உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 காத்தமுத்து... முழங்கால் இரண்டிலிருந்தும் இரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தாலும் இன்னும் பொசிவு நிற்கவில்லை. அரைச்சராய் பட்டியோடு கிழிந்து சிறிதே ஒட்டிக் கொண்டு பின்புறச்சந்தின் சிராய்ப்புகளை நன்றாகக் காட்டுகிறது. விஜிக்கு குரலே எழும்பவில்லை. “...யாரிந்தப் பையன்?” “இவந்தே காத்தமுத்து. ஏண்டா? எங்கனாலும் விழுந்திட்டியா?” “ஒரு துணி கொடுங்க ஆச்சியம்மா, நெத்தத்தத் துடச்சிக்கிற...” வழிந்திருக்கும் கோடுகளைப் பார்த்துப் பாட்டி திடுக்கிட்டுப் போகிறாள். “ஏண்டா பாவிப்பயல? எங்க வுழுந்த? நாயிகீயி கடிச்சிச்சா இல்லாட்டி?” “நாயில்ல. அந்தக் கொளுப்பெடுத்த ஏசன்டுதா கட்டயால அடிச்சா. ஒரு கய்யால புடிச்சிட்டு அடிச்சா...” அழுகை உந்துகிறது. புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். “நீ ஏண்டா அவங்க கூட மோதுற? உன் சோலியப் பாத்திட்டு வரவேண்டியது தானே?...” “அந்தக் கொளுப்பெடுத்தவ எப்பவும் அந்தப் புள்ளகளுக்குப் பரிஞ்சிட்டு, எங்க கை அவங்க மேல பட்டிச்சி, துணி பட்டிச்சின்னு அடிக்கிறா. மாரிசாமி அண்ணாச்சியக் கூட திட்டுறா. அதனாலதா நானே புள்ளய வேணுன்னு தொட்டே!” “அட கிறுக்குப் பயலே? உங்காத்தா, கரஞ்சிட்டுக் கெடக்கா. சீக்குக்கார ஆம்புள. நாலு குஞ்சுக. காட்டு வேலக்கிப் போயிட்டு வந்தா அரைக்கஞ்சி, அம்புட்டும் கடன்...” பாட்டி பிரலாபிக்கையில் விஜி உள்ளே சென்று பாட்டியின் பழைய சீலைத் துணியொன்றும் சிறிது நீரும் கொண்டு வருகிறாள். முழங்கால் காயங்களைக் கழுவி, அந்தத் துணியால் கட்டுப் போடுகிறாள். “விடிஞ்சி கூடமங்கலம் ஆசுபத்திரிக்குப் போயி, டிடன்னஸ் ஊசி போடச் சொல்லணும்...” “ஆசுபத்திரி காலம தொறக்காதுங்க. அதுக்குள்ளாற மம்முட்டியா உசுப்ப வந்திடுவா. பஸ்ஸு அலாரம் அடிச்சிட்டு வந்திடும்...” “எங்க வீட்டில அந்தாளு வேலைக்கிப் போகாட்டி அடிச்சிக் கொல்லுவா! எங்கம்மா எதுனாலும் பேசுனா, அத்தையிம் அடிப்பே குடிச்சிப் போட்டு!” “வீட்டுக்குப் போக வாணாம். இங்கேயே படுத்துக்க...” என்று பாட்டி சொல்லுகிறாள். “எதுனாலும் சாப்பிட்டியா?” “காலையில் அம்மா சோறோண்ணும் குடுக்கல. நாலணா காசிருந்திச்சி. கெளங்கு வாங்கித் தின்னே. மாரிசாமி அண்ணாச்சி டீ வாங்கிக் குடுத்தா...” எண்ணெய் காணாத முடி புழுதி படிந்திருக்கிறது. ஊட்டமில்லாததனால் குச்சியாகிவிட்ட உடலானாலும், குமரப்பருவம் கிளர்ந்து வரும் வீச்சின் முனைப்பை அறிவிக்கும் கண்கள். முழங்கால்களிரண்டிலும் கட்டுடன் திண்ணையிலேறி உட்கார்ந்து கொள்கிறான். விஜி உள்ளே செல்கிறாள். பாட்டி பானைச் சோற்றில் நீரூற்றி வைத்திருக்கிறாள். அதில் உப்புக் கல்லைப் போட்டு ஒரு ஏனத்தில் எடுத்துக் கொண்டு, மாப்பிள்ளைக்காகப் போட்டு வைத்த பகடாவையும் கையில் எடுத்துக் கொண்டு வருகிறாள். பையன் கை முகம் கழுவிக் கொள்ள நீரும் ஊற்றுகிறாள். கலத்திடு முன் சோறும் துணையான பண்டமும் உள்ளே சென்ற வேகத்தைக் கவனிக்கையில் பசித்தீயின் உக்கிரம் மனசை வருடுகிறது. பகடா முழுவதையும் ஆவலுடன் சுத்தமாகப் பொட்டுப் பொடி விடாமல் உண்டு விடுகிறான். “அக்கா, ரொம்ப நல்லாருக்கு!” என்று கூறும் போது கண்கள் காவியம் பாடுகின்றன. அவனை உள்ளே வந்து படுக்கச் சொல்கிறாள் விஜி. பாட்டிக்கு அதில் உடன்பாடு இல்லை. அதற்காகவே வீ அவனை உள்ளே வரும்படி வற்புறுத்துகிறாள். அவனோ மறுத்து விடுகிறான். “நா இங்கியே படுத்துக்கிறேன் அக்கா” என்று அவன் திண்ணையில் முழங்காலைச் சரித்து மடித்துக் கொண்டு இரு கைகளையும் கால்களுக்கிடையில் கூட்டி வைத்துக் கொண்டு படுத்து விடுகிறான். விஜி கட்டுக் கட்டக் கிழிந்த சேலைத் துண்டத்தைக் கொண்டு வந்து அவன் மீது போர்த்துகிறாள். பிறகு கதவை அடைத்து, விளக்கை அணைக்கிறார்கள். பாட்டி ஒரு கொட்டாவி விட்டுவிட்டுப் படுக்கிறாள். விஜியும் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் பாட்டியின் மெல்லிய குறட்டையொலி கேட்கிறது. விஜிக்கு மட்டும் உறக்கம் கொள்ளவில்லை. அவள் இப்போது, ‘இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸ்’ அதிபனான மயிலேசனின் மனைவி. தொழிற்சாலையின் வண்டிகள் கருணை மிகுந்து குழந்தைகளைச் சென்று கூட்டி வந்து மீண்டும் கொண்டு விடுவது பற்றிப் பெருமையாகப் புதுநகரம் முழுவதும் பேசிக் கொள்வார்கள். ஆனால், அந்த வண்டிக்குள் இந்தப் பிஞ்சுப் பருவத்தினரிடமும் இத்தகைய அடிதடி சண்டைகள் வருமென்று யாரேனும் நினைப்பார்களா? மயிலேசனுக்குத் தெரியுமா, அவனுடைய தமையனான, கெட்டிக்கார, புகழ்பெற்ற பெரிய முதலாளி ரங்கேசனுக்குத் தெரியுமா? இதை எல்லாம் விசாரித்து, இந்தச் சிறுவர்களின் குரலாய் அவள் தன் கணவனிடம் நியாயம் கேட்டால், என்ன நடக்கும்? என்ன நடக்கும்...? புரண்டு புரண்டு படுக்கிறாள். “இத பாரு, உனக்கு இதிலெல்லாம் தலையிட அதிகாரமில்ல. தெரிஞ்சிச்சா?” என்று சிகரெட் நுனியின் சாம்பலைத் தட்டிக் கொண்டு அவளை உறுத்துப் பார்ப்பது போன்றதோர் பிரமையில் உடலில் குளிர் சிலிர்ப்பு தோன்றுகிறது. தன்னுடைய மனப்பாங்குக்கும், அவனுடைய மனப்போக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் இடையே, சிறிதும் ஒட்டிப் போக இயலாத வேற்றுமைகள் இருக்கக்கூடும் என்று இயற்கையான உணர்வு கூட அவனைச் சந்தித்த அன்றும் பிறகும் தோன்றவில்லையே? மிக அதிசயமாக அன்று அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். ‘நான் ஏன் மாறி விட்டேன்’ என்று உள்ளூற நாணம் கொண்டாள். காரணம் புரியாமலேயே மனம் ஆனந்த வெளியில் சிறகடித்துக் கொண்டிருந்தது. சென்ற கோடை காலத்து மாலையில் விடுமுறைக்காக வந்திருந்த போது, சிற்றப்பா மகன் பதினொரு வயது ராமுவும் அவளும் தான் அரசனாற்றுக்கரை மணலைத் தேடி வந்திருந்தனர். மம்முட்டியானும் அப்போது கருப்பண்ணசாமி கோயிலின் பின்புறமிருந்து வந்தான். “ஆலமரத்துப் பக்கம் போவாதிய அங்க பாம்பு இருக்கு!” என்றான். “இந்த ஓடை எங்கிருந்து வருதுன்னு மம்முட்டியானுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் அவள். “அந்தால மலப்பக்கத்திலேந்து வருது...” அப்போது, சாலையில் வந்த மோட்டார் பைக் ஒன்று ஓடைப் பள்ளத்திலிறங்கி, மேலே ஏறிற்று. கறுப்புக் கண்ணாடியும், வாயில் புகையுமாக ஒரு இளைஞன் அதை ஓட்டி வந்தான். மம்முட்டியான் சட்டென்று கைகட்டி வாய் மூடியவனாக நின்றான். “ஆரது?” “தெரியாதா விஜிம்மா? இவருதா சின்ன மொதலாளி!” அவளுடைய சிற்றப்பன்மாரைக் கடைப் பையன்கள் சின்ன மொதலாளி, பெரிய மொதலாளி என்று குறிப்பிடுவது அவள் நினைவுக்கு வந்தது, சிரிப்பு வந்தது. “எந்தூரு சின்ன மொதலாளி?” “அதாம்மா, சின்னபட்டி பெரியபட்டி எல்லாம் பிள்ளங்கள அழச்சிட்டுப் போவுதே இளஞ்சேரன், அந்த மாட்ச் வொர்க்ஸ் மொதலாளி அவிய தாத்தா, பெரிய வூடில்ல. பெரிய பட்டில? அவுரு மொதல்ல பஞ்சாயத்து பிரசன்டா இருந்தா, இப்பங்கூட பிரசன்ட் வூடுன்னுதான் சொல்லுறா. அவரு மகனுக்கு மகெ இவுரு. இவப்பாரு மூணு கட்டினா, மூணா சம்சாரத்து மகெ. கடோசி மகெ...” அவன் சொல்லி முடிக்குமுன் ஓசைப்படாமல், கையில் கறுப்புக் கண்ணாடியைத் தட்டிக் கொண்டே அவன் அவர்களருகில் வந்து நின்றதை அவள் பார்த்து விட்டாள். மம்முட்டியான் திடுக்கிட்டாற் போல பின் வாங்கினான். அவளைப் பார்த்து அவன் புன்னகை செய்தான். முள்முடி சுருளாகக் காற்றில் நெற்றியை வருடிக் கொண்டு நடமிட்டது. நல்ல உயரம். சிவந்த மேனி. பெண்மைச் சாயல் தெரியும் முகம். அதை மறைப்பதற்குத்தான் போலும் அரும்பாக மீசை வைத்திருந்தான். பிடரி முடிப் பாஷனில்லை. அவளை நேராகப் பார்த்துவிட்டு மீண்டும் புன்னகை செய்தான். “குடீவினிங், நான்... மயிலேஷ். எனக்கு இந்தத் தாத்தாவின் பெயர்தான்...” என்று அறிமுகம் செய்து கொண்டான். தொடர்ந்து, “இந்த இடத்தில், இவ்வளவு ஸொஃபிஸ்டிகேட்டாகத் தென்படுவது யார்னு பாக்கத்தான் வந்தேன்... ஒரு க்யூரியாஸிட்டியினால... இப்ப தான் புரிஞ்சிச்சி...” என்றான். அவளும் தன்னையறியாமலே முகமலர்ந்தாள். “ஐ, ஸீ... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?...” “நல்லாத் தெரியும். சண்முக மாமா பொண்ணு... அம் ஐ ரைட்?” “மன்னிக்கணும், நீங்க தெரிஞ்சு வச்சுருக்கிற அளவு நான் தெரிஞ்சி வச்சுக்கல...” “பெரியவங்க வந்து போயிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். அதனாலென்ன...! ஒரு சமயம், சம்பகம் அத்தை, சாமி கும்பிட பெரியபட்டிக் கோயிலில கூட்டிட்டு வந்தாங்க. உங்களுக்கு நெனப்பு இருக்கணும்...” “ஓ, அஞ்சாறு வருசம் முன்ன... தாத்தா பாக்கணும்னு நா ஆறுமுகத்தின் கடையில சைகிளுக்கு நிக்கையில் தவிசுப்பிள்ளை வந்து கூட்டிட்டுப் போனான். அப்ப... நீங்க இருந்தீங்களா?...” “ஆமாம். நாங்கூட எம்.ஸி.ஸி.லதா பி.காம் முடிச்சேன். பெறகு அங்கேயே எம்.ஏ. பண்ணினேன். உங்களப்பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன்...” என்று புன்னகைகளினாலேயே அவளைக் கவர்ந்தான். அதுவரையிலும் எந்த இளைஞனும் தன்னைப் பார்த்து அவ்வளவு சக்தி வாய்ந்த புன்னகையுடன் நெருங்கவில்லை என்று தோன்றிற்று. “ஓ, எந்த வருஷம்...?” “எழுபத்திரண்டில நான் மெட்றாஸில இருந்தேன். ஸ்டூடன்ட் ஃபெடரேஷனில கூட அப்ப இருந்தேன்...” மந்திரச் சொல் போல் அவள் கண்களை அகலச் செய்தது அது. “அப்படியா?... எனக்கும் கூட அது போன்ற ஈடுபாடுகள் உண்டு” என்று புன்னகை முகிழ்த்தாள். “பைத பை. எனக்கு உங்க தைரியம் ரொம்பப் பாராட்டக் கூடியதாக இருக்கு. எதுக்குச் சொல்றேன்னா, அப்பவே, ஆறுமுகத்தின் கடையில நீங்க சைகிள் வாங்கிட்டுச் சின்னப்பட்டிக்குத் தைரியமாப் போறதப் பாத்திருக்கிறேன்...” “எனக்கு இந்த ஆற்றுக் கரை ரொம்பப் பிடிக்கும். ஆத்துல தண்ணீர் வந்து மட்டும் நான் பாத்ததே இல்ல. எப்படின்னாலும் ஆறு ஆறு தான். தண்ணி இல்லாட்டிக் கூட மணலே கவர்ச்சியாயிருக்கு.” “ஆமாம் எப்போதோ அப்பிசி கார்த்திகை மழை நாளில ஓடத் தண்ணிகள்ளாம் ஓடி வரும்... இதுலதான் போர் போட்டு கூட மங்கலத்துக்குத் தண்ணி கொண்டிட்டுப் போறா?... இதப் பெரியபட்டி சின்னப்பட்டிக்கெல்லாம் கூட எக்ஸ்டெண்ட் பண்ணணும்...” “இந்த ஆத்துல தண்ணீர் அடிச்சிட்டுப் போயிப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை!” “தண்ணி வரும், ஆம் நீங்க மட்றாஸிலிருந்து வாரதுக்கு முன்ன அடிச்சிட்டுப் போயிடும் ஓடயில தண்ணி போகும். வண்டி ஒண்ணும் போக முடியாமக் கூடப் போகும். ஆனா, செத்த நிப்பாட்டிக் கிட்டா, ஒரு மணில சாதுவா வடிஞ்சி போகும்...” “அதான் காட்டாறு போல இருக்கு!” “ஆமாம். அது வர்ற வேகம்... முன்ன பின்னத் தெரியாம வரும். அப்ப பாக்க ரொம்ப அழகாயிருக்கும். காட்டாத்து வெள்ளம் போலங்கறதுக்கு அத்தப்பாத்தாதான் முழுப் பொருளும் புரியும்! ஆனா, எங்க ஐயாப்பா இதுல ஆனைய அடிச்சிட்டுப் போறாப்பல தண்ணி வந்து ஆத்தில நாலஞ்சி மாசம் வடியாம இருக்கும்னு சொல்வாரு. நான் புரளிம்பேன். ஓடயில் வந்து வடிஞ்சிடும். கால்காலா ஆத்து மணல் நடுப்பில சீலயப் போட்டாப்பல தண்ணி போகும்.” “நீங்க, பி.காம். படிச்சிட்டு ஏன் எம்.ஏ. பண்ணினீங்க?” என்று சட்டென்று கேட்டாள் அவள். “என்னமோ லிட்ரேச்சர்ல ஒரு இன்ட்ரெஸ்ட்; பண்ணினேன்...” “அதான், நீங்க பேசுறப்பவே தெரியிது...” “என்ன தெரிஞ்சிச்சி?...” மீண்டும் புன்னகைகள்; மகிழ்ச்சிப் பொங்கல்கள். “நீங்களும் லிட்ரேச்சரா?...” “இல்ல, பொலிடிகல் சயன்ஸ், எகனாமிக்ஸ் ஹிஸ்டரி...” “ஓ, லா படிக்கிற உத்தேசமா?...” “அப்படி ஒண்ணும் திட்டம் இல்ல, ஆனா, எனக்கு டீச்சிங்னா ரொம்ப விருப்பம்.” “நான் ஊகிச்சதத்தான் சொல்றீங்க...” “எப்படி?” “எப்படிங்கறத இப்ப சொல்லமாட்டேன்” என்றவனுக்குக் கை பரபரத்துச் சிகரெட்டுக்காக இடுப்புக் கீழ் பையில் சென்றதும் நினைவு வந்தாற் போல், “நான்... ஸ்மோக் பண்ணலாமா? உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?” என்று கேட்டான் மரியாதையாக. வழியிலே எங்கோ செல்பவன் குறுக்கே வந்து இதை எதற்குக் கேட்க வேண்டும் என்று அப்போது அவளுக்குத் தோன்றிற்றா? இல்லை. “...ம்...? என்னைக் கேட்டதற்கு நன்றி? உங்களைக் கூடாது என்று சொல்லி உரிமையில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் அப்பால் சென்று புகை பிடிப்பதில் எனக்கு ஒரு தடையும் இல்லை.” அவன் சிரித்துக் கொண்டே பையிலிருந்த கையை வெறுமையாக எடுத்து விட்டான். “ஏன், நீங்க... என் உரிமையில் தலையிடுவதாக இருந்தால் நான் இதை விட்டு விடுகிறேன். விடணும்னுதான் ஆசை...” என்றான் குறும்பாக. அப்போது, தனது வாய்ச்சொல்லே தன்னை எங்கோ பிணிக்கிறது என்ற தெளிவு ஏதுமில்லை. சில சமயங்களில் தன்னறிவை மீறிச் சொற்கள் குதித்து விடுகின்றன. இதைத்தான் விதி, பிராப்தம் என்றெல்லாம் சொல்கிறார்களோ! அன்று ஆறுமுகத்தின் கடையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவளும் ராமுவும் திரும்பிய போது, அவனும் மோட்டார் பைக்கில் அவர்களுக்குப் பின்னே மெதுவாக விட்டுச் சென்றான். பெரியபட்டி வீட்டைக் கடந்து சின்னப்பட்டிச் சாலையில் சிறிது தூரம் தொடர்ந்ததாகக் கூட நினைவு. இந்த முதல் சந்திப்பு, அடுத்துப் பல சந்தர்ப்பங்களைக் கொண்டு வந்தன. பெரியபட்டிப் பாட்டனார் அவளைக் கூட்டி வரச் சொன்னதாகக் காரில் அங்கிருக்கும் கணக்குப் பிள்ளை வந்தான். பாட்டி அவளை அழைத்துக் கொண்டு போனாள். மேக விளிம்புகள் சரிகை சரிகையாக மின்னலாயின. பாட்டி ஆகாயத்தில் பறந்தாள். “அம்புட்டுப் படிப்பும் கொணமும் தான் இப்படி உச்சாணிக்கு ஏத்தியிருக்கு” என்று வாய்க்கு வாய் புகழ்ந்தாள். அவளைச் சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டான். ஆற்றுக்கரை மணலில், கோயிலின் முன், அவர்களைக் காண்பது கிராமத்தாருக்குப் புதிய காட்சிகளாயிருந்தாலும் பேச்சொன்றும் எழும்பவில்லை. இவள் என்னதான் எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்து கொண்டாற் போன்று முன்கூட்டியே பேசி விடுவான் அவன். “பெண்களைப் பத்தி எனக்கு ப்ரொகிரஸிவ் வ்யூஸ் உண்டு. இப்ப எங்க மயினிதா இருக்காங்க. அவங்களும் கிராஜுவேட் தான். பிறந்த வீடு நாகர்கோயில் பக்கம். ஆனாலும் ஒரு இடத்துக்குத் தைரியமாகத் தனியே போகமாட்டா. எங்க செல்வி கூட அப்பிடித்தான். பிரேமா கூட அப்படித்தானிருந்தா. இப்ப மாறியிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு உன்னை அதனாலேயே பிடிச்சிருக்கு. சைக்கிளெடுத்திட்டு வந்திடறே...” என்றெல்லாம் பாராட்டினான். “தன்னைத்தானே நிமிர்ந்து நிற்க, எதிலும் ஒரு நிச்சயமான முடிவு எடுத்துக்கிட்டு வேலை செய்ய, முடியாதுங்கற நினைப்பே ‘க்ரிப்பிள்’ போல பல பெண்களை ஆக்கிடுதுன்னு எனக்கு ஒரு கருத்து உண்டு. எனக்கு ஒரு சிநேகிதி. என்னை விடப் பெரியவள். பையன்களும் பெண்களும் படிக்கும் ஒரு ஸ்கூலில் அவள் வேலை பார்க்கிறாள். தலைமை ஆசிரியர் பதவி இவளுக்கு வந்தது. ஏற்றுக் கொள்ளாமல், ‘வேணாம், என்னால் இந்தப் பொறுப்பைக் கட்டி மேய்க்க முடியாது. நான் வெறும் ஆசிரியையாகவே இருக்கிறேன்னு’ சொல்லிட்டா. பிறகு வேறு ஒரு ஆண் தான் அங்கே வந்திருக்கிறார் பொறுப்பு ஏற்க... நான் சண்டை போட்டேன் அவளிடம்” என்றெல்லாம் அவளும் தன்னை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாள். “பிஸினஸ் விஷயமா நான் பாதி நாள் வெளியூர் போயிடுவேன். அண்ணனும் நானும் கூட்டாக எல்லாம் பார்த்துக் கொண்டாலும், வெளியூர் டீலிங்க்ஸுக்கு அநேகமாக நான் போவதுன்னுதான் இரண்டு வருஷமா வழக்கமாயிருக்கு. அப்படி இருக்கையில, எல்லாத்துக்கும் நான் வந்தால் தான் முடியும்னா எப்படி? நீ மேல்பெட்டி அடிப்பெட்டி ஒட்டினால் கூட நான் கோவிக்க மாட்டேன். அது ஒரு சுய நம்பிக்கையைக் கொடுக்குதும்பேன்” என்றெல்லாம் அவளை வளைத்துவிட்டான். இப்போது இந்தச் சொற்கள், நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கையில் மனம் ஐயோ என்று வீழ்கிறது. திருமணம் என்பது திருப்பி வைக்க முடியாத கருத்தில் நிலையூன்றியிருக்கிறது என்று அவளுக்கு யாருமே அப்போது நினைப்பூட்டவில்லை. திருக்குற்றாலத்து வீழ்ச்சி அருவியாக ஓடி வரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமுறை நீருக்கடியில் கிடக்கும் மணிக்கற்களின் கவர்ச்சியில் மனம் கொடுத்து அவற்றைப் பொறுக்கினாள். நீரிலிருந்து வெளியே எடுத்ததும் அந்தக் கவர்ச்சி மாய்ந்து விட்டது. வெறும் சாதாரணக் கற்களாகத் தோன்றின. வீசியெறிந்து விட்டு நடந்தாள். இப்போது... கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|