அத்தியாயம் - 10

     பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மூன்று மாடி வெண்ணிறக் கட்டிடத்தின் முன்வாயிலில், வேம்பு கவலையுடன் நிற்கிறான்.

     “ஆபரேஷன் ஆயிட்டுதா வேம்பு ஸார்?”

     “தெரியல ஒம்பது மணிக்கே தியேட்டருக்குக் கொண்டு போயிட்டா. ஆபரேஷன் ஆனதும் வந்து சொல்றேன்னு வார்டுபாய் சொன்னான். மணி பன்னண்டரை. இன்னும் ஒண்ணும் தெரியல. அக்கா, அப்படி உள்ள ரிசப்ஷன் பெஞ்சுல உக்காந்துக்கோ... ஆபரேஷன் நல்லபடியானாக்கூட, நாம யாரும் பார்க்க முடியாது. இன்டென்ஸிவ் கேர்ல வச்சிருப்பாளாம். வார்டுக்குக் கொண்டு வர ரெண்டு நாள் கூட ஆகலாம்னு சொல்றா, தெரியல...”

     “அதெல்லாம் பிரெய்ன், ஹார்ட் ஆபரேஷன்னா தான். இது அப்படி இல்ல, நாளைக்கே காலம வார்டில பார்க்கலாம்.”

     “இவ பெரிய மேதாவி...”

     “இல்ல வேம்பு ஸார். நிசமாலும் பாயம்மாக்கு அப்படி ஒண்ணும் பயப்படும்படி இல்ல. நாம, பத்தாம் நாள் வீட்டுக்குக் கூட்டிப் போயிடலாம்.”

     வேம்புவுக்கு ஆறுதலாக இல்லை. கண்களில், நீர் துளிக்கிறது.

     “மூணு யூனிட் ப்ளட் வாங்கிட்டுப் போனாங்க... பணம் கொடுத்தேன். ஆ... அக்கா இந்த வெற்றிச் செல்வி டாக்டர் யார் தெரியுமா?... நம்ம கூத்தரசன் டாக்டர் பொண்ணு...”

     ரேவுவின் நினைவுகளில் மின்னல் பளிச்சிடுகிறது. “பேரை எங்கோ கேள்விப்பட்டோமேன்னு நினைச்சேன் வேம்பு. நான் எட்டுல படிக்கிறப்ப அவ, ஸிக்ஸ்த்ல வந்து சேர்ந்தாள். சுருட்டையா ரெட்டைப்பின்னல் போட்டுண்டு, அகல நெத்தியுடன் அப்பா ஜாடையாவே இருப்பா... அவளுக்கு ஒரு தங்கை உண்டு. அவள் தாமரைச் செல்வி. நாலில் படிச்சா...”

     “ரொம்ப நல்ல பேரு அவளுக்கு. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு ஆபரேஷன் பண்றா. புருஷன் பாங்க்லயோ எங்கேயோ பெரிய வேலையாம்... நீ பாத்தா புரிஞ்சிப்பே...”

     எதற்குப் பார்க்க வேண்டும்?...

     பாயம்மாவைப் பார்த்துவிட்டு ஓட வேண்டும். இவள் மேல உள்ள கோபம், அந்தப் பிள்ளைமேல் விடிந்திருக்கிறது. ஒரே நாளில் இத்தனை நாசங்களுக்கு அவள் காரணமாக இருந்திருக்கிறாள்.

     முதல் மாடி ஏறி, தியேட்டருக்குச் செல்லும் ஒழுங்கையில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நேரம், யுகமாகக் கழிகிறது.

     கடைசியில் ஓராள் - பச்சைத் தொப்பி, சட்டை அணிந்தவர் வேம்புவிடம் வந்து, “ஆபரேஷன் ஆயிட்டது... ரெண்டு பேர் மட்டும் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

     “அக்கா, நீயும் சாந்தியும் மட்டும் போய்ப் பார்த்திட்டு வாங்க. நான்... நான் அப்புறம் பார்க்கிறேன்...”

     அழுகிறானா என்ன?...

     “நீங்களும் அக்காவும் போய்ப் பாருங்க ஸார். நான் கூடவே இருக்கப் போறேனே?...”

     மேல் மாடியில் இருக்கிறது அவளைப் போட்டிருக்கும் அறை.

     உள்ளே டாக்டர்கள் இருக்கிறார்கள். நர்ஸ்கள் பரபரக்கிறார்கள்.

     வேம்புவுடன் ரேவு இன்னம் அரை மணி நிற்கிறாள்.

     ‘ரொம்ப ஏதானும் லேவடியாயிருக்குமோ? ஆண்டவா, அவங்க எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேணும்.’

     கதவைத் திறந்து கொண்டு டாக்டர் வருகிறாள்.

     மின்னல் போல்... வெள்ளை கோட் அணிந்த, பூப்போட்ட சேலை தெரிய... வெற்றிச்செல்வி.

     ஒருகணம் வேம்புவைப் பார்த்து, “ஷி இஸ் ஆல் ரைட்... டோன்ட் வர்ரி...” என்று சொல்லிவிட்டு, விடுவிடென்று போகிறாள். பின்னால் உதவியாளர், நர்ஸ்கள்...

     உள்ளிருந்து ஒரு நர்ஸ், வேம்புவிடம் வந்து, ஒரு சீட்டைத் தந்து, “இந்த மருந்துகளை உடனே வாங்கிட்டு வாங்க!” என்று கொடுக்கிறாள்.

     அவன் ஓடுகிறான்.

     அவள் உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.

     கால் பக்கம் தூக்கி வைத்திருக்கிறார்கள். ஒரே குழாய் மயம். மூக்கில், கையில், காலில்...

     முகம் வெளுத்துச் சுருக்கி... மூச்சு வருவது மட்டுமே தெரிகிறது. நரைத்துப் பட்டுப் போன்ற முடி... நெற்றியில், அழகாகக் குங்குமப் பொட்டு...

     ரேவுவின் மனசில் எதுவுமே பதிந்து பாதிப்பைத் தோற்றுவிக்கவில்லை.

     அவள் வீடு... பரத்... அடிபட்டு விழுந்த கன்று போல... தூக்கி நிறுத்தித் தடவி... இதம் செய்யும் நிழல், அவள் வீடு... அது ராட்சசனுக்குரியதாக இருந்தாலும் அவள் உரிமை பதிந்த இடம்.

     வேம்பு மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட்டு, இன்னும் சிறிது நேரம் தங்கி பாயம்மா கண் திறக்கப் பார்த்துவிட்டுத்தான் திரும்புகிறான். சாந்தி அங்கேயே தங்கி விடுகிறாள்.

     திரும்பி வரும் போது பஸ்ஸில் ஒரே கூட்டம். அப்போது தான் நினைவு வருகிறது. “வேம்பு நீ இங்கேயே எங்காணும் சாப்பிட்டுக்கோ ஓட்டல்ல... உனக்குன்னு வச்ச சாதத்தைப் பரத்துக்குப் போட்டுட்டேன்...”

     “என்ன? அவன் வந்திருக்கானா?... அத்திம்பேர் அதுக்குள்ள உன்னைக் கூட்டிண்டு வர அனுப்பிட்டாரா?...”

     “ஆமாம். அவனைப் போட்டு அடிச்சிருக்கார். கண் மண் தெரியாம, சாதத்தைப் போட்டு, படுக்க வச்சிட்டு வந்தோம். வேம்பு, நீ தப்பா நினைச்சிக்காதே. நான் இப்ப போயிட்டு அப்புறமா வரேன்... ராம்ஜிக்குப் பரீட்சை சமயம். ப்ளஸ் டூ இலையா? அப்புறமா நான் வந்து பாயம்மா உடம்பு தேற வந்திருக்கேன்...”

     அவர்கள் பஸ்ஸை விட்டிறங்கித் தெருவில் வரும் போதே பவர் லாண்டிரிப் பையன் பார்த்து விடுகிறான். “ஆபரேசன் ஆயிடிச்சிங்களா, பாயம்மாக்கு இந்தாங்க, சாவி, அந்தப் பையன் வூட்டப் பூட்டி சாவி குடுத்திட்டுப் போச்சி?” என்று சாவியைக் கொடுக்கிறான்.

     ரேவுவுக்கு இனம் தெரியாததொரு அச்சம் கவ்வுகிறது.

     சாயங்காலம் நீங்கள் வரும் வரையிலும் தூங்குவேன் என்று சொன்னவன், அவர்கள் வருவதற்கு முன் கதவைப் பூட்டிக் கொண்டு எப்படிப் போனான்?

     கதவை வேம்புதான் திறக்கிறான்.

     முதலில் உள்ளே சென்றவன், சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அதனுள்ளிருந்த பர்சை எடுத்துப் பணத்தை எண்ணுகிறான். அவள் உள்ளே சென்று, பரத் சாப்பிட்ட தட்டு, சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பின் ஒழுங்கைக்குக் கொண்டு போகிறாள். அடுப்பை மூட்டி ஒரு சாதம் வைக்க, அரிசி கழுவுகையில்,

     “அக்கா! அக்கா!...” என்று வேம்பு கத்துகிறான்.

     “என்ன வேம்பு?”

     பீரோவின் கீழ் அவன் பணம் வைத்த மஞ்சள் துணிப் பையைக் காட்டிக் கொண்டு நிற்கிறான். முகம் இருண்டு போகிறது.

     “அக்கா! இதுல அவர் கொண்டு கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை அப்படியே வைத்துவிட்டுத்தானே போனேன்? கையில் ஏற்கெனவே செல்வராஜ் கொடுத்திருந்த பணத்தை எடுத்திண்டு போனேன். இப்ப... இதுல... வெறும் அஞ்சு நூறு தானிருக்கு. ஆயிரத்தைந்நூறு அபேஸ்...”

     ரேவு நொறுங்கிப் போகிறாள்.

     “நீ பீரோவைப் பூட்டலியா வேம்பு?”

     “பூட்டினேன்... இதுதான். இதென்ன காட்ரேஜ் பீரோ சாவியா? வெறும் மர அலமாரி. எப்பவோ பாய் ஏலத்துல எழுபது ரூபாய்க்கு எடுத்தாராம். அதுக்கு இத... இந்த மூணு ரூபாய் பூட்டுச்சாவி. இது ஆணியப்போட்டு நெம்பினாலே திறந்துக்கும். இந்த வீட்டிலே என்ன இருக்கு கொள்ளையடிக்க! வாடிக்கைக்காரா துணி குடுத்தா வச்சிக்க அலமாரி. இதை நாங்க பூட்டினதே இல்ல. இப்பத்தான் வெளியில போறப்ப நான் பூட்டுறேன்...”

     “வேம்பு, என்னைச் செருப்பாலடிடா, அந்தத் தடியன நான் உள்ள சேத்ததே தப்பு. என்ன நாடகம் ஆடினான்! அங்கே வெள்ளிக் கிண்ணம், அது இது எல்லாமே இவன் தான் திருடிருக்கான். நான் என்னடா வேம்பு செய்வேன்...!”

     அவள் ஆற்றாமை தாளாமல் அரற்றுகிறாள்.

     “பாவி, பாவி...” என்று முகத்தில் அறைந்து கொள்கிறாள்.

     உடலும் மனமும் பற்றி எரிகிறது.

     காதில் காலே அரைக்கால் வராத தோடு, மூக்குத்தி, தாலிக்கொடி, கைகளில் இரண்டு வளையல்கள்... இருக்கின்றன.

     மளுக்கென்று இரண்டு வளையல்களை உருவி அவனிடம் கொடுக்கிறாள் ரேவு.

     “இருக்கட்டும்டா, வச்சுக்கோ. கயிற்றுப் புருஷன் தான் பாவின்னாலும் வயத்துலப் பெறந்ததும் சண்டாளனா இருக்கு. வச்சிக்கோ!”

     “இருக்கட்டும் அக்கா. நீ போட்டுக்கோ வளையலை, எனக்குப் பணம் சிரமமமில்லை. நீ போட்டுக்கோ!”

     வேம்பு வற்புறுத்தி அதைத் திருப்பிக் கொடுக்கிறான். வெந்து நீராகும்படி கொதித்துக் கொண்டு வேம்புவுக்கு ஒரு சோறு வடித்துப் போடுகிறாள். அவன் சாப்பிட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே செல்கிறான்.

     இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

     “இப்ப என்னடா பண்ண நான்? எனக்கு ஒண்ணுமே புரியலப்பா...”

     “அழாதே அக்கா. எதுக்கும் இன்னிக்கு சாயங்காலமா நீ புறப்பட்டுப் போ. ராம்ஜி சொல்லுவான். உன் சிநேகிதிக்கிட்டே கேள். வருத்தப்படாதே சரியாப் போயிடும். வயசுக் கோளாறு, சகவாசம் சரியில்ல... திருத்திடலாம்...” என்று ஆறுதல் சொல்கிறான்.

     காலையில் பத்து மணிக்குள் சமைத்து, சாந்த்க்குச் சாப்பாடும் காபியும் எடுத்துக் கொண்டு, வேம்புவுடன் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாள்.

     பாயம்மாவுக்கு முகம் தெரியவில்லை. மயக்கத்திலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. இரவு அதிகமாகிவிட, டாக்டர் பதினோரு மணிக்கு மேல் வந்து ஏதோ பண்ணினாளாம். “ஒரு மணி நேரம் இருந்தாள். இப்ப பயமில்லேன்னு சொல்லிருக்கா. யார் யாரோ ஃபோன் பண்ணி விசாரிக்கிறாங்க...” என்று சாந்தி செய்தி சொல்கிறாள்.

     ரேவுவுக்கு எதுவுமே மனதில் உறைக்கவில்லை.

     பரத் சின்ன வயசில் துளியூண்டு... சாக்ஸ், ஷூ போட்டுக் கொண்டு, அவள் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தது இன்று போல் இருக்கிறது. “க்யூட், லிட்டில் பாய்” என்று குளோரிடா டீச்சர் புகழ்வாள். படிப்பை விட, ஓட்டம், ஆட்டம் என்றூ போவான். பரிசுகள் வாங்கி இருப்புக் கொள்ளவில்லை. பகல் மூன்று மணிக்கு சாந்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகையில் சாந்தி திடீரென்று கேட்கிறாள். “அக்கா, பரத் எப்படி இருக்கு? முதுகுக் காயம் தேவலையா? எதுக்கும் ஒரு ஊசி போடணும். எனக்குப் பாவமா இருக்கு... நீங்க கூட்டிட்டு வரக்கூடாது? இங்கே ஏதானும் மருந்து போடலாமே?”

     “...ஓ, இல்லம்மா, அவன் நேத்து சாயங்காலமே போறேன்னு போயிட்டான். அதான் நான் இப்பவானும் போனாத்தான் மரியாதைன்னு போறேன். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்.”

     அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.

     அந்த நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் இல்லை.

     வீட்டில் சுதா இருக்கிறாள். இவர்கள் வீட்டு வெளிக் கதவு பூட்டப் பட்டிருக்கிறது. சுதாவின் வீட்டுக்குள் நுழைகிறாள்.

     சுதாவைக் கண்டதும் தன் ஆற்றாமை எல்லாம் கொட்டி விடுகிறாள்.

     “முதுகில் ரணகாயம். அவப்பா எதுக்கு இப்படி அடிச்சாரோ? ஒரு நிமிஷமா என்னை ஏமாத்திட்டு பணத்தைத் தூக்கிண்டு வந்திருக்கான். என்னைச் சொல்லிட்டு, பேய் போல இப்படி அடிப்பாரா? சுதா, நான் என்ன செய்யப் போறேன்...? என்ன நடந்தது இங்கே?”

     சுதா திகைத்தாள்.

     “அப்படி ஒண்ணும் நடந்ததாத் தெரியலியே ரேவு மாமி? நீங்க போனன்னிக்கு ஒன்னரை மணிக்கு ராம்ஜி வந்து சாவி வாங்கிட்டுக் கேட்டுது எங்கம்மா எங்கேன்னு. நான் தான், ‘சமத்தா இருங்க, அம்மா ஒரு நாலு நாள் ரெஸ்ட்னு போயிருக்கா. அம்மாக்கு உடம்பு சரியில்ல...’ன்னு சொன்னேன். பால் காய்ச்சி ஃபிரிஜ்ஜில் வைக்கச் சொன்னான். ரகு வந்து எடுத்துக் கொடுத்தேன்னார். வேறு ஒரு சத்தமும் கேட்கலியே?”

     “பின்ன பரத்த எதுக்கு ரத்த விளாரா, பெல்ட்டப் போட்டு அடிச்சிருக்கார்?”

     “அப்படியா? ஒண்ணுமே தெரியலியே? நான் பரத்தையே பார்க்கல. மிஸ்டர் நாதனைத்தான் பார்த்தேன். குட்மார்னிங் சொன்னேன். அவர் வழக்கம் போல முகத்தைத் திருப்பிட்டுப் போனார்...”

     “வீட்டுச் சாவி குடுக்கலியா?...”

     “இல்ல. ஆனா, இந்த நடுக் கதவைத் திறந்து வைன்னேன். ராம்னி, சரி ஆன்ட்டின்னான்...”

     கதவு வெறுமே தான் சாத்தப்பட்டிருக்கிறது. சுதா வீட்டுப் பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள்.

     திறந்து கொண்டு ரேவு உள்ளே வருகிறாள். ஒரு குளிர்ச்சியான இதம். அவள்... அவள் இடம். அவள் வீடு; அவளுக்கு உரிமையான நிழல். சமையலறைக்குள் செல்கிறாள். ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் சாதம் மட்டுமே இருக்கிறது... மற்றபடி துப்புரவாக இருக்கிறது.

     “பரத் இங்கே வரவில்லையா? ஏன் சுதா?”

     “நான் காலம பார்க்கல. ஸ்கூலுக்குப் போயிருப்பானா இருக்கும்? சைக்கிளக் காணல?” என்று சுதா ஐயப்படுகிறாள்.

     ரேவு கீழே பார்த்துவிட்டு மாடிக்குப் போகிறாள்... படுக்கையில் இல்லை. மேல் மாடிக் கதவு திறந்திருக்கிறது.

     “இதை யார் திறந்தது...?” என்று நினைத்தவளாக மாடிப்பக்கம் காலெடுத்து வைத்ததுமே, வெறுந்தரையில் குப்புற விழுந்து கிடக்கும் பரத்...

     “சுதா...! ஐயோ, சுதா!” என்று அலறலாகக் குரல் ஒலிக்கிறது.