14

     பெரியபட்டி மாரியம்மன் கோயில் புதிய வண்ணங்களும் வண்ணமுகமாகப் புதுமை பெற்றிருக்கிறது. அம்மனின் கருவறையும் முன் மண்டபமும், ஒரு சுற்றும், பழைய வேம்பும் அரசும், புதிய வேம்படியுமாக விளங்கும் கோயிலில் மண்டபம் முழுவதும் பளிங்குத்தரை பாவி ஒரு ஆண்டுதானாகிறது. மண்டபத்துக்கு முன்னும், இன்னும் சுற்றுப்புறத்திலும் பெரிய பந்தல்களும் தோரணங்களும் விளங்குகின்றன. பொரிகடலை மிட்டாய்க் கடைகள், அலுமினியம் பாத்திர வண்டி, மூட்டையில் சேலை கொண்டு வருபவரின் விரிந்த கடை, எல்லாம் விழாவுக்குக் கட்டியம் கூறுகின்றன. சுற்று வட்டம் கிராமங்களிலிருந்து மக்கள் ஆடுகளும், சேவல்களும், எதுவும் காவு கொடுக்க வசதியில்லாதவர், பூசணிக்காயையேனும் சுமந்து கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஒலிபெருக்கி, பிரசித்தி பெற்ற பின்னணிப் பாடகர்களின் பக்தி கீதங்களைக் காற்றோடு பரப்பிக் கொண்டு இருக்கிறது. கூடமங்கலத்தின் தொடக்கத்தில் ஆறுமுகத்தின் தேநீர்க்கடைக்கும் திருவிழா, ஒரே கூட்டமாக இருக்கிறது.

     பெரிய வீட்டு முதலாளிகளின் கார் வருவது கண்டு தெருவில் செல்லும் மக்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். பெரிய வீட்டில் கிழவரின் மகளான அத்தை வாயிலில் ஓடி வந்து வரவேற்கிறாள். அவளுடைய மகன், மகள், மருமக்கள் என்று வீடு கொள்ளாத கூட்டம்.

     “வாங்க மயினி! ஒடம்பு எப்படி இருக்கிய? மீனா?... வாம்மா!” என்றெல்லாம் வரவேற்கும் உறவினர், விஜியைக் கண்டும் காணாமலும் செல்கின்றனர். உட்பக்கம் அறையிலிருந்து பாட்டி ஐயாம்மா வருவது கண்டு விஜி முக மலருகிறாள்.

     “ஐயாம்மா, நீங்க எப்ப வந்தீங்க?”

     “இப்பத்தா வாரேன். ஏட்டி, ஒரு நல்ல சீலய உடுத்திட்டு வரதில்ல? பொங்கல் வைக்க, மாவிளக்குப் போட முத வருசம் வந்திருக்க, கல்யாணச் சேலையை உடுத்திட்டு வராண்டாம்? காது தோடுன்னாலும் பளிச்சினு இல்லாம...”

     அவளுக்குச் செவிகளைப் பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. அந்த உறவினர் கூட்டத்துக்குத் தான் வந்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

     “ஏண்டி நீ இப்பிடி இருக்கிற? அவங்கல்லாம் என்ன நெனப்பா?”

     “ஐயாம்மா நீங்க செத்த பேசாம இருங்க?”

     வெளியில் பெரிய மேல் திண்ணையும் கீழ் திண்ணையுமான பகுதியில் சகலைகள், மைத்துனர்கள் மாப்பிள்ளைகள் என்று சரிகை வேட்டிகளும், மினுமினுப்புச் சட்டைகளும் மோதிரங்களும் இழைச்சங்கிலிகளும் இளமைகளும், நடுத்தரங்களுமாக முதியவரைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். இளம்பெண்களான உறவினர் காபியும், குளிர்பானமும் கொண்டு வந்து கேலிகளுக்கும் கிண்ணாரங்களுக்கு மிடையே கொடுக்கின்றனர். அவர்களில் செல்வியை மட்டுமே விஜிக்குத் தெரியும். அந்தப் பெரிய கூட்டத்தில் அவளை இனம் புரிந்து கொள்பவர் யாரும் இல்லை. அவர்களுடன் அவளால் ஒட்டிக் கொள்ளவோ உரையாடவோ இயலவில்லை; தெரியவுமில்லை.

     அவள் அறை வாயிற்கதவில் ஒட்டினாற் போல் கனவுலகக் காட்சிகளைக் காண்பது போல் பிரமையுடன் நிற்கையில் ஒரு இளம்பெண் வந்து, “மயிலேஷ் மாமா... மாமிதான நீங்க? அத்தை உங்களைக் கூப்பிடறாங்க!” என்று தொட்டழைக்கிறாள்.

     “காப்பி குடிச்சியா?... இப்ப கோயிலுக்குப் போகணும். அபிசேகம் பொங்கல் வைச்சு முடிய பகல் ரெண்டு மணியாகும். எல்லாரும் சுப்பையா பெண்சாதி ஏனிப்படி இருக்கிறான்னு கேக்கிறாங்க. நீ வராம இருந்திருந்தாக் கூட உடம்பு சுகமில்லைன்னு சொல்லி இருப்பேன். என்னாத்துக்குடீ இப்படி எதையோ பறிகுடுத்தாப்பல நிக்கற?...”

     மாமியார் கடிந்து கொள்கையில் அவள் அசையாமல் நிற்கிறாள். “இத்தன உறமுறைக்காரங்க வந்திருக்காங்க. சிரிச்சிப் பேசினா என்ன?...”

     “அவங்க கூட நா என்னத்தைப் பேசுறது? எல்லாரும் சேலை நகையத்தான் பேசுறா...”

     “நான் அதாங் கவுரவமா வாடின்னே. கேட்டியா?”

     “சீலை நகைதான் கவுரம்னு நான் இன்னமும் நினைக்கல.” சற்று எட்டி, தன் மனைவியின் நடப்பை மயிலேசன் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான். விடுவிடுவென்று வருகிறான். “என்னாடி? எப்பப் பார்த்தாலும் தகராறு பண்ணிட்டிருக்கே?”

     “நா என்ன தகராறு பண்ணினேன்? நான் சும்மா நின்னிட்டு இருக்கிறேன்...”

     பளாரென்று அவள் கன்னத்தில் ஒரு அடி விழுகிறது.

     அவள் விக்கித்துப் போகிறாள்.

     அம்மா உடனே, “வாணாண்டா, போ, வீண் ரசாபாசம் எதுக்கு?”

     “அவனுக்குக் கோபம் வந்திடும். நாலுபேர் வந்த எடத்துல நல்லபடியா நடக்கலன்னா கவுரவக் கொறவில்ல?... போகுது போ; வீணா புடிவாதம் பண்ற. போயி மூஞ்சியக் கழுவிட்டு லட்சணமாப் பொட்டு வச்சிட்டுக் கெளம்பு...” என்று சமாளிக்கிறாள்.

     “நான் இங்கே வந்ததே தப்பு. நான் கோவிலுக்கு வரல. இந்தப் பொங்கல் வைக்கிறதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது!”

     மயிலேசனுக்கு இந்தப் பதில் இன்னும் ஆத்திரத்தைக் கிளர்த்துகிறது. “என்னடீ? என்னடீ சொன்ன? நம்பிக்கை கிடையாதா? உன் ப்ளடி ஐடியாஸெல்லாம் இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது! என்ன நினைச்சிட்டிருக்கே!”

     அவன் மீண்டும் பாய்வதற்குள் அம்மா தடுத்து விடுகிறாள்.

     விஜிக்குக் கண்களில் நீர் மல்குகிறது. அது மீறிவிடாமலிருக்கச் சமாளிக்கிறாள்.

     “இதுக்குத்தான் சொன்னேன். நான் சொன்னபடி செய்திருந்தால் உன்னை யாரும் தனியாகப் பார்த்து எதுவும் கேக்கமாட்டாங்க. இப்ப உனக்கே குறைவா இருக்கு. பிடிக்கலன்னு ஒரு பொம்பிள வீம்பு புடிக்க முடியுமா?...”

     பொறியில் சிக்கிய அற்பப் பிராணி போல் தன் நிலையை உணருகிறாள் விஜி. கற்களைக் கூட்டி அடுப்பில் மண்பானையேற்றிப் பொங்கல் வைக்கிறார்கள். பெரிய வீட்டுப் பெண்களும் ஆண்களும் மண்டபத்தில் பளபளவென்று அமர்ந்திருக்க, உள்ளே அம்மனுக்கு விமரிசையாக அபிடேகங்களாகின்றன. பொங்கலைப் படைத்து விட்டு வீடு திரும்புகையில் பசியும் சோர்வும் மிஞ்சி நிற்கின்றன. அப்பாவும் ஜயாமாவும் அங்குதானிருக்கின்றனர் என்பதைத் திரும்பி வரும் போது தான் அவள் கவனிக்கிறாள்.

     “உங்க மாமியாகிட்டச் சொல்லிருக்கிறேன். சாப்பாடான பிறகு மாப்பிளையும் நீயுமா வந்திட்டுப் போகணும்!” பாடிக்கு காரில் அவர்கள் வந்திறங்க, அதை நாயுடு வீட்டிலும் வாத்தியார் சிவகணபதியிடமும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்.

     “மாப்பிள்ளைகிட்டச் சொன்னீங்களா!” என்று கேட்கிறாள் விஜி.

     “அவன் எல்லோருடனும் பேசிட்டிருக்கிறான். அங்க போயி நானெப்படிச் சொல்ல? நா எப்புடிக் கூப்பிட?” என்று பாட்டி மகனை ஏவுகிறாள்.

     அவர் மாரிசாமி பிரச்னையில் சிக்கியிருக்கிறார். மகளைப் போல அவரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதையே முரண்பாடாக உணர்ந்திருக்கிறார். பவர்கட் தொல்லை, அரசு அதிகாரிகளின் பேராசை, வெளிநாட்டு ஏற்றுமதிச் சரக்கு ஒப்பந்தம் ஆனபின், கப்பல் கிடைக்காமல் காத்திருந்து நாட்களாகி விட்டதற்காக, சரக்கின் மதிப்புக்கு இரண்டு மடங்காக நட்ட ஈடு கோரி அந்த வெளிநாட்டு நிறுவனம் வழக்குப் போட்டிருக்கும் தொல்லைகள் என்றெல்லாம் தான் பேசினார்கள். மருமகன் உண்மையில் ரங்கேசனைப் போல் அவரை மதிப்பது கூட இல்லை. மாரிசாமி விஷயத்தை அவனிடம் தான் உண்மையில் பேச வேண்டும். ‘இளஞ்சேரன்’ அவனுக்குரியது தான்.

     அவர் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.

     “என்ன மாமா, அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க? சாப்பிடாம...?” என்று ரங்கேசன் தடுக்கிறான்.

     “இல்ல தம்பி மன்னிச்சிக்கணும். அதான் பொங்கல் பிரசாதம் பழம் எல்லாம் கோயிலிலேயே சாப்பிட்டாச்சே? போதும்...” என்று விடைபெறுகிறார்.

     “பிறகு உங்க விருப்பம்...” என்று கை குவிக்கிறான்.

     மருமகனை இளவட்டக் கூட்டத்தில் தேடி, “தம்பி கொஞ்சம் வரீங்களா?...” என்று மெள்ளத் தோளைத் தட்டிக் கவனத்தைத் திருப்புகிறார்.

     “என்ன...?”

     “ஒண்ணில்ல, சின்னப்பட்டி வரய்க்கும் கொஞ்சம் வந்தீங்கன்னா, தேவலை. விஜியை அழைச்சிட்டுப் போகலான்னு...”

     “அதுக்கு நா எதுக்கு? டிரைவர் இருப்பானே?”

     “அதுக்குச் சொல்லல தம்பி. உங்க கூடவும் கொஞ்சம் பேசணும்...”

     “என்ன பேசணும்? சொல்லுங்க... செய்யிறது?...”

     “அத இங்க எப்பிடிச் சொல்றது? ஃபாக்டிரி விசயமா...”

     “ஃபாக்டரி விசயம்னா நாளைக்கி ஃபாக்டரியில சந்திச்சுப் பேசுங்க. காலம வருவேன்...”

     அவன் கத்தரித்து விடுகிறான். ரங்கேசனுக்கிருந்த பண்பு கூட இல்லை. அவளுக்கு அந்தக் காரில் உட்கார்ந்து பாட்டியின் வீட்டுக்குச் செல்வதற்குக் கூட இப்போது சுவாதீனமாகப் பொருந்தவில்லை. பாட்டியோ வெயில் குறைவாக இருந்த காலை நேரத்தில் நடந்து வந்து விட்டாள். இப்போது காரில் ஏறித்தான் செல்லவேண்டும் என்ற மாதிரியில் நிற்கிறாள்.

     கூடத்தில் கோலப்பன் இலை போட்டுக் கொண்டிருக்கிறான்.

     விஜிக்கு அங்கு அமர்ந்து மீண்டும் சிறுமைகளுக்காளாக விருப்பம் இல்லை. மாமியாரிடம் சென்று, “அத்தை நான்... ஐயாம்மாவுடன் சின்னப்பட்டிக்குப் போகிறேன்... பிரசாதம் எல்லாம் எடுத்துக்கிட்டிருக்கிறேன்...” என்று கூறிவிட்டு அவளுடைய மறுமொழிக்குக் காத்திராமலே வருகிறாள்.

     “ஏண்டி? நீ சாப்பிடாம வார?...” என்று பாட்டி கவலையுடன் வினவுகிறாள்.

     “கட்டி வக்கச் சொல்லியிருக்கிறேன் கோலப்பனிடம். உங்க கூட வந்திடுவேன்...”

     டிரைவரைத் தேடி வருகிறாள். பத்து நிமிடங்களில் அவர்கள் சின்னப்பட்டிக்கு வந்துவிடுகின்றனர்.

     மம்முட்டியானும் குடும்பனும் பிள்ளைகளும் இன்னும் கோயிலுக்குக் கிளம்பவில்லை. கார் வந்ததும் ஓடி வந்து பார்க்கின்றனர். நாயுடுவின் மனைவி அலமேலுவும் வருகிறாள்.

     பள்ளிக்கட்டிடத்திலிருந்து மாரிசாமியும் விரைந்து வருகிறான்.

     “விஜிம்மா...! வாங்க...” என்று ஆசிரியரும் வருகிறார். விஜியின் முகம் தானாக ஏதோ கட்டவிழ்ந்தாற் போல் மலருகிறது.

     “எப்படியிருக்கிறீங்க, சார்? இன்னிக்கு ஸ்கூல் இல்ல போல இருக்கு?”

     “ஆமாம், மாப்பிள்ளை வரலியாம்மா? கார் போயிட்டுது?”

     அவள் அதற்குப் பதில் ஏதும் கூறவில்லை.

     கதவைப் பாட்டி திறக்கிறாள். எல்லோரும் உள்ளே செல்கின்றனர்.

     கோலப்பன் பெரிய தூக்குக் கூடையில் பொங்கலும் பஞ்சாமிருதமும், சுண்டலும் வடையும் நிறையக் கட்டி வைத்திருக்கிறான். அத்துடன் பெரிய சாப்பாட்டு அடுக்கில் கறி, கூட்டு, சாதம், சாம்பார் என்று வேறு வைத்திருக்கிறான்.

     “எம்புட்டுச் சோறு வச்சிருக்கிறான்?”

     இலைகளைப் பிரித்துப் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் விஜி சாப்பாடு பரிமாறுகிறாள்.

     “வாங்க சார்? இந்தா மாரிசாமி?...” என்று அழைத்து இலையோடு வைத்துக் கொடுக்கிறாள்.

     “உங்க சோறு தான் இத்தினி நாளா சாப்பிட்டது. கடோசில விருந்தாவது சாப்பிடுன்னு குடுக்கிறிங்க விஜிம்மா!”

     மாரிசாமிக்குக் குரல் நெகிழ்கிறது.

     “சாப்பிடு முதலில், பிறகு எல்லாம் கேட்கிறேன்!”

     அந்த எல்லையை விட்டு இங்கே வந்ததுமே மகள் எப்படி ஒட்டிப் போகிறாள்? புளிக்கு உப்புத்தான் இணையும். பாலுக்குச் சர்க்கரைதான் சேர்க்கையாகும்.

     பாட்டி இன்னும் மிஞ்சியிருக்கும் பண்டங்களை இலையில் வைத்து, அலமேலுவுக்குக் கொண்டு கொடுக்கச் சொல்கிறாள். அங்கே பெரிய வீட்டின் வரிசைகளைச் சொல்லிக் கொள்ளும் நேரம், இவர்கள் இங்கு அவளுக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுவார்கள் என்று தெரியும்.

     “அம்மாகிட்டச் சொன்னீங்களா அண்ணாச்சி?” என்று மாரிசாமி ஆரம்பிக்கிறான்.

     “நான் கேட்டுட்டுத்தானிருந்தேன்... ஏதோ பெண்பிள்ளை விவகாரம்னு சொல்லி சீட்டுக் கிழிச்சிருக்காருன்னு புரிஞ்சிட்டேன்.”

     மாரிசாமி நல்ல கறுப்புத்தான். அவன் முகம் பட்டாய் மின்னும் வண்ணம் சிவப்பேறுகிறது. “விஜிம்மா, இந்த அழவாயி இருக்கா. கூப்பிட்டுக் கேளுங்க. என்ன நடந்திச்சின்னு. மம்முட்டியா, பாவம். அத்தக் கட்டப் போறேன்னிருக்கிறா. பண்டல் ரூமிலேந்து பண்டல் கொண்டாந்தாங்க அடுக்கி வைக்க. மன்னாரு அநாசியமா அதுங்கையப் புடிச்சி இழுத்திட்டுப் போனான். நான் பாத்திட்டேன். ஞாயித்துக் கிழமை, அவளைக் கூட்டிட்டுப் போனதும் எங்கண்ணில பட்டிச்சி. இவங்க சமாசாரம் பூராத் தெரிஞ்சதனால், அந்தப் புள்ளயக் கூப்பிட்டு, ‘ஏம்மா எடங்குடுக்கிற. கத்தக்கூடாது?’ன்னேன். அதப் பாத்திட்டு நாந்தான் அதுங்கய்யப் புடிச்சி இழுத்தேன்னு, அந்த மானேசர் விழுவான், சொல்லி வேலக்கி வரவாணாம்னு சீட்டக் கிழிச்சிட்டான்.”

     “அந்தப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கேட்கலியா?”

     “கேட்டா... அதுங்க பயப்படுதும்மா! அல்லா பிள்ளைகளும் தான் இருந்திச்சிங்க? அம்மா, இவனுவ சோப்பு வாங்கிக் குடுக்கிறதும், பவுடர் வாங்கிக் குடுக்கிறதும், இப்பிடிச் சமயம் வாய்க்கிற போது வசப்படுத்தறதும் கண்ணால பாக்கிறேன். வயித்துக்கில்லாம வந்து விழுதுங்க. நியாயம்னு ஒருத்திக்கும் கேக்க வாயில்ல. பயந்து சாவுதுங்க. ஆம்பிள, பத்துக் கணக்கப் பிள்ளைகளைக் கூட்டி ஒரு சங்கம்னு செய்ய முடியல. எங்களுக்குத்தா என்ன வாழ்க்கை இது, காலம நாலு மணிக்கு எந்திரிச்சிப் போனால் ராத்திரி பத்து மணி வரயிலும் வேல. இப்ப ஒரே சொல்லா சீட்டக் கிழிச்சிட்டா. என்னுடைய நியாயத்தை எப்படி மெய்யின்னு காட்டுவேன்.”

     ‘மானேசர் சொல்வதை நான் நம்ப வேண்டியிருக்கு’ என்று சிரித்துக் கொண்டு ரங்கேசன் மொழிந்ததை அவள் நினைத்துப் பார்க்கிறாள். இவர்கள் தொழில்துறையில் வளர்ச்சி பெற்றதற்கு உடந்தையாக இருந்தவன் மானேசர். வரி ஏய்ப்பு நெளிவு சுளிவுகள், லஞ்சக் கையூட்டு விவகாரங்கள் எல்லாம் இல்லாத தொழில் வளர்ச்சி ஏது? தொழில்... தொழிலுக்குச் சிறு முதலை முடக்கி, பல முனைகளிலும் முயன்று சமாளித்து, முன்னேறி வந்திருப்பவர் பாதை நேர்கோடாக இருக்க முடியாது. ஆனால், இந்த முறைகேட்டை ரங்கேசன் ஆதரிக்கமாட்டான் நிச்சயமாக. ஆனால் மானேசரிடம் விவரமாக விசாரணை செய்வதாகக் கூடச் சொல்லாமல், அவர் சொல்வதை நம்ப வேண்டியிருக்கிறதென்று முடிப்பதற்கு என்ன காரணம்?

     “விஜிம்மா, நீங்க என்னுடைய பக்கம் நியாயம்னு நம்புறீகன்னா, இந்த அவமானத்தைத் துடச்செறியணும். அந்த மானேசரை அவன் பக்க ஆளுகளை, பொய்யாக்கணும். அது உங்களால் முடியும்னு நினைக்கிறேன். அவன் மன்னிப்புக் கேக்கணும்!”

     “உங்களால் முடியும்” என்ற சொற்கள், செவிகளில் பூச்சிகளாய்ப் பறக்கின்றன. என்னால் முடியுமா? என்னால் என்ன முடியும்? இன்று சற்று முன், விருந்தினர் கூடம் என்று கூடப் பாராமல் கைநீட்டி அடித்தாரே, அதை... அதை எதிர்பார்த்திருப்பார்களா இவர்கள்?

     “மாரிசாமி, நான் போய் எடுத்துச் சொல்லி அவர்கள் மீண்டும் உன்னை வேலையில் சேர்த்துக் கொள்வதனால் இது போல் இன்னொரு சந்தர்ப்பம் வராது என்று என்ன நிச்சயம்? வினையை வேரோடு கொல்ல ஒரு ஆட்டம் கொடுக்க வேணும். அதற்கு ஒரு வழி உண்டானால் சொல்லு!”

     மாரிசாமியின் கண்களில் நீர் துளித்து விடுகிறது.

     “நிசமாத்தான் சொல்லுறீங்களா விஜிம்மா?...”

     “ஆமாம்...”

     “விஜிம்மா, எம் பேரில இதுபோல ஒரு அப்பழுக்கு தூசு ஒட்டிவய்க்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவிங்க எம்மேல காரமாக இருக்கிறதுக்கு காரணம் வேற. இவம்பக்கம் இருக்கும் கணக்கப்பிள்ளைகள் கொஞ்சம் பேருதான். ஆனால் புது நகர ஊருல இளஞ்சேரன் கணக்கப் பிள்ளைக போயி குச்சியும் அட்டைக் கட்டும் சில்லும் குடுத்து, பொட்டியாகவும், அடுக்கின கட்டயாவும் வாங்கறவுக பல பேரிருக்கா. ஃபாட்டரிக்குள்ள இப்பிடிக் கொண்டு வர புள்ளங்கள வேணா என்னால தடுத்து நிறுத்த முடியாது. வெளியிலேந்து வரதத் தடுக்க முடியும். ஏன்னா, எல்லாப் பொம்புளகளும் ஒரு போல இல்ல. என் நியாயத்த அவுங்க பக்கம் கொண்டு போவேன்!”