4

     வானில் சந்திரனைச் சுற்றி யாரோ பூவட்டம் இட்டிருக்கின்றனர். அவ்வாறிருந்தால் மேகங்கள் குவிந்து, மழையைக் கொண்டு வரும். காலையில் கடற்கரையிலும், மாலையில் தெரு மணலிலுமாக விளையாடிய ஊர்ச் சிறுவர் சிறுமியர் வீடுகளுள் தம்மை மறந்து அயர்ந்துவிட்ட நேரம். மரியான் கூடங்குளத்துக்குப் போய்க் கயிறு வாங்கிக் கொண்டு பஸ்ஸில் வந்து இறங்கிப் பாதையில் நடந்து வருகிறான். பனந்தோப்பில் யார் யாரோ குடித்துவிட்டு நடக்கின்றனர். அமலோற்பவத்தின் வீட்டில் பச்சைச் சுவர் தெரிய விளக்கொளி பரவியிருக்கிறது. மாடி முகப்பில் பூச்சட்டிகளும், கொடிகளுமாக அழகு கொஞ்சும் வீடு. ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது. முன் வீட்டில் சோபாவில் அமலோற்பவம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். குச்சுநாய் வாசற்படியில் படுத்திருக்கிறது.

     அமலோற்பவம் என்ற பாவனமான பெயரை உடைய அவள் ஒரு காலத்தில் ஏலியின் ஓலைப்புரை போல் ஒரு புரையில் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திக்கற்றவளாக நின்றவள் என்றால் யாரேனும் நம்புவார்களா? புருஷன் இறந்து போனபின் தொழிலெதுவும் செய்யத் தெரியாமல் நாலும் இரண்டுமாக ஒரு பெண்ணும் ஆணும் கஞ்சிக்கு அழ, அவள் நாடார் விளையில் கூலி வேலை செய்யப் போனாள். அப்போதுதான் நாடு முழுதும் மது விலக்கு என்ற ஒன்று வந்திருக்கிறதென்றும் அதை “அமுல்” படுத்த அதிகாரிகளுண்டு என்ற விவரங்களும் புதிய தொழில்களுக்கு வழி வகுத்திருக்கின்றன என்றும் அவள் கண்டு கொண்டாள்.

     காளியப்பன் பழக்கமானான்.

     கள்ளுக் கடைகளை மூடிவிட்டதால் நெஞ்சுலரத் தடுமாறிக் கொண்டிருந்த கன்னிபுரம் கடற்கரை மக்களுக்கு அவள் ஆறுதலும் புத்துணர்ச்சியும் அளிக்க முன் வந்தாள். இந்தப் பெரிய வீடு - இரட்டை வீடாக வளர்ச்சி பெறுமுன் சிறு குடிலாகத்தானிருந்தது. கடற்கரை ஓரத்துக் குடிசையைப் பெயர்த்துக் கொண்டு, நாடார் விளைக்குப் போகும் வழியில் இந்தத் தோப்பில் புரை சமைத்துக் கொண்டாள்.

     மொத்தத்துக்கும் இவள் ‘கன்டிராக்ட்’. அந்த நாளில் வீட்டுக்கு வீடு சரக்கைக் கொண்டு கொடுக்க இவளிடம் சிறு பயலாய் வேலைக்கு வந்த அடைக்கலசாமி, பத்துப் பதினைந்து வயசு மூத்தவளான அவளுக்குத் தாலியைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான். அவள் பழைய அமலோற்பவமா? ஆள் தடித்து, மேனியில் ஒரு மினு மினுப்பு மேவ, ராணி போல் நடக்கிறாள். கூந்தலைக் குழைய வாரி முடித்த முடிப்பில் செல்வச் செழிப்பு மின்னுகிறது. கழுத்தில் வரி வரியாகச் சங்கிலி, நெக்லேசு, கைகளில் முழங்கை வரை வளையல்கள், விதவிதமான சேலைகள்... மூத்த பெண் ரூபியே எப்படி வளர்ந்து உருண்டு திரண்டு நிற்கிறாள்? அடைக்கலசாமி, கடல் தொழில் செய்யாமல், சம்மாட்டி என்ற நிலையில் லாப நஷ்டக் கணக்கில் மாயாமல், வட்டக்காரனாகச் சங்கலியும் சில்க் சட்டையும் உருமாலுமாகக் கடற்கரையில் கொடிகட்டிப் பறக்கிறான். இவனை அப்பனென்று கூப்பிட ஒரு பெண்ணும் ஆணும் இருக்கின்றன. ஊரில் பெரும்புள்ளி; பஞ்சாயத்து உறுப்பினன்; பங்குச்சாமி மதிக்கும் ஆள். மாதா கோவில் கொடை என்றால் தாராளமாகத் தருகிறான். எனவே, வட்டக்காசு பிரிக்க இவன் கடன் கொடுத்தவனிடம் எப்படி நடந்து கொண்டாலென்ன? மீன் பாட்டில் ஆறில் ஒரு பங்கு கண்டிப்பாக வசூல் செய்துவிடுவான். வட்டக்காசு அன்றாடம் மீன் பாட்டில் கடன்பட்ட பரவன் கொடுக்கும் வட்டிதான். இது தவிர நல்ல மீனாகப் பார்த்து கறிக்கும் கொண்டு போவான்.

     மரியான் பாடுபடும் தொழிலாளியின் நிலையையும், வளமை கொழிக்க வாழும் வட்டக்காரனுக்குமுள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கிறான். காட்டிலே மரப்பட்டை, கெட்டுப் போன பாட்டரிசெல், அழுகிய வாழைப்பழத்தோல், குப்பை கூளம் எல்லாவற்றையும் மூலப்பொருளாக்கிச் சாராயம் காய்ச்சுபவன் வேறு ஆள். அவன் காவல்காரன், அதிகாரி எல்லாருக்கும் வாய்க்கரிசி போட வேண்டும். இவர்கள் அங்கிருந்து வாங்கி இங்கே விநியோகம் செய்கின்றனர். தரகு - ஒரு குப்பிக்கு ரெண்டு ரூபாய் வருகிறதாம். அதே போல் வலை வாங்கவில்லை; கயிறு வாங்கவில்லை - அல்பிசா மரம் வாங்க மலையாளம் போகவில்லை; லாரி தேடவில்லை. பாரில் எவனுக்கேனும் வலைபட்டுக் கிழிந்தால் இவனுக்கு யோகம்... கயிற்றுச் சுமையைக் காட்டிலும் இந்த எண்ணங்களின் சுமைதான் அவனை அழுத்துகிறது.

     கோயில் பக்கம் குடி தண்ணீர்க் கிணற்றில் இப்போதும் எவனோ நீரெடுக்கிறான். நீல விளக்கு ஒளியை உமிழ்கிறது. கோயிலின் முன்புறம் கெபி. விளக்கொளியில் சோகம் கவியும் மாதாவின் முகமும் பாடுபடும் ஐயனின் சொரூபமும் பளிச்சென்று தெரிகின்றன. துன்பப்படுபவர்களுக்காக யேசு பெருமான் முள் கிரீடம் அணிந்து சிலுவை சுமந்து சென்று ஆணிகளால் அறையப் பெற்றார். அப்படி இருக்கையில், பாடுபடும் தொழிலாளிகளின் மீன் பாட்டில் பெரும் பகுதியைத் தனக்கு வேண்டும் என்று கேட்பாரா?...

     அப்படி விதித்தவர்கள் மனிதர்கள்; உறிஞ்சிகள்.

     குடிமகன்... நாசுவன்... அவனுக்கு உரிமை கொடுப்பது நியாயம். அவன் முடி திருத்துகிறான்; வைத்தியன், மருத்துவம் செய்கிறான்; பரவன் கண்ணை மூடினாலும் அவன் தான் அடக்கம் செய்யக் குழி தோண்டுகிறான். ஏலக்காசு, ஏலம் விடுபவனுக்கு நியாயம். அஞ்சுமீன் தெறிப்பு, கோயிலுக்கு. அதுதான்போகட்டும். துவி... சுறாமீனின் செதில்கள் - மீனுக்கு மேல் இப்போது அவை விலைக்குப் போகின்றன என்பது உண்மை. சிங்கப்பூர், ஜப்பான் என்று வியாபாரிகள் வெளிநாட்டுக் கிராக்கிக்காக மீனுக்கு மேல் விலை கொடுத்து வாங்குகின்றனர். அது அப்படியே கோயிலுக்குக் குத்தகை எடுத்த சாயபு, கரையில் வந்து உரிமையுடன் சுறாத் துவிகளை வெட்டிப் போகிறார்.

     துவி உரிமை அவர்களுக்குச் சேருவதாக இருந்திருந்தால், ஐநூறு ரூபாய் புரட்ட வழியில்லாமல் இருப்பானா?...

     செபஸ்தி நாடான் கடை. வாயிலில் சுருட்டுக் குடித்துக் கொண்டு குந்திப் பேசிய பெஞ்ஜமினும் பிச்சை முத்துப் பாட்டாவும் இவனைப் பார்த்துவிட்டு, “போறானே, மரியான்!” என்று சொல்லும் குரல் கேட்கிறது.

     “மாப்ள...? எங்கிய? கூடங்கொளம் போயி வாரியா?”

     “ஆமா, மச்சா! தாவுகல்லுக்குக் கவுறு வாங்கியாரம். அந்து போச்சி...”

     “இப்புடி இரியும் மாப்ள. என்னிம்ப்பு, ஊரில் எதேதோ பேச்சு காதில வுளுகுதே?...”

     கயிற்றுச் சுமையைக் கண்டவாயிலில் இறக்கிவிட்டு அவன் காட்டிய பெஞ்சி முனையில் அமருகிறான். கயிற்றுமுனைக் கங்கை பெஞ்ஜமின் நீட்ட பீடி கொளுத்திக் கொள்கிறான்.

     “என்னம்ப்பு காதில வுளுகுது?”

     “நசரேன் மாம மகளைக் கெட்டப் போறா, சீதனம் லாஞ்சி கொடுக்யா... மரியானும் லாஞ்சித் தொழிலுக்குப் போறாண்ணு காதில வுழுந்திச்சி...”

     “அதொண்ணும் முடிவாகல மச்சா... நீங் கூடத்தா முன்னம் லாஞ்சிக்குப் பணம் கெட்டி வச்சிருக்கேண்ணு சொன்னே... நானும் கேக்கணுமிண்டுதா இருந்தம்.”

     பிச்சைமுத்துப் பாட்டா கெல் கெல்லென்று இருமுகிறார். ஏலி கடைப் பக்கம் வருவது தெரிகிறது.

     மரியானுக்கு அங்கு உட்கார்ந்திருக்க நாணமாக இருக்கிறது. பெஞ்சமின் பேச நினைத்தவன் யாரோ தடுத்துவிட்டாற் போல் எழுந்து சென்று தொண்டையைச் சுரண்டிக் கொண்டு ஒரு பக்கம் காறி உமிழ்கிறான்.

     ஏலியை அருகில் கண்டதும் மரியானின் நெஞ்சம் எப்படித் துடிக்கிறது! அவளது மேனி வெளுத்துக் கண்கள் உள்ளே போயிருக்கின்றன. வயிறு முன்புறம் பொங்கிக் குவிந்திருக்கிறது. பிளவுஸ் போட்டிருப்பது கூடத் தெரியாமல் மினு மினுத்த கறுப்புச் சேலையால் மூடிக் கொண்டிருக்கிறாள். முடியை அவிழ்த்து விட்டால் முழங்காலுக்கு வரும்... குப்பியைக் கொடுத்து “மண்ணெண்ணெய் அரை லிற்றர்...” என்று மெல்லிய குரலில் கூறுகிறாள்.

     மரியான் அங்கே நிற்பதை அறிந்து திரும்பிப் பார்க்க ஆவல் இருந்தாலும் அவள் பார்க்கவில்லை.

     “அதுக்குள்ள, மச்சாது மாமெ, மரியானக்க கொடுக்கப் பொண்ணு போறாண்ணு வேற பேச்சுக் கிளம்புது. ஏ, மாப்ள...?”

     ஏலி சில்லறையை அவனிடம் வைத்துவிட்டு நடந்து செல்கிறாள்.

     “கடல்கரையில இவ எம்மாட்டுத் தயிரியமா இருக்கா பாரேன்? சினிமாக் கொட்டச் சண்டையிலே அடிபட்டு இவ புருசன் இன்னாசி செத்துப் போயி மூணு வருசமாச்சி. இவ தனிச்சிப் பொழய்க்கிறா” என்று பெஞ்ஜமின் மரியானின் வாயைக் கிளறத்தான் அவலைப் போடுகிறான்.

     “இந்தக் கரையில இருக்கிற பொண்ணுவள்ளாம் காட்டியும் அது மோச இல்ல. இந்த ஊருப் பயலுவளச் சொல்லு. முதுகெலும்பில்லாதவனுவ; பொட்டப்பயலுவ. அலவாய்க் கரையில அது ஒரு மனிசாள நிமுந்து பாத்து அநாவசியமாப் பேசுதா? எந்தப் பயலேம் ஏதும் பேசினா திரும்பிப் பார்க்காம போயிரும். வேற கொமப்புள்ளிக இருக்கிறாளுவளே, சேலதுணி போன எடந்தெரியாது. இளிப்பாளுவ...” என்று யார் மீதோ ஆத்திரப்படுகிறார் பாட்டா.

     பெஞ்ஜமின் தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறான். மரியானுக்கு முகத்தில் சூடேறுகிறது.

     “அப்ப நான் வாரம்...”

     மரியான் கயிற்று வரிகளை எடுத்துக் கொள்கிறான்.

     “இரி மாப்ள. தொழில் பத்திப் பேசணுமிண்ணுதான் கூப்பிட்டே. நசரேன் கூட நீயும் போறியா?” பெஞ்சமின் அவன் தோளைப் பற்றிக் கொண்டிருக்கிறான்.

     “நான் போவ இல்லை. அப்பெ வேணாமிண்ணு சொல்லுதா. போனா பங்காளியா பணம் கெட்டணும். அச்சாரமா ஐநூறு கெட்டணுமா. லில்லிப் பொண்ணுக்குக் கலியாணம் கெட்டணும்னு இருக்கு. இப்பம் லாஞ்சிக்கு வேற வட்டக்காரரிடமோ, தரகரிடமோ கடம் வாங்க எனக்குக் கொந்தலா இருக்கி. பெறவு, கோயில் தெறிப்பு போதாதுண்ணு, இவெ வேறே அப்பங்கிட்டியே வட்டக்காசு பிரிக்க வந்திடுவா. அவெ ஆளு இல்லாட்டியும் நாம தொழில் செய்ய்ம் எடத்துக்கும் வருவா. லயனல் தம்பிக்கு ஜீப்பு வாங்கிக் கொடுத்திருக்கா. இனியும் கடற்கரையையே வெலைக்கு வாங்கிப் போடுவாம் போல இருக்கு?”

     “அதா... மாப்ள. இப்பம் செப்டம்பர் இருவத்தஞ்சில குத்தவை - கோயில் தெறிப்பு ஏலம் வுடும் நாள். இந்த வருசம் நாம ஒன்னிச்சி சேந்து நிண்ணமுண்ணா, துவிக்குத் தலையை நிப்பாட்டிரலாம். மெனக்கு நாள்ள*, தம்புரெடுக்கச்# சொல்லி நாம ஒரு கூட்டம் போடுவம்... என்ன சொல்றே மாப்பிள?”

     (* மெனக்கி நாள் - விடுமுறை நாள் - ஞாயிற்றுக்கிழமை
     # தம்புரெடுக்க - தமுக்கடிக்க)

     மரியான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கிறான்.

     “ஆமா?... பாட்டா என்னம்ப்பு சொல்லுறாரு?”

     “பாட்டாதா நமக்குத் தலவரு... முன்னக்காலம் துவி ஆறு காசுக்குப் போச்சி, கோயிலுக்கே விட்டுக் குடுத்தம். இப்பம் காலம் மாறிப் போச்சில்ல?”

     “செய் மச்சா. இன்னிக்குக் காலம் கூட, மானுவல் மாமனுக்குக் களர் பட்டிருந்திச்சி. ஒண்ணரைக்கண்ணன் அள்ளிப் போட்டுக்கிட்டா. வட்டக்காரன் வேற. இவெ ஏச, அவெ ஏச, புளுத்த நாயி குறுக்க போவாது” என்று மரியான் ஒத்துக் கொள்கிறான்.

     இனம் தெரியாமல் எங்கோ செல்லும் உணர்வுக்கு இலக்குக் கிடைத்துவிட்டாற் போன்று உற்சாகமாக இருக்கிறது. அவன் உள்ளமும் வெளியும் அந்த மகிழ்ச்சியின் இலயத்தோடு ஒன்றியிருக்க வீட்டுக்கு வருகிறான்.

     அந்தக் கரையில் கடல் தொழில் செய்பவர்களிடையே பெஞ்ஜமின் கொஞ்சம் மதிப்பானவன் தான். பத்துப் படித்துத் தேறி, திருச்செந்தூர் ஆபீசில் கொஞ்ச காலம் எழுத்து வேலை செய்தவன் அவன். அண்ணன் பெரிய படிப்புப் படித்துப் பாளையங்கோட்டையில் வாத்தியாராக இருக்கிறான். அப்பா இங்கே தான் இருந்தார். உடம்பு சரியில்லாமல் வயிற்று நோவுக்கு வைத்தியம் செய்து கொள்ளப் பெரிய மகனிடம் சென்றிருக்கிறார். இவனுக்குக் கூத்தங்குளிப் பெண்ணைக் கட்டி மூன்று குழந்தைகள். பெண் கட்டிய இடமும் பசையுள்ள குடும்பம். அவன் முன்னின்று சில நாட்களுக்கு முன்பரதவர் முன்னேற்ற சங்கம் என்று ஒன்று அமைக்க வேண்டும் என்று எல்லோரையும் கூட்டிப் பார்த்தான். இந்தக் கரையில் இலகுவாக அப்படி ஒரு செயல் செய்துவிட முடியுமா என்ன? எல்லோரும் தலைக்குத் தலை பேசி அடுத்தவன் சொல்லுவது காதில் விழாமல் காக்காய்க் கூட்டம் போல் கத்தினார்கள்... எல்லோரும் சேர்ந்து... கோயில் தெறிப்பை நிறுத்துவது!

     இப்போது தெரியாமல் திருட்டுத்தனம் செய்கின்றனர். பாதி மீனை ஒளிக்கின்றனர். நேரம் சென்று வந்தால் தூண்டியில் சுறா பிடித்து வந்தால், கடற்கரையில் துவியைத் தாமே கழித்துத் தெறிப்புக்காரரை ஏமாற்றவில்லை என்று கூடச் சொல்ல முடியாது. ஆனால் இதனாலெல்லாம் கரையில் சண்டைக் குரல்களும் ஏசல்களும் சவால்களும் மோதல்களும் தான் மிஞ்சுகின்றன. திருப்பலிப் பூசையில் சாமியார் கோயிலை ஏமாற்ற கூடாது என்று பிரசங்க உரையில் ஒவ்வொரு தடவையும் சொல்லுகிறார். எல்லோருமாக முடிவெடுத்து கோயில் குத்தகை கூடாது என்று சொல்வது நியாயமான செயல் அல்லவா?...

     பக்கத்து வீட்டில் விளக்கெரிகிறது. யார் யாரோ பெண்கள் நடமாட்டம். முற்றத்தில் கட்டிலைப் போட்டுக் கொண்டு எட்வினும் அவன் சின்னாத்தா மகன் சாமுவேலும் அமர்ந்திருக்கின்றனர். எட்வினின் முதல் குழந்தை. இரண்டு வயசுப் பிள்ளை அழுது கொண்டிருக்கிறது. அவன் அந்தப் பக்கம் என்னவென்று கேட்காமல் உள்ளே வருகிறான். தாழ்வரையில் வலைகளும் மிதப்புக் கட்டைகளும் இருந்த இடத்தில் கயிற்றை வைக்கிறான். பீற்றரும் சார்லசும் நடு வீட்டில் ஒருபுறம் அடித்துப் போட்டாற்போல் உறங்குகின்றனர். செயமணி சிம்னி விளக்கடியில் கண்களைக் கவிழ்த்துக் கொண்டு நார்த்தட்டு - இறுதி வரியை முடித்துவிடுவது என்ற நோக்கில் கோத்து வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

     அப்பன் அவனைக் கண்டதும் கட்டிலில் எழுந்து உட்காருகிறார். நெருங்குகையிலேயே சாராய வாடை அடிக்கிறது.

     “ஏக்கி, இருட்டில இன்னுமா இந்த எளவு? போயிச் சோறு வெய்யி! எல்லாரும் எங்கே போயிட்டாங்க?...” என்று வெடுவெடுத்தவாறு அவன் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டுகிறான். மேலே கண்ணாடிக் கூண்டுக்குள் அன்னை மேரி கையில் பாலுடன் இருக்கும் சிறிய “சுரூபம்” இருக்கிறது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளாக இருக்கும் சொத்து அது. வீட்டுக்கு ‘எலக்ட்ரிக் லைட்டு’ போட்டு, அந்தக் கூண்டில் சிறு நட்சத்திரம் மின்னுவது போல் ஒரு விளக்கும் போட வேண்டும் என்பது அப்பனின் அவா.

     “ஜெசிந்தாளுக்கு நோவு கண்டிருக்கு. மாசம் ஆவலியாம்...” என்று செயமணி கூறிவிட்டு, ஓலை கத்திரி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்று மூலையிலுள்ள பெரிய ஓலைப் பெட்டியில் போட்டு வைக்கிறாள்.

     “அதுக்கு இந்த மேரிக் களுத என்னிய செய்யப் போனா?...”

     “மேரியக்கா புள்ள அளுதிச்சி, தூக்கிட்டுப் போச்சி...”

     அவள் சொல்லி முடிப்பதற்கும் மேரி உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கிறது.

     அப்பன் வயிற்றையும் நெஞ்சையும் தடவிக் கொண்டு “யேசுவே, யேசுவே... ஏலாது இனி...” என்று நோவால் தவிக்கிறார்.

     “ஏக்கி மேரி, அடுப்புச் சூட்டில சுக்குத்தண்ணி வச்சிருந்தா இம்பிட்டுக் கொண்டாடி... யேசுவே என்ன... ஏனிப்படி வாதைப் படுத்துறீம்...!”

     மரியானுக்கு அவரைப் பார்க்கையில் அப்போது பரிதாபமாக இருக்கிறது.

     மரியான் அருகில் சென்று முதுகுத்தண்டில் தடவிக் கொடுக்கிறான். “பாழாய்ப் போன தண்ணிய ஏன் குடிச்சுத் தொலக்கிறீம்! டாக்டர் குடிக்கவே கூடாதுண்ணு சொல்லல...?”

     “ஆமா...? அந்த நெட்டயன் வீட்டுக்கேல்ல வந்து குடுத்து தொலைக்கிறான்? அவெ வார இல்ல - சரக்குக் கொண்டு வரலேண்ணா இவரு என்னியோ கடலையோ மீனையோ காணாதது போலச் சொணங்கிப் புரு புருக்கிறாரு?...” என்று மேரி அண்ணனிருக்கும் தைரியத்தில் அப்பனைச் சாடுகிறாள்.

     “இவெ... மயிரு எனக்குப் புத்தி சொல்லுதா? செறுக்கி மவ, போட்டீ உன்னியக்கட்டப் போற மயிரானுக்குப் புத்தி சொல்லு...!”

     இவருடைய நாவிலிருந்து சில அர்ச்சுனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு மேரி சுக்குத் தண்ணீரைக் கொண்டு வருகிறாள்.

     அதைக் குடிக்கையில் அப்பன் கண்களிலிருந்து நீர் வழிகிறது. மரியான் படுக்கையிலிருந்து துண்டை எடுத்துத் துடைக்கிறான்.

     “கண்ட அழுவலையும் குப்பையும் போட்டுக்காச்சுதா... அத்தைப் போயிக் குடிச்சா குடல் அழுவிப் போவும். பெஞ்ஜமினுக்க அப்பச்சிக்கு ‘ஆபரேசன்’ செய்யணுமா. அவெ பத்தந்நூறு ரூபா செலவு செஞ்சி செய்ய ஆளுங்க இருக்கு. நீரு அப்படி அழுவ வச்சிட்டீருண்ணா என்ன செய்யிவம்?...”

     அப்பன் மனவெழுச்சியுடன் மகனுடைய கைகளைப் பற்றிக் கண்களில் வைத்துக் கொள்கிறான்.

     “இனி அந்த எளவு வேணாமுண்டு தா நிதம் நினக்கேன், பொறவு அதெல்லாம் சரிப்பட்டு வாரதில்லே. பிராந்து புடிச்சாப்பல இருக்கு... நீ குடிக்காதே. உனக்கு ஒரு நெல்ல பொண்ணைக் கெட்டணும். சீதனமாப் பத்திருவது பவுன் சங்கிலி எல்லாம் போட்டு வார பொண்ணைக் கெட்டணும். நாலு பேருக்கு மதிப்பா கோயில்ல பறவாசிச்சு, சுரூபமெல்லாம் சுவடிச்சி, கலியாணம், பஸ்ட் கிளாஸ் கலியாணம், நா சாவுறதுக்குள்ள எம் பேரப்புள்ளயப் பாக்கணும்... மாதாகிட்ட ஒரு நாளன்னியே மன்னாடிக் கேக்கேன்...”

     மரியான் உருகிப் போகிறான். அவனைப் படுக்கையில் மெல்லப் படுக்க வைத்து, “பேசாம ஒறங்கும், நோக்காடு சாஸ்தியாவும் இல்லேண்ணா...”

     “அந்த ரோசித்தா குட்டிய உனக்குக் கெட்டிக்கணும், லில்லிய நசரேனுக்குக் கெட்டணுமிண்ணு மனசோடு நெனச்சம். அது நடக்கல. வயசில கெட்டிப் போடலெண்ணா இந்த ஒடம்பு வீச்சம் அப்பிடித்தான் வரமொற மீறிப் போவும். கடல் மேல அல்லாடிட்டுத் திரும்புறவனுக்குச் சூடுகேக்கும் ஒடம்பு... ராசா... நீ குடிக்காம பரிசுத்தனாயிருக்கே... உனக்குப் பரிசுத்தமான பொண்ணா கெட்டணும்...”

     அப்பனின் கரடுமுரடாகக் காய்த்துப் போன கை அவன் மீது படுகையில் மரியானுக்கும் உடம்பு சிலிர்க்கிறது.

     “பரிசுத்தமிண்ணா என்ன அருத்தம்...” என்று மனசோடு கேட்டுக் கொள்கிறான்.

     அப்பன் அவனாகப் பேசிக் கொள்கிறான்.

     “மாதா சுரூபத்தின் கீழ இருக்கும் தேவதை மாதரி இருக்கணும் மொவம். அவ வெள்ளாப்புத் தொழிலுக்குப் போவணுமிண்டா ஓர்லோசு* முடுக்கி மணி வைப்பா. மச்சான் எந்திரிங்கண்ணு எழுப்பிச் சுடுத்தண்ணி வச்சி மொவம் கழுவச் சொல்லி நீராரம் குடுப்பா. ராக்கடைத் தொழிலுண்ணு சோறு நீரெல்லாம் எடுத்து வச்சிப் பிரியமா வழியனுப்புவா. வாரப்ப கோப்பித்தண்ணி காச்சி வச்சிக் காத்திருப்பா. கடல் வாங்கலா இருந்து# போனவங்க வார நேரமாச்சிண்ணா மாதாகிட்ட முட்டுக்குத்தி இருந்து மன்னாடிட்டிருப்பா. பாவ நெனப்பு இல்லாம எம்புருசனவுட இந்த ஒலகத்துல யாரும் ஒசத்தி இல்லேண்டு நினைக்கிறவளா...” அப்பனின் கண்களிலிருந்து வெம்பனி உருகி வழிகிறது.

     (* ஓர்லோசு - கடிகாரம்
     # வாங்கலா இருந்து - சிறிதளவு கொந்தளிப்பாக இருந்து)

     மரியானுக்கும் நெஞ்சிலிருந்த பாறை கரைந்து உருகி வருவது போல் உணர்ச்சி முட்டுகிறது.

     கடல், காற்று, மீன் - காசு, கள்ளுக்கடை, இல்லாவிட்டால் மனைவி என்ற பெயரில் இவர் கொந்தளிப்புக்களைத் தாங்க இருக்கும் பாறை போல் ஒரு பெண்... இதற்கு மேலும் இவருக்கும் ஒரு மென்மையான நெஞ்சம் இருக்கிறதா?

     மரியான் பள்ளிக்கூடம் என்று சார்ந்திருந்த நாட்களிலும் மரத்தை அடக்காவி வைத்துத் தள்ளுவதிலும் ‘போயா’ போட்டு நிறுத்துவதிலும், வலை மீனைத் தட்டி எண்ணுவதிலும் மடிக்காரருக்கு உதவுவான். அதற்கு மீன் கிடைக்கும். அதை விற்றுக் கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பான்.

     “லே மக்கா, உலைக்கிப் போட ஒண்ணில்லே... லேய், துட்டு இருந்தாக் குடுலே... ராசால்ல...” என்று ஆத்தா கொஞ்சுவாள்.

     “போம்மா, என்னக்க சல்லி வச்சிருந்தா எப்பமும் புடுங்கிக்கிடுதே...” என்று அவன் சிணுங்குவான்.

     “நாளைக்கு அப்பன் துட்டுக் குடுத்ததும் உன்னக்க காசைத் தந்திடுதேன் லே... ராசால்ல...” என்பாள் அம்மை. “எனக்குக் கடியாரம் வேணும்” என்பான் அவன்.

     “வாங்கிக்கலாம்...” என்பாள் அவள்.

     கையில் கடியாரம் கட்டிக் கொண்டு நல்ல மடிப்புச் சட்டையும் குட்டையுமாக, கோயிலில் முன்பக்கம் மதிப்பாக இருக்க வேண்டுமென்று அவனுக்கு அந்த நாட்களில் ஆசை. அவன் இன்னமும் கடிகாரம் கைக்குக் கட்டிக் கொள்ளவில்லை. வெள்ளாப்புத் தொழிலுக்குப் போகவே மணி பார்க்கக் கடியாரம் கிடையாது. கோழியும் பழக்கமான முன்னுணர்வும் தான் கடியாரங்கள்.

     மாற்றி மாற்றி வலை வாங்கவும் சாப்பிடவும் தான் வருமானம் செலவாகிறது...

     அவன் எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.

     செவிகளில் கிணு கிணுவென்று மணி ஒலிக்கிறது.

     “மச்சான்... எந்திரிங்க, ஓர்லாசு மணி அடிக்கிது பாருங்க தொழிலுக்குப் போவாணாம்?...”

     எழுப்பும் மலர்க்கரங்களைக் கண்களைத் திறக்காமலேயே முகத்தில் வைத்துக் கொள்கிறான்.

     “தொழிலுக்குப் போ வாணாம் போல இருக்கி. உன்னண்டயே இருக்கா மிண்ணிருக்கி...”

     “நெல்ல ஆளு...! இத பாருங்க, ஒங்கக்க பயவந்து உசுப்புறான், மக்கா, அப்பச்சிய எளுப்பிரு...”

     குழந்தையைக் கொண்டு மலர் போல் விடுகிறாள். ஏலி... ஏலிதான். அவளைத்தான் கல்யாணம் கட்டி விட்டானே? அப்பாடா, நிம்மதியாக இருக்கிறது. மஸவாதி கெட்டு*... விடிய முன்னே கோயிலில் வச்சி கொட்டு முழக்கெல்லாம் இல்லாம கெட்டிட்டா... அப்பனும் ஆத்தாளும் மொதல்ல சொணக்கமாத்தான் இருந்தாங்க... பொறவு செரியாப் போச்சு... பொறவு...

     (* மஸவாதி கெட்டு - முறை மீறிய பின் நடக்கும் கல்யாணம்.)

     “தா... புள்ளயத் தூக்குட்டீ... மேல உடுதா...”

     “அவெ நேரங்களிச்சித்தான் ஒறங்கியா...”

     “உள்ளார வாங்க நசரேண்ணே, ஏன் அங்ஙனயே நிக்கி? கோபித்தண்ணி வச்சிருக்கே... உள்ளாற வாங்க...” என்று மேரி கூப்பிடுகிறாள்.

     “பொளுது சேர விடிஞ்சிரிச்சி. மாமா எப்பிடி இருக்கீங்க?...”

     “தூத்துக்குடி போறேண்ணு சொல்லிட்டாங்க?...”

     “ஆமா. ஆத்தாளும் போ போண்ணு முடுக்குதா. போயிதா பாப்பமே எண்ணிருக்கே. ஜான் பய இங்கதா இருப்பா...”

     குரல்கள் செவிகளுக்குக் கேட்கின்றன. ஆனால் கண்களை விழிக்க இயலவில்லை.

     “அப்பம் நா வாரம்...”

     “லே, பீற்றர், வலைய எடுத்திட்டுப் போலே...?”

     பூட்டுத் திறந்தாற் போல் இப்போதுதான் அவனுக்கு விழிப்பு வருகிறது. சட்டென்று எழுந்து உட்காருகிறான்...

     அதே வீடு... சுவரில் மாதா சுருவம். வெள்ளைக் கண்டு எத்தனையோ நாட்களாகிவிட்ட சுவர்கள். மூலையில் நார்ப் பெட்டிகள் - அலுமினியம் வட்டை. தகரப் பெட்டி... சுருட்டிய பழம் பாய்கள்.

     அவன் இன்னும் ஏலியைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கவில்லை.

     முள் நிறைந்த மரத்திலிருக்கும் பழங்களாக அந்த வாழ்க்கை அவன் மீது கவிந்திருக்கிறது.