அத்தியாயம் - 31

     கரும்பட்டுச் சேலையைப் போர்த்துக் கொண்டு காற்றுக்கு ஆடிக் குலுங்கும் இரவுக் கடல், பளீர் பளீரென்று மின்னும் ‘கவுர்’, வங்கக்கடலின் கீழ்க்கரைப் பகுதியின் நீண்ட ஓட்டமான மடையில் இறால் என்ற தங்கத்தை வாரி எடுக்க, நீ, நான் என்று கட்டுமரக்காரர்களும், வள்ளக்காரர்களும் விசைப்படகுக்காரர்களும் மொய்க்கின்றனர். எனக்கு எனக்கு என்ற பேராசையின் ஆவல் வெறியுடன் தசைகள் விம்மித்துடிக்கப் பரதவர்கள் கடலம்மையின் மடியைச் சுரண்டுவதற்குப் போட்டி இடுகின்றனர். அந்தப் போட்டியில் விசைப்படகுக்காரர்கள் இவர்களை முறியடித்துக் கடலைத் தமக்கே சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இயந்திர அரக்கன் இந்த ஏழைப்பிள்ளைகளுக்கு எதிரியாகிறான்.

     அப்பன் பதினையாயிரம் ரூபாய்க்கடனை ஒரே மாசத்தில் அடைத்துவிடக் கனவு கண்டார். ஒருநாள் நூறு ரூபாய்க்கு இறால் கிடைத்தால், தொடர்ந்து ஏழெட்டு நாளைக்கு ஐந்தாறு ரூபாய்க்கு வருவதில்லை. வலை கிழிந்ததென்று சண்டை போட்டு வலையைக் காட்டி, குலசேகரப் பட்டணத்து லாஞ்சிக்காரனிடம் முந்நூறு ரூபாய் வாங்கி வந்தார். புதிய வலை வாங்கிச் செல்கிறார், இன்னும் கடன்பட்டு. இன்றில்லையேல் நாளையுண்டு, இந்த இருதயம் கடலுடன் மல்லாடப் பிறந்தவன்... றால்... நாலு கிலோவுக்குப் பட்டாலும் கூடப் போதுமே? றால்... சிங்கிறால், ஆழிப்பாரில் இருக்கு கல்றால்... ஆனால் இந்த ‘மிசின் படகு’க்காரர்கள் எந்நேரமும் பத்துநூறு பேராய்க் கடலைச் சுரண்டி எடுக்கலாமா? எல்லோரும் கடல்நாச்சியின் பிள்ளைகளானாலும் ஒரு வலிமை உள்ள பிள்ளை தான் கொழுத்து மற்றவரைப் பட்டினி போட அத்துவானத்தில் நிறுத்தலாமா?... அப்பனும், அப்பனைப் போன்று அந்தக் கரைகளில் தொழில் செய்யும் ஆயிரமாயிரம் பேரும் இந்த இயந்திர அரக்கனை எதிரிட்டுக் கொள்ளவும் இயலாமல், வாழவும் இயலாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சின்னாபின்னமாகின்றனர்.

     பீற்றருக்குக் கண்கள் மிகக் கூர்மையான பார்வை உடையவை. நாக்குப் போன புதிதில், இவன் பள்ளிக்குச் சென்று ஏதோ பேச முயன்றபோது மற்ற பிள்ளைகள் கேலியாகச் சிரித்தார்கள். அது அந்த இளம் உள்ளத்தில் ஆழமாகத் தைத்துவிட்டது. அதற்குப் பிறகு இவன் பேசுவதில்லை. இவனுடைய பேசும் ஆற்றலனைத்தும், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அனைத்தும் மொழிகளாக வெளிவராததனால், உடல் தசைகளில் அவ்வாற்றல் குடிகொண்டாற் போல் வலிமை பெற்றிருக்கிறான். அப்பன் சுக்கானைப் பிடிப்பவராகவும் இவன் தண்டும் துடுப்பும் போட்டு மரத்தைச் செலுத்துபவனாகவும் இருந்தாலும், அவ்வப்போது மரத்தை இயக்கச் சாடைகாட்டி அப்பனைத் தொட்டிழுப்பான்.

     ஒரு விசைப்படகு, கண்மண் தெரியாமல் அடியில் விசிறியைச் சுழலவிட்டுக் கொண்டு வருகிறது. இவர்களை வலை போட்டு ‘போயா’ போட்டிருக்கின்றான். அப்பன் “மரங்கெடக்கு, மரங்கெடக்கு!” என்று கத்தி வசை பாடுகிறார். ஆனால் இந்த இயந்திர அசுரனின் இரைச்சலில் கடற்காற்றின் கெக்கலியில், விசைப்படகுக்காரனுக்கு எதுவும் புரியவில்லை. மரத்தின் மீது நேராக ஏறிவிட்டான்.

     பீற்றர் பயல், ஒதுங்கியவன் படகின் மேல் மூச்சடக்கி ஏறிக் குதிக்கிறான்.

     “யார்றாவன்?”

     இன்ஜின் ரூமிலிருந்து வரும் ஆள் யாராக இருந்தால் என்ன? அவன் மூக்கில் ஒரு குத்து, இடுப்பில் ஒரு குத்து...

     “ஏன்லே மரத்தும் மேல வுழுதே? உனக்குக் கண்ணு மண்ணில்ல? வஞ்சமா தீக்கிற?...” என்று பேசாமல் பேசும் குத்துகள், உறங்குவதுபோல் அயர்ந்திருந்த வலைக்காரர்கள் திடுக்கிட்டு இவனைத் தாக்க எழுந்திருக்கின்றனர்.

     பீற்றர் ஒருவனைக் காலை வாரித் தூக்கிக் கடலில் எறிய முற்படுகிறான். அடுத்த கணம் இவனே கடலில் விழுகிறான். கடலில் முக்குளிப்பவன் கட்டுமரத்தைப் பற்றிக் கொள்கிறான். கொம்புவாரிக்கல்லால் அவனைக் குத்தி அடிக்க முயலுமுன் படகு விரைந்து செல்கிறது.

     அப்பனோ, மரத்தின் ஓரம் மோதப்பட்டாலும் ஒட்டிக் கொண்டு ஆற்றாமை அனைத்தும் சொற்களாகப் பொல பொலக்க இருட்டுக் கடலில் செய்வதறியாமல் நின்றிருக்கிறார். அன்றும் அவர்களுக்கு இறால் கிடைக்கவில்லை; வலைகளும் படகுக்காரனின் காற்றாடியில் கிழிந்து போயின. வீடு திரும்பியதும் குந்திக் கொண்டு ஏனம் கழுவும் ஆத்தாளைக் காலால் நெட்டிக் குப்புறவிழச் செய்கிறார்.

     “ஏக்கி? போயிச் சாராயம் வாங்கிட்டு வா!”

     குப்புற விழுந்தவள் எழுந்து குமுறுகிறாள். அவள்தான் எப்படியாகி விட்டாள்? முடிகொட்டி மண்டை தெரிய, கண்கள் குழிய, பழையதாக நைந்த அழுக்குச் சேலையில் எலும்பும் தோலுமாக நிற்கிறாள்.

     இவன் குடித்துக் குடித்து உடலழுகிச் சீக்கிரத்தில் சாக வேண்டும் என்று நினைக்கிறாள். இவன் உயிருடன் இருக்கும் வரையிலும் அவளுக்கு விடுதலையுண்டோ?

     சாராயத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறாள். அந்தப் பையன் மரத்தைத் தள்ளிவிட்டுக் குடிக்கப் போவான்... கடற்கரை நியதி இதுதான்...

     மேரி கல்யாணமாகிச் சென்று ஒரு மாசத்துக்கு மேலாகி விட்டது. புனிதம் இம்முறை பெற்றுப் பிழைத்திருக்கிறாள். திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்தார்கள். மணியன் அவளை அங்கு அழைத்துச் சென்று குழந்தையையும் அவளையும் காட்டிய போது, அப்பன் பெண்ணையும் மருமகனையும் அழைத்துக் கொண்டு கோட்டாறு சவேரியார் கோயிலுக்குப் போனார். அவர்கள் வேறுபட்டு விட்டார்கள். ஆனால், ஜயா... அவளுக்கு ஒரு கல்யாணம் கட்ட வேண்டும். சின்னப் பையன் ரமேசு, சினிமாக் கம்பெனியில் சேருவதாகச் சொல்லி கல்யாண அமளியில் கலகலத்த காசில் நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு எங்கோ ஓடி விட்டது. இது புதிதா? அடுத்த வீட்டு எட்வின் பயல் போல் ஒருநாள் திரும்பி வருவானாக இருக்கும். ஊமைக்கு ஒரு கல்யாணம் கட்ட வேண்டும். அந்தக் குழந்தை... உமையாய்ப் போனவனல்லவா? அவர்களுக்காக ஆத்தா இந்த வீட்டிலிருக்கிறாள்.

     சாராயத்தை ஊற்றிக் குடித்தவனுக்குச் சூர் பிடித்த வெறியில் நாவில் சொற்கள் புரளவில்லை. மனிதர்களை, மகனை, தொட்டு உறவாடி மகிழ்ந்த மனைவியைச் சொற்களால் குத்தி உதைத்துப் பந்தாட முடியவில்லை. வயிற்று வலி கொல்லுகிறது. இரும்பாக உறுதி பெற்றிருந்த தசைகள் கனிந்து பழமாகிப் பின் சத்தும் குறைந்த் தோலும் எலும்புமாக உடல் ஆட்டம் கண்டாலும், வாழ்க்கையைத் தொடங்கிய கோட்டிலேயே நின்று எதிர் நோக்கும் அடம் முறுகியிருக்கிறது. இயலாமையை அவரால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. அதற்குப் போதையை மாற்றாகக் கொள்கிறார். அது இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் குலைத்தாலும், அந்தக் காந்தல் தெரியாமலிருக்க மீண்டும் மீண்டும் குடிக்கிறார். அந்தப் போதையையும் மீறி ஆற்றாமை உறுத்தாமலிருக்க, வாழ்க்கையைப் பழைய நடைமுறையிலேயே வைத்திருக்கும் வெறி மீறி நிற்கிறது. அதனாலேயே அவர் கடற்கரை விட்டுப் போகாமல் சாமியாரின் வீட்டில் அடிபட்டிருக்கிறார்; இந்துவாக எல்லோரும் மாறினாலும் இவர் மாறாமல் நின்றிருக்கிறார்; மகளைக் கட்டிக் கொடுக்க இருந்த உடமைகளை இழந்திருக்கிறார். ஆனால் ஒரு பழைய நடைமுறையில் மண்ணரிப்பு ஏற்பட்டு விடுகிறது. கற்களை அடுக்கித்தான் வீடு கட்டுகின்றனர். நாடார் விளைக்குச் சென்று களிமண் சுமந்து வந்து தரைமெழுகி அடுப்புப் போட்டு, விளக்குப்பிரை குழித்து எந்தப் பெண்பிள்ளை உடல்நோக வேலை செய்கிறாள்? மாவரைக்க முதற்கொண்டு இயந்திரம் வந்துவிட்டது. மீன் ‘பிதிர்’களைப் போல் எத்தனையோ தினுசாக அச்சுகள் துணிகளில் கண்களைப் பறிக்க மின்னுகின்றன. இவர்கள் சிங்காரித்துக் கொண்டு சினிமா பார்க்கச் செல்கிறார்கள். நாகர்கோயிலுக்கு எப்போதோ ஒரு பஸ்... அதுவும் நடக்க வேண்டும். வண்டி கட்டிக் கொண்டுதான் மணப்பாட்டுச் சிலுவையார் கோயில் பெருநாளுக்குச் செல்வார்கள். பனங்காடும் முள்ளிப் புதர்களும் உடை மரங்களுமாக இருந்த கடற்கரையாகவா இந்நாளிருக்கிறது? எல்லாம்... மாறிவிட்டன. ‘மடி’கள் மாறி விட்டன. கும்பிடும் சாமி மாற்றம். படகு... விசைப்படகு... அவரால் தாளவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு புரளுகிறார்... தரையில் விழுந்து புரளுகிறார்.

     “ஏக்கி என்னத்தையட்டீ குடுத்துக் கொல்லாமிண்டு ஊத்தித் தந்தே... மாதாவே...”

     ஆத்தா அவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, மருமகளுக்கு - குழந்தைக்குப் பாலில்லை என்று, பிள்ளைச் சுறா அவித்துச் சாறெடுத்துக் கொடுக்க சட்டியைக் கழுவி அடுப்பில் போட்டிருக்கிறாள். தாய்ப்பால் பெருக, அந்தப் பிள்ளை வண்ணம் வைத்து நேர்த்தியாக வளர வேண்டும். முதற் குழந்தையும் பையன் கணேசு. இவனும் பையன் - முருகனென்று பெயரிட்டுக் கூப்பிடப் போகிறார்கள். அவனுக்கு மாதாவின் ஆசீர் இருக்கிறது. எல்லாத் தெய்வங்களின் ஆசீரும் இருக்கின்றன. கடலின் ஆசீரும் இருக்கிறது. அவன் குடிக்க மாட்டான்; குடித்துவிட்டுப் பெண்ணை ஏசமாட்டான் - அதுவும் அந்தப் பெண்ணரசியின் பாக்கியம்தான். அவள் இந்த மணவாளனைப் பெறப் புண்ணியம் செய்திருக்கிறாள்.

     “ஏக்கி? நாஞ் சொல்லுதே, நீ என்னட்டி மெத்தனமா இருக்கியே? அம்மாண்டு ஒன்னக்க பவுரா வந்திற்று? ஏக்கி, திமிரு புடிச்சவளே, இங்கிய இப்பம் வாரியா இல்லியா?...” அப்பன் அருகிலிருக்கும் லோட்டாவை அவள் மீது விட்டெறிகிறார். அவள் அசையவில்லை.

     அவருடைய கோபம் எல்லை மீறி விடுகிறது. கொம்பு சீவ வைத்திருக்கும் வெட்டுக்கத்தியை எடுத்து கொண்டு வருகிறார். “உன்னியக் கொண்ணு போட்டிருவ...” ஆத்தா பேய் போல் பாய்ந்து அந்த அரிவாளைப் பிடுங்குகிறாள்.

     ‘தூமை குடிச்சான்? எங்கண்ணான பயல வீட்டை விட்டுத் துரத்தின. இப்பம் என்னியக் கொல்ல வார! உன்ன நாயிமாருதிச் சாவுண்டு வெளியே இழுத்துக் கடாசுவ! நீ செத்திட்டேண்டு நா நிம்மதியாயிருப்பே; அடிதிண்ணு அடிதிண்ணு நா ஏஞ் சாவணும்? எம்புள்ள - அவெ ஆண்டவந் தந்த மணி, நீ வீட்டவித்து வலையவித்து அந்தப் பொட்டப் பொண்ணு மனசக் கலங்க அடிச்சி என்னியெல்லாம் செஞ்சு போட்ட!...’

     மனதாலும் உடலாலும் நோவும் நொம்பரமும் பட்டுப் பொறுத்துப் பொறுத்து நீறாகக் குமுங்கியவள், இன்று சீறுகிறாள். அவனைக் கைப்பிடித்த நாள் தொட்டு அடங்கிக் கிடந்த ஆற்றாமை பொங்கி வருகிறது.

     அப்பனால் இப்போது எழும்பிக் குதிக்க இயலாமல் வயிற்றில் நாகமாய்ச் சுருண்டு எழும்பும் நோவு கொல்லுகிறது. குடலைக் குதறிக் காந்தசெய்யும் அக்கினித் திராவக நோவு அவரைக் கீழே தள்ளுகிறது. விழுந்தவர் வாயிலிருந்து செம்பட்டுத் துணி பிரிந்து நாலியாக வருவது போல் நூலிழைகளாக இரத்தம்... குருதிச் சிவப்பைக் கண்டதும் ஆத்தா நடுநடுங்கி விடுகிறாள். ஜெயா கணேசுவைப் பார்த்துக் கொள்ளப் போயிருக்கிறாள். வாசலுக்கு ஓடி வருகிறாள். வெயில் வானில் நீலம் துலக்கிக் கொண்டு உக்கிரமாகக் காய ஏறும் நேரம்.

     “ஏ மக்கா... பாலாப் பொண்ணே... மாம நெத்தம் கக்கிவுழுந்திற்றா. ஓடியாங்கடீ...”

     காக்கை ஒன்று கூரை விளிம்பிலிருந்து காள் காளென்று கத்துகிறது. அதற்குள் அவருடைய இரத்தம் தெரியும் உதட்டில் ஈ வந்து குந்துகிறது. அவரைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருக்கிறது. யார் யாரோ உள்ளே ஓடி வருகின்றனர்.

     “மூச்சிருக்கு, விசிறி கொண்டாங்க... தண்ணி தண்ணியத் தெளியிங்க...!”

     அவரைத் தூக்கிக் கட்டிலில் விடுகின்றனர்.

     ஆத்தாளுக்கு உலகமே பூச்சக்கரக் குடையாக, இரத்த நாளிகளுடன் செம்பருத்திப் பூப்போல் சுழலுவதுபோல் தோன்றுகிறது. மருமகளிருக்கும் சுந்தரத்தின் வீட்டுக்கு ஓடுகிறாள். அவன் அப்போதுதான் தொழில் முடிந்து வீடு திரும்பியிருக்கிறான்.

     “மணி... அவ அப்பச்சி நெத்தமாக் கக்கி வுழுந்திற்றா...” பிள்ளை பெற்றவள் வாயிலுக்கு ஓடி வருகிறாள். ஜயா கணேசுவுக்கு எண்ணெய் முழுக்காட்டிக் கொண்டிருக்கிறாள்.

     சித்தாத்தா அடுத்த வீட்டுப்பக்கம் சென்று, “அமுதா...? அமுதா?” என்று கூவுகிறாள். மருந்தகத்தில் டாக்டர் மாலையில்தான் வருவார். அவள் தன் மருத்துவ அறிவுடன் அவரைப் பார்க்க விரைந்து வருகிறாள். புதிதாகக் கட்டப் பெற்றிருக்கும் ஆஸ்பத்திரிக்குப் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு டாக்டர் வந்து மேட்டுத் தெருவில் குடியேறி இருக்கிறார். வந்து நாலைந்து நாட்களே ஆகின்றன. அவரைத் தேடிப் போகச் சொல்கிறாள். வாயைத் துடைத்து முகத்தைத் துடைத்து அவரருகில் அமர்ந்து அமுதா யாரும் எதுவும் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.

     “இதொண்ணும் சீக்கில்ல. இதொரு ஏவல்... இந்துக்கார மந்திரவாதி வச்சிருக்கியா, முள்ள முள்ளாலத்தா எடுக்கணும். கூடங்கொளத்தில ஒரு தொள்ளாளி இருக்கா - அவ கழிப்புக் கழிச்சா எப்பேர்க்கொத்த ஏவலும் நிக்க ஏலாது” என்று கண்களை உருட்டி, முகத்தைச் சுழற்றி, கத்தி மீசைக்கிடையே சிவந்த நாவிலிருந்து வழியும் வெற்றிலைச் சாற்றை மணலில் பீச்சிவிட்டுக் கருத்துத் தெரிவிக்கிறான் மொடுதவம்.

     “இவெ அந்தப் பக்கம் போயிட்டாண்டு கெருவில எதோ ஏவிரிக்கியா. அந்தோணியாருக்கு அசனம் நேந்துக்குங்க மயினி, மச்சானுக்குப் பொட்டுனுவிட்டுப் போவும்...” என்று அறிவுரை நல்குபவர் ஜெபமாலையான்.

     ஆத்தா, பிள்ளைச்சுறா அடுப்பில் நீர் வற்றித் தீயும் வாசனையையும் புரிந்து கொள்ள இயலாமல் சிலையாக நிற்கிறாள்.