31

     இந்த உச்ச கட்டத்துக்காகவே மழை அப்படிக் கொட்டியதாகத் தோன்றுகிறது.

     ஜனவரிப் புத்தாண்டு அங்கு சிறுவர் ஆண்டாக, மரண சோகத்தில் ஆழ்த்தும் எதிர்மறைப் பொருளுடன் துவங்கியிருக்கிறது. ஊரே துயரத்தில் ஆழ்ந்து மழை கூட்டிவிட்ட அவலங்களில் இருந்து மீளும் நம்பிக்கையைக் கூட இழந்து ஒடுங்குகிறது.

     பெரும்பான்மை வீடுகளைக் குஞ்சுகளின் இழப்பு பாதித்திருக்கையில், காத்தமுத்துவின் வீட்டில் மட்டும் முனைமுறியாமல் தப்பிவிட்டனர். அந்த வீட்டின் இடிந்த சுவரை நிமிர்த்துகின்றனர்; படலைக் கட்டுகின்றனர். சடச்சியும் அவள் ஆணும் கூலிவேலைக்குச் செல்கின்றனர்.

     இந்த இரண்டு மூன்று நாட்களில், சண்முகம் இறந்து போன சிறுவர் சிறுமியரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்த விபத்து, குழந்தைத் தொழிலாளர் பற்றிய நிலையை வெளி உலருக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் வண்ணம் நிகழ்ந்திருக்கிறது. விஜியும் தந்தையும் தகவல்கள் திரட்டிக்கொண்டு இச்சந்தர்ப்பத்தில் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

     நான்காம் நாள் பகலில் இரத்தினமும் மானேசரும் அந்தக் கிராமத்துக்குச் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.

     சிவகணபதியும் விஜியும் சந்தனக் குடும்பன் வீட்டில் தான் வாயிலில் நிற்கின்றனர். அப்போது...

     “பிள்ளைகள் எல்லாரும் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் யாருக்கும் இன்று மழையில் நாங்கள் வேலைக்குப் போகமாட் டோம் என்று சொல்லத் தைரியம் இல்லை. அந்தத் தைரியம் இருந்திருந்தால் வெள்ளம் வடியட்டும் என்று ஓடைக்கரையில் வண்டியுடன் அவர்களை மணிக்கணக்கில் நிறுத்திவைக்கச் சம்மதித்திருப்பார்களா? அவர்களை இப்படி அடிமையாக்கி வைத்தது உங்கள் தப்பு - இனியாயினும் அவர்களை நல்லபடியாக வளர்க்கிறது நம்ம பொறுப்புன்னு நீங்க நினைக்கணும்...” என்று விஜி கூறிக்கொண்டிருக்கிறாள்.

     மம்முட்டியானுக்கு ஒரே ஆத்திரம். “விஜிம்மா, அந்த ஏசண்டுப் பயலும் டைவரும் எங்கண்ணுல பட்டா கோழியைத் திருவறாப்பல குரவளையத் திருகிப் போடுவ. புள்ளங்க வெளியே குதிச்சிடாதபடி கதவ அடச்சிட்டானாமில்ல?”

     “வணக்கம்மா - வணக்கம் ஸார்...” என்று கூறிக்கொண்டு இரத்தினமும் மானேசர் சாமியப்பனும் வருகின்றனர்.

     விஜி தலையை அசைத்துப் பதில் வணக்கம் தெரிவித்தவாறு நிற்கிறாள்.

     “எங்கடா வந்தீய?...” என்று மம்முட்டியான் பாய்கிறான். ஆனால் இரத்தினம் கண்களைத் துண்டால் துடைத்துக் கொள்வதுபோல் பாவனை செய்கிறான். “உங்கோபம் நியாயம் தான். விளையாட்டுப் பிள்ளைங்க. ஓடையைத் தாண்டிடுவேன்னு எறிங்கி ஓடிச்சாம். கதவைச் சாத்தினேன்னு மன்னாரு சொல்றா. அவங்களும் வண்டிலதா குந்தியிருக்கிறாங்க. தண்ணி ஒடப்பைப் பாத்து வண்டியப் பின்னுக்கு எடுக்க முயற்சி பண்ணினேன்னு அழுவுறா. நடந்தது நடந்துபோச்சு. ரங்கையா முதலாளியும், மயிலேஷ் முதலாளியும் நாலு நானா சோறு தண்ணி இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டு வருத்தப்படுறாங்க. இறந்து போன குளந்தைங்களுக்கெல்லாம், ஒவ்வொருத்தருக்கும் தலா, ஐயாயிரம் நட்ட ஈடு குடுக்கிறதுன்னு தீர்மானம் ஆயிருக்கு...” என்று நிறுத்துகிறான். “ஐயாயிரமா...” என்று சந்தனக் குடும்பன் தெளிவுபடுத்திக் கொள்ள முயலுகிறான்.

     இதற்குள் ‘மானேசரும் ஏசன்டும்’ வந்திருக்கும் செய்தியறிந்து இடுப்புப் பிள்ளைகளும் வயிற்றுப் பிள்ளைகளுமாகப் பல தாயர் அங்கு வருகின்றனர்.

     “ஆமாம். ஐயாயிரம்தான்...” என்று சாமிக்கண்ணு அழுத்திச் சொல்கிறார். “அது மட்டுமில்லை, எம்.எல்.ஏ., எம்பி. எல்லாரும் கூடி நேத்துப் பேசிருக்கா. டெல்லி சர்க்காரிலேந்தே ஆறுதல் சொல்லித் தந்தியெல்லாம் குடுத்திருக்காவ. முதலமைச்சரும் இறந்துபோன ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு தலா ஐயாயிரம் குடுக்கும்னு அறிக்கை குடுத்திருக்காக. ஒவ்வொரு குழந்தைக்கும் பத்தாயிரம் வரும்...”

     “பத்தாயிரம்...”

     “அப்ப மூணு பிள்ளங்க போயிடிச்சே? எனக்கு எம்புட்டு வரும்?”

     “முப்பதாயிரம் வரும்...” என்று விள்ளுகிறார் சாமிக்கண்ணு.

     அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்ற பிறகு, அந்த ஆயிரங்களின் வலிமையை விஜி காண்கிறாள்.

     பத்து ஆயிரங்கள்! இறந்துபோன ஒவ்வொருத்தருக்கும்...

     ஒரு கட்டை அடுக்கினால் பதினேழு பைசா, ஒரு பெட்டி அடுக்கினால் இருபது பைசா என்று கணக்குப் போட்டு ரூபாய் ரூபாயாகச் சிட்டைவில் ஏற்றி, வாரக்கடன், மாசக்கடன் வட்டி கழிக்கப் பொழுதைத் துரத்திப் பிடித்த சிறுவர், தங்கள் இறப்பின் வாயிலாகப் பெற்றோர் முகங்களை ஜகஜ்ஜோதிகள் போன்ற ஆயிரங்களால் மின்னச் செய்துவிடுகின்றனர். மம்முட்டியான் கோழிக்குஞ்சுத் திருகலை மறந்தே போகிறான்.

     தனி வீடு கட்டிக்கொள்ள, டிரான்ஸிஸ்டர் பெட்டி வாங்க, வேப்பம்பட்டி சென்று இன்னொரு பெண் கட்டிவரத் திட்டம் போடுவதை விஜியிடமே தெரிவிக்கிறான்.

     ஆடுகள் வாங்கத் திட்டமிடுபவரும், உழவு மாடுகள் வாங்க நினைப்பவரும், பணத்தைத் தொடாமல் வட்டிக்கு விடுவதுதான் லாபம் என்று கணக்காக்கும் யோசனைக்காரரும் இறந்து போனவர்களை மறந்தே போகின்றனர். பெற்றவரின் தாபக் குழிகளைப் பத்தாயிரங்களின் நினைப்பே நிரவி அழித்து விடுகின்றன.

     “நெசமாலுந்தா குடுப்பாங்களாமா?...” என்று மலைக்கிறாள் மன்னம்மா.

     “இம்புட்டுச் சனங்களுக்கும் மத்தியில, மானேசரே வந்து சொல்லி இருக்கிறாரு. பொய் சொல்லுவாங்களா? விஜிம்மா கூட நின்னிச்சே? பொய்யின்னா அவுங்க வுடுவாங்களா?...” என்று சொல்லும் குடும்பன், குரலைத் தாழ்த்தி, “எம்பேருதா குடுத்திருக்கிறே, மூணுபிள்ளகன்னு. அதுங்க பேரச் சொல்லி, ஒந்தம்பிக்கு இதுல பாத்தியத இல்லன்னு அறுதியாச் சொல்லணும்...” என்று விள்ளுகிறான்.

     “அவன் நம்ம மகளக் கட்டினானில்ல? அதுக்கு அஞ்சாயிரம் குடுக்க வேண்டாமா?”

     “அஞ்சாயிரம் எதுக்கு? அவன் எப்பிடி இதுக்கு உரிமை கொண்டாடுவா? கட்டுனா. ஆனா தனிக்குடும்பம் வச்சானா?... ஆயிரம் குடுப்பம், வேற பக்கம் பொண்ணு கட்டப் போறேங்கிறான். கட்டிட்டு வரட்டும். அதுக்கு மேல சல்லி பேராது...”

     மன்னம்மாளுக்கு இன்னும் சந்தேகம். “அவந்தானே பிள்ளங்கள உசிப்பிட்டுப் போனா? ஏசன்டு, மானேசர் அவங்கையிலதான் பணத்தைக் குடுப்பா? சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுக்குக்கூட அவங்ககிட்டதான் குடுத்திருக்கா?”

     “அடி போடி... அறிவு கெட்டவளே, மானேசருமில்ல மொதலாளியுமில்ல. முதலமைச்சர் வந்து குடுப்பாராம்... அவவிய பெத்த தகப்பன் பேரச் சொல்லிக் கூப்பிட்டு, கையில ஒவ்வொரு புள்ளிக்கும் பத்தாயிரம் பத்தாயிரம்னு குடுப்பா...!”

     “அம்புட்டு நோட்டையும் எப்பிடி எண்ணுவ?

     மன்னமாளின் முகத்தில் மகிழ்ச்சிப் பொங்கல் துளும்புகிறது.

     “நோட்டில்லடி, காயிதமாட்டும் இருக்கும், செக்குண்ணுவா. அத்த வாங்கில குடுத்தா அப்பப்ப சில்லறையா வேணும்கிற பணம் தருவா. அதெல்லாம் எனக்குத் தெரியும், பாரு இனிமே”

     “எனக்கு அந்தப் புள்ளிபோட்ட பச்சசீலயும் மினுமினு ஜாக்கெட்டும் வாங்கித் தாரணும். நீங்க வாட்டுல குடிச்சிப் போட்டு, கேட்டா எட்டி ஒதப்பிய...”

     “அடப்போடி பயித்தியக்காரி. அப்ப துட்டில்ல இப்ப சமாசாரமே வேற. உனக்கு என்ன சீலன்னாலும் வாங்கிக்கலாம். முப்பதாயிரம் இப்ப நமக்கிருக்கு. முன்னூறு ரூவாயிக்கிக்கூடச் சீலை இருக்கு. பெரிய வீட்டுப் பொம்பிளிங்க உடுத்தற சீலை...”

     “சீல மட்டுந்தா வாங்கிக் குடுப்பியளா?...”

     புதிய ஆசைகள் கிளைவிடும் நாணத்தில் அவள் புதுப் பெண்ணாகவே மாறுகிறாள். “என்ன ஆச? சொல்லிப் போடு? நெறவேத்திடுவம்!”

     “எனகு... எனுகு... நாயகர் வூட்டில முன்ன அவிய அக்கச்சி வந்திருந்தப்ப, கழுத்தில தாலி போட்டிருந்திச்சி சேப்புக்கல் வச்சு மினுமினுப்பா சங்கிலில தாலி. அது எனக்கு ஒண்ணு போட்டுக்கிடணும் பவன்ல...”

     “சவாசு...! போட்டுகிடுவம்...” என்று இழுத்துக் கொள்கிறான்.

     குழந்தைகள் இன்னும் உற்பத்தியாகக் கூடிய மகிழ்ச்சிக்கும் தெம்புக்கும் தூண்டுகின்றன பத்தாயிரங்கள்.

     காற்றோடு மிதக்கும் பத்தாயிரம் என்ற சொற்கள். சடச்சியின் வீட்டு ஆண்பிள்ளைக்கு ஏமாற்றத்தைத் தூண்டி எழுப்புகின்றன. ஆனாலும் சடச்சியின் மீது எரிந்து விழுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. காத்தமுத்துவுக்கோ ஆற்றாமை பொங்குகிறது. ஏன் அவர்களுக்கு மட்டும் பத்தாயிரம், அவர்கள் என்ன செய்தார்கள்?

     எங்கேனும் நான்குபேர் கூடிப் பேசுவதைப் பார்த்தால் அவனும் போய் நிற்கிறான். விஜிம்மா சர்வ வல்லமையுடையவள் என்று நினைத்திருந்தான். மானேசரோ, ஏசன்டோ அவள் சொல்வதைக் கேட்கவில்லை. விஜியம்மா முதலாளியுடன் சண்டைபோட்டுக் கொண்டு வந்து விட்டாளென்று அரிக்காணிப் பாட்டி அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்ததை அவன் செவியுற்றிருக்கிறான்.

     மாரிசாமி அண்ணாச்சியைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று திரிகிறான். மாரிசாமி காலையில் எழுந்து கட்டிய பெண்பிள்ளையுடன் காட்டு வேலைக்குப் போய் விடுகிறான்.

     பெரியப்பட்டிப் பஞ்சாயத்து ஆபீஸை ஒட்டிப் பெரிய பந்தல் போட்டிருக்கிறார்கள். மைக்கு செட்டில் பாட்டு சின்னப்பட்டிக்கெல்லாம் கேட்கிறது. முதலமைச்சர் வந்து பத்தாயிரங்களைத் தம் கைகளால் வழங்குகிறார் என்றால் ஊரில் யார் தங்கியிருப்பார்கள்? சினிமாக் காமிராக்கள் பளிச் பளிச்சென்று மின்ன முதலமைச்சரும், பெண் அமைச்சரும் துயரமே உருவாக நின்று சோடியாக வரும் பெற்றோருக்கு ஆறுதலும் பணமும் அளிக்கின்றனர். குடும்பாயிக் கிழவியின் மகள் வயிற்றுப் பேத்தி இறந்து போயிருக்கிறது. அந்தக் கிழவியின் ‘கண்ணீரை’த் துடைக்கும் அமைச்சரைக் காமிராக்கள் கிளிக் கிளிக்கென்று படம் பிடிக்கின்றன. கிழவி எதுவும் விளங்காமல் கூசும் வெளிச்சத்துக்குக் கண்களை மூடிக் கொள்கிறாள்.

     ‘ஆறுதல்’ விழா முடிந்து கார்களும், ஜீப்புகளும் ஏனைய அதிகாரிகளின் ஊர்திகளும் சென்ற பின்னரும் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறது.

     பொழுதோடு வீடு திரும்பிய சடச்சி, படலை திறந்து கிடப்பதையும், குடிசைக்குள் அடுப்பிலிருந்த சோற்றுப் பானையை நாய் உருட்டித் தள்ளியிருப்பதையும் காண்கிறாள். வடிவு கைக்குழந்தையுடன் ஈரம் படிந்த மண்ணைத் தோண்டி, பிட்டுச் சமைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

     வந்த ஆத்திரத்தில் அதை நான்கு மொத்துகிறாள்.

     காத்தமுத்துவைத் தேடிக்கொண்டு செல்கிறாள்.

     வடிவு ஊளையிட்டு அழுகிறது. “எங்கே அந்தப் பய, துப்புக் கெட்ட பய. குடிக்கிற கஞ்சிய நாய் சரிச்சிருக்கு. கதவத் துறந்து போட்டுட்டு எங்கே போளா?...”

     பின்புறம் கிணற்றுக் கரையில்தான் காத்தமுத்து இருக்கிறான். சிதறிக் கிடக்கும் உடைந்த மண்பாண்டச் சில்லுகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் வீசிக்கொண்டு மனக் குமுறலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

     “இங்க வாடால, ஒன்ன வெட்டிப்பலி வய்க்கிற! ஒளுங்கா ஒரு வேலை செய்யத் துப்பில்லாதவ...”

     அவள் அவனைத் துரத்த, அவன் ஓட, நாய் குரைக்க, அவள் கத்துகிறாள். “வூட்டுப் பக்கம் வா! உன்ன என்ன செய்யிறம் பாரு! வூட்டத் தொறந்து போட்டுட்டு ஆடுறா. ஒண்ணுக்குத் துப்பில்லாதவெ. நீ தொலஞ்சி போயிருந்தீன்னா, இப்ப எனக்கும் பத்தாயிரமேனும் கிடச்சிருக்கும்!...”

     காத்தமுத்து கையிலிருக்கும் பானைச் சில்லைக் குறி பார்த்துத் தாயின் மீது வீசுகிறான்.

     “ஐயோ, சாமி கொன்னு போடுறானே” என்று அவள் ஓலமிடுகிறாள்.

     “ஒன்னக் கொன்னி போடுவே!” என்று அருகில் வந்து அவளை உதைத்துவிட்டு ஓடுகிறான்.