4

     “மாப்பிள வரக்காணம். ஆம்பிள வாரமுன்னுவா மறந்திடுவா. நீ அங்க பெரியபட்டி வீட்டில அத்தகிட்டச் சொல்லிட்டு வந்திருக்கயில்ல?” என்று பாட்டி கவலையுடன் விசாரிக்கிறாள்.

     “அங்கிருந்துதான் சைக்கிள் எடுத்திட்டு வந்தேன். மருதை வந்து சைக்கிளை திருப்பி எடுத்திட்டுப் போயிருக்கிறான். அவுங்களுக்குத் தெரியும் நான் இங்கே வருவேன்னு. ஆனா எனக்குத் தெரியும், இன்னிக்கு ராத்திரி வரமாட்டாருன்னு...” விஜி எங்கோ சுவரைப் பார்த்துக் கொண்டு பேசுகிறாள். பெரிய இடத்தில் திருமணமாகி முதன்முதலாகத் தனியாகப் பேரப் பெண் வந்திருக்கிறாள். தீபாவளிக்கு முன்புதான் கல்யாணம் நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு புதுநகரத்துப் பங்களாவிலிருந்து காரில் பெரியபட்டிக்கு அவர்கள் சாமி கும்பிடுவதற்கும் பெரியவரான பாட்டனாரைப் பார்ப்பதற்கும் இரண்டு மூன்று முறைகள் வந்திருக்கிறார்கள். ஒரே ஒரு தடவை இங்கும் எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள். இரண்டு நிமிடங்கள் கூடத் தங்கவில்லை. காப்பி குடிக்கவுமில்லை. காரில் திரும்பி விட்டார்கள். பாட்டிக்கு அதுவே கொள்ளாத பெருமையாக இருந்தது. இப்போது... விஜியின் முகத்தில் உற்சாகமோ, பூரிப்போ தெரியவில்லை; கருமை நிழலாடுகிறது.

     “ஏண்டி, இருளாச் சமஞ்சிட்ட? ஆம்பிள, ஆயிரம் இருக்கும், வர முடியாம போயிருக்கும். காலம காரெடுத்திட்டோ, பேக்கெடுத்திட்டோ வருவா!” என்று ஆறுதல் கூறுகிறாள்.

     விஜிக்குப் பாட்டியின் அறியாமையை நினைத்து இரக்கம் தோன்றுகிறது. தாலத்தில் சோறு போட்டுப் பாலை ஊற்றுகிறாள். முரமுரப்பாக இருக்கும் பகோடாவை அவளுக்கு வைத்துவிட்டுத் தானும் முன் பல்லால் அதை மெதுவாகக் கடித்துக் கொறிக்கிறாள்.

     விஜி எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுத் தட்டைக் கழுவி வைக்கிறாள்.

     பனைநார்க் கட்டிலில் சமக்காளத்தையும் தலையணையையும் பேத்திக்கு வைத்துவிட்டு, தான் ஒரு பாயையும் சீலையையும் கீழே போட்டுக் கொள்கிறாள்.

     விளக்கை அணைத்ததும் கொசுக்கள் பாடுகின்றன. விஜிக்கு முகத்தை மூடிக் கொள்ளப் பிடிக்காது. முகத்தில் கொசு வந்து குந்துகிறது. போர்வையால் மூடிக் கொள்வதும் திறந்து கொண்டு கொசு அடிப்பதுமாக அவள் சிலும்புவது கண்டு பாட்டி, “ஒறக்கமில்லாம கொசுச் சனியம் தொல்ல குடுக்கும்... மாப்பிள வந்திருந்தா பைக்கில வச்சிட்டுக் கூட்டிப் போயிருப்பா. முன்னெல்லாம் ஐயம்மா வீட்டுக்கு வந்தா மத்தியானமெல்லாம் ஆடீட்டு வந்து சோறு தின்னதும் படுத்து ஒறங்கிடுவிய” என்று நினைப்பூட்டுகிறாள்.

     விஜிக்கு அந்த நினைப்பே இப்போது சங்கடமாக இருக்கிறது. “ஐயாம்மா, பெரியபட்டில இருக்கும் கெழவனாருக்கு நம்ம ஐயாப்பாவைத் தெரியுமா?”

     “கெழவனாரா அவுரு. உம் மாப்பிளக்கி அப்பாவோட சித்தப்பா அவுரு. ஒனக்கும் தாத்தா மொறையாகணும். அவுரோட தாதாரிக்கார மகதா உங்கம்மா...” என்று அறிவுறுத்துகிறாள் பாட்டி.

     “அந்த ஒறமொறயெல்லாம் ஆருக்குத் தெரியும்? நா இத்தினி வருசமா இங்க வந்திட்டுப் போயிருக்கிற, அந்த அத்தையோ, தாத்தாவோ ஆரும் என்னையோ அப்பாவையோ இல்லாட்ட தங்கச்சியையோ சொந்தமாக் கூப்பிட்டுப் பேசலயே ஐயாம்மா!”

     “சொந்த பந்தமெல்லாம் போயி வந்து கொண்டாடிட்டாத்தான் இருக்கும். உன் அம்மா இருக்கையிலேயே அப்பன் கத்திரிச்சிட்டான் அப்பவே. ஆனா, அதுதான் இப்ப வட்டி போட்டாப்பில, அந்த வீட்டுப் பையனக்குத்தான் வாக்கப்பட்டிருக்கே? இப்ப இங்கவுட சொந்தம் அங்கதான வருது? காருல வரிய, புசுக்குனு வந்திட்டுப் போயிடுறிய!” பாட்டிக்குக் குரலில் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கி வழிகிறது.

     விஜி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

     “ஏண்டி, உம் மாமியா நாத்தூனெல்லாம் எப்படி இருக்கா? தவிசுப்பிள்ள, எடுபிடி ஆளுவ, தோட்டக்கார எல்லாம் இருக்கா, கும்புக்குள்ளாற கொடைக்கானல் போல குளுகுளுப்பா இருக்க மிசின் வச்சிருக்கா, வேனலொண்ணும் தெரியாதுன்னெல்லாம் பஞ்சநத மாமன் வந்து எல்லாம் சொன்னப்ப மனசு நெறஞ்சிருந்திச்சி. உங்கப்பன்தா தலெலெழுத்து நல்லால்லாம எப்படியோ இருக்கிறான். ரெண்டும் பொண்ணா இருக்குதுங்களே. எப்படிக் காசு பணம் செலவு பண்ணப்போறா? பி.ஏ.எம்.ஏ.ன்னு படிக்கவுட்டிருக்கிறனேன்னு கவலப்பட்டேன். தெய்வத்தையும், சாமியயும் மனசோடு வேண்டாத நாளில்ல. ஏதோ கண் தொறந்து பாத்தாரு. இல்லாட்டி, உங்கப்பன் இருக்கிற இருப்புக்கு நினைச்சிக் கூட பார்க்க முடியுமா?”

     விஜிக்கு இந்தப் பேச்சே பிடிக்கவில்லை.

     “நாங்கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலியே? ஐயாப்பா பெரியபட்டிலதான கட வச்சிருந்தான்னு சொல்லுவிய? அப்பவே அவுங்கல்லாம் அதா அந்தத் தாத்தா வீட்டில பணக்காரங்கதானா?”

     “ஏது? நம்மப் போலக்கூட இல்ல. கூடமங்கலத்தில சின்னக்கடை வச்சிருந்தா. உங்கப்பாவ நா பெத்திருந்தப்ப, அரசனாத்துல வெள்ளம் ஓடிச்சி பாரு! அந்த வருசம் இந்த ஊருல்ல... மொத்த ஊரிலும் வெள்ளக்காடு, காவேரிப்பாலமெல்லாம் ஒடஞ்சி போச்சின்னா... சின்னப்பட்டியில இந்தக் குடிசயெல்லாம் பொறவு வந்திச்சு. இந்த நாலஞ்சி வீடுங்க... ஒண்ணு எங்க மாமனாருக்குத் தம்பி குடும்பம். அவுகல்லாம் அப்பவே மதுர போயி, பிள்ளங்கல்லாம் படிச்சி எங்கெங்கோ வேலயாப் போயிட்டா! பாளடஞ்சி கெடக்கு பாரு, அது பஞ்சநாத மாமனுக்கு அக்கா வீடு. அவுங்களும் ஊர் விட்டுப் போயிட்டா. அப்பல்லாம் பெரியபட்டிச் செவங் கோயில்ல நாம கூட சாமி கும்பிடப் போகக் கூடாது. திருவிழாவுக்குப் படி குடுக்கணும். ஆனா உள்ளாற போகக் கூடாது. மீறினா நாடாருக்கும் தேவமாருக்கும் வெட்டுப்பழி குத்துப்பழி. மேல் சாதிக்காரங்கன்னு தேவமார் தங்களச் சொல்லிக்கிடுவா. அப்பல்லாம் ஒங்க ஐயாப்பாவும், பெரியபட்டித் தாத்தாவும் ஒரே பிடியா நின்னாங்க. அடிதடி லகளயாச்சு. இவுங்க கடயில சாமானம் வாங்கக் கூடாதுன்னு ஊர்க்கட்டுக் கொண்டாந்தா. அப்பதா பிழைக்க வழியில்லாம ரொம்பக் கஷ்டம். ஐயாப்பா போறப்ப உங்கப்பாவுக்கப்ப பதினஞ்சு வயசு. மதுரையில சித்தப்பாரு வீட்டிலேந்து படிச்சா. மகமை பண்டுல ஒத்தாசை செஞ்சா. ஆனா, பி.ஏ. படிக்கறப்ப காந்தி கட்சில சேந்திட்டான். செயிலுக்குப் போனான். உன் மாமனும் அப்ப கூட்டாளி. மதுரயில தான் அவுங்களுக்கு வெல்லமண்டி வியாபாரம். தங்கச்சிய அந்த நெருக்கத்தில் கட்டிக் குடுத்தான். அப்பவே அவ அப்பா எறந்து போயிட்டாரு... சொதந்தரம் வந்த பெறகு மாப்பிள காங்கிரசில பெரிய ஆளா பதவிக்கு வருவான்னு நெனச்சா. இவந்தலையெழுத்து வேரயாயிடிச்சி. முன்னயும் செயில் பின்னயும் செயில்னு வேற கட்சியாப் போயிட்டா. நீ பொறந்தப்புறந்தா பிரஸ்ஸில வேல பாக்குறன்னு புது நகரத்துக்கு வந்து குடும்பம் வச்சான்...”

     “அம்மா பிறந்த வீட்டுக்கே போக மாட்டாங்களாமே?”

     “ஆமா... மகா ரோசக்காரி. பிறந்தவன் மாப்பிளய ஏதோ பொறவா ஏசுனான்னு திரும்பிக் கூடப் பாக்கலியே? இப்பவும் என்னென்னமோ, தீப்பெட்டி ஆபீசுக பயராபீசுக வச்சிருக்கிறாங்க. புது நத்தம் ரோடில இப்பக்கூட குச்சி சீவுற பாட்டரி ஒண்ணு புதுசா வந்திருக்கு. உன் மாமனுடைய மக வயித்துப் பேரன்னு ஒரு சிறு பயல உங்க கலியாணத்தின் போது கூட்டியாந்துக் காட்டினான். அப்ப உங்கப்பாவுக்கும் ஒரு ஃபாட்டரி வச்சித்தாரமின்னா உங்க மாமன். அப்பவே அவனுக்கு சக்கர வியாதி, உடம்பு முடியாம இருந்தான். இங்க இந்த வீட்டில் எங்கிட்ட வந்து சொன்னான். ‘இதெல்லாம் எதுக்கு சின்னம்மா, அவனுக்கு ஒரு பெண் குழந்தையிருக்கு; அவன் புத்திக்கும் சத்திக்கும் எப்பிடியோ இருக்கலாமே! நா எந்தங்கச்சி நல்லபடியா வாழணுமின்னு பாக்குறேன். வீட்டுக்குப் போனா அருக்கோ மேப்பொட்டி, அடிப்பொட்டி ஒட்டிக் குடுக்கிறா. இவனே தொழில் தொடங்கினா நல்லபடியா இருக்கலாம். நீங்க புத்தி சொல்லுங்க’ன்னு முதநா வந்து சொல்லிட்டுப் போனா. அடுத்தாப்பலெ சீனாக்காரன் சண்டை வந்து, இவனப் புடிச்சிட்டுப் போயிட்டா!” என்று பாட்டி மூச்சுவிட நிறுத்துகிறாள்.

     “எங்கப்பா மேல கொற சொல்றதுன்னா எப்பவும் உங்களுக்குப் பிடிக்கும். ஆனா ஐயாம்மா, அவுரப் பார்க்காம நீங்க ஒரு மாசம் கூட இருக்கமாட்டீங்க! அதுனாலதா நீங்க இந்த ஊரவுட்டு நகராம இருக்கிறீங்க!”

     “ஆமா, இவ ஒருத்தன் தான் பஷ்டாப் படிச்சிட்டு வந்தான். அந்தக் காலத்துல எம்புட்டோ மேன்மையாயிருக்கப் போறம்னு நினைச்சேன். உங்க சித்தப்பன் ரெண்டு பேரும் பத்துக்கூடத் தாண்டல; எப்பிடியோ புழச்சிக்கிறம்னு மொதல்ல சங்கரலிங்கம் போனான். பிறகு கட வய்க்கிறன்னதும், உங்கம்மாதான் கழுத்தில கெடந்த பத்துப்பவன் அட்டியலையும், அஞ்சுபவன் முத்துமாலையையும் கொண்டாந்து குடுத்தா. உங்கப்பாவுக்குக் கூட அது மொதல்ல தெரியாது. சுமதியா உண்டாயிருக்கிறது கூட அப்ப எனக்குத் தெரியாது. அப்பத்தா இந்த வேலம்மாள வேற வீட்டோட கொண்டு வந்திட்டிருக்கிறா. என்னமோ கத, குடுத்த நேரம், கட்டம் நல்லாயிருக்கு வேல செஞ்சிச்சி, எதோ நல்லாயிருக்கிறா. அந்த விசுவாசம் ராசுவுக்கு ரொம்ப, அதனால தா, விஜிக்கு ஒசந்த எடத்துல கலியாண்ம்ன்னவும், முப்பது பவனானும் போடுவேன்னு கொண்டு வந்தா. நீ என்னடான்னா ஒத்த வரியோட வந்து நிக்கிற! நகை எல்லாம் பத்திரமா வச்சிருக்கியாடி?”

     விஜி நிதானமாகப் பதிலளிக்கிறாள். “அப்பாகிட்டக் குடுத்து வச்சிருக்கிறேன். சுமதிக்குப் போட வேண்டாமா ஐயாம்மா?”

     “அடி புத்தி கெட்ட பொண்ணே? அவளுக்கு வேணுன்னா அவஞ் செஞ்சி போடுறா. நீ ஏண்டி உன்னுதக் கொடுக்கணும்? உன் மாப்பிள, அவம்மா எல்லாம் ஏசமாட்டா?”

     “எனக்கு தங்க நகையும் வாணாம்; வயிரமும் வாணாம். அந்தக் காலத்துல பொண்ணுங்களுக்குப் படிப்பு, சுயமாக நிற்கும் தயிரியம் இதெல்லாம் இல்ல. சொத்துக்குப் பாத்தியதை கிடையாது. ஏதோ பவுனப் போட்டு ஈடு கட்டினா. இப்ப என்னாலெ தனிச்சி நிற்க முடியும். நகையைப் போட்டுக்கிட்டா, இப்ப பவுன் விக்கிற விலையில், அதுவே வெலங்கு மாதிரி...” பாட்டிக்கு இந்தக் கூற்று அதிசயமாக இருக்கிறது.

     “ஏண்டி விஜி, ஒங்கப்பன் போலத்தா பேசுற, எனக்குன்னு பாட்டரி வச்சிட்டா, நானும் பணம் பணம்ன்னு அடுத்தவனை வளரவிடாம கொள்ளையடிக்கும் புத்தி வந்திடும். ஆருக்குமே சொத்துன்னு இருக்கக்கூடாது. எல்லோருக்கும் எல்லாம் வாரணும்பா. அது எப்பிடி முடியும்? போகாத ஊருக்கு வழி சொல்லிட்டு அலஞ்சிட்டிருக்கா. ஒரு நல்ல சோறுண்டா, சுகமுண்டா?... இத பாரு, உன் மாப்பிள, மாமியா எல்லோரிடமும் நல்லபடியா நடந்திட்டு நீ மேம்யா இருக்கணும். உங்கப்பங்கிட்ட எதுக்குடி அத்தயெல்லாம் குடுத்தே? பெறந்த வீட்டிலேந்து ஒத்த சங்கிலியோட வந்தான்னு அவங்க ஏசுனா அது நம்மவளுக்குக் கொறவில்ல?”

     “நமக்கென்ன கொறவு? ஏசறவங்கதா கொறயானவங்க. ஒரு பொண்ணுன்னா அவளுக்குன்னு சொந்தமா விருப்பம் பிடிச்சது, பிடிக்காததுன்னு இருக்கக் கூடாதா என்ன!...”

     “அது சரி, பிடிச்சிருக்குன்னு சொல்லித்தா உன்ன அவனும் கட்டிக்கிறேன்னு மாமனத் தூதனுப்பிச்சா. ஏதோ உனக்கும் நல்ல புத்தியிருந்து சம்மதிச்சிக் கட்டியிருக்கீங்க. நீ செய்யிறது உம்மாப்பிளக்கி மாமியாளுக்குப் புடிச்சிருக்கையில, நா ஏண்டி குறுக்க பேசற?”

     விஜிக்குச் சொற்கள் எழும்பிக் குதித்து விடும் போல் உதறல் ஏற்படுகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

     மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் இது பிடிக்கவில்லை என்பதை எப்படிச் சொல்வாள்? மாமியார் பேச்சுக்குப் பேச்சு தன் மூத்தமகனை லட்ச ரூபாய் கொடுத்து, டாக்டர் மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்திருப்பதையும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி செலவு செய்திருப்பதையும், செட்டு செட்டாக நகை போட்டிருப்பதையும் சொல்வதை எப்படித் தெரிவிப்பாள்? இளையவள் செல்வி கல்லூரியில் இரண்டாவது ஆண்டோடு நின்று விட்டாள். அவளுக்கும் பெரிய இடமாகச் சம்மந்தம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

     “செல்வி ஏன் படிக்காம நின்னுட்டே? சும்மா இருக்கலாமா இந்த வயசில்?” என்றாள் ஒருநாள்.

     “படிச்சென்ன செய்யணும்? கட்டிட்டுப் போனபிறகு வேணும்னா படிச்சிக்கிறா! மாப்பிள மேல படிக்கையில, இப்ப பிரேமாவும் ஏதோ அமெரிக்காவில படிக்கிதாம். அப்பிடி வேணுன்னா பொழுது போக என்னத்தையோ கத்துக்கிட்டுப் போறா. இப்ப அவளென்ன படிச்சி சம்பாதனைக்கா போகணும்?” என்றால் மாமியார் பதிலுக்கு.

     “சம்பாதிக்கத்தான் படிப்புங்கறது சரியில்ல அத்தே. அப்படியே வச்சிட்டாலும், மாப்பிளக்கிக் கட்டிக் குடுக்கிறதுங்கறதே சரியில்ல. அந்த நாளுல பொண்ணுங்களுக்கு ஒண்ணும் இல்ல. மாப்பிளக்கிக் கட்டிக் குடுக்கப் பணம் வேண்டியிருந்தது. இப்ப அப்பிடியா?” என்று விவாதம் செய்தாள் விஜி.

     மாமியாருக்கு இவள் போக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

     “நீ நூலப் போட்டு மலையக் கட்டி இழுத்திட்ட, அப்பிடி எங்க பொண்ணுக்குச் சாமர்த்தியம் கிடையாது!” என்றாள். விஜிக்குச் சுருக்கென்று தைத்தது.

     இன்னொரு சமயத்தில், சில உறவினர் வந்திருக்கையில் மாமியார் பிரேமாவின் பச்சைக்கல் மாலையையும் வளையலையும் கொண்டு வந்து கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள். விஜி மறுத்தாள்.

     “நான் இதெல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன். எனக்கு வேண்டாம்...” என்றாள் பிடிவாதமாக.

     “ஏண்டி வந்திருக்கிறவங்க முன்னால மூக்கறுக்கிற? ஒத்தவரிச் செயினோடா பொண்ணக் கட்டிட்டு வந்திருக்கான்னு ஏசுவாடீ! மேப்பெட்டி அடிப்பெட்டி செஞ்சி பிழைக்கிறவங்க கூட இந்தக் காலத்துல பொண்ணுங்களுக்கு எப்பிடியோ இருவத்தஞ்சு சவரன் இல்லாம கட்டுறதில்ல. என்னமோ புடிச்சிருக்கு, அவளத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னா, பெரியய்யாவும் சரின்னா, முடிஞ்சிச்சி. பய்யன் சந்தோசம்னு தலக்குறவெல்லாம் பொறுத்திட்டேன். இப்ப ஒரு நாலு பேர் பெரியவங்க, கலியாணம் நல்லது பொல்லாதுன்னு வரும்போது, நீ கையில கழுத்தில ஒண்ணில்லாம இருந்தா எங்களுக்கு என்ன மதிப்பு?” என்று கடித்தாள்.

     விஜி விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தாள். அன்றிரவு அவன் அவளைச் செல்லமாகச் சீண்ட வந்த போது அவள், “உங்கம்மா சவரன் சவரன்னு சொல்லிட்டேயிருக்கிறாங்க. எனக்குக் கஷ்டமாக இருக்கு...” என்றாள்.

     “நாலு பேர் பாக்கவரப்ப கேப்பாங்க. நீ உன் கண்ணக் காட்டி வல விரிச்சி இழுத்திட்டேன்னு அவுங்களுக்குப் புரியுமா?” என்று அவள் உதட்டைப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிச் சேட்டை செய்த போது அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

     வெறுப்பை அடக்கிக் கொண்டு அவள் சில நாட்களாகவே போராடத் தொடங்கிவிட்டாள்.

     வெறுப்பு, மாமியார் மற்றும் உறவினரின் கருத்து முரண்பாடு, நகை விஷயங்களினால் கிளர்ந்ததுதானா? இல்லை, அது திருமணம் முடிந்து, அவர்களை நெருக்கமாகப் பிணைக்கத் தொடங்கிய காலத்திலேயே கவர்ச்சித் திரைகள் கழன்று விழுந்துவிட்டன. தான் ஒரு சொப்பனம் கண்டு கலைந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தாள்... சொப்பனமாக இப்போது தோன்றும் அந்த நாட்கள்...!

     கல்லூரியில் படித்த நாட்களில் கூட தான் சராசரி மாணவிகளிலிருந்து மாறுபட்டவள் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். முற்போக்கு மாணவியர் இயக்கம் என்ற அமைப்புக்கு முதுகெலும்பாக நின்று கல்லூரி அரங்கங்களிலே புதுமைப் பெண்ணைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி பரிசுகள் பல பெற்றிருக்கிறாள். மற்றவர் இவளுக்குப் பட்டப் பெயர் சூட்டிக் கிண்டலும் கேலியுமாகப் பேசியதை இவள் பொருட்படுத்தியதில்லை. அரசியலும் பொருளியலும் பாடங்களாகக் கொண்டு எம்.ஏ. படித்த போது கூட, இவளுக்கென்று அந்தரங்கமான தோழியர் இல்லை. ஆனால், வீட்டில், சிற்றப்பன், சின்னம்மாக்களும், அவர்களுடைய செல்வங்களும், விஜிக்காக ஓர் அன்புலகை நிறுவி இருந்தனர். அடுத்த தெருவில் ஒன்றுவிட்ட அத்தை இருந்தாள். விஜி உயர்ந்த படிப்புப் படிப்பதில், அவர்களுக்கெல்லாம் மட்டில்லாத பெருமை. படிப்பு, உயர்குலப் பெருமை என்ற சாய்மானப் பின்புலம் இல்லாத குடும்பம் வியாபார நாணயத்திலும் நகரவாழ்வின் நயமான நாகரிகங்களிலும் முன்னேறி விட்டதற்கு விஜியின் உயர்ந்த கல்வி ஓர் வலுவான அந்தஸ்தைக் கூட்டிவிட்டதாகச் சிற்றப்பன்மார் கருதினார்கள். அவர்கள் வீட்டில் ஒரு இழிவான வசைச் சொல்லைக் கூட யாரும் பேச மாட்டார்கள். கடையில் வேலை செய்யும் ஆட்கள் எட்டுப் பேரும் அந்தப் பக்கத்துக் கிராமங்களிலிருந்து சென்றவர்களே. அவர்கள் அனைவரும் அந்த வீட்டின் மாடியிலேயே கொட்டகையில் தங்குவார்கள். இரு சின்னம்மாக்களும் அடுப்பு வேலை செய்வார்கள். மாறி மாறிப் பாத்திரம் துலக்குவார்கள். கடைப் பையன்களில் ஓரிருவர் வீடு கூட்டிச் சுத்தம் செய்வார்கள். பன்னிரண்டு வயசிலிருந்து இரண்டு வயசு வரையிலும் உள்ள இருவருடைய குழந்தைகளையும் விஜி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய பாடம் எப்படி இருந்தாலும் ராமுவுக்கும் லதாவுக்கும் சுகந்திக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பாள்; உடை உடுத்தி, கொஞ்சிச் சீராட்டி உலாவ அழைத்துச் சென்று, கதை சொல்லி, அவர்களுடன் ஒன்றிப் போனவள். ஒரு சிற்றப்பாவுக்கு மாமியார் வீடு ஆறுமுகநேரிப் பக்கம். இளையவருக்கு, திருச்செந்தூர் பெண்ணெடுத்த ஊர். விஜி ராமுவையும் லதாவையும் சுகந்தியையும் யார் வந்தாலும் வராவிட்டாலும் தன்னுடன் கூட்டி வருவாள், கோடை விடுமுறைக்கு. அவர்களுடன் சில நாட்கள் சின்னப்பட்டியில் தங்கிவிட்டு, அவர்களை திருச்செந்தூரில் கொண்டு விடுவாள். பின்னர் அவள் புது நகரத்துக்குச் சென்று தந்தையுடனும் சில நாட்கள் தங்கிவிட்டுத் திரும்புவாள். எதிர்காலத்தைப் பற்றி அவளுக்குச் சிந்தனைகள் இருந்திராமல் இல்லை. புத்திலக்கியங்களும் பழங்காப்பியங்களும், திரையரங்குகளும் போற்றும் காதலைப் பற்றியும் சிந்தித்திராமலில்லை. காதல் என்பது இலக்கியங்களுக்காகச் சிறிது மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக அவளுடைய சிந்தனைகள் சென்றதுண்டு. தெய்வீகக் காதல் ஏழேழு பிறவிகளுக்கும் தொடர்பானது என்ற தொடர்களில் அவளுக்கு நம்பிக்கை விழுந்ததில்லை. தன்னை மணக்க இருப்பவன், தன்னை நன்றாகப் புரிந்து கொண்டு குடும்பம் என்பது இருபாலரும் ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தி, உழைப்பில் பங்கு கொண்டு பொது வாழ்விலும் ஒன்றுபட வேண்டும் என்று கருதுபவனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அத்தகைய முன்னேற்றமுடைய ஆடவன் ஒருவன் தன்னை மணக்க வருவான் என்று நம்பியிருந்தாலும், இல்லை எனின் திருமணம் வாழ்வில் இரண்டாம் பட்சம் என்று உறுதியாக நிற்கும் இலட்சியமும் அவளுள் உருப்பெற்றிருந்தது. பட்டப் படிப்பை முடித்த பின், ஆசிரியப் பயிற்சி பெற்று, ஆசிரியத் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கும் அவளுக்கு இருந்தது. ஆனால்... அதெல்லாம் அறிவை மீறி வந்துவிட்டதோர் மாயையில் நிறம் மங்கிப் போய்விட்டனவே!

     விஜி உறக்கம் கொள்ளாமல் விழித்திருக்கையில் வாசல் திண்ணையில் யாரோ ஏறும் அரவம் கேட்கிறது.

     நாய் ஏதானுமா? இல்லையேல் வண்டி ஏதும் வந்த ஓசை கேட்கவில்லையே? விஜி கட்டிலிலிருந்து குனிந்து பாட்டியை தொட்டெழுப்புகிறாள்.

     “ஐயாம்மா?... வாசல்ல ஆரோ வந்தாப்பல ஓசை கேக்கல்ல?”

     பாட்டி விழித்துக் கொண்டு உன்னிப்பாகச் செவி கொடுக்கிறாள்.

     “ஆரு? நாயுடு சிலப்ப முன்னெல்லாம் அலமேலுகிட்ட சண்ட போட்டுட்டுத் திண்ணைக்கு வருவா. ஆனா இப்பல்லாம் சண்ட போடறதில்ல. சண்டக்கிக் காரணமாயிருந்த அக்காக்காரி கோதயூருக்குப் போயிட்டா. அதுவும் அலமேலு முழுவாம வேற இருக்கா. ஏதாவது...” ஆச்சி விளக்கைப் போடுகிறாள் எழுந்து.

     “ஆரது?...”

     எதிரொலி எதுமில்லை. வாசல் விளக்குக்கு சுவிச்சு உள்ளேயேதான் இருக்கிறது. அதைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்கிறாள்.

     “விஜி, இத வந்து பாரு...!”

     விஜி பரபரப்புடன் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.