11

     இளவேனிலின் இனிமைகளெல்லாம் பாய்சுருட்டிக் கொண்டுவிட்டன. ஏழைகளுக்கும் மாற்றுடையில்லாத வறியவர்களுக்கும் காலனாகப் பருவமழை மலைகளில் பேயாட்டம் ஆடக் கொடியேற்றுகிறது.

     மழை நாட்களில் சம்பளம் கொடுக்க இவனுக்கென்ன அரசு வேலையா? வீட்டில் குந்திப் பார்த்தால் செம்மண் குழம்பாக மேடுகளைக் கரைத்துக் கொண்டு நீர் பள்ளத்தில் பாய்ந்து விழுவது தெரிகிறது. ஊசிக்குத்துகளாக ரோமக் கால்களைக் குளிர் குத்துகிறது. வீட்டில் சூடு என்ற பெயருக்கே வழியில்லாமல் இருக்கிறது. இந்த எட்டு நாட்களில் ஒரே ஒரு நாள் தான் இவனுக்கு வேலை இருந்திருக்கிறது. சுகந்தி தனியாக இருப்பதால், ஒயர் பை போடப் படித்துக் கொண்டிருக்கிறாள். பொட்டம்மா சிபாரிசு செய்து, இந்த ஒன்றரை மாசத்தில் நான்கு பைகள் போட்டுக் கொடுத்து, ஒரு பத்து ரூபாய் சம்பாதித்திருக்கிறாள். இன்னும் பை போட ஒயர் வாங்கித் தந்திருக்கிறாள். அதைப் பின்னும் ஒரு சுவாரசியத்தில், சூடில்லாத வறுமையும் பசியும் அமுங்கிப் போகின்றன.

     ‘சித்திரை, வையாசி போயி ஆனியும் வந்தாச்சு. லோன் அப்ளிகேசன் போட்டு மாசமாவுது. அவனவன் வருசம் ஆனாலும் வாரது செரமம்னு சொல்லுறான்... அது வந்ததும் வங்கியிலிருக்கும் சாமானையும் திருப்பி, கலியாணமும் கட்டிடணும்...’ இவன் சிந்தையில் மின்னலாய் வரிகள் ஓடுகின்றன.

     அந்தப் பணத்தைப் பறிகொடுத்துவிட்ட உணர்வு அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டே இருக்கிறது... மூவாயிரம்!

     அரசு ஒரு பக்கம் உதவி செய்து, இன்னொரு பக்கம் இப்படி முதலைகளையும் வளர விட்டிருக்கிறது. உசர உசரமான கோயிலும், சாமியார் போன்ற மனிதர்களும் நடமாடினாலும், அடித்துப் பிருங்கும் போலீசாரும் இருக்கிறார்கள்.

     “தாத்தா... அடுப்புப் புடிக்கவே மாட்டேங்குது. சீமண்ணெய் குப்பி காலியிருக்கு. காஞ்ச வெறவா கொஞ்சம் வாங்கிட்டு வாங்க.”

     ரேசனுக்குப் புறம்பாகச் சீமை எண்ணெய் வறியவரால் வாங்க இல்லாத பொருள். விறகு... உயிர்ச்சூடு...!

     வேலை முடிந்து திரும்பியதும் மிலாறு பொறுக்கிக் கொண்டு பெண்டுகள் வீட்டில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காசு கொடுத்தே அறிந்ததில்லை. இங்கே தொட்டது தொன்னூறும் காசாக இருக்கிறது. தலையில், உடலில் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய பிளாஸ்டிக் துணியைப் போர்த்துக் கொண்டு முருகேசு வெளியில் இறங்கிப் போகிறான். அன்றாடம் சந்தைப் பக்கத்துக் கடையில் குந்தியிருக்கும் மேஸ்திரியிடம் ‘லோன்’ பற்றி நினைவூட்டுவது போல் தலைகாட்ட வேண்டும். பாதையெல்லாம் சறுக்கலும் வழுக்கலுமாக இருக்கிறது.

     ஏழைகளெல்லாம் உயிர்ச் சூடின்றித் தொல்லைப்படுகிறார்களே என்று மலையே கண்ணீர் சொரிவது போல் நினைத்துக் கொள்கிறான். மேடான திருப்பப் பாதையில் லாரி ஒன்று ஏறத் திணறிக் கொண்டிருக்கிறது. வழுக்கல், பள்ளத்துக் கப்பால் தொலைவில், ஓட்டுபவனுக்கு உதவியாக இருக்கும் பொடியன் ‘ரெய்ட் ரெய்ட்’ என்று சொல்ல நிற்பது புரிகிறது. ஒருகால் அவன் பச்சை வேலுவாக இருக்குமோ? லொரியில் போகும் ஆள் நன்றாகச் சம்பாதிக்கிறான். அத்துடன் நிறைய ஆட்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான்... எப்படியேனும் நகையை மீட்டு ஒரு கலியாணம் கட்டிவிட்டால் சுகந்திப் பெண்ணைப் பற்றிய கவலை தீர்ந்துவிடும்...

     பிறகு...

     மனசின் உள்ளே தீக்கங்கு போல் சாம்பலுக்குள் புதைந்து கிடப்பது போல் குமருவைச் சென்று பார்க்க வேண்டும் என்ற பொறி இருக்கிறது. அந்தக் குழந்தைச் சட்டையைப் பத்திரமாகப் பைக்குள் வைத்திருக்கிறான்.

     குழந்தையை மேனியில் ஒட்ட இருக அணைத்து முத்தமிடும் ஆசை அவனுள் அன்று டாக்டரம்மாவின் குழந்தையைப் பார்த்த போது வெறியாக எழும்பியது. அவனுக்கென்று அவனுடைய அணுவின் அணுக்களால் ஆன பூந்தளிர்.

     சந்தைப் பக்கம் கடைகள் எல்லாம் போர்த்துக் கொண்டு முடங்கிக் கிடக்கின்றன. டீக்கடைப் பக்கம் மட்டும் கூலிக்கும்பல் சாக்கும் கூடைகளுமாக அன்றாட இயக்கத்தை இழுத்துப் பிடிக்க நிற்கிறது...

     “முருகேசண்ணா? ஒங்கள இப்ப, ஓராளு தேடிட்டுப் போனாரு, ஒத்தையிலேந்து காயிதம் குடுத்தனுப் பிச்சிருக்காங்களாம். உங்களை வாரச் சொல்லி?”

     இந்தச் செய்தி சொல்லுபவன் மாரியண்ணன். அவர்களுடைய குடியிருப்பில் தான் இருக்கிறான். கோழி வளர்த்து முட்டை வியாபாரம் செய்கிறான்.

     முருகேசுவுக்குத் துணுக்கென்றிருக்கிறது. அந்தப் பெண்ணைக் கஷ்டப்படுத்தியிருப்பார்களோ? ஜான் என்ற அந்தப் பொடியன்... ஏடாகூடமாக விளையாடியிருப்பானோ?... இல்லை... தனம்... தனம்?

     தனத்தைப் பற்றி முன்பு கவலை இருந்தது. ஆனால் டாக்டரம்மாவின் தங்கை வீட்டில், புருசன் பெஞ்சாதி இருவரும் வேலைக்குச் சென்றனர். குழந்தைகள் இருவரும் பெரியவர்கள். பள்ளிக்கூடம் செல்பவர்கள். அவர்களைக் கவனிப்பது, அடுத்து பகல்சோறு கொண்டு கொடுப்பது, மாலையில் கூட்டி வருவது என்ற மாதிரியான வேலைகள். சம்பளமும் அறுபது ரூபாய். தனம் சிரித்துக் கொண்டு, “நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று தான் சொன்னாள்... என்ன ஆயிற்று? மாரியண்ணனிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து சேதி சொல்கிறான். “அம்மா, டாக்டரம்மா சீட்டுக் குடுத்து, அனுப்பிச்சிருக்காவ. சந்தக்கடயில மாரியண்ணஞ் சொன்னா, பதனமா இருந்துக்கம்மா, போயி என்னான்னு விசாரிச்சுட்டு வார. செரிப்படலன்னா, கூட்டியாந்துடறே. பாட்டியத் துணைக்கு வந்திருக்கச் சொல்லு. ராவிக்குத் திரும்பிடுவ...”

     இவன் உதகை சென்றிறங்கி டாக்டரம்மாவின் வீட்டு மேடேறுகையில் மழையும் சாரலும் விட்டிருக்கிறது. உச்சிப் பொழுது கடக்கும் நேரம். எல்லாரும் சாப்பாட்டுக்கு வரும் நேரம்.

     கண்ணாடிக் கதவு மூடியிருக்கிறது. முருகேசு தன் பிளாஸ்டிக் கொங்காணியை எடுத்து உதறிக் கொண்டு மணிப்பித்தானை அழுத்துகிறான்.

     ...சரோ... சரோசாதான் வந்து கதவைத் திறக்கிறது. சிவப்பும் பச்சையுமாகப் பின்னப்பட்ட புதிய உல்லன் சட்டை அணிந்து கொண்டிருக்கிறாள். கை முழங்கைக்கு மேலே நின்று கழுத்து வரை மூடிப் பாதுகாப்பாக இருக்கிறது. எண்ணெய் தொட்டுத் தலை சீவிப் பின்னலைக் கட்டிக் கொண்டு, புதிய கோலத்தில், மென்மையாகச் சிரிப்பதில் இருந்து பிரச்னை சரோசாவைப் பற்றியதில்லை என்று ஆறுதல் தோன்றுகிறது.

     அப்போதுதான், கையில் சூடுபட்டுக் கன்றிப் பொறுக்கு விடக் காய்ந்திருப்பதையும் அதில் ஏதோ களிம்பு போல் தடவியிருப்பதையும் கவனிக்கிறான். துணுக்குறுகிறான்.

     “உள்ளவாருங்க தாத்தா, குளுரு காத்து வெளிய...”

     “கையில என்னம்மா?...”

     “ஒண்ணில்ல. ஆவி அடிச்சிரிச்சி...” வழக்கமான சிரிப்பு மாறவில்லை.

     “ஏம்மா, அடுப்பாண்ட நீதா வேலை செய்யிறியா? பொடியன் இருந்தானே?”

     “...அவனப் போகச் சொல்லிட்டா. அவ மோசமா நடந்திட்டா. டாக்டரம்மா, நா வந்த மறுநாளே தெரத்திட்டாங்க. சமயல் நாந்தா செய்யிற...”

     “புள்ளையும் நீயே பாக்குறியா?”

     “ஆமா இப்ப எந்திரிச்சிடுவா...”

     “ஒண்ணத் திரும்பக் கூட்டிப் போயிடட்டுமா?”

     “வாணாந்தாத்தா; இங்க ஒண்ணுமே கஷ்டமில்ல. டாக்டரம்மா ரொம்ப நெல்லவங்க. துணியெல்லாம் வாங்கிக் குடுத்திருக்காங்க. நெதம் சாயங்காலம் அவங்க காரில புள்ளயும் என்னயும் வச்சி கூட்டிட்டுப் போவாங்க. எனக்குன்னு கட்டில், நாரு மெத்த அல்லாம் இருக்கு... அடுப்பு எல்லாம் வெறவு புகை ஒண்ணில்ல. காஸ் ஹீட்டருதா. அம்மா எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்திருக்கா. அம்மாவுக்கு காரு துடைச்சி சிலப்ப ஒட்ட, வீட்டு வேலை எதானும் செய்ய, கடை கண்ணிப் போக உங்களைப் போலவே ஒரு பெரியவருதா இருக்காரு. நெல்லவரு. இப்ப ஆசுபத்திரிக்குப் போயிருக்காரு...”

     கேட்கக் குளிர்ச்சியாக இருக்கிறது.

     “பின்ன, அம்மா காயிதம் குடுத்து அனுப்பிச்சாவன்னு, சந்தப்பேட்டயில மாரியண்ணன் சொன்னான்... தனம்... தனத்தப் பாப்பியா நீ?...” அவள் இதழ்களில் குறுஞ்சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

     “தாத்தா தனம் சமஞ்சிடிச்சி. அந்த... அவுங்களும் நெல்லவங்கதா. ஆனா, கிளீனா இல்லன்னா கோவிச்சிப்பாங்க போல. அங்க அவுங்களே தா சமயல் பண்ணுறாங்க. மேவேலை எதுனாலும் செய்யணும். அவுங்க காலமபோனா, ராவிக்குத்தா வருவா. அய்யாவும் அங்க இங்க டூர் போயிடுவாராம். முக்கியமா புள்ளங்களதா பாத்துக்கிடணும். சமஞ்சிட்டா, வூட்ட ஆரும் இல்ல, அளுதிட்டே இருந்திச்சாம். பக்கத்திலேந்து, ஒரு அம்மாதா பாவம், அழுவாதடீன்னு சொல்லிட்டு இங்க வந்து சொல்லி அனுப்பினாங்க. டாக்டரம்மா வூட்ட இல்லாம நானும் எப்பிடிப் போவ? ஆனா, சாங்காலம் அவங்க வந்ததும் காரப் போட்டுட்டுப் போனம். அந்தப் புள்ளங்க யோகேசு, ரமேசு, ரெண்டும் சுட்டிப் பசங்க. எல்லாம் இங்கியே அஞ்சு நாளக்கி வச்சிட்டிருந்தாங்க...”

     முருகேசுவுக்கு இப்படி... நினைத்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லையே?

     பேச்செழாமல் நிற்கிறான்.

     ஒரு பெண் குழந்தைக்குத் தாயும் சகோதரியும் மற்றும் ஆதரவான உறவுத் தொடர்புகளும் இல்லாத நிலையில் முற்றிலும் வேறுபட்ட ஓர் இடத்தில், இந்த நிகழ்ச்சி நடந்து விடக் கூடும் என்ற அறிவு இல்லாதவனாக, வேலை வந்ததும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டானே?

     “அப்ப, நாம் போயி அத்தப் பாத்திட்டு வாரம்மா!...”

     “இருங்க தாத்தா, குளுரில வந்திருக்கீங்க, தேத் தண்ணி தார, குடிச்சிட்டுப் போங்க...”

     அவன் கூசுகிறான். உள்ளே அவனுக்கு நிற்பதற்கே அந்நியமாகத் தோன்றுகிறது.

     “இருக்கட்டும்மா, போயிட்டு வந்து டாக்டரம்மாளப் பாத்திட்டுத்தா போவ...”

     ‘ஸிலோன்லந்து வந்ததுங்கதா நெறயக் குமிஞ்சிருக்கு. ஆனா, உள்ள வேலைக்கு விடப் பயமா இருக்கு’ என்ற சொல்லை, அவனே கேள்விப்பட்டிருக்கிறான்.

     ‘டாக்டரம்மா இல்லாத நேரத்தில் தேத்தண்ணீர் குடிச்சிட்டு போகலாம்’ என்று இந்தப் பெண் சொல்வது கூடத் தப்பாகப் போய்விடலாம்.

     கீழிறங்கி, சாலை கடந்து, மறுபுறத்து மலைமீது ஏறி தனம் வேலை செய்யும் வீடு இருக்கும் இடத்தை நினைவு வைத்துக் கொண்டு போகிறான். செருப்பு சறுக்கும் என்று அணிந்து வரவில்லை. கால்கள் சில்லிட்டுப் போகின்றன.

     ஊற்றும் மழையில் முகத்திலும் கையிலும் தெரியாமலே வந்து கவ்வும் அட்டைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு வேலை செய்து பழகிய உடல், இன்று வாழ்க்கையின் மோதல்களிலும் நசுக்கல்களிலும் தளர்ந்து விட்டது. பசேலென்று புல்லாடை போர்த்த மலையில் முட்டு முட்டாக உயர உயரமாகச் சிமிட்டிச் சுவர் கட்டிடங்கள் வண்ணங்களிழந்து அழுது வழிகின்றன. அந்த வீட்டுக்கு முன் அன்று அவர்கள் வந்த போது மஞ்சட் பூங்கொத்து உள்ள கொடி இருந்தது. முன் வாசலில் பூஞ்சட்டிகள் இருந்தன. இஸ்தோப்பு போல் - அரைச்சுவர்...

     அவன் பார்த்துக் கொண்டே வந்து கண்டு பிடித்து நிற்கிறான்.

     வாயிலில் சங்கிலியில் நாய் கட்டி இருக்கிறது. அது இவனைச் சுற்றுக் கட்டை வேலியருகில் பார்த்ததுமே எம்பி எம்பிக் குலைக்கிறது.

     சின்னப் பையன் ஓடி வருகிறான் வாசலுக்கு. தலையில் குல்லாய், உடல் முழுதும் வுல்லன் நூல் உடுப்பு...

     “ரமேசு...! வெளில போகக்கூடாது...!”

     சொல்லிக் கொண்டு... தனம்... தனம் தான் வருகிறது.

     “டைகர்! சும்மா இரு!...” நாய்ச் சங்கிலியை அவிழ்த்துக் கொண்டு உள்ளே போகிறாள். இவனைத் தாழ்ந்த கண்களால் பார்த்து விட்டுத்தான் ஒன்றும் பேசாத கோபத்துடன் போகிறாள். ஒரு பூப்போட்ட சேலையைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். முகம் பரந்து, இந்த ஒன்றரை மாத வளர்ச்சியில் வேற்றுமைப்பட்டு விட்டதை அறிவுறுத்துகிறது.

     “என்னம்மா, தனம்!” என்று கேட்க நினைத்தவன் இறுகிப் போகிறான்.

     இப்படி ஒரு... நிலைமை, பத்து நூறு ரூபாய் செலவு செய்யும்படியான சடங்கு செய்ய வேண்டிய தருணம் என்ற அறிவே இல்லாமல் பஸ் சார்ச்சுக்கு மட்டும் கணக்குப் போட்டுக் கொண்டு, இரண்டு கடலை மிட்டாயையும், ஒரு பொரிப் பொட்டலத்தையும் மட்டும் வாங்கி வந்தானே?

     உள்ளே நாய் குரைப்பது நிற்கவில்லை. “தே, சும்மா இரு!” என்று அவள் அதட்டுகிறாள். ஆனால் வெளியே வரவில்லை. ரமேசு வாசற்படியிலேயே நின்று அவனைப் பார்க்கிறது.

     அவனைப் பிச்சைக்காரனாகக் கருதி விரட்டவும் இல்லை. ஒரு வியப்புடன் பார்க்கிறது.

     இதற்குள், அந்தக் குடியிருப்பின் அடுத்த பகுதியில் இருந்து சற்றே வயது முதிர்ந்த பெண்மணி வருகிறாள்.

     “ரமேசு? நேத்தெல்லாம் காய்ச்சல்னா உங்கம்மா?... நாய் குலைக்கிது. தனம் எங்க போனா?... தனம் இல்லியா?...”

     அவனைப் பார்த்து விடுகிறாள். “யாரப்பா...?”

     “தனத்தப் பாத்திட்டுப் போக வந்தம்மா. என்னப் பாத்திட்டு உள்ளாற போயிட்டது; டாக்டரம்மா சீட்டு அனுப்பிச்சாங்க...”

     “ஓ, நீங்க தா தாத்தாவா?... பாவம், வயிசுக்கு வந்திடிச்சி... சின்ன பொண்ணு. அம்மா அப்பால்லாம் ஸ்லோன்ல உசிரோட எரிச்சிட்டாங்களாமே? என்ன கொடுமை? பாவம், பொலபொலன்னு கண்ணீர் விட்டு அழும், எந்திரிக்காம சாப்பிடாம, ரொம்பக் கஷ்டமாப் போச்சு. இங்க, மாதுரிக்கு காலை ட்யூட்டி, இல்லாட்டா ராத்திரி பத்து மணிக்கு மேல வராப்பில ட்யூட்டி. பிள்ளைங்க ரெண்டும் ரெண்டுங் கெட்டான். துரு துரு விஷமம்... இப்படிப் பாவமா கொலைபட்டினி கிடக்குதேன்னு, இவ தங்கச்சியைக் கூட்டிண்டு வந்து பேசச் சொன்னா, கேக்கல. பிறகு, டாக்டர் மாலினி தான் வந்து அதட்டி எல்லாத்தையும் அங்க கொண்டு ஒரு வாரம் வச்சிட்டிருந்தா. இப்பதா தேவல...”

     இவன் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்கிறான்.

     “அம்மா, தனம்...?”

     உள்ளே நொறுங்கிய சிதிலமாகக் குரல் வருகிறது.

     உறவுகள், மரபுகள், எல்லாம் கடும்புயலில் வேரோடு தலைசாய, இந்தப் பெண்ணினால், அந்த அதிர்விலிருந்து மீள முடியவில்லை.

     அந்தம்மா உள்ளே சென்று, “போம்மா, உன்னப் பாக்கணும்னுதானே வந்திருக்காரு?... பாவம்...” என்று ஆதரவாக வற்புறுத்தியும் அவள் அசையவில்லை.

     “எனக்கு யாரையும் பார்க்க வேணாங்க. இங்க யாரும் எங்கக்கு ஒற முறையே இல்ல...”

     அவள் சொன்னது இவன் செவிகளில் ஈயம் காய்ச்சி ஊற்றினாற் போல் பாய்கிறது. அந்தம்மாள் வருகிறாள். “வேணான்னா வேணாம். இருக்கட்டும் எங்கியானும் நல்லா இருக்கட்டும். அது சொல்றதில நாயம் இருக்கு. எங்ககாலக் கொடும. நா வாரம்மா... அவங்க எசமானி அம்மாட்ட சொல்லுங்க. முருகன் ஒரு கொறயும் வைக்கமாட்டா!...”

     அவன் போன வழியிலேயே திரும்பி வருகிறான்.

     டாக்டரம்மா வந்திருக்கிறாள். அவனைப் பார்க்கவே காத்திருக்கிறாள் போலிருக்கிறது.

     “என்னப்பா? தனத்தப் பாத்தீங்களா?... நா ஸ்லோனுக்குப் போயிடறேன். எனக்கு இந்த ஊரு புடிக்கல, இந்தியா புடிக்கலன்னு அழுதிச்சி. அதா உங்கக்கு சொல்லி அனுப்பினேன். சமாதானமா இருக்கா...”

     முருகேசு தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறான்.

     “என்னம்மா செய்யிறது? கூட வாரியா கூட்டிட்டுப் போறேன்னே. பேசவேயில்ல. பொறந்து வளந்து ஆயியப்பன்னு இருந்த பூமி அல்லாத்தையும் பறிச்சிட்டுத் தூக்கி எறிஞ்சிரிச்சி. காலக் கொடும... என்னமோ நீங்க அன்பா ஆதரவா இருக்கிறீங்க. முருகன் நெல்லா வைப்பான். அதான் வேண்டிக்கிறேன்...”

     “நீங்க கவலைப்படாதீங்க. சில பிள்ளைங்க, இந்த மாதிரி சமயத்தில மனசு கஷ்டப்படுறது உண்டுதா. நா அவகிட்ட லெட்டர் எழுதித்தா, உங்க ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு சமாதானமாச் சொன்னேன். வேலை எல்லாம் நல்லாப் பாக்குறா. குழந்தைகள் ரெண்டும் தனம் தனம்னு உயிராயிருக்கு... இங்க வச்சிருந்தேன், ஒரு வாரம்... பையனுக்கு ஸ்கூல் துறந்திட்டாங்க. அதா அனுப்பினேன்...”

     அவனை அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லிவிட்டு, அவள் போகிறாள்.

     “முருகா! இவங்களை நல்லபடியா வச்சிரு?”

     பஸ் பிடித்து முருகேசு ஊர் திரும்புகையில் இருட்டி விடுகிறது.

     வீட்டில் பச்சை வேலு வந்திருக்கிறான். வெங்காய வடை மணம் அந்த மழைக் கூதலுக்கு இதமாக மூக்கைப் பிடிக்கிறது. மீன் கொண்டு வந்திருக்கிறான். சுகந்தி, அம்மியருகில் சிம்ணியை வைத்துக் கொண்டு இழைய இழைய மசாலைப் பொருள் அறைக்கிறாள்.

     உள்ளே கட்டில் ஒன்று தான் சற்றே ஈரம் பொசியாத இடமாக இருக்கிறது. அதில் ஒரு புதிய வாயல் சேலையும் தைத்த ஜாக்கெட்டும் வைத்திருக்கிறது.

     “ஏன்ல, எப்ப வந்த நீ...?”

     முருகேசுவுக்கு ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடியதாகத் தோன்றினாலும், அத்து மீறல் என்ற சந்தர்ப்பத்துக்கு ஆளாகக் கூடாதே என்ற அச்சமும் இருக்கிறது. அதனால் தான் குரலில் மரியாதை தோய்ந்த சரளம் வரவில்லை.

     “...இப்பதா கொஞ்ச நேரமின்ன வந்த, மாமு...”

     மீசையைப் பல்லில் இழுத்துக் கடித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.

     “...சீல... ஏது...?”

     “நாதா வாங்கியாந்தே, மாமு. கோயமுத்தூருல வாங்கின. செவுந்திக்குன்னு...”

     “யாருல செவுந்தி?”

     “...ஓ... எனக்கு செவுந்தின்னுதா வருது. சுகந்தின்னு வாரதில்ல...” என்று சிரிக்கிறான்.

     மசாலையை வழித்துவிட்டு இதற்குள் சுகந்தி தேத் தண்ணீரும் வடையும் கொண்டு வந்து வைக்கிறாள். முகம் பளிச் சென்று சிரிக்கிறது. நெற்றியில் பெரிய ஒட்டுப் பொட்டு.

     “என்ன தாத்தா? சொல்லி அனுப்பிச்சாங்கன்னு போனில, ஒண்ணுமே சேதி சொல்ல இல்ல? சரோவும் தனமும் நல்லாருக்காங்களா?”

     “ம்... தனம் வயிசுக்கு வந்திடிச்சு.”

     இருள் படுதாவைத் தொங்க விட்டாற் போல் அமைதி படுகிறது.

     சிறிது நேரம் சென்ற பின் பச்சைதான் கேட்கிறான். “டாக்டரம்மா நல்லபடியா வச்சிட்டிருக்காங்க இல்ல?”

     “நல்லா தா இருக்கா. பங்களா போல வூடு. அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல...”

     “எலே, ஒங்கிட்டக் கொஞ்சம் பேசணும்...”

     “சொல்லுங்க மாமா...”

     “வெளியே வா...”

     “கூதலு அடிக்கிதே மாமா, என்னா ரகசியம், சுகந்திக்குத் தெரியாம?”

     அவன் சுகந்தியை நிமிர்ந்து பார்க்கிறான்.

     “ரகசியம் இல்லேடா. ஆவணி பிறக்கப் போவுது. ஒத்தயில முருகன் மலை இருக்குன்னா. கூட்டிட்டுப் போயி, ஒரு தாலியக் கட்டிபோடுன்னு சொல்ல வந்தே. கவுறு போட்டுட்டன்னா, நீ சீல வாங்கிட்டு வந்தாலும் ஜாக்கெட் வாங்கிட்டு வந்தாலும், வூட்ட வந்து உரிமையோட பேசலாம். ஒரு பேச்சுக்கு எடமிருக்காது பாரு?...”

     “என்ன மாமா, சீல வாங்கிட்டு வந்தது தப்பா?”

     “தப்புன்னா சொன்னே? அத வச்சித்தா சொல்ற. அதுக்கும் இஷ்டம். எனக்கும் பொறுப்பு விட்டுடும். தாலி என்னமோ இருக்கு. நான் லோனெடுத்து ஊரு கூட்டிக் கலியாணம்னு யோசன பண்ணிட்டிருந்தே. அததுக்குக் காலம் நேரம்னு வந்திட்டா, செஞ்சிரணுமில்ல?...”

     “இருக்கட்டும் மாமு, பயப்படாதீங்க, நா சுகந்தியக் கட்டிக்கிறேன். லோனு வரட்டுமே?”

     “லோனு வாரப்ப வரட்டும். இப்ப அட்டியல, அஞ்சு நூறுக்குத்தான், வச்சிருக்க? கூட ஒரு அஞ்சு நூறு வாங்கிக் கண்ணாலத்த முடிச்சிடறது. நேரம் காலம் வாரப்ப அததைச் செஞ்சிரணும்...”

     அவன் பதில் பேசவில்லை. சம்மதம் என்ற மன ஆறுதல் கொள்கிறான்.

     மீன் குழம்பும் சுடச்சுடச் சோறும் உண்டு படுக்கிறார்கள்.

     தனக்கு யாரும் இல்லாத நிலையில் தனம் மனம் நொந்து சலித்து ஒடிந்து போக இடம் வைத்தாற்போல், இந்த சுகந்தியும் ஏடாகூடமாக நடக்க இடம் வைக்கக் கூடாது என்று உறுதி செய்து கொள்கிறான்.

     “ஏன்ல, அந்தச் சீட்டு எடுத்துத்தார. அதிலியே இன்னொரு அஞ்சு நூறு மேல எடுத்திட்டு வந்திரு. பின்னால நீயே கட்டி உருப்படிய எடுத்திக்கிடலாம்... அது சுகந்திக்குத்தா...”

     “இருக்கட்டும் மாமா, நா நாளைக்கு வந்து அத்த வாங்கித்தார... நான் ஆவணி பாஞ்சு தேதிக்கு வாரேன்... அப்ப... வாங்கிட்டு வார. கலியாணத்துக்கு முன்ன எடுத்தாப் பத்தாதா? கையில இருந்தா செலவழிஞ்சி போயிடும்...” என்று சொல்லி விட்டுப் போகிறான்.

     பத்து நாட்கள் கழித்து ஆவணி பிறந்த பிறகு, அவன் முருகேசு வேலைக்குப் போயிருந்த பொழுதில், வந்து போனதாக சுகந்தி தெரிவிக்கிறாள். வழக்கம் போல் மீன் வாங்கி வந்திருக்கிறான். காரா பூந்தி, பகோடா போன்ற நொறுக்குத் தீனி வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இவன் கண்களில் தட்டுப்படவில்லை.

     “அவெ என்ன, எப்ப வாரேன்னு சொன்னா?”

     “சொன்னாரு தாத்தா. காலம நீங்க சோலிக்குப் போகு முன்ன வாரேன், பேசுறேன்னு சொன்னாரு...”

     “சரி, நா போனப்புறம் வந்தா, நா மண்ணுகட்டிட்டிருக்கிறேன் தோட்டத்தில, அங்க வாரச் சொல்லு! தனிச்சிருக்கிற பொம்பிளப் புள்ளட்ட வந்து பேசுறதும் போறதும் சரியில்ல...”

     ஆனால் அவன் வரவில்லை. சுகந்தியோ, வயர் பை போடுகிறாள், வெளியே செல்கிறாள், அக்கம் பக்கம் பேசுகிறாள்! இப்போது புதிய சிநேகமாக, அந்தக் குடியிருப்பிலேயே, பார்வதி என்ற பெண் பிள்ளைத் தொடர்பு வருகிறது. பார்வதியின் வீட்டில் அவளும் அவள் தகப்பனான ஒரு குடிகாரனும், வளர்ந்த இரு பெண்களும் தான் இருக்கிறார்கள். புருஷன் எங்கோ கேரளத்து வய நாட்டில் வேலை செய்வதாகச் சொல்கிறார்கள். மொத்தக் குடியிருப்பிலும், அவளும் பெண்களும் நைலக்ஸ், வுலிவுலி சேலைகள் அணிவதும், சினிமாவுக்குப் போவதுமாக, ஆடம்பரமாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும், நாற்காலி, ‘கசட்’ வைக்கும் டு இன் ஒன் போன்ற சாமான்கள் இருக்கின்றன.

     “அந்தப் பொம்பிள, ஒரு மாதிரி... எங்கோ எப்பிடியோ தொழில் நடத்துபவர்கள்” என்று மாரிமுத்து சந்தைக் கடையில் விவரம் சொல்கிறான்.

     ஆவனி தேய்ந்து புரட்டாசியும் பிறந்து நாட்கள் நழுவுகின்றன.

     மலை முழுதும் பூரித்துக் குலுங்குகிறது. வெயிலோன் புதிய உற்சாகத்துடன் இதமாகப் பவனி வருகிறான்.

     அன்று வேலை முடிந்து வருகையில், பார்வதியின் மகள் இருத்தி இவளுடன் இருக்கிறாள். ஏதோ கதைப் புத்தகமோ வேறு புத்தகமோ வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

     கண்கள் அகல மை தீட்டிக் கொண்டு, இரட்டைப் பின்னல் ரிப்பன் முடிச்சுடன், மெல்லிய தாவணியில் பொங்கும் இளமையைக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு...

     “வணக்கமுங்க” என்று சிரிக்கிறாள் இவனைக் கண்டதும்.

     “யார்மா?”

     “இவ... சகுந்தலா, தாத்தா. என்ன சினிமாக்குக் கூப்பிடுறா. டிக்கெட், பாஸ் இருக்குதாம்...”

     “என்னிக்கு?”

     “இன்னிக்கு தா, ரெண்டாம் ஆட்டம்... இவங்கண்ணன் கூட்டிக் கொண்டு விட்டுடுவா. இவங்கம்மா, தங்கச்சி எல்லாம் போறாங்க...”

     “தபாரும்மா, ரா ஆட்டத்துக் கெல்லாம் போகக் கூடாது... அவ்வளவுதா நாஞ் சொல்லுவே...”

     “ஏம் போகக் கூடாது! காசொண்ணும் செலவில்ல... பாஸு இருக்கு...”

     “சுகந்தி, காசுக்காகச் சொல்லல. காசு தொலஞ்சாக் கூட சம்பாதிக்கலாம். நல்ல பேரு முக்கியம்.”

     அவன் தடுத்து விட்டான்.

     சுகந்தி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு போகிறாள்.