9

     மயிலேசனுக்குக் காலையில் விழிக்கும் போது ஒரே தலைக்கனமாக இருந்தது. இரு பொட்டையும் அழுத்திக் கொண்டான். வெளிச்ச இயக்கங்கள் வந்து வெகுநேரமாகி யிருந்ததாகப் புரிந்தது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்தில் சிகரெட் பெட்டிக்காகக் கை தேடிய போதுதான் விஜி இல்லை என்று நினைவு வந்தது. ஏனெனில் சிகரெட் பெட்டி அங்கு வைத்த இடத்தில் இருந்தது.

     விஜி... விஜியைப் பெரியபட்டியில் விட்டு விட்டு வந்தான். ஆமாம், விசுவலிங்கம் நல்ல மது வகைகள் வந்திருப்பதாகச் சொல்லி, மாலையில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். விசுவலிங்கம் முன்னாளையச் சுங்க அதிகாரி ஒருவரின் மகன். மயிலேசனுக்கு ஒத்த நண்பன். தீப்பெட்டிக்கு இன்றியமையாத ரசாயனப் பொருள்கள் விற்பனை உரிமை பெற்றிருப்பவன். அதனால் தான் விஜியைப் பெரியபட்டிக்குக் கூட்டிச் சென்றான். அவள் இருந்தால் பெரிய ரகளை செய்திருப்பாள். விநாடிக்கு விநாடி பணம் என்று தொழில் துறையில் நெருக்கடிகளாய் மனிதனின் நரம்புகளை இழுத்துப் பிடிக்கையில், இத்தகைய ஓய்வான உல்லாசத் தளர்ச்சிகள் வேண்டுமென்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டாள்.

     அவள்... அவனை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறாளோ என்னவோ?... குளித்து உடைமாறிக் காலையுணவுக்கு அவன் கீழே வருகையில் மணி ஒன்பதரை ஆகியிருக்கிறது.

     அம்மா பூசையறையில் பூசையை முடிக்கவில்லை. என்றாலும் அவனைக் கோபிக்க வருகிறாள். அம்மாவும் பையனும் ஒரே அச்சின் வார்ப்புகள் என்ற மாதிரியான சாயல். செவிகளில் பெரிய வயிரத்தோடு ஒளிக்கதிர்களை வாரி வீசுகிறது. மூன்று வடச் சங்கிலியின் கல்லிழைத்த முகப்பும் அதற்குப் போட்டி போடுகிறது. நெற்றியில் துளி திருநீறு. நீராடித் தழைய முடிச்சிட்ட கூந்தலில் ஒரு இழை நரைக்கவில்லை.

     “ஏண்டா, இது உனக்கே நல்லாயிருக்கா?”

     அவனுக்கு எரிச்சலாக வருகிறது. “என்னம்மா, போது விடிஞ்சதும் ரோதன பண்ண வரீங்க?”

     “நா ரோதன பண்ணல, என்ன அவளத்தாங் கட்டிப்பேன்னே! சரி, எப்பிடியோ சந்தோசமாயிருந்தா சரி; இருக்கட்டும்னு சொன்னேன். கலியாணம் கட்டின பிறகு பாக்கிறவங்களுக்குக் கேவலமில்லாம இருக்க வேணாமா? என்னமோ நினைச்சா புறப்பட்டுப் போறீங்க, நினைச்சாப் புறப்பட்டு வரீங்க. இது சத்திரமா, சாவடியா? அவளுக்கு இப்ப என்ன கோபம்?”

     “ஆரு சொன்னது கோபம்னு?”

     “எனக்கென்ன எளவு தெரியிது? எங்கிட்டச் சொல்லிட்டுப் போனாளா? நான் கோயிலுக்குப் போயிருந்தவ திரும்பி வாரதுக்குள்ள போயிருக்கிறீங்க.”

     “எங்கும் போகல. பெரியபட்டி வரியான்னேன், கொண்டு விட்டேன்.”

     “ஆமா, ராத்திரிப் போயிக் குடிச்சிட்டு வந்திருக்கே. அவ இருந்தா ஊரக் கூட்டி ரகள பண்ணுவான்னு கொண்டு விட்டிருக்கே. ராத்திரி வரப்ப மணி மூணு. உங்கப்பாக்குப் பையன் நாந்தான்னு நடக்கிற. நீ எப்பிடியானும் நல்லபடியா உருப்படணும்னு நான் நினைச்சிட்டிருந்தேன்...”

     “ஐயோ ஏம்மா கத்துற இப்ப? இப்ப போயி அவளக் கூட்டிட்டு வரப் போறேன்...”

     “அண்ணன் ரெண்டு தரம் போன் பண்ணிட்டான். அதுக்குள்ளாற. விஜி வீட்டுக்கு வந்தாச்சான்னு கேட்டான்... இல்லேன்னே, சுப்பையாவை வரச் சொல்லுன்னானாம் செல்விகிட்ட, அவதா போன எடுத்தா...”

     “எல்லாம் போறேன் இப்ப...”

     “வந்தவ புருசன நல்வழிக்குக் கொண்டு வருவான்னு பாத்தா, அவ ஏறுன்னா மாறுன்னிட்டுப் போற!”

     தீப்பெட்டித் தொழிற்சாலை அலுவலகத்துள் அவன் நுழையும் போது அண்ணன் தனித் தடுப்புக்குள் இருக்கிறான். அரியானா வியாபாரி ஒருவன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறான். கைப் பெட்டியைத் திறந்து திறந்து மூடுகிறான். அதில் கத்தையாக நோட்டுக்கள் அடுக்கி வைத்திருப்பதைக் காட்டுவது போல் பாவனை. ஆனால் பேரம் அறுபத்திரண்டுக்கும் ஐம்பத்தெட்டுக்கும் இடையே இழுபறியாகிறது. நாளுக்கு ஐம்பது குரோசுக்குள் உற்பத்தி செய்யும் சிறு தொழிலகங்கள் பெருகிய பிறகு அவர்கள் சரக்கு மிகக் குறைவாக விலை போகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள் பல. “எங்க சரக்குக்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாதா சிங்ஜி? அதில் இரண்டு பக்கத்திலும் மருந்திருக்காது. மழையோ, ஈரமோ எந்த நிலையிலும் பற்றிக் கொள்ளும் சரக்கு இது...”

     பேரம் சரியாக வரவில்லை. அவன் விடைபெற்றுப் போகிறான். ஒரு சமயம் ஒரே கிராக்கியாக இருக்கும், சரக்கு இருக்காது. சில சமயங்களில் சரக்கு தேங்கிவிடும். கையில் பணமுடையாக இருக்கும். இவர்கள், விலையை இறக்குவார்கள் என்ற துணிவுடன் பிடி கொடுக்காமல் சென்று விடுதி அறைகளில் போய்த் தங்கிக் கொள்வார்கள். அத்தகைய நேரம் இது.

     அண்ணன் மிகக் கோபமாக இருக்கிறான்.

     இந்த அண்ணன் அம்மாவுக்குப் பதினாறு வயசில் பிறந்த பையன். நாற்பதாகப் போகிறது. அவனைப் பார்த்தால் அண்ணன் என்றே சொல்ல முடியாது. இவனைப் போல் உயரமும் இல்லை; நிறமும் இல்லை. புகை குடிக்க மாட்டான். கண்களில் சாந்தமும், உதடுகளில் புன்னகையும் இவன் இயல்புகள். கோபமாக இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவனுக்குத் தெரிகிறது.

     “ராத்திரி கிளப்பிலேந்து எப்ப வீட்டுக்குப் போனே?... ம்...? கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ இருந்தே. நீ பெண்ணெடுத்த இடம் அம்மாளுக்குப் புடிக்கலன்னாலும் கிளவராச் செஞ்சிருக்கேன்னு நினைச்சேன். விஜி காலம தொழிற்சாலை பஸ்ஸில் இங்க வந்திருக்கிறா. உள்ள வந்து பார்த்தாளாம். நேத்து பிள்ளைகள் அதுங்களுக்குள்ள ஏதோ சண்ட போட்டுக் காயமாம். ஒரு பய்யனை ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போங்கன்னாளாம். இப்ப நேரா அவங்க வீட்டுக்குப் போயிருக்கா. நீ என்னடான்னா, ஆபீசுக்குப் பத்து மணிக்கு வரே.”

     “இப்ப கணக்கப்பிள்ளையை அனுப்பிச்சி வீட்டுக்குக் கூட்டிப் போகச் சொல்றே.”

     அவனுக்கு விஜியின் மீது அடங்காத கோபம் வருகிறது. “தொழிற்சாலை பஸ்ஸில் வந்தாளா? அதிகப் பிரசங்கி!”

     ஆனால் அண்ணன் அவனுடைய எதிரொலியை ஆமோதிக்கவில்லை.

     “முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே! நீ போய்க் கூட்டிட்டுப் போ! சிகரெட்டப் புடிச்சிட்டுக் கூரை மேல தூக்கிப் போடுறாப்போல ஆயிப்போகும்.”

     “அவங்க வீட்டில் போயி நான் கூப்பிட மாட்டேன். எனக்குக் கோபம் வர மாதிரி எதானும் பேசுவா. வீட்டில எந்நேரம் வந்தாலும் அம்மா இவமேலே சொல்ற புகாரும், இவ எல்லோரையும் விரோதி போல நினைக்கிறதும்... எனக்கு வீடாகவே இல்ல...”

     “அதென்னமோ, நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுச் சாதுரியமா நடக்கணும். பிள்ளைங்களை ஏன் மூணு மணிக்குக் கூப்பிடப் போகணும்? ஏன் தீண்டாமை அலோ பண்றீங்ன்கன்னல்லாம் கேட்டாளாம். இந்த வட்டத்தில் அவ தலையிடக் கூடாத வகையில் சாதுரியமா நீதான் அட்ஜஸ்ட் செய்யணும்...”

     “எனக்கு இனிமேல் அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாது. ஏதானும் சொன்னா, எனக்கு இங்க ஜயில் போல இருக்கு. நான் காவல் கைதி, உங்கம்மா காவல், என்ன விட்டுடுங்க, நான் போறேன். பி.எட். படிக்கிறங்கிறா. நம்ம வீட்டில அம்மாள மதிக்கிறதேயில்ல. அவங்க சாமி பூசையில் நம்பிக்கையில்லேன்னாக் கூட உள்ள வந்து உக்கார வேண்டாமா? அமெரிக்காவிலேந்து வந்தவங்க கூட அம்மாவை மதிக்கணும்னு வெத்துக் காலோட சாமி ரூமுக்கு வந்து அம்மா குடுத்த பிரசாதத்தை வாங்கிட்டாங்க. மருமகள் பூசைக்கு உதவியா எல்லாம் செய்யணும்னு அம்மா எதிர்பார்க்கிறாள். இவ சிலதிலல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாதீங்க. என்னுடைய நம்பிக்கை இந்த வேசம் போடுறதில இல்லன்னு முகத்திலடிச்சாப்பில பேசுறா. அம்மா இந்தச் சிறிசு அவமதிக்கிறான்னு மூக்கச் சிந்திட்டு அழுறாங்க... அதுபோகட்டும், செல்வி கிட்டன்னாலும் சிநேகமாயிருக்கிறாளா? லோசன் போடுறதும் பவுடர் போடுறதும் தா வேலையா? இந்தப் புத்தகம் படிக்கக் கூடாது. இதுதான் வேணும்னு அவளைப் போயி அதிகாரம் பண்ணுறா. அதுக்கு இவளக் கண்டாலே பிடிக்கல...”

     அண்ணன் மென்னகை இலங்க அவனைப் பார்க்கிறான்.

     “அது போகட்டும், உன்னிடமேனும் முரண்பாடில்லாமல் இருக்கிறாளில்லை?”

     அவன் முகம் விழுந்து போகிறது.

     ‘திமிர் பிடித்த, அடக்க முடியாத குதிரை’ என்று மனசுக்குள் சொற்கள் வெடித்து வருகின்றன. ஆனால் வெளியிடவில்லை.

     “எல்லாம் சரியாப் போயிடும்... நீ வேலையப் பாரு... நான் போகிறேன்...”

     ரங்கேசன் வெளிச் செல்கிறான்.