ஐந்தாம் பாகம்

2. நீல நாடா

     நீண்ட காலக் கனவொன்றை நனவாக்கியவனாய் வந்த நஞ்சனை வரவேற்க, ஐயன் ஏனோ வரவில்லை! ஒரு வேளை உடல் நலம் இல்லையோ?

     “ஐயன் சுகந்தானே அம்மா?” என்று அவன் கேட்டான்.

     “சுகந்தான். வருகிறேன் என்றார். நேற்றே மரகத மலை ஹட்டிக்குப் போனார். இதோ வந்து விட்டார் பார்!”

     நஞ்சன் தந்தை வந்ததைப் பார்த்தான். முகத்தில் ஒளி எங்கே? “இன்னும் ஆறே மாதத்தில் நஞ்சன் இன்ஜினீயராகி வருவான்!” என்று ஆவல் துள்ளும் முகத்துடன் பெருமையாக அக்கம் பக்கங்களில் சொல்லிக் கொண்டிருந்த ஐயன் ஏன் கறுத்து வேதனையில் தோய்ந்தவராகக் காணப்படுகிறார்?

     “வெயிலா அப்பா? உடம்பு சரியில்லையா?” என்றான் துணுக்குற்று.

     “வெயிலும் மழையும் படாத சீமானா உன் ஐயன்?” என்றார் ஜோகி. அந்தக் குரலில் தோய்ந்திருந்த விரக்தி நஞ்சனைத் துணுக்குறச் செய்தது. ஒரு தடவை கூட அது போல அவர் பேசி அவன் கேட்டிருக்கவில்லையே! ஐம்பதும் நூறுமாக எடுத்துக் கொடுத்த அலுப்போ?

     ராமன் எப்படி தன் படிப்புச் செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றியிருப்பான்? பெரியப்பா தம் செல்வத்தை மட்டுமா அந்தத் தேர்தலுக்கு இரையாக்கினார்? எதிர்கால நம்பிக்கையையும் இழந்து அல்லவோ போதைப் பொருளில் கசப்பை மறைத்துக் கொண்டு இருந்தார்? லிங்கன், அணைக்காலனிக்குப் பால் விநியோகக் குத்தகை எடுத்துப் பெருகிவரும் மக்களுக்குப் பால் வழங்கும் வியாபாரத்தில் இறங்கியிருந்தான். அடுத்தவன் தருமன், அணைத் திட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்தான். மூன்றாமவன் மரகதமலை ஹட்டியில் புதிதாக எழுப்பியுள்ள ‘டூரிங்’ சினிமாவில் படம் காட்டப் படித்திருந்தான்.

     நஞ்சன் அந்தக் குடும்ப நிலை முழுவதையும் அறிவான். அங்கிருந்து உதவி வரவே இடம் இல்லை. இங்கும், மாமன் இறந்தும், ஸித்தனுக்குப் பணம் அனுப்பி வருகிறார் அவன் தந்தை. எனவே, ஐயன் நிறையக் கடன் வாங்கியிருப்பாரோ? பூமியை ஈடுகாட்டியிருப்பாரோ? படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் சிந்தித்தே பார்க்கவில்லையே!

     ஒற்றையடித் தடம் மாறி, மூக்குமலை வளைந்து, வண்டிப் பாதை வந்திருந்ததை அப்போதுதான் நஞ்சன் கவனித்தான்.

     “ஆமாம், ஜீப் போகுமே; நம் மலைக்கு அடியில் குகை போகுமாம் தண்ணீர் போக!” என்றான் ராமன்.

     “என்னைக் கூடக் குகைக்குடையும் பகுதியில் தான் போடுவார்களாம் அம்மா. நம் வீட்டில் கூட விளக்குப் போடலாம். பித்தானைத் தட்டினால் விளக்கு வரும். தண்ணீரை அணைக்கட்டித் தேக்கி, குகை வழியாகக் கொண்டு வந்து, பெரிய பெரிய குழாய்களில் பாய்ச்சி, பெரிய இயந்திரங்களைச் செய்யவும், சமைக்கவும், குளிர் காயவும் அந்தச் சக்தி நமக்கு உதவும். நிறைய நிறையப் பேருக்கு வேலை கிடைக்கும்; சாப்பாடும் துணியும் கிடைக்கும்.”

     அம்மையிடம் தன்னை மீறிய உற்சாகத்துடன் நஞ்சன் விளக்கிக் கொண்டே போனான். என்றுமே, தான் கண்ட, கேட்ட புதுமைகள் நாகரிகங்கள் எல்லாவற்றையும் அவளிடம் வந்து சொல்ல அவன் தவறியதே இல்லை.

     ஆனால் பாரு அவன் கூறியவற்றை எல்லாம் ரசித்தாளா? அந்த மலையில் வந்துள்ள மாபெரும் புரட்சியில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருந்ததா?

     அதைத் தனித்துக் கூற முடியாது. அவளுடைய உலகின் ஆனந்தப் புரட்சி நஞ்சன். நாளை அந்த மலையிலே அவன் கூறிய செல்வங்களெல்லாம் பெருகினால், அவளைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா, அவளுடைய மகன். அவனுடைய குரலில் ஆனந்த ஒளியில் அவன் இருதயம் நிறைந்து குளிர்ந்து விட்ட அவன் எது பேசினாலும் அவளுக்கு உகந்ததே.

     ஆனால் ஜோகியின் நெஞ்சிலிருந்து வெடித்து வந்தாற் போல் சொற்கள் வந்தன. “நிறைய நிறையப் பேருக்குச் சாப்பாடும் துணியும் கிடைக்குமா? இருக்கிறவர்கள் சாப்பாட்டில் மண்ணைப் போடுவதும், உங்கள் படிப்பு உங்களைப் போல் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க, இம்மாதிரி கல்லையும் மண்ணையும் துளைத்து, பூமித்தாயை மானபங்கம் செய்கிறார்கள். பணம் பணம் என்று மக்கள் பேயாய் அலைகிறார்கள். பணமும் மண்ணும் ஒன்றாகுமா?”

     நஞ்சன் அதிர்ந்தவனாக நின்றான்.

     “இந்த மலையெல்லாம் ஒளி விளக்குகள் திகழும். நான் சிறு பையனாக இருக்கையிலே கனவு கண்டேன்” என்று தம்மை மறந்து பேசிய ஐயனா இதைச் சொல்கிறார்? அவர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

     “அப்பா!” என்றான் பதற்றமாக.

     பாரு எந்தப் பேச்சையும் கவனிக்கவில்லை. அவற்றைச் செவி வாங்க, இனம் பிரிக்க, அவள் புலன்கள் வசத்தில் இல்லை.

     ஜோகி உடனே சமாளித்தவர் போல், “ஒன்றும் இல்லை? வந்ததும் வராததுமாக உன்னிடம் பேசியது சரியில்லை” என்றார்.

     அந்த மூக்குமலை ஹட்டியே, படித்துவிட்டு அங்கேயே உத்தியோகம் ஏற்க வரும் நஞ்சனை வரவேற்கக் கூடிவிட்டது.

     பாருவுக்கு, அன்றொரு நாள் கிருஷ்ணன் குதிரை மேலேறி மணிக்கல்லட்டி வந்ததும், ஊரே திரண்டு அவனைக் காண நின்றதும் நினைவுக்கு வந்தன. அன்று வெள்ளி முண்டணிந்த பெண்கள். இன்றோ, வண்ணச் சேலைகளும் தாவணிகளும் அணிந்த பெண்கள். “நல்லாயிருக்கிறாயா நஞ்சா? இங்கே தான் வேலையா?” என்றெல்லாம் அன்பு விசாரணைகள்.

     நஞ்சன் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கையிலே, வண்ணத் தாவணி அணிந்த பெண் உள்ளே ஓடுவது தெரிந்தது. அவன் உடனே புரிந்து கொண்டு விட்டான்.

     “அம்மா, சொல்லவில்லையே நீங்கள்? தேவகி என்ன என்னைக் கண்டு விட்டு ஓடுகிறாய்?” என்று சிரித்துக் கொண்டே அவன் பெட்டியைக் கீழே வைத்தான்.

     தேவகி நாணம் கவிந்த புன்னகையுடன் தலைகுனிய வந்து நின்றாள். கருகருவென்று அடர்ந்த தலைமயிர்! தந்தையைப் போல் தேவகியும் குட்டை, உடலுங்கூட, செழுமையான வளர்ச்சியைக் காட்டும் கட்டு வாய்ந்தது. பூப்போட்ட பாவாடை; வாயல் தாவணி; முழங்கை வரையிலும் நீலச்சோளி; கழுத்தில் கருகமணி மாலை; கருஞ்சிவப்பு நிறம்; பெரிய கண்கள்.

     “ரே தேவகி, என்ன கணக்குப் பரீட்சை எப்படி இருந்தது? பேசமாட்டேன் என்கிறாய், திடீரென்று!” என்று அவன் அவளை வம்புக்கு இழுத்தான்.

     நாணம் கவ்வ, அவள் உள்ளே ஓடிய போது அவனுக்கு அன்றைக் காலை நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அவள் தாத்தாவிடம் அவன் தன்மையைக் குறித்துப் பரிகசிப்பாளோ?

     பாரு அவன் நின்றது கண்டு சிரித்தாள்.

     “இரு, ராமா, நஞ்சா, காபி சாப்பிடலாம்” என்று சொல்லி, உள்ளே சென்று தயாராக அடுப்பில் கொதித்த நீரில் காபி போட்டு எடுத்து வந்தாள்.

     “தேவகி மட்டுந்தான் வந்திருக்கிறாளா? அத்தை, யாரும் வரவில்லை?” என்றான்.

     “தேவகியைத்தான் வரச்சொன்னேன், பத்தாவது பரீட்சை எழுதி விட்டாள் நஞ்சா, தேவகி!” என்றாள் பாரு பெருமை பொங்க.

     “அதுதான் கணக்குப் பரீட்சை எப்படி என்று கேட்டேன். அத்தான், நம் தேவகிக்கு இனி ஒரு எம்.ஏ. மாப்பிள்ளை தேடவேண்டியதுதான்!” என்றான் நஞ்சன் உற்சாகமாக.

     ராமன் பதிலே பேசாமல் முறுவல் பூக்கையில், பாரு உள்ளிருந்து ஓடி வந்தாள்.

     “அதென்ன நஞ்சா, அப்படிச் சொல்லிவிட்டாய்? தேவகி உனக்காகத்தான் படித்தாள். படித்த அத்தானுக்கு அவள் படிக்காத முட்டாளாக வரக்கூடாதே!”

     நஞ்சன் விழிகள் நிலைக்க அம்மையை நோக்கினான். உடலை ஊடுருவ, ஒரு சிலிர்ப்பு ஓடியது. ராமன் சிரத்தை கொண்டு அவன் படிப்பை ஏற்றது இதற்குத்தானா?

     “என்ன அம்மா, நீங்களே முடிவு கட்டிவிட்டீர்கள்? படித்த பெண், அண்ணனைப் போல் வீட்டில் பழகிய ஆளையா கட்டுவாள்?”

     நஞ்சன் சிரித்த வண்ணந்தான் அதை மொழிந்தான். ஆனால் பாருவுக்கு அது உகந்ததாகப் படவில்லை.

     “நீதானே முறைப் பையன்? அன்றிலிருந்து ராமன் நினைத்த மாப்பிள்ளை; இல்லையா ராமா?”

     நஞ்சனுக்குப் பேச்சை நீட்ட அப்போது விருப்பம் இல்லை; “அது சரி” என்று முடித்து விட்டான்.

     சற்றைக்கெல்லாம் சாப்பிட்ட பிறகு, ஜோகியும் ராமனும் வெளியேறி விட்டனர்.

     நஞ்சன் சற்றே படுத்தா. படுக்கை கொள்ளவில்லை. ஏதோ நினைத்துக் கொண்டவனாக, அந்தப்புர மனை அறையில் தன் புத்தகப் பெட்டியை, துணிமணிகள் வைத்துள்ள பெட்டியைத் திறந்து குடையலானான்.

     கல்லூரியில் அவன் படித்த ஒவ்வோர் ஆண்டிலும் சக மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தமிழ் மன்றப் பாரதி பாடல் போட்டியில் பெற்ற பரிசுப் புத்தகம், அயலூர் மாணவ நண்பர் ஒருவன் அன்பளிப்பாகத் தந்த பேனா எல்லாவற்றையும் அவன் அந்த அந்தச் சம்பவங்களுக்கு உரிய நினைவுகளோடு அனுபவித்துப் பார்த்துக் கீழே கடை பரப்பினான். கடைசியில் பெட்டிக்கு அடியில் இருந்த பழுப்பு நிறக் காகிதத்தை எடுத்துத் தட்டினான். அடியில், மடிந்த நீலநிற ‘ஸாடின்’ ரிப்பன். அது அப்படியே இருந்தது.

     எத்தனை நாட்களாக அந்த நாடா அதனுள் இருந்திருக்கிறது! கையில், அவன் அன்றொரு நாள் தோட்டத்தில் செய்து கொண்ட உறுதியை நினைத்துப் பார்த்தவனாக எடுத்தான்.

     அவன் உறுதியை நிறைவேற்றிக் கொண்டு விட்டான். அந்த நாடாவுக்குச் சொந்தக்காரி எத்தனை அழகிய பூங்கொடியாக வளர்ந்து விட்டாள்! மரியாதை தெரியாத அவன், ‘அது என் இடம்’ என்றானே அழுத்தம் திருத்தமாக? அசட்டுத்தனம்! நாகரிகம் அறியாத ஹட்டியில் வளர்ந்தவன் தானே அவன்? முரட்டு வேலைகளுக்குரிய கல்வியைக் கற்றிருக்கிறான்; ஐரோப்பிய நாகரிகத்தில் தோய்ந்து பிறரிடம் மரியாதையுடன் பேசவும் நடக்கவும் கற்றவன் மட்டும் அல்லன், அவள் அதையே பழக்கமாகக் கொண்டவள். உண்மையில் அந்தக் கண்டக்டர் கைக்குட்டையைக் கீழே தள்ளிவிட்டு, அவளுக்கு இடம் கொடுத்திருப்பான்; முட்டாள். அவனுடைய முட்டாள்தனந்தான் நஞ்சனை அநாகரிகமாக நடக்க வழி காட்டிவிட்டது. அவன் அநாகரிகமாக என் இடம் என்று வழக்குக் கூறிய போது அவள் எழுந்து நின்றாள்.

     சே! அந்தக் கணமே நஞ்சனுக்கு அவளிடம் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு, தன் நாகரிகப் பண்பை அவளுக்குத் தெரிவித்துக் கொள்ளாது போனால் மனம் அமைதி கொள்ளாது போல் பரபரப்பு உண்டாயிற்று.

     ஆம், ஒரு நாளும் பேசாத பரம விரோதியான கிருஷ்ண கௌடர், அன்று அவனிடம் நெடுநாள் பழகின சகஜபாவத்துடன் எதற்கு விசாரித்தார்? ‘ஜோகி கௌடர் மகன்’ என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த காரணம் என்ன? விரோதக்காரர் என்று சற்றே பொறாமையுடன் இருந்து வந்த அவனுக்கு அப்போது ஏன் ஆத்திரம் உண்டாகவில்லை?

     ஏற்கெனவே மனநிலை சரியாக இல்லாத வேளையில், அது ஐயனுக்குத் தெரிந்தால்?

     ஐயனை வருத்தும் வேதனை என்ன என்பது அவனுக்குத் தெரியவில்லையே! இரண்டாயிரம் மூவாயிரம் என்று கடன் பட்டிருந்தால் தான் என்ன? அவன் மாசம் மாசம் கடனடைக்கத் தகுதி பெற்று விட்டானே! அம்மையிடம் இரகசியமாக விவரம் அறிய வேண்டும் என்று நினைக்கையிலே, நஞ்சன் முன் பாருவே, வேர்க் கடலை வறுத்து வெல்லம் கூட்டிச் செய்த உருண்டையுடன் வந்தாள். அவன் கையிலுள்ள பட்டு நாடாவைக் கண்டாள்.

     “ரே நஞ்சா? நாடா தேவகிக்கு வாங்கி வந்தாயா? என்னிடம் அண்ணன், தம்பி என்று சொன்னதெல்லாம் விளையாட்டுத் தானே?” என்றாள் கண்களில் ஒளி துள்ள.

     நஞ்சன் குளத்தில் முழுகி எழுந்தாற் போல் சமாளித்துக் கொண்டான். “இது புது நாடா என்றா நினைக்கிறீர்கள்! பல வருஷத்துப் பழைய நாடா! இதோ பாருங்கள் அம்மா, இது யாருடையதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்றான் விளையாட்டாகக் கேட்பவனாக.

     நஞ்சன் துடிக்கும் நெஞ்சுடன் அந்த இரகசியத்தை விண்டு விட இருந்தான். பாரு, அவன் வாயிலிருந்து இன்னதுதான் வரப்போகிறதென்பதை அறியாமலே சிரித்தாள்.

     “யாருடையது? உன் தங்கைகளுடையதா? பெரியப்பன் வீட்டில் எடுத்தாயா?”

     “இல்லையம்மா, இல்லை!”

     “பின்னே? ஓ! தேவகி வைத்துப் பின்னியிருந்தாளோ?” அவள் கண்களில் குறும்பும் கேலியும் மின்னின.

     “இல்லவே இல்லை, அம்மா. நீங்கள் மட்டும் இதை சொல்லிவிட்டால், உங்களுக்கு எது வேண்டுமானாலும் பரிசு கொடுப்பேன்.”

     பாரு இதற்கும் வாய்விட்டுச் சிரித்தாள்.

     “நீயே எனக்குப் பெரிய பரிசாக இருக்கிறாயே! இனி எனக்கு வேறு என்ன பரிசு வேண்டும் நஞ்சா?”

     “வேறு ஒன்றுமே வேண்டாம்?”

     “நஞ்சன் தேவகியைக் கல்யாணம் கட்டிக் கொள்ள வேண்டும். அம்மை மடியிலே...”

     அவனுடைய கண்களில் இருந்த ஒளி திடீரென்று நிழலுள் மறைந்தது; “இப்போதே என்ன அம்மா கல்யாணம்? அம்மா, ஐயன் என் படிப்புக்காக எத்தனை ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்? யாரிடம் வாங்கியிருக்கிறார்?”

     “கடனா? கடன் ஏதும் இல்லை, நஞ்சா. உன்னை ராமன் படிக்க வைக்கிறேன் என்றான். உன் அம்மைக்காக ஏற்றுக் கொண்டான். அவன் மகளை நீ கட்டிக் கொள்வாய். இந்த நாடா, எனக்குத் தெரியும், தேவகியினுடையது தானே?”

     அவள் ஆசையில் மண்ணைத் தள்ளும் துணிவு நஞ்சனுக்கு வரவில்லை. ராமன் உதவுவதாகச் சொன்னதற்கு இப்போது புதுப் பொருள் அவன் கண்டான்.

     அவன் நெஞ்சிலிருந்து நெடுமூச்சு வந்தது. தலையை வெறுமே அசைத்து விட்டுக் கடலை உருண்டையில் கவனம் செலுத்த லானான்.