அத்தியாயம் - 24

     சரிவில் இறங்கி, வளைந்து நெளிந்து ஓடும் அருவியின் மேலுள்ள மரப்பாலத்தைக் கடந்து...

     தன் கால் செருப்பைக் கழற்றிவிட்டு, ஈரம் தோய்ந்த புல் மெத்தையில் பாதங்களைப் பதிக்கிறாள். ஆயிரமாயிரமாக ரோமக் கால்களில் அந்தச் சில்லிப்பும் சுகமும் வந்து உடலெங்கும் உள்ளமெங்கும் பரவுகிறது.

     சின்னச் சின்னப் பூம்பந்துகள் போல் மேலே அந்த வரிசையின் முன் இளம் பிள்ளைகள். ஆம். பள்ளியில் பாடம் படித்தாலும், சரியாகத் தெரிந்து கொள்ளாத பிள்ளைகளுக்குத் ‘தனிப் பாடம்’ எடுப்பார்கள். அங்கு தங்கியிருந்த போது, தானும் அந்தப் பிள்ளைகளின் பாடங்களைக் கேட்டு மகிழ்ந்ததெல்லாம் நினைவில் இனிக்கிறது.

     ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து மேலே ஏறுகின்றாள். பெரிய பெரிய யூகலிப்டஸ் மரங்கள்...

     இந்த வரிசைக்கு மேல் காடுகள்... அடர்ந்த காடுகள். தேயிலை கிள்ளும் பெண்கள்... நீள மூங்கில் கழிகளை எடுத்துக் கொண்டு அணியணியாகப் பெண்கள் பாதையில் நடந்ததைப் பார்த்து அன்று அவள் கேட்டாள்.

     “இவர்கள் எதற்குக் கம்புகள் கொண்டு போறாங்க?”

     “சரிவில் இதை ஊன்றித்தான் நடக்க முடியும்.”

     கையில் பெட்டிக் கத்திரிகள்... டீச்சர் வீட்டுக்கு வந்து செல்லும் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.

     பாதுகாப்புக்குள், சாமான் வாங்கப் பொருள் தேடும் கவலை இல்லாமல் ஒரு வாழ்வுச் சுமையே அவள் கொடுமையாக நினைத்தாள். இது... இவர்கள் எல்லோரும் எப்படி வாழ்கிறார்கள்? உடல் அலுத்து, வாழ்வின் தேவைகளை மூச்சைப் பிடித்துக் கொண்டு அன்றாடம் தேடிக் கொள்ள வேண்டும். இவர்களின்... ஆண்கள், எப்படி இருப்பார்கள்? அவர்களும் இந்த அத்துவானங்களில் உழைப்பதால் முரடர்களாகத் தானிருப்பார்கள்.

     மேல் பாதையில் சாரியாக, தேயிலைச் சுமையைச் சுமந்து கொண்டு செல்லும் பெண்களைப் பார்த்தவாறே நிற்கிறாள்.

     ஓடிப்போய், அவர்களைத் தழுவிக் கொண்டு, “நான் இங்கே வந்துவிட்டேன்” என்று சொல்வதாகப் பாவனை தோன்றுகிறது.

     இவளை அந்த எல்லைக்குள் கண்டதும், அங்கிருக்கும் சிறுவர் சிறுமியர், “வணக்கம் டீச்சர்!” என்று கோரசாக வரவேற்கின்றனர்.

     இந்தக் குரலைக் கேட்டுத்தான் போலும், உள்ளிருந்து ஓர் ஆண்... வயசானவர் தாம், வருகிறார். அவளை “யார் நீங்கள்?” என்று கேட்பதைப் போல் நிமிர்ந்து பார்க்கிறார்... “நீங்க... புது அபாயின்ட்மென்ட்டா?”

     “இல்லீங்க... நான்... இங்கே ஜோதி டீச்சர் வீட்டுக்கு வரேன். முன்னக் கூட வந்திருந்தேன்...”

     “ஓ... வாங்க... என்.கே.ஆர். ஸாரும் அவர் மகளும் வந்தாங்கன்னு சொன்னாங்க... வாங்கம்மா... அவங்க இப்ப ஊரில இல்ல. ஒரு வாரம் லீவுல போயிருக்காங்க. புள்ளக்கி ரொம்ப உடம்பு சுகமில்லாம போச்சு, காச்சல் வந்து சளி, இருமல்னு வுடல. கீழ போயி ஸ்பெஷலிஸ்ட் கிட்டக் காட்டிட்டு, அப்படியே நேர்ச்சைக் கடன் முடிச்சிட்டு வாரதா சொன்னாங்க... நீங்க வீட்டில தங்கிக்கலாம். சாவி எங்கிட்டத்தான் இருக்கு...”

     என்ன இதம்! என்ன பரிவு!

     “நீங்க மட்டும் தான் வந்தீங்களா? அப்பா வரலியாம்மா?”

     “இல்ல...”

     இதற்குள் குரல் கேட்டு டெய்சி டீச்சர் வந்து விடுகிறாள்.

     “அடா... வணக்கம், வாங்கம்மா...! ஜோதி டீச்சர் புள்ளக்கி உடம்பு சரியில்லாதப்ப சொல்லிட்டே இருந்தாங்க. ‘அவங்க கைபட்டதும் அன்னக்கி எவ்வளவு சீக்கிரமா புள்ளக்குக் கலகலன்னு ஆயிடிச்சி!... அவங்களுக்குப் புள்ள மேல ரொம்ப இஷ்டமாப் போச்சி... அஞ்சு மல ஏறி பால் குடுக்கக் கொண்டு வருவேன்னாங்க... அவங்க இங்க வந்தா எவ்ளோ நல்லாருக்கும்! ஆனா, எப்படிம்மா கேக்க! அவங்களைப் போயி... கேட்டா என்ன நினைக்கமாட்டாங்க!’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. டிரைவர் சார் கூடச் சொல்வாரு, ‘நீ ஒரு லெட்டர் எழுதிப் போடு. அவங்களுக்கு நாம தனியா சமையல் பண்ணிக்க வசதியா ஒரு பக்கம் ஒழிச்சிக் குடுப்போம்... அவங்க... புருசன் விட்டுப் போட்டு வேற கட்டிட்டாப்ல. அப்பா வீட்டோடுதா இருக்குன்னு படுது...’ன்னெல்லாம் சொன்னாரு. கடிதாசி போட்டாங்களாம்மா?”

     டெய்சி டீச்சர், மடை திறந்தாற்போலப் பேசுகிறாள்.

     “அட, உங்கள நிக்க வச்சிட்டுப் பேசுறேன், நீங்க உள்ளாற வாங்க. அம்மாதான் இருக்கு... இங்கே வேற யாரும் இல்ல. டீச்சர் வரும் வரையிலும் இங்கே தங்கிக்கலாம். நீங்க எப்ப சாப்பிட்டீங்களோ என்னமோ...?”

     மனம் உருகுகிறது.

     “நான் கீழ சாப்பிட்டுத்தான் வந்தேன். நீங்க எவ்வளவு பிரியம் வச்சிருக்கீங்க. எனக்கு இந்த இடம் அமைதியாக, ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அதனாலதான் கடிதாசி கண்டதும் ஓடி வந்துட்டேன். அப்பாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல... இல்லாட்டி கொண்டு விட வருவாரு... நீங்க சிரமப்பட வேண்டாம். எனக்கு நல்லா வழி தெரியும். போயிடறேன்னு சொல்லிட்டு வந்தேன்... உடனே கடிதாசி எழுதணும்னு விலாசம் எழுதிக் கவர் குடுத்திருக்காங்க!”

     ஓ... பிரச்னைகள் எவ்வளவு சுளுவில் தீருகின்றன!

     டெய்சியின் தாய்... முதியவள். கண்பார்வை சரியில்லை. என்றாலும், மிகப் பரிவுடன் தனியாகச் சோறு பொங்கி சாம்பார் வைக்கிறாள்...

     “நாளைக்கிக் கொஞ்சம் தயிர் பண்ணிடுவோம். சாம்பார் நல்லாயிருக்குங்களா...?”

     “எனக்காக... ஏம்மா இவ்வளவு சிரமம்? உங்க பரிவான பேச்சிலேயே எனக்கு ரொம்ப நிறைவாயிருக்கு. அம்மா, பெண் பிறந்தாலே சுமை சுமக்கணும்னு ஏன் வச்சிருக்காங்க? இதை மாத்த முடியாதா?... உங்களை எல்லாம் பாக்கறப்ப...” முடிக்கவில்லை. கண்ணீர் பொங்குகிறது. துடைத்துக் கொள்கிறாள்.

     அந்த வீட்டில் ஒரே அகலக் கட்டில்தானிருக்கிறது. தாயும் மகளும் அடக்கமாகப் படுக்க முடியும்.

     “நான் அந்த வீட்டில் போய்ப் படுக்கிறேன், டீச்சர் இங்கே நீங்க வசதியாகப் படுக்கலாம்...”

     டெய்சியும் கூட வருகிறாள். பூட்டைத் திறந்து உள்ளே வருகிறார்கள். விளக்கைப் போடுகிறார்கள்.

     அந்த வீடு... அந்த அகலக் கட்டில்... அந்த அகல பெஞ்சு அவள் முன்பு படுத்த பெஞ்சு. அது நிரந்தரமாக அவளுக்கே செய்யப்பட்டது போல்... அதன் மேல் அளவாக பெரிதாக ஒரு மெத்தை...

     டெய்சி உள்ளே சென்று குழாயைத் திறந்து மூடுகிறாள். பின் கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்கிறாள்.

     “உங்களுக்கு ஏதாவது தேவையிருக்குமா?... தனியாக இருக்கப் பயமாக இருக்குமானால், தோட்டத்துப் பிள்ளை அந்தால இருக்கு, வந்து படுக்கச் சொல்லட்டுமா?”

     “வாணாம், வாணாம்மா, எனக்குப் பயம் ஒண்ணும் கிடையாது... நீங்க போங்க... எனக்குச் சவுரியமா இருக்கு...”

     அவள் இவளுக்காக ஒரு ‘டார்ச்’ விளக்கை மேசை மீது வைத்துவிட்டுப் போகிறாள்.

     அவளை அனுப்பிவிட்டு, அந்தப் பெஞ்சில் வந்து உட்காருகிறாள். நெஞ்சு நிறைந்திருக்கிறது. இரு கைகளையும் நீட்டிக் கொண்டு சிறுமி தட்டாமாலை ஆடுவது போல் சுற்றுகிறாள். வாய்விட்டுச் சிரிக்கிறாள்.

     நான்... நான்... யார்? ரேவு... ரேவு என்ற உடலுக்குரியவளா? இல்லை... அவள் கீழ் மண்ணிலேயே மடிந்து விட்டாள்.

     இங்கே... புதியவள். இங்கு யாரும் இவளை அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள். ஜோதி ஆன்ட்டி என்றாள். அவள் புருஷன் அத்தை என்றான்... குழந்தைக்கு இவள்... அது கூப்பிடும் உறவாகப் பெயருக்குரியவளாவாள். இங்கே யாரும் இவளைப் பெயர் கேட்கவில்லை.

     அந்தத் திரையை விலக்குகிறாள்.

     ஹா... இன்று என்ன பௌர்ணமியா?...

     மேகங்கள்... அலையலையாக விளங்க, ஏதோ ஓர் அமுதகலசம் போல் நிலவு பாதி எழும்பினாற் போல் பாலை விசிறிக் கொண்டிருக்கிறது. என்ன அற்புதம் இது!

     ஒரே அமைதி... தேயிலைச் செடிகள் மரங்கள்... கண்களுக்கெட்டிய வரை...

     வெகுநேரம் அந்த மேகங்கள் மெல்ல விலகுவதையும் மூளியான நிலவை மறைத்து விளையாடுவதையும் பார்க்கிறார்ன். நட்சத்திரங்கள் இல்லாத மூட்டம்...

     இதுபோல் இரவில் அவள் என்றேனும் வெளியே பார்த்திருக்கிறாளோ? மெல்லக் கதவைத் திறந்து கொண்டு அந்தச் செடிகளுக்கு நடுவில் நடந்தால்?

     - நடக்கலாமா?

     பயம்...?

     என்ன பயம்? யாருக்குப் பயம்? எதற்காகப் பயம்? எதையேனும் இழப்போம் என்ற பயமா?...

     ஆஹாஹா... என்று சிரிக்கத் தோன்றுகிறது.

     கதவை மெல்லத் தாழ் நீக்கிக் கொண்டு, வெளியேறுகிறாள். இந்த வீடு இந்தப் பக்கம் கடைசி வீடு.

     மெல்ல எல்லைப் படலைத் திறந்து பக்கத்துச் சரிவில் தேயிலைச் செடிகளின் ஓரத்தில் நடக்கிறாள்.

     செருப்பு இல்லை. சில்லென்று ஈரம் சேலை நுனியில் படிகிறது. ஊசி ஊசியாகச் சாரல் துளிகள் படிகின்றன. உள்ளம் குதூகலிக்கிறது.

     மேலே... மேலே... அடர்ந்த கானக விளிம்பில் வந்து நிற்கிறாள்.

     ஒற்றையடிப் பாதை போல், காட்டையும் தேயிலைச் செடிகளையும் பிரிக்கும் எல்லைக் கோடு செல்கிறது. அதில் நடக்கிறாள்.

     எல்லைகள், காலவரையறை எல்லாம் கழன்று போகின்றன.

     அவள்... அவள் இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஒரு துளி.

     அச்சமில்லை, இச்சையில்லை, துன்பமில்லை... எதுவுமில்லை.

     உயிரே, உயிரே... உயிரே.
     எண்ணியதை இயக்கி உணர்த்துவதும் உயிரே...
     எண்ணிய உணர்வை உடலாக்குவதும் உயிரே...
     எண்ணிய உணர்வை உடலில் வளர்ப்பதுவும் உயிரே!
     உயிரே... உயிரே... உயிரே...

     ரேவு... இல்லை... அவள்... உயிர்... உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். அந்த நிசியில் அந்த வனத்தினிடையே அவள் புகுகிறாள். மூங்கில் முட்கள் உராயும் புதர்கள். சரசர சத்தம்... சோக்... சோக்... நிசிப்பறவைகளின் சிறகடிப்புக்கள்...

     பாதை தெரியாத பாதை. ஐம்புலன்களும் ஒரே இலக்கில் இலயிக்கும் பாதை. உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். உயிரே கடவுள் நீ எண்ணிய உணர்வே, எண்ணிய உணர்வின் செயலே தெய்வம்.

     ஆயிரம் முட்கள் குத்துகின்றன. ஓராயிரம் கருந்தேட்கள் கொட்டுகின்றன. பிட்டுக்கு மண் சுமக்க வந்த பெம்மானை, பாண்டிய அரசன் பிரம்பால் அடித்ததும், அந்தப் பிரம்படி உயிர்க்குலங்கள் அனைத்தின் மீதும் பட்டதாமே? வானத்துச் சந்திரனின் ஒரு கிரணம், ஊடே நுழைந்து கீழே அந்த இடத்தை அவளுக்குக் காட்டுகிறது.

     நேர் கீழே கசமாய்ப் பள்ளம். சிதிலங்களாய் அசையும் பிராணிகளும் அசையா உயிர்களும் சிதறிக் கிடக்கும் களரி. ஒரு மாமலைத் துண்டு போல் மத்தகஜம் ஒன்றின் முண்டம்... ஒரு கரிய உருவம் - அரக்க உருவம், வெள்ளியாய் நீட்டியிருக்கும் தந்தத்தை ஆட்டிப் பிடுங்குகிறது. ஹ்... ஹ்ய்...

     இது பேய்க்காற்றா? ஊழிக் காற்றா? பூமி குலுங்குகிறதா?

     எண்ணியதை, இயக்கு! உன் உடலில் விளையும் உணர்வின் ஆற்றலை உன்னுடன் எடுத்துச் செல்! எழும்பு, எழும்பு!... நீ பேராற்றல்! நீ மகாகாளி! நீ பெருஞ்சக்தி! தோட்டைப் பிளந்து எழும்புகிறது அந்த ஆற்றல்.

     அவள் அவன் பிடரியில் அமர்ந்து அழுத்துகிறாள்.

     ஒரு ஹுங்காரத்துடன் மேலே மேலே எழும்புகிறாள்.

     பெருஞ்சக்தியாய்... அண்டமெங்கும் பரவியுள்ள பெருஞ்சக்தியாய்... அவள்... அவள்...

     அவள் சிரிக்கிறாள். கட்டுக் கட கடவென்று சிரிக்கிறாள்.

     நிசிப்பறவைகள் சடசடவென்று சிறகுகளை அடித்து ஆமோதிக்கின்றன.

     ஓடைகள் சலசலவென்று சிரிக்கின்றன.

     கானக மரங்கள் அசைந்தாடி மகிழ்ச்சியில் ஒன்றோடொன்று இதமாய்த் தழுவிக் கொள்கின்றன.

     சந்திரவொளியில் அந்தக் குரூர மனிதன் வெறும் பூச்சி போல் நசுக்குண்டு கிடக்கிறான்.