அத்தியாயம் - 15

     ரேவு புத்தகக் குவியலிடையே உட்கார்ந்திருக்கிறாள்.

     ஒரு நீள நோட்டுப் புத்தகத்தில், புத்தகங்களை வரிசைப்படுத்தி எழுதி அட்டவணை போட்டு ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்.

     அழகாகக் கோடுகள் போட்டு, நூலின் பெயர் - ஆசிரியர் பெயர் - வெளியீட்டாளர் என்று எழுதித் தலைப்பிடுகிறாள்.

     முத்துக் கோத்தாற் போல் எழுத்துக்கள்...

     நேரம் போவதே தெரியவில்லை. நாட்கள் செல்வதே தெரியவில்லை. பாரதியார் கவிதைகள்; தோத்திரப் பாடல்கள், தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், என்று தனித்தனியாகச் சிறு பிரசுரங்கள். பிறகு எல்லாப் பாடல்களும் அடங்கிய வெளியீடுகள், பெரிய ‘பைண்டு’ புத்தகம் கையடக்கமான ‘பாக்கெட்’ பிரசுரம்; மலிவுப் பதிப்பு...

     இதே போல பாரதிதாசன் நூல்கள்... நாமக்கல் கவிஞர், தேசிகவிநாயகம் பிள்ளை; சுத்தானந்த பாரதி; கவிஞர் ச.து.சு.யோகி...

     ஒவ்வொரு நூலையும் பிரித்துப் பார்த்துக் கண்களைப் பதிக்கிறாள். அதிலேயே பொழுது போய்விடுகிறது.

     அகல்யை கதை... மூன்று விதமான வரலாறுகள்.

     வால்மீகி அவளைக் கற்பிழந்ததற்காகக் கல்லாக்க வில்லை.

     “நீ செய்த குற்றத்துக்காகப் பல வருஷங்கள் கடுந்தவம் புரிய வேண்டும். காற்றையே பருகி, அன்ன ஆகாரம் இல்லாமல், உள்ளம் கசிந்து உருகிப் பச்சாதாபப்பட்டு, யார் கண்ணிலும் படாமல் இங்கே வசிப்பாயாக. இந்த இடத்துக்கு ராமன் வருவான். அப்போது உன் தீவினை அகலும்...” என்று கூறிவிட்டுக் கௌதமர் தவம் செய்ய இமயமலைக்குச் சென்றார்.

     ரேவுவுக்கு இந்த வரலாறு புதிதாக இருக்கிறது.

     அகலிகை கல்லாகவில்லையா?...

     ச.து.சு.யோகி அவர்களின் அகலிகை கற்பரசியாகவே படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் ஒரு தரம் இந்திரன் வருகிறானாம். அவள் அவனை, “கற்புக்கனல் நான்; காமச் சிறு புழு நீ!” என்று ஒதுக்குகிறாளாம்...

     கம்பர் இவளைக் கல்லாக்கி விடுகிறார். ஏனெனில் கௌதமர் உருவில் வந்தவன் கணவனில்லை என்றரிந்தும் அவள் விலக்கவில்லையாம்.

     ஒரு கதாநாயகி கூட, மாசு இல்லாதவளாகத் திகழ வேண்டும் என்ற கருத்து வலிமையாக்கப்பட்டிருக்கிறது.

     அந்த வரலாற்றைப் படித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறாள்.

     மணி ஒன்றரை. பகலுணவுக்கு அப்பா வந்து விட்டார். மணி அடிக்கிறது.

     “நின்னைச் சில வரங்கள் கேட்பேன். அதை நேராய் எந்தனுக்குத் தருவாய்...” என்று பாடிக் கொண்டு வந்து, இவள் புத்தக ஒழுங்குச் சேவையைப் பார்த்தபடி நிற்கிறார்.

     “அஞ்சுநாளா நான் இந்த ஒரே பீரோவில் இருக்கேன்... இந்த ரேட்டில் எனக்கு ஒரு மாசம் போதாது போல இருக்கு, இதெல்லாம் ஒழுங்காக்க...”

     “ஏன்? புத்தகத்தைப் பிரிச்சுப் பார்த்து ரசிச்சிட்டு அப்படியே உட்கார்ந்துடுவே, இலை நிறைய விதவிதமாய்ப் பண்டம் வச்சா, ஒண்ணொன்னையும் ரசிக்கிறாப்பல...”

     “அதேதான்... இத பாருங்கள் நான் ஒரு பாட்டுச் சொல்வேன். டக்குனு, அது யாருடையதுன்னு சொல்லணும்.

     திக்குகள் எட்டும் சிதறித் திடுக்கிடக்
     கெக்கலி கொட்டிடுவாள்
     பொக்கென ஓர் கணத்தே அண்டம் யாவையும்
     பொட்டென வெட்டிடுவாள்...
     சட்டச் சடசடக் கொட்டும் இடிக்குரல்
     சத்தத்தில் வீற்றிருப்பாள்
     வெட்டி யடித்திடும் மின்ன வெறியினில்
     மெட்டி மினுக்கிடுவாள்...”

     “சொல்லட்டுமா?... சொல்லிவிடுவேன்...” என்று இவள் புத்தகக் குவியலைப் பார்க்கக் குனிகிறார்.

     “ம்... பார்க்கக் கூடாது. பார்க்காமல் சொல்லணும் ஸார்?”

     “சரி... பார்க்கல... பாரதி...”

     “ஹே... ஹே... இல்ல... எனக்குத் தெரியும். நீங்க இப்படிச் சொல்லுவீங்கன்னு...” கைகொட்டிக் குழந்தை போல் சிரிக்கிறாள்.

     அவர் குரலைச் செவியுறுவதே மந்திரநாதமாக இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் தன் வாழ்நாளில் எந்த ஒரு தடைக்குத்தும் இல்லாமல், குற்ற உணர்வுகள் கழல, தனக்கு மனம் நிறையும் வாழ்க்கையாக நாட்கள் விடியும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.

     தொலைபேசி மணி ஒலிக்கிறது.

     அவர் தான் எடுக்கிறார்... சத்தமாகப் பேசுகிறார். வெளியூரா? ஆனால் அமெரிக்கா என்றால் கூட இப்படி உற்சாகக் குரல் வராதே?

     “ஹா... ஷி இஸ் ஆல்ரைட். நீங்களே கேளுங்க... ரேவம்மா! சுதா பேசுறாங்க...”

     அவள் ஓடி வருகிறாள். வாங்கியைக் கையில் பிடித்துக் கொள்கையில் நடுங்குவது போல் இருக்கிறது. “ஹலோ... ம், நல்லா இருக்கேன். சந்தோஷமா... ஆமா, அதெல்லாம் மறந்துட்டேன்...”

     அவள் திருச்சியில் இருந்துதான் பேசுகிறாள். ரகுவுக்குச் சேலத்துக்கு மாற்றல் ஆகியிருக்கிறதாம். தனக்கும் அங்கே முயற்சி செய்வதற்கில்லையாம். ஏனென்றால் திருச்சிக்கு இப்போதுதான் மாற்றல் கேட்டு கிடைக்கும் என்று நம்புகிறாளாம். சுருதி அங்கேயே ஸோஒஷியாலஜி மெயின் எடுத்துச் சேர்ந்திருக்கிறாளாம். காவேரியில் நிறையத் தண்ணீர் ஓடுகிறதாம்... அவளுக்கு சேலத்தில் ஒரு பெண்கள் விடுதியில் வேலைக்குச் சிபாரிசு செய்யலாமா என்று கேட்கிறாள்... குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி. கூட இல்லாத நிலையில் வார்டன் போன்ற பதவி கிடைக்காதாம். பாடங்களைப் படித்து, பரீட்சை எழுதத் தயார் செய்து கொள்கிறாளா என்று அக்கறையுடன் கேட்கிறாள். நேராக எம்.ஏ. கூட எழுதலாமாம். ஏன், அவர் சொல்லவில்லையா என்று கேட்கிறாள்... அந்த வருஷம் எழுத வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு ஃபோனை வைக்கிறாள்.

     முகம் சுண்டிப் போகிறது. வாழ்க்கை நிதரிசனம் இதுதான். குடும்பம் புருஷன் என்ற சார்பில்லாதவள் முதலில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சம்பாதிக்கும் தகுதியைப் பெற வேண்டும். இவள் பெண்கள் விடுதியில் பத்துப் பதினைந்து பேருக்கோ - அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கோ சமைத்துக் காபி போட்டு, டிபன் செய்து, பரிமாறி... அந்தப் படித்த பதவியிலுள்ள பெண்களுக்குக் கீழ்ப்பணிந்து...

     வாழ்க்கை, ரங்கப்பா வீட்டில் இருப்பது போல் இருக்காது. இந்த ஃபிளாட்டிலேயே இன்னொரு பெண்மணி இவளை விசாரிப்பது இல்லை.

     “என்ன ரேவம்மா? சாம்பார் ரெடி! சுதா என்ன பேசினாங்க? அப்படியே நின்னிட்டீங்க! எனிதிங் ராங்?”

     “இல்லப்பா... பரீட்சைக்குப் படிக்கணும்னு டீச்சரம்மா ஞாபகப்படுத்தினாங்க” பளிச்சென்று சிரிப்பு வருகிறது.

     “ஏன், உனக்குப் படிக்கப் பிடிக்கலியா?”

     “படிக்க ஆசையாக இருக்கு. ஆனா, அந்த அல்ஜிப்ரா, ஜாமட்ரி அது இது எல்லாம் மண்டையில் நுழையுமோன்னு சந்தேகமாயிருக்கப்பா. சிலநாள் நான் ராம்ஜி, பரத் புத்தகங்களை எடுத்துப் பார்ப்பேன். இங்கிலீஷ், தமிழ், ஹிஸ்டரி எல்லாம் படிக்க நன்னாயிருக்கும். ஆனால்... மத்த விஷயம் வேண்டாம்னு தோணும். இனிமே எதுக்கு நமக்குப் படிப்புன்னு நினைச்சிப்பேன். இந்த அல்ஜிப்ரா ஜாமட்ரி - தீரம் அது இதுன்னு இல்லேன்னா...”

     அவர் சிரிக்கிறார்.

     “அதெல்லாம் இல்லேன்னா எப்படி ரேவம்மா! கணக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமாச்சே! கம்ப்யூட்டர் யுகம் வேற?... எங்க இன்ஸ்டிட்யூட்ல பார்கவின்னு ஓரம்மா இருக்கா... அவங்க எப்பேர்ப்பட்ட மக்கையும் கணக்குப் பாடத்தில் தேறப் பண்ணிடுவாங்க. அவங்ககிட்ட ஸ்பெஷல் கோச்சிங்...”

     அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

     தட்டைப் போட்டுச் சாப்பிட உட்காருகிறார்கள்.

     மனதில் ஏதேதோ எண்ணங்கள் மோதுகின்றன. முப்பத்தெட்டு வயசில் மறுபடியும் பள்ளிச் சிறுமியாகி, பதினான்கு, பதினைஞ்சு வயசுக்காரர்களுக்குச் சமமாகப் பாடம் படித்து, உருப்போட்டு, பரீட்சை எழுதி... ஆமாம், சமையலையும் செய்து கொண்டு பரீட்சைக்குப் படிக்கப் போகிறாளா? படிக்க வேண்டாம்; சமையற்காரியாகவே அடுப்படியில் முடிவாளா?

     இங்கு வருவதற்கு முன்பு அவள் சுதாவிடம் அப்படித்தான் சொன்னாள். ஆனால் சுதா, அவளைப் படித்து, கௌரவமாகப் பிறர் கருதக்கூடிய ஏற்றம் பெற வேண்டும் என்று யோசனை கூறுகிறாள். முப்பத்தொன்பதில் எஸ்.எஸ்.எல்.ஸியோ, மெட்ரிகுலேஷனோ முடித்து, மேலே கல்லூரிப் பட்டமும் எடுக்கலாம். நாற்பது நாற்பத்தைந்து வயசில் சுயச்சார்புடன் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

     “ஆனால் நான் இனியும் எத்தனை நாள் இங்கே இருக்கலாம் அப்பா? சேலத்திலே ஏதோ ஹோம்ல சமையல் வேலை காலி இருக்காம். அதை ஒத்துக்கிட்டுப் படிக்கலாம்னு சொல்றா... அதுதான் எப்படின்னு தெரியல...”

     “சமையல் வேலை செஞ்சிட்டு நீங்க படிக்கணும்ங்கறது இல்ல, ரேவம்மா. நீங்க இங்க இருக்கிறது எனக்கும் சந்தோஷமா இருக்கு. இந்த வீட்டில இப்பதான் கலகலப்பு - ஒளி எல்லாம் வந்திருக்கு. தீபா காலேஜில் படிச்சா. என் புத்தகங்கள் எதிலும் அவளுக்கு ஈடுபாடு இல்லை. ஈவ்ஸ் வீக்லி - டெபோனீர், ஃபெமினா, இது போல பத்திரிகைகள் தான் இறையும். அட்லீஸ்ட், ஒரு நல்ல பாட்டும் கூட ரசித்ததில்லை. ஏதோ சினிமாப் பாட்டுக்கள் தான் கத்தும். இடுப்புக் குலுக்கும், அடித்தொண்டைக் கேவல்கள், எனக்குச் சொல்ல முடியாது. கோ-எக்ஸிஸ்டன்ஸ் - சமாதான சகவாழ்வு - ரேவும்மா! நீங்க சமைக்கல்லாம் போக வேண்டாம். நீங்கள் இங்க இருந்து, எங்கள் இன்ஸ்டிட்யூட்டிலேயே படிக்கலாம். கே.ஜி.கே. பாடம் எடுப்பார். என்னை விடக் கிழவர். பார்கவி அம்மா உங்களைக் கணக்கு மேதையாக்கிடுவா. கல்லை வயிரமணியாக்கல்... வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்... அடிதாயே உனக்கரிய துண்டோ! ஓம் காளி வலிய சாமுண்டி...”

     “தப்பு தப்பு... தப்பு...”

     “என்ன தப்பு?”

     “கல்லை வயிரமணியாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்னு வரணும். அது சரி ஸார், முன்ன சொன்ன பாட்டு பாரதின்னேளே?”

     “திக்குகள் எட்டும் சிதறித் தடுக்கி கெக்கலி கொட்டிடுவாள்...ங்கற பாட்டு பாரதி இல்ல...”

     “அப்படியா?...”

     விரலை மோவாயில் வைத்து யோசிக்கிறார்.

     “யாரு?... சுத்தானந்த பாரதி?...”

     “இல்ல...”

     “...அப்ப, நாமக்கல் கவிஞர்?”

     “இல்ல, தோல்வின்னு ஒப்புத்துக்குங்கோ. மூணு சான்ஸ் குடுத்தாச்சு.”

     “...அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க புத்தகங்களைப் பிரிச்சு வச்சிண்டு, எப்பவோ படிச்சவங்கிட்ட சவால் விட்டா எப்படி?”

     “நான் ஒம்பதில படிப்ப விட்டவ. நீங்க... பெரிய எம்.ஏ. எல்லாம் முடிச்சி, புரொபசர் வேலை பண்ணுறவர். எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வைக்க முடியும்?”

     “ப்ளீஸ்... இன்னொரு க்ளூ குடுங்கம்மா, ப்ளீஸ்...”

     “ம்... சரி... அவர் அகல்யா, மேரி மக்தலேனா, உமார் கய்யாம் எல்லாம் கூடப் பாடியிருக்கிறார்.”

     அவர் கண்கள் பளிச்சிடுகின்றன. “ஓ... கவிமணி?”

     அவள் சிரிக்கிறாள். “இல்லே...”

     “என்னது?... எனக்கு மறந்து போயிட்டுதா? யாரு?... சுத்தானந்த பாரதி இல்ல... யாரு...!”

     “சரி இன்னொரு க்ளூ... இந்தப் புஸ்தகத்தை உங்களுக்கு அவரே கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்களுடன்... கையெழுத்து இருக்கு...”

     “அய்யடா... எஸ்.டி.எஸ். யோகி. அவருடைய தமிழ்த்தாய்ப் பாடலை நாடக ஆரம்பத்தில் கோரஸாகப் பாடுவோம்... புஸ்தகத்தை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தேன்... அப்ப அந்தப் புஸ்தகத்தின் விலை ஒண்ணரையோ, ஒண்ணே முக்காலோ...”

     புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டு அவர் தன்னை மறந்து நிற்கிறார்.

     “எனக்கு பசி கிண்டுதப்பா... வாங்க... சாப்பிடலாம்...”