உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 விஜியும் தந்தையும் சாப்பிட உட்கார்ந்திருக்கின்றனர். சுமதிக்குக் கல்லூரியில் பரீட்சைக்கான படிப்புக்காக விடுமுறை. அவள் ஒரு தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிப் போயிருக்கிறாள். வேலம்மா, “இன்னும் கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?” என்று கேட்டு பரிமாறுகிறாள். “நீங்க வாணா ராத்திரி மாரிசாமி வந்ததும் கேளுங்க. பையனக் கட்டுப் போட்டுட்டு வந்திருப்பான். இந்தப் பிரச்னையெல்லாம் நீங்க ஏன் எடுத்திட்டுப் போராடக் கூடாது?” “யாருகிட்டப் போராடுறது? இந்தப் பக்கம், தொழில்களில் இருபது ஆயிரத்துக்கு மேல் குழந்தைகள் உழைக்கிறாங்க. அதற்குக் காரணம் முக்கியமான அவங்க பெற்றோர். ஊருக்குள்ள எல்லா விட்டிலும் தான் பெண்கள், குழந்தைகள் மேல்வருவாய்க்கு வேலை செய்யிறாங்க. பள்ளிக்கூடம் போய்ப் படிக்கிறாங்க. வசதியாக இருக்காங்க. ஆனால், அடிநிலையில் இருக்கும் மக்களுக்குத் தாழ்வு உணர்ச்சியும் அடிமை மனப்பான்மையும் அடியோடு நீங்காத வரையிலும் எதுவும் செய்ய முடியாதம்மா...” “அப்பா நீங்க என்ன தான் தொழிற்சங்கம் நடத்திட்டிருக்கிறீங்கப்பா?” அவர் சில கணங்கள் எதுவும் பேசவில்லை. “சங்க ஆபீசு வச்சிருக்கிறீங்க, உங்களுக்குன்னு வருவாய்க்குக் குறிப்பிட்ட தொழிலில்லை. இவ்வளவுக்கு ஏதானும் பயன் வேண்டாமா?” “இல்லேன்னு சொல்ல முடியாது. இங்கே நூற்றுக்கணக்கான கலர் பிரிண்டிங் பிரஸ் இருக்கு; பட்டாசு வெடித் தொழிற்சாலை இருக்கு. இந்த மாட்சஸ் தவிர அவ்வப்போது பிரச்னை வரும். தொழிலாளர் வருவாங்க. கோரிக்கைகளை வைப்போம். ஆனால் முதலாளிகள் சுமூகமாகவே தீர்த்து விடுகிறார்கள். சொல்லப்போனால் ஒரு பெயர் தானம்மா தொழிற்சங்கம் என்பது, வெறும் கூலி உயர்வு அல்லது வேறு சலுகை என்பதற்கு மேல் வேறு எந்த உணர்வையும் தொழிலாளர் மனசில் ஊட்டி விடவில்லை. தொழிலாளர் சந்தடி என்றால், தொழிலக உரிமையாளருக்கு வங்கிச் சலுகைகள் தகராறாகும். உற்பத்தி சிக்கலாகும். எனவே இங்கே எப்போதோ ஓரிரு சமயங்களில் சலசலப்பு தவிர ஒன்றும் நேரிடவில்லை. அதற்கு இடமுமில்லை.” “பின்ன, எதற்காக நீங்க இப்படி ஒரு பயனுமில்லாத சங்கத்தைக் கட்டி இழுத்திட்டிருக்கீங்க?” “பயனில்லைன்னு சொல்றதுக்கில்ல... கூலி உயர்வு அவ்வப்போது கிடைக்கிறது. இத்தனை வேலைக்கு இத்தனை ஊதியம் என்ற நிர்ணயமானால் கூட, ஒரு ஆண்டின் வேலையைக் கணித்து அதற்கு ஒரு ‘போனஸ்’ என்றெல்லாம் இப்போது கிடைக்கின்றன. அது தவிர, தொழிலாளருக்காக ஒரு சங்கம் இருக்கிறது என்பதே பலமல்லவா? தெருவிலிறங்கிப் போராடிக் கூச்சல் போட்டால்தான் என்றில்லாமல் சங்கம் பல முனைகளிலும் செயல்படுகிறது. இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. சங்கம் என்பது நடப்பதற்கே, மூந்நூறு பேர் கூட உறுப்பினரில்லாத அமைப்பில் எல்லாமே கடினம். அதற்கே, சிறு உரிமையாளர், அபிமானமுள்ள அதிபர்கள் என்று ஆதரவு தேட வேண்டியிருக்கிறது. இதெல்லாம் கொள்கை அடிப்படையில் பலவீனங்கள். ஆனால்...” என்று நிறுத்துகிறார். அவள் பேசாமல் இருக்கிறாள். “ஆனால் வேறு வழியில்லை அதற்காக இதை விட்டு விட்டு நானும் ஒரு தொழிலக உரிமையாளனாய்ப் பணக்காரனாக விரும்பவுமில்லை. நான் இந்த முழுப் பொறுப்பு ஏற்பதற்கு முன், மருதவாணர்தான் இங்கே இதை அமைத்துப் பாடுபட்டவர். அறுபத்தேழில் பெரிய போராட்டம் அச்சகத் தொழிலாளருடைய பல சலுகைகளுக்காக முன்னின்று நடத்தியதும் அவர்தான். ஆனால் பிறகு அவரே ஃபான்ஸி வெடிகள் செய்து கொடுக்க கான்ட்ராக்ட் எடுத்துத் தொழிலில் இறங்கி விட்டார். ஃபயர்வொர்க்ஸ் பட்டாசு வெடிகள் செய்யும் தொழில்களுக்குத் தேவையான பாதுகாப்புக்கள் எதுவுமில்லாமல் இவர் உற்பத்தி செய்து, பெரிய தொழிலகங்களுக்குக் கொடுக்கிறார் என்றான பிறகு, எந்தச் சலுகைகளுக்காக, பாதுகாப்புக்காக நாம் போராடுகிறோம் என்ற அடிப்படையே போய்விடுகிறது. அவரே சங்கத்தை விட்டு விலகி விட்டார். இப்போது பெரிய தொழிலகமே வைத்திருக்கிறார். சங்கத்துக்கு ஆதரவாளர்...” “ஆதரவாளராக இருப்பவர், என்ன தவறு செய்தாலும் கண்டு கொள்ள மாட்டீர்கள்!...” விஜி இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டு இலையை விட்டு எழுந்திருக்கிறாள். “பேசிப் பேசி, பேச்சுத்தா. சாப்பிடவேயில்ல, நீ!” என்று வேலம்மா கடிந்துக் கொள்கிறாள். அப்போது, “விஜி வந்திருக்காமே?... அட... விஜி!...” என்ற குரலுடன் லோசனி உள்ளே வருகிறாள். ஐந்தாறு வீடுகள் தள்ளி லோசனி அக்காளின் வீடு. அவள் சிறுமியாக இருக்கையில் லோசனி அக்கா என்று போய் ஒட்டிக் கொள்வாள். அவள் அப்பா மரமறுக்கும் தொழில் செய்தவர். லோசனிக்குக் கல்யாணம் நடந்த போது, அவள் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்ததும், தானும் அவளுடன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அழுததும் நினைவுக்கு வருகிறது. கோதையூரில் தான் அவளுக்குக் கணவன் வீடு இருந்தது. கல்யாணமான புதிதில், அம்மா, ஐயாம்மா இருவரும் ஒருநாள் கோதையூரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அவள் வீட்டுக்குப் போனதும், குறுகிய வாயில் படியில் அம்மா தலையை இடித்துக் கொண்டதும் விஜிக்கு நினைவிருக்கிறது. புருசன் சீக்கு வந்து இறந்து போனான். மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இங்கும் தந்தை இல்லை. அண்ணன், அண்ணி தனியாகவும் இவள் அம்மா எல்லோரும் தனியாகவும் இருக்கின்றனராம். “விஜி அப்படியே இருக்கே? கலியாணம் கட்டிய பிறகு ஒரு விசேசமும் இல்ல?” லோசனி அட்டைக்கட்டு, நீலத்தாள், தூர்சில்லி, மாவுப்பசை ஆகிய சாதனங்களுடன் வந்திருக்கிறாள். கூடத்தின் ஓர் புறம் சிறு பலகையைப் போட்டு அதன் மீது பசை மொத்தையை பிளாஸ்டிக் தாளுடன் வைத்துக் கொண்டு உட்காருகிறாள். விஜி கைகழுவிக் கொண்டு வருகிறாள். அவள் மின்னல் வேகத்தில் தாளை உருவிப் பசை தடவி அட்டைக்கட்டுப் பட்டையை உருவி வளைத்து ‘தூர் சில்லி’ எனப்படும் அடி அட்டையை வைத்து ஒட்டி அடிப்பெட்டியைச் செய்து போடுகிறாள். “உங்கையில மந்திரம் இருக்கு லோசனியக்கா... எத்தினி குரோசு ஒட்டுவ?” “என்னமோ ஒட்டிட்டே கெடப்பே. வேலம்மாளும் நானுந்தான் இங்க பொழுதுக்கும் உக்காந்து கெடப்பம்! பேசிட்டே ஒட்டுவோம். பேசாமயும் ஒட்டுவோம். இந்த வெலவாசில என்ன முடியிது?... அது கெடக்குது போ! நீ பட்டணத்திலேந்து இங்க வந்த பெறகு தெனம் உம் பேச்சுத்தா. மாப்பிள வீட்டுக்காரங்க எப்பிடி இருக்கா! மாப்பிள இப்ப வந்து உன்னக் கொண்டு விட்டாரா?... எங்களுக்கெல்லாம் மாப்பிளயப் பாக்கணுமின்று ஆசதா. முன்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில வந்திருக்கிறாங்க. நல்ல செவப்பா, நெடுநெடுன்னு இருப்பாரு. சின்னவருதா மாப்பிளன்னு தெரியும். நீங்க சேந்து வந்து பாத்தா அது ஒரு... பவுரில்லியா?” லோசனிக்கு வட்டமுகம். பெரிய குங்குமப் பொட்டாக வைத்துக் கொள்வாள். அது இப்போது இல்லை. “புருசன் வீட்டிலேந்து இங்க வந்து எத்தனை நாளாகுது லோசனி நீ?” “நா உன்னக் கேட்டா, நீ என்னக் கேக்குற, சித்திர வந்தா ஏழு வருசமாவுது. சத்திக்குப் பதிமூணு வயிசாவுது, ஏழாவது படிக்குறானே?” “அடுத்தது பொண்ணா?” “ஆமா, நெடு நெடுன்னு வளந்திட்டா, பதினொரு வயசுக்கு. மேப்பட்டி அடிப்பெட்டி செஞ்சு, குச்சியடுக்கி சோறு தின்னத்தா முடியிது. சீட்டு நாட்டுக் கட்டி ரெண்டேனம் எதும் வாங்கிக்கூட வக்க முடியில. வாசுகிக்குக் கலியாணம் கட்டிக் குடுக்கணும்னு நினைச்சா ஒண்ணும் தோணல.” “பொண்ணு பொறக்கப்பவே கலியாணம் கலியாணம்னு ஏன் சொல்றிய?” “பின்னே என்னம்மா செய்ய? சமஞ்சிட்டா கலியாணம் கட்டுறவரயிலும் நெருப்பா வச்சிருக்க வாணாமா? ஆம்பிளப் பய எங்கியோ போவா, வருவா, அட, படிப்பு வரலன்னாலும் அவந்தலையெழுத்து தாள் தட்டவோ*, தூள் அடய்க்கவோ# போறா; பட்டினி கெடக்கமாட்டா, பொண்ணுங்க அப்பிடியா விஜி? அதது நேரத்துல காலத்துல உருட்டிப் பொரட்டி சீதனம்னு என்னமேங் குடுத்துக் கட்டிடவாணாமா?” (* தாள் தட்டல் - அச்சகத்தில் வேலை # தூள் அடைத்தல் - பட்டாசுத் தொழிலகத்தில் மருந்தடைக்கும் வேலை) “படிக்க வச்சிடு. வேலை செஞ்சுக்கறா. பணம் குடுத்துக் கலியாணம் பண்ணுவது நிக்கணும் லோசனி அக்கா!” “படிக்கவச்சா மட்டும் சீதனமில்லாம ஆகுமா? இப்ப என் தங்கச்சி நிக்கிறாளே? தைக்கு இருவத்தேழாவுது!” “ஆரு லட்சுமியா?” “லட்சுமியக் கட்டியாச்சு. ஆறுமுகநேரியில் மாப்பிளக்கி வேலை. ஆண்டாளத் தெரியாது?... அவதா படிச்சா. பி.ஏ. படிச்சா. மேல டீச்சர் டிரெயினிங்கும் தூத்துக்குடில போயி எடுத்திட்டு வந்திருக்கிறா. மூணு வருசமா வேலையில்லை. அங்க இங்க டெம்ப்ரியா ரெண்டு, மூணு மாசம்னுதா வேலை, கண்ட எடத்துக்கும் அனுப்ப முடியல. அஞ்சாயிரம் குடு, நாலாயிரம் குடுன்னு கேக்கிறாவ. எங்க போக? இங்க, உங்கையாட்ட சொல்லி, இப்பதா ஸ்கூலில் வேலை கெடச்சி இந்த ஜனவரியிலேந்து போறா. அதும்கூடப் பாரு, தேதி போடாம முன் கூட்டியே ராஜினாமாக் கடிதாச வாங்கி வச்சிருக்கா. இப்பிடியேதான் பண்ணுறா. பொசுக்குனு சம்பளத்தக் குடுத்து வேல இல்லேன்னீடுவா...” அவ பேசினாலும் கைப் பரபரப்பில் அடிப் பெட்டிகள் குவிந்து விடுகின்றன. விஜி தானும் அட்டைக் கட்டை உருவி எடுத்து வளைத்து ஒட்டுகிறாள். அவள் ஒரு பெட்டி உருவாக்கு முன் லோசனி மூன்று முடித்து விடுகிறாள். “உன் வேகம் மந்திரம் மாயம் போல இருக்கு... எனக்கு எவ்வளவு நேரமாகுது!” “நீ எதுக்கு விஜி இதெல்லாம் செய்யணும்? எங்களுக்குத்தான் தீராது...” “அப்படியில்ல லோசனி அக்கா, எங்க வீட்டில் எனக்குப் பொழுதே போகாம கஷ்டமாயிருக்கு. மட்றாசில எங்க வீட்டில வீட்டு வேலை செய்ய ஆள் கிடையாது. மேலும் நான் காலேஜிக்குப் போகாத போனாக்கூட. குழந்தைகளை நான் தான் பார்த்துக்கிடுவேன். இங்க்கே எனக்குப் பொருந்தவே இல்ல. மாமியா, காலம குளிச்சி முழுவிப் பூசைன்னு உக்காந்திடுவாங்க. அவங்க காலையில காப்பி மட்டும் தான் ரெண்டு நேரம் சாப்பிடுவாங்க. தவசிப் பிள்ளக்கிச் சாமானங் குடுக்கிறதும் வேலக்காரிய வேல வாங்குறதுமா அவங்க ஏதோ செய்வாங்க. பொண்ணுக்கு எப்பவும் ஏதானும் சினிமாப் புத்தகம், டிரான்சிஸ்டர், இல்லாட்டி முகத்தக் கண்ணாடில பாக்குறதும் பவுடர் பூசுறதும் முடி சீவுறதும் சாப்பிடறதும் அதும் இதும் பேசிப் பொழுது போக்குறதுமாயிருக்கு.” “பெரியவரு தனியாயிருக்கா இல்ல?” “அவங்கதா என் கலியாணத்துக்கு முன்னமே தனி வீடு கட்டிட்டுப் போயிட்டாங்களே? பெரியபட்டி போற பாதையில் உள்ளாற தெரியும். அவளுக்கும் அத்தைக்குமே ஒத்துக்கலியாம். ரொம்ப பாஷன். ரெண்டு பிள்ளங்க கொடைக்கானல்ல படிக்கிதுங்க. ஒரு நாளக்கி மூணு தரம் சாதாரணமாய் புடவை மாத்துவாளாம். வருசத்தில் ரெண்டு தரம் ப்யூட்டி, ஹெல்த் சென்டர்னு பட்டணம் போயிட்டு வருவாளாம். ஒரு அலமாரி முழுசும் லோஷன் அது இதுன்னு வச்சிருக்கா. எனக்கு ஒண்ணுமே ஒத்து வராம கூண்டுல அடச்சாப்பல இருக்கு...” லோசனி சிரிக்கிறாள். “பின்னென்ன வேணும்? பொம்பிளயாப் பிறந்தா சிங்காரிக்கிறதும் சாப்பிடறதும் சீல கட்டுறதுந்தா. பின்ன மாப்பிளயோடு சந்தோசமா இருக்கிறதுந்தா, இதுக்குத்தான் பொட்டி ஒட்டுறதும், குச்சியடுக்கிறதுமா இங்க அத்தினி பொம்பிளயளும், பாடுபடுறதுக. சீட்டுப் போடுறதும் சீலை எடுக்கிறதும், பவுன் வாங்குறதும் அதுக்குத்தா, அது கெடக்கட்டும். மாப்ளயும் நீயும் எப்படி இருக்கிய? எங்கெல்லாம் போனீங்க. அத்தச் சொல்லு விஜி. ‘அனிமூனெ’ல்லாம் போய் வந்திருப்பிய. சினிமால வராப்பில எங்க போனிய? காச்மீரம் போனிங்களா, இல்லே, எங்கே போனிய? நம்ம குத்தாலத்தக் காட்டிலும் அழவான எடமாமே அது?... நான் வேலம்மாட்டச் சொல்லுவேன். அதுக்கு இதெல்லாம் கேக்கத் தெரியாது!” விஜிக்கு ஊசி குத்திவிட்டாற் போன்று மனசில் சுருக்கென்று வேதனை தைக்கிறது. பெங்களூருக்குச் சென்றார்கள். அவன் முழுக்குடியன் என்று புரிந்து கொண்டாள். அந்தரங்கத்தில் அவனுக்கும் மென்மைக்கும் மரியாதைக்கும் வெகு தொலைவு என்று புரிந்து கொண்டதும் அங்கே தான். திருமணம் என்ற நிகழ்ச்சி அவளை ஒரு முரட்டு ஆணிடம் தன்னை அடிமைப்படுத்தி விட்டதென்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியது அங்கே தான். புறத் தோற்றத்துக்கும் பேச்சுக்களுக்கும், உள்ளப் பாங்குக்கும், சம்பந்தமே இல்லாமலிருக்கலாம் என்று உணரத் தொடங்கியதும் அப்போதுதான். “என்ன விஜி பேசாமலிருக்கிற? சினிமாவுக்குப் போயிருப்பிய; என்ன சினிமால்லாம் பார்த்திய! அதன்னாலும் சொல்லு” என்று கிண்டுகிறாள். “அப்பபாத்த சினிமா ஒண்ணும் நினைப்பில்ல லோசனி அக்கா! இப்பல்லாம் அவங்களுக்கு வேலயே சரியாப் போவுது. அதுல வெளியூர் போயிடுவாங்க. எப்பன்னாலும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போவோம்.” வேலம்மா தான் சாப்பிட்டுவிட்டுச் சாமான்களைக் கழுவப் போகிறாள். அப்பா வெளியே கிளம்பத் தயாராகச் சட்டையை மாட்டிக் கொண்டு வெளிப்படுகிறார். “வா, வா, இப்பத்தான் வரியா?” “ஆமாம் மாமா. லாரி லோடாவுது. ராத்திரிக்குக் கிளம்புவேன். அதுக்குள்ள பாத்திட்டுப் போகலான்னு வந்தேன்...” என்ற குரல் கேட்டு விஜி எட்டிப் பார்க்கிறாள். “அட... செந்தி... வேலம்மா? செந்தில் வந்திருக்கிறாம் பாரு!” செந்தில் பரவசமடைந்தாற் போன்று நிற்கிறான். “பாப்பா... ஐயோ, இனிமே... உங்கள அப்படிச் சொல்லக் கூடாது... எப்ப வந்தீங்க? மாப்பிள்ளை வந்திருக்கிறாரா? என்ன எதிர்பாராத சந்தோஷம் தெரியுமா? இங்கிட்டு வந்து... உங்க வீட்டுக்கு நா வந்து பாக்க முடியுமா...?” “ஏன் முடியாது செந்தில்?” “அதெப்படிங்க?... நீங்க பெரிய எடம். உங்க மனுசா எப்படின்னு தெரியாம வரலாமா? முதலாளிங்கல்லாம் நல்லவங்கன்னு பேருதா, ஆனா... எம்போல சாமானியமெல்லாம் எசமானியம்மாவப் பாக்கன்னு வரலாமா?...” “சரிதாண்டா, போயி கால்கை கழுவிச் சாப்பிடு. உங்கம்மா சோறு வச்சிருக்கிறாளோ என்னவோ? ஏண்டா, நேரத்தில வரதில்ல?” என்று அப்பா கடிந்து கொள்கிறார். “சோறெல்லாம் இருக்கு...” என்று வேலம்மா குரல் கொடுக்கிறாள். மடக்கிவிட்ட புள்ளிச் சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் தலைக்கட்டுமாக அவன் உள்ளே அடி வைத்ததும் ஏதோ நினைவு வந்துவிட்டாற் போன்று. “இத, ஒரு நிமிஷம் வெளியே போயிட்டு வந்திடறேன் மாமா!” என்று திரும்பிச் செல்கிறான். “இவன் எப்பவும் இப்பிடித்தே. வந்த பெறகுதா எல்லாம் நினைப்பு வரும்!” என்று வேலம்மா முணமுணக்கிறாள். அப்பா மறுபடியும் வெளியில் செல்லலாம் என்று திரும்புகையில் வீட்டு வாயிலில் ஓசைப்படாமல் சிறிய கறுப்புக்கார் வந்து நிற்கிறது. ஓட்டி வந்த ரங்கேஷ் கதவைத் திறந்து மூடிவிட்டு அந்தப் படியேறி வருகிறான். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|