15

     முதல் நாள் திருவிழாவைச் சாக்கிட்டு ஐந்து ரூபாய்க்குக் குடித்திருந்தான் மம்முட்டியான். வழக்கமாக அவன் குடிப்பதில்லை என்றாலும், கையில் காசு இருக்கும் போது அவன் ஒரு ரூபாய்க்குக் குடிப்பான். தன்னுடைய மாசச் சம்பளத்தில், பத்து ரூபாய் வைத்துக் கொண்டு மிகுந்ததை மாமனிடம் தான் கொடுக்கிறான். சாப்பாட்டுப் பொருள் வாங்கும் செலவுக்கே வருமானம் பற்றாது. பத்து ரூபாயைத் தன் விருப்பப்படி டீக்கடையிலும், வாரம் தவறாமல் குடிக்கவும் செலவு செய்வான். மாமன் கட்டுப்பாடில்லாமல் குடிப்பவன். எவ்வளவு குடித்தாலும் அவன் தன் நிலை இழக்க மாட்டான்.

     ஆனால் அன்று மம்முட்டியானுக்குக் காலையில் பிள்ளைகளை எழுப்பச் செல்லவே இயலாதபடி தலை பாரமாகக் கனக்கிறது. வாயில் ஓர் கசப்பு, குமட்டிக் கொண்டு வருகிறது. அதிகமாகக் குடித்ததாலா? காசைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ பொருள்களின் மீது ஆசை வைத்திருந்தவன் அதிகமாக நான்கு ரூபாயைச் செலவழித்திருக்கிறான். விழாவை முன்னிட்டு ஏசன்டு கொடுத்த ஐந்து ரூபாயும் செலவாகிவிட்டது. அதற்குக் காரணம் புரியாமலில்லை.

     மாரிசாமி பொய் சொல்லுவானா?

     மாரிசாமையைப் பற்றி ஒருவரும் கெடுதலாகப் பேசமாட்டார்கள். சம்முகம் அண்ணாச்சி, காரில் வரவில்லை. மினுக்குச் சட்டை போடவில்லை. மெய்தான். ஆனால் அந்த ஊருக்கு இந்தத் தீப்பெட்டி ஆபீசு, வண்டியும் வண்மைகளும் வருவதற்கு முன்பே கிணறு வெட்டித் தரவும், பொதுக் குழாய் வைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும் அவர் எழுதி எழுதிப் போட்டதையும் மாமனிடமும், மற்றவரிடமும் கடிதாசிகள் கொண்டு வந்து படித்துக் காட்டியதையும், கையொப்பு வாங்கிச் சென்றதையும் மறந்து விட முடியாது. மாரிசாமி படித்தவன். அவருக்குத் துணையாள் போல் வருவான். அவன் பொய் சொல்வானா?

     “வெவரம் புரிஞ்சவங்க, தீப்பெட்டி ஆபீசுக்குள்ள வயசுப் பொண்ணுவள அனுப்பக் கூடாது. அப்படிக் கெட்டுப் போச்சி. ஆனா, அவனுவளச் சொல்லியும் குத்தமில்ல. காலம நாலு மணிக்கு வர கணக்குப்பிள்ள, ராத்திரி வரயிலும் இதுங்க மத்தியிலேயே நின்னுட்டு லோலுப்படுறா... எப்பிடி எப்ப்டியோ ஆயிப் போகுது. அழவாயிய, ஞாயித்துக் கிழமை வேலயிருக்குன்னு கூட்டிட்டுப் போனானா கணக்குபிள்ள?” என்று கேட்டான்.

     கோழி திருடும் குறப்பிள்ளைகள், வெங்காயத்தில் முள்ளைச் செருகிப் போட்டிருப்பார்கள். கோழி அதைக் கொத்துகையில் முள் மாட்டிக்கொள்ளும். அதனால் குரல் கொடுக்க இயலாது.

     மம்முட்டியானுக்கு அந்த வேதனை புரிகிறது. குரல்வளை துருத்திக் கொண்டு தெரிய, சிவந்த விழிகள் நிலைக்கப் பேசாமல் நின்றான்.

     “நாடா வாங்கித் தருவா, சடைக்கு வச்சிக்க ஸ்லைடு பவுடர்னு வாங்கிக் குடுத்து நைச்சியம் பண்ணுவா... இத்தப் பார்த்து ஒன் அழவாயிக்காக நாஞ்சண்ட போட்டப்ப, ஏம்மேல் அபாண்டப் பழி சொல்லி வேலய விட்டு என்ன நிப்பாட்டிருக்கா. மம்முட்டியா, நீ நாளக்கிப் புள்ளயள உசுப்பப் போகாத! அழவாயிய வேலக்கி அனுப்பாத!...” இருட்டுக்குள் போயிருக்குமோ என்றஞ்சி அவன் எட்டிப் பார்க்காமலிருந்தான். பேய் இப்பொழுது கழுத்தைப் பிடித்து மெய் என்று உறுதி கூறுவது போல் இருக்கிறது.

     “உனக்கு உசுப்புற வேலக்கி அம்பது ரூபா குடுக்கிறா. நாங்க கணக்கப்பிள்ளங்க, காலம நாலுமணிலேந்து ரா பத்து மணி வரயிலும் வேல செய்யிறோம். எம்பது ரூவா சம்பளம் தரா... ஏ? இந்தப் புள்ளய வைச்சுத்தா ஃபாக்டரி ஓடியாவணும். இவங்க வரலன்னா, வேலை நடக்காது. அப்பிடி இருக்கிறப்ப, விடிஞ்சி எட்டுமணிலேந்து, பகல் மூணு மணி வரையிலுந்தான் தொழில்னு நாம் ஒண்ணு சேந்து சொல்லணும். பிள்ளைங்க தூங்க வேணாமா? இப்பிடி அதுகளை உழய்க்க வச்சும் அஞ்சுக்கும் பத்துக்கும் அர வயித்துக் கஞ்சிக்கும் லோலுப்படுறோம். புதுநகர ஊரில மச்சு வீட்டுப் பிள்ளைங்க கூடத்தான் கட்டயடுக்குதுங்க. ஆனால் பள்ளிக்கூடம் போயிப் படிக்கிறா. முன்னுக்கு வரணும்னு ஆச வச்சிட்டிருக்கா. மேல போறா. கிடுகிடுன்னு படிக்கிறா. பொஞ்சாதி நகையப் போட்டு வங்கில கடன் வாங்கித் தொழில் தொடங்கிடறா. முன்னுக்கு வரா. நீ என்ன நடந்தாலும் கண்ண மூடிட்டுப் போயிட்டிருக்கிற. என்னிக்கானும் நாமளும் வாழ்க்கையில நாலு பேரு மதிக்கிறாப்பல இருக்கணும்னு நினைக்கிறியளா?... அப்ப... இருவதம்சத் திட்டம் வந்தப்ப, சட்டம் வந்து கழுத்தில உக்காந்தப்ப, புள்ளயள வேலக்கி வேண்டாம்னு கூட முதலாளிங்க சொன்னாங்க. ஆனா என்ன நடந்திச்சி? ஃபாட்டரிய மூடிடாதிய, நாங்க பட்டினி கெடந்து சாவணும்னு போயி மானேசர் காலில விழுந்திய. பதினாறு வயசாயிருக்கணும்னு சொன்னப்ப, பச்சப் பிள்ளைங்களுக்கு மேத்துணி போட்டுக் கொண்டு போயி நிறுத்தினிய. இதெல்லாம் குத்தமில்ல, நம்ம பேரில? அவுங்க கோடி கோடியாச் சம்பாதிக்கிறாங்க. நாயும் பூனையும் கூடக் கார் சவாரி போவுதுங்க!”

     மம்முட்டியானின் மேடிட்ட அறியாமையைத் துளைத்துக் கொண்டு அவனுடைய சொற்கள் பாய்ந்திருக்கின்றன.

     அவனுக்கு எழுந்து செல்ல மனமில்லை.

     ஆனால் மாமன் விடுவானா?

     “ஏண்டா? கோளி கூவிரிச்சி, இன்னும் பிள்ளயள உசுப்பப் போகாம படுத்திட்டிருக்கிற? பசு வந்து அலாரம் அடிப்பா, அப்ப முடுக்கிட்டு ஓடுவா! எந்திரிடா?”

     “சும்மாருங்க மாமா! நானின்னிக்கு உசுப்பப் போறதில்லை...”

     “என்னது?...” என்று சாத்தியிருக்கும் கைத்தடியை எடுத்து அவன் கீழே தட்டுகிறான்.

     “ஏண்டா? ஒனக்கு என்ன வந்திச்சி? திருவிழாக்காசு வாங்கிக் குடிச்சிட்டு அவுங்களுக்கே துரோகம் பண்ணும்படி ஏறிப்போச்சா?...” என்று வசை பாடுகிறான்.

     “நீங்க சும்மாருங்க மாமா? உங்கக்கு ஒண்ணுந்தெரியாது! ச...னாயப் பயலுவ... அழவு... அழவு! இனிமே நீ வேலக்கிப் போகக்கூடாது! இன்னிக்கு ஆரும் தீப்பெட்டி ஆபீசுக்குப் போகப் போறதில்ல. வண்டி வந்தா திரும்பிப் போவட்டும்!”

     வெறும் களிமண்ணாக இருந்த மம்முட்டியான் திடீரென்று உயிர்த்துவம் பெற்றுக் குதிப்பது போல் குரல் கொடுக்கிறான்.

     “என்னடா குதிக்கிற? பூன கண்ண மூடிச்சின்னா ஒலவம் இருண்டிடுமோ? நீ உசுப்பாட்டிப் போ, நா உசுப்பி விடுற! அந்த மாரிசாமிப்பய, கச்சி பேசுறவ, பெரிய மொதலாளிமார எதுத்திட்டுத் திரியுறா! அவங்கூட ஒனக்கென்ன பேச்சி? புண்ணியவாங்க தயவில அரக்கஞ்சி குடிக்கிறம். நாளெல்லாம் இந்தக் காஞ்ச தரிசில பாடுபட்டாலும் ஒண்ணரப்படி சோளமோ, கம்போதாங் கெடய்க்கிது. துட்டக் கண்ணில கண்டமா? இப்ப, வாரா வாரம் சம்பளம். வூட்டு வாசல்ல பஸ் கொண்டாந்து கூட்டிட்டுப் போறா. தீவாளின்னும் திருவிழான்னும் போனசு குடுக்கிறா. நேத்து சேவல் வுட்டோம். சாமி கும்பிடப் போனோம். அவுங்க காசுதான அது? இல்லாட்டி ஒண்ணுக்கு விதியில்லாம கெடப்போம். முதலாளிமாரப் பகச்சிக்கறதா? அந்தக் காலத்தில, எங்கப்பன் பாட்டன் அடிமகளாக் கெடந்தா. கெட்டி வச்சி அடிச்சிருக்கா. இப்ப நெலம எம்புட்டோ மாறிப் போச்சி. ஒண்ணாக் குந்திட்டுப் பேசறா. சாப்பிடறா. நாம போயி பள்ளிக்கூடக் குழாயத் தொட்டடிச்சி இன்னிக்குத் தண்ணி புடிச்சிட்டு வாரம். இந்த மண்ண நம்பாம கஞ்சி முடிக்க முடியிது. நாளேக்கே ஒனக்குக் கலியாணம்னா, ஏசன்டையா பெரசன்டா நூறு ரூவா மொதலாளிட்டேந்து வாங்கித் தருவா...” என்று நீண்ட உரையாற்றுகிறான்.

     ஆனாலும் மம்முட்டியானின் நெஞ்சில் தைத்த முள் விடுபட்டு விடவில்லை.

     “ஏ அழவு!” என்று கத்துகிறான்.

     அழவாயிக்கு ஒரே நடுக்கம். மாமனும் கோபம் வந்தால் அடிப்பான்; அப்பனும் சும்மாயிருக்க மாட்டான்!

     “இங்க வாடி...” என்று வசையுடன் அதட்டுகிறான்.

     அழகாயி மெல்ல, ஆட்டுக்குடி போல் தலை நீட்டுகிறாள்.

     “சாமி சத்தியமாச் சொல்லுடீ, நாத்திக்கிழம, உன்ன எங்கிட்டு கூட்டிட்டுப் போனா? இப்ப எனக்குத் தெரியணும்” என்று மம்முட்டியான் குதிக்கிறான்.

     அழகாயி மருண்டு போகிறாள். நெஞ்சடைத்துச் சொல்லெழும்பவில்லை. மம்முட்டியான் வெறியுடன் அவள் தோளைப் பற்றி உலுக்குகிறான்.

     “சொல்லிடு... கொன்னிருவன் இல்லாட்டி!”

     மாமன் எழுந்து வந்து அவனைப் பேய் போல் இழுத்து விடுகிறான்.

     “நீ போடால, புழுக்கப் பயல. எம்புள்ளய உனக்கு ஆருடா கட்டி வைக்கப் போறா? அவமேல கை வச்சே, தொலச்சிடுவேன். பிள்ளயள நீ உசுப்பாண்டாம். நான் போறேன்!”

     வயதாகித் தளர்ந்தாலும், அவர்கள் சமுதாயத்தின் பெரிய கை அவன். மம்முட்டியான் கசப்புணர்வை விழுங்கிக் கொண்டு திண்ணைச் சுவரோடு சாய்ந்து நிற்கையில், தொலைவில் பஸ் வருகிறது. வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டு.

     அடுத்த நிமிஷம் அதன் குழலொலி எல்லோருடைய செவிகளிலும் விழுகிறது. வழக்கம் போல் குழந்தைகளையோ, பெரியவர்களையோ, மம்முட்டியானையோ அங்கு காணவில்லை. இரத்தினம் மீண்டும் சத்தமாகக் குழலை அமுக்குகிறான்.

     “மம்முட்டியா உறங்கிட்டானா? பிள்ளியள உசுப்ப வரல? அதா குடும்பானல்ல வராரு...! இன்னிக்கென்ன மம்முட்டியா ஒடம்பு சொகமில்லியா?”

     “ஆரது? எல்லாம் எந்திரிச்சிப் பிள்ளியள உசுப்புங்க! வண்டி வந்திரிச்சி!” என்று குரல் ஒலிக்கிறது.

     ஒவ்வொருவராக வருமுன் இருள் படலம் கரைந்து போகிறது. இரத்தினத்துக்கு ஒரே கோபம்.

     “மம்முட்டியா எங்கே? அந்தப் பயலக் கூப்பிடுங்க” என்று சத்தம் போடுகிறான்.

     “அவனுக்கு ஒடம்பு சொகமில்ல ஏசன்டையா!” என்று குடும்பன் கெஞ்சுகிறான்.

     “அது சரி, இந்தக் காத்தமுத்துப்பய, ஆளையே காணம். இங்க இனியும் அட்வான்ஸ் தீரல. அம்பது ரூபா பாக்கி நிக்கிது. அதுக்கு முன்ன வேற பக்கம் அடவான்ஸ் வாங்கிட்டு விட்டிருக்கா...” என்று இரத்தினம் வசை பாடத் தொடங்குகிறான்.

     “மம்முட்டியான் சம்பளத்தில் அந்தப் பயலோட அட்வான்ச வெட்டினாத்தா முளிச்சிக்குவா!...” என்று உறுமுகிறான்.

     குடும்பனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

     “அப்படீல்லாம் சொல்லாதீங்க ஏசன்டையா! நான் போயி அந்தப் பொம்புளகிட்ட ரெண்டிலொண்ணு கேட்டுட்டு வாரே!”

     தடியும் செருப்பும் ஓசை செய்ய, இருள் கரைந்து கோழிகளும் காகங்களும் சிலும்பும் அந்த நேரத்தில் குடும்பர் வருவதைக் கண்டு சடச்சி அச்சத்துடன் முற்றத்தில் வந்து நிற்கிறாள்.

     “பையன வேற தாவுலவிட்டு அடுவான்ஸ் வாங்கிருக்கியா? ஏசன்டையா கேக்குறாரு. பதில் சொல்லு, இல்லாட்டி துட்ட வய்யி!”

     சடச்சி நடுங்கிப் போகிறாள்.

     “அப்படில்லாம் இல்லிங்க... அவங்காலில் சீக்கோத்து வலின்னு கத்துனா. அங்க மாமன் வீட்டுக்கு அனுப்பிக் குடுத்திருக்கு. வைத்தியரு மருந்து வச்சிக் கட்டிருக்கா...”

     “அதுசரி, மாசக் கணக்கா வைத்தியம் பண்ணிருப்பே புள்ளய வச்சிக்க. இப்ப துட்டுக்கு வழி சொல்லு நீ? இன்னும் அம்பது ரூபா பாக்கி நிக்கிதாம் நீ வா, வந்து ஏசன்டுகிட்டச் சொல்லு...”

     அவள் முற்றத்தில் நின்று தீனமாக அழுகிறாள்.

     “நாங்க எங்க போவம் இப்ப ரூபாயிக்கு...”

     உள்ளிருந்து லொக் லொக்கென்று இருமிக்கொண்டு அவள் புருசன் தலை நீட்டுகிறான்.

     “அந்தப்பய பொது நகரத்துலதா வாணத் தெருவுல இருக்கா. ஏண்டி சொல்லிப் போடுறதுதானே? ஒரு காரூவாக்காசு கூடக் குடுக்கல. அங்க போயிக் கூட்டிப் போச் சொல்லுங்கண்ணாச்சி!”

     “அது சரி...” என்று நிற்கும் குடும்பனாருக்குத் திண்ணையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது பார்வை படிகிறது.

     “அது யாரு உம்புள்ளதான. ஒறங்கிட்டிருக்கு பொட்டவுள்ளயா?”

     “ஆமாங்கோ...”

     “பின்னென்ன? பெரிசாத்தான இருக்கு? அவனுக்குப் பதிலா எளுப்பி அனுப்புறதுக்கென்ன?...”

     சடச்சி தயங்கினாற் போல் நிற்கிறாள். “அது... நாங்காட்டுக்குப் போனாவூட்ட, புள்ளியப் பாத்துக்குங்க, பள்ளிக்கூடம் போவுது...”

     “பொட்டவுள்ளக்கிப் பள்ளிகூடம் என்னா, பள்ளிக்கூடம்? அவிய அடுவான்ஸ் பின்ன எப்பிடித் தீரும்? தட்டி எளுப்பு” என்று குடும்பர் ஆணையிடுகிறார். அப்பனும் அதை ஆமோதிக்கிறான்.

     கனவுலகில் எங்கோ மிதந்து கொண்டிருக்கும் ஒரு கள்ளமற்ற குழந்தையின் சுதந்தரம் சட்டென்று அழுத்தப்படுகிறது.

     “வடிவு...? ஏட்டி வடிவு? எந்திரிச்சுக்க... வடிவு? இதபாரு! பஸ் வந்திருக்குடீ! மோட்டாரு! டவுனுக்குப் போக மோட்டாரு அவங்கெல்லாம் சினிமாவுக்குப் போறா எனக்கில்லியான்னு கேட்டியே. எந்திரிச்சிக்க; நீயும் தீட்டி ஆவிசு மோட்டாரில போலாம்...”

     “மோட்டாரில் போகலாம்” என்ற மந்திரச் சொல் வேலை செய்கிறது. சிறிது தண்ணீரைக் கொண்டு வந்து கண்களில் விட்டுத் துடைக்கச் செய்கிறாள் தாய்.

     “வடிவு, அண்ணாச்சியப் போல நீயும் தீட்டி ஆபிசில குச்சியடுக்கப் போறியா? அழவாயி, பச்ச, ருக்குமணி, சக்கு, எல்லாரும் போறாக. உனக்கும் துட்டு கிடைக்கும். மோட்டாரில டவுனுக்குப் போவ...”

     கனவோ நினைவோ என்று தடுமாறினாலும், ஆறு வயசு வடிவு தோள்பட்டை நழுவும் கவுனைச் சரி செய்து கொண்டு எழுந்திருக்கிறது.

     “நான் கொண்டுவுடற. காத்தமுத்து பேரில இவள பதிஞ்சிக்கிடச் சொல்லுங்க அண்ணாச்சி!”

     அவன் வெற்றியுடன் திரும்புகிறான்.

     பள்ளிக்கு மற்றுமொரு மாணவி குறைந்து போகிறாள்.