அத்தியாயம் - 20

     அந்த இரவு நேரத்தில் எந்த வீட்டாரும் எழுந்து வரவில்லை.

     “வாட்ச்மேன், வரப்ப பஸ் ஆக்ஸிடென்ட் ஆயிட்டது. ஐயாவுக்கு அடிபட்டிருக்கு. உடம்பில இல்ல. தலையிலன்னு சொன்னாங்க. நீங்க எதுக்கும் கிருஷ்ணசாமி ஐயா வீட்ல கொஞ்சம் கதவு தட்டிக் கூட்டிட்டு வாங்களேன்!”

     அவர் படுக்கையைத் தட்டிப் போட்டுப் படுக்க வைத்துவிட்டு, ரேவு பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள்.

     “ஏம்மா? என்ன ஆச்சு? என்ன நடந்திச்சி?” கே.ஜி.கே. வந்து விட்டார்.

     “வாங்க ஸார். எல்லாம் நல்லா, நல்லாத்தான் இருந்தது. ரிடர்ன் ஜர்னி ரயில் டிக்கெட் கிடைக்கல. காலை பஸ்ஸில் கிளம்பினால் போயிடலாம் எட்டு மணிக்குன்னாங்க... காலம... ரெண்டு பஸ் மோதி ஆக்ஸிடன்ட் ஆயிட்டது...”

     விவரங்களெல்லாம் கூறுகிறாள்.

     “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஸார். டாக்டரை கூப்பிட்டுப் பார்க்கணும் உடனே... காலமயே அவர் சுரத்தா இல்ல. டிபன் கூட சாப்பிடல. அதோட...” துயரம் உடைபடுகிறது.

     “நீங்க கன்னியாகுமரியை விட்டு எங்க போனீங்கன்னு தெரியல. இங்கே முந்தாநாள் பெங்களூர்லேந்து அந்தப் பையன் வந்தான்... அதான் தீபாவின் அண்ணன். எங்கே போயிருக்கான்னு கேட்டான். தெரியாதுன்னு சொன்னேன். அவுங்க சொல்லிச் சாவி குடுத்திட்டுப் போகலன்னேன். எங்கிட்ட சாவி இருக்குன்னாலும், அவன்... ஒரு மாதிரி, ரங்குவுக்கு அவனைப் பிடிக்காது. எதானும் இரண்டுங் கெட்டானா ஆயிடப்படாது பாரு?”

     அவள் மருண்டு போகிறாள்.

     அவர் கட்டிலருகில் வந்து, கூப்பிடுகிறார்.

     “ரங்கு...? ரங்கு ஸார்?...”

     “தூங்கறார் போல இருக்கு. ஆனால் மூஞ்சியே வீங்கினாப்பல இருக்கு. எதுக்கும் விடியட்டும், டாக்டர்ட்டப் போகலாம்...”

     “என்னமோ, ஆக்ஸிடன்ட்ல நீங்க இந்த மட்டும் தப்பிச்சேளே?... குடிச்சிப்புட்டு பட்டப்பகல்ல லாரியக் கொண்டு மோதுறான். ஏதோ யாரோ செஞ்ச தருமத்திலதான் நாலுக்கொண்ணுன்னு ஓடுது! கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு தைரியமா இரும்மா, காலம நான் வரேன்...”

     அவர் அங்கிருந்து அகன்ற பிறகு, அவள் பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பில் வெந்நீர் வைத்து ஃபிளாஸ்கில் கொட்டி வைக்கிறாள். அவருடைய உறவுகள், அவளைச் சும்மா விடுவார்களா?

     அவர் அலமாரிகள்... அவள் பெரிதும் விரும்பி உறவாடிய புத்தகங்கள் எல்லாம் அவளைக் கேலி செய்கின்றன.

     ‘ஹே ஹே... அந்நிய புருஷன் மீது உறவு கொண்டாடினாயா? இதுதான்... இதுதான்...’ என்று யார் யாரோ இடிப்பது போல் பிரமை.

     சுவாமி படம் என்று இல்லாத போனாலும், அங்கே தெய்வீகம் கமழும் விளக்கு இருக்கிறது. எண்ணெய் வார்த்து அதை ஏற்றுகிறாள். “எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. ஸ்வாமி, மனம் போன போக்குன்னு போய்விட்டேன். நல்லது கெட்டது தெரியல. என்னை மன்னிச்சிடுங்கோ...” என்று துயரம் வெடிக்க முறையிடுகிறாள். கீழே விழுந்து வணங்குகிறாள். அவர் படுத்திருக்கும் அறையிலேயே கீழே படுக்கிறாள்.

     கண்களைக் கொட்ட முடியவில்லை.

     “ஆண்டவனே, அவருக்கு ஒன்றுமில்லாமல் செய்து விடுங்கள். நான் என் உயிரையும் கொடுக்கிறேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்கிறேன். என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்... நான் எந்தத் தப்பும் செய்யல...”

     திடீரென்று அவர் தொண்டையைச் செருமிக் கொள்வதைப் போல் இருக்கிறது. டக்கென்று விளக்கைப் போடுகிறாள். அவர் எழுந்து உட்கார முயற்சி செய்கிறார். வாந்தி... வாந்தி வருகிறதா? இருமலா? ஓடிச்சென்று ஒரு தட்டை எடுத்து வருமுன், குபுக்கென்று... இரத்தம்... மூக்கிலும் நூலாக...

     கையில் பிடிக்கும் தட்டு நழுவுகிறது.

     “என்னப்பனே? எனக்கு இப்படிச் சோதனையா?...”

     “போகட்டும்... ஒண்ணுமில்ல...”

     பிளாஸ்கில் இருந்து வெந்நீர் எடுத்து, முகம் வாய் எல்லாம் துடைக்கிறாள்.

     “அப்பா... எதானும்... ஆர்லிக்ஸ் இருக்கு, கரைச்சித் தரட்டுமா?”

     கரைத்து இரண்டு வாய் மெள்ள விடுகிறாள்.

     அவர் அவள் கையைக் கெட்டியாகப் பற்றுகிறார். பேச்சு வரவில்லை. கண்களில் நீர் வழிகிறது.

     “உஹூம்... ஒண்ணுமில்ல. உங்களுக்குச் சரியாப் போயிடும். காலம டாக்டர்ட்டக் கூட்டிப் போறோம். அழக்கூடாது...” சொல்லும்போதே கண்ணீர் பெருகுகிறது.

     “உஹும்” என்று அவர் அவளைத் தேற்ற முற்படுகிறார்.

     அதிகாலையில் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

     ஒருவேளை... அமெரிக்காவில் இருந்தோ? அவள் என்ன பதிலைச் சொல்வாள்? நடுங்குகிறவளாக வாங்கியை எடுக்கிறாள்.

     “நாந்தாம்மா, கே.ஜி.கே... ரங்கு எப்டி இருக்கிறார் தூங்கினாரா?...”

     “...அப்படியேதானிருக்கார். பாருங்க ஸார் ஒரு தரம் கொஞ்சம் ரத்தமா வாந்தி மாதிரி வந்திருக்கு. மூக்கிலேந்து கூட. எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு... நீங்க... இப்ப வந்து பாருங்க ஸார். நானே எப்படிக் கூப்பிடறதுன்னு இருந்தேன்...”

     அப்பாடா சிறிது நிம்மதியாக இருக்கிறது.

     வாயிற்கதவைத் திறந்துவிட்டு அடிச்சத்தத்தை எதிர் பார்க்கிறாள். கே.ஜி.கே. மட்டும் வரவில்லை. அவருடன் ஒட்டு மீசை வைத்துக் கொண்டு, லுங்கிச் சட்டையும் ஜீன்சுமாக ஒருவன் வருகிறான். அவன்...

     இவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கனைத்துக் கொண்டே உள்ளே வருகிறான்.

     “தீபாவோட ப்ரதர். இப்ப காலம வந்தான். அதான் ஃபோன் பண்ணினேன்...”

     அவர்கள் உள்ளே செல்கிறார்கள்.

     அவர்கள் பார்க்கும் போது கூட மூக்கிலிருந்து நூலாக இரத்தம் வந்திருப்பது தெரிகிறது.

     வெளியே வருகிறார்கள்.

     “மிஸஸுக்குச் சொல்லிவிடலாம். ஏதோ இன்டர்னல் ஹெமரேஜ் ஆனாப்பல இருக்கு. நான் எதுக்கும் இப்ப டாக்டர் நரசிம்மனை வந்து பார்க்கச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டு போகணும்...”

     அவர் முகம் ஏற்கெனவே வருமாங்காய் போல சுருக்கம் விழுந்து வற்றி இருக்கும். இப்போது இன்னமும் இறுகிப் போகிறது. விடிந்த பின் பால்காரர், தாயி, அக்கம்பக்கம் என்று எல்லோருக்கும் இந்தச் செய்தி பரவியாயிற்று.

     “ஐயோ, சிரிப்பும் பாட்டுமா இருப்பாரேடி மனுஷன்?... ஒருநாள் தலைவலின்னு படுக்கமாட்டாரே?”

     “இல்லம்மா, பஸ் ஆக்ஸிடன்ட்டாம்? தலையில அடிபட்டிருக்கு...”

     “ரத்தவாந்தி எடுத்திருக்கார். இது கல்லுளி மங்கியாட்டம் உட்கார்ந்திருக்கு! கே.ஜி.கே. அவரான்னா காலம போன் பண்ணினாராம்?”

     “நேத்து வந்த உடனே ஆஸ்பத்திரில சேர்த்திருக்க வாண்டாமா? பஸ்ஸில வச்சிக் கூட்டிண்டு வந்திருக்கா, மாபாவி?”

     “முன்ன ஒருத்தி வந்து படுகிடையாக் கிடந்து வயித்தெரிச்சலைக் கொட்டிட்டா, சாரு மாமி பாவம். இப்ப அவளுக்கு ஆடுமா, இந்தப் புறம் போக்குக்கு ஆடுமா?”

     “இப்ப என்ன உல்லாசப் பயணம் வேண்டி இருக்கு?”

     “உங்களுக்குத் தெரியுமோ? இதுக்குப் புருஷன் இருக்கான். ரெண்டு குழந்தைகள், மணியா, ஜோசஃப் கான்வென்ட்ல படிக்கிறதாம். குருசுவாமிகள் மடத்துக்காரா புள்ளதான் அகமுடையான்!”

     “இப்படி எடுபட்டு வருதுகளே! சிவசிவா! உலகம் கெட்டுப் போச்சும்மா!”

     ரேவு காது கேட்கவே பேசுகிறார்கள்.

     தன் கபடமில்லா வெண்மையை இவள் எப்படி நிரூபிக்கப் போகிறாள்?

     அவருடைய பர்சில், எவ்வளவு எடுத்து வந்தாரோ? ஆயிரத்துச் சொச்ச ரூபாய் மிச்சம் இருக்கிறது. அதை கே.ஜி.கே.யிடம் அவள் கொடுத்து விடுகிறாள்.

     எட்டு மணிக்குள் டாக்ஸி வந்து அவரை அழைத்துச் செல்கிறது. அவளை யாரும் ஒப்புக்குக்கூட ஒரு சொல் கேட்கவில்லை. அந்தப் பையன் சாவி எடுத்து அலமாரியைத் திறந்து அவருடைய வேஷ்டி, சட்டை ஏதோ எடுக்கிறான். போகும்போது, “வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். போய்விடாதே!” என்று கே.ஜி.கே. சொல்கிறார்.

     ஒரு விநாடி யுகமாகக் கழிகிறது.

     காலையில் பால் காய்ச்சி அவர்களுக்குக் காபி போட்டாள். இப்போது சமைக்க வேண்டுமா, யாருக்கு? அவளுக்கா?

     ஏன் இப்படியெல்லாம் வருகிறது...?

     எதையும் செய்யப் பிடிக்கவில்லை; நினைக்கப் பிடிக்கவில்லை. ஆண்டவன் ஆண்டவன் என்று நம்பினாளே! ஆண்டவனும் அவளை ஏன் கைவிட்டு விட்டார்?

     ஆண்டவன் என்பது பொய்... எவ்வளவு உள் நம்பிக்கையுடன் கதறுகிறாள்?

     இந்தத் தாயி... இவள் கூட வந்த அன்று எவ்வளவு ஒட்டுறவாகப் பேசினாள்? இன்று...

     இவள் பற்றியிருந்த நிலை ஆடிப் போகிறதே?

     பவர் லாண்டிரிக்கு போன் போட்டு, வேம்புவை வரச் சொல்லலாமா? சீ!

     அவனும் வந்து ஏசுவான்.

     சுதா...?

     சுதா எங்கிருக்கிறாளோ?

     எப்படியேனும் ஜோதியிடம் போய்விடலாம். ஆனால் அதற்குள் ரங்கப்பா உடல் குணமாகி நல்லபடியாகச் சொல்லிக் கொண்டு போக வேண்டும்... இந்தச் சூழலை விட்டே போக வேண்டும். இங்கே மனிதர்களும் விஷம்; சூழலும் விஷம்.

     இங்கே சாகப் போனால் கூட விஷ அம்பைப் பாய்ச்சி, துடிதுடிக்கச் செய்வார்கள்.

     பகல் மூன்று மணிக்கு, கே.ஜி.கே. ஃபோன் பண்ணுகிறார். “ஏம்மா எப்படி இருக்கே? அவரை டாக்டர் எல்லாம் செக் அப் பண்ணிட்டா. இன்டர்னல் ஹெமரேஜ்ங்கறா. மாமிக்கு ரெலிபோன் பண்ணிச் சொல்லியாச்சு. அவர்களின் உறவில் ஒருத்தி இங்கே இருக்கா. அவளைக் கூட்டிண்டு வர மாருதி போயிருக்கிறான். நீ ஜாக்கிரதையா வீட்டப் பாத்திட்டிரும்மா!...”

     “சரி ஸார்...”

     கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

     ஒரு சோற்றைப் பொங்குகிறாள்; ரசம் வைத்து அப்பளத்தைச் சுட்டு வைக்கிறாள்.

     மாலை ஏழு மணியிருக்கும்.

     மாருதி, அகலமான குங்குமப் பொட்டுடன் பருமனான ஒரு பெண்மணியுடன் வந்திறங்குகிறான்.

     அவளைப் பார்க்கையிலே சூட்டுக்கோலைத் தீண்டினாற்போல் தோன்றுகிறது. இந்தப் பொட்டும் வயிரத்தோடும், காஞ்சிப்பட்டும் சங்கிலிகளும், குருசுவாமிகளின் மடத்தில் பார்த்த முகமாக, வருக்கமாக இருக்கிறது. இவள்... இவள்...

     அவள் உள்ளே வந்ததும் வராததுமாக வெறுப்பை உமிழ்கிறாள்.

     “யார்டி நீ?”

     எண்சாணும் ஒரு சாணாகக் குறுகுகிறது.

     “நான் அனாதை... மன்னிச்சுக்குங்கோ...?” கண்ணீர் கொப்புளித்து வருகிறது.

     “என்னத்தை மன்னிக்கிறது? அந்தக் காலத்துலதான் நாடகம் நாடகம்னு வயிற்றெரிச்சல் கொட்டிண்டான். அவ மனசு வெறுத்துப் போனாள். என்ன குடும்பம்? எந்தக் கழுதைகளோ வீட்டுல வந்து உக்காந்து திட்டம் போடுறது...!”

     “ஒண்ணும் சொல்லிக்கிறதுக்கில்ல! வயசான காலத்துல இவனுக்கு இப்படிப் புத்தி போகணுமா? இப்ப எதுக்கு ஊர்ப் பிரயாணம்? ஹனிமூனா?”

     சுரீல் சுரீலென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குச்சிகள்...

     “ஏண்டி எங்கிருந்து வந்தேடீ? இடத்தைக் காலி பண்ணிட்டுப் போ! அநாதையாம்! இதென்ன சத்திரமா...”

     அப்படியே புகைந்து போய்விட மாட்டாளா? பூமி தேவி பிளந்து விழுங்காதா?

     “போடீ! ஒட்டுறவில்லாத நாய் போல் வந்து உக்காந்துண்டு...? எதையேனும் சுருட்டிண்டு போகாதுன்னு என்ன நிச்சயம்?”

     “...அப்படியெல்லாம் சொல்லாதேங்கோம்மா? அவர் எனக்குப் பெத்த தகப்பனாருக்கு மேல. என்ன விதி சதிக்கிறது. நான் ஒரு தரம் அவர ஆஸ்பத்திரில பார்த்து சொல்லிண்டு நாளைக்குப் போயிடறேன்...”

     “நீ என்னடி அவர ஆஸ்பத்திரில போய்ப் பார்க்கறது, சொல்லறது? இப்பவே இடத்தக் காலி பண்ணு?...”

     “அவர் என்னை இருக்கச் சொல்லிருக்கார். நான் அந்த வார்த்தைக்கு மதிப்புக் குடுத்துட்டுப் போறேன். நிச்சயமா நான் உங்களுக்கு - அவருக்கு எந்தத் தப்பும் செய்யமாட்டேன். பெத்த பொண்ணு மாதிரி எங்கிட்ட பிரியம் காட்டினார். நான் நன்னிக் காட்டணும்...” என்று அவள் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறாள். பயனில்லை.

     “நீ என்னடி, நாய் நன்னி காட்டறது? இப்படிப் பத்தினி வேஷம் போடறதுகள்ளாம் குடும்பத்தைக் குலைக்கற தொழில்ல கூசாத வந்துடறதுங்க! போடி... நான் சொல்றேன்...”

     அப்போது மாருதி அவளுக்கு ஆதரவாக வருகிறான்.

     “மாமி, விடுங்கோ... நாளைக்கி நானே மாமாக்கிட்டக் கூட்டிட்டுப் போயிட்டு அனுப்பிச்சுடறேன். இப்ப இருந்துட்டுப் போகட்டும்.”

     ‘நீ நன்றாக இரப்பா...’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. இருக்கட்டும். கைகளில் ஒவ்வொரு வளையல், தோடு, மூக்குத்தி தாலிச்சங்கிலி இருக்கின்றன. எந்த சேட்டுக் கடையிலும் அதற்குப் பணம் கிடைக்கும். எடுத்துக் கொண்டு மலைக்காட்டுக்குப் போவாள். அவரிடம் சொல்லிவிட்டு...

     தன் வெள்ளைத் தன்மையை உலகுக்கு நிரூபிக்க அவள் சாகக்கூடாது.

     அவர்... ரங்கப்பா நல்லபடியாகக் குணமாக வேண்டும். அவர் சாருவிடம் பத்திரமாய்ச் சேர வேண்டும்.

     என்றைக்கேனும் அவர்கள் மலை மேல் தம்பதியாக வருவார்கள்.

     இப்போது இவள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் இவள் மனசில் கள்ளம் இருந்ததாகவே தோன்றும். இவள் தெய்வமாக நினைக்கும் அப்பா சங்கடப்படுவார்.

     அப்பா...! உங்களுக்கு ஒன்றும் வராது. நீங்கள் நூறு வயசு இருப்பீர்கள்! அவர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவள் முன்னறையில் வந்து உட்காருகிறாள்.

     மறுநாள் காலையிலேயே தன் துணிமணி பையைத் தனியாக எடுத்துக் கொண்டு பயணத்துக்குச் சித்தமாகிறாள். சில புத்தகங்கள் தனக்கு வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்கு இப்போது சமயமில்லை.

     “சீக்கிரமாகச் சமை. நாங்கள் காலையில் சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் வரோம். நாங்க திரும்பி வந்ததும், நீ போகலாம்!” என்று மாருதி கூறுகிறான். காயொன்றுமில்லை. அவர்களிடம் கேட்கவும் அச்சமாக இருக்கிறது. ஒரு பருப்புக் குழம்பு வைத்து, வற்றல் வடகம் பொரித்து வைக்கிறாள். அவர்கள் சாப்பிட்டு விட்டு காபி, ஹார்லிக்ஸ், வெந்நீர் என்று எடுத்துக் கொண்டு போகிறார்கள். “வீட்டைப் பத்திரமாப் பாத்துக்கோ! சாயங்காலம் நாங்க யாரானும் வந்ததும் போயிடனும்!” என்று கூறிவிட்டுப் போகிறார்கள்.

     நண்பகல் கழிந்து மாலையும் தேய்கிறது. அவர்கள் வீடு திரும்பவில்லை. அவள் கே.ஜி.கே.க்குப் ஃபோன் செய்து விசாரிக்கிறாள்.

     “தெரியலியேம்மா? நேற்று நான் பார்த்ததுதான். இன்டர்னல் ஹெமரேஜ். மூக்கில் குழாய் வச்சிருக்கா. ஆகாரம் அப்படித்தான் போறது. ஆழ்ந்த தூக்கம் தூங்கறாப்பல இருக்கு. டாக்டர் தட்டித் தட்டிக் கூப்பிட்டார். ‘ஆ’...ன்னு கேட்டார். ரெஸ்பான்ஸ் இருக்கு... சுவாமியை வேண்டிக்கோம்மா. இன்னிக்கு எனக்குப் போக நேரமில்லை. ஏகப்பட்ட குழாய் வச்சிருக்கிறதால பக்கத்துல உட்கார்ந்திருக்க ஒருத்தரும், அவசரமா மருந்துக்கு அதுக்கு இதுக்குனு ஒருத்தருமா வேண்டிருக்குமா இருக்கும். நீ பத்திரமா இருந்துக்கோ!” என்று ஆறுதலாகக் கூறுகிறார்.

     இரவு எட்டு மணி இருக்கும்.

     வாயில் மணி ஒலிக்கிறது.

     ரேவு கதவைத் திறக்கிறாள்.

     யாரோ ஒருவன், முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும். வாராத கிராப்புத் தலை. ஜீன்ஸ் சராயும், ஒரு பனியன் போன்ற மேல் சட்டையும் போட்டு இருக்கிறான்.

     அவன் கையிலிருந்து சீட்டொன்றைக் காட்டுகிறான். அதில் அவள் பெயர் போட்டு, விலாசம் எழுதியிருக்கிறது.

     “உங்களைக் கங்கப்பா நர்சிங்ஹோமில் ஒரு பெரியவர் படுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்கக் கூட்டி வரச் சொன்னாங்க. அவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாராம். கிரிட்டிக்கலா இருக்காராம்...”

     மடை உடைபடுகிறது.

     ஒன்றுமே தோன்றவில்லை. கதவைப் பூட்டிவிட்டுத் தன் பையுடன் அவன் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறுகிறாள்.

     “அவங்க... ஒரு அம்மாளும், ஐயாவும் உன்னை அனுப்பினாங்களாப்பா?...”

     “ஆமாம்மா” என்று அவன் ஆட்டோவைக் கிளப்புகிறான்.

     ஆம்... அப்பாவைப் பார்த்துவிட்டு, இந்த ஆட்டோவிலேயே அவள் எழும்பூர் சென்றுவிடலாம்... அல்லது...

     அவள் பர்சில் ஏதோ பத்துப் பதினைந்து ரூபாய் இருக்கும். அது போதுமா?...

     ஒன்றும் யோசனை செய்ய முடியவில்லை.

     ஆட்டோ தடதடவென்று செல்கிறது. வேகமாகச் செல்கிறது.

     “ஏம்ப்பா? ஆஸ்பத்திரி எங்கே இருக்கு? அடையாறிலயா?...”

     அவன் பதிலே பேசவில்லை. மிக வேகமாகக் கடற்கரைச் சாலையில் ஓட்டுகிறான்.

     “ஏம்ப்பா...? ரொம்ப தூரம் போறியே?... எங்கே ஆஸ்பத்திரி?” அவளுக்கு அடிமனதில் அச்சம் பூதாகரமாக ஆட்கொள்கிறது.

     “நிறுத்து, நிறுத்தப்பா? என்ன எங்கே கொண்டு போறே?...” வீடுகள், கடைகள், வெளிச்சம் இல்லாத பிரதேசங்களில் அது ஓடுகிறது. தன்னந்தனியாகச் சவுக்குக் காட்டுக்கு இடையே விளக்கெரியும் ஒரு வீட்டின் முன் நிற்கிறது.

     “இறங்கு...!”

     “மாட்டேன். இதுவா ஆஸ்பத்திரி?”

     “இறங்குடீன்னா?”

     ஒரு பலாட்டியன் அவளைப் பற்றி இறக்குகிறான்.

     கத்த முடியாமல் வாயில் துணியடைத்து உள்ளே இழுத்துச் செல்கிறார்கள்...