உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 “இந்தா, முன்னெடுத்திட்டுப் போயி, வேலையப் பாரு. ரெண்டு நாள்ள முழுசும் முள்ளுப் போட்டு, பார் கட்டிடணும்...” பெரிய தலைப்பாவும் கோட்டுமாக மேஸ்திரி அந்தத் தோட்ட அறையில் இருந்து பூமி கொத்தும் பெரிய முள்ளை எடுத்துக் கொடுக்கிறான். முருகேசுவுக்குக் களைப்பும் சோர்வும் கரைந்து போய் இலேசாக இருக்கிறது. கீழே பனியில் நனைந்த பசுந்தரை புத்துணர் வூட்டுகிறது. எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இவ்வாறு வெட்ட வெளியில் மண்ணில் உழைக்க வருகிறான். ஆறு ரூபாய்க் கூலி மிகக் குறைவுதான். ஆனால் இந்த வேலையே யார் யாரையோ கெஞ்சியதால் கிடைத்திருக்கிறது... முதல் முதல் கன்னி நிலத்தைப் பண்படுத்தித் தேயிலைச் செடிகள் பொங்கிப் பூரிக்க, உழைத்த நிலைகளெல்லாம் உள்ளத்தில் நிறைகின்றன. பெண்டுகள் முதல் கொழுந்து எடுக்கையில் சாமி கும்பிட்டு லூ லூ லூ என்று குரவை இடுவார்கள். மங்கலங்களை முன்நிறுத்தி, எந்த வளமுறையும் வழுவாமல் அந்த மண்ணோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்... ஆழ்ந்து வேரோடிய புல்லை அடியோடு பெயர்ப்பது போல் கைமுள் இருகிய நிலத்தில் ஆழ இறங்க, காலை அதன் படங்கில் வைத்து உள்ளே அழுத்துகிறான். பின்னர் கை வலிமையை வைத்துப் பெயர்த்துப் பெயர்த்து மண் கட்டிகளை, ஈரத்தோடு, பொலபொலக்க உடைக்கிறான். இப்படித் துண்டுதுண்டாக, மக்களை, குடும்பம் குடும்பமாகக் குலைத்து சிதற, பெயர்த்து விட்டார்கள்... பரமு மண்ணோடு மண்ணாகி விட்டான். அவன் போய் அன்றோடு இருபது நாட்களாகி விட்டன... அவனுடைய அடக்கச் செலவுக்கு, ஒரு இருநூறு ரூபாய் புரட்ட முடியாமல், கிழவி வார வட்டிக்குக் கடன் கொடுத்திருப்பதை வாங்கி இருக்கிறான். வீட்டில் தனி அடுப்பாக இருந்தாலும், அந்தப் பிள்ளையை, அவனால் எப்படியும் போகட்டும் என்று விட முடியவில்லையே? அவளுக்கும் இங்கே ரோட்டு வேலை முடிந்து போய் விட்டதாம். “இன்னும் நாலுநாத்தான் சோலி. பொறவு நாங்களும் வேற பக்கந்தா போகணும்...” என்று அவனிடம் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள். பஞ்சை பரதேசிகளாக, பொலபொலத்த மண் துகள் போல் நாலாபக்கமும் சிதறிப் போய் விழுகிறார்கள். அவன் சொந்த மகன் குமரு... அவன் எங்கோ, அவர்கள் பிள்ளை எங்கோ... மண் கட்டிகள், படங்கு படங்காக, பச்சை ஓடிய பரப்பு பாளம் பாளமாக ஈரத்துடன் பெயர்ந்து விழுகிறது. சரிவை தட்டுத்தட்டாக வெட்டி, அகல அகலப்படிகள் போல் சீராக்கி, மழையில் மண் சரிந்து விழாமல் ‘ஒப்புரவு’ செய்ய வேண்டும். சூரியன் தலைகாட்டலாமா வேண்டாமா என்று யோசிப்பதும், பின்னர் மெல்ல மேகத் திரை விலகுவதுமாக இதமாக இருக்கிறது. வந்த புதிதில், குளிர் பொறுக்க முடியாமல், முப்பது ரூபாய் கொடுத்துப் பழையதான, பட்டிபிரிந்த ‘கோட்’ ஒன்றை வாங்கி அணிந்திருக்கிறான். அதைக் கழற்றி வைத்துவிடலாம் போல் இருக்கிறது. உச்சிப்பொழுது ஏறி வருவதை மூட்டமாக இருந்தாலும் வயிறு கூவி அறிவிக்கிறது. பரமுவின் பிள்ளைகள் எத்தனையோ நாட்களில் அவனுக்குத் தேநீரும் ரொட்டியும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த இடத்திலிருந்து சாலைக்குப் போவதற்கே வெகு தொலைவு நடக்க வேண்டும். கட்டிகளைத் தட்டி உடைத்துவிட்டு மேலே பார்க்கிறான். வரிவரியான வண்ணத் தலைக்கட்டுடன்... பச்சை பச்சைதான் வருகிறான்... பச்சை...! ஏதோ வானுலகிலிருந்து வண்ணத் தூதுவன் இழிந்து வருவதைப் போல் இருக்கிறது. “ஏலே பச்சையாடா?” “ஆமாம் மாமு, இப்பதா வந்தே, வூட்ட போனே, சுகந்தி இப்படீன்னு சொல்லிச்சி...” “ஏலே, உனக்கு இந்தப் பக்கம்னு எப்பிடித் தெரிஞ்சிச்சி?” “தெரியாம என்ன? பொட்டம்மா மகளுக்கு சொந்தமான பூமிதான இது? இங்கதா மூணு வருசமா ஒண்ணும் போடாம இருக்கு. விதைக்கணும்னு சொல்லிவிட்டிருந்தாங்க. மேஸ்திரிய கிளங்கு மண்டிகிட்ட மார்க்கெட்ல பார்த்தேன். சரி ரெண்டும் ரெண்டும் நாலுன்னிட்டு ஓடியாந்தே...” “ஏண்டா ஒம்பேச்சக் கேட்டு மூவாயிரத்தையும் தூக்கிக் குடுத்திட்டு, மிச்சம் கொழப்படில நிக்கிறேன்? அந்த ஆளைய காங்கல, மிச்சம் ஆளுவளும் வந்து பாத்திட்டுப் போறாங்க,... அந்த ரிபாட்ரியட் ஆபீசில, அந்தப்புள்ள எம்பேச்சக் கேக்காம இப்படிக் கண்ட ஆளுவகிட்டயும் தூக்கிக் கொடுக்கலாமா? இங்க ஆபீசுன்னு ஒண்ணு என்னாத்துக்கு வச்சிருக்கோம்னு கத்தினான். உங்கக்குச் சொன்னாத் தெரியாது, ராமேசரத்தில இறங்கறப்பவே கையில நோட்டீசைக் குடுத்துச் சொல்றமே? மோசம் போவாதிய போவாதியன்னு. அதுக்கு மேலியும் புத்திய களவு குடுத்திட்டு இங்க அழுவுறீங்களேன்னு, பேசுறான். ஏசுறான்... நோட்டீசு பச்சயும் மஞ்சளுமா குடுக்கறான், அது என்ன எளவு தெரிஞ்சிச்சி? அந்தப்புள்ள சுகந்திட்டன்னாலும் குடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கலாம். ஏலே... அம்புட்டுபேரும் பணத்தைப் போட்டது போட்டது தானா?” “முடிஞ்சிச்சா?... மாமு, அப்பிடி லேசில வுட்டுட மாட்டம். கூடலூரில சொல்லிட்டா. இப்ப விசாரிச்சிட்டுத்தா வார. ஃபக்டரிக்கு லைசென்ஸ் அது இது எல்லாம் அவ்வளவு ‘விரிசா’ கெடச்சிடுமா? அவங்க மட்றாசு போயிருக்கா. இத்தினி ஆளுவளும் லட்சக்கணக்கா குடுத்திருக்கா. வங்கி மானேசர், தாசில்தாரு. எல்லாரும் திறப்பு விழாவுக்கு வந்தாங்க. நம்ம விக்னேசுவரா மாஸ்டர்... அவுரு, நம்ம ஆளு, படிச்சவரு, அங்க நம்ம பிள்ளையளுக்கு ஸ்கூல் நடத்துறாரு, அவுரும் கூட பணம் போட்டிருக்காரு. அப்பிடி மோசம் செய்ய விடுவாங்களா? எந்த கோர்ட்டுன்னாலும் ஏறிக் கொண்டாந்துடுவா, பயப்படாதிய...” “அது சரி, இப்ப, மிச்சம் குழப்பமாப் போச்சி. பரமு, திடீர்னு அன்னிக்கு மண்டயப் போட்டுட்டான். ஒரு அம்பது ரூபா கையில இல்ல. வீட்டில இனி இந்தப் புள்ளய ரெண்டு கச்சியும் சேர முடியாம கொழப்பம்...” “வார வட்டிக்கு எரநூறு ரூபா கடன் வாங்கிருக்கே கூடிட்டே போறது. இப்ப, ராமாயி உருப்படி ஒண்ணிருக்கு. ஒரு மூணு சவரன் அட்டியல். அதுவும் தாலியும் தானிருக்கு. இந்தப் புள்ளக்கிக் கண்ணாலம்னா போட்டுடலாம்னு வச்சிருக்கிறேன். அத்த எங்கனாலும் வங்கில வச்சின்னாலும் ஒரு அஞ்சு நூறு பெரட்டியாவணும்... ஏலே, ஒங்கிட்ட... அப்பமே சொன்ன... சுகந்திப் பொண்ணுக்கு ஒம்மேல இஸ்டன்னுதா தெரியிது. அதுக்கு ஆரும் தாதியில்ல. நெல்ல தங்கமான பொண்ணு. அதிந்து ஒரு சொல்லு சொல்லாது. பாங்கா நடந்துப்பா, வூட்டு வேலை, ஒரு சாமா வீண் பண்ணாம, நெல்லபடியா வக்கிது. நல்ல கொணம்... சித்திரயும் பொறந்தாச்சி. அந்த மூவாயிரம் செலவு பண்ணிக் கலியாணம் கட்டிடணும்னு இருந்தே... என்ன சொல்ற?...” மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு சிரிக்கிறான், பச்சை. “அதுக்கென்ன மாமா? எங்கம்மாளும் அப்பாவும் என் இஸ்டத்துக்குக் குறுக்க நிக்யமாட்டா. அடுத்தமாசம் போறேன் அந்தபக்கம். இப்பிடிச் சொல்லிட்டுவார. அதோட மாமு, நீங்க ராமேஸ்வரத்தில வந்ததும் மூவாயிரம் குடுத்தா அந்தப் பணம் தான இப்ப வச்சிருந்திய? அது தவுர, தொழில் பண்ணன்னு லோன் குடுக்காவ, அதுக்கு எதுன்னாலும் அப்ளிகேசன் குடுத்திருக்கீங்களா?” ...முருகேசு முன்பிடியில் கையை வைத்துக் கொண்டு பார்க்கிறான். “தொழில் பண்ணவா?... அதான் மாமுண்டியும் சடயம்மாவும் சொன்னாங்களா?” “வூடுகட்டிக்க, தொழில் பண்ண அல்லாத்துக்கும் பணம் கவுர்மெண்ட் தர்ராங்க ஆனா, வாங்குறது செத்த செரமம். அங்கங்க, கொஞ்சம் பணம் செலவழிக்கணும். ஆபீசு மூலமா போனா வருசம் ஆனாலும் வாரதில்ல. அதுக்குன்னு இடை ஆளுவ இருக்காங்க. அவுங்களக் கண்டு நேக்கா பேசணும். தொழில்கடன்னு ஒரு மூணாயிரம் வாங்கினா, ஒரு கோழிப்பண்ணை, இல்லே ஒரு தையல்மிசின் வாங்கி வச்சிட்டுப் பொம்பிளப் பிள்ள தொழில் செய்யலாம். படிப்பிச்சிக்குடுக்க, கன்யாஸ்திரி மடத்துல கிளாஸ் வச்சிருக்காங்க...” முருகேசுவின் முகம் மலருகிறது. “அட, ஏண்டால முன்னியே இதெல்லாம் சொல்ல இல்ல?... இத பாரு, நீ என்ன செய்யிவியோ? அந்த புள்ளய நீ கட்டிக்கணும். நீ லோனு வாங்கிக் குடுப்பியோ, மிசின் வாங்கிக் குடுப்பியோ உம் பொறுப்பு...” அவன் சிரிக்கிறான். “இப்ப நா ஊட்டிக்குப் போறேன் நாளக்காலம இந்நேரம் வார, மிச்சம் பேசலாம்...” “ஏண்டால, இப்ப ஒரு அஞ்சுநூறு பெரட்டி, கிளவி கடன அடச்சிப் போடணுமே?... பாத்தியா மறந்திட்டானே? ரேசன் கார்டுக்கு எழுதிக் குடுத்து மாசமாச்சி, ஒண்ணுமே புரியல.” “வாங்கித்தார, ரேசன்கார்டு இருந்தாதா, லோனு கீனு எல்லாம் கிடக்கும்...” அவன் வந்து சென்றது, வீரிய மருந்து உட்கொண்டாற் போல் தெம்பாக இருக்கிறது. மறுநாள் அவன் வருகிறான். அடுத்த வாரத்துக்குள் ரேஷன் கார்டு பெற்றுத் தருவதாகச் சொல்லி, அந்த அட்டியலை வாங்கிச் செல்கிறான். மூன்றாம் நாள் முருகேசு வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பே, புதிய நூறு ரூபாய் நோட்டுக்களாக ஐந்து நோட்டுக்களையும், வங்கியில் வைத்ததற்கு அடையாளமான சீட்டொன்றையும் கொண்டு வந்து கொடுக்கிறான். அவசரமான கடன் வட்டி எல்லாம் கொடுத்தபின், அரிசி விறகு போன்ற அத்தியாவசியப் பொருளும் வாங்கி வருகிறார்கள். பொட்டம்மா, பச்சையிடமும் சொல்லி, டாக்டர் வீட்டு வேலைக்குப் பெண்ணை அனுப்ப உடன்பட வைக்கிறாள். “சரோசாவ அனுப்பினா என்ன மாமா? பொட்டம்மா சிவாரிசின்னா, நல்ல ஆளுங்களாதா இருக்கும். அவங்க நல்லராசி உள்ளவங்க. பிள்ளைய சாப்பாடு போட்டு, பாதுகாப்பான எடத்தில வச்சி, மாசம் முப்பத்தஞ்சு ரூபா வங்கில போடறாங்கன்னா பாருங்க!...” “ஏம்மா சரோசா... கேட்டுக்கிட்டியா?” “நா போற தாத்தா... போலாம்...” “அப்ப, நாயித்துக்கிளம, அல்லாரும் ஒத்தைக்குப் போகலாம்... நா கூட்டிட்டுப் போவேன்...” என்று பச்சை வேலு சொல்கிறான்; ஆனந்தமயமாக இருக்கிறது. இந்த இவர்கள் குடும்பமும், சடயம்மாவின் குடும்பமும் இப்போது சில நாட்களில் மிகுதியும் பிரிந்து போய்விட்டன. தகப்பனின் சாவுச் செலவுக்கும் முருகேசு மாமன் செலவழித்திருக்கிறான் என்ற உணர்வும், சுகந்தியின் வேற்றுமையும் அவளைப் பிள்ளைகளைக் கூட அங்கே விட்டுவைக்க இடம் கொடுக்கவில்லை. மாமுண்டியுடன் அவள் வேலைக்குச் செல்கையில், அந்தக் குழந்தைகளையும் கொண்டு செல்கிறாள். சுகந்தி எழுந்திருக்கு முன்பே, தேநீர் கொதிக்க வைத்துக் கொள்கிறாள். காலை உணவு ஒன்றும் தயாரிப்பதில்லை. முதல் நாளிரவு வடித்த சோறோ, புளியோ கூட்டி, எடுத்துக் கொண்டு போகிறார்கள். பிள்ளைகள் நிமித்தமாகச் சண்டை என்று வருவதற்கு இடமில்லை. ஞாயிற்றுக்கிழமை இவர்கள் ஒத்தைக்குச் செல்வதாகத் தீர்மானித்து இருக்கிறார்கள். வாரக் கடைசியில் முருகேசுவுக்கு முப்பது ரூபாய் போல கூலி வந்திருக்கிறது. அவன் வேலை முடிந்து திரும்பி வருகையில், மாமுண்டியும் சடயம்மாவும் குழந்தைகளும் மார்க்கெட்டின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்குக் குளிருக்குப் பாதுகாப்பாக ஒரு சட்டையை முருகேசு விலைபேசுகிறான். சப்பைமூக்கு வடக்கத்தியான் கம்பளிச்சட்டைக் கடைக்காரன் பதினைந்து ரூபாய் சொல்கிறான். “மாமா...?...” சடயம்மா தான். இடுப்பில் இருக்கும் குழந்தை செல்லி விளையாட்டுக் காட்ட, சிரிக்கிறது. எண்ணெய் கண்டு பல நாட்களான தலை. அழுக்கும் கந்தலுமாகத் துணி. மாமுண்டி ஊரிலிருந்து வந்த போது அணிந்த ஒரே சட்டையை, அணிந்திருக்கிறான். மேலே பழைய போர்வையைப் போர்த்திருக்கிறான். சடயம்மா தான், எப்படி ஆகிவிட்டாள்! கன்னத் தெலும்புகள் முட்டி, கண்கள் உள்ளே போய்... “என்ன வாங்குறிய?...” “புள்ளக்கிதா, போட்டுப்பாரு...” பன்னிரண்டு ரூபாய் என்று தீர்த்திருக்கிறான். “மாமா, உங்ககிட்ட ரெம்பக் கடம்பட்டிருக்கிற, என்னிக்கின்னாலும் குடுத்துப் போடுவ...” “அட, இதெல்லாம் என்ன புள்ள?...எதுக்கு அழுவுற? இந்தா, புள்ளிக்குப் போடு...” சிவப்பும் பச்சையுமாக வரிவரியாகப் பின்னிய வண்ண நூல் சட்டை, முருகேசன் பைக்குள்ளிருந்து ஒரு பத்து ரூபாயும் இரண்டு ரூபாயும் எடுத்துக் கொடுக்கிறான். “மாமா... நாங்க காலம பொறப்பட்டு வேற எடம் போறம். இங்க வேலை முடிஞ்சிபோச்சி. குன்னூருக்கந்தால மேலே ரோட்டுவேலை இருக்குதாம். நம்ம சனங்கல்லாமும் இருக்காவளாம்... காலம போயிடறோம்...” முருகேசுவுக்குத் தொண்டையில் உணர்ச்சி முட்டுகிறது. பேச முடியவில்லை; கடலை மிட்டாய்க்காரரிடம் மிட்டாய் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறான். ‘இரு புள்ள’ என்று சொல்ல என்ன இருக்கிறது? ‘அங்கே வீடு வாசல் இருக்கிறதா’ என்று கேட்க வாய் இருக்கிறதா? ஒன்றுமில்லை. பேசாமலே நடக்கிறார்கள். சிறிது நேரம் சென்றதும், முருகேசு தெரிவிக்கிறான். “சரோசாவ நாளைக்கு ஒத்தையில கூட்டிட்டுப் போயி டாக்டரம்மா வீட்டில வேலைக்குச் சேர்க்கப் போறேன். சாப்பாடு போட்டு துணி குடுத்து மாசம் முப்பத்தஞ்சு ரூபா குடுக்கிறாங்களாம்...” “அது நல்ல புள்ள...” “எல்லாமும் நல்ல புள்ளயதா. அததுக்குச் சீவியம் தாறுமாறாப் போறப்ப, கொணமும் கெட்டுப் போவுது...” அன்றிரவே வீடு திரும்பியதும் சடயம்மா அடுத்த நாளைக்கும் சேர்த்துச் சோறு பொங்கிக் கட்டிக் கொள்கிறாள். அதிகாலையில் மூட்டை முடிச்சுக்களையும், கந்தல்களையும் வாரிக் கொண்டு கிளம்புகிறார்கள். செல்லியின் தலையிலும் கூடச் சிறு மூட்டை இருக்கிறது. பையன் தூக்க மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டுப் படுக்கைக் கந்தலைத் தலை மீது வைத்துக் கொள்கிறான். சடயம்மா இடுப்பில் குழந்தை, தலையில் சுமையுடன் நடக்கிறாள். மாமுண்டிக்கு உச்சியில் தொடங்கி மண்டை முக்காலும் வழுக்கையாய்ப் பிடரியில் தான் சுருட்டையாக முடி தொங்குகிறது. கூன் விழுந்த முதுகில் சாக்கு மூட்டைச் சாமான்களைச் சுமந்து கொள்ள, அந்தக் குடும்பம் எங்கோ, எப்படியோ பிழைக்க நகர்ந்து செல்கிறது. அந்தப் பள்ளம் சுற்றிய குடியிருப்பு முழுவதிலும் அவர்களைப் போன்ற நாடு பெயர்ந்தவர்கள் தாம். ஒரே தட்டில் அமர்ந்து உண்ணக் கூடிய அபிமானமும் ஈரமும் அவர்களிடம் இருந்தது. அந்தத் தேயிலைப் பசுமையில் அவர்கள் தளிர்த்துப் பிழைத்த போது, இப்படி இருந்ததில்லை... கண்களைத் துணியினால் ஒத்திக் கொண்டு உள்ளே வந்தாலும், அவர்கள் பாதையில் செல்லும் காட்சி அவனுள் கலக்கத்தையும் சங்கடத்தையும் பிசைகின்றன. “தாத்தா, அவரு எத்தினி மணிக்கு வாரேன்னாரு?” சுகந்தி கூந்தலை வாரிக் கொண்டு கேட்கிறாள். முகத்துக்குப் பவுடர், பொட்டு, எல்லாம் புதிதாக வாங்கிக் கொண்டிருக்கிறாள். வாசனை அடிக்கிறது. சரோசா தனது இரண்டு பாவாடை சட்டைகளையும் மினுமினுக்கும் கித்தான் பையில் அடைத்துக் கொண்டிருக்கிறாள். இடையில் இருப்பதற்குள் பளிச்சென்றிருக்கும் பூப்போட்ட பாவாடை சட்டை அணிந்திருக்கிறாள். தனமும் இதே போன்ற உடுப்பை அணிந்து இருப்பதைக் கவனிக்கிறான். தனம் வயசுக்கு வளர்த்தி இல்லை. இருவருக்கும் இரண்டு வயசு வித்தியாசம். ஆனால் பார்க்க சரோசா தான் வளர்ந்தவளாக இருக்கிறாள். முடியில் நீண்ட நாடா வைத்து முடிச்சிட்டுக் கொண்டு, ஒட்டுப் பொட்டு வட்டமாகப் புருவங்களுக்கிடையே பளிச்சென்று துலங்க மூவரும் தயாராக நிற்கின்றனர். முருகேசுவினால் இந்த உற்சாகத்தைக் கொண்டாட முடியவில்லை. எனினும், பச்சை வேலு வந்ததும் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் புறப்படுகிறான். உதகையில் ‘ரேஸ்’ கூட்டம் தெருக்களெல்லாம் நிறைந்திருக்கிறது. டாக்டரம்மாவின் வீட்டைத் தேடிச் செல்கிறார்கள். அம்மா அப்போது தான் பகல் சாப்பாட்டுக்கு வந்திருக்கிறாள். முன் வாயிலில் உள்ள பூச்செடிக்குப் பக்கத்தில் வரிசையாகப் பெண்களும் இரு ஆண்களும் நிற்பதைக் கண்டதும், “யாரப்பா?” என்று விசாரிக்கிறாள். “...நாங்க கோத்தையிலேந்து வாரம்... புள்ள வச்சிக்க சிறிசா ஒரு பொண்ணு வேலைக்கு வேணும்னு சொன்னியளாம்... மேஜர் அம்மா அனுப்பிச்சாங்க...” “ஓ... நீங்கதானா!... யாரு பொண்ணு...?” சரோஜாவை அவன் காட்டுகிறான். கையில் பையுடன் நிற்கும் சரோஜா கபடமில்லாமல் சிரிக்கிறது. “உம் பேரென்ன?...” “சரோஜா...” அம்மாள் “ஜான்!” என்று உள்ளே பார்த்துக் கூப்பிடுகிறாள். சிலுவை தொங்கும் பிள்ளை ஒருவன் வருகிறான். கட்டு மத்தாக இருக்கிறான்; மீசை வரும் பருவம். “சமையலுக்கு இவன் இருக்கிறான். குழந்தைதான் பாத்துக்கிடணும்... பேபி எங்கே ஜான்?” “தூங்குது டாக்டர்!” “ஒரு வயசாகிறது. நான் காலமே ஆசுபத்திரி போயிடுவேன். பகலுக்கு வந்து உடனே மூணு மணிக்குத் திரும்பிப் போவேன். சிலப்ப ராவிலும் கேஸ் பார்க்கப் போக வேண்டி இருக்கும். அதனால குழந்தையை நல்லாப் பாத்துக்கிடணும். சாப்பாடு, படுக்கை, துணி எல்லாம் தரேன். முப்பது ரூபாய் சம்பளம்; சரியா?” “டாக்டரம்மா! கொஞ்சம் கூடப் போட்டுக் குடுங்க! அதுக்குத் தாய் தகப்பனில்ல. ஸிலோன் கலவரத்தில குடும்பம் அலையக் குலைய மூணு பிள்ளைகளும் வந்திருக்கு... பாத்துக் குடுங்க...” பச்சை வேறு அவர்கள் வரலாற்றைச் சொல்கிறான். “...நீங்க கவலைப்பட வேண்டாம். என் பொண்ணு போல பாத்துக்குவேன்.” “...அந்தப் பொண்ணையும் வேலைக்கு விடுறீங்களா?” “யாரு... தனத்தையா?...” முருகேசு எதுவும் பேசாமல் பார்க்கிறான். “என் தங்கச்சி இங்கே டெலிபோன்ல இருக்கா. எசமானரும் இன்ஜினியரா இருக்காரு. ரெண்டு பிள்ளைங்க. பார்த்துக்க ஆள் இல்ல... இங்க தான் பக்கத்தில இருக்கிறா. இதே போல சாப்பாடு துணி எல்லாம் குடுத்து, அம்பதோ அறுபதோ குடுப்பா...” “என்ன மாமா? யோசனை வாணாம், அக்கா தங்கச்சிங்க ரெண்டுமா இருந்தா... அதுங்களுக்கும் தனியாத் தெரியாது!” இதற்குள் குழந்தை எழுந்துவிட்டது. ஜான் தூக்கிக் கொண்டு வருகிறான். தாய் குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். தூங்கி எழுந்த சிணுங்கல் கூட இல்லாமல் தாயைக் கண்டதும் சிரிக்கிறது. வெள்ளை வெளேரென்று நிறம்; ரோஜாக் கன்னங்கள், கருவண்டாய்க் கண்கள், சுருண்ட முடி. ஆண் குழந்தை. சரோசா ஆசையுடன் ‘வா... கண்ணு’ என்று கூப்பிடுகிறாள். “இவம் பேரு கிரீஷ்...” “அக்கா... சரோ அக்கா, அக்கா... அவ வெளியே தூக்கிட்டுப் போறா...!” குழந்தைக்கு வேற்றுமுகம் இல்லை; சிரிக்கிறது. “அப்ப... ஒத்துக்கிட்டீங்க...?” “உங்களுக்குத் தெரியாததில்ல... புள்ளைங்க கபடே தெரியாதவங்க. முன்ன பின்ன இருந்தாலும் சொல்லிக் குடுங்க தாயி!” “ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போறீங்களா? தங்கச்சி இப்ப ஆபீசுக்குப் போயிருப்பா. சாயங்காலந்தா வருவா, நான் கூட்டிட்டுப் போறேன்.” “இருக்கட்டுமுங்க. இதுங்கல்லாம், இங்க தோட்டம், ரேசு காட்டணும்னு கூட்டிட்டு வந்தேன். சாங்காலமா வாரம்...?” “அப்ப இருங்க...” ஜானைத் தேநீர் போட்டுக் கொண்டு வரச் சொல்கிறாள். இரண்டு சகோதரிகளையும் நல்ல இடத்தில் சேர்த்து விட்ட ஆறுதல் உண்டாகிறது. பச்சைவேலு ஒரு வாரத்துக்குள் ரேஷன் கார்டு கிடைக்க தாசில்தார் அலுவலகத்தில் ஓராளைக் காட்டிக் கொடுக்கிறான். ஐம்பது ரூபாய் தான் செலவு. அத்துடன் தொழிற்கடனுக்கும் இவன் ரேகை வைத்துக் கொடுக்கிறான். இந்த இரண்டு மூன்று மாச அலைபாயும் வாழ்வில், ஏதோ ஒரு துறையில் இளைப்பாறத் தங்கினாற் போல் முருகேசு மூச்சு விடுகிறான். |