அத்தியாயம் - 14

     புதிய வாழ்க்கையின் சுவாரசியங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே அவளுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கின்றன. புதிய நம்பிக்கை; முகத்தில் புதிய தெம்பு; பழைய பயங்களைக் காலில் மிதித்துக் கொண்டு வாழ்க்கையை நேராக எதிர்நோக்கும் துணிவு.

     இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தவை... அந்த வீட்டுச் சூழலும், அங்கே அலமாரிகளில் அடுக்கடுக்காக இடம் பெற்றிருந்த புத்தகங்களும் தாம்.

     எத்தனை நூல்கள்! இவள் படிக்க ஆசைப்பட்டு விட்டுப் போன கதைகள், நாவல்கள், வரலாறுகள், கட்டுரைகள் என்று புதையல் அவள் முன் இருந்தது. நாள் முழுவதும் அவளுடையது தான். படுக்கும் போதும் புத்தகம், எழுந்திருக்கும் போதும் அதே நினைவு. காலையில் இவள் எழுந்து காபி போடுவாள்; சில நாட்களில் அவர் முந்திக் கொள்வார். முன் பக்க பால்கனியில் பூந்தொட்டிகளைப் பார்ப்பார்கள். பிறகு இருவரும் நேர் நடையாக நடந்து, கடற்கரைக்குச் செல்வார்கள். திரும்பி வந்த பின் குளியல். காலை உணவு இன்னதுதான் என்ற வரையறை கிடையாது. சில நாட்களில் அவள் சமைப்பாள்; அவர் உதவி செய்வார். ஒன்பதுக்கு அவர் ட்யூட்டோரியலுக்குச் சென்றுவிடுவார். நேரடி வகுப்புக்கள் கிடையாதாம். அந்த இடம் நடந்து செல்லும் தொலைவுதான். அங்கே இவரைப் போல வயதான கே.ஜி.கே. என்ற பெரியவர் இவளுக்குப் பரிச்சயமானவர். வீட்டுக்கு வருவார். கண்டிப்பானவர்.

     இவள் இன்னும் என்ன பரீட்சை, என்ன பாடம் என்று தீர்மானம் செய்யவில்லை.

     ஆனால் அந்தத் தீவிரம் வரவில்லை; ஒரு கற்பனையான உலகில் புதிய சிந்தனைகள் அவளுக்கு ரங்கப்பாவுடன் மனம் விட்டுப் பேசவும் அவர் கருத்துக்களைக் கேட்கவும் ஊக்கம் தருகின்றன. சமைப்பதும் சாப்பிடுவதுமான அன்றாட நியமங்கள் முன்பிருந்த முக்கியத்துவத்தை இழக்கின்றன.

     “அப்பா, நீங்க சொல்லுங்க, நீங்க இங்கே இத்தனை கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள்னு இவ்வளவு வச்சிருக்கேளே, இதெல்லாம் படிச்சிருப்பேள்... இல்லையா?”

     “சொல்லு, இப்ப எதுக்கு இவ்வளவு நீளமா பீடிகை போடறே? படிக்காம இருக்கறதுக்கா வாங்கி வச்சேன்?”

     “மாமி இதெல்லாம் படிப்பாங்களா?”

     “அவ, எதானும் வாரப் பத்திரிகை படிப்பதோட சரி. ஆரம்ப காலத்துல, இங்க இருந்த புஸ்தகமெல்லாம் அவளுக்கு வெறும் வறட்சி. எல்லாம் கம்யூனிச சித்தாந்தம், அந்தக் கோட்பாடு உள்ள வெளிநாட்டு ஆசிரியர் புத்தகங்கள் தான் தமிழில் - அதோ மூலை பீரோவில் இருக்கே, அதுதான். நான் முதல்ல, தலைசிறந்த நாவல்கள் - இங்கிலீஷ், தமிழ் மொழிபெயர்ப்புன்னு வாங்க ஆரம்பிச்சேன். இப்படிச் சேர்ந்து போச்சு...”

     “இல்ல... இதில் பல நாவல்கள் - நான் படிச்சதில்ல, பெண் தான் ஓர் ஆணைக் குப்புறத் தள்ளி, அவனைக் கெடுக்க வைக்கிறாள்னு ஒரு கருத்தைச் சொல்லறது. அவன் பேரில குற்றமே கிடையாது. கட்டின பெண்சாதியை விட்டு வெளியே போனால், அதற்கும் அந்தப் பெண் தான் காரணம், ஒருத்தன் குடிக்க ஆரம்பிச்சா, அதற்கும் அவள் தான் காரணம். அவள் வீட்டில் வேதவித்தான புருஷனை வச்சிண்டு, இன்னொருத்தனுக்கு மூணு பிள்ளை பெத்தாளாம். பிறகு பிராயச்சித்தமா, அந்தப் பிள்ளையை வேதம் படிக்க விட்டாளாம். காசிக்குப் போனாளாம். பிறகு... அந்தப் பிள்ளை, வேதம் படிக்க வந்தவனை, ஒரு புருஷனில்லாதவள் இழுத்துப் போட்டுக் கொண்டாளாம். இதென்ன இப்படியெல்லாம் அபாண்டம் எழுதியிருக்கான்னு தோணுறது.”

     மின்னல் ஓடுவது போல் அவர் முகத்தில் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. சட்டென்று பேசவில்லை.

     “ஏன், நான் தான் கேட்கிறேன். ஏன் இப்படி அபாண்டமா வாழ்க்கையில் பொண்ணுதான் காரணம்னு கூசாம சொல்றா? நாங்க குடியிருந்த அந்த கிராமத்து ஸ்டோர்ல எத்தனை விதமா மனுஷா இருந்தா? எனக்குக்கூட இதெல்லாம் தப்புன்னு எழுதணும்னு தோணறது. ஒரு வீட்டில தடுத்துத் தடுத்து, அப்ப இருபதுக்கும் பதினஞ்சுக்கும் குடி வச்சிருந்தா; எந்த வீட்டிலும் புருஷன் நியாயமா நடக்கல. ஒரு பொண்ணு, சிரிச்சாலே போச்சுன்னு வரம்பு கட்டியிருக்கிற சமுதாயத்தில், ஒருத்தன் கூடப் போறதுங்கறது அத்தனை சின்னக் காரியம் இல்ல. எங்க ஸ்டோரில, நாலாம் சம்சாரம் கட்டின ஒரு கிழம், உடம்பெல்லாம் வியாதி. ஏதோ சோசியம் சொல்லிப் பிழைக்கும் கால் அரைச் சம்பாத்தியத்துக்கு, பிள்ளை பிறக்கலன்னு இவளை மூணு பேர் மூணு பெண்ணைப் பெத்து வச்சிட்டுப் போனப்புறம் கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு பொண்ணு... படிப்பு கிடையாது. என்ன வேலை செய்வ? அந்தக் காலத்துல ஓட்டலுக்கு அறைக்கப் போயிண்டிருந்தா. அதும், மிஷின் வந்து வேலையில்லன்னு ஆயிட்டது. ஒரு பொண்ணை ஒரு எலிமென்டரி ஸ்கூல் வாத்தியான் - குடிகாரன், கட்டி தினம் அடிச்சி விட்டுடுவான்... ஒரு பெண்ணை யார் வீட்டிலோ குழந்தை சுமக்க பம்பாய்க்கு அனுப்பிச்சா... இத்தனை கஷ்டம். தண்ணீர் சுமந்து துணி தோச்சு, கரிப்பத்துத் தேச்சி... சீ...? இப்படி பொண்ணு திமிரெடுத்துப் போய், கூசாம பாவம் பண்ணினான்னு எழுதறத பாராட்ட வேறு பாராட்டறாங்க!” ரேவு அவரையே பார்க்கக் கூசுகிறாள். முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

     “...ரேவம்மா, உனக்குள்ள இருக்கிற மனுஷத்தன்மையப் பார்த்து நான் பெருமைப்படறேன். இதுல... ஒண்ணுதான் முக்கியம். அவரவர் எப்படி உலகத்தைப் பார்க்கிறாங்களோ, எந்த சுய அநுபவத்தின் மேல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கறாங்களோ, அந்த அடிப்படையில் தான் அவங்க எழுதறாங்க. கருத்துச் சொல்றாங்க. ஒரு பொண்ணை ‘ஸெக்ஸ்’ங்கற கண்ணோட்டத்தில் பார்க்கிறவன் இப்படித்தான் தன் கருத்தை வலிமையாகக் காட்டுவான். அந்தக் கதையில் வரமாதிரி எங்கேனும் ஒருத்தி இருப்பா. ஆனா, அவ ஏன் அப்படி இருக்கான்னு யாரும் பாக்கிறது இல்ல. ‘தாசின்னு’ ஒரு வகுப்பையே ஏற்படுத்தி, ஆணின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைச்சு அவனை நியாயப்படுத்தும் ஆதிக்க சமுதாயம் இது...”

     “எனக்கு முக்கால்வாசி ஆம்பிளைகளும் ராட்சசனாத்தான் தோணறது...” என்று ரேவு கடித்துத் துப்புகிறாள்.

     “பொய்... இது சரியில்ல... ஒரு கூண்டுக்குள் ரெண்டு பிராணிகளை அடைச்சுப் போட்ட சூழ்நிலையில், ஒண்ணுக்கு மத்தது இப்படித்தான் தோணும். நீ ஒரு கோழியைப் பார்க்கிற பார்வைக்கும், கோழியை அறுத்துச் சாப்பிடுபவன் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. பெண்ணாகப்பட்டவள் தாய், சக்தி, அவள் உலகை வாழ்விக்கும் தெய்வம் என்று கற்பிக்கப்பட்ட நாகரிகப் பண்பாடுகளெல்லாத்தையும் மீறிட்டு அந்த மிருக உணர்வுப் - பார்வை ஒத்தருக்கு வரப்ப, தன் பலவீனத்தை மறைக்க, அவள் தான் மாயப் பிசாசுன்னு பழி போடறது ரொம்ப எளிசு. சங்கராச்சாரியரின் பஜகோவிந்தத்தில், பெண் வெறுப்பு ரொம்ப வருது. ஒரு படி மேல போய், உன் பொண்டாட்டி யாரு, பிள்ளை யாரு, இதெல்லாம் பொய்னு வருது. எல்லா நீதியும் ஆத்மானுபாவ அநுபவங்களும், ஆம்பிள்ளைக்குத்தானா? ‘பெண்சாதி யார்?’ மாயைன்னா, தாயே மாயைதான். அப்ப நீயும் மாயைதான்; உன் சாமி, கோவிந்தனும் மாயைதான். பெண்ணை வெறுக்கணும்னு சொல்லும் இந்தக் கருத்தைக் கொடுக்கும் சந்நியாசிதான் அம்பாள்னு பெண்ணின் ரூபத்தை அணுஅணுவாகப் புகழறாங்க. இதுவும் வேடிக்கைதான் ரேவம்மா!”

     “ஆமாம், இந்தக் குருமடத்தில், நவராத்ரி பூஜை பண்ணுவா. அம்பிகையை பாலா, குமாரி, அப்படின்னு வெவ்வேறு பருவத்தில் வழிபடறதாக, அந்தந்த வயசுப் பெண்ணை அப்படியே பாவிச்சு, எல்லா உபசாரமும் பண்ணி பூசை பண்ணுறதாச் சொல்லுவா. ஆனா, அந்த சந்நியாசி சுவாமி, மாலைய நேராப் போடமாட்டார். குங்குமத்தை சந்தனத்தை நேரா வைக்க மாட்டார். சின்னக் குழந்தைக்கு கூட, மடியில் வச்சிட்டிருக்கும் தாய் தான் பூவை, சந்தனத்தை வாங்கி வைப்பா. நான் அப்ப நினைச்சிப்பேன் - அம்பாள் - கடவுள்னு பாவம் அப்ப இல்லைன்னுதானே ஆறது? அப்ப எதுக்கு இந்தப் பூசை, அது இது எல்லாம்? உள்ளே இருக்கும் அந்த ‘பாவம்’ மாறலன்னா, அது கபடம்னுதானே ஆறது?”

     “எல்லாப் பெண்களும் அம்பாள் சொரூபம். தாயார்ன்னு தத்துவம் பேசறவா உண்மையாக இருந்தால், புருஷன் போயிட்டான்னா, அவாளைப் பூச்சிக்கும் கேவலமா நசுக்கலாமா? மொட்டையடிச்சிட்டாத்தான் பார்க்கலாம்னு சொல்றப்ப, அவா அந்த அம்பாளையே கேவலப்படுத்தலியா? புருஷன் முகம் தெரியாத வயசிலே எங்க பாட்டியோட தங்கை ஒருத்தி அப்படியாயிட்டா. அவா மாதிரி ஒருத்தரை அம்பாள் சொரூபம்னு ஏன் பூஜை பண்ணக்கூடாது. அவ தவசியில்லையா? சொல்லப்போனால் புருஷனின் வதையை உள்ளூற அநுபவிச்சிட்டு, வெளிலே சுமங்கலின்னு குங்குமத்தை அப்பிண்டு, அழுக்குச்சரட்டில் மஞ்சளைப் பூசிண்டு, இவா காலில் விழுந்து கும்பிடணும். சொல்லப் போனா, இவாள்ளாம் பரபுருஷங்கதானே? இவங்களுக்கு, எல்லா உயிரிலும், எல்லாப் பெண்களிலும் அந்த ஈசுவர சொரூபம் தெரியலன்னா, இவா அவளுக்குப் பரபுருஷன் தானே? என்ன சாஸ்திரம் இதெல்லாம்? இந்தச் சந்நியாசி மடத்தில் முதல்ல பேதமில்லாத பார்வை இருக்கா? பணம் பதவின்னு பெரிய மதிப்புள்ளவா, சர்க்கார் ஆளுங்க வந்தா, அவாளுக்கு ஒரு உபச்சாரம். வயிரத்தோடும், பட்டுப் பஞ்சக்கச்சங்களுமா வந்தா, அதுக்கு ஒரு தனி மரியாதை. குருசுவாமி சொல்லியிருக்கான்னு, அந்த நிமிஷத்துக்குன்னு ஒரு கைத்தறிப் புடவையை உடுத்திட்டு வந்து வேஷம் போட்டு நாடகம் ஆடுவா. வெளியில் சாப்பாட்டுக்கு இல்லாத பஞ்சைக் கூட்டம் காத்துக் கிடக்கும். இவாளுக்கு உள்ள தனி மரியாதைப் பந்தியில் சாப்பாடு... சீ...! சமம் சமம்னு சொல்றதெல்லாம் வெறும் வேஷம்! இவாதான் உபதேசம் பண்றா...!”

     அவர் வியப்புடன் இவள் கொட்டுவதைப் பார்க்கிறார்.

     “எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ வந்திட்டேன்ல” என்று வெட்கத்துடன் சிரிக்கிறாள் ரேவு.

     “இல்ல. நீ பெரிய ரேடிகலாயிட்ட...”

     “அதென்ன, ரேடிகல்னா?”

     “அறிவுவாதி, பகுத்தறிவுவாதி. இந்தப் பேச்செல்லாம் அவங்க பக்கம் இருந்துதான் வந்தது. மதத்தின் பேரைச் சொல்லி சமுதாயத்தைப் பேதம் பண்ணிப் பிழைக்கும் வருக்கம் தான் குருவர்க்கமே. செத்த பிராணித் தின்னு, சேற்றிலே உழைச்சு, மேல்சாதிக்காரனுக்கு ஊழியம் பண்ணன்னு ஒரு சாதி; அவன் நால் வருணத்துக்கு அப்பாற்பட்டவன். அவனுக்கு மனிதனாப் பிறந்ததால் உள்ள எந்த உரிமையும் இல்லை. ஆடு மாடு கூட குளம் குட்டை ஊருணியில் தண்ணி குடிக்கலாம். இவன் தொடக்கூடாது. இதுனாலதான் அம்பேத்கார், பெரியார் எல்லாரும் இங்கே அருமருந்து போல் தோன்றினார்கள். அன்னிக்கு அஞ்சாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்ன, வேதப் பாடல்கள் தோன்றின. அதெல்லாம் என்ன சொல்றது, அன்றைய சமுதாயம் எப்படி இருந்ததுன்னெல்லாம் புரிஞ்சுக்காமலே அவங்கவங்க, தங்கள் சுயநலங்களை நியாயம் பண்ண சாஸ்திரங்கள், தரும நீதிகள் எழுதி வச்சிட்டாங்க. அதை ஏன்னு கேட்க இடமில்லாமலே, தங்கள் ஆதிக்கம் இழைவிடாமல் அமுல்படுத்தினார்கள். அதைப் ‘பகுத்தறிவு’ப் பிரசாரம் உடைச்சாச்சு. ஆனால், மனுஷன், ‘மனுஷ தர்மத்தை’ இப்பவும் காண முடியல. அன்னிக்கு வருணாசிரமம், இன்னிக்கு அந்தத் தர்மத்தின் மிச்ச சொச்சங்களோடு, ‘அரசியல்’ குட்டையில் சாதி, மதம், நிறம் பல்வேறு சித்தாந்தங்கள் எல்லாம் குழம்பிச் சாக்கடையாயிடிச்சி. இதில் தேர்ந்த அரசியல்வாதி சுயநல மீன் பிடிக்கிறான். ஜனநாயகங்கற பேரில், எல்லாவற்றையும் தன் வழிக்குக் கொண்டுவரத் தெரிஞ்சிட்டிருக்கிறான்... பகுத்தறிவு பெரியார் சொன்னதை எல்லாம் இங்கே யார் நடத்தறாங்க?... பெண்களைச் சுத்தியுள்ள மௌட்டீகங்கள் எதுவும் போகல...”

     அவர் நிறுத்துகிறார்.

     ரேவுவுக்குப் பகுத்தறிவுவாதி என்றதும் கூத்தரசன் டாக்டர் நினைவுதான் வருகிறது. குருமடத்தின் வாசலில் கறுப்பு மசியில் அசிங்கமாக எழுதியிருப்பார்கள். ஏதோ ஒரு வருஷத்தில், பிள்ளையாரை உடைத்தார்களாம்; பூணூலை அறுத்தார்களாம். சுவாமி படத்துக்குச் செருப்பு மாலை போட்டார்களாம். ஆனால் கூத்தரசன் டாக்டர் மேல எந்தக் கறுப்பையும் அவளால் கற்பித்துக் கொள்ள முடியவில்லை. அவர் அன்பானவர்; ஹ்ருதயமுள்ளவர். ஆனால் அவரும் கூட பிராம்மண துவேஷி, துஷ்டர் என்று தான் இவர்கள் பார்வையில் கற்பிக்கப்பட்டிருந்தார்.

     “என்ன ரேவம்மா? யோசனை செஞ்சு பார்க்கிறியா?”

     “இல்ல... நீங்க மட்டும் வித்தியாசமா இருக்கேளேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்...”

     ஊசி குத்தினாற்போல் முகம் சுருங்குகிறது.

     உடனே புன்னகை செய்து கொள்கிறார்.

     “எங்க தாத்தாக்குத் தம்பி பையன், ஒரு மாமா இருந்தார். ரொம்பக் கெட்டிக்காரர்; அறிவாளி. அதனால, அவர் ஒரு காலேஜிலும், சேர்ந்து படிச்சுப் பட்டம் வாங்கப் பிரியப்படல. நிறையப் புஸ்தகம் படிப்பார். பல பாஷைகள் பேசுவார். அந்தக் காலத்தில் பத்ரிக்கு நடந்து போன அநுபவத்தைக் கதை போல் சொல்வார். எங்க சின்னத் தாத்தாக்குச் சொந்தமா பாலகாட்டு, ராமநாதபுரத்தில் ஒரு பெரிய வீடு உண்டு. பின்னால் காடு மாதிரிச் செடி கொடிகள் இருக்கும். இவர் கசப்பாயிருக்கிற கோவைப்பழ விதைகளை எடுத்து, சாணியிலும் பசு மூத்திரத்திலும் பாலிலும் ஊற வைத்துப் பக்குவங்கள் செய்து, அதை விளைத்துப் புதிய பயிரை உருவாக்கினார். அதில் காய்த்த காய், கசக்கவேயில்லை. நீள நீளமாகப் பச்சையாகத் தின்னும்படி, வெள்ளரிக்காய் போல அருமையாக இருந்தது... பாம்பு கடிச்சா உடனே விஷகடி வைத்தியம் செய்து ஆளை நடக்க வைத்துவிடுவார். அவர் படிச்சுப் பட்டம் வாங்கல. சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு தரம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தார். பிறகு ‘லூமினால்’ மாத்திரைக்கு அடிமையாகி, அகாலத்தில் ஒருநாள் கயிற்றில் தொங்கி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். எனக்கு அப்போது இப்படி அவரை நினைத்துப் பார்க்க முதிர்ச்சி இல்லை. ஆனாலும், அவர் நிசமாகப் பெரிய மனிதர். இந்த நடைமுறைகளை எதிர்த்துப் புரட்சி செய்தவர்னு நினைப்பேன். இந்தக் கதை இப்ப எதுக்குன்னு கேட்கிறாயா?... கசப்புக் காயை நல்ல காயாக மாற்ற முடிந்தது போல் சமுதாய நடைமுறைகளை மாற்ற முடியவில்லை - என்றாலும் அந்த ஆர்வம் விடவில்லை.”

     “நானும் ஏறக்குறைய இப்படித்தான்... ஜெயிலில் இருந்து வந்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து சம்பாதிப்பான்னு, அத்தை, அவள் உறவில் சாருவைக் கல்யாணம் பண்ணி வச்சா. சமுதாயத்தை ஒரே நாளில் திருத்திவிடும் ஆர்வம். டிராமா, ஆராய்ச்சி வகுப்புகள் அது இதுன்னு வெளியில் தான் இருப்பேன். சாருவுக்குப் பிடிக்கும் சினிமா, கொச்சையான ஹாசியம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அத்தையுடன் அவள் அம்மாவும் கூட வீட்டில் இருந்தாள். கோயில், குளம், கல்யாணம், கச்சேரி - என்று போவார்கள். இரண்டு மூன்று தடவைகள் சாருவுக்குக் கர்ப்பம் தரித்து, குழந்தை நிற்கல. வளைகாப்பு செய்தார்கள். நான் சீமந்தம் அது இது எல்லாம் தேவையில்லைன்னு நினைச்ச காலம் அது. குழந்தை கோஷா ஆஸ்பத்திரியில் மாசம் ஏழு ஆகுமுன் பிறந்து, ஒருநாள் இருந்து இறந்து போச்சு. இதெல்லாம் என்னைப் பாதிக்கல. ஆனால் அவளை எப்படிப் பாதிச்சதுன்னும் புரிஞ்சுக்க முயற்சி கூடப் பண்ணல. ரேவம்மா... என் பக்கத்தில், என்னை நம்பி வந்த ஒரு பெண்ணைக் கூட என்னைப் போல் மதிக்காதவன், சமுதாயத்தைச் சரி பண்ண நினைச்சதுதான் அபத்தம்.”

     “அத்தை போனாள். அவள் அம்மா இருந்தாள். நாடகம், ஒத்திகை, நடுராத்திரிக்கு மேல் வீடு வருவேன். அப்ப, ராயப்பேட்டையில் இருந்தோம். வரிசையாக வீடுகள்... பக்கத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் குடும்பம் இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். பெரிய பையன் காலேஜில் படித்த நாட்களில், பதினாறு வருஷம் கழிச்சு, ஒரு பெண். அதற்கும் பிறகு, ஒரு பெண் குழந்தை. சுருட்டை முடியுடன் குழந்தை மிகக் கவர்ச்சியாக இருக்கும். நாற்பதும் ஐம்பதுமாக நிற்கும் காலத்தில் ஒரு பெண்ணான்னு அவங்களுக்கு ஒரு சுணக்கம் இருந்திருக்கும். ஆனால் சாரு, தீபாவைத் தன்னிடமே வச்சிட்டா. முதலில் இது ஏதோ அபிமானம்னுதான் தோணித்து. சாருவுக்கு அவம்மாவும் போன பிறகு, தீபா பெண்ணாவே ஆயிட்டுது. சாருதான் அம்மா; நான் அப்பா.”

     “எனக்கு இது... அவள் விருப்பத்தை சுவீகரித்து சந்தோஷப்படுத்தும் திருப்தியான ஒரு ஏற்பாடாகவே ஆயிட்டுது.”

     “தீபாவின் அப்பா ரிடயர் ஆனதும், பையனுக்குப் பெங்களூரில் வேலையாகிக் குடும்பம் அங்கே பெயர்ந்தது. பெரிய பெண்ணைத் தும்கூரில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.”

     “நானும் சாரதாவும், தீபாவுடன் போனோம்.”

     “தீபா, ஸ்டெல்லாவில் படித்தாள்; சாருவின் சிநேகிதி பையன் தான் பரத். சின்ன வயசிலிருந்து பழக்கம். ஒரே பையன். அம்மா ஸ்கூலில் டீச்சர். அப்பா செகரடேரியட்ல கிளார்க். சார்ட்டர்டு அகௌண்டன்ட், எம்.பி.ஏ. படிச்சான். அமெரிக்காவில வேலைன்னு போனான். கல்யாணம் பண்ணினோம். சாரு தன் நகை எல்லாம் கழட்டிப் போட்டாள். கல்யாணம் பெரிசா பண்ணினோம். தீபாவின் சொந்த அப்பா இறந்து போய் விட்டார். அதனால் அம்மா வரவில்லை. அண்ணன் மட்டும் வந்து தலை காட்டிவிட்டுப் போனான்.”

     “அடுத்த ஆறாம் மாசம் தீபாவும் அமெரிக்கா போய்விட்டாள்.”

     “இப்போதுதான் சூனியமான எங்கள் வாழ்க்கையின் கோரம் தெரிந்தது. சாரு என்னிடம் பேசமாட்டாள். இந்த ஃபிளாட்டுக்கு அப்போதே வந்துவிட்டோம். சில நாட்கள் சமையல் எதுவும் செய்யமாட்டாள். நான் எழுந்து சமைப்பேன். எனக்கு அவள் மீது கோபமோ, வெறுப்போ வந்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரிப் போயிருக்கும். அவள் மீது தப்பு இல்லை என்று நானும் அவள் மீது தப்பு இல்லை என்று அவளும் புரிந்து கொண்டதாலேயே, எங்கள் எதிர்ப்பு வெறுப்புகளுக்கு வடிகால் அமையவில்லைன்னு நினைக்கிறேன்...”

     “...ரேவம்மா, தீபாவே உலகம்னு அந்தப் பிடிப்பு எனக்கு வரல. நான் ஏன் பொய் சொல்லணும்? கிளாசுக்குப் போவேன். பேப்பர் திருத்தல், அது இதுன்னு வேலை. ஸ்டூடன்ட்ஸ், சிநேகிதர்கள், இலக்கியம், டிராமா எனக்கு வீடே தேவையில்லைன்னாலும், சாரு பழைய ஃபோட்டோக்களை, ஆல்பத்தைப் பார்த்துண்டே மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாளே, அது மனசை அறுக்கும்.”

     “அடுத்தது உடனே நடந்தது. கர்ப்பம்னு தெரிஞ்சதும் எப்படி எப்படியோ நச்சரிச்சு, அலைய வச்சு, பிரசவத்துக்கு யு.எஸ். போயிட்டா. போன வருஷம் அஞ்சு மாசக் குழந்தையை எடுத்துண்டு, இங்கே எல்லாரும் வந்தா. அவங்க ஒரு பத்து பதினஞ்சு நாள் இருந்திட்டுத் திரும்பிப் போனா. அதே நினைவா இவளும், ஆறு மாசம் இங்க தங்கிட்டு, தீபா வேலைக்குப் போறா - குழந்தை பார்த்துக்கணும்னு போயிட்டா...”

     “ஏன், உங்களுக்கு அங்கெல்லாம் போகணும்னு தோணலியா?”

     “இல்ல. இங்கே இல்லாத சந்தோஷம் எனக்குப் புதிசா அங்கே வரப்போறதில்ல. ஒரு பெண்ணுக்குப் புருஷன் மீது இயல்பான அக்கறை அல்லது சிநேகம், ஒரு குழந்தை பெற்று வளர்ப்பது வரைதான். அதுதான் உண்மை. அவள் அதற்குப் பிறகு விடுதலையானவளாகவே இருப்பாள். அவளை மேலும் மேலும் உப்புத் தண்ணீரைக் குடிக்கச் செய்பவன் புருஷன் தான். அவனுக்குத்தான் அவள் எப்போதும் வேண்டி இருக்கிறது. காபி கொடுத்து, சமைத்துப் போட்டு, துணி துவைத்துப் போட்டு சின்னச் சின்ன வசதிகள் செய்து நகையையும் ஆதாரமாக்கிக் கொண்டு அவளைப் பற்றிக் கொள்கிறான். இதுதான் நிசம் ரேவம்மா. உண்மையில் அந்த ஆதிக்கம் செலுத்தப் பெறும் சார்பில் இருந்து நாங்கள் தான் சுயச்சார்படையணும். அப்ப அவங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் விடுதலையும் வரும்...”

     ‘நிசமா, நிசமா...’ என்று ரேவு கேட்டுக் கொள்கிறாள்.

     “...நான் கேட்கிறேன்னு நினைச்சுக்காதேங்கோப்பா. நீங்க உங்க மாமிக்குத் துரோகம் பண்ணிருக்கேளா?”

     அவர் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

     யாரையோ?

     “அந்தப் பாவம் நான் பண்ணல ரேவம்மா... அதான் நான் இன்னிக்குத் தைரியமா நடமாடுறேன். சாரு உள்ளூற என்னைக் குற்றவாளியாக்கினாலும் நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன்.”

     “நான் ஒரு காலத்தில் சிகரெட் பிடிச்சேன்; குடிச்சிருக்கேன். வெத்திலை பாக்கு புகையிலை போட்டேன். ஆனால் அதெல்லாம், ஏதோ ஓடும் மேகம் போல் வந்து போயிட்டது. பிடிக்கல. ஆனா, சாருவுக்கு நினைப்பில் கூட நான் துரோகம் பண்ணல. ஆனா, உலகம் என்னை அப்படி நினைக்கல ரேவம்மா...”

     குரல் கரகரத்துக் கட்டிப் போகிறது.

     “விசாலி; சரஸ் - நீ கேட்ட விஷயம். தாயி சொன்னாளே அவ. பன்னண்டு வயசில அமெச்சூர் டிராமாவில நடிக்கவிட்டவன், அவ மாமா. அவன் தான் பின்னாடி அவளைக் கல்யாணமும் பண்ணிட்டான், ரெண்டாந்தாரமா. பஞ்சமா பாதகங்களும் பண்ணுபவன். அவள் எங்க ட்ரூப்பில் நாலஞ்சு நாடகத்தில் என்னுடன் நடிச்சுருக்கா. ரொம்ப இயற்கையாக நடிப்பா. வீட்டுக்கு வருவா. தீபாவைத் தூக்கித் தூக்கி வச்சிக் கொஞ்சுவ. சாருவ அக்கான்னு கூப்பிடுவ. பிறகு நான் நாடகம் எல்லாம் விட்டதும் அவள சினிமாவிலும் விட்டு புருஷன்காரன் பணம் பண்ண நினைச்சான். ஆனா அங்கே இங்கே தலை நீட்டி துணிப் பாத்திரமாத்தான் வர முடிஞ்சிது. ஆர்ட் ஃபிலிம்ல நல்லாவே நடிச்சிருக்கா. ‘ஊஞ்சல்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம். மனநோயாளிய வச்சி எடுத்தது. அதில அவதான் நாயகி... அவார்ட் கிடைக்கும்னு பார்த்தாங்க. கிடைக்கல... வயசாச்சி. பிழைப்பில்ல; புருஷன் சீக்காயிட்டான். பிள்ளைகள் யாரும் சரியில்ல... அவளுக்குப் போய் வியாதி வரலாமா? வயிற்றில் புற்று. சாரு தீபா பிரசவத்துக்குப் போனான்னு சொன்னேனா? அந்த சமயத்துல, ஒரு நா, அப்படியே எலும்பும் தோலுமா வந்து இறங்கினாள். எனக்கே பக்குன்னுது. முகமெல்லாம் தேஞ்சு, வெளுத்து... கண் உள்ளே போய்... காரைக்காலம்மையார் பாடல் போல், ‘கொங்கை திரங்கி நரம்பெழுந்து, குண்டு கண், வெண்பற்குழி...’ன்னு இருந்தாள். தடால்னு என் கால்ல விழுந்து, “ஸார், எனக்குச் சாகக் கூட இடமில்லேன்னிட்டா... தற்கொலை பண்ணிட்டுப் பேயா அலையக்கூடாதென்னு பார்க்கறேன்”னு அழுதா. எனக்கு மனசு கேக்கல. சரஸ்னு கேரக்டரில் நடிச்சு பிரபலமானதால சரஸ்னு சொல்லுவா. இந்த வீட்டிலே வச்சிட்டிருந்தேன். டெர்மினல் கேஸ், ஆஸ்பத்திரி எதிலும் இடமில்ல; எடுத்துக்க மாட்டா... நான் அப்படியும், பணம் நிறையக் கட்டி, எங்கெங்கோ முயற்சி பண்ணினேன்.”

     “இங்கதான் ரெண்டு மாசம் போல இருந்தா. அந்த சமயத்தில் தான் சாரு, தீபா, மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் வந்தது. நான் ஃபோன்ல ஒரு மாதிரி விஷயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே, கே.ஜி.கே. ஃப்ளாட்டை அவங்க தங்க ஏற்பாடு பண்ணிருந்தேன். சாருக்குக் கோபம்னாலும் கோபம். இதுல தப்பு சொல்ல முடியாது. அவகிட்ட நான் ரொம்ப எதிர்பார்க்க முடியாது. ஆனா, குறைஞ்ச பட்சம், மனுஷ ஈரம், ஒரு அபலைப் பெண்ணுன்னு ஈரம்... ஊஹும், இந்த வீட்டுக்கே வரல. பெண் மாப்பிள்ளைய அழைச்சிட்டுப் பெங்களூர்ப் போயிட்டா. அவங்கள்ளாம் ஊருக்குப் போன பிறகு, இங்க வந்து... அந்தத் துர்ப்பாக்கியமான விசாலிய எப்படியெல்லாம் விஷச் சொல்லால் நோகடிச்சா தெரியுமா? நோ... அதெல்லாம் நான் இப்ப நினைவுக்குக் கொண்டு வர விரும்பல. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏனிப்படிப் பார்க்கிறாள்ங்கறதுதான் கொடுமை... சாருவின் அந்தச் சொல், நடப்பெல்லாம் பொறுத்தேன். ஒருவேளை அவள் இடத்தில் நானிருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேனாக இருக்கும். ஏன்னா, உலகம் அப்படித்தான் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்ப்பதை நியாயப்படுத்துகிறது. அஞ்சாறு நாளைக்கெல்லாம் விசாலி போயிட்டா. அவ வீட்டுக்கு நான் சொல்லல. பழைய நடிகர்கள், தெரிஞ்சவங்க, வந்தாங்க. முடிஞ்சி போச்சி. சாரு மறுபடி புறப்பட்டுப் போனப்ப, நான் வழியனுப்பக் கூடப் போகல. தீபாவோட அண்ணன் வந்தான். புறப்பட்டுப் போனாள். சாருவுக்கும் எனக்கும் இடையே மனம் திறந்த பேச்சே இல்லை. “...நா... போயிட்டு வரேன். உடம்பைப் பாத்துக்குங்கோ. ஃபோன் பண்ணுங்கோ...” இப்படிச் சொல்லிட்டுப் போனாள். ஆனால் நான் ஒண்ணும் ஒளிக்கிறதில்ல. அவளுக்கும் வயசு அறுபதுக்கு மேல ஆச்சி. ஒவ்வொரு சமயம் நினைச்ச மனசு ரொம்பக் கஷ்டப்படும் ரேவம்மா...”

     அவர் கண்கள் பளபளக்கின்றன.

     “வருத்தப்படாதீங்கப்பா. நான் வந்து மாமியை எப்படியானும் இங்க சேத்துடுவேன்னு நினைக்கிறேன்... மனச்சாட்சின்னு ஒண்ணு எல்லாருக்கும் இருக்கு. அது எப்பவானும் ஒரு தடவை சுத்தமா அவ அவ மனசுக்குத் தெரியும். இப்பக்கூட எனக்குக் கொடுமை செஞ்ச அவனுக்கு என்னிக்கானும் ஒரு நாள் என் சுத்தமான மனசும் உண்மையும் தெரியும்னுதான் நம்பறேன்... வருத்தப்படாதீங்கப்பா!”

     “...இல்லம்மா, இப்பவும் இந்தச் சுத்தி இருக்கிற உலகம், ஒருத்தியேனும் இப்படி ஒரு நிராதரவா ஒரு பெண் பிள்ளை உசிருக்குப் போராடிட்டு வந்திருக்கான்னு பார்த்ததா? அத்தனை பேரும் சாருவைத்தான் நியாயப்படுத்தினா...”

     ரேவு பேசவில்லை. அன்று தன் தந்தை தாயை விரட்டி அடித்த போது, ஒரு பூச்சி கூட அவளுக்கு வராமல் பதுங்கிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்கிறாள்.

     இப்போதும் இந்தச் சூழலில் இவளுக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை என்பது வெளிச்சம். இவள் அவருடன் வெளியே செல்லும் போதும், வரும்போதும், நேருக்கு நேர் சந்திக்கும்படி வந்துவிட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணும் ஓர் ஆணும் தனித்து இருந்தால்... உடனே உடல் வாணிபம் தானா? அன்று கூத்தரசன் பேரில், அவள் அம்மா பேரில் இப்படிப் பழி சுமத்தினார்களே?

     அன்று ரேவு, மூடி வைத்திருந்த தன் இளமைக்காலம் தாய், தந்தை, சகோதரன் என்று எல்லாச் செய்திகளையும் அவரிடம் சொல்லி விடுகிறாள். பாரங்கள் குறைந்து மனம் இலேசாகி விடுகிறது. உறவுகள் வெறும் உடல்பரமானதல்ல. அது உள்ளங்களில் பிறக்கும் உண்மையான ஆர்வங்களைச் சார்ந்தது என்று உணருகிறாள். இதை உணர்ந்த பின், மற்றவர் என்ன சொல்வார்களோ என்று வதைத்த பயம் கரைகிறது. ரேவு அவரிடம் குழந்தை போல் பேசிப் பழகுகிறாள். தான் பட்டம் பெற வேண்டும், புருஷனிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஏதேனும் பெண்கள் விடுதியில் தன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற இலட்சியங்களும் கூட முக்கியமாகப் படவில்லை.

     வாழ்க்கையில் சமையல், சாப்பாடு, புருஷன், குழந்தைகள் சுகம், சமுதாய வரம்புகள் இவற்றுக்கெல்லாம் அப்பாலும் ஏதோ பொருள் உண்டு என்ற உணர்வு அவளுள் முகிழ்க்கிறது.