உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 வாசலில் பளபளவென்ற அந்தக் கறுப்புக் கார் நிற்கிறது. வடக்குத் தெருவே வாசலில் அந்தக் காரை வரவேற்று உபசரித்துக் கொண்டு கூடியிருக்கிறது. மேனியில் எதுவுமில்லாத குழந்தைகள் அதன் கதவுகளை, விளக்குக் கண்களைத் தொட்டுப் பார்க்கையில், “தொடாதேட்டீ? அளுக்காவப் போவுது?” என்று வாசலில் அந்தக் காரையே பார்த்துக் கொண்டு காவல் நிற்கும் ரோசிதா அவர்களை இழுத்து விடுகிறாள். அவளுக்கு அப்போது பெருமை பிடிபடவில்லை. மச்சாது மாமன், ‘பிளசர்’ எடுத்திட்டு வந்திருக்கிறார். அவருடைய சிநேகிதரும் வந்திருக்கிறார். இங்கே யார் வீட்டுக்கேனும் இப்படி உறவினர் பிளசர் காரில் வரும் உறவினர் இருக்கிறார்களா? மரியான் உள்ளே செல்கிறான். நாற்காலியில் வீற்றிருக்கும் இந்த மாமனை ரோசிதாவுக்குக் கலியாணம் நடந்த போது மரியான் பார்த்திருக்கிறான். அச்சாக நசரேனின் அம்மையைப் போலவே முகஜாடை. ஆனால் இளமை இல்லாமல் சுருக்கம் கண்டு வற்றிப் போயிருக்கிற முகம். உடல் தடிமனானாலும் சில்க் சட்டைக்குள் தொய்ந்து விழுந்த தோளையும் தொந்தியையும் கணக்கிடலாம். இன்னொருவர் கறுப்பாக இருக்கிறார். அவரும் தடித்த உடலும், தொந்தியுமாகத்தானிருக்கிறார். கையில் தங்கப்பட்டை, கடியாரம், விரலில் மோதிரம் என்று பார்க்க மதிப்பாக, அந்தக் கார் சவாரிக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். நசரேன் கைலியும் பனியனுமாகச் சுவரில் சாய்ந்தாற் போல் நிற்கிறான். ஜானும், சிமோனும் அருகே நிற்கின்றனர். வாங்கிப் பலகையில் தட்டில் பழம், சவுந்தரி விலாஸ் ஓட்டலில் காராசேவு செபஸ்தி நாடார் கடைக்கலர் எல்லாம் காட்சியளிக்கின்றன. “பழம் சாப்பிடுங்கண்ணே. இங்கே கலர் நல்லாயிருக்காது. கோபித்தண்ணி கொண்டாரேன்...” என்று குசினியிலிருந்து வரும் ஆத்தா மரியானைப் பார்த்ததும், “வா மக்கா*!” என்று வரவேற்கிறாள். (* மக்கா - பையா. ‘மகனே’ என்னும் விளிச்சொல்) “இவெதான் இப்பம் ரெண்டு பேருமாத்தான் தொழில் செய்யிறானுவ...” “அப்பிடியா?... பார் தம்பி, இப்பிடித் தொழில் செஞ்சி ஒண்ணுக்கும் ரெண்டுக்குமாப் பாடுபடுறதல என்னிக்கு மின்னுக்கு வரது? இல்லியா?” மாமன் எதற்குப் பீடிகை போடுகிறார் என்று மரியானுக்குப் புரியவில்லை. மரியான் நசரேனைப் பார்க்கிறான். நசரேன் அவனைச் சந்திக்க விரும்பாதவன் போல் எங்கோ பார்வையைப் பதிக்கிறான். மாமன் சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்து லிஸிக்கும், சிமோனுக்கும் நீட்டுகிறார். “சும்மா இரிக்கட்டும். நீங்க சாப்பிடுங்கண்ணே...” சிநேகிதர் ‘கலரை’ அருந்திவிட்டு நாசுக்காக மேல் வேட்டியால் உதட்டை ஒத்திக் கொள்கிறார். “இப்பம், இந்த வெள்றால், சிங்கிறால், கல்றால், இதுங்களுக்கெல்லாம் நல்ல கிராக்கி. கிலோ சாதாரணமா ரெண்டு மூணுக்குத்தாம் போவுதுண்டிருக்ய வேணா, வெளிநாட்டுக்கு ஏத்துமதியாவுது. சென்ட்ரல் கவர்ன்மென்ற்றில் ஃபாரின் எக்ஸ்சேஞ்சிண்ணு இதுக்குத் தொழில் அபிவிருத்திக்குத் திட்டம் வச்சிருக்யா. கொச்சிக்காரந்தா, இப்ப மொத்தத்துக்கு எக்ஸ்போர்ட் கன்ட்ராக்ற்ற எடுத்திருக்யா. நாமும் கவர்ன்மென்ற்ற தர்ற ஒதவியப் பயன்படுத்திட்று மின்னுக்கு வரணுமிண்டு எனக்கு ஆச. நான் முன்னமே இந்தக் கடன் திட்டம் பார்த்துக் கொஞ்சம் பணம் கெட்டி வச்சேன். ஒரு லாஞ்சி வந்து தொழில் நடக்கு. எங்க பைய ட்ரெயினிங் எடுத்திட்டு ஓட்டறான். இவெ பையனும் லாஞ்சித் தொழில்தா, இப்ப மின்னொரு லாஞ்சியும் வார இருக்கு. ஆளுக்குக் கொஞ்சம் முன் பணமாக் கெட்டி, இன்சூரன்ஸ் அது இதுண்டு செலவுக்குப் போட்டா, நாலு பேரு லாஞ்சி சொந்தக்காரங்களாகவே தொழில் செய்யலாம். வருசம் மிச்சூடும் தொழில் இருக்கும், தவணை அது பாட்டில் கட்டுறோம். அதாம் நசரேனைக் கூட்டிட்டுப் போவலாம். இன்னும் இங்கிய, இந்தக் கரயில வலைக்காரங்களையும் கேட்டுத் தொழிலுக்கு ஒரு விருத்தி கொண்டாரலாமிண்ணு வந்தம்...” மரியானுக்குக் கேட்க நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது. ஆனாலும்... மேலே பார்க்கிறான். மேலே சுவரில் நசரேனின் தந்தையின் படம் பெரிது பண்ணி மாட்டியிருக்கிறார்கள். சரிகை உருமாலும் முழுச்சட்டையுமாக அவர் காட்சி தருகிறார். வகிடெடுத்து வாரிய முடியும், மழுமழுப்பான முகமும், அந்தப் பார்வையும் அச்சாக இருக்கின்றன. இது எப்போது எங்கே எடுத்தார்களோ? அந்தப் படத்தில் அவரைப் பார்க்கையில் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆராளிக் கடலில் மடிக்காரராகத் தொழில் செய்தவரென்று சொல்லிவிட இயலாது. நசரேனை இவர் அழைத்துச் செல்வதென்ற முடிவுடன் வந்திருக்கிறார். அவனும்போகலாம். இவர்கள் மரத்தைச் சொந்தமாக வாங்கிக் கொண்டு அப்பன் சொந்தத் தொழில் செய்யலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் பணம்... அது வேண்டுமே? “மொதக்க எம்பிட்டுப் பணம் தேவப்படும்?” மரியான் மௌனத் திரையை மெதுவாக அனக்குவது போல் கேட்கிறான். “ஐநூறு ரூபாய் இப்பம் கொடுக்கணும். பொறவு சிறுகச் சிறுக வர்ற லாவத்தில் கட்டிக்கலாம்...” “தவணை கட்டுறது எம்பிட்டு?” “அது நாலு பேர் தொழில் செஞ்சீங்கன்னா, பொது. சருக்காருக்கு மாசம் முந்நூறு கட்டணும். பின்னால டீசல், அது இதுண்ணு செலவு போக மிச்சம் வாரதை நாலுபேரும் பங்கு போட்டுக்கலாம். ஒரே நாளில் ஐநூறுக்கும் பாடு வரும். உங்க மரம், வெள்ளத்தில் இப்பிடி வராது. கொல்லம் பக்கம், மன்னாருமடை, இங்கே எல்லா எடத்திலும் தொழில் செய்யப் போகலாமே?...” “நான் அப்பாவைக் கேட்டு ரோசிச்சிச் சொல்றே. சொந்தமா இல்லாத போனா கூலி மடிண்ணும் ஆளெ வச்சிக்கலாமில்ல?” “அதுந்தா, அதுக்கு அறுபது நாப்பதுண்ணு. அறுபது பங்கு சொந்தக்காரங் கூட்டு. பொறவு மிச்சம் வலைக்காரங்க பங்கு. அப்படி வந்தாலும் வரலாம்...” “ஏன் நிக்கிறீங்க எல்லாம் நட்டமா? இரிந்து பேசும், கீழ இரு மரியான்...” என்று உபசரித்தவாறு ஆத்தா அவனுக்கும் கிளாசில் கோபித்தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள். மரியான் கீழே அமர்ந்து அந்தக் காபியைப் பருகிவிட்டு, “நா எதுக்கும் அப்பனையும் கலந்து ரோசனை செஞ்சி, பொறவு வந்து சொல்லுற.... வாரமுங்க... வாரம் மாமி!...” ஆத்தா எட்வின் வீட்டு வாயிலில் ஜெசிந்தாளுடன் பேசிக் கொண்டு நின்றாலும், அவனை எதிர்பார்த்துத்தான் பரபரத்துக் காத்திருக்கிறாள் என்று புரிகிறது. “என்னிய லேய்? ஆரு வந்திருக்கிறது?” அவன் வீட்டுக்குள் வந்து முன் தாழ்வரையில் குந்திய வண்ணம் “ஏக்கி மேரி, தீப்பொட்டி எடுத்தா!...” என்று அவளை உசுப்புகிறான். பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, கட்டிலில் சிறு குறட்டையுடன் உறங்கும் தகப்பனைப் பார்க்கிறான் மரியான். “நசரேனுக்கு மாமன் பொண்ணு கொடுக்கிறதப் பத்திப் பேச வந்திருக்கிறாரா?... எனக்கு அப்பமே மனசில கெடந்து கொழப்பிட்டே இருக்கு. வார ஞாயித்துக்கிளம நீ போயி லில்லிப் பொண்ணக் கூட்டியாந்துடு. இவ படிச்சிப் புடிச்சி என்ன பொரட்டப் போறா? கடல்ல போறவனுக்கு வாக்கப்படுற களுதக்கிப் படிப்பு இன்னம் எதுக்காவ? போன லீவுக்கு வந்தப்பவே நாஞ்சொன்ன படிச்சது போதுமிண்ணு. நொம்பப் படிச்சி, சாதிசனமில்லாம எந்தப் பயலண்ணாலும் கட்டிட்டுப் போறமும்பா. நசரேன் பய ஆச ஆசயா வருவா. இவ புறக்கடப் பாரில இருந்திட்டுப் புய்த்தகம் படிச்சிட்டு மொவத்தை முறிக்கிறாப்பல போவா. அவெ என்னம்பாய் நெனச்சிப்பா? கேக்கா... நசரேன் நல்ல பய. தப்புதண்டா தொடுப்புண்ணு ஒண்ணில்ல. என்னியலே நாஞ் சொல்லிட்டே இருக்கே, நீ மானத்தைப் பாக்கே?” மரியானுக்கு இப்போதுதான் சுருசுருவென்று உறைக்கிறது. மாமனுக்கு மகள் இருக்கிறாள் போலிருக்கிறது. லாஞ்சி வாங்கிக் கொடுத்து அவனை அழைத்துப் போவது அதற்கா? “அதில்லேம்மா, மிசின் போட்டு வாங்கித் தொழில் பண்ண வாரக்காட்ட வந்திருக்யாரு மாம.” “யார நசரேனையா? பின்னென்னியலே நாஞ் சொன்னது மட்டக்கு ரெண்டு கீத்துண்ணு?...” “நசரேனை மட்டுமில்ல, சர்க்காரு தொழில் முன்னேறக் கடங்குடுக்குறாங்க, றாலுக்கு ரொம்ப வெலயாவுமா. அதுனால இப்பம் நா ஒரு அஞ்சு நூறு கெட்டி, மிசின் போட்டுக் கூட்டாளியானேன்னா, நாளொண்ணுக்கு அஞ்சு நூறு ஆயிரமின்னு கூடப் பாடெடுக்கலாமா?...” “ஆமா...?” என்று வியந்தாற் போல் ஆத்தா பார்க்கிறாள். “அஞ்சு நூறுக்கெங்கியலே போவ? நா எதோ இந்தப் பொண்ணுவ ஒல கொண்டு வந்து கூட, தட்டுப் பின்னிச் சம்பாரிக்கும் துட்டைப் போட்டு வச்சிருக்கே. ஒரு பொன் தோச்ச மணியில்ல வீட்டில. மூணும் பொட்டப்புள்ள. கலியாணமிண்ணு காலத்தில் செய்யலேண்ணா அதும் இதுமிண்ணு பேரு கெட ஏடாகூடமாப் போயிருமோண்ணு பயமாயிருக்கு. முதல்ல, அந்தப் புள்ளயப் போயிப் படிச்சது போதுமிண்ணு கூட்டிவா. கோயில் திருநாள் வரும், அப்ப வருவா. அமைத்துவக்கலான்னிருந்தே. இப்பம் அம்மாட்டுக்குக் கூட வேணாண்டு மனசில ஒரு நெனப்பு. பிச்ச நாடார் மவ, இப்பிடித்தான் படிச்சிட்டிருந்திச்சி. இப்பம் ஊருக்கு வந்திருக்கு. மூணு மாசம் கருப்பம். வாயத்தொறந்து ஏதும் உசும்பினாத்தானே? ஆச்சி பாவம். மொவத்தில ஈயாடல. கடனோ உடனோ வாங்கி அவளக் கட்டிக் குடுத்திரணும். நசரேனுக்கு லில்லியத் தான் முடிக்கணுமிண்டு அவெப்பாவுக்கும் ஆச. அந்தக் குடும்பத்துத் தொடுப்பு இன்னிக்கு நேத்தக்கி வந்ததா? ஒங்கக்க அப்பெனும் அவெக்க அப்பனும் கடல் கரயில மரத்தப் புடிச்சிட்டு மீன்குஞ்சு போல முக்குளிச்ச நாள்ளேந்து வந்தது. இவெ குடிச்சிட்டுக் கண்ணு மண்ணு தெரியாம கிடக்கையில் அவரு எத்தினி நாளு வீட்டுக்கு வாரக்காட்டியிருக்காரு? இப்பமில்ல, வீடு தேடி வந்து சாராயம் சப்ளை பண்ணுறானுவ! அப்பம் அவரு சம்மாட்டியா இருந்தாலும், இவரக் கொண்டாந்து வீட்டில விடுவாரு...” “அவரு பாவிக்க மாட்டாரா?...” “பாவிப்பாங்களா இருக்கும். தெரியாது வெளிக்கி. எங்கப்பன், சித்தப்பன், அண்ணே எல்லாரும் கடல் தொழில் செய்தவங்கதா, பாவிக்கிறதுதான். சிலபேரு அளவோட நிப்பாங்க. ராவில அசந்து உறங்கணுமிண்ணு எல்லாரும் ஒறங்கின பொறவு புள்ளங்களுக்குத் தெரியாம பாவிப்பாங்க. இவருக்கு ஒண்ணுங் கெடயாது. ஒருக்க, நீ மூணு வயிசுப் பிள்ள. அப்ப மணப்பாட்ல நசரேன் அப்பச்சி வள்ளச் சொந்தக்காரரு. கோடக்காத்துக்காலம். ராக்கடைத் தொழிலுக்குப் போனவரு உங்கக்கப்பெ, வார இல்ல. ரெண்டு நாளாயிற்று. அப்பம் இவரு தொளில்லேந்து வந்து நேராப் போயிக் குடிச்சிட்டு வுழுந்து கெடக்கா, தேடோ தேடுண்ணு தேடி, நாடாக்குடிலேந்து கூட்டியாந்தாரு. நல்ல மனிசர். ஒரு நா இவெ தொழிலுக்குப் போக - உசும்பியிருக்கலேண்ணா, ‘மாப்ளே’ண்ணு வந்திடுவாரு. அவங்க மச்சு வீட்டில எப்படி எப்படியோ வாழ்ந்தவங்க. நசரேனக்க அப்பனப் பெத்த பாட்டா கூட கடல் மேல போறவரில்ல. தரவு வியாபாரம் தான். நல்ல சொத்து இருந்திச்சி. இவெ எல்லாம் தங்கச்சிங்களைக் கட்டிக் குடுத்து, ஆடம்பரமாச் செலவு பண்ணி அல்லவாக்கிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி யேசம்மா நாலு வரிச் சங்கிலி, கல்பதிச்ச முவப்பு அட்டியல், லாங்செயின், முழங்கை மாட்டும் வளையல் எல்லாம் போட்டு, புட்டாச் சேலை உடுத்துக் கோயிலுக்கு வருவா, பாத்திருக்கேன். ரோசிதாவுக்குக் கூட பவுனெல்லாம் அதாம் போட்டிருக்கா. ரோசிதாவையே உன்னக்க கெட்டணுமிண்டுதாம் ஆச. இவெல்லாம் மாதா தேருக்குப் போன காலத்தில், அந்தப் பொண்ணு எப்பிடியோ கொலஞ்சு போச்சி. சரிதாண்ணு நான் உசும்பாம இருந்திட்டோம். அங்கியே கெட்டி வச்சிட்டாங்க. ஒண்ணும் சொகமில்ல. அவனும் குடிச்சிப்போட்டு அடிக்யான். நவை நட்டெல்லாம் அல்லவாக்கிட்டாண்ணு சொல்லிக்கிறாங்க. கவடறியாத பொண்ணு. அஞ்சு மாசம் முழுவாம இருந்து கரு கலைஞ்சி போச்சி. பொறவு ஒண்ணுங் காணம்...!” ஆத்தாள் தானாகவே பேசிக் கொள்கிறாள். மரியானுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. துணிந்தடித்து லாஞ்சியில் தொழில் செய்ய ரூபாயைக் கட்டி முதல் பங்குதாரனாகலாம். இல்லையேல் இப்படிக் கூசிக் கொண்டே ஏறவும் இயலாமல் இறங்கவும் இயலாமல்... ‘லோலுப்’பட வேண்டும்! நசரேன் தூத்துக்குடிக் கடலுக்கோ மன்னார் மடைக்கோ போய்விட்டால், அவன் இவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்டுவது என்பது கை நழுவிய காரியம் தான். லில்லிப் பெண்ணையேனும் கட்டிக் கொடுக்காமல் அவன் எவ்வாறு தன் கல்யாணத்தைப் பற்றி நினைப்பான்? ஆத்தாளுக்கு ஏலியைப் பற்றி, அவன் தொடர்பைப் பற்றி தெரியும். சூசனை அதிகம் அவளுக்கு. அவன் நேரம் சென்று வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வந்து முற்றத்தில் பாய் விரித்துப் படுக்கும் கோடை நாட்களில் - சென்ற ஆண்டே கண்டுபிடித்து விட்டாள். கைவிளக்கைக் கொண்டு வந்து அவன் முகத்தின் பக்கம் நீட்டிச் சோதனை செய்தாற் போல் பார்த்தாள். அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். நெஞ்சில் ஓர் துடிப்பு. “ஏ, வெளக்க ஏன் மூஞ்சில காட்டுறீம்? என்னத்தப் பாக்குறிங்க...?” “எந்தப் பரச்சி எச்சியாக்கியாண்ணு பாத்தேலே, ஒங்க்கக்க அப்பனுக்குப் புள்ளேண்ணு...” “பரச்சி ஒண்ணில்யா சொம்மா இரும்...” என்று விடுவிடுப்பாகப் பேசினான். எச்சி எச்சி என்று வெகுநேரம் அன்று முழுதும் மனசு மந்திரித்துக் கொண்டிருந்தது. இந்தக் கடற்கரையில் எச்சியாகாத பரவன் - அல்லது பரவத்தி இருப்பார்களோ என்று மனசுக்குள் கேட்டுக் கொள்கிறான். இப்போது ஏலிப் பெண் கருப்பமாக இருக்கிறாள். அவன் கல்யாணம் கட்டாமலே பிள்ளை வளருகிறது. இந்த நாளில் அவன் வட்டக்காரனிடம் கடன் வாங்கிக் கொடுத்து லாஞ்சிக்குப் பங்காளியாவது சரிதானா? பகலில் சோறுண்ட பிறகு சற்றே அவன் படுத்து உறங்குவது வழக்கம். அப்பனிடம் யோசனை கேட்பதாகச் சொன்ன அவன் அதைப் பற்றியே பேசவில்லை. ஆத்தாளும் என்றுமே அவனிடம் குடும்பக் காரியங்களைச் சொல்ல மாட்டாள். அப்பனுக்குக் கடலுக்குச் செல்வதும் வீடு திரும்பிக் குடுப்பதும், நன்றாக உண்பதும், ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளையாக வேட்டியும் சட்டையும் தரித்துக் கோயிலுக்குத் தவறாமல் திருப்பலிப் பூசையில் பங்கெடுக்கச் செல்வதும்தான் வாழ்வு. மற்ற நடப்புகளெல்லாம் அவனை ஆழ்ந்து பாதிக்காத மேலோட்டமான அலைகள் தாம். அப்பனுக்கு இன்னமும் ருசித்து உண்ணும் ஆரோக்கியம் திரும்பவில்லை. தேங்காயரைத்துக் கூட்டியிருந்த ஆணம் சுவைக்காமல் இரண்டே கவளத்துடன் கையைக் கழுவி விட்டார். மரப்பெட்டியைத் துழாவுகிறார். “ஏக்கி, வெத்தில, பொயில ஒண்ணில்லடீ...” மரியான் வலைகளை விரித்துப் பார்த்துக் கொண்டு, நைலான் நூல் குச்சியுடன் அமர்ந்திருக்கிறான். அப்பனுக்குத் தன் பெட்டியைத் திறந்து வெற்றிலை புகையிலை எடுத்துக் கொடுக்கிறான். பக்கத்து வீட்டில் எட்வின் இப்போதே மூக்கு முட்டக் குடித்துவிட்டிருக்கிறான். “சவோதர சவோதரிகளே... இப்பம்...” என்று மீட்டிங்கு பேசத் தொடங்கிவிட்டான். எட்வின் அந்தக் காலத்தில் எட்டு வரையிலும் படித்துவிட்டு, மாணவர் இயக்கம் என்றெல்லாம் பங்கு கொண்டிருந்தான். ஏழெட்டு வருஷங்களுக்கு முன் அந்தக் கரையில் அவன் தான் வீர வாலிபன். கோயில் திருவிழா சமயத்தில் அவனே நாடகம் எழுதித் தயாரித்து நடத்தியிருக்கிறான். அப்போது மேட்டுத் தெருப்பக்கம் தரகர் அந்தோணிசாமியின் மருமகன் ஒருவன் பட்டணத்திலிருந்து படித்துவிட்டு வந்தவன், இவனுடைய நாடகத் திறமையைப் புகழ்ந்து, சினிமாவில் சான்ஸ் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லவே, ஒருநாள் இவன் ஆத்தாளின் கைக்காப்பைக் கையாடிக் கொண்டு போய்விட்டான். பிறகு நான்கு வருஷங்கள் வரையிலும் அவனுடைய விலாசமே தெரியவில்லை. ஒரு வாடைக் காலத்து மாலை நேரத்தில், இருள் படர்ந்த நேரத்தில், தாடியும் மீசையுமாக அடையாளம் தெரியாமல் ஒரு அழுக்குப் போர்வையைப் போர்த்துக் கொண்டு கோயில் பக்கம் வந்து நின்றான். மரியானின் ஆத்தாள் தான் அவனைக் கண்டு பிடித்தாள். “லே, எட்வின் பயயில்ல? பூனக்கண்ண... அப்படியே இருக்கே...” என்றவள் இரைக்க இரைக்க ஓடி வந்து மாவாட்டிக் கொண்டிருந்த மாமியிடம் சொன்னாள். வந்த புதிதில் பைத்தியக்காரனைப் போல் தான் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விழித்தான். பிறகு மாமி நேர்ச்சைகளெல்லாம் கொடுத்து, *தொள்ளாளியிடம் சென்று மந்திர தாயத்தெல்லாம் கட்டிக் கொஞ்சம் செலவு செய்தாள். தேய்ந்து மெலிந்திருந்தவன், ஆத்தாளும் அக்காளும் அளித்த ஊட்டத்தில் உரம் பெற்றான். நான்கு வருஷகால இருண்ட வாழ்வின் மர்மத்தில், பட்டணத்தில் சாப்பாடு தண்ணீரின்றி அலைந்ததும், பிறகு ஏதோ அரசியல் பொதுக்கூட்டத்தில் கலாட்டாவில் அகப்பட்டதும், பிழைக்க வழியில்லாமல் சிறைக்குச் சென்றதுமான நிகழ்ச்சிகள் புதைந்திருந்தன. அதெல்லாம் அவன் கடலுக்குப் போகத் தொடங்கித் ‘தண்ணியும்’ போட்டுச் சூர்பிடித்ததும் இருட்டறையை விட்டு வெளியேறும் வௌவால்களைப் போல் சிறகடித்துக் கொண்டு வரலாயின. சினிமா மோகம் போய், பொதுக்கூட்டத்தில் பேசும் தலைவனாக வேண்டும் என்ற மோகம் தான் எட்வினைப் பீடித்திருக்கிறது. (* தொள்ளாளி - மந்திரவாதி) “சவோதர சவோதரியளே... இப்பம்... கோயில் தெறிப்பு... நாம ஏங்குடுக்கணும்? அஞ்சு மீன்... அஞ்சு மீனில்ல அய்யா! அஞ்சு குத்து அள்ளிப் போடுவா? கொலகொலயா அள்ளிப் போடுவா? - இவ நெத்தம் கக்கிக்கடல்ல போயிக் கொண்டாரன்... ஒண்ரக்கண்ணம்பய... இவெக்கு ஏழ்ன்ன உரிமை... உரிமையிண்டு கேக்கேன்!...” “ஐத்தரிகை... அளவாத்தாம் பேசுதான்!” என்று வாய் விட்டு மெச்சிக் கொண்டு மரியான் வெளியே வந்து பார்க்கிறான். வாயிலில் ஒற்றை ஆளாகத்தான் நின்று அவன் பிரசங்கம் கொடுக்கிறான். இவனைக் கண்டதும், “என்னியலே எட்டிப்பாக்கே? தலைவர் பேசையில் சோடா உடச்சுக் கொடுக்காண்டாம்...? போழ்டா... சோடா... சோடா கொண்டா?” என்று தலையைத் தட்டுகிறான். “பாழாப் போற பய, இப்பிடிக் குடிச்சு அழியுறா. அந்தப் பொண்ணு தண்ணி வய்க்கிற சருவம் கூட வித்துப் போட்டா. வயித்தில எட்டுமாசப் புள்ள. சைத்தான் மவெ. நேத்து இப்பிடித்தான் குடிச்சிட்டுப் போட்டு அடிச்சிருக்யா. சவண்டு கிடக்கா இந்தப் பய ஊருதேசம் போனவெ திரும்பி வந்து ஓறாங்க்காயிராம இப்பிடிக் குடிச்சிச் சீரளியிறா!” என்று ஆத்தா புருபுருக்கிறாள். “அம்மா, அவெ நெல்லாத்தாம் பேசுதா. அப்பெ குடிச்சிட்டா வாயில பண்ணியே நாயேண்ணு கெட்ட பேச்சுத்தாம் வரும். எட்வின் குடிச்சா முத்து முத்தாப் பேசுதான். அஞ்சு மீன் தெறிப்பு நெசமாலும் அநியாயந்தா. ஆரும் உள்ளபடி மீன் கொண்டாரதில்லை. பெரீ மீனாயிருந்தா பத்துக் கொண்ணு அவனுக்கு. அது தவிர துவி...” பீடியை வாயில் வைத்து இழுத்துப் புகையை விட்ட வண்ணம் மரியான் பார்வையை எங்கோ பதிக்கிறான். ஆத்தா வெயில் பூனைக் கண்ணாகப்படும் இடத்துக்குக் கருவாட்டுச் சாக்கை இழுக்கிறான். அப்பன் மெள்ள வெளியே வந்து குந்தி வெற்றிலைச் சாற்றை மூலையில் உமிழ்கிறார். “நசரேன் தங்கச்சி எதுக்குலே உன்னெயக் கூட்டிட்டுப் போச்சி? ஊரிலேந்து ஆரு வந்திருக்கா?” அவன் குனிந்து அறுந்து போன நூலைக் கூரான கல்லைக் கொண்டு சீராக்குகிறான். பிறகு நூல் குச்சியைக் கண்ணிகளில் கொடுத்து வாங்கிப் பொத்தல்களை இழுத்துப் பிரைகிறான். “கேக்கேன் பதிலில்ல?... யாருலே வந்தது?” “மாமெ. மோட்டார் லாஞ்சி வாங்கியிருக்யா. நசரேன் தூத்துக்குடிக்குத் தொழில் செய்யப் போறாம் போல என்னியும் கூப்பிட்டாரு...” அப்பனை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. கண்கள் உருண்டு நிற்கச் சிறிது நேரம் பிரமித்தாற்போல் வீற்றிருக்கிறான் அப்பன். “ஆமா...? நீ என்னம்புலே சொன்ன?” “உங்ககிட்டப் புத்தி விசாரிச்சிச் சொல்றமிண்டு சொன்னே...” “நீ அதுக்கெல்லாம் போகண்டாம். மாதா ஆசீரும் கடல் நாச்சி கருணயுமிருந்தா எங்கியும் நல்ல தொழிலிருக்கும். இந்தக் கரயவுட்டு இன்னொரு கரயா? நீ ஒண்ணும் போகண்டாம்!” பூனைக் கண்ணாகத் தெரிந்த சூரியன் மேகப் படுதாவுக்குள் ஒளிந்து கொள்கிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|