உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
11 மேல் நோக்கி வாரப்பட்ட கிராப்பு; தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. வெள்ளைச் சட்டையும் பழுப்பு நிறக் கால் சராயும் அணிந்து மிகச் சாதாரணமாகக் காட்சியளிக்கும் ரங்கேஷ் படியேறி வருமுன் வாயிற்புறத்துக் கதவைக் காட்டி, “வாங்க... வாங்க...” என்று பரபரப்பாகச் சண்முகம் வரவேற்கிறார். இவன் வருவானென்று விஜி சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. லோசனி எழுந்து நிற்கிறாள். வேலம்மா ஒதுங்கிக் கை குவிக்கிறாள். ரங்கேஷ் கூடத்தில் கால் வைத்துத்தான் அறைக்குள் செல்கிறான். தீப்பெட்டி அட்டையும், கூடையும் வாளியும், தட்டு முட்டுமாக முதலாளியான ஒருவரை வரவேற்கும்படியாகவா இருக்கிறது. பழைய நாளைய மர அலமாரி; ஒரு கட்டில். மேசையில் சில புத்தகங்கள்; ஒரு நாற்காலி... சுவரில் பெரிது செய்யப்பட்ட அம்மாவின் படம் ஒன்று இருக்கிறது. உயரே கம்பிக் கொடியில் அவருடைய வேட்டி துண்டு சுத்தமாக உலர்த்தப்பட்டிருக்கிறது. மண் கூசாவில் மூலையில் தண்ணீர். அந்த அறையை அவரே சுத்தம் செய்து கொள்வார். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாரிசாமி வந்து சுத்தம் செய்வான். வேலம்மா கூடத்தைத் தாண்டி வந்ததாக அவளுக்கு நினைவில்லை. விஜி தனது சிந்தை ஏன் எங்கோ செல்கிறது என்ற மாதிரியில் சட்டென்று எதிரே அறைக்குள் ரங்கேஷ் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். படுக்கையில்லாத பலகைக் கட்டிலில் அவனும் அப்பாவும் சேர்ந்து பேசுகிறார்கள். வாயிற்படியில் நிற்கும் விஜியை மெல்ல லோசனி கூப்பிடுகிறாள். “வேலம்மா கூப்பிடுது. இவுருதா பெரிய மவனா?” “ஆமா... என்ன வேலம்மா?” “காபி, ... எதுனாலும் குடுக்க வேணாமா? போயி கடயில...” “வாணாம்... இவரு காபி குடிக்க மாட்டாரு. இவருக்குச் சாப்பாடெல்லாம் என்னமோ அளவுன்னு சொல்லுவாங்க...” “கிரஷ் கலர் எதுனாலும் வாங்கியாரேன்...” என்று சொல்லிவிட்டு லோசனி ஓடுகிறாள். “விஜி...?” என்று அப்பா அழைக்கிறார். அவள் மீண்டும் அறை வாயிற்படியில் சென்று நிற்கிறாள். “உட்காரம்மா...” என்று நாற்காலியைக் காட்டுகிறான் ரங்கேஷ். அவள் உட்கார்ந்து கொள்கிறாள், சிறிது நாணத்துடன். “என்னம்மா... காலம பாக்டரிக்கு வந்து போனேன்னு சொன்னாங்க. நீ இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் எடுத்துக்கறேன்னதும் சந்தோசமாயிருந்தது... விஜிம்மா உன்னை இங்க வந்துதா கேக்கணும். அங்க வீட்டில... ‘யூ ஃபீல் ஃபிஷ் அவுட் அஃப் வாட்டர்’ இல்ல?” அவள் முகத்தில் லேசாகச் சிவப்பேறுகிறது. “எனக்கு நல்லாப் புரியிது...” என்று புன்னகை செய்கிறான். “யார் என்ன நினைச்சாலும் நம்ம குடும்பங்கள் மீண்டும் இணைஞ்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்ப பாருங்க, எங்க மீனாதா இருக்கிறா. அவளும் கிராஜுவேட்தான். ஆனால் பாருங்க, ஒரு சோஷியல் இன்ட்ரஸ்ட் கிடையாது. அவ தோட்டம், பூச்செடி, குரோட்டன்ஸ், பிறகு இருக்கவே இருக்குது; ஃபாஷன், ப்யூட்டி கேர், இன்டீரியர் டெகரேஷன் அது இதுன்னு. நான் யாரையும் எதையும் கட்டுப்படுத்துறதில்ல. அவ இஷ்டம். நினைச்சா மதறாஸ் புறப்பட்டுப் போவா. அங்க அவ ஸிஸ்டர் இருக்கா. கடைசி குழந்தையை அங்க நாட்டிய மந்திர்ல விட்டிருக்கிறாள். அதனால ஒரு சாக்கும் கூட, அம்மா... அவங்க உலகம் தனி. அப்பா போன பிறகு அவங்களுக்கு ஒரு மென்டல் ஷாக் மாதிரியா ஆயிடிச்சி. பிறகு சாமி பூசைன்னு ஒரு மாதிரியா ஆயிட்டாங்க. குற்றாலப் பக்கம் ஒரு சித்தர் இருக்காரு. அவர் தான் குரு. திடீர்னு குரு பூசைம்பாங்க. அவங்கபாட்டுல ஏதோ ஏழைகளுக்கு அன்னதானம் அது இதுன்னு செலவு செய்வாங்க. அவங்க பூசையறையில் கும்பிடாம ஆரும் போகக்கூடாது. பெரியபட்டித் தாத்தா வந்தாக்கூட உள்ள வந்து கும்பிட்டுப் போகணும். இதெல்லாம் புதிசா இருக்கிறதால எப்படியோ இருக்கு இல்லியா...” அவன் சிரிக்கும் போது மனம் இலேசாகிறது. “புதிசாகவே இருக்கல. இப்ப அஞ்சாறு மாசமாயிட்டுது. ஆனா, நாள் முழுவதும் சோம்பலா இருந்துஎ நக்குப் பழக்கமில்ல. எங்கேயானும் வெளியே போகலான்னா தனியே எங்கும் போகக்கூடாதுன்னு சொல்றாங்க. பஸ் ஏறி இங்க வந்தாலோ, சின்னப்பட்டிக்குப் போனாலோ உங்க தம்பிக்குப் பிடிக்கல...” “நான் தான் சொன்னேனே? அவங்க... அம்மால்லாம் ஒரு பழையகால டிரடிஷன்ல வந்தவங்க. சுப்பையாவுக்கு அதெல்லாம் கிடையாது. அவன் சும்மா அம்மாவைத் திருப்திபடுத்தணும்னு பக்கப்பாட்டுப் பாடுவான். அவனைத் தப்பாப் புரிஞ்சிக்கிடாதேம்மா. சொல்லப் போனால், அவனுக்கு இன்னும் மெச்சூரிட்டியே இல்லேம்பேன். முரட்டுத்தனமாப் பேசுவான், ஆனால் மனசில ஒண்ணும் கிடையாது...” என்ன சாதுரியமாகப் பேசுகிறார் என்று அவள் நினைத்துக் கொள்கிறாள். இதற்குள் வெளியே செந்தில் வந்துவிட்ட குரல் கேட்கிறது. அப்பா எழுந்து செல்கிறார். தணிந்த குரலில் ரங்கேஷ், “அவனைப் பொறுப்புள்ளவனாகச் செய்ய முடியும் உன்னால் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தக் கல்யாணத்தில் அதனால் தான் நான் ரொம்ப திருப்திப்பட்டேன். முரண்பாடுகளைப் பெரிசு பண்ணிடாதேம்மா!” என்று கேட்டுக் கொள்கிறான். அப்பா, பூப்போட்டதொர் ‘ஸில்வர்’ தட்டில் பால்கோவா, சேவு, கொடி திராட்சை ஆகிய வரிசைகள் விளங்க அவன் முன் கொண்டு வந்து நீட்டுகிறார். செந்தில் சமய சஞ்சீவியாக வந்து விட்டான் என்று புரிகிறது. திரும்பிப் பார்க்கிறான். செந்தில், “வணக்கம் முதலாளி!” என்று கைகுவிக்கிறான். ரங்கேஷ் சிரிக்கிறான். “மாமா, இந்த முதலாளி என்ற சொல்லைக் கேட்டால் சில சமயங்களில் எனக்குச் சிரிக்கத் தோன்றுகிறது. அந்தச் சொல்லுக்குரிய பிம்பத்தை அரக்கத்தனமாகக் கற்பித்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பிம்பத்தினால் கவரப்படாதவர்களே இல்லை.” ‘இவன் என்னமாகப் பேசுகிறான்’ என்று விஜி வியந்து போகிறாள். அவள் வியப்பு மேலும் ஏறும்படி, அந்தப் பால்கோவாவையும் சேவையும் அவன் உண்ணுகிறான். ரங்கி வெளியே எந்தப் பொருளும் சாப்பிடமாட்டான். சாதம், பருப்பு, கீரை, பழம்னு, அதது அளவா சாப்பிட்டு, ஃபிரிஜ்ஜில வச்ச மோருதான் குடிப்பான். காப்பி, டீ, புகையிலை சிகரெட், ஒரு பழக்கம் கிடையாது. மீனாவுக்கு இதெல்லாம் குறை. ‘கட்டுப்பெட்டி, ஒரு சீட்டாடக் கூடத் தெரியாதுன்னு கேலி பண்ணுவா’ என்று மாமியார் சொல்லிக் கேட்டுருக்கிறாள். அச்சுத் தொழில் சம்பந்தமாக ஜெர்மனிக்குச் சென்று அந்தக் காலத்திலேயே படித்துவிட்டு வந்திருக்கிறான். ஜெர்மானிய மொழியை நன்கு கற்றிருக்கிறான். அவன் வீட்டில் சிறு நூலகம் இருக்கிறது. அதில் யோகாசனம், தோட்டக்கலை, போன்ற பல நூல்களைக் கண்டிருக்கிறாள். பொழுது போகாத போது அங்கே சென்று அவள் சில நூல்களை எடுத்து வந்ததற்கு மூனா கேலியாகப் பேசினாள். சுருக்கென்று தைத்தது. ஒரு கிளாசில் எதையோ கரைத்துக் கொண்டு வந்து வேலம்மா செந்திலிடம் கொடுக்கிறாள். “காப்பியல்ல, ஆர்லிக்ஸ்...” என்று அவள் மெதுவாகக் கூறிவிட்டு அதைப் பணிவுடன் வைக்கிறாள். ரங்கேசன் எதுவும் பேசாமல் எடுத்து அருந்துகிறான். “ஆமாம் இன்னிக்குக் காலம யாரோ பையனைக் காயம்னு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போய் கட்டுப்போடச் சொன்னாயாம்மா?” என்று நினைவூட்டுகிறான். “ஆமாம் ராத்திரி நான் சின்னப்பட்டியில் தங்கியிருந்தேன். பஸ்ஸில் தினம் சண்டை வருமாம். ராத்திரி காலில் ரத்தம் வழிய வந்தான். எனக்கு இப்பக் கேக்கலான்னு தோணுது அண்ணா. அவ்வளவு காலைப் பொழுதில் பிள்ளைகளைக் கூட்டி வரணுமா? பாவம், அதுங்களுக்குத் தூங்கப் பொழுதில்லையே?” “சரியான பாயின்ட், இதைப் பத்தி நான் நிறைய யோசித்திருக்கிறேன். எனக்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோரை விட கன்ஸர்ன் அதிகமா உண்டு. அதனால் தான் எங்கோ மூலையில் உள்ள இடத்துக்கு பஸ் போயிக் கூட்டி வரணும்னு முதல்ல ரோடு போடப் பாடுபட்டோம். அதுக்குப் பஞ்சாயத்தில் எப்படி முட்டுக்கட்டை போட்டாங்க தெரியுமா? குழந்தைகளைச் சீக்கிரம் கூட்டி வந்து சீக்கிரம் திருப்பிக் கொண்டு விடணும்ங்கறது என் ஐடியா... ஆனால், அதில பாரு, பிராக்டிகள் டிஃபிகல்டீஸ் நிறைய இருக்கு. பேரன்ட்ஸ் வந்து குழந்தைகளிடம் இத்தினி கட்டை அடுக்கணும்னு ‘கம்பெல்’ பண்ணுறாங்க. இது உண்மை... இப்ப பாரு, ஃபயர் வொர்க்ஸில் பதிநான்கு வயசுக்கு மேலுள்ளவர்களதான் வேலை செய்யலாம்னு விதி இருக்கு. நான் எமர்ஜன்சி சமயத்தில் யூனிட்டையே மூடிடச் சொல்லிட்டேன். ஆனால் என்ன நடந்திச்சி? பெற்றோர் எல்லாரும் கூட்டம் கூட்டமா வந்து காலில் விழுந்தாங்க. “நாங்க எல்லாரும் பட்டினியாகச் சாகவா”ன்னு அழுதாங்க. பிறகு டாக்டர் சர்ட்டிபிகேட்ட வாங்கிட்டு வரணும்னு சொல்லி, வேற வழியில்லாம வேலைக்கு வச்சேன்...” அப்பா, குரலே எழுப்பாமல் அவன் மந்திர ஒலியில் கட்டுப்பட்டவர் போல் உட்கார்ந்திருக்கிறார். “நாம் இங்கே பசி பட்டினின்னு சொல்லுகிறோம். ஆனால் சில பிள்ளைகள் தானாக வேலை செய்து சம்பாதித்து ஸெல்ஃப் ரிலயன்டா இருக்க விரும்பறதை, வளமான நாடுகளில் கூடப் பார்க்கலாம். அமெரிக்காவில், மூன்றாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள், பேப்பர் கட்டிட்டு வந்து போட்டு, காசு சம்பாதிச்சு, பெற்றொருக்கு கிறிஸ்துமஸ் பிரசன்ட் வாங்கிக் கொடுக்கிறாங்க...” “வயிறு நிறைய உணவிருந்து ஏதானும் செய்தால் அந்தப் பிரச்னை வேறு. அங்கே கஞ்சா, மருந்தூசிக்குப் பணம் சம்பாதிக்கிறதாக் கூடத்தான் சொல்றா. நம்ம பிரச்னை, பசி, தண்ணீர் தாகம், இருக்க இடமில்லாமை, கல்வியில்லாமை எல்லாமாக இருக்கு...” என்று அப்பா இப்போது குரல் கொடுக்கிறார். “நிச்சயமா... இதுக்கெல்லாம் தீர்வு காணனும்ங்கறதா நம்ம நோக்கமும். இப்பகூட, காலம ஏழு மணிக்கு வேலை செய்யும் பிள்ளைகளுக்கு ஒரு சத்துணவு பாக்கெட் குடுக்க வாலண்டரி சில்ரன் ஆர்கனைசேஷன்களுடைய ஆதரவோடு ஒரு திட்டம் கொண்டு வரணும்னு இருக்கிறேன். ஆனா, நான் ஒருவன் முனைஞ்சாப் போதாது... இல்லையா, மாமா?” “ஆமாம். அடியிலேருந்து நாம் மாற்றியாக வேண்டியிருக்கு. எதைச் சொல்றது?” அப்பா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறார். விஜிக்கு மனம் இலேசாக இருக்கிறது. “அண்ணா, எனக்கு எதானும் உருப்படியா வேலை செய்யணும்னு எண்ணம். ஏதானும் உதவியாக இருக்க வேண்டும்னு நினைக்கிறேன்...” “வெரிகுட். உங்கப்பாவக் கேட்டுப் பாரம்மா. நாங்க ஒரு போதும் தொழிலாளிகளுக்கு விரோதியில்லை...” அவன் மீண்டும் முத்தாய்ப்பாக ஒரு புன்னகை செய்கிறான். “ஓகே... அப்ப, புறப்படலாமாம்மா? வரியா?...” விஜி நிமிர்ந்து பார்க்கிறாள்... “இல்லாட்டி, சாயங்காலமா காரனுப்புறேன். இல்ல, நீ சௌகரியத்தச் சொல்லும்மா!” “சாயங்காலமா வரேனே? நீங்க வண்டியனுப்பணும்னு கூட அவசியம் இல்ல...” “நோ நோ, வண்டி ஒரு ஆறு மணிக்கு அனுப்புறேன்... வரட்டுமா? வரட்டுமா மாமா? வணக்கம்மா!...” கைகுவிப்புடன் விடை பெற்றுக் கொண்டு அவன் படியிறங்கிச் செல்கிறான். வாசலில் இரு புறங்களிலும் பெண்கள் கார் செல்வதைப் பார்க்கின்றனர். கைவேலையை நிறுத்தி, முற்றங்களில் காயும் தீப்பெட்டிகளை ஒதுக்கியவாறு ஆயீஸாபீவியிலிருந்து இட்டிலிக்கடை ஆச்சி வரையிலும் அண்ணாச்சி வீட்டுக்குக் கார் வந்து செல்வதைப் பார்க்கின்றனர். குறுகிய காலத்தில் மிகப் புகழ் பெற்றுவரும் இந்த இளைய முதலாளியின் அருமை பெருமைகள் அந்தப் பெண்களின் நாவில் சுருளவிழ்கின்றன. “ஒண்ணுமில்லாதவனெல்லாம் முப்பது பவன் நாப்பது பவன்னும் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கேக்கிறா. அந்தப் பெண்ணோட நல்லகொணத்துக்குத் தக்கினயா மாப்பிளவூடும் வாச்சிருக்கு...” “அவர் மொறயாள்தானே? அவம்மா ஆரு? என்னமோ காலக் கொடும. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திச்சி. இப்ப அவிய பொண்ணு வந்து கட்டிட்டா...” “ஏட்டி, லோசனி? அவிய வந்திருக்கயில நீ அங்கிட்டுத் தா இருந்தியா? வேலம்மா காபி கீபி வச்சிக் குடுத்தாளா?” “அதோண்ணுமில்ல. விஜி, அவரு காபியொண்ணும் குடிக்கமாட்டான்னா. நா போன மாசம் ராகவுக்குக் காச்சல் வந்தப்ப டாக்டர் சொன்னான்னு ஆர்லிக்ஸ் வாங்கி வச்சிருந்தேன். அத்தக் கொண்டாந்து குடுத்தேன். காச்சிக் குடுத்தா. செந்தில் பளம் சேவு எல்லாம் வாங்கியாந்தா. ரொம்ப நல்ல கொணம், மரியாதி, போறச்ச, என்னக்கூடக் கைய இப்பிடிவச்சிக் கும்பிட்டா” என்று மகிழ்ந்து போகிறாள் லோசனி. “பாத்தாத் தெரியல தங்கமான கொணம்னு? விஜிக்கு நல்லபடியா அமஞ்சி போச்சி, சுமதிக்கு... அதுக்கும் இப்பிடி வரணும்...” சுமதி பச்சை நைலக்ஸ் சேலையுடன், தெருக்கோடியில் வந்து கொண்டிருக்கிறாள். மாரிசாமி இரவு தொழிலகத்தை விட்டுவர ஒன்பதே முக்கால் மணியாகிவிடுகிறது. விஜி இருப்பாளோ என்ற ஆவலில் விரைந்து வருகிறான். ஆனால் விஜியைக் காணவில்லை. சுமதிதான் ஏதோ புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள். வேலம்மா அவனைக் கண்டதும், “சாப்பிட்டாயா மாரிசாமி?” என்று விசாரிக்கிறாள். “ஆச்சு அக்கா!” “இந்தா... இன்னிக்கு விஜி வந்திச்சு, பொறவு செந்தில் வந்தான். உங்க முதலாளி, அவ மூத்தாரு காரப் போட்டுட்டு வந்தாரு...” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லி, ஒரு சிறு தட்டில் சிறு பால்கோவா துண்டு, சேவு, பழம் எல்லாம் வைத்துக் கொடுக்கிறாள். “அப்படியா?...” “ஆமாம். ரொம்பப் பெருந்தன்மையா இருக்கிறாரு. விஜிம்மாகிட்ட ரொம்பப் பெருந்தன்மையா இருக்கிறாரு. விஜிம்மாகிட்ட ரொம்ப மதிப்பு. இப்பவே வர சவுரியமில்லேன்னா சாங்காலம் காரனுப்புறேன்னா. அப்பிடியே ஆறடிக்கையில ஓசப்படாம காரு வந்திடிச்சி. விஜி போய் வரேன்னு சொல்லிட்டுப் போச்சு...” “அப்பிடியா? அக்கா, விஜி வேறொண்ணும் சொல்லல?” “என்ன சொல்லணும் மாரிசாமி? எல்லாம் பேசிட்டிருந்தா. சின்னப்பட்டிப் பிள்ளகளப் பத்திக் கூடக் கேட்டுட்டிருந்தா...” மாரிசாமிக்குக் கண்கள் பனிக்கின்றன. “என்னடா இப்ப...?” அவன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். “அக்கா அந்த மானேசர் வந்து இன்னிக்கு என்னக் கண்டமானியும் திட்டுனா. இன்னிக்குப் பாரு. புள்ளங்க எட்டு மணிவரையும் கட்டயடுக்கி யிருக்குதுங்க. ஏன்னா சனிக்கிளம சம்பளம் போடுறப்ப, நாயித்துக்கிளம சினிமா டிக்கெட்டு இனாமுன்னு சொல்லியிருக்கா. இது மிட்டாய்போல, ஈ புழு குத்துவது போல இந்தா மிட்டாயிக்குக் குந்தியிருந்து கட்டயடுக்கிச்சிங்க. அக்கா, நாயித்துக்கிளம வந்திட்டா, இந்த ரத்தினம், இன்னும் லேபல் செக்சன்ல ஒரு தடியனிருக்கிறா, மன்னாருன்னு. இவனுவ பொண்ணுகளக்கூட்டி அழியிறானுவ. ரத்தம் கொதிக்குது. இதெல்லாமும் விஜிம்மாகிட்ட எடுத்துச் சொல்லணும். அவுங்க இதுக்கு முனஞ்சி, இங்க வேலக்கு வர பொண்ணுவளுக்கு ஒரு தயிரயம், சுய மரியாதையைத் தூண்டி விடும்படி பேசணும். அந்தப் பொண்ணுகள வளச்சிப் போட குச்சி சரியில்ல, அடப்பு சரியில்லன்னு கலச்சிப் போடுவா. நைச்சியத்துக்கு மசிஞ்சிட்டா கூடவே ஒரு சில்லுன்னு கணக்குப் போடுவா. அதுங்க முதல்ல மெரண்டாலும் வழியில்லாம இவனுவ இஷ்டத்துக்கு அடங்கிப் போடுதுங்க... நாயித்துக்கிழமயில கொட்டடி கூட்டவான்னு கூப்பிடுறா... அக்கா, தீப்பொட்டி ஆபிசுல வேல பாக்கும் குமரிப்பொண்ணுங்க, எந்நேரமும் கழுவுகள் திரியும் எடத்தில இருக்குதுங்கன்னு சொன்னா தப்பில்ல...” அப்போது, சுமதி குறுக்கிடுகிறாள். “மாரிசாமி அண்ணாச்சி, வேற எங்கனாலும் போயிப் பேசுங்க. எனக்குப் படிக்க முடியல!” “அட...? நீ போயி அப்பா ரூமில படியேன்?” “அங்கே வேற ஆரு வெளக்குப் போடச் சார்ச்சு குடுக்கிறது?” மாரிசாமி “ம்... அக்கா, இந்தப் பொண்ணு முதலாளிக்கு மேல முதலாளியாயிருக்கு பாத்தியா?” என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறான். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|