அத்தியாயம் - 33

     கடற்கரை ஓரத்து ஊர்களிலுள்ள மரக்காரர்களும் வள்ளக்காரர்களும் ஆங்காங்கு கூடிக்கூடிப் புகை கிளப்புகின்றனர். மடைகளில் உள்ள இறால்களெல்லாம் அவர்களுக்கு எட்டாமல் லாஞ்சிக்காரர்கள் கொள்ளையடிக்கிறார்கள். தூத்துக்குடியில் இருப்பவனும் மன்னார் மடையில் தொழில் செய்பவனும் கொல்லத்தில் தொழில் செய்பவனும் இந்தக் கரைகளுக்கும் எதற்கு வரவேண்டும்?

     “இவனுவளைத் தொலைக்க வேண்டும்!”

     சீனுவாசன் சொன்னான்: “நம்மைப் போல் தொழில் செய்தவனுக்கில்ல கஷ்டம் தெரியும்? பஞ்சாயத்துலியும், சருக்காரிலும் இருப்பவனுவளுக்குக் கடல் தொழிலப்பத்தி என்ன தெரியும்? அவனுவகிட்ட நமக்கு நாயம் பெறக்காது. நாம புரட்சி பண்ணித்தா காட்டணும். எல்லா ஊரிலும் போயி இந்தச் சங்கதியச் சொல்லி நம்ம கட்சிய வலுவாக்குவோம்!”

     “சவாசு மச்சான்” என்று சைகை காட்டி பீற்றர் கையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறான்.

     “நம்ம வலையெல்லாம் கிளிச்சிப் போடுறானுவ! காத்தாடியச் சுழலவிட்டு அறுக்கிறானுவ! அந்த எரச்சல்ல மீனெல்லாம் ஓடிப் போவுது?”

     “செறுக்கிமவனுவ, மடையம்புட்டும் வளர்ச்சி, றால் கூனிப் பையல்லாம் கலக்கிப் போடுறானுவ? மீனு எப்பிடிக் கவிச்சிப் பெருகும்?”

     “அப்பமே நாம இந்த லாஞ்சிகளுக்கு எடமே குடுக்காம தடுத்திருக்கணும். நசரேன் மாம இங்கிய மொதல்ல வந்தப்பமே கொரல் எழுப்பி நிப்பாட்டிருக்கணும்!”

     “பெஞ்ஜமின், ஆல்பர்ட்டு, இப்பம் மரியான், அல்லாம் துரோகிகளாயிட்டா. கொச்சிக்கரயல்லாம் றாலில்லாம துத்துட்டு இங்கேயும் நம்ம பாட்டில மண்ணடிக்க வந்திருக்கானுவ. நமக்கு ஒரு கிலோ றால் படுறதில்ல. அவனே அள்ளிட்டுப் பணக்காரனாவுறா. ஒழக்யாம நிழல்ல குந்தி சொகம் அனுபவிக்கிறவ லாஞ்சி வாங்கிவுட்டு பணத்துமேல பணஞ்சேக்குறா. தொழில் விருத்திக்கு வரணுண்ணா, சருக்காரு எல்லாரையும் ஒண்ணாப்பாக்குகணமில்ல? எல்லா லாஞ்சித் தொழிலையும் சருக்காரு வச்சிக்கட்டும். பாட்டுக்குத் தக்கின கூலி கொடுக்கட்டும்! மரத்தையும் வள்ளத்தையும் எடுத்துக்கட்டும்! நமக்கு எல்லாருக்கும் ஒருப்போல சம்பளம், போட்டு குடுக்கட்டும்! பாட்டுக்குத் தக்கின கூலி குடுக்கட்டும்!”

     “சவாசு... சவாசு மாப்பிள...? நீதா எங்க தலவரு” என்று சூசை கூத்தாடுகிறான்.

     “ஆனா, இந்த யோசன அவனுவளுக்குத் தெரியலியே? நாம பஞ்சாயத்துத் தலைவர் செல்லையாட்ட, சொன்னம்; லாஞ்சிக்கார பொழப்பில மண்ணைப் போடுறா. அவன வரவொட்டாம பண்ணணுமிண்ணு - அவரு எல்லாம் பெரட்டிடுவாண்ணாங்க. ஒண்ணுமில்ல. மீனவர் சங்கமின்னா, எல்லா ஊரிலும் அவனுவளும் இதுக்கு ஒண்ணுஞ் செய்யல. றால எடுத்திட்டு மத்தமீனச் சாவடிச்சிட்டுக் கடல்ல போடுறானுவ. அந்த நண்டுக உண்டு பெருத்துப் போவுது. நண்டு கொளுத்தா குண்டுல தாங்குமா? அதுங்க வலையிலபட்டு வலயக் கிளிச்சிக் குதறுதுண்ணோம்! மினிஸ்டர் வருவாறு. பேசுவோமிண்ணா, ஆரும் வார இல்ல. அதனால, அவனுவள இவனுவள நம்பினா நம்ம பொழப்பு இதிலும் மோசமாயிடும். அதுக்காவ நாம தா இப்பம் புரட்சி செஞ்சி, அவங்களுக்கு ஒரு பாடம் கல்பிக்கணும்...”

     “ஆமா! ஆமா...!”

     சீனிவாசனாகிவிட்ட எட்வின் தலைவனாகிவிட்டான். மீனைத் தட்டிவிட்டுப் பஸ்ஸில் ஏறி மணப்பாடு செல்கிறான். இவனுக்குப் பீற்றர் வலதுகை போலிருக்கிறான்; சூசை இடது கை. புதிய உற்சாகம் இந்தப் படை திரட்டலில் பெருகுகிறது. மணப்பாடு, ஆலந்தலை, அமலி, தாழை என்று தொழிலில் பாதிக்கப் பெற்றவரின் இதய ஒலிகளை எல்லாம் செவியேற்றுத் தெம்பு பெறுகின்றனர். பீற்றருக்கு வீட்டைப் பற்றிய கவனமே இப்போது இல்லை.

     முன்பெல்லாம் கடற்கரை ஊர்களில் கிறிஸ்துமஸ் பெருநாள் ஒன்றுதான் வரும். இப்போது எல்லாக் கடைகளிலும் வெடிகளும் மத்தாப்பு வகைகளும் தீபாவளிக்கே முந்திக் கொண்டு வந்து விடுகின்றன. பட்டாசு ஒலியுடன் கணபதி கோயில் மணியும் ஓம் ஓம் ஓம் என்று முழங்குகிறது. பெரிய கோயில் திருப்பலிப் பூசை மணியின் நாதம் வேறு விதம். அதில் ஆழமும் கார்வையும் கலந்திருக்கும். இந்தக் கணபதி கோயில் மணி, பிள்ளைகளின் துருதுருப்பைப் போன்று கலகலக்கும் ஓசையைச் செவிகளில் நிரப்புகிறது. இங்கே இளம் பிள்ளைகள் தாமே புதிய சமயத்தார்.

     அப்பன் உற்சாகமாக எதை எதையோ நினைத்துக் கொள்ள முயன்றாலும் நோவின் கடுமை அவரை ஆட்டிக் குலைக்கிறது. பல்லி முட்டை மாத்திரை இரண்டு மூன்று விழுங்க வேண்டியிருக்கிறது. அப்படியும் நோவு மறக்கவில்லை.

     திடீரென்று நினைவு வருகிறது.

     முன்பு திருச்செந்தூருக்குச் சென்றுதான் கணேசுவுக்கு மொட்டையடித்துக் காதுகுத்தி வந்தான் மரியான். அங்கே பன்னீர் இலையில் திருநீறு கொடுக்கிறார்கள். அதை வாங்கிச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும் என்று வாங்கி வந்தான். அவர் அப்போது அதைப் பொருட்படுத்தவில்லை.

     “ஜயா... ஏக்கி? இங்கிய வாட்டீ?”

     “என்னப்பச்சி?...”

     “தீவாளிக்கி ஒன்னக்க அண்ணே வாரானாட்டீ?”

     “ஆமா...? மயினி சொன்னா... வாருவாண்ணு...”

     “திருச்செந்தூர் போயிக் கும்பிடுவால்ல?...” அவருக்குக் கூச்சமாக இருக்கிறது.

     “சொல்லுங்கப்பச்சி? நீங்களும் வாரீங்களா திருச்செந்தூருக்கு? பஸ் இதா போயிட்டேயிருக்கு. போவலாம்...”

     “இல்லேட்டி. என்னக்க, அங்க பன்னீரெலயில திருநீறு குடுப்பாங்கண்ணு சொல்லுவா. அது வகுத்து நோவாத்துமா; மின்னக்கூட ஒன்னக்க சாலமோன் மாம அப்பச்சியெல்லா முருவந்தேரிழுக்கப் போவா. அப்ப சொல்லுவா, பன்னீரெலத் திருநூறுண்ணு...”

     “திருநீறுதானே...? நா வாத்தியாரிட்டச் சொல்லி வாங்கியாரச் சொல்றே...” என்று ஜயா உடனே செல்கிறாள்.

     மறுநாட் காலையிலேயே குலசேகர வாத்தியார் கதர் ஜிப்பாவில் தொங்கும் பையுடன் வருகிறார்.

     “சாமி, வாங்க... வாங்க... கும்பிடறேன்...” என்று ஆத்தா வரவேற்கும் குரல் கேட்டு இருதயம் நிமிர்ந்து பார்க்கிறார்.

     குலசேகர வாத்தியார் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு பைக்குள் கைவிட்டு மூன்று இலைத்திருநீறு எடுத்துக் கொடுக்கிறார். ஆத்தா பணிந்து வாங்கிக் கொள்கிறாள்.

     “ஜயா வந்து சொல்லிச்சி, ராவே போயி வாங்கி வந்த, புதிசு புதிசாவே வாங்கி வந்து தர்றேன். நம்பிக்கைதானம்மா மருந்துக்குமேல் குணம் காணும்?”

     “ஓரோரு சமயம் பொறுக்க முடியாம போவுது சாமி, நெம்ப மனஸ்தாபப்படுதே...”

     “சரியாப் போவும். இலையோடு அருந்தும். முருகா...!”

     அவர் எழுந்து செல்கிறார். இந்துக்கள் வீடுகளில் அரிசி இடிக்கும் ஓசையும், பணியம் பன்தோல் என்று இனிப்புகள் செய்யும் வாசமும் காற்றோடு குலவுகின்றன.

     ஜயா, கணேசுவை வைத்துக் கொள்ளும் சாக்கில் பஸ் வந்து நிற்குமிடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அண்ணன் கையில் புதிய பெட்டியுடன் இறங்கிச் செல்வதைக் கண்டதும் வீட்டுக்கு ஓடி வருகிறாள்.

     “அம்மா... அண்ணெ வந்திட்டா... இப்பம் பொட்டியத் தூக்கிட்டுப் போறா...”

     சொல்லிவிட்டு, கணேசுவுடன் அந்த வீட்டுக்கு விரைகிறாள். மணியன் உடல் இளைத்துக் கறுத்து உழைப்பு அதிகமாக இருப்பதைச் சொல்லாமல் சொல்லுகிறான். வந்ததும் வராததும் மனைவியிடம் சண்டை போடுகிறான். அவள் அவன் வராமலிருந்ததற்கு நிட்டூரப்பட்டுக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாளாம்.

     “துணியொண்ணும் என்னக்க எடுக்கத் தெரியாது...! பொறவு நாவந்ததும் வராததும் நாகர்கோயிலுக்குப் போவலாம்பே. எல்லாம் திருச்செந்தூரிலியே எடுத்திட்டேன். தா ஆத்தாளுக்குச்சீல, இது ஜயாவுக்கு... இது ஒன்னக்க...”

     நீலமும் பச்சையும் ரோஸுமாக நைலக்ஸ் சேலைகள், குழந்தைச் சட்டை, ஆப்பிள் திராட்சைப் பழங்கள், மத்தாப்பு, வெடிகள், கணேசுக்குத் துப்பாக்கி.

     “அப்பச்சிக்கு ஒண்ணும் வாங்க இல்லியா?”

     “அவெக்கு தீவாளிகும்பிடற பய தா வேணாமே? கிறிஸ்துமஸ் கும்பிடுற பய வாங்கித்தாரா... மருமவெ, மவ...”

     “சும்மா பேசாதீம். அவரப் பாத்தா, பாவமாயிருக்கி. எல்லுந்தொலியுமாயிட்டாரு. நோக்காடு ரொம்ப...”

     “அது அப்பமே தெரிஞ்சிருக்கணும். நாஞ்சோறுண்ண நேர இல்லாம தொழில் செய்யிற. ரவநேரம் தல சாய்க்காம மெனக்கிண்ணாக்கூட ஓடி ஓடித்தோட்டம் பாக்கப் போற. வாழ குலசாஞ்சிருக்கி. அது வெட்டுற வரைக்கும் காபந்து பண்ணணும். இவுர யாரு குடிச்சிக் குடிச்சிக் குடல அழுவ வச்சிக்கச் சொன்னா? அவெ அவெ செய்ததன் பலன் அவெ அவெ அனுபவிக்கா?”

     “என்னியண்ணாலும் அப்பெ... ஆத்தா மனசு சங்கட்டப்பட்லியா? அன்னிக்கு மரத்துமேல லாஞ்சி ஏறிடிச்சிண்ணு சங்கட்டப் பட்டுக்கிட்டு வந்து வுழுந்தாரு. வாயில ரத்தமா வந்திற்று. ஆத்தா இங்கக்க ஓடிவந்தா. அமுதா போச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டாரு. வகுறெல்லாம் வெந்து போயிருச்சிண்ணு சொல்லுதா. காலுகுத்தி நிக்கவே பிரயாசமாயிருக்கு. இப்பம் குடிக்கிறதில்ல. ஆத்தாகூட சண்டையே போடுறதுமில்ல. ஏக்கி, கதரினாள கதரினாளாண்ணு கூட்ட மணியந்தா. பாவம் பீற்றர் கடலுக்குப் போறா. ஆனா ஒண்ணும் கட்டிவார இல்ல... அவெ வீட்டுக்குத் துட்டே ஒழுங்காவும் குடுக்கறதில்ல...”

     எல்லா சங்கதிகளையும் புனிதா சொல்லுகிறாள். அவன் முகம் இறுகி உணர்ச்சியற்றுக் கிடக்கிறது.

     “இனி அது என்னக்க வூடில்ல. ஆத்தா அப்பன விட்டு வாரதா இருந்தா தனி வூடுபாத்து வைக்கிற. இல்லியேண்ணா போவட்டும்!”

     “நீரடிச்சி நீர் பிரியுமா? அப்பெ ஆத்தா தானே யாருண்ணாலுமா?” என்று புனிதம் அவன் மனதை மாற்ற முயலுகிறாள்.

     “ஏக்கி, ஒன்னக்க சோலியப் பாத்திட்டுப்போ? என்னக்கப் புத்தி சொல்ல வராண்டாம்!”

     கணபதி கோயிலில் வாழைக்கன்று தென்னங்குறுத்துத் தோரணங்கள் எல்லாம் கட்டிச் சிங்காரித்திருக்கின்றனர். தீபாலங்காரங்களும் செய்திருக்கின்றனர். கணபதிக்குத் தனி பூசை, அபிஷேகம் செய்யத் திருச்செந்தூரிலிருந்து குருக்கள் வந்திருக்கிறார். பெண்கள் எங்கிருந்தோ மருதோன்றி கொண்டு வந்து அரைத்துக் கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொள்கின்றனர். ஜயா கணேசுவைப் பார்த்துக் கொண்டு கோயிலில் தான் இருக்கிறாள்.

     ஆத்தாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஜயா பீடி சுற்றிச் சேர்த்த பணம் ஒரு பதினைந்து ரூபாய்தான் டப்பியில் இருக்கிறது. வேறு காசு இல்லை. அதை எடுக்க வேண்டாம் என்று பார்க்கிறாள். பீற்றர் தொழிலுக்குப் போய்விட்டு வரவில்லை. வந்தாலும் அவன் ஒரு ரூபாயோ எட்டணாவோதான் தருகிறாள். அவனிடம் சண்டை போடவும் முடியவில்லை.

     அவன் வந்திருக்கிறான். இங்கே வருவானா?... ஏதோ காரியமாகச் செல்வதுபோல் வாயிலில் சிறிது தூரம் நடந்துவிட்டுத் திரும்பிவிடுகிறாள். தானாகப் போவதா?... சே? தாய் மகனுக்குள் என்ன கௌரவம்...!

     இருந்தாலும் மனம் இடம் கொடுக்கவில்லை. அடுப்படியில் வந்து படுக்கும் நாயை விரட்டுகிறாள். அது சோம்பல் மூரிக்கொண்டு கட்டிலுக்கடியில் சென்று படுக்கிறது. சோம்பேறிப் பெட்டைநாய்; இது எப்படியோ வந்து மீன் கழிப்பைத் தின்று வளர ஒட்டிக் கொள்கிறது.

     “ஏக்கி, கதரினாள... ஜயா எங்கிய காணம்?...”

     “தீவாளியில்லியா... மணி வந்திருக்காம் போல...”

     அவளுக்குத் துயரம் நெஞ்சை அடைக்கிறது.

     “நோவு ரொம்பக் கொல்லுதட்டீ. அந்தப் பல்லிமுட்ட மாத்திர வச்சிருக்கியா...?”

     இது ஒரு சாக்காகிவிட்டது. அவள் வெட்கத்தை விட்டுப் படியிறங்கிச் செல்கிறாள். பஞ்சாட்சரத்தின் வீடும், சுந்தரத்தின் வீடும் அருகருகேதான் இருக்கின்றன. இடைவெளியில் வலைகள் ஏதும் விரித்திருக்கவில்லை. விருந்தினர், குழந்தைகள், வெடி என்று கலகலப்பாக இருக்கிறது. வாசல் தெளித்துக் கோலமிட்டு, நட்சத்திரக் காகிதத் தீபங்கள் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள்.

     இவளைக் கண்டதும் கணேசு கையில் பழமும் கருப்பட்டி மிட்டாய் பிதுங்கும் வாயுடனும் வருகிறான்.

     புனிதம் பார்த்துவிடுகிறாள்.

     “வாங்க மாமி, ஏன் வாசல்ல நிற்கிறீங்க...? ஒங்கக்க வூடு!”

     “நாணங்கெட்டுத்தா நா வார, மாம... நோவால ரொம்ப ஆராளிப்படுதா. அமுதா இல்லியா? டாக்கிட்டர் குடுத்திச்சிண்ணு பல்லி முட்டாயாட்டும் மாத்திர குடுப்பாளே, கேட்டு வாங்கிற்று வாண்ணு சொன்னா...”

     “அமுதா அவ மாப்ளயோட திர்நேலி போயிருக்கியா. இதா இப்பம் வந்திருவா, என்னிய மாத்திர சொல்லும். அந்த ஆசுபத்திரி டாக்டர் மோட்டுத் தெருவில இருப்பாரு. வாங்கியாரலா...”

     அப்போது மச்சிப்படியின் உச்சியில் அமர்ந்து மணி மடியில் பிள்ளையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறான்.

     தாய் கீழிருந்து அசைப்பில் பார்த்துவிடுகிறாள். அவன் கைலி, அந்தச் சாயல், எல்லாமே கண்களில் பட்டதும் உள்ளத்தில் அலைமோதும் பாசம் பொங்கி வருகிறது. கண்களில் நீர் மல்குகிறது.

     புனிதம் உடனே கீழே இருந்து அவனைப் பார்த்து, “இங்கிய வாங்க... என்னிய ஒசக்கப் போயி உக்காந்திட்டிங்க? ஆத்தா வந்திருக்கு பாருங்க... வாங்க” என்று மெல்லிய குரலில் கடிந்தாற் போன்று அழைக்கிறாள்.

     இதற்கு மேல் அவனும் உட்கார்ந்திருக்க இயலாமல் இறங்கி வருகிறான். கையில் முருகனை வைத்திருக்கிறான். முடி எண்ணெய் விட்டு தொட்டு வாரியிருக்கவில்லை. பறந்து விழுகிறது.

     “என்னிய...?”

     எங்கோ பார்த்துக் கொண்டு அவன் கேட்கிறான்.

     “எப்ப வந்தியலே...?”

     “காலம...”

     “புனிதா... இவெம் பாரு, ஒன்னுக்கிரிந்திட்டா. வேற துணி கொண்டு வந்து வாங்கிற்றுப் போ?”

     மருமகள் வட்டத்தட்டில் சேலை ரவிக்கை, வெற்றிலை பாக்கு, மிட்டாய் பழம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வருகிறாள்.

     மாமிக்கு அதைக் காண்கையில் ஆற்றாமை பொங்கி வெடிக்கிறது.

     “இதெல்லாம் எதுக்குடீ எடுத்து வார? உன்னிட்ட பிச்ச கேக்க வந்தேண்ணா நெனச்சிட்ட? நா இதுக்கு வார இல்லட்டீ! பெத்த அப்பெ ஒரு சொல்லுத் தெறிச்சிட்டாண்டு பொஞ்சாதி வூட்ட வந்து பண்டியல் கொண்டாடுறாம் பாரு, போக்குக் கெட்டவெ, அவனப் பாத்து இந்தக் கேக்கணுமிண்டு வந்த... இவெ ரெண்டு பிள்ளயப் பெத்திருக்கா... அன்னாரு... சொல்லத் தெரியாம மனசில வச்சி மாஞ்சி போறா... ஆரும் இந்த ஒலவத்தில எம்மாண்டும் சீவிச்சிடறவ இல்ல...”

     வார்த்தைகள் அலைக்கும் நீரிடையே பாறை முட்டுகளைப் போல் அந்தச் சோகத்தை விள்ளுகின்றன. அவள் விடுவிடென்று திரும்பிப் போய்விடுகிறாள். ஜயாவும் அவள் பின் செல்கிறாள். சிறிது நேரம் கடலும் ஓய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. புனிதா கையில் தட்டுடன் சிலையாக நிற்கிறாள். கணேசுதான், “பாட்டி போச்சி... பாட்டி...” என்று மழலை சிந்தி மௌனத் திரையை நீக்குகிறது.

     “நாஞ்சொன்னே, நீங்க கேட்டீங்க இல்ல...” என்று கணவனிடம் குறை கூறுகிறாள் புனிதா.

     “நீ என்னத்துக்காவ இத்தயெல்லா இப்ப கொண்டாந்த?...”

     “பின்ன, நீங்க போவ இல்லன்னீங்க. நாங் கொண்டாந்தே...”

     “இவங்க இஷ்டத்துக்கு நடக்கறப்ப நான் கேக்கக் கூடாது. இப்ப மட்டும் பய வரணுமோ? யாரக் கேட்டுட்டு அந்தக் கோயில்ல போயிக் குரிசு வரச்சிட்டாரு! யாரக் கேட்டுட்டு வீடு மரம் எல்லாம் பணயம் வச்சாங்க?”

     “அதெல்லாம் காரியம் ஆன பிற்பாடு கேட்டு என்ன லாவம்? நீங்க அதொண்ணும் இப்ப கேக்கண்டா. இதெல்லா எடுத்திட்டுப் போய் வச்சி சேவியும். பெரியவங்க ஆசீர் வேணும். அப்பனப் பாத்தா ஒங்கக்கே மனசு எளகிப் போகும்!”

     “அவரு பணயம் வச்சு வாங்கின கடம் நா ஏத்துக்க மாட்ட?...” பொங்கி விழுகிறான். மாலை குறுகுகிறது.

     எண்ணெய் தொட்டு முடி வாரிக் கொள்கிறான். சட்டையைப் போட்டுக் கொண்டு, புனிதம் தரும் பையை வாங்கிக் கொள்கிறான். பிள்ளையார் கோயிலில் வாத்தியார் பஜனை சொல்லுகிறார். பிள்ளைகள் கூச்சல் போடுகின்றனர். எங்கோ வாணம் சீறும் ஒலி... ஈரக்காற்று சில்லென்று அடிக்கிறது. அவன் வாயில் விளக்கின் முன் பூச்சிகள் பறப்பதைப் பார்த்த வண்ணம் கதவைத் திறக்கிறான். முற்றத்தில் அடி வைக்கிறான். தாழ்வரைக் கதவை மெல்ல நீக்குகிறான். மின் விளக்கு இல்லை. மஞ்சளாகச் சிம்ணிதான் எரிகிறது. ஜயா எதோ துணி மடிப்பவள் அவனைப் பார்த்துவிட்டு உள்ளே குசினிக்குள் செல்கிறாள், அம்மையிடம் கூற. புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. கடல் அருகில் தெரிகிறது. இவர்கள் வீட்டில்தான் இவ்வாறு உள்ளிருந்து கடலைக் காணலாம். எட்வினின் வீட்டில்கூடச் சுவர் மறைக்கும். கடலுக்கு நேராக வாயில் கிடையாது.

     கட்டிலின் மூலையில், அப்பச்சி கிழிந்த நாராக முடங்கி இருப்பதைப் பார்த்தவாறு அமருகிறான். ஆத்தா வருகிறாள். நிழலுருவமாகத்தான் தெரிகிறான்.

     “கரன்ட் இல்லியா?... வெளக்கில்ல...?”

     “...ஒறங்குறாப்போல இருந்திச்சி. ராவும் பகலுமா அல்லல்படுதா, முன்னக்க எப்பவும் இப்படி நொம்பரமில்லிய. அதனால வெளக்க அணச்சிட்டுப் போன...”

     அவள் மகனின் முகத்தை நன்றாகப் பார்க்க இப்போது விளக்கைப் போடுகிறாள்.

     எங்கோ ‘வீ...ஸ்’ என்று வாணம் சீறும் ஒலி...

     “பீற்றர் எங்க...?”

     “அவ தொழிலுக்குப் போயி வந்திற்று. சட்டயப் போட்டிட்டு எங்கியோ ஓடிப் போனா. துட்டும் தாரதில்ல, அவங்கிட்ட எதும் கேக்கறதுக்கில்லியா... சின்னப்பய, சினிமாண்ணு எங்கியோ தேசாந்தரம் ஓடிட்டா...”

     அவன் அப்பனைப் பார்க்கிறான்.

     வெளுத்துச் சூம்பி, கண்கள் இரு பொந்துகளாக... முற்றிலும் சப்பிய மாங்கொட்டையாக மண்டையும்... இவருடைய பிடிவாதமும் உறுதியும் முறுகிய அந்தப் பார்வை எங்கே?... அரைக் கண் மூடினாற்போல், சற்றே வாய் பிளந்த நிலையிலிருக்கும் அவரைப் பார்த்தவண்ணம் அவன் குரல் கொடுக்கிறான்.

     “அப்போ...? அப்பச்சி...?” அனக்கமில்லை. ஓர் ஐயம் அம்பாய் அவனுள் சென்று கக்கலும் கரைசலுமாக உணர்ச்சியைப் பீறிட்டு வரக் குத்துகிறது.

     “அப்பச்சீ...!”

     அந்தக் கையைப் பற்றித் தூக்குகிறான். வலையிழுத்து, தண்டுகுத்தி, பொரிக்காஞ்சட்டியின் அடிப்பாகம் போன்று புரை புரையாகக் காய்த்த அந்தக் கை... அது துவண்டு விழுகிறது.

     “அப்பச்சி... ஐயோ அப்பச்சி...! நா... நா வந்திருக்கே, அப்பா...” அவன் குரலுக்கு எதிரொலி கொடுப்பது போல் கடல் இரைகிறது; பட்டாசு வெடிக்கிறது. யாரோ பிள்ளைகள் கணபதி கோயில் மணியை இழுக்கின்றனர்.

     ‘போயிக்க லே... போயிக்க... இப்பமே போ! இந்த ஒடம்பில பலமிருக்கி’ என்று சொன்ன நா... அது கெலித்து விட்டது.

     “அம்மா...! அப்பச்சியப்பாரே...?” என்று அவன் பெருங்குரலெடுத்துக் கூவுகிறான்.

     ஆத்தா மூலையோடு உறைந்து போகிறாள்.