25

     ரயிலடிக்கு அப்பா வந்திருக்கிறார்.

     அவரைப் பார்க்கும்போது விஜிக்குத் துணுக்கென்று மனம் அதிர்ச்சியுறுகிறது. அவரை நான்கு மாதங்களுக்கு முன்னர் தானே பார்த்தாள்? நான்கு வருடங்களாகி விடவில்லையே?

     அந்தக் காலை நேரத்தில் வானம் இருண்டு பிசுபிசுவென்று தூற்றல் போட்டுக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளும், சாக்கு, பனஓலைப் பார்சல்களும் வாகன்களுக்காகக் காத்திருக்கும் பசுமையற்ற அந்தத் தொழில் நகரத்தின் இரயில் நிலையச் சூழல் கூடப் புழுதியடங்கிய குளிர்ச்சியில் கண்களுக்குப் பசுமையாக இருக்கின்றது. ஆனால்... அப்பா, ‘வெதர் பீட்டன்’ என்று ஆங்கிலத் தொடர் நினைவில் மின்னும்படி, காலத்தின் தட்ப வெப்பங்களில் சூறாவளிகளில் அலைகழிக்கப்பெற்ற அயர்ச்சியுடன் தோன்றுகிறார். அவருடைய ஐம்பத்தைந்து வயதில் மூப்பு, இந்த நான்கு மாதங்களில் ஒரே திரியாகக் கூடிவிட்டதா?

     “உங்களுக்கு உடம்பு சுகமில்லையா அப்பா?”

     “இல்லையம்மா? வழக்கம் போலத்தான் இருக்கிறேன். எனக்கொண்ணுமில்லேம்மா, அங்க... எல்லாருஞ் சுகந்தானே?”

     “சுசுந்தான்” என்றவள் சட்டென்று நினைவு வந்தாற் போன்று, “ஐயாம்மா சுகந்தானே?” என்று விசாரிக்கிறாள்.

     “ஐயாம்மாக்கும் உடம்பு நல்லாயில்ல. நான் போயி அங்கேயே இருக்கவும் முடியல. மாரிசாமி இப்ப சின்னபட்டிலதானிருக்கிறான். இந்த வருசம் எதோ மழை விழுது. காடு கழனி வேலை எடுத்துச் செய்யும் உத்தேசத்துடன் போயிருக்கிறான்.”

     மாரிசாமியின் பேரைக் கேட்டதும் அவளுக்கு அபாண்டமான பழியின் நினைவில் முகம் சிவக்கிறது.

     “மாரிசாமிக்கு இப்ப ஃபாக்டரியில் வேலை இல்லையாப்பா?”

     “இல்லம்மா. முள்ளுவெட்டப் போனவன் காலிலும், கையிலும் முள் குத்திடிச்சி. காலில் புரையோடிச் சீழ் வச்சிருந்திருக்கு. அங்கே வண்டிப் பாதையில்லை. சொல்லியனுப்பவும் உடனே காகிதம் எழுதவும் வசதி இருந்திருக்கல. அவங்களே எதோ எண்ணெய், ஒத்தடம்னு குடுத்திட்டு முடியாம போன பிறகு எங்கிட்ட ஆபீசில வந்து ஓராள் சேதி சொன்னா. சைகிளில் தூக்கி வச்சிப் பாதை வரையிலும் கூட்டி வந்து, பிறகு வண்டியில கூட்டிப்போயி ஆசுபத்திரியில் சேர்த்தேன். காலை எடுக்க வேண்டி வருமோன்னு பயப்பட்டேன். ஆபரேசன் பண்ணி குணப்படுத்திட்டாங்க. கால் கொஞ்சம் சாச்சி நடக்கிறான். இப்பத்தான் ஒரு வாரமாகுது. சின்னப்பட்டி போய், ஃபாக்டரியில் சர்வீஸ் பணம் ஆயிரத்தைந்நூறு போல கிடைச்சிருக்கு. நீ முன்ன ஒரு நாள் சொன்ன இல்ல? சின்னப்பட்டியில் கூட்டுறவு முறையில் மாட்ச் வொர்க்ஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஆசை. அதுக்குத்தான் இடத்துக்கு முயற்சி செய்கிறேன்... நீ பம்பாய்க் கூட்டத்தில் பேசினியாம்மா? எப்படியிருந்ததம்மா?”

     “நான் எதிர்பார்த்தாற்போல் இல்லையப்பா!” என்று சுவாரசியம் இல்லாமல் மொழிகிறாள்.

     “நீ பேச இடம் குடுத்தாங்கல்ல?”

     “நான் பேசினேன். உங்க பேரைக் கேட்டு, தலைவி அம்மாகூடத் தெரியும்னாங்க. மதுரையில் அந்தக் காலத்தில் அவங்க வந்து பேசியிருக்காங்களாம்!”

     “அப்படியா?... நாலு பேர் கூடிச் செயல்படும் ஆர்கனைசேஷன்னா, எல்லாரும் இலட்சியவாதிகளாக இருக்க மாட்டாங்க விஜி. சுயநலக்காரர்கள் தா முக்காலும் இருப்பாங்க. நம்ம நாட்டில் பிரிட்டிஷ்காரங்ககிட்டருந்து விடுதலை பெறுவது தேசீயம்னு நினைச்சாங்க அப்ப. இப்பவும் தேசீயம்னா அதைத்தான் சொல்றாங்க. பெண்கள் கூடி ‘ஆர்கனைசேஷன்’ நடத்துவது இன்னும் கஷ்டம்.”

     அவள் ஏதும் மறுமொழி கூறவில்லை. ரிக்‌ஷா வீட்டு வாசலில் நிற்கிறது. செந்தில் ஓடிவந்து அவள் கைப்பெட்டியை வாங்கிக் கொள்கிறான்.

     “விஜிம்மா வந்துட்டீங்களா? வாங்க!” என்று அவன் பெயர் சொல்லிப் பன்மையில் அழைப்பது புதுமையாக இருக்கிறது. ஒரு கால் அபாண்டப் பழி இவனையும் புண்படுத்தியிருக்குமோ?

     அவள் உள்ளே அடிவைக்குமுன் கொல் கொல் என்று இதயத்தை உலுக்கும் இருமல் ஒலி செவிப்பறைகளை மோதுகிறது.

     அப்பாவின் அறைக்குச் செல்லும் கூடத்துக் கதவு நிரந்தரமாக மூடி இருக்கிறது. அது மட்டுமில்லை. நேராக சுமதி அமர்ந்து படிக்கும், அரசு செலுத்தும் மரக்கட்டில் கூடத்தின் மறுபுறம் வந்திருக்கிறது. முன்பு கட்டிலிருந்த பகுதி ஓர் சாக்குப் படுதாவால் மறைக்கப்பட்டிருக்கிறது.

     சமையலறைக்குள்ளிருந்து சுமதி தூக்கிச் செருகிய பாவாடையுடன் வருகிறாள்.

     விஜி அதிர்ச்சியுற்றவளாக, “செந்தில்! வேலம்மாவுக்கு உடம்பு சுகமில்லையா?” என்று வினவிக்கொண்டு சாக்குப் படுதாவுக்கப்பால் செல்கிறாள்.

     “உள்ள போகவாணாம் விஜிம்மா! நீங்க அங்கிட்டிருந்தே பாருங்க” என்று செந்தில் முன் சென்று தடுக்கிறான்.

     விஜி தடுப்பைப் பொருட்படுத்தவில்லை.

     பினாயில் வாடை மூச்சைக் கவ்வுகிறது.

     கீழே பாயில் வேலம்மா தலையணைகள் இரண்டின் சாய்வில் படுத்திருக்கிறாள். வேலம்மாளா அது?

     கிடங்குக்குள் இருக்கும் அந்த விழிகளைத் தவிர வேறு எந்தப் பகுதியையும் அவளால் இனம் காணமுடியவில்லை. எச்சில் துப்பும் பீங்கான் பாத்திரத்தை மூடிக் கொண்டிருக்கும் கை... இவ்வளவு குச்சியாக முன்பு இல்லை.

     குரோசு குரோசாகத் தீப்பெட்டி ஒட்டிய கைகளா அவை? “வேலம்மா!” என்று அலறுவது போல் அவள் குரல் வெளிப் படுகிறது. வேலம்மாளின் விழிகள் உருகுகின்றன. உடனே இருமல் வந்துவிடுகிறது.

     “விஜிம்மா, போதும், வெளியே வாங்க.”

     விழிகள் பிதுங்கித் தெறிப்பதுபோல் இருமல்... பாய்ந்து சென்ற விஜியை ஒதுக்கிவிட்டு அன்னையைச் செந்தில் தூக்கிப் பிடித்துக் கொள்கிறான்.

     “எனக்கு ஏனப்பா முன்பே எழுதவில்லை?”

     “யாருக்குத் தெரியும்? சுமதியிடம் நாலு மாசம் முன்னமே, வேலம்மாளைப் பண்டாசுபத்திரிக்குக் கூட்டிட்டு போயிக் காட்டுன்னேன். செந்தில் வந்தபோது காட்டி எதோ மருந்து வாங்கிக் கொடுத்ததாக முன்பு சொன்னான். அவ என்னைக்காவது முடியாம படுத்திருந்ததாக எனக்கும் தெரியாது. திடீர்னு ரெண்டு வாரம் முன்ன, சுமதி ஆபீசில் வந்து கூப்பிட்டா, ரத்தமா வாயில வந்து மயங்கி விழுந்திட்டாள்னு. நான் உடனே போயி குமரேசன் டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன். அவர் பார்த்திட்டு எக்ஸ்ரே எடுக்கணுமின்னார். பார்த்தால் ஒண்ணும் மிச்சமில்ல. இரண்டு சுவாச கோசங்களும் கரைஞ்சு போயிருக்கு. வந்து ஊசி போடுறார். இருந்தாலும் செந்தில் நாகர்கோயில் ஆசுபத்திரியில் சேர்த்திடறேன்னு புறப்பட்டுப் போயி நேத்துத்தான் ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்கிறான். இன்னிக்கே கொண்டுட்டுப் போறேன்னு சொல்றான். வாடகைக்காரு தெரிஞ்ச எடத்திலே ஏற்பாடு பண்ணிருக்கேன்னா...”

     அவள் நாவெழாமல் நிற்கிறாள்.

     தன்னைப் பார்க்க வேண்டும் என்று வேலம்மாள் சொல்லி, தந்தை அதனால்தான் கடிதம் எழுதியிருக்கிறார் என்று புரிகிறது.

     அவளுடைய இயக்கம் இல்லாத அந்த வீட்டை அவளால் கற்பனைகூடச் செய்யமுடியாது. ஆனால் அவளது இயக்கம் ஓய்ந்துவிட்டது. சமையலறையில் சுமதியை ஒரு நாளும் காண முடியாது. இப்போதும் செந்தில்தான் அவளுக்கு உதவி செய்கிறான். கஞ்சியை ஆற்றித் தாயாருக்குக் கொண்டு செல்கிறான். சாப்பிடுவதற்குத் தட்டுகளைக் கழுவி வைக்கிறான்.

     “நீ இன்னிக்குக் காலேஜிக்குப் போகவேண்டாம் சுமி. ஏன்னா, காரு மத்தியானம் கிடச்சிடுச்சின்னா கொண்டுட்டுப் போயிடலான்னிருக்கிறேன்!” என்று அவன் அவளிடம் தெரிவிக்கிறான்.

     “சரி, நீங்க அவுங்ககூட சாப்பிட உக்காந்துக்குங்க, நான் போடுறேன்!”

     தன்னை அந்நியமாக்கிவிட்டு அவர்கள் இரகசியம் பேசுவது போல் அடுக்களையில் ஏன் நிற்கவேண்டும் என்று விஜி கருதுகிறாள்.

     “அப்பா, பொரியலுக்கு உப்புப் போதுமான்னு பாருங்க” என்று கேட்டுக்கொண்டு சுமி பரிமாறுகிறாள். அவள் முன் போலில்லாமல் சட்டென்று ஏதோ பதவி ஏற்றுவிட்ட கௌரவத்துடன் இலங்குகிறாள். கால்களில் சல்சல் என்று கொலுசுகள் ஒலிக்கின்றன. மருதோன்றி துலங்கும் கைகள்... குனிந்து பரிமாறும்போது பின்னல் தரையைத் தொட விழுகிறது.

     “தலையைத் தூக்கி முடிஞ்சிக்கிறதில்ல?” என்று செந்தில் நினைப்பூட்டுகிறான்.

     நான்கு மணியளவில் கார் வந்து விடுகிறது.

     அந்த வீட்டின் உயிர்மூச்சுப் போல் இயங்கிய வேலம்மா, வீட்டை விட்டுப் போகிறாள். விஜிக்கு இனந்தெரியாததோர் துயரம் கவ்வுகிறது.

     சுமதி இதையும் இயல்பாக எடுத்துக் கொள்வதுபோல் அசையவில்லை.

     “இரவு தான் வருவதற்கு முடியாமலிருக்கும். பதனமாக இருந்து கொள்ளுங்கள்...” என்று சொல்லிவிட்டு அப்பா செல்கிறார்.

     கார் மறைந்த அந்த நிமிடத்திலேயே சுமதி அவளிடம் வந்து, “விஜி, நான் மாரியம்மன் கோயில் தெருவரை போய் விட்டு இதோ வந்துவிடுகிறேன். கல்பனாவிடம் ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறேன்...” என்று அவளுடைய பதிலை எதிர்பாராமலே கைப்பையை மாட்டிக் கொண்டு நழுவுகிறாள்.

     விஜி உள்ளே வருகிறாள். அந்த வீட்டை, தீப்பெட்டி தாள், அட்டை, சில் என்ற சாதனங்கள் இல்லாமல் அவள் இப்போது தான் பார்க்கிறாள். கூடத்தின் மறுபுறம் ஒரு புதிய மரப்பெட்டி வீற்றிருக்கிறது. பச்சை வண்ணம் தீட்டப் பெற்ற அப்பெட்டியை அவள் மெல்லத் திறக்கிறாள்.

     பளபளவென்று துலங்கும் ஸ்டீல் பாத்திரங்கள்... தட்டுக்கள், அடுக்குகள், தவலை, குடம், விளக்கு... இவை அனைத்தும் தீப்பெட்டிகள்... எல்லாம் வேலம்மாளின் கை, கன்னம், கழுத்துச் சதை, இரத்தங்களைக் குடித்துவிட்டு வீற்றிருக்கின்றன.

     இன்னும் சுமி போட்டுக் கொண்டிருக்கும் கொலுசு, விதவிதமாக உடுத்தும் சேலைகள் எல்லாமும் கூடத்தான்...

     மழை நசநசவென்று யாருக்காகவோ துயரப்படுவது போல் ஊற்றுகிறது. சுமதி கைப்பையில் கொண்டுபோன சிறு குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.

     இவளிடம் சரளமாகப் பேசுவதைக்கூட விரும்பாதவள் போல் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்கிறாள்.

     அப்பா மறுநாள் காலையில் திரும்பி வந்து விடுகிறார்.

     “மழ வந்து இந்த வருசம் புழப்பக் கெடுக்குது!” என்று குரல் கொடுத்துக் கொண்டு இட்டிலிக்கார முத்தாச்சி இட்டிலி கொண்டு வந்து வைக்கிறாள். வேலம்மாளைப் பற்றி விசாரிக்கிறாள். இடுப்பில் ஒரு கையுடன் இன்னொரு கையை விரித்து, பெருமூச்செரிந்து அங்கலாய்த்து விட்டுப் போகிறாள். மழையின் நசநசப்பு வண்டிகளும் மனித நடமாட்டங்களும் எழுப்பும் புழுதியைக் கசகசப்பாக்கித் தெருவை நரகமாக்குகிறது. தீபாவளியுடன் பட்டாசுக்காரர்களின் பிழைப்பு ஓய்ந்துவிடும். ஆனால் வழக்கம்போல் கட்டைக் கணக்குப் பிள்ளை கூடலிங்கம் வருகிறான். லோசனி இப்போது அந்த வளைவில் இல்லை. வேறு தெருவுக்குக் குடிபெயர்ந்து விட்டாள்.

     சுமதியும் கல்லூரிக்குச் சென்றபின் விஜி அப்பாவின் புத்தக அலமாரியைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள்.

     சோஷிலிஸம்; தியரி அண்ட் பிராக்டிஸ்... பொருளாதார தத்துவங்கள் - தீண்டாதார் யார்? - ஆதிவாசி ரிவோல்ட் - அந்த நூலை உருவுகிறாள்.

     தனிமை அவள் பலவீனங்களைக் கெல்லிவிடும்போது, அந்த நூலை ஆதரவாகத் தஞ்சம் அடைவதுபோல் புரட்டு கிறாள்.

     செல்வம், சுகம், அச்சம் எல்லாவற்றையும் பின்னே தள்ளிவிட்டு அவளைப்போல் ஒரு பெண், அடிமை விலங்குகளுக்கும் கீழ்ப்பட்ட நிலையில் நில உடமைக்காரர் மற்றும் கடன் கொடுத்தவர் ஆகியோரின் இரும்புப் பிடியில் தங்கள் உடலைத் தேய்த்து உழன்ற மக்களிடையே மானுட உணர்வுகளை எழுப்ப அவர்களைத் தேடிக் கால் நடையாக காடு, மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களெங்கும் செல்கிறாள். போலீசும், அரசின் ஏனைய ஆதிக்க சக்திகளும் அவளை அச்சுறுத்தி விடவில்லை. ஆனால் தன்னந்தனியாக என்றில்லை, அவளுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தவர் பூரணமான நம்பிக்கையையும், ஆற்றலையும் அவளுக்கு அளித்திருக்கிறார். அந்தப் பலம், அவளை ஒரு வீர நாயகியாக்குகிறது.

     ஆனால், இன்றைய சூழலில் பெண்மை ஏனிப்படித் தாழ்ந்து போயிற்று? அவள் ஆதரிசமாக நினைக்கக்கூடிய பெண்கள்கூட, சுதந்தரத்துக்கு முன் கொண்டிருந்த இலட்சியக் கனலை அவித்துவிட்டார்களே! பிறகு தேசீயம் என்பதற்கும் பொருளே இல்லையா?

     அவளைப் போன்ற இளம் பெண்கள், இன்றைய நிலையில் எப்படி இயங்க வேண்டும்?

     தனக்குத் திருமணமான பின்னர், தான் சொந்தமாக நினைக்கக்கூடிய மக்களிடமிருந்து தொலைவுக்கு விலக்கப்பட்டு அந்நியமாகி விட்டாற்போல் உணருகிறாள். எல்லோரும் அவளை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். சுமதியும் கூட அவளை ஒதுக்குகிறாள். தனக்கென்று அந்தரங்கமாக எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தோழமைக்குரியவர் யாருமே அவளுக்கு இல்லை!

     சின்னப்பட்டிக்குப் போய் வரலாமென்று ஓர் உந்தல் தோன்றுகிறது. சிறு துண்டுக் கடிதாசியில் அதைக் குறித்து சுமதியின் சீப்புக்கடியில் வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு அவள் கிளம்புகிறாள்.

     சங்க அலுவலகத்தில் அலெக்சாந்தர் என்ற இளைஞன் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். அவனிடம் தந்தையிடம் கொடுக்கும்படி சாவியைக் கொடுத்துவிட்டு அவள் பஸ்ஸைப் பிடித்துச் செல்கிறாள்.

     கூடமங்கலம் வந்ததே தெரியவில்லை...

     ஓ! ராசாத்தி ஓடையில் தண்ணீர் ஓடுகிறது. அதனால் பஸ்ஸை அந்தப் பக்கமே நிறுத்திவிட்டான். எல்லோரும் ஓடையில் முழங்காலளவில் நீரில் இறங்கிக் கடந்து செல்கின்றனர்!

     அரசனாற்றிலும் மணல் திட்டுகளுக்கிடையே, திருமணப் பெண் புத்தணி பூண்டாற்போல் தண்ணீர் சூரியனொளியில் மின்னிக்கொண்டு ஓடுகிறது. கோயில் மிகவும் அழகிய சூழலில் காட்சியளிக்கிறது. அரசும், வேம்பும் கோயிலுக்கருகில் இணைந்த இள மரங்களாய்ப் பசுமை கொழிக்கிறது; அதைப் பார்க்கையில், தன்னை மயிலேசன் அங்கே வந்து சந்தித்துப் பேசிய நினைவுகள் முட்டுகின்றன.

     அதெல்லாம் கனவாக இருந்துவிடக் கூடாதா என்று நினைத்துக் கொள்கிறாள். அவள் வரைக்கும் கனவாகத் தான் போய்விட்டது. தான் தவறாக நடந்துகொண்டதற்கு அவன் வருந்தி அவளை உள்ளத்தோடு விழைந்து வரப்போவதில்லை. மறுமணப் பேச்சுக்கள் எழுந்துவிட்டன.

     விரைவில் ரங்கேஷ் வக்கீலை அனுப்பலாம்...

     வண்டியிலிருந்து இறங்கி நடப்பவர்களில் பலரைத் தனக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்ற நினைப்பில் அவள் நெகிழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடக்கிறாள்.

     ஆறுமுகத்தின் தேநீர்க் கடையில் தீண்டாதாருக்கென்ற தனிக் சிளாசு இருக்கிறது. முதலில் அவள் கண்களை அதுதான் குசலம் விசாரிக்கிறது. பிறகு ஆறுமுகத்தின் குரல் கேட்கிறது.

     “அடாடா, வாங்க விஜியம்மா? எப்ப வந்தீங்க மட்றாசிலிருந்து?” பீடி குடித்துக் கொண்டும், தேநீரைச் சுழற்றிக் கொண்டும் இருப்பவர்கள் அவளைப் பார்க்கின்றனர்.

     “சைகிள்... வேணுமே...?”

     “அஞ்சு நிமிசம்... இப்படி உள்ளே வந்து உட்காருங்கம்மா!” என்று அவளுக்கு ஒரு ஸ்டூலை எடுத்து உட்பக்கம் போட்டு உபசரிக்கிறான். பையனை ஏதோ சொல்லி விரட்டுகிறான். பிறகு ஒரு நல்ல டீயடித்து அவளிடம் கொடுக்கிறான். அவள் சின்னப்பட்டி வீட்டில் சென்று இறங்குகையில் மணி இரண்டரை.

     ஊர் ஒரே சேறும் சகதியுமாக இருக்கிறது.

     நாயுடு வீட்டுக் குழந்தைகள் மண்ணில் சகதியை அளைந்து விளையாடுகின்றனர். இவர்கள் வீட்டுக் கதவு அடைத்திருக்கிறது. திண்ணையில் ஒரு ஆடும் குட்டிகளும் படுத்திருக்கின்றன. புழுக்கைகள் நிறைந்து அசுத்தமாக இருக்கிறது.

     விஜி சைகிளை ஏற்றி நடையில் வைத்துவிட்டுக் கதவைத் தட்டுகிறாள்.

     “ஐயாம்மா?”

     தாளிடப்படவில்லை. தட்டும்போதே திறந்து கொள்கிறது.

     “ஆரு...?”

     ஐயாம்மாவின் குரலா அது?

     திடுக்கிடும் உணர்வுடன் அவள் அருகில் செல்கிறாள்.

     “நான்தான் விஜி... விஜி, ஐயாம்மா! உங்க உடம்புக்கென்ன ஐயாம்மா?”

     பாட்டி அவளை ஏறிட்டுப் பார்க்கிறாள்.

     “ஒடம்புக்கென்ன, போகணுமில்ல...!”

     முடியை அள்ளிச் செருகிக்கொண்டு, கையில் ஒரு குச்சியுடன் அக்கம்பக்கம் ஒரு நாய்கூட வராமல் துரத்திச் சுத்தமாக வைத்திருக்கும் ஐயாம்மா, வாயிற்படியில் ஒரு ராணிக்குரிய மிடுக்குடன் அமர்ந்து தனது வைராக்கியத்தை நிலைநாட்டிய அந்த வடிவம் எப்படி இப்படியாயிற்று? முடி கொட்டி, மண்டை தெரிய, முகம் இறகுதிர்ந்த கோழியை நினைப்பூட்டுகிறது. கயிற்றுக் கட்டில் குழிய, படுத்துக் கிடக்கிறாள். குழிந்து பாதாளத்துக்குப் போய்விட்ட கண்கள் இனிமேல் எழும்புவதற்கில்லை என்று இயம்புகிறது.

     அருகில் ஒரு ஸ்டவ், அதன்மீது ஒரு கரிச்சட்டி; ஒரு தம்ளர், கருப்பட்டியுள்ள பிளாஸ்டிக் டப்பி, டீத்தூள்...

     “ஓடம்புக்கென்ன, மனசுக்குச் சொகம் கெட்டா, ஓடம்பு தன்னால விழுந்து போவுது... ஏண்டி, உம் புருசன் சீமக்கிப் போறப்ப ஒன்ன வந்து பாத்தானா?”

     இந்தக் கேள்விகளுக்காகத்தான் என்னிடம் இன்னும் தெம்பை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவள் சொல்வது போலிருக்கிறது.

     விஜி உதட்டைப் பிதுக்கியவளாக மௌனம் சாதிக்கிறாள்.

     “என்ன உதட்டப் பிதுக்கற...”

     “ஐயாம்மா, இப்ப நீங்க எதுக்கு அதெல்லாம் நெனச்சி அலட்டிக்கிறிய?”

     “நெனச்சி... அலட்டிக்கிறனா?... ஏண்டி... கோபுரத்திலே ஏறியிருக்கான்னு பெருமப்பட்டேனே? குப்பயில தாந்து நிக்கிறியே? ஊரு உலகமெல்லாம் நம்மப் பாத்துச் சிரிச்ச காலம் போச்சு. மறந்திட்டம்னு கருவப்பட்டனே, சாமி இதுதான்னு சொல்லிட்டா...” கண்ணீரும் கம்பலுமாகக் குரல் தடைபட தளர்ந்த உடல் குலுங்குகிறது. விஜிக்கு ஏன் வந்தோமென்றிருக்கிறது.

     “பஞ்சநதம் மச்சினிச்சி பொண்ணக் குடுத்திடணும்னு புடியா நிக்கிறா. ஆனா, அண்ணன் பாத்து சீமக்கி அனுப்பிச்சிருக்கா. தங்கமான புள்ள. நம்ம சரக்கு ரோசாப்பூன்னு நினைச்சே, சப்பாத்திக்கள்ளின்னு ஆயிடிச்சி...”

     விஜி அன்று மாலையே திரும்பி விடுகிறாள். பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகுதான் மாரிசாமியைக் கூடப் பார்க்கவில்லை என்று நினைவு வருகிறது.