கா போயிருக்கா...”

     அவர்கள் பேசுவதைக் கேட்கையில், வாழ்க்கையில் முன்னேற்றம் காணப் படிப்பும் வெளி உலக அனுபவமும் எவ்வளவுக்குத் தேவை என்று மரியானுக்கு உறைக்கிறது. தங்களுக்கு எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்ற நினைப்பில் பெருமூச்செறிகிறான். வலை, மரம் எல்லாம் போய் என்ன செய்வார்கள்?

     கார் திரும்பி வருகிறது. ஆனால் சாமி வரவில்லை. மற்றவர்களுமில்லை. நசரேனின் பெண்சாதி மட்டுமே காரை ஓட்டி வருகிறாள்.

     “அண்ணாச்சி, நீங்கல்லாம் வாங்க. எல்லாரும் நம்ம வீட்டில காத்திருப்பாங்க...” என்று கார்க் கதவைத் திறந்து மறுபக்கம் ஆசனத்தை மடிக்கிறா.

     “சாமி...?”

     “அவர் பிஷப்பிட்ட கதைக்கிறார்...”

     ஆல்பர்ட், சாமுவல், குரூஸ் மூவரும் உள்ளே போய் அமருகின்றனர். மரியானுக்கு முகம் சிவக்கிறது. இவளிடம் போன காரியம் என்ன ஆயிற்றென்று கேட்காமல் உட்காருவதா?

     “நீங்க உக்காருங்க அண்ணாச்சி...”

     அவன் மறுபேச்சின்றி அமருகிறான். அவள் கார்க் கதவை அறைந்து விட்டு மறுபக்கம் சென்று ஏறிக் கொள்கிறாள். தொங்கும் சாவிக் கொத்தைத் திருப்பிக் காரைக் கிளப்புகிறாள். வண்டி சீராகப் போகிறது.

     “என்னத்துக்காவ இந்தப் பொம்பிள எங்களக் கூட்டிட்டுப் போறா...” என்று கொச்சையான, மெருகழியாத உள்ளத்திலிருந்து சொற்றொடர் எழும்புகிறது. பெஞ்ஜமினையும் நசரேனையும் வசைபாடத் தோன்றுகிறது. அவள் கண்ணாடியில் அவன் முகத்தைக் கண்டு, சிரித்துக் கொள்கிறாள் உள்ளூற.

     “நீங்கதா மரியான் இல்ல...? உங்களை அடிக்கடி சொல்லுவார் அத்தான். நீங்க ரெண்டு பேரும் ஒரு தபா புயலில் அகப்பட்டுப் பிழைத்தீர்களாம். நீங்கள் கல்யாணத்துக்கு வராதது அவருக்கு ரொம்ப வருத்தம்.”

     அவன் மறுமொழியேதும் கூறவில்லை. அவள் பக்கத்திலிருந்து ரம்மியமானதொரு நறுமணம் மென்மையாகக் கமழுகிறது. கருவாட்டு மணத்தையும் கவிச்சி வாடையையும் தவிர வேறு மணம் தெரியாத அவனுக்கு அது நாகரிகமான நறுமணம் என்று உணர்த்துகிறது. அவனுக்குப் பழக்கமான அலைவாய்க் கரையில் பெண்மக்களிடம் கருவாட்டு வீச்சமும், ஆண்மக்களிடம் சாராய வீச்சமும்தான் அடிக்கும். பெண்கள் மேலுக்கு ‘பூதர்மா’ப்பொடியைப் பூசிக் கொண்டாலும் உடலோடு ஊறிக்கிடக்கும் கவிச்சி வாடையே முன்னுக்கு முரண்டு வரும். இந்த வாசனை...

     இவன் நறுமண ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் வண்டி வீட்டு முன் வந்ததே தெரியவில்லை. மேலே குரோட்டன்சு பொங்கி வழியும் முகப்புடன் கூடியதொரு வீட்டின் முன் வண்டியை நிறுத்துகிறாள்; நசரேன் ஒலிகேட்டு வந்து பெரிய கேட்டைத் திறக்கிறான்.

     நசரேன் கார்க் கதவை திறந்துவிட்டு, “வாங்க... வாங்கல்லாம்...” என்று வரவேற்கிறான்.

     வாசல் வராந்தாவைக் கடந்து முன்னறையில் சாமியார் வீட்டிலிருப்பது போல் சோபா - நாற்காலிகள் விளங்குகின்றன. பெஞ்ஜமின் அங்கே சோபாவில் அமர்ந்து நசரேனின் மாமனுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.

     “எல்லாரும் வாங்க. வந்து இப்படி சவுரியமா இரிங்க. உங்களுக்கெல்லாம் ஒரு விருந்து போடணும். கலியாணத்துக்கே வார இல்லேண்டு நெனச்சிருந்தம். இப்ப சந்தர்ப்பமிருக்கு. சவுரியமா இருங்க...”

     அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறு சுற்றும் முற்றும் பார்க்கின்றனர். மரியானுக்குக் கோபம் வருகிறது. அதற்குள் நசரேனின் மனைவி, கண்ணாடித் தம்ளர்களில் சர்பத் எடுத்துக் கொண்டு - அந்தத் தட்டை ஏந்தி வருகிறாள். மரியானிடம் நீட்டுகிறாள். நசரேன் ஒவ்வொரு தம்ளராக எடுத்து எல்லோருக்கும் கொடுக்கிறான். கட்டி உருண்ட நசரேனிடம், மாப்ளே என்றழைத்து மடிப்பெட்டி வெற்றிலையையும் பீடியையும் பகிர்ந்து அனுபவித்த நசரேனிடம், கெருவிச் சண்டை போட்ட நசரேனிடம் இன்று பேசக்கூட நா எழவில்லை. அவன் எங்கோ உச்சிக்குப் போய் விட்டாற் போலிருக்கிறது. சாமுவேலும் எட்வினும் இவ்வாறு பதவிசா உட்கார்ந்திருந்தது உண்டா?

     நசரேனின் ஆத்தா, யேசம்மா வருகிறாள்.

     “வா மக்கா! கலியாணத்துக்கு வார இல்லியே? ஊரில என்னிய என்னியோ சொல்லிக்கிறா. ஆத்தாளையும் அப்பச்சியையும் புள்ளங்களையும் இங்கே கூட்டியாந்து வையேஎ? ஒரு நெலவரப்பட்ட பின்ன போயிட்டாப் போவு!”

     மரியான் ஆரஞ்சுச் சாற்றைப் பருகிவிட்டுத் தம்ளரை வைக்கிறான்.

     “எல்லாரும் அந்தாக்கில வந்திர ஏலுமா மாமி?” என்று கேட்கிறான் ஆல்பர்ட்.

     “ஒரு கிளாஸ் சாராயம் குடுக்கப்படாதா, நாக்கு நனச்சு எத்தன காலமாச்சி!” என்று எட்வின் முணுமுணுக்கிறான்.

     “போலீசுக்காரன எதுக்காவ ஊருக்குள்ள விட்டீங்க? ஆண்டகையிட்டப் போனதுக்கு என்னப்பு சொல்லுதா?...” மாமியின் கேள்விக்கு பெஞ்ஜமினே மறுமொழி கூறுகிறான்.

     “இப்பம் பால் சாமிட்டப் போனம். அவரு ஆண்டகையிட்டதா கூட்டிப் போனாரு - எல்லாம் உங்க மருமவ இருந்தா. கேளுங்க என்ன சொன்னாருண்ணு?”

     “பால் சாமி பேசறப்ப நாங்க வெளியேதான் இருந்தோம்.”

     ‘ஆண்டவரே, அவங்க கோரிக்கை நியாயமில்லையா, நீங்க விட்டுக் கொடுத்தாலென்னன்னு கேட்டாராம். நமக்கு ஒரு ‘பிரின்ஸிபல்’ வேணுமில்ல. கிறிஸ்துவன் கோயிலுக்கும் குருமடத்துக்கும் மகமை கொடுக்க வேண்டுமென்று திருச்சபைச் சட்டத்தில் வலியுறுத்தப்படவில்லையா’ன்னு கேட்டாராம் பிஷப் திருப்பி.

     'அவங்க மாட்டோமுன்னு சொல்லலியே? அவங்க தரித்திர நிலைமையைப் பார்க்க வேண்டாமா? அது நம்ம பொறுப்பில்லையா?’ன்னு பால் சாமியார் கேட்டார்.

     ‘இது சேவியர் காலத்திலேந்து வர ஏற்பாடு, இப்ப மாற்ற முடியாது’ன்னாரு பிஷப்.

     ‘ஆண்டவரே, எனக்கும் சரித்திரம் தெரியும். சவேரியார் விசுவாசிகளாக்கினார். ஆனா இப்படி விதி செய்யல. இருந்தாலும் இதை மாற்றி அமைக்கணும்’னாரு சாமி விடாம.

     ‘முந்தின பிஷப் இது பத்தி யோசித்து இந்தக் குத்தகை எல்லாம் விட்டுக் கொடுத்துட்டா வருமானமில்லாம போயிடும்னுதான் உரக்கச் சொல்லியிருக்காரு...’ன்னாரு பிஷப்.

     அதுக்கு நம்ம ஃபாதர், ‘ஆண்டவரே, அவங்க... வேதத்தை விட்டே போயிடுவோமின்னு சொல்லுறா. அதை நெனச்சு இதைச் செய்யணும்’ன்னாரு.

     பிஷப், ‘ஐ டோன்ட் கேர்...’ன்னு முடிச்சிட்டார்...

     மரியான் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். தங்கள் முயற்சிகள் வீணானது பற்றிக் கூட உறைக்கவில்லை.

     ஒரு பெண், அங்கே நடந்த பேச்சை அப்படியே சொல்கிறாள்; காரோட்டுகிறாள்; ஆரஞ்சுத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறாள்; அவள் பேசுவதை எல்லோரும் குறுக்கே பாயாமல் அமர்ந்து கேட்கின்றனர்!

     “பின்ன என்னன்னு தீருமானம் செஞ்சிருக்கீங்க?” என்று மாமன் விசாரிக்கிறார்.

     “வேற வழியேயில்ல. கடசீவரைக்கும் பாத்திட்டம். இனிமே கைலாசபுரம் வக்கீல் யோசனைப்படிதான் நடக்கணும். திருநேலியில சாமிஜி இருக்காரு - பரிஷத் சாமிஜி - முடிவு இதா... அவங்க நாங்க மாறிட்டா நடவடிக்கை எடுத்துப் போராடலாம்ண்ணு சொல்லியிருக்கா...”

     “அப்பம் இந்துவாயிடுறீங்க...?”

     “வேற வழி?”

     பெஞ்ஜமின் அவர்கள் எல்லோரையும் பார்க்கிறான். மரியான் எதிரே சுவரிலிருக்கும் படங்களைப் பார்க்கிறான். சரிகைப்புள்ளிகளும் கொடிகளும் அலங்கரிக்க, ‘GOD IS LOVE’ என்ற எழுத்துகள் ஒரு படத்தில் மின்னுகின்றன. நசரேனும் இந்தப் பெண்ணும் திருமணக் கோலத்திலான கலர்ப் படம் மாட்டியிருக்கிறது. கையில் செண்டும் சூட்டுக் கோட்டுமாக நசரேன் - இவள் மலர் வாயை முடியும் கீழே சரிந்து குவியலாக விழும் ‘வீலு’மாக.

     “என்னம்பு, மச்சான் சொல்லுவது காதுலவுழுகுதா? மரியான் பேசாம இருக்கே?”

     அவன் சுதாரித்துக் கொண்டு, “காதில வுளுகுது. இந்துவாயிடுறதுண்ணாரு” என்று மறுமொழி தருகிறான்.

     “நாம் எல்லாரும் சவேரியார் இங்கு வருமுன், ஆதி இந்துக்கள்தா...” என்று நசரேனின் மனைவி சிரிக்கிறாள்.

     “இவ சரித்திரம் படிச்சித்தா பி.ஏ. பண்ணியிருக்கா...” என்று தந்தை பெருமையுடன் கூறுகிறார்.

     “நோ, இந்தச் சரித்திரம் இப்பதான் படிக்கிறேன். உண்மையில, அந்தக் காலத்துக் குறிப்புப்படி, நாம் இந்துவாக இருந்தோம். ஒரு முஸ்லிம் வந்து ஒரு பெண்பிள்ளை காதை அறுத்திட்டான். முஸ்லிம் தொந்தரவு பொறுக்காம, இவங்க, போர்ச்சுகீசியரிடம் உதவி கேக்கப் போனாங்க. அவரு சொன்னாரு, நீங்கல்லாம் கிறிஸ்தவத்துக்கு வந்திட்டா, உங்களை அவங்ககிட்டேந்து காப்பாத்தறோமின்னு சொன்னாரு. இவங்க சரின்னு விசுவாசிகளாயிட்டாங்க. இப்பிடி ஒரு பொம்பிளை காதுதா காரணமாயிற்று!”

     “இவெ நெறயக் கதயடிப்பா! இதா வேலை. புஸ்தகம் படிப்பதும் கதயடிப்பதும்...” என்று நசரேன் அவளைக் கிண்டுகிறான்.

     ஆனால் மரியானுக்கு ‘அப்ப, அப்பவும் ஒரு இடஞ்சல் வந்துதா எல்லாரும் விசுவாசிகளானாங்களா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

     “மதம்ங்கறது, மனிசனுக்கு உலக வாழ்விலே ஒரு பிடிப்பு உண்டாகணுமிங்கறதுக்குத்தானே தவிர வேறொண்னில்ல; நமக்கு இப்பம் வழியில்ல. ஒரே முடிவுதானிருக்கி.”

     மரியான் திடீரென்று நினைவு வந்து கேட்கிறான் நசரேனிடம். “மாப்ள, நீ இங்க துவித் தெறிப்புக்குடுக்கிறியா?”

     “இங்க ஆரு ஸ்றா புடிக்கிறாங்க? காரல், சாளை, இறால் - இது தவிர பெரிய மீனே புடிக்கிறதில்ல மச்சான். றாலுக்கு வெல கூடும்னு சொல்றாங்க. ஃபாக்டரி பதப்படுத்தத் தொறந்தா ஏறிடுமா. புன்னகாயல், மன்னாருமடை, கொல்லம், நீண்டகரைன்னு போயி சாளையும் காரலுந்தா புடிக்கிறம். அஞ்சுமீன் தெறிப்புன்னில்ல. ஒரு ‘போட்’டுக்கு மாதா கொடை இம்புட்டுன்னு மொத்தமா குடுத்திடறாங்க...”

     நசரேன் இந்துவாக மாறுவானோ?

     அன்று அவர்கள் வீட்டில் பிரியாணிச் சோறும், மீன் சொதியும், வறுகலும் பொரியலுமாக இவர்களுக்கு விருந்து நடக்கிறது. மேசையில் பெரிய பீங்கான்களில் சோறு பரிமாறுகின்றனர். உண்டதும் மரியானுக்குக் கண்களை இறுக்கிக் கொண்டு வருகிறது. ஆனால் பெஞ்ஜமின் மறுநாள் திருநெல்வேலியில் சந்திக்கலாமென்று விடைபெற்றுச் செல்கிறான். மற்றவரனைவரும் கூட வேறிடங்களுக்குச் செல்கின்றனர்.

     நசரேன் அன்று மாலையில் கன்யாகுமரிப் பக்கம் மீன் பிடிக்கப் போகிறான்.

     “வரியா மச்சான், லாஞ்சிக்கு? கடலுக்குப் போவலாமா?” என்று அழைக்கிறான்.

     அந்த அழைப்பு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! கடலுக்குப் போய் எத்தனை நாட்களாகி விட்டன! அவன் போகிறான்.