அத்தியாயம் - 26

     கன்னிபுரம் கடற்கரை ஊரில், கடல் தொழிலாளிகளில் பெஞ்ஜமின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் தோப்பு தோட்டமென்று வாங்கத் தலையெடுத்ததில்லை. மணியன் இப்போது ஆயிரம்போட்டு, தென்னந்தோப்பும் ஒரு சதுரம் வாழைத்தோட்டமும் வாங்கிவிட்டான். வயதாகிவிட்ட அப்பன் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டால், தான் மட்டும் கடல் தொழில் செய்யலாம் என்பது அவன் கருத்து. அரசு கொடுக்கும் கடனை வாங்கி ‘மிசின் போட்’டும் வாங்கித் தொழில் செய்ய வேண்டும் என்றும் அவனுக்கு ஆசை உண்டு. அநந்தனை, அகுஸ்தீன்தான், சேர்த்துக் கொள்ளலாம். மேனியைக் கட்டிக் கொடுத்து விடலாம். அவன் சீதனம் என்று பிடுங்க மாட்டான். விசைப்படகில் கூட்டென்றால், அவனை அவர்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். கணபதி கோயிலில் சமயப் பிரசாரகர் முன்னிலையில் தாலிகெட்டு நடத்தி விடலாம் என்ற எண்ணமும் அவனுள் முதிர்ந்து வந்திருக்கிறது.

     வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மீன் பாடு இல்லை என்றாலும், ‘தங்காலம்’ வந்தாலும், தோப்பு வருமானம் இருக்கும். பற்றாக்குறை வந்தால் நிரவிக் கொள்ளலாம். பஞ்சாட்சரம் அப்படித்தான் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறான். விசைப்படகு வாங்கி ஆதித்தனைத் தொழிலுக்கு விட்டுத் தவணை கட்டுகிறான். கடலில் போய் வந்ததும் தோட்டத்துக்குப் போய் உழைக்கத்தான் வேண்டும். பத்திரமெல்லாம் பதிவு செய்தாகி விட்டது. வாழை நடவுக்காக அவன் இப்போது கிளம்பி இருக்கிறான். தெற்கே ஏழெட்டுக் கிலோமீட்டர் அருகேதான் தோட்டம் இருக்கிறது.

     கிறிஸ்துமஸ், பொங்கலெல்லாம் கழிந்துவிட்ட நாட்கள். பஸ் பெரிய கோயில் என்றழைக்கப்பெறும் மாதா கோயிலுக்கு முன் வந்து நின்று விடுகிறது. அது இன்னும் சற்று உள்ளே வந்து திரும்பினால் கணபதி கோயில் தெரியும். ஆனால் பஸ் திரும்பாது. பஸ் நிறுத்தத்துக்காகவே பிரயாணிகள் தங்க ஒரு கொட்டகை கட்டியிருக்கின்றனர். அதை அடுத்து செபஸ்தி நாடானின் கடை முன்பு அந்தக் கடையும் அதை ஒட்டின டீக்கடையும்தானிருந்தன. இப்போது, சாலையில் ஈசுவரி விலாஸ் டீ கிளப் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. செல்வம் நாடார் வைத்திருக்கிறார். வாயிலில் செங்கல் லாரி ஒன்று நிற்கிறது. மாதா கோயிலைச் சார்ந்த பள்ளிக்கட்டிடம் விரிவு படுத்தப் பெறுகிறது.

     மணியன் டீ கிளப் பெஞ்சியில் வந்தமருகிறான்.

     “சொகமெல்லாம் எப்படி, மச்சான்?...” என்று கேட்டுக் கொண்டு யேசுதாசன் உள்ளிருந்து வருகிறான்.

     கலவர காலத்தில் இரண்டு பார்ட்டியும் வேண்டாமென்று மணப்பாட்டுப் பக்கம் கூலி மடியாகப் போனவன். இவனுடைய நடைஉடையிலும் ‘றாலின்’ வண்மை மெருகு ஏறியிருக்கிறது.

     “நீங்க சொல்லும் மாப்பிள? அங்கெப்படி?” என்று மணியன் திருப்பிக் கேட்கிறான்.

     “றால்தான் இப்ப சோறு போடுது. அதுக்கும் ஆவத்து வருது. சர்க்காரில் ஆறாயிரம் லாஞ்சிக்கி இந்தக் கரையில முன் பணம் குடுத்திருக்காங்களாமே? மணப்பாட்டில கடம் வாங்கி ரெடிமேட் வள்ளம் கொண்டாந்து தொழில் செய்யிறவங்களையே அது பாதிக்கி. போன றால் சீசனிலே ஏராளமான பேரு அள்ளிட்டுப் போக வந்தானுவ. கரச மொரசலா சண்ட கூட வந்திச்சி. அதுனால சருக்கார் நமக்குப் போட்டியா விசப்படவுகளக் கொண்டாரக் கூடாதுண்ணு வள்ளக்கார, மரக்காரங்கல்லாம் சங்கங்கூடி ஏற்பாடு செய்யப் போறதாச் சொல்லிட்டிருக்காணுவ...”

     மரியானுக்கு இது புதுச் செய்தியல்ல. முதன் முதலில் நசரேன் மாமன் இங்கே விசைப்படகைப் பற்றிச் சொல்ல வந்தபோதே எதிர்ப்புக் காட்டினார்கள்.

     “ஆனா சங்கமிண்ணு எதச் சொல்லிறீம்? மீனவர் முன்னேற்றச் சங்கமிண்ணு கரய்க்குக் கரை எவனானும் சொல்லி இவெ தலவர், இவெ செயலாளர்ண்ணு சொல்லுதா. அத்தோட செரி. முன்ன, தெறிப்புக் குத்தவைக்காகப் போராடின காலத்தில எதோ நடத்தினம். பொறவு ஒண்ணில்ல...”

     “கடல் தொழிலாளி வழக்கம் போல கடலுக்குப் போறான், குடிக்கிறான். இப்ப றாலில் நல்ல காசுதா. ஆனா, ஆறாயிரம் விசைப்படவுக இன்னும் வந்து எல்லாக் கரையிலும் றால் புடிச்சிண்ணா மரக்காரனுக்கும் வள்ளக்காரனுக்கும் என்ன இருக்கும்?

     மணியன் ஏதும் மறுமொழி கூறவில்லை.

     தங்கள் நடைமுறையிலிருந்து எந்தவிதமான முன்னேற்றத்தையோ மாற்றத்தையோ, இவர்கள் ஏன் விரும்பாமலிருக்கின்றனர்? இன்னும் அப்பனைப் போன்ற வயசுக்காரர் தட்டுமடி, நூல்மடி, என்று பாடுபட்டதையே உயர்வாகப் பேசுகின்றனர்...!

     “என்னம்பு, பேசாம இருக்கிறீம்? இங்கிய விசப்படவு வராதுண்ணிருக்கீறா? தொழிலுக்கு அவெ எல்லா மடைக்கும் வருவா!”

     “வருமா வராதாங்கறது இருக்கட்டும். நாம அது வந்தா எல்லாம் போயிடுமிண்ணு ஏன் பயப்படணும்? கடல் நாம நினைக்கிறாப்பல சின்னது அல்ல. அதுல கோடி கோடியா மீனு இருக்கு. அவனுவ வந்தா அவனுவளும் புடிக்கட்டும். நாமும் புடிப்போம். சர்க்காரு நம்ம ஆளுவள முன்னேத்தம் காணணுமிண்ணுதானே கடங்குடுக்கா! வாணாம், நாம என்னுமே கூலி மடியாத்தான் சாவுறோமிண்ணு சொல்லறது செரியா?...”

     மணியன் அபூர்வமாக எதிர்ப்புக் காட்டாமல் பேசுகிறான். இரண்டொருவர்தாம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள்.

     “நீ வா மச்சான். மணப்பாட்டுப் பக்கம், ஒரு மெனக்கி நாள்ள, எல்லாம் விசைப்படகுக்காரனுவளத் திட்டுறானுவ...”

     பஸ் வந்து விடுகிறது. மணியன் எழுந்து செல்கிறான்.

     விடிந்தவரை ஊரிலிருந்து புயலிலடிபட்டு அவர்கள் நடந்து வந்த நினைவு வருகிறது. ஏலியுடன் அந்த இரவில் பஸ் சாலையிலிருந்து நடந்து வந்தானே...!

     ஒரு பெண்... வாழ்க்கையின் எல்லா முனைகளிலும் மோதிக் கொண்ட பின்னரும் உயிர்வாழ எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தாள்! அதை நினைத்தால் மட்டும் அவனால் தாள இயலுவதில்லை. பெண்பிள்ளைகளை விடப் பங்காளிகளாக ஓடிப் போனார்கள். தன் உயிரையே அவள் அவர்களுக்காகக் கொடுத்திருக்கிறாள். அப்பனை மீட்டு வந்ததறிந்து அவளைப் போலீசான் என்ன பாடுபடுத்தியிருக்கிறான்! எத்தனை தடியன்கள் அவளை உருக்குலைத்துக் கொன்றார்களோ? மூன்று நாட்கள் அவள் வரவில்லையென்றதும் பீற்றர் தான் அவள் குடிலைத் திறந்து பார்த்தானாம்.

     மூன்று நாட்களுக்கு நாற்றம் வந்து விட்டதாம். அப்பன் இப்போதும் அவளைப்பற்றி நினைத்தால் குரிசு போட்டுக் கொள்கிறார். மையவாடியில் இடமில்லை; குடிமகனை விட்டுப் பாட்டாவைப் புதைத்த இடத்துக்கருகில் புதைத்தார்களாம். பத்து நாட்களுக்குள் எல்லோருமே திரும்பி வந்துவிட்டார்கள். போலீசான் சாமிக்கு வேண்டியவன் மகளையே பதம் பார்த்து விட்டான். எல்லாரையும் சாமி ஓட்டி விட்டார்.

     ஒரு போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடத்தியதன் காரணமாக அவர்களுடைய சமுதாயம் முழுதுமே இந்த அநியாய ‘மகமை’யிலிருந்து விடுபட்டிருக்கிறது. கோயில்காரர்களும் இவர்கள் மதம் மாறிவிட்டார்கள் என்று சூடுண்ட பூனையாகி நடக்கின்றனர். என்றாலும், இந்த விசைப்படகு பெரிய பிரச்சனையை அவர்கள் முன் கொண்டு வந்திருப்பது உறுதியாகிறது. யாரைப் பார்த்தாலும் இதையே பேசுகிறார்கள்!

     பஸ்ஸுக்குள் கூட்டம் நெருங்குகிறது. அநந்தனின் ஆத்தா, தங்கச்சி தம்பி எல்லோரும் இருக்கின்றனர். மேட்டுத்தெரு செல்லையா, பஞ்சாயத்து உறுப்பினர் ஸாலமன் பர்னாந்து... குளோரிந்தா குஞ்சு குழந்தைகளுடன் புருசனுடன் இருக்கிறாள். எல்லோரும் றாலின் வாயிலாக வரும் செழிப்பைத் தம்பட்டம் போடுகின்றனர்... புனிதாவும் கூட எப்போதும் நகை சேலை அது இதென்று கேட்பது தவிர ஏலியைப் போல் உள்ளம் கனிய, அவன் கருத்துக்கு இணையப் பேசுகிறாளா?... அவன் வாழ்க்கையில் நிலைத்து முன்னேற வேண்டும் என்று கடல் தொழில் தவிர நிலத்திலும் காலூன்ற முயலுவது ஏலிக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!...

     வெளியே முகத்தை நீட்டிக் கண்களின் கசிவை அடக்கிக் கொள்கிறாள். அப்போது, உடை மரங்களின் அருகே, பனங்காட்டின் அத்துவானத்தில் றால் வண்டி நிற்கிறது. ஜானின் வண்டிதான். வண்டியை ஏன் நிப்பாட்டி இருக்கிறான்? கோளாறாகி விட்டதோ?...

     மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு.

     அவன் அன்று சாப்பாட்டுக்கு வந்த போது மேனியைக் காணவில்லை. அவள் அவன் கண்களில் தட்டுப்படுவதேயில்லை. ஜயாதான் எப்போதும் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் திருப்பலிப் பூசைக்குத்தான் கோயிலுக்குப் போவார்கள். இப்போதோ கணபதி கோயிலில் எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம் என்றாகிவிட்டது. கோலம் போடுவதும் பஜனை படிப்பதும், வாத்தியார் கதை சொல்வதைக் கேட்பதும் சாக்காகி விட்டன. பெரும்பாலும் குந்தியிருந்து வம்பு பேசுகிறார்கள்.

     மேனியை எந்தப் பயலேனும் தொட்டிருப்பானோ என்ற ஐயம் அவனுக்கு அப்போது தோன்றியது. டக்கென்று பொறி தட்டினாற் போன்று ஜானின் வண்டியை நினைத்து பஸ் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்...

     பிறகு அவனுக்கு இருப்பாகவேயில்லை.

     தோட்டத்தின் பக்கம் மணியன் இறங்கிக் கொள்கிறான். குடிமகன் இன்னாசியின் மூன்றாவது மகன், அந்தக் காலத்திலேயே கடற்கரையை விட்டு ஓடி வந்து இங்கே கூலி வேலை செய்யத் தொடங்கிவிட்டான். இப்போது கடலில் சிப்பி அரிக்கவும் செல்கிறான். அவன் பெண்சாதி சித்தாதி வாயிலில் குந்தி இருந்து மகள் தலையில் பேன் பார்க்கிறாள்.

     “சம்முவம் இல்ல?...”

     அவள் சட்டென்று எழுந்து நிற்கிறாள்.

     “தோட்டத்தில் இருப்பா...”

     அவன் சாலையோரம் அடர்ந்த அகத்தி மரங்களின் பின்னணியில் சீராக நடவு செய்யப் பெற்றிருக்கும் வாழைக் கன்றுகளைப் பார்க்கிறான். நாகர்கோயில் விவசாய ஆபீசில் எட்டு மாசத்தில் குலை தள்ளிவிடும் என்று சொன்னார்கள். நிலம் பண்படுத்தி எரு வாங்கி வைத்து, அவனும் சம்முவமுமே வேலை செய்திருக்கின்றனர். கடலில் மட்டுமே தன் வாழ்வைக் கண்டிருந்த அவனுக்கு இந்தப் புதிய அநுபவம் கிளர்ச்சியைத் தருவதாக இருந்தாலும் கடலினும் பெருங்கருணை பூமிக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறான்.

     “வணக்கமுங்க...”

     “தோத்திரம் கும்பாதிரியாரே” என்று சொல்பவன் இந்துவான பிறகு புதிதாகப் படித்த படிப்பு.

     மணியன் எதுவும் கூறாமல் மடிப்பெட்டியை எடுத்துப் புகையிலையை அடக்கிக் கொண்டு ஓரமாக நடக்கிறான்.

     “கொஞ்சம் அந்தத் தாவில பனங்கொட்டை நட்டா கிளங்கு எடுக்கலாம். புள்ளங்க தீனி கேக்கி... அதா...”

     “விதச்சு வப்போம்...”

     மண்வெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு சம்முகத்துடன் வேலையிலிறங்குகிறான்.

     ஆயிரத்தைந்நூறு ரூபாய் போல் அவன் சிறுகச் சிறுக இதில் முடங்கி இருக்கிறான். அவ்வப்போது நீர் பாய்ச்சி, பூச்சி வராமல் பாதுகாத்துக் கண்டு முதல் செய்ய வேண்டும்.

     ஆனால், எதுவுமே முயற்சியில்லை என்றால் முன்னுக்கு வர இயலாது. கையில் கிடைக்கும் பணத்தைக் குடித்து விட்டுத் தீர்த்தாலோ, நாகர்கோயில் கடைகளில் கரைத்தாலோ முன்னுக்கு எப்படி வருவது? பஞ்சாட்சரம் அன்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பத்து ரூபாய்த் துணி வாங்குவது கவுரக் கொறயிண்ணு உசத்தியாப் போடுங்கா. கடக்கார பத்து ரூவா துணிவையே இருபதுண்ணு இவனுவளப் பாத்ததும் உசத்தறா. நம்மவ ஏனிப்பிடி அன்னன்னிய காசை இப்பிடித் தீத்திட்டு பாடு இல்லேண்ணா பட்டினி கிடக்கணும்’ என்றான்.

     அவன் திரும்ப பஸ் பிடித்து வருகையில் இரவு ஒன்பதடித்து விடுகிறது. கோயிலில் குலசேகர வாத்தியாரின் தலைமையில் பஜனை நடக்கிறது. பிள்ளைகள் கூச்சல் போடுகிறார்கள். யாரோ ஒரு பயல் மணியடிக்கிறான்.

     நிலவு நாட்கள்.

     பெரிய கோயில் கொடிக் கம்பத்தின் பக்கம் இப்போதும் எட்வின் - அவன் பெயர் சீனிவாசன், குடித்துவிட்டுப் பிரசங்கம் செய்கிறான். பஜனை இரைச்சலில் அவன் பிரசங்கம் எடுபடவில்லை. இந்து சமயத்தில் சார்ந்திராத சில கிறிஸ்தவ இளைஞர்கள் கணபதி கோயிலைச் சாராமலும், அப்பால் செல்ல விருப்பமின்றியும் கும்பலாக நிற்கின்றனர். இவர்கள் அங்கே வந்து பஜனையில் பங்கு கொள்ளும் இளம் பெண்களுக்காக நிற்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமான சங்கதி. திடீரென்று ஏதோ புதிய கௌரவமும் சுதந்திரமும் பெற்றாற் போல் பூவும் பொட்டும் மையும் மருதோன்றியுமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வதும், குறுக்கு நெடுக்காக வளைய வருவதுமாக இருந்த குமரிகளும் இளைஞர் உள்ளங்களைத் தூண்டி போட்டு இழுக்கிறார்கள். இது மதமாற்றம் மட்டுமல்ல; இறால் தரும் வளமையுந்தான்.

     சாமுவல் இன்று ஜெயராமாக மாறிவிட்டாலும், குடிவெறியில் தள்ளாடியவண்ணம் மணலில் நின்று பஜனைக்குத் தாளம் கொட்டுகிறான். கோயிலில் ஏறித் திருநீறு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தில் மணியன் படியேறுமுன் பஞ்சாட்சரம் இவனை வழிமறிக்கிறான்.

     “மாப்ள இப்பத்தான் வாரியா? தங்கச்சி மேனகாவக் காணமிண்டு தேடிட்டிருக்கா... வெளிய சொல்லல. நீ கூட்டிப் போனியா மாப்ள? தெரியுமா ஒனக்கு?”

     அவனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.

     “மேனகாவைக் காணமா?...”

     “ஆமா... காலமேந்தே காணமின்னு புனிதா சொல்லுதா. ஒதுக்கலுக்குப் போயிருக்காண்ணு இவ எல்லா நினைச்சிருக்கா. இந்த ஊர் வெடலப்பய எல்லாம் இருக்கானுவ. இது யாருட தொடுப்புண்ணு புரியல. வேணுமின்னே பெரிய கோயில் பார்ட்டி ஆளுவ நம்ம பொண்ணுவள வலவச்சி இழுக்கச் சூழ்ச்சி செய்யிறானுவ...” மணியன் கோயில்படி ஏறாமலே வீட்டுக்கு விரைகிறான். அப்பன் சாராயம் குடித்திருக்கிறார். சின்னப்பயல் பஜனைக்குப் போயிருக்கிறான். ஊமைப் பையன் கடலுக்குப் போகிறான்; குடிக்கவும் பழகியிருக்கிறான். அவனிடம் எதுவுமே பேச முடிவதில்லை. வெறி கிளர்ந்து ஆக்ரோஷமாகக் கையில் கிடைத்ததைப் போட்டு உடைத்துவிடுகிறான்; அல்லது அடிக்கிறான்.

     ஆத்தா தலையில் கைகளை வைத்துக் கொண்டு ஓய்ந்து கிடக்கிறாள். ஜெயா பீடி சுருட்டிக் கொண்டிருக்கிறாள். புனிதம் கணேசுவை மடியில் போட்டுத் தட்டுகிறாள். வீட்டில் ஏதோ ஒரு கனத்த படுதா சோகமாக விழுந்து மௌன ஆட்சியை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இவன் உள்ளே நுழைந்ததும் தாயின் மடியிலிருந்து எழுந்து வரும் கணேசு கால்களைக் கட்டிக் கொள்கிறான்.

     “அப்பா, மித்தாயி!...”

     “ஏன்லே, புள்ள இருக்கில்ல! நெட்டமா வெத்துக்கய்ய வீசிட்டுவார?” என்று ஆத்தா ஆத்திரம் கொண்டு வழக்கம் போல் கடியவில்லை.

     அப்பன் வசைபொழியத் தொடங்குகிறார்.

     யாரை என்று கேட்டால் அவருக்கே சொல்லத் தெரியாது. சாராயம் உள்ளே செல்ல, கட்டு அவிழ்ந்ததும் இந்த வசைகள் பொலபொலவென்று உதிரும். வாழ்வின் நெருக்கங்கள், ஆற்றாமைகள், நிராசைகள், சிதைவுகள் எல்லாவற்றினின்றும் எதிரொலிக்கும் வசைகள்.

     “அவ... சிறுக்கி, அவெ மேல கண்ணு வச்சித்தா ஓடிட்டிருக்கியா. இந்துவாறேண்ணு சொன்னா. நசரேம்பய முதுகெலும்பில்லாதவ. அவெ சொம்மா இருந்தா. இவெ சொணையுள்ளவ. ஆம்புள, ஒரு பொம்புளய நாட்டமாயிருக்காண்ணா என் செய்யவா...?” அப்பன் சிரித்துக் கொள்கிறார். மணியனுக்கு ஆத்திரம் மூண்டு வருகிறது.

     “நீங்கத்தா இதுக்கு உளுமாந்திரமா இருந்து கூட்டிக் குடுத்திருக்கீம்! துரோவத்தனமாக காரியம்! இந்தக் கடக்கரையில, நமக்குத் தலக்குனிவு வாராப்பிலல்ல இந்தச் சிறுக்கி பண்ணிட்டா?”

     இவனும் வசை மொழிகளை வீசுகிறான்.

     “போலே, என்னியோ, இந்தக் கடக்கரயில எப்பமும் நடக்காத புதுச்சேதி போலப் பேசுதான்! இவெ நேத்து அந்த ஏலிச்சிறுக்கியோட கும்மாளியிட்டத மறந்து போனா...! புறா ஒடிச்சிப் போயிருக்கி. வந்து கோயில்ல கொட்டு முழக்கில்லாம தாலி கெட்டு நடந்துட்டுப் போவு, நாயமா அததுக்குப் பருவம் வந்தாச்சி. கெட்டிச்சிக் குடுக்கணும். இவெ வாழத்தோப்பு வாங்கான், மயிருவாங்கான்!”

     இதுபோன்ற சம்பவங்கள் அவர் கூறுவதுபோல் கடற்கரைக்குப் புதிய செய்திகளல்ல; ஆனால்...

     மணியன் எண்ணிப் பார்க்கிறான். பெஞ்ஜமின் கூறினாற் போன்று, இந்தச் சில வருஷங்களில் இவ்வாறு மீறிய இளைஞர்களில், பெண்கள்... சமயம் மாறியவர்கள். ஆண்கள் மாறாதவர்கள்...

     இதுவும் புதுச் சாமியாரின் சூழ்ச்சியோ?