உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
12 “இதுவா வங்கில குடுத்தாங்க? பெரியவரே, பாரும், வேற இருக்கும். இது ரசீதில்ல...?” முருகேசு விதிர் விதிர்க்க விழிக்கிறான். “இது வங்கி ரசீதில்ல? இதுதா அந்தப்பய குடுத்தான்? பத்திரமாக அந்தப் பைக்குள் வைத்துப் பெட்டிக்குள் தான் வைத்திருந்தான்...!” “இது சும்மா எதோ போஸ்டாபீசு ரசீது, முத்திரையிருக்குப் பாரும்?” முருகேசுவுக்கு அன்று தோட்டத்தில் வேலையில்லை. பச்சைவேலு ஊரில் இருக்கிறான். ஆனால் இவன் கண்களில் தென்படாமல், சுகந்தியுடன் குலாவி விட்டுப் போகிறான் என்பது புரிந்து போகிறது. இவன் சொன்னாலும் கேட்காமல் சினிமாவுக்குப் போய் வருகிறாள். கையில் கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு, பையனை இழுத்துச் சென்று அவளுக்கு ஒரு முடி போட்டு விட வேண்டும்... இந்தத் தீர்மானத்துடன் அவன் தாயகம் திரும்புவோர் அலுவலகத்தில் குந்தியிருக்கும் பழனிவேலுவிடம் அந்த ரசீதைக் கொடுத்து மேலே ஒரு ஐநூறு பணம் எடுக்க வேண்டும் என்று கோருகிறான். அவன் இந்த ரசீது வங்கி ரசீதே இல்லை, என்று நம்பிக்கை வேரைச் சரக்கென்று வெட்டிப் போட்டு விட்டானே? அலையக் குலைய வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறக்கிறான். அதில் சுகந்தியின் சீலைகள் ஜாக்கெட் தவிர, தனது சாமான் என்று வைத்திருக்கும் பையை எடுக்கிறான். பைக்குள்... குமரு விட்டுப் போன அந்தக் குழந்தை ஃபிராக்... பிளாஸ்டிக் உறையில் போட்டோ படம், மற்றும் அத்தாட்சிச் சான்றுகள், பாஸ்போர்ட் - வேறு காகிதமே இல்லையே? இவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, பச்சை வேலு கொண்டு வந்து கொடுத்த ரசீது இதுதான்... மறுபடியும் ஓடுகிறான், பையையே தூக்கிக் கொண்டு. பழனி எல்லாவற்றையும் பார்த்து விட்டு மீண்டும் பையில் போடுகிறான். “இது வங்கி ரசீது இல்ல. எத்தனை ரூபா பெருமான உருப்படி, யாரிட்ட குடுத்தீங்க?...” முருகேசு அழாக்குறையாகச் சொல்கிறான். “யாரு, பச்ச வேலு?...” “வரிவரியா, துண்டு தலையில கட்டிட்டு, லொரி ஓட்டுறா... அவனும் இலங்கைப் பய்யன்தா, ஒறவுகாரங்கதா, நாங்க இங்க வந்து எறங்கினப்ப, அவந்தா எல்லா ஒத்தாசையும் பண்ணினா, எங்க புள்ளக்கி, மொறக்கார...” “அதென்னமோ, ஆனா, இது வங்கி ரசீது இல்ல...” ஒருக்க, அவனே மறந்து போயி அத்த வச்சிட்டு அவனே ஞாபக மறதியில இதைக் குடுத்திட்டானா?... வீட்டுக்குச் சென்றதும் சுகந்தியிடம் கேட்கிறான். “அம்மாளம், இது என்ன ரசீது... பாத்து சொல்லு?” வெங்காயக் கையைத் துடைத்துக் கொண்டு வந்து பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதுவும் புரியத்தானில்லை. “இத பாரு, அந்தப்பய மூணு பவன் அட்டியலக் கொண்டிட்டுப் போயி வங்கில வச்சிருக்கேன்னு இத்தக் கொண்டாந்து குடுத்தா. இவம் பேச்ச நம்பி மூவாயிரம் ரூவாய எவங்கிட்டயோ தூக்கிக் குடுத்தேன். எம்புத்தியச் செருப்பாலடிக்கணும், ரோக்கியமான பயன்னு நினச்சா... இப்பிடி ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிருக்கிறா! என் கண்ணில படாம இங்க வந்திட்டுப் போயிட்டிருக்கிறான்?...” அவளுக்கு விருவிரென்று முகத்தில் சூடேறுகிறது. “அதெல்லா ஒண்ணுமில்ல. இப்பிடி ரூவாயக் குடுத்துக் காணாம போயிடிச்சேன்னு நெதம் சொல்றாரு. மதராசி வரயிலும் போயிப் புடிச்சிரலாம்னுதா இன்னமும் சொல்றாரு. அதனால உங்க முகத்தில முழுக்கவே எப்பிடியோ சங்கடப்பட்டுக் கிட்டு இருக்காரு. மைத்தபடி ஒண்ணில்ல. நமக்கு மட்டுமா? ஆயிரக்கணக்கான சனங்களும் குடுத்திருக்கா...” பரிந்து கொண்டு வருகிறாள்; சரிதான். “ஆனால் இந்த ரசீது... இத்த ஏன் ஏமாத்திருக்கிறான்?” “அவுரு ஒண்ணும் ஏமாத்தரவரு இல்ல. நீங்க, சடயம்மா சடயம்மான்னு அல்லாம் ஒண்ணாப் பாவிச்சீங்க. அவங்ககிட்ட எங்கனாலும் போயிடுச்சோ என்னமோ?...” இவனுக்குக் கடுகடுவென்று பேச நா துடிக்கிறது. அழுத்திக் கொள்கிறான். சடயம்மாவின் குடும்பம், நாதியின்றி, காற்றில் பறக்கும் பஞ்சுப் பிசிறுகளைப் போல் தலையில் மூட்டை முடிச்சுக்களுடன், பசிய மலைச்சரிவுகளின் இடையே எங்களுக்கு வாழ்வில்லை என்று நடந்து போன காட்சி நெஞ்சில் சூடு போட்டாற்போல் பதிகிறது. “மேலுக்கு முடியாம மாமி படுத்திருக்காவ. ரொட்டியும் தேத்தண்ணியும் இந்தாரும் மாமு?” என்று சிரித்துக் கொண்டு அந்தச் சிறுமி ரொட்டியும் துவையலும் வைத்த காட்சியை விட, பசி நேரத்தின் அந்த உணவின் ருசி ஈரேழு சன்மத்துக்கும் நினைவிருக்க வேண்டுமே? சுகந்திப் பொண்ணுக்கும் இவனுக்குமுள்ள தொடர்பில் அத்தகைய கசிவே தோன்றவில்லை. இப்போது அது கட்டாந்தரை வெடிப்பாக இருவரையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத இலக்குகளில் விலக்குகிறது. அன்று மாலை வேலை முடிந்து, முருகேசு மெள்ள நடந்து வருகையில், வழக்கம் போல் சாராயக்கடை வாசலில் முகம் புரியாத கும்பல் மொய்த்திருக்கிறது. இவன் கண்கள் சட்டென்று பச்சை வேலுவின் தலைக்கட்டை இனம் கண்டு கொள்கிறது. இடையே புகுந்து சட்டையைப் பற்றி இழுக்கிறான். பளாரென்று கன்னத்தில் விடுகிறான். “அயோக்கியப் பயலே? எங்கலே ரசீது? பொய்யா ஒரு கடிதாசித் துண்டக் குடுத்து ஏமாத்திப்பிட்டுத் தலை மறவாப் பதுங்கறே?...” ஏமாற்றங்கள் இழப்புக்களில் கிளர்ந்தெழும் ஆற்றாமை வெறியனாகவே அவனை ஆட்டுகிறது. சாராயக் கடை வாசலில் கூட்டம் கூடிவிடுகிறது. “ஏ...ய்யா? ஏய்யா போட்டு அடிக்கிற?...என்ன?” “பொய் ரசீதக் குடுத்துப் போட்டு வங்கில குடுத்ததுன்னு ஏமாத்திப் போட்டான்? கயவாளி... ராஸ்கோல்!” பச்சைவேலுவோ, “அடிக்காதீம்; அடிக்காதீம் மாமா...” என்று கைகளினால் தடுத்துக் கொண்டு பரிதாபமான குரலில் அழுகிறான். “நா... ஏமாத்துறவ இல்ல. மானம் மரியாதி உள்ளவ மாமு...” “மானமென்ன மானம்? என்னிக்குப் பெறந்த பூமி, பெறந்த தாய் மண்ண வுட்டு நவுந்தமோ அன்னக்கே அந்த மானம் போயிட்டதுலே, வவுறு எரியிது... எரியுதுலே...” “மாமு, தப்புதா... சத்தம் போடாம வாருங்க, வெவரமாச் சொல்லுற...” “நா என்னல இன்னும் சத்தம் போடாம வார, நீ சொல்ல? மாசக்கணக்கா, நீ எங்கண்ணில படாம நழுவிட்டிருக்கிற! ஏண்டா நழுவணும், நேர்மயா இருக்கிறவனா இருந்தா? ஏங்கிட்ட உருப்படிய வாங்கி அடமானம் வச்சிட்டு ரூபா கொண்டாந்து தந்த. ரசீதுன்னு ஒண்ணும் குடுத்த. இப்ப பாத்தா அது என்னமோ காயிதம்...” “மாமு... ஒங்கக்கு இந்த வயிசில கையில இவ்வளவு பெலமிருக்கி!” “இருக்குண்டா... கயவாளி ராஸ்கோல், என்ன நீ ஏமாத்துற? ஒம் பேச்சக் கேட்டு, மூவாயிரத்தக் கொண்டு எவங்கிட்டியோ தூக்கிக் குடுத்து அம்புட்டும் போச்சி...” “மாமா மன்னிச்சிக்குங்க... அது நீங்க மட்டுமில்ல. எல்லாரும் குடுத்திருக்கா. ...இப்ப, நா வந்து, வங்கில கூடுதல் வட்டி யாவும்னு, தெரிஞ்ச எடத்துல குடுத்துப் பணம் வாங்கிட்டு வந்தே. அவவும் ஸ்லோன் காரவுகதா, உருப்படி நம்பகமா இருக்கு. பணம் கெட்டிட்டா, வந்திடும்...” “பச்சவேலு, எனக்குள்ளாற இப்ப ஒரு காளவாயி எரியிது. அடுப்பாளா இருந்திருக்கிற. அப்பக் கூட நெருப்பு உறச்சதில்ல. இப்ப வேவுது. இத்தவுட, அன்னைக்கு நாங்க இந்த மண்ணு பச்சைன்னு வந்து எறங்கினப்ப, அது இல்லேன்னு அப்பமே உறச்சிருக்கும், நீ வந்து மாமுன்னு ஒறவு கொண்டாடிட்டு வர இல்லேன்னா ஒரேயடியா எங்கனாலும் போயிக் கசத்துல வுழுந்திருப்போம். ஊரு பேரு தெரிஞ்சி, நம்பிக்கை குடுத்து, துரோவம் பண்ணிருக்கிற நீ! ஏன்ல...?” “மாமா, துரோவம் இல்ல சத்தியமா...” “சத்தியத்தை எச்சில்ல பெரட்டாத, உருப்படிய இப்ப நீ எங்க வச்சிருக்கிறன்னு சொல்லணும், காட்டணும்...” இவர்கள் சண்டை அங்கே பழனி வேலுவைத் தள்ளி வருகிறது. தாயகம் திரும்புவோர் சங்கத்தில் இது வங்கி ரசீதில்லை, என்று சொன்ன அதே படித்த ஆள். “இவந்தானா, பெரியவரே?...” “ஆமாம் தம்பி...” “என்னாடா பச்சை? என்னா விசயம்?” பச்சை அழுது கொண்டே சொல்கிறான். “அண்ணே, நா நிசமா ஏமாத்தணும்னு செய்ய இல்ல... உருப்படி இ.எஸ்.எம். அண்ணாச்சி கிட்டதா வச்சிட்டே. எழுநூத்தம்பது வாங்கின. அடுத்த மாசம் குடுத்திடறே...” “அஞ்சு நூறு எனக்குக் குடுத்தான். இப்ப ஏழுநூறுன்னு சொல்றா. எது நிசமோ, முருகனுக்குத்தா வெளிச்சம்!” “இதபாருங்க, இப்ப நடு வீதில அடிச்சிட்டா, எவனாலும் பொலீசைக் கூட்டிட்டு வருவான். ஸ்லோன் ஆளுங்களே மிச்சம் குடிச்சிட்டுக் குழப்பம் பண்றானுவன்னு கூட்டிப் போய் அடிப்பான்!...” இவர்களை விலக்கி அவன் கூட்டிப் போகிறான். “உங்க உருப்படி என்ன ஆச்சின்னு நான் பார்த்துச் சொல்றே. கவலப்படாம போங்க...! இவந்தான?...” வீட்டுக்கு ஓர் ஆறுதலுடன் வருகிறான். வீட்டில் சுகந்தி இல்லை. பார்வதி வீட்டாருடன் சினிமாவுக்குப் போயிருக்கிறாள். இனி பத்தடித்த பின் இருளிலும் குளிரிலும் வருவாள்... கிழவி சாவியைக் கொடுத்து விட்டு சில பல கொச்சைகளால் மொத்தமாகத் திட்டிக் காரி உமிழ்கிறாள். இவன் கைப்பட்டுப் பூமித்தாய் வஞ்சனை செய்ததே இல்லை. கிழங்குத் தோட்டம், பொங்கிப் பூரிக்க ஒரே வரிசையாகப் பச்சை விரிந்திருக்கிறது. மண் கட்டி, கிளைத்துவிடும் வேரில் கிழங்குகளுக்கு ஊட்டமாக அணைத்துக் கொடுக்கிறான். புண்ணான இதயத்துக்கு, இந்த பூமிக் கொஞ்சல் தான் இதமாக இருக்கிறது. தேயிலைப் பச்சையைக் காட்டிலும் கிழங்குப் பச்சை பசி அவிக்கும் பச்சை. எத்தனை குவித்தாலும் தேயிலையைத் தின்று பசியாற முடியாது. அந்த மண் விரட்டி விட்டது. இது... இந்த மண்ணில், வீட்டுக்கடன் மூவாயிரம் வந்ததும், ஒரு குடிசை போட்டுக் கொண்டு, ...சுகந்தி கலியாணத்தை முடித்து விட்டு... அவ்வளவுதானா? அவ்வளவுதானா? இல்லை... குமருவை ஒரு முறை பார்க்க வேணும். அவன் குழந்தை மதறாசில் இருக்கிறது. அதை மார்போடு தழுவிக் கொண்டு, அது தாத்தா என்று தேன் பிலிற்றுவதைச் செவிமடுத்து... “உங்க பாட்டி, பூட்டி பெத்த மண்ணை உதறிட்டுப் போனா; அதன் பலன், அந்தப் பாவம், அவ பரம்பரையே அல்லாடுது. தாய் மடியை உதாசீனம் செய்யலாமா? தாய் தகப்பன்கிட்ட நாயம் கிடைக்கலேன்னா உரிமையோட சண்ட போடலாம், போராடலாம், அதுக்காவ விட்டுப் போட்டுப் போகலாமா? தாயே குடுக்காதத, மத்தவ குடுப்பாளான்னு நினைக்கணும்...” வார்த்தைகள் முண முணப்பாக உயிர்க்கின்றன. இடையில் நான்கு மாசக் குழந்தையைச் சுமந்து கொண்டு புருசனுடனும் கங்காணியுடனும் அநுராதபுரக் காடுகளில் எறும்புக் கும்பல் போல் சென்ற கும்பலில் ஒருத்தியான தாயையும் தந்தையையும் இன்று நொந்து கொள்கிறான். கட்டின புருசனும், கைக்குழந்தையும் வழியிலேயே மரித்த பின், வேறு ஒருவனைக் கட்டி, அங்கே குடும்பம் பெருக்கினாள்... இரண்டு துரோகங்கள்... முருகா... என் ஆத்தாளை நான் தப்பாக நினைக்கிறேன். மன்னிச்சிடு. நா யாருக்கும் துரோகம் நினைக்கல. புள்ளயள நல்லா வய்யி!... சற்று முன் பளிச்சென்று சிரித்த வானில் கருமேகம் மூடிக் கொள்ள, பள்ளத்தில் கரும்புகையாக அந்த மஞ்சு கவிந்து கொண்டு பசுமை, மேடு பள்ளம், சாலை, எல்லாவற்றையும் மறைக்கிறது. தொலைவில் ஒரு மணிச்சங்கு இலேசாக இழைவது போல் செவிகளில் படுகிறது. மண்வெட்டியைக் கொண்டு கிடங்கறைப் பக்கம் போட்டுவிட்டு, சாலையில் நடந்து டீக்கடைக்கு வருகிறான். டீக்கடை வாசலில், குழந்தைவேலுவும், இன்னும் சில ஆட்களும் இருக்கின்றனர். “தம்பி, சவுக்கியமா?... நல்லாருக்கீங்களா?...” “நீங்க முருகேசு இல்ல...? பொட்டம்மா வீட்டு ஷெட்டில தங்கிட்டு, ராமசாமி வூட்டுக்கு அடுத்தாப்பில இருக்கிறீங்கல்ல?...” “ஆமா, காபகம் வச்சிருக்க.” “நீங்களும் சிரீலங்கா பைனான்சில பணம் போட்டீங்க தான?” “ஆமா, மூவாயிரம். மண்டபத்துல குடுத்த டிராஃப்ட மாத்தி அப்பிடியே குடுத்தே...” “இப்ப கேசு எடுத்திட்டுப் போறம். நீங்களும், சாங்காலமா ஆபீசுக்கு வந்து, எழுதிக் குடுங்க?...” “லோனு... அது எப்ப வரும்...?” “வூட்டு லோனா?... போகணும், ஊட்டிக்கிப் போயி, கலக்டரப் பாக்கணும். எங்க... பாத்தா, இப்ப ஆச்சி, அப்ப ஆச்சிங்கறா. அந்த காலனில, தண்ணி இல்லாம என்ன செரமப்படுறா? நேத்து ஒரு புள்ள சருக்கி வுழுந்து எலும்பு ஒடஞ்சி அசுபத்திரில போட்டிருக்கு... ஒரு குழாய் வச்சித்தரணும்னு மனுக் குடுத்து ஒரு வருசமாகப் போவுது. ஒண்ணும் நடக்க இல்ல... நீங்க வாங்க...!” பழனி வேலுவைப் பற்றி விசாரிக்கத் தோன்றுகிறது. மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விடுகிறான். ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி வைத்துக் கொண்டு, அநுபவித்து அருந்துகிறான். “இங்கவுட, கூடலூர் பக்கந்தா, வியாபாரம் உள்ள எடம். ஒரு செமை தூக்கின்னாலும் பொழக்கலாம். காபித் தோட்டம் மிச்சம் இருக்கு. குளுரு இம்புட்டு இல்ல. எப்படின்னாலும் பொழக்க முடியும். காடுங்கள்ள, வெறவு வெட்டிட்டு வந்து கூடப் பிழக்க முடியும்...” என்று அவர்களில் ஒருவன் சொல்கிறான். மரம் அறுக்கும் தொழிலாளிகள்... “எட்டுப் பேரு... ஒருத்தன் வேலை செஞ்சி பிழக்கிறது எப்படி? அங்க போனா, பொண்டுவளுக்கு, சல்லிசா தோட்டங்கள்ள வேலை கிடைக்கும்னு சொல்றா. ஒரு பலகாரம் போட்டு வித்தாக்கூடப் பொழக்கலாமாம்!” தேநீரை உறிஞ்சி விட்டு ஒருவன் குரலை இறக்குகிறான். “மிச்சம் சங்கடமா இருக்கு. பொம்பிளக, ...தெரியுமில்ல சடாச்சரத்தும் பொம்பிள, மூணு பொண்ணுக... இதா அவளுகளத் தட்டிக் கேக்க முடியல. சூடுசொரண உள்ள ஆம்பிளகதா, பாத்திட்டிருக்கிறம்...” முருகேசுவுக்கு மூளை நரம்புகளில் சுரீர் சுரீரென்று ஊசிகள் குத்தினாற்போல் அந்தக் குரலின் உட்பொருள் உறைக்கிறது. பசி வந்து விடப் பத்தும் பறந்து போகுமாம்... இனி, பறக்க ஏதேனும் மனிதனிடம் இருக்கிறதா? மாலையில் அலுவலகத்தில் பழனியும் இருக்கிறான். அங்கே கட்டாகச் சிறு புத்தகங்கள் வந்து கிடக்கின்றன. ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்க்கிறான்... ஒன்றும் புரியவில்லை. துப்பாக்கியை நீட்டிக் கொண்டு, ஒரு தமிழ்ப் படையாளி நிற்கும் பொம்மை மட்டும், அது ஈழம் சம்பந்தப்பட்டது என்று புரிகிறது. “இதெல்லாம் என்ன பொஸ்தகம் தம்பி?...” “...எல்லாம் நம்ம பிரச்சின தா. திம்பு பேச்சுவார்த்தை நடக்குதில்ல? அதில, நம்ம தோட்டத் தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் குடுக்க இல்லன்னு எழுதியிருக்கா. நம்ம லச்ச லச்சமா வந்து சாவுறோம். ஆனா, நம்ம பிரச்சின யாருக்கும் பெரிசாப் படலன்னு எழுதியிருக்கா. என்ன பிரேசனம்? இங்க நூத்துக்குத் தொண்ணுத் தெட்டாளுவளுக்கு இந்தப் பிரக்ஞையே இல்ல...” “இதாரு தம்பி புத்தகம் போட்டிருக்கா?...” “நம்ம ஆளுதா, குமார வேலன்னு...” அதற்கு மேல் என்ன சொன்னான் என்று புரியவில்லை. முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து, பார்த்தாற்போல் குளிர்ந்து போகிறான். பூரித்து, இதமான வெம்மையில் மகிழ்ந்து போகிறான். சொல்லத் தெரியாத சுகம் நாடி நரம்புகளிலெல்லாம் பாய்கிறது. “அவ... இந்தியாவில இருக்காரா, அங்கியா?” “அங்க இங்க போவாரு, இங்கயும் கூட வருவா. இதுதா முதல்ல புஸ்தகம் போட்டிருக்காரு, இது மட்றாசில அச்சாகி வந்திருக்கு...” “குடும்பம், சம்சாரமெல்லாம்...?” “சம்சாரமும் படிச்சவங்க, தமிழர் பொண்ணு. அவங்க தா, தோட்டத் தொழிலாளிப் பெண்களுக்காகப் பாடுபட்டிருந்தா. இப்ப, அவங்க இயக்கத்தில இருக்காங்க... தோட்ட ஆளுங்களுக்கும் நாயம் கிடைக்கணும்ங்கற பக்கம் தா அவங்களும். இப்ப தலைமறவா இருக்கிறதாக் கேள்வி...” “குளந்தங்க இல்ல...?” “அவங்க சனங்க மட்றாசில வந்திருக்கா. ஒரு பிள்ளை அங்க இருக்குன்னு சொல்லிட்டா...” மூன்றாம் மனிதர் மூலமாக அவன் கேட்கிறான். எத்தகைய பெருமை!... என் மகன்... என் மகன்... அவனைத் தன் மகன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பழனி ஒப்புவானோ? “என்ன பெரியவரே? நா கூடலூருப் பக்கம் போற. ஞாயித்துக்கிழம, வாரீங்களா? உருப்படி அங்கதா இருக்கு.” கண்களில் கசிவைத் துடைத்துக் கொண்டு சட்டென்று நிமிருகிறான். “ஆமா, அத்த... ஒரு கிரயத்துக்குக் குடுத்துப் போட்டு, கடன் போனதும் இருக்கிறத வச்சி, ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடலாம்... வார...” வீட்டுக்குச் சென்றதும் பெட்டியைத் திறந்து, பைக்குள் பத்திரமாக இருக்கும் அந்த வழுவழுத்த சந்தன வண்ணப் பிள்ளைக் கவுனைத் தன் கையினால் தடவுகிறான். புல்லரிக்கிறது. கன்றுக் குட்டியின் மேனியைப் போல் அவன் தளர்ந்த மேனி சிலிர்த்துப் போகிறது. |