6

     கடலின் இடைவிடாத இலய இசைக்கு ஏற்ப பனைகள் சுருதி கூட்டும் கன்னிபுரக் கடற்கரையில் ‘மெனக்கி’ என வழங்கப் பெறும் ஓய்வு நாள், உடற்பாடுபட்டு, மீன் ‘பாடு’ காணும் தொழிலுக்கும், அன்றாட வாழ்வின் நியமங்களுக்கும் மேலாக வாழ்க்கையில் ஓர் பற்றுக்கோல் தேவை என்று உணர்த்தும் ஓர் வாராந்தர நாள் கடலைப்பற்றிக் கவலைப் படாமல் காசு மட்டுமே குறியென்று வாணிபம் செய்பவர்கள், வாத்திமைத் தொழில் செய்பவர்கள், பல்வேறு வழிகளில் பொருளீட்டி ஓய்வாக ஊரில் மச்சு வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் ஆகியோருக்கு, கோயிலுக்குச் சென்று பங்குப் பூசையில் கலந்து கொள்ளல் அந்தச் சிறு ஊரின் சமுதாய வாழ்வின் முக்கியமானதோர் பகுதியாகும். பெண்டிருக்கு, தத்தம் புதிய ஆடையணிகளை விளம்பரம் செய்து கொள்வதற்குரிய வாய்ப்பான தருணம் இந்தக் கோயில் கூட்டம்தான். திருப்பலிப் பூசையில் கலந்து கொண்டு தன்னை நல்ல கிறிஸ்துவன் என்று காட்டிக் கொள்வதால் எந்த வகையான செயலைச் செய்யவும் அது காப்பாக, ‘லைஸென்ஸ்’ போன்று பயன்படும் என்று நினைப்பவரும் உண்டு.

     மரியான் கோயில் மணி அடிக்கையிலே படுத்துத்தானிருக்கிறான். ஆத்தா அம்மியில் மருந்தரைக்கும் சாக்கில் கல்லையே இழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

     “மாதாவே எரக்கமாயிரும்...” என்று சொல்லிக் கொண்டு அப்பன் மெள்ள எழுந்து புறக்கடைப் பக்கம் போகிறார்.

     “எட்வின் பொஞ்சாதிக்கு என்ன புள்ள பெறந்திருக்கு?” என்று மரியான் செயமணியிடம் விசாரிக்கிறான்.

     “கழுத்தோட வந்து நிண்ணு வகுத்திலியே செத்துப் போச்சாம்; மைனி அளு அளுண்ணு அளுவுதாம்...”

     சில்லென்று அவனுள் ஓர் அச்சம் விறைக்கிறது.

     ஏலி... ஏலிப்பெண்... எல்லோராலும் வெறுத்து இகழப்பெறும் ஒரு பெண்... அவன் கருவைத் தாங்கியிருக்கிறாள்.

     முதல் நாள் கடலிலிருந்து திரும்பி வந்ததும் அவன் நேராக வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டதும் அங்குதான் போனான்.

     அவனைப் பார்த்ததும் சிறு விளக்கைத் தூண்டிவிட்டுப் பேதையாகச் சிரித்தாள். கை நீட்டி அவளைத் தீண்ட முன்னின்ற அவனுடைய ஆர்வத்தில் ஓர் உணர்வு குறுக்கிட்டுப் பின்னிழுத்துக் கொள்ளச் செய்கிறது.

     கண்கள் குழியக் கன்னம் தேய, கழுத்துக்குழி தெரிய மார்புகள் பொங்கி முனைத்திருந்தன. முரட்டுத்தனம் கிளர்ந்தெழ, உடற்பசியின் வெப்ப மிகுந்த அந்தப் பரவன், அன்று மலரைப் போற்றி அரவணைக்கும் புறவிதழாக மாறி அவளைக் கவிந்து போற்றத் துடிக்கும் மென்மை மிகுந்தவனாக மாறிப் போனான்.

     அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

     அவள் கண்கள் உருகி ஒளி சுடர்ந்தன.

     “என்னிய எல்லாரும் வேசண்டு சொல்லுதா. ஆனா இப்பம் நானு சத்தியமா அப்படிக்கில்ல. ஒங்க புள்ளத்தா இது...”

     அவனுக்கு உடல் முழுதும் ரோமாஞ்சனம் உண்டாயிற்று.

     “ஒங்கக்க... நல்ல எடத்திலேந்து சீதனத்தோட பொண்ணு கெட்டணும். நானு பாவம் செஞ்சிருக்கே. மாதாவோட மனஸ்தாபப்பட்டு நிதம் ஜபம் சொல்லுதேன்...”

     அவன் அப்போது அவள் வாயைப் பொத்தினான்.

     “சொல்லாத புள்ள, நாம பாவம் எதும் பண்ணல. நம்ம மனசுக்கு ஒளிச்சி எதும் செய்யக் கூடாததைச் செஞ்சாத்தா பாவம். நம்ம மன்சு மாதாக்குத் தெரியும்...”

     அவள் கண்களிலிருந்து நீர் பெருகி வந்தது.

     “ஏனளுகா புள்ள?...”

     “இந்தக் கரு... நீங்க இல்லண்ணாலும் பாவத்தில் ஜனிச்சதா. சாமி ஞானஸ்நானம் கொடுக்குமா? புள்ளக்கு அப்ப பேருண்டு ஒங்கக்க பேரச் சொன்னா ஒங்கக்கு அது கொறயில்லியா?”

     அப்போது அவன் மெழுகாய்க் கரைந்து போனான்.

     “ஏலி, நாம ரெண்டு பேரும் கெட்டிட்டா ஆரு என்ன சொல்ல இருக்கு? எனக்கு இப்பம் ஒன்னிய நெம்பப் புடிச்சிருக்கு...”

     “ஒங்கக்க ஆத்தா அப்பனெல்லாம் ஏச மாட்டாங்களா? ஒங்கக்க வூட்டில நான் காலு குத்த ஏலுமா?... வாணா ராசா! நீங்க நல்ல பெண்ணாக கெட்டி இந்தக் கரயில மேம்மயா இருக்கணும். என்னக்க இந்தப் புள்ள... ஒண்ணு போதும்... நெல்லபடியா. என்னக்க ஒரே ஆசதா...”

     “என்னிய ஆச ஏலி?”

     அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டு விரலால் நிலத்தில் கீறிக் கொண்டு சொன்னாள். மென்மையான அந்த சன்னக்குரல் அவனுடைய உள்ளத்தின் உள்ளே மட்டும் சென்று நுட்பமான இழையை மீட்டிச் சங்கீதம் பாடச் செய்வது போல் சொன்னாள்.

     “ஒங்கக்க ஆத்தா இந்தப் புள்ளக்கி, வெள்ள சட்ட போட்டுக் கையில வச்சிட்டு கும்பாதிரி* யாத்தாவா வந்து ஞான ஸ்நானம் குடுக்கணும்...”

     (* கும்பாதிரி ஆத்தா - God Mother)

     இந்தக் காலை நேரத்தில் கோயில் மணி ஒலிப் பூக்களைக் காற்றிலே சிதற விடும் பொழுதிலே அந்தச் சொற்கள் நினைவிலெழ அவன் கண்கள் பசைக்கின்றன.

     கோயிலுக்குப் போகலாமா என்று நினைக்கிறான்.

     முன்பெல்லாம் அவன் கோயிலுக்கு ஞாயிறு தவறாமல் அப்பனுடன் செல்வான். இவருக்கு முன்பு ஒரு பாதிரி இருந்தார். பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரு பெண் சென்ற போது, அவளுடைய பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தார். அவள் அதைத் தன் அண்ணனிடம் சொல்லிவிட்டாள். அவன் காலோடு தலை சேலையால் போர்த்து மூடிக் கொண்டு பின் தோட்டத்து வழியாகச் சென்று நின்று கொண்டிருந்தான். சாமி வந்ததும் உள்ளே சென்று அவரை வலைகளிழுத்து வயிரம் பாய்ந்த கைகளாலும் கால்களாலும் நன்றாக ‘உபசாரம்’ செய்துவிட்டு வெளியே வந்தான். அந்த ‘மச்சான்’ பெஞ்ஜமின் தான். அவனுடைய சின்னாத்தா பெண் அற்புதத்தைத்தான் அந்தச் சாமி அவ்வாறு தன் வலைக்குள் வீழ்த்தப் பார்த்தார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகின்றன.

     அந்தப் பங்குச்சாமி சாமிதாஸ் போய், இந்த சேவியர் சாமி வந்திருக்கிறார். மரியானுக்கு அதற்குப் பிறகு சாமியார்களும் வெறும் மனிதர்கள் தாம் என்ற எண்ணம் உறுதியாயிற்று. அவனால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்று அவர்களுடைய மீன்பாட்டில் உரிமை கேட்கும் விஷயம். அப்பனிடம் இதைப் பற்றிச் சொன்னாலே அவருக்குப் பிடிப்பதில்லை. “லே, திருச்சபையையோ, குருவையோ சந்தேகப்படக் கூடாது...”

     திருப்பலிப் பூசைக்குச் சென்று நற்கருணை வாங்காமல் வரமாட்டார். ஆத்தாளை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல இயலாது. அவன் மனதறிந்து கோயில் தெறிப்புக்கு அஞ்சி, மீன்பாட்டை மறைக்கத் தொடங்கியிருப்பதால், கோயிலுக்குப் போனாலும் ஒதுக்கமாக நின்றுவிட்டு வந்து விடுகிறான்.

     எத்தனையோ பேர் எத்தனையோ பாவம் செய்கிறார்கள். எல்லோரும் நற்கருணை வாங்குவதுமில்லை.

     அப்பன் முகம் கழுவிக் கொண்டு வந்து விட்டார். ஆத்தா அரைத்த விழுதை வழித்து எடுத்துக் கொண்டு நடு வீட்டின் வழியே குசினிக்குப் போகிறாள்.

     “எங்கட்டீ, சீப்பு? எண்ணெய் கொண்டாட்டி, தலைய சீவிக்கிறதே. ஏக்கி மேரி, வெள்ளையா சரட்டு மடிச்சி வச்சியே! நார்ப் பொட்டிலேந்து என்னக்க உருமாலை எடுத்துக் குடுட்டி?”

     ஆத்தா முட்செடி மிலாறை அடுப்பில் தள்ளிச் சுருசுருவென்று எரியவிட்டுக் கஷாயம் காய்ச்சுகிறாள்.

     “நீரு இன்னிக்குக் கோயிலுக்குப் போவணுமா?...” என்று கேட்டுக் கொண்டு மரியான் எழுந்திருக்கிறான்.

     “கோயிலுக்குத்தாம் போறம்; பூசைக்குப் போனாலே தெம்பாயிருக்கும். ஏக்கி மேரி, முட்டையொண்ணு போட்டு நெம்ப வெவிக்யாவ தண்ணி கொதிச்சதும் எடுத்துக் கொண்டா...”

     ஆத்தா அப்போது சேலை முன்றானையைச் சுற்றிக் கொண்டு வருகிறாள்.

     “கையும் காலும் வாதம் புடிச்சாப்பல ஆடுது. அம்மாட்டுக்கு மணல்ல நடப்பீரா? எங்கியாலும் வுழுந்துவச்சா?”

     “நீ சொம்மா கிடடி கிளட்டுச் சவம். நீ எனக்கு ஒண்ணும் செய்யண்டா? ஏக்கி மேரி, சட்டயும் சாரமும் எடுத்துக் குடுட்டீ!”

     செயமணி குப்பியில் தேங்காயெண்ணையும் சீப்பும் கண்ணாடியும் கொண்டு வருகிறாள்.

     முதல் நாள் தான் குடிமகன் வந்து சவரம் செய்திருக்கிறான். முகம் மழுமழுப்பாக இருக்கிறது. நல்ல கறுப்பு. மீசை எப்போதுமே கிடையாது. அந்தோணியார் பட்டத்தலை போல் நடுவில் நல்ல வழுக்கை பளபளப்பாகத் தெரிகிறது. முன்பக்கம் நாலைந்து பிசிறு முடிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக; கெளுது மீனை நினைப்பூட்டும் நெற்றி, உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றி, மண்டை பளபளக்கத் தடவிக் கொள்கிறார்.

     மரியான் இதற்கு மேலும் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து வெளியே செல்கிறான்.

     கடல் அலைகள் இன்று ‘மெனக்கி... மெனக்கியில்ல?’ என்று கேட்பது போல் கரையை வந்து தழுவுகின்றன. கரையோரம் எல்லா மரங்களும் அணிவகுத்து நிற்கும் கோலத்தில் காட்சி தருகின்றன. கடல் கண்களுக்கெட்டிய தொலைவுக்கு விறிச்சிட்டிருக்கிறது.

     அப்பன், கடைசியாக அன்று ஆடி வெள்ளி நாளில் தொழிலாளியார் பூசைக்குப் போய்த் திரும்பி வந்து படுத்தவர் தான், மணற்கரையில் பந்தல் போட்டு, சாமியாரை அழைத்து, கடலையும் மரங்களையும் மந்திரித்து நீர் செபிக்கும் அந்நாளிலும் அவர்கள் தொழில் செய்யப் போக மாட்டார்கள். பூசை முடிந்தபின் வலைகளை எடுத்துக் கொண்டு அவன் தொழிலுக்குப் போகவில்லை. தலை நோவும் உடல் நோவும் அவன் வழக்கமாகக் குடிக்கும் சாராயத்துக்கும் தீரவில்லை. உடல் பொரியக் காச்சல். எட்டு நாட்கள் தன்னிலை தெரியவில்லை. கை வைத்தியங்கள் செய்தும் இறங்கவில்லை. வாயில் ஒரு கசப்பு. கண்களை விழிக்கவே வெறுப்பு. கூடங்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆத்தாளும் மேரியும் போய்ச் சொல்லி மருந்தும் மாத்திரையும் வாங்கி வந்தார்கள். காய்ச்சல் இறங்கியது. அவன் இந்தக் கண்டத்துக்கு உயிர் போய்விட்டதாகவே நினைத்தான். யேசுபிரான் அவனுக்குள்ள கடமைகளையும் ஆசைகளையும் மதித்து அவனுடைய மன்றாட்டுகளைச்செவியேற்றிருக்கிறார். இருதயராஜ் திருப்பலிப் பூசையில் பங்கு பெறப் போகிறார். அவர் கையை செயமணி பிடித்து அழைத்துப் போகிறாள்.

     மணலில் கால்கள் படுகையில் ஓர் குறுகுறுப்பு. வெள்ளையும் சள்ளையுமாக ஆண்களும், வண்ணங்களாக முக்காடிட்டுக் கொண்டு பெண்களும் ஜெபப் புத்தகங்களுடன் மாதா கோயிலுக்குச் செல்கின்றனர். காலைப் பொழுதின் மனோகரம் இன்பமாக இருக்கிறது. பெண்களின் தோள்களிலும் கைகளிலும் சூழ்ந்தும் குலுகுலுவென்று குழந்தைகள் - ஓடியாடும் சிறுவர்...

     “மாமோவ்! எப்படி இருக்கீரு? ஒடம்பு... எம்மாட்டும் கருவாடாப் போனீரு!”

     “மாமோவ்! திருச்செந்தூராசுபத்திரில ஒடம்பக்காட்டி நாலு ஊசி போட்டுக்கும், நெல்லாயிடும்! அங்க நல்ல டாக்கிட்டர்...”

     சிலுவை பிச்சையான் அவருக்கு நெடுநாளைய நண்பன். இவரைப் போலவே கூலி மடி செய்யும் தொழில்காரன். சம்சாரி, குடிக்கவும் வேண்டும், அவன் யோசனை...

     “ஒண்ணும் வாணாம்வே. மாதா கிருவை இருந்தாப் போதும். போன பதினஞ்சா நாளு இருந்ததுக்கு இப்பம் கால்குத்தி நடப்பேண்டு நெனக்கல...”

     செயமணியின் தோழிகளான புனிதா, விர்ஜின் ஆகியோர் பளபளக்கும் பாவாடைகளும் மேல் சட்டைகளும் அணிந்து கருப்பு லேஸ் நெட்டுடன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு முன்னே ஓடுகின்றனர்.

     இவளுக்கு அப்பன் கையைப் பிடித்துக் கொண்டு அடிமேலடி வைக்க வேண்டியிருக்கிறது. பீற்றரோ, சார்லசோ அப்பனை அணுகி இவ்வாறு உதவமாட்டார்கள். அவர்கள் வீட்டு நிழலில் சோறுண்ணும் நேரங்களிலும் உறங்கும் நேரங்களிலும் தான் தங்குவார்கள். மேரி... மேரி அப்பனின் பக்கமே வரமாட்டாள்.

     “ஏக்கி, என்னிய கய்ய வுட்டுப்போட்டு ஓடுத? செறுக்கிமவ, அங்கிய எந்தப்பய போறான்?” என்று கடிந்து கொள்கிறார். அவள் கையை கெட்டியாகப் பற்றிக் கொள்கிறார்.

     கோயிலின் முன்பக்கம் வடக்கோரமாகக் கெபியில் விளக்கு எரிகிறது. பரந்துவரும் கதிரவனொளியில் அது மகிமை இழக்கிறது. உள்ளே பூசை தொடக்கமாகி விட்டது. வருகை சங்கீதம் ஒலிக்கிறது.

     இருதயராஜின் உள்ளமெல்லாம் பாவன ரசம் போல அந்த ஒலி பாய்கிறது.

     அவருக்குச் சங்கீதம் இசைக்கத் தெரியாது. ஆனால் அதில் முழுகிக் கரைந்து விடுவார்.

     உயர்ந்த பீடத்தில், மாதா முடியில் கிரீடத்துடனும் கையில் தெய்வக் குழந்தையுடனும் காட்சி தருகிறாள். ரோசாப் பூக்கள் மலர்ந்தாற் போன்ற வதனங்களுடன் தெய்வக் குழந்தை. நீலக் கடலிலிருந்து ராஜாளிச் சங்கத்தில் உயர்ந்து நிற்கும் பீடம். இரு பெரிய மீன்கள் வளைந்து கவிந்து சுரூபத்தை அணி செய்கின்றன; மேலே விசிறி வடிவங்கள் போன்று ஆணி முத்தைத் தாங்கும் சிப்பிகள். பின்னணியின் அழகிய இவ் வண்ணக் கோலங்களில் மின் விளக்குகள் ஒளிருகின்றன.

     இவ்வாறு பின்னணியை வண்ணந்தீட்டிச் சிறப்பு செய்து சில ஆண்டுகள் ஆகின்றன.

     புருஸ் மிக்கேல் பயல்... இந்தக் கரை தான் பயலுக்கு. இப்போது நாகர்கோயிலில் ஸ்டுடியோ வைத்திருக்கிறானாம். அவன் தான் இந்த வண்ண ஓவியங்களைத் தீட்டுபவன்; சுரூபத்தை, அழகுறச் செய்பவனும் அவன் தான். கோயிலில் நவநாளுக்கு முன்பாகச் சுரூபத்தைத் தேங்காய்ப்பாலினால் அபிடேகஞ் செய்து, துடைப்பார்கள். அந்த அபிடேகப்பாலை அருந்தி, பயல் இந்தத் தெய்வப் பணியைச் செய்வான். முடியு மட்டும் கோயிலிலேயே கிடப்பான்.

     ஆயிரமாயிரம் சங்கங்கள் குவிந்து ஒரே ஒரு ராஜாளிச் சங்கை ஏந்தியிருக்குமாம். அற்புதமாம் மரியன்னை, அவ்வாறு ராஜாளிச் சங்கம் போல் தெய்வப் பாலகனை ஏந்தி நிற்கிறாள். அவருக்கு உடல் சிலிர்க்கிறது.

     பலிபீடத்தில், கறுப்பு அங்கி தரித்த பங்குக்குரு கைகளை ஆட்டி வித்தாரமாக, நாகரிகமான மொழியில் பேசுகிறார். அந்த மொழியின் ஒலி மட்டுமே அவர் செவிகளில் விழுகிறது. சொற்களின் உட்பொருள் புறப்பொருள் ஏதும் அவருக்குத் தேவையில்லை.

     முன் வரிசையில் சட்டையும் கோட்டுமாக மேட்டுத் தெருக்காரரெல்லாம் நிற்கின்றனர்... ஆர்கன் மேடையில் வாத்தியம் வாசிக்கிறவன் மோசே... தபாலாபீசுக்காரரின் தம்பி... வாத்தியார் தானியேல் பக்கம் பூஷணம் நாடாரா? அவன் பெண்சாதியா அது, அங்கே புட்டாத் தலைப்பு முக்காடு போட்டுக் கொண்டு வருகிறாள்? அடேயப்பா! எத்தனை பவுன் தங்கம் போட்டிருக்கிறாள்! என்ன தடி! திருச்செந்தூர் தேர் போலல்லவோ அசைந்து வந்தாள்?... கத்தரினாளுக்கும் முதலில் இரண்டு வரிச் சங்கிலி இருந்தது. கையில் ஒரு பவுன் பட்டை வளையலும், கம்மலும் கூட இருந்தன. அதையெல்லாம் வாங்கி விற்றுச் சொந்த மரம் வாங்கினான். அதைக் கொண்டு அவளைத் தங்கத்தாலேயே ஜோடித்து விடுவதாகச் சொன்னான். ஆனால் அவனுடைய கடல் பயணத்தின் கால கட்டங்களில் எத்தனை முட்டல்கள், மோதல்கள்! மரம் முறிந்து பாரில் பட்டு அவன் உயிர் தப்பியதே பெரிதாகப் போயிற்று ஒரு முறை. வலைக்கு வாங்கிய வட்டக்கடன் தீரவேயில்லை. எளிதாகக் ‘கூப்பனி’ கிடைக்கவில்லை. கையில் இரண்டு ரூபாய் கிடைத்தாலும் குடிக்க வேண்டும். பத்து ரூபாய் கிடைத்தாலும் கடனடைக்கத் தோதில்லை... பிறகு கூலிமடிதான்...

     சபைச் செபம் முடிந்து வாசகங்களெல்லாம் சொல்லியாயிற்று போலும்?

     அல்லேலூயா சங்கீதம் பாடுகின்றனர்.

     இஸ்பிரிசாந்துவை வாழ்த்தும் அவ்வொலி அவனுள் கடல் அலைகளின் நீர்முத்துக்களைச் சிதறினாற் போன்று சிலிர்ப்பை உண்டாக்குகின்றன.

     மாதாவே! இனியும் அவன் எந்நாள் அந்தக் கடலின் மீது பூமரத்தில் ஏறி உந்திச் செல்லப் போகிறான்?

     உயர்ந்தும், தாழ்ந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும்... நெஞ்சம் உயருகிறது; தாழ்கிறது.

     பிரசங்கம்...

     இந்தச் சாமிக்கு, முன்பிருந்த சாமி போல் கணீர்க் குரலில்லை. ஆனாலும் தெளிவாகப் பேசுகிறார். முந்தைய சாமியை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. இப்படிச் சில பேர் தான் குருப்பட்டத்துப் பதவிக்கே இழுக்காக நடக்கின்றனர். ஆனாலும் பால்சாமி போல் யாரேனும் சாமி இருப்பார்களா? எல்லாருஞ்சாமி, அவருஞ்சாமி என்று சொல்லிவிட ஏலுமா?

     ஒவ்வொரு குடிசைக்கும் வந்து ஜபம் சொல்லுவார். போதனை சொல்லுவார், “ஏன் நீங்க குடிக்கிறீங்க? அது கெடுதல். கையில் இருக்கும் காசை எல்லாம் குடிச்சிட்டு நீங்க தானே கஷ்டப்படுறீங்க” என்பார். “ஏம்புள்ள, புருசன்கிட்ட பிரியமா இருக்க வேண்டாமா? கடல்லேந்து வாரப்ப, வெந்நீர் வச்சு உடல் குளிக்க ஊத்துறதில்ல? கருப்பட்டித் தண்ணி போட்டுக் குடுக்கறதில்லை? மச்சான் கூப்பனியத் தேடிட்டுப் போகாம பிரியமா இருக்கிறதில்ல?...” என்று பெண்களை எல்லாம் கண்டு போதனை செய்வார். குழந்தைகளைக் கூட்டி வைத்துச் சுத்தமாக இருக்கச் செய்வார். கையில் கஞ்சிக்குக் காசு இல்லாத நாட்களில், அந்தச் சாமி குடிசையில் வந்து பார்த்துவிட்டு அரிசி வாங்கக் காசு கொடுத்திருக்கிறார். அவன் குடித்துவிட்டு அவரிடம் சென்று தாறுமாறாகப் பேசியிருக்கிறான். அவர் இந்தப் பங்கைவிட்டு மாறிப் போனதும் எளியவர்களுக்கெல்லாம் யாரோ மிகவும் வேண்டியவர் அகன்று போனாற் போலிருந்தது.

     மேட்டுத் தெருவில் ஒரு நாஸ்திகமான பயல் வந்து இளம்பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சங்கம் சேர்த்தான். பிச்சை முத்து மாமனின் பயல், கொலைப்பட்டுச் செத்தானே, ஆல்பர்ட், அவனும் இந்த எட்வின், எல்லாருமாக கிறிஸ்தவத்துக்கு விரோதமான கருத்துகளை, நாஸ்திகத்தைப் பேசினார்கள். இந்தப் பயல்கல் தருக்கித்திரிய, சாமியை மேற்றிராசனம் இந்தக் கரையைவிட்டு மாற்றிப் போட்டது...

     நற்கருணைப் பாகத்துக்கு வந்துவிட்டார் சாமி. காணிக்கைத் தட்டு வருகிறது. தன் சட்டைப் பையிலிருந்து அவர் மிகுந்த விசுவாசத்துடன் எட்டணா நாணயம் எடுத்துப் போடுகிறார். பிறகு அவர் கிராதியின் அருகே சென்று நற்கருணை பெற்றுக் கொள்கிறார்.

     “நானே பரலோகத்திலிருந்து இறங்கிய ஜீவிய அப்பம்... இந்த அப்பத்தில் யாதொருவன் புசிப்பானேயாகில் என்றென்றைக்கும் பிழைப்பான்...”

     இந்த வாசகங்கள் அப்போது அவருள்ளத்தில் மின்னுகின்றன; செவிகளில் கேட்கின்றன.

     முழந்தாளிலிருந்து எழுந்த அவர் நிற்கிறார். வலையிற்பட்ட மீன்கள் ஒழுகித் தப்பிவிட்டாற் போன்ற உணர்வு கவ்வுகிறது. மாதாவே! கடல்மேல் செல்லும் பிள்ளைகள்... சூசைராஜ், அகுஸ்தின்... மரியான்... அவனும் கூட, கருணை பெறாமலே கோயிலை விட்டுச் செல்கின்றனர்.

     அவர்களுக்கு தேவ குமாரனின் திருச்சரீர ஆசீர் வேண்டாமா? அவர் திகைத்து நிற்கையில், சாமி அறிக்கை வாசிப்பது கேட்கிறது.

     “நீங்கள் பலர் கோயில் நெறிப்புக் கொடுக்கக் கூடாதென்று சர்ச்சுக்குத் துரோகம் நினைப்பதாகத் தெரிகிறது. வலைகள் முன்னேற்றம் கண்டு தொழிலில் மேன்மை கண்டும் கோயில் வரி ஒன்றுக்கு நாலாகக் குறைந்து விடப் பலர் ஒளிக்கிறார்கள். துவிக் குத்தகை நிறுத்த வேண்டும் என்று சில அவிசுவாசிகள் துரோக எண்ணம் கொண்டிருக்கின்றனர். இது நீடித்தால் மேலே அபராதம் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். ஆகவே இது எச்சரிக்கையாக இருக்கட்டும்.”

     இருதயம் விழிகள் நிலைக்கப் பீடத்தை பார்க்கிறார்.