அத்தியாயம் - 29

     மணியன் திரும்பவும் அந்த வீட்டுக்குள் வரவேயில்லை. குழந்தையைப் பாட்டி எடுத்துக் கொண்டுவந்த மறுநாள் அப்பன் கடலுக்குப் போயிருந்த நேரத்தில், புனிதமும் தங்கச்சியும் வந்தார்கள். ஆத்தாளும் மீன்வாடிக்குச் சென்றிருந்தாள். புனிதன் மணியனுடைய துணிகள், பெட்டி ஆகிய சாமான்களைத் தங்கையிடம் கொடுத்துவிட்டு, குழந்தையையும் கூட்டிச் சென்று விட்டாள். ஆத்தாள் வீடு திரும்பியதும் சண்டை சண்டையாகப் போடுகிறாள்.

     “மண்ணுக்களி மொந்த போல நிக்கிறிங்க? ஏக்கி? எங்காத்தா இல்லாம எதும் இங்கிருந்து கொண்டிட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லுறதில்லியா? கடலல மண்ணப் பாத்துத்தானேட்டி வரும்? எம்மாட்டு நீரை அடிச்சு விட்டாலும் கரயில வந்துதா மோதும். ஆத்தா புள்ள பிரிஞ்சிபோகுமா? அவ பொட்டியெடுத்திட்டுப் போராண்ணு என்னக் கரயில வந்து ஒரு கொரகுடுக்கக் கூடாதாட்டீ?”

     உள்ளூற அவள் உடைந்து போகிறாள். சம்பந்ததாரியின் வீட்டில் எடுத்துச் சொல்ல, முதியவரில்லை. அங்கே சென்று இளையர்களிடம் பேச்சுக்கேட்க மனமின்றித் துயரத்தை விழுங்கிக் கொள்கிறாள். மகன் வந்தது தெரிந்தால் அங்கே சென்று கத்தலாம். பெஞ்ஜமினும் கூட நிலத்தில் நடவென்று போயிருப்பதாகக் கேள்விப்படுகிறாள்.

     வீடு வெறித்துக் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் பாறையை மோதுவது போல் அப்பனுடன் மோதுகிறாள்.

     அப்பன் குடிக்கச் சாராயம் வாங்கி வந்து கிளாசில் விட்டும் போது அவள் அதைப் பிடுங்குகிறாள். அப்பன் அவளைப் பிடித்துத் தள்ளுகிறார். “நீர் என்னியக் கொன்னுபோடும்! அந்தப்பய பொட்டிசட்டியெல்லா எடுத்திட்டுப் போயிட்டா! இந்தப் பொட்டப்புள்ளகளயும் குடிக்கார அப்பனையும் மவனையும் வச்சி என்ன எளவு செய்ய?...” என்று அழுகிறாள். அப்பன் நிமிர்ந்து கண்கள் உருள விழித்துப் பார்க்கிறார். கழுத்துக்கோலி துரித்து நிற்கிறது. மேனி அஞ்சி ஆத்தாளை விலக்கும் பாவனையில் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்.

     “போயிட்டானா? சவாசு, இந்தா, நாங்குடிக்கேன். நீயும் குடிடீ... சந்தோசம்ட்டீ!... அவெ என்னப்பதித மதத்தில சேக்கணுமிண்டிருக்காணில்லிய...?... அதாணில்ல, மேரிப் பொண்ணு - இதா, சந்தோசம்...” என்று தம்ளரில் சாராயத்தை விட்டு முழுதும் பருகிவிட்டு உதட்டை ஒத்திக் கொள்கிறார், துண்டால்.

     “மேரிப்பொண்ணு? உன்னிய ஜான் பயக்குக் கெட்டி வச்சிடப்போறம். ஃபர்ஸ்ட்கிளாஸ் பறவாகிப்பு, கலியாணம் சுரூபமெல்லாம் சுவடிச்சி, இந்தப் பெரிய கோயிலில கலியாணம் நடக்கும். லில்லிப்பெண்ணு கன்யாஸ்திரீயாயிட்ட. அவ ஆசீர்குடுக்க வருவா. இவெ... பாக்கட்டும். இந்த வீடு, மரம், வல இருக்கு. ஏ ஒடலில பெலமிருக்கி, கடல்லறாலிருக்கி, அமலோற்பவம் எனக்கு முப்பதாயிரம்னாலும் குடுப்பா... இவெ மயிரில்லாம, நா எம்மவளுக்கு ஃபஸ்ட்கிளாஸ் கலியாணம் கட்டுவம்...”

     ஆத்தாள் திகைத்து நிற்கிறாள். கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டுவிட்டது...! அவர் நார்ப்பெட்டியைத் திறந்து வெள்ளை இழை வேட்டியையும், முன்பு தீபாவளிப் பண்டிகைக்கு வாங்கிய சட்டையையும் அணிந்து கொள்கிறார். மேல் வேட்டியையும் போட்டுக் கொண்டு ஜயாவைத் தலைக்கு எண்ணெய் கொண்டு வரச் சொல்கிறான். முழுதும் வழுக்கையாகி வரும் மண்டையில் சில முடிகள்தாமிருக்கின்றன. எண்ணெய் மண்டையில் வழியப் புரட்டுகிறார். கையில் மடிப்பெட்டியுடன் அவர் கிளம்பி விட்டார் அப்போதே.

     ஆத்தாளுக்கு எதிரிட்டுப் பேசவே அச்சமாக இருக்கிறது. எல்லா நடப்புகளும் அவளுடைய சங்கற்பங்களை மீறிக் கொண்டல்லவோ நடக்கின்றன? கடலும் வானமும் மழையும் காற்றும் மனிதனின் கருத்துக்கேற்ப இயங்கவில்லை. எனினும் அவற்றுக்கு ஒரு நியதியும் வரையறையும் இருக்கின்றன. எப்போதோ அபூர்வமாகத்தான் மனிதரை அச்சுறுத்துமளவுக்கு அவை வரை மீறுகின்றன. ஆனால் இந்தக் கடற்கரை மனிதர்கள் அநீதிகளை எதிர்த்துப் போராடுமளவுக்கு வலிமை பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்; அதே சமயம் உணர்ச்சிகளுக்குத் தாறுமாறாக இடம் கொடுத்து வலிமை இழந்தும் சீர்குலைகின்றனர். காலம் காலமாக வலியுறுத்தப் பெறும் அரண்களும் கூட அதனால் குலைந்து போகின்றன.

     இருதயராஜ் இந்துவாகவே நிற்கவில்லை என்றும், குடும்பப் பிரிசல் அதனால் வலுவாகி விட்டதென்றும் செய்திகள் கடற்கரைக் காற்றில் விரிந்து பரவி, இருசாராருக்கும் ஆதரவுகளைத் தேடி வருகின்றன.

     மணியன் ஆதித்தனுடன் விசைப்படகில் கூட்டுச் சேர்ந்து வேம்பார் மடையில் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அந்தப் படகில் ஆள் வலைதான். இயந்திரத்தினால் இயங்கும் இழுவலை அல்ல. ஓட்டியும் வலைக்காரருமாகப் பத்துப்பேர் இருக்கின்றனர். ஒரு நாளைக்கு டீசலுக்கு எழுபது எண்பது செலவாகிறது. ஆறு சிலிண்டர் இயங்கும் பொறி. ஒரே நாளில் ஆயிரம் ஆயிரத்தைந்நூறு, இரண்டாயிரம் என்று இறால் பணம் குவிக்கிறது. ஆனால் அங்கேயும் வள்ளக்காரர் வலை வைக்கு முன் இவர்கள் அள்ளி வந்து விடுகின்றனரே என்ற மோதல்கள் எப்போது நெருப்புப் பற்றி விடுமோ என்று புகைந்து கொண்டே இருக்கிறது.

     மணியனுக்கு ஒரு நாளைக்கு அறுபது எழுபதும் கிடைக்கும். முப்பது நாற்பதும், பத்தும் பதினைந்தும் கூடக் கிடைக்கும். ஒரு மாதம் அவன் அயலூரில் சாப்பிட்ட பின் கையில் அறுநூறு ரூபாயுடன் ஊர் திரும்புகிறான். ஊரைப் பற்றிய விஷயம் எதுவுமே அவனுக்குத் தெரியாது.

     திருச்செந்தூரில் இறங்கி சாமி கும்பிட்டு அருச்சனை வைத்துவிட்டு அவன் பஸ் நிலையத்துக்கு வந்தபோதுதான் குரூஸ் மாமன் மகனை - திருச்செந்தூரில் தையல் கடை வைத்திருப்பவனைப் பார்க்கிறான்.

     “என்ன மச்சான்...? கலியாணமெல்லாம் கூடி வாராப்பில இருக்கி? பறவாசிப்புன்னாங்க...?” என்று அவன் இவனை ஆழம் பார்க்கிறான்.

     “யாருக்கு?”

     “மச்சான் வெளயாடுறியா? மேரி பொண்ணுக்குத்தா?”

     “எந்த மேரிப் பெண்ணுக்கு?”

     “இந்து வாயிட்டுண்ணு சொன்ன மேரிப் பொண்ணுக்குத் தா. செத்த முன்னத்தா எங்கப்பச்சி வந்து சொல்லிட்டுப் போவு. ஒங்கக்கப்பெ பெரிய கோயிலுக்கு வந்து கொம்பசாரிச்சிட்டுக் கருணை வாங்கிட்டாராம். வழி தவறிப்போன மறிகள் திரும்பத் திருச்சபையில் சேர்ந்ததுக்குச் சாமி சந்தோஷமா அறிக்கை விட்டாராம்...!”

     மணியனுக்கு தான் அலைகடலின் நடுவே இருப்பது போன்றும், கரையில் செம்புழுதிப்படலம் கிளம்பி காட்சிகளை மறைப்பது போன்றும் சில கணங்கள் பிரமையாக இருக்கிறது. அவன் முருகனுக்கு அருச்சனை செய்து திருநீறும் குங்குமம் தரித்து. ‘அரோஹரா’ என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். வழி தவறிப் போன ஆடா? அப்பன் இவ்வாறு காலை வாரிவிடக் காத்திருந்தாரா?

     அவர்கள் வேண்டுமென்றே செய்த சூழ்ச்சி என்று இப்போது அவன் உறுதியாக நம்புகிறான். பெரிய கோயில்காரர்கள், இந்துவாகி வந்தவர்களை அங்கே இழுக்கப் பல வகையிலும் தூண்டில் வைக்கின்றனர். கிணறு வெட்டக் கடன் கொடுக்கிறார்கள். ஆசுபத்திரிக் கட்டடம் பெரிதாகிறது. ஆனால் அதே சமயம், இவர்களுக்கும் ஒரு மருந்தகம் வந்திருக்கிறது. கூடங்குளத்திலிருந்து ஒரு டாக்டர் வந்து போகிறார். பஞ்சாட்சரத்தின் ஒன்றுவிட்ட சோதரி அற்புதமாயிருந்தவள் அமுதாவாயிருக்கிறாள். பாளையங்கோட்டையில் மருத்துவச்சியாகப் பயிற்சி பெறச் சென்றிருந்தாள். இந்நாள் வந்திருப்பாள். பெரிய கோயில் சாமிக்கு எங்கோ வெளிநாட்டிலிருந்தெல்லாம் மரிக்கன் மாவு, பால் பொடி, எண்ணெய் எல்லாம் வருகின்றன. முன்பெல்லாம் இல்லாம் இப்போது எளியவர்களுக்கெல்லாம் அப் பொருள்களை வழங்குகிறார். ஆனால் அப்பன் மகளை ஜானுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப் பணத்துக்கு என்ன ஏற்பாடு செய்திருப்பார்?...

     மணியன் ஊருக்குள் நுழைகையில் மாலை நான்கு மணியிருக்கும். மழை பெய்து பூமி குளிர்ந்திருந்திருக்கிறது. பஸ் நிற்குமுன் சினிமாவுக்குச் செல்லும் கூட்டம் உள்ளிருப்பவர்கள் இறங்க இயலாமல் வளைந்து கொண்டு வாயிலிலும் ஜன்னல் வழியாகவும் நெருக்குகிறது. கண்களைப் பறிக்கும் வண்ணத் துணிகள், எண்ணெய் வழியும் தலைகள், கருவாட்டு வாடை, சாராய வாடை, முகப்பவுடர் மணங்கள் எல்லாம் சுவாசத்தைப் பிடிக்கும் நெருக்கடி. சின்னப் பயல் ரமேஷ் பீடியை விட்டெறிந்து விட்டு, ஒரு சன்னல் வழியாக உள்ளே புகுந்து விடுவதை மணியன் பார்க்கிறான். ஊமையும் சினிமாவுக்குப் போக நிற்கிறான். அவர்களைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளாமல், தூத்துக்குடியிலிருந்து வாங்கி வரும் பெரிய பயணப் பையுடன் அவன் வீட்டை நோக்கிச் செல்கிறான்.

     கணபதி கோயிலில் யாரோ பிள்ளைகள் மணியை அடிக்கின்றனர். இங்கு கும்பிடுவதற்கும் மணியடிப்பதற்கும் ஓர் ஒழுங்குமுறை இன்னும் வரவில்லை. குலசேகர வாத்தியார் தொங்குபையுடன் பஸ்ஸுக்குக் கிளம்பி விட்டார். இனி காலையில்தான் வருவார். மாலைக்கும் காலைக்கும் கோயில் குருக்களாக ஒரு பண்டாரம் இருந்தார். அவருக்குச் சில காலமாகவே உடல் நலமில்லாமல் திருச்செந்தூர் போய் விட்டார். இப்போது பிரசாதுதான் கோயில் வேலையைப் பார்க்கிறான். குலசேகர வாத்தியாரும் இருக்கிறார்.

     “மணியனை ரொம்ப நாளாகக் காணவில்லை...?” என்று ஒரு கேள்விக் குறியோடு குலசேகர வாத்தியார் அவனை நிறுத்துகிறார்.

     “நா ஊரில் இல்ல வாத்தியாரே. வேம்பாரில தொழில்...”

     “அதானா? ஏதேதோ சொல்லிட்டாங்க. அப்பச்சி அந்தக் கோயில்ல சேந்திட்டாராம். தங்கச்சிக்கு கன்யாகுமரியில் இப்போது உங்களைப்போல இந்துவான பையன் ஒருத்தன் ஸ்கூல்ல கிளார்க்கா இருக்கிறான். நான் முடிச்சு வக்கலான்னு இருக்கையில அவசரப்பட்டு விட்டீங்களே? அப்பசிய விட்டு நீ பிரிஞ்சு போயிருக்கலாமா?”

     “வாத்தியாரே, அப்பன் சின்னப் புள்ளயா? எவ்வளவுதா பொறுக்கலாம்! இங்கத்த சங்காத்தமே வாணாண்டுதா போனம். எங்கே போனாலுந் தொழிலிருக்கி, ஆண்டவம் படியளக்கிறா...”

     “சரி, போ, வீட்டுக்கு!”

     அவனைக் கண்டதும் கணேசு வந்து கட்டிக் கொள்கிறான். புதிய பையைக் கீழே வைக்கு முன் அவன் என்னென்ன வாங்கி வந்திருப்பானோ என்று பார்க்கப் பெண்கள் கூட்டம் கூடுகின்றனர். பஞ்சாட்சரம் உடல் நலிவுற்றவனைப் போல் வருகிறான்.

     “மாப்ள, இங்க எல்லாம் ஆராளிப் படுது; நீ மொள்ளமா வார?” அவன் பையிலிருந்து குழந்தைச் சட்டை, பட்டுநாடா, சீனிமிட்டாய், காராசேவு, சாந்துக்குப்பி, குச்சிலிப் பொட்டுக்கள் எல்லாவற்றையும் கடை பரப்பி விட்டு, அருச்சனை செய்த தேங்காய் பழம், திருநீறு குங்குமம் எல்லாவற்றையும் மனைவியிடம் கொடுக்கிறான். புனிதா கண்கள் இறங்க, நிறைந்த கருப்பம் குவிந்து தளரக் காட்சியளிக்கிறாள். முதலில் திருநீற்றையும் குங்குமத்தையும் அணிந்து கொள்கிறாள்.

     “சங்கதி தெரியுமா? உங்க வீட்டில் எல்லாம் தாய் மதத்துக்குப் போயிட்டாங்க!” என்று வருகிறான் சுந்தரம்.

     “தாய் மதமென்ன தந்தை மதமென்ன, நமக்கு இதுதா தாய்மதம்...”

     “நாஞ் சொல்லல மாப்ள... அந்தப் பார்ட்டிக்காரங்க சொல்லிக்கிறாங்க அப்படி!”

     “சொல்லிக்கட்டும்.”

     “இது இந்த சாமியாரு சூழ்ச்சி மட்டுமில்ல. ஒன்னக்க தங்கச்சி வேற சம்பந்தப்பட்டிருக்கா. அவ கான்வென்ட்டிலேந்து காயிதம் போடுதா. துணி மணி பணம் எல்லாம் குடுத்து இந்தக் கலியாணத்துல முனப்பா இருக்காளுண்ணு சேதி. அந்த ஜான் பய, இங்க தினம் வந்திருக்கா, ஒரு மரியாதிக்கு, நீ இருக்கியாண்ணு விசாரிக்கல. ஒங்காத்தாதா பாவம், வந்து கணேச எடுத்திட்டுப் போவும். ஜயா வரும். வந்து கண்ணீர்வுட்டு அளுதிச்சி. அதும் தெரிஞ்சி அப்பெ அடிச்சாராம். பெரிய கோயில்ல அப்பச்சியும் மேரியும் ஊமப்பய்யனுந்தா கருணை வாங்கிட்டாங்களாம். நசரேனுக்குச் சித்தப்பன், சித்தப்பன் மவன் எல்லாரும் வந்து போயிருக்கா. ரோசிதா கூட வந்து போயிருக்கா. ஆரும் இங்க வார இல்ல. ஒங்கப்பா வட்டக்காரர்கிட்ட பத்தாயிரமோ பதினஞ்சாயிரமோ வாங்கிச்சிருக்காண்ணு வதந்தி. மாப்பிள்ளக்கி நாலுசவரன் சங்கிலி. அவங்க மச்சானுக்கு மோதரம் போடுதாங்க...” என்று சுந்தரம் விவரம் தெரிவிக்கிறான்.

     “வாசற்படி மறியலுக்கு நா போகப் போற; எனக்கு உறமுற இருக்கு...” என்றும் கூறிக் கொள்கிறான்.

     மணியன் வாயே திறக்கவில்லை. நெஞ்சு கனக்கிறது. ஒரு சவால் விடுவது போல், அந்தச் சமயத்தை விடுத்து அவர்கள் இந்த நிழலுக்கு வந்தார்கள். அந்நாள் சிலுவையாரே, மாதாவே என்றவர்கள், முருகா, கணபதி என்று அழைக்கிறார்கள். அதைத்தவிர ஒரு மாற்றமுமில்லைதான். அதே கடல், அதே வானம், அதே காற்று, அதே தொழில் பிரச்னைகள் - வாழ்வுப் பிரச்னைகள்...

     இரவு, அவன் தங்கைகளுக்கென்று வாங்கி வந்திருக்கும் ரவிக்கைத்துணி, நாடா முதலியவற்றையும், மிட்டாய்களையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான். வாசல் விளக்கில் பூச்சிகள் பறக்கின்றன. முன் தாழ்வரையில் வலைகள் கிடக்கின்றன. கட்டிலில் எப்போதும் போல் அப்பனில்லை. மேரியும் ஜெயாவும் சீனிவாசன் மனைவி பாலாளும் இருக்கின்றனர். அவனைக் கண்டதும் திடுக்கிட்டாற்போல் மேரிதான் எழுந்து குரல் கொடுக்கிறாள்.

     “அம்மா...! அண்ணெ... அண்ணெ வந்திருக்கா...”

     “எப்பம் வந்திங்க? வீட்ட கலியாணம் வந்திருக்கு...” என்று எட்வினின் மனைவி பாலா சிரிக்கிறாள். ஜெசிந்தா பாலாளாகியிருக்கிறாள்.

     ஆத்தா குரல் கேட்டு வரவில்லை. அவன் தான் நடு வீட்டுக்குச் செல்கிறான். அங்கேதான் கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து உட்காருகிறாள். மேரியன்னை சுரூபம், பிள்ளையார், முருகன் படங்கள் இருக்கின்றன. புதியதாக அந்தோணியார் படம் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது.

     “அம்மா...!”

     அன்றொரு நாள் சுழலியில் அகப்பட்டு அவனும் நசரேனும் மீண்டு வந்ததும், அந்த மகிழ்ச்சிக் களரியும் அவனுக்கு நினைவில் காட்சி தருகிறது. அவள் கைகளில் அவன் கருப்பட்டி மிட்டாயையும் காராசேவையும் வைக்கிறான். அம்மை குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். அவன் தாயின் கண்களைத் துடைக்கிறான். பேச்சு எழவில்லை. “மக்கா... உன்னக்கப்பெ, ஆட்டி வைக்கிறாருலே. எனக்கு மடுத்துபோவு. இந்தச் சீவியம் எதுக்காவண்டு மடுத்துப்போவு...”

     “நீ என்னக்கூட வந்திரு. நாம வேற தாவுல வீடெடுப்பம்...”

     “ஒரு பேச்சுக்குச் சொல்லிட்டா நீ பிரிஞ்சி போயிரலாமா மக்கா, இப்பிடி? வூடே விறிச்சிண்டாயிரிச்சி. அவ, உம் பொஞ்சாதி, நா இல்லாத நேரத்தில இந்த வீட்டேந்து உம் பொட்டி சட்டியெல்லா எடுத்திட்டுப் போயிற்றா. என்னைக்கு உள்ளாற அக்கினிக்கண்டமாட்டு வேவுது. விண்டு காட்ட ஏலாது லே...”

     “நாந்தா கொண்டாரச் சொன்ன. போவட்டும். வேம்பாரில மிசின் போட்டுல மடிக்காரனாயிருக்கே. தொழில் சுமாராயிருக்கி. நீ வந்திரு...”

     “நா எப்பிடிலே வார...! உன்னக்கப்பெ வீட்டமரத்து எல்லாம் பந்தகம் வச்சி, வட்டக்காரரிட்ட பதினஞ்சாயிரம் வாங்கியிருக்கா. இப்பம் நேத்து, மொடுதவங்கூட தூத்துக்குடிக்கிப் போயி லில்லியப் பாத்திட்டு, சாமாஞ்சட்டெல்லா வாங்கியாரப் போயிருக்கா. வர நாயராட்ச பறவாசிப்பு; சாமியாருக்கு வரிசை வய்க்கணும். விருந்து போடணுமிண்ணு குதிக்கியா. மயினி மாமிண்ணு ஆரிருக்கா? இந்தப் பொண்ணு மொவத்தப் பாக்குறப்ப வயித்த சங்கட்டமா இருக்கி. கெளுக்கியில மாட்டிக்கிட்டம். வேணுமிண்ணு இது நடக்கு...”

     அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

     “ஏ மேனி! இங்க வா?”

     அண்ணனின் குரல் சாட்டையடி போலிருக்கிறது.

     “இம்மாட்டு ஒரு தூண்டில் மாட்டி வச்சிட்டியே? ஆத்தாளை இப்படி நோவ விட்டு நீ கலியாணஞ் செஞ்சிக்கிறது நல்லாயிருக்கா? அந்தப் பயல நீ கலியாணங்கட்டிக்கணுமிண்ணா இந்துவாகணுமுண்ணு ஏஞ் சொல்லக்கூடாது நீ?”

     அவள் ஊமையாக நிற்கிறாள்.

     அவள் சொல்லாமலில்லை. ஆனால்... ஆனால்... அப்பன் முந்திக்கொண்டு குதித்தாரே?

     “நீங்க எல்லாப் போயி திருச்சபையில சேந்துட்டியாக்கும்!”

     “ஆத்தா வார இல்ல; ஜயா வார இல்ல...”

     “அப்ப ஆத்தாளும் ஜெயாளும் என்னோட வரட்டும். நீ இங்க கலியாணம் கட்டிக்க...”

     அவள் சொல் பிரியாமல் நிற்கிறாள்.

     “என்னட்டீ, பேசாம நிக்கே? இந்தக் குடும்பத்தின் மானம், கவுரவம் எதுவும் ஒன்னக்க நினைப்பில இல்ல, இல்லியா? ஒன் சொகம்தானே பெரிசாப்போச்சி? நீங்க திருச்சபய வுட்டு நீக்கிட்டா செந்திர மாட்டமிண்ணு நாங்க வேற நெழலுக்கு வந்தம். இப்பம் மூஞ்சில கரியத் தீத்திக்கிட்டாணு, துப்பின எச்சிய முழுங்கிறதாண்டு போயி அங்கியவுழுகா. எம்மாட்டு தலக்குனிவு?... அப்பெ... அப்பெ, ஆர எண்ணி நம்பி வீட்டயும் மரத்தயும் பந்தகம் வச்சாரு?...”

     அவனுடைய குரல் கடல் அலைகளுக்கு மேல் ஒலிக்கிறது.

     “நா அத்துச் சொல்லிட்ட. இந்தக் கலியாணத்தில் எனக்கொரு பந்தமுமில்ல... ஆமா, நா ஆத்தாளையும் ஜயாளையும் கூட்டிப் போயிருவ... அம்மாட்டுக்கு ஒரு சாதன வாழுவா, சாவாண்ணு வந்த சமயமெல்லாம் கெட்டிச்சி ஒண்ணா நின்ன குடும்ப. ஆரும் வரமாட்டம்...!”