13

     “அம்மா, புள்ள தனிச்சிருப்பா, செத்தப் பாத்துக்கும்... அம்மாளம், ராவிக்கு ஒருக்க வரமுடியாமப் போயிட்டுதுன்னா, பாட்டி துணைக்குப் படுத்துக்கும். பதனமாயிருந்துக்க...”

     வீட்டுக்காரக் கிழவியிடமும் சொல்லி சுகந்திக்கும் மென்மையாக அறிவுறுத்துகிறான் முருகேசு...

     சுகந்தி முகம் மலர்ந்து தலை ஆட்டுகிறாள்.

     பார்வதி வீட்டாரின் சிநேகத்தில், பை போட்டுக் கொடுப்பதில் கையில் இரண்டு மூன்று சேர்ந்திருக்கிறது. பளிச்சென்று சிலைடு, ரிப்பன், சோப்பு என்று வாங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த சிநேகம் வரம்பு மீறி விடக் கூடாது என்று தான் இப்போது போகிறான். ஏறக்குறைய நாலு சவரன் உருப்படி நாலாயிரத்துக்குப் போகும் என்று பழனி சொல்கிறான். கடனும் வட்டியும் போக மூவாயிரம் தேறும். கல்யாணம் கட்டி விட வேண்டும்.

     விடியற் காலையில் இருள் பிரியுமுன் பழனி ஏதோ ஒரு லாரியில் தான் இவனை இட்டுப் போகிறான் ஒத்தைக்கு. சாரல் ஈரம் இன்னமும் பூமியில் உலர்ந்து விடவில்லை. குளிருக்கு ஒரு தேநீர் வாங்கித் தருகிறான். இதமாக இருக்கிறது.

     கைச்செலவுக்குப் பதினைந்து ரூபாய் வைத்துக் கொண்டிருக்கிறான்.

     லாரி, இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கு நேரத்தில் ஒத்தை பஸ் நிறுத்தத்தில், கொண்டு விட்டு விடுகிறது.

     நகரத்துக்கே உரிய சுறுசுறுப்பும் கலகலப்பும் அப்போதே அங்கு துவங்கி விட்டது. கோழிக்கோடு, குருவாயூர், பாலக்காடு என்று குரல் கொடுத்துக் கொண்டு ஆட்கள் விரைகிறார்கள். கம்பளி உடுப்புக்களும், பெட்டி கூடைகளுமாகப் பல்வேறு வண்ணங்களாகப் பயணிகள் வண்டிகளின் உறுமல் ஓசைகள்... பெட்டிக் கடைகளில் சுறுசுறுப்பான காபி, தேநீர் வியாபாரம்...

     முருகேசு பந்தய மைதானத்தைச் சுற்றிச் செல்லும் பாதையையும், எதிரே இருக்கும் சரிந்த மலைத் தொடரில் வெண்மையும் கோபியும், சிமிட்டி வண்ணமுகமாகத் தெரியும் வீடுகளையும் பார்த்தவாறு நிற்கிறான்.

     தனம் அங்கேதான் ஒரு வீட்டில் இருக்கிறது. பார்க்க நேரமில்லை. இப்போது கோபம் ஆறி, சகசமாக இருக்குமோ?

     திங்களன்று ஒரு வேளை வர இயலுமோ இயலாதோ என்று மேஸ்திரியிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், இன்னமும் மண்கட்டும் வேலை பாக்கி இருப்பதால், முடித்துவிட்டுப்போ என்று தான் சொன்னார். பழனி இன்றே புறப்படுவதாகச் சொன்னதால், தட்ட முடியவில்லை...

     “எங்க பாத்துட்டு நிக்கிறீங்க? ஏறுங்க! இதா கூடலூரு பஸ்!”

     ‘முருகா!’ என்று முணமுணத்தபடியே, ஓடி வந்து பஸ்ஸில் ஏறுகிறான்.

     பஸ் நகரத் தொடங்கியதும் அயர்வு மறந்து போகிறது. வளைந்து வளைந்து, நகரின் சந்தடிகளைக் கடந்து, கட்டிடங்களை, தொழிலகங்களைக் கடந்து நெடிய கர்ப்பூரமரச் சோலைகளுக்கிடையே ஊர்தி செல்கிறது.

     பச்சைத் தேயிலையின் மணம் கம்மென்று நாசியில் படும்போது, பழைய வாழ்வை அது புரட்டிக் கொடுக்கிறது. கவ்வாத்துக் கத்தி பிடித்துக் காய்த்துப் போன கைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்கிறான்...

     காடுகள், பசுமையான சமவெளி போன்ற பரப்புக்கள், ஏற்ற இறக்கங்கள், கடந்து, லாரிகளும் பஸ்களும் நிறைந்து தூசிபரப்பும் நெருக்கடியான சாலைச் சந்தியில் வந்து அவர்கள் இறங்குகிறார்கள். லுங்கியும், தலைக்கட்டும் தாடியுமாக கேரளத்து முகமதியர் பேசும் மலையாள மொழி செவிகளை நிறைக்கிறது. வாழைத்தார்களும், தேங்காயும் வந்து இறங்கும் மண்டிகள்...

     பழனி அவன் பின் தொடர, கையில் அந்தப் புத்தகக் கட்டுடன் புகுந்து செல்கிறான். வழியில் பலர் அவனை முகமன் கூறி விசாரிக்கின்றனர். வெற்றிலை பாக்குக் கடையில் பச்சைப் பாக்கு கொட்டிக் கிடக்கிறது. வெற்றிலை புகையிலை மறந்து விட்டது. பீடி மட்டுமே இப்போது அவனுக்கு எஞ்சியிருக்கும் சஞ்சீவி... பாக்கு மரங்களடியில் கொட்டிக் கிடக்கும் அடைக்காய்... அந்நாட்களில், அப்படியே விலை கொடுப்பதானாலும் இருபது சதத்துக்கு, நூறு போல் கிடைக்கும்.

     சுள்ளென்று வெயில் உறைக்க, வியர்வையும் கசகசக்கிறது.

     “ஏதானும் சாப்பிட்டுப்போவம், வாங்க...!”

     சற்றுத் தள்ளி, மலையாளத்தார் கடை ஒன்றில் படி ஏறுகின்றனர். முருகேசனுக்கு நல்ல பசி. இட்டிலியும் சாம்பாரும் காபியும் கைப்பணத்தைக் கரைக்கும் உணர்வைக் கொண்டு வரவில்லை.

     ஒரு மலையாளத்துப் பெண் எட்டிப் பார்க்கிறாள். “சேட்டன் எப்ப வந்தது?”

     “ஓ... ஆறுமுகத்தைத்தான் தேடிட்டு வந்தேன். வீட்டில இருக்காரா?”

     “தேவலா போயி...”

     “எப்ப வருவார்...?”

     “ஒண்ணும் சொல்லிட்டில்ல. எதோ கேசாண. நேத்து ராத்ரி ஒரு மணிக்கு வந்து, காலம திரிச்சிப் போயி...”

     “அப்ப, நான் ராசு கடையில இருக்கிறேன். வந்தா வரச் சொல்லணும்...”

     அவள் தலையை ஆட்டுகிறாள்.

     “வாங்க. ஆறுமுகம் வர வரையிலும் அங்க இருப்போம்...”

     “அவருகிட்டதா... உருப்படி இருக்கா?”

     “ஆமான்னு சொன்னா. இந்தாளு, எழுபதுல ஸ்லோன் விட்டு வந்தவரு. ஓட்டல்ல தண்ணி எடுத்திட்டிருந்தாரு. பின்ன கொஞ்சம் கொஞ்சமா சரக்கு புடிச்சி, சிறுசிறு வியாபாரம் பண்ணினாரு, இன்னிக்கு ரெண்டு லாரி வாங்கி ஓட்டுறா. இந்தப் பொண்ணக் கட்டி ரெண்டு புள்ள, வீடு எல்லாம் வசதியாயிருக்காரு, அவுருதா இப்பிடி நம்ம ஆளுங்களுக்கு ரொம்ப வட்டி இல்லாம ஒத்தாசை, பண்ணுறாரு...”

     வெயில் விழாமல் சாக்குப் படுதா பாதியை மறைக்கும் மளிகைக் கடை. மூட்டைகளின் நடுவே புகுந்து பழனி பின்புறம் ஓர் அறைக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கே சிலர், ஒரு நெருக்கமான கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கின்றனர். அறை முழுதும் புத்தகங்கள், பிரசுரங்கள்... பழனி கைக்கட்டை அங்கே ஓரமாக பெஞ்சியில் வைக்கிறான்.

     “பேச்சு வார்த்தையாவது, மண்ணாங்கட்டியாவது? சும்மா கண் துடைப்பு. பேச்சு வார்த்தைன்னு சொல்லிட்டு அவன் இன்னும் தமிழ் மக்களை வேரோடு அழிக்கத் திட்டம் போட்டுச் சுட்டுக் கொல்லுறான். இன்னும், கொரியா, பாகிஸ்தான் அங்க இங்க ஆளுங்கிள அனுப்பிப் பயிற்சி குடுக்கறான்; மூக்குமுட்ட ஆயுதம் வாங்கி நிரச்சிருக்கிறான். பேச்சு வார்த்தைங்கற கண் துடைப்பு அவனுவளுக்குத் தான் சாதகம்...”

     சிவப்பாக, ஒல்லியாக இருக்கும் ஓர் ஆள், சிறுவயசுக்காரன். சூடாகப் பேசுகிறான்.

     நரைத்தலையும் மூக்குக் கண்ணாடியுமாக நன்கு படித்த அறிவாளி போல் தோன்றும் ஒருவர், “ஏம்ப்பா, பழனி வேல்? சிரீலங்கா பைனான்ஸ் பய அம்புட்டானா?” என்று விசாரிக்கிறார்.

     “ஹம்... எல்லாம் அம்புட்டதச் சுருட்டிட்டு ஓடிட்டானுவ. கேவுறுல நெய் ஒழுவுதுன்னா கேக்கிறவனுக்குப் புத்தி இல்ல? ரெண்டே மாசத்தில ரெண்டாயிரம் பத்தாயிரமாவும்னா, எப்பிடின்னு யோசிக்க வாணாம்?...”

     “தொழில் - உற்பத்தி, அதனால ஒரு மதிப்புன்னு நினைச்சித்தான் நாங்கூட ஒரு அஞ்சு நூறு போட்டேன். மாஸ்டர் வரணும்னு கூப்பிட்டா, ரெண்டு கூட்டத்துக்குப் போனேன். அதிகார பதவி, அரசு சார்ந்தவர்களெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கான்னு நினச்சோம் பாவம் இங்க, காது மூக்குத் திருகாணி எல்லாம் வித்துக் குடுத்திச்சு பொம்பிளங்க... சே!...”

     “இங்க நம்மப்போல வந்தவ அத்தினி பேரும் கரையில எறங்கின உடனயே வெளுத்தது பால்னு நினைச்சா ஏமாந்திடுவோம்னு தெரிஞ்சிக்கிறோம். அப்ப, சாக்கிரதயா இருக்கணும்ல? நாங்க மாட்டும் ரொம்பப் பேருக்கு எச்சரிச்சோம். ஆனா, எங்க கேட்டாங்க? இதா, இந்தப் பெரியவரு, கடோசில, மூவாயிரத்தைக் குடுத்து ஏமாந்திருக்காரு...”

     “எங்கந்து வந்தாரு...?”

     முருகேசு சுருக்கமாகத் தன் விவரங்களைச் சொல்கிறான். பையனைப் பற்றிப் பேசாமல், குமரிப் பெண்ணைக் கல்யாணம் கட்ட வேண்டிய அவசியம், பச்சைவேலு நகை வைத்தது, எல்லாம் சொல்லுகிறான்.

     “நானு, அங்க பிரஜா உரிமை இருந்திச்சு, நல்ல வசதியா இருந்தேன். ஆனா, இந்தத் தோட்ட ஆளுங்க, தமிழங்களுக்கு நடக்கிற அநியாயம் பொறுக்காம, இந்தியா வந்துடணும்னு வந்தேன். இங்க விசயங்களப் பாத்தா, மனசுக்கு ரொம்பக் கயிஸ்டமா இருக்கு. இனிமேலிக்கு இருக்கிறவங்க, வாராதீங்க, போராடுங்கன்னு சொல்லணும்...” என்று மாஸ்டர் என்றழைக்கப்படும் பெரியவர் கூறுகிறார்.

     “மாஸ்டர், சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தமே தப்பு. லட்சலட்சமா ரத்தத்தைக் குடுத்துக் காடுமேடு திருத்தினாங்க. பச்சைப் பொன்னா வாரிக்குடுத்தாங்க, அவங்களுக்கு அங்க பிரஜா உரிமை இல்லைன்னு 48ல வாய்ப்பூட்டுப் போட்ட போது, எல்லாம் என்ன செஞ்சா? ஒப்பந்தம் பண்ணிட்டாங்களே, ரெண்டு தலைவர்களும், நாமென்ன ஆடா, மாட்டான்னு கேட்டாங்களா? இப்ப மட்டும் என்ன? ஒப்பந்தம் பண்ணிட்டா, அதென்ன, கடவுள் வந்து கையெழுத்துப் போட்டாரா? அப்பிடி தெய்வ சாக்கியா நடக்கிறதயே மீறிடறாங்க. இப்ப இந்த ஒப்பந்தம் செல்லாதுன்னு எத்தினி பேரு எந்திரிச்சோம்?...”

     பழனி கேட்கிறான்.

     “நீங்க ஆதிலேந்து நினச்சிப்பாருங்க, சரித்திரத்த, சிரீலங்கா அரசு, தமிழர் பிரச்னையை எப்படித் தீர்க்க முயற்சி பண்ணிருக்குன்னு தெரியும்... ஆதியில, இலங்கை, சுதந்தரமடஞ்சதும், அரசியல் மந்திரி சபையில் யாழ்ப்பாணத்தார் இடம் பெற்றிருந்த போதுதான், இந்தியத் தமிழர் குடியுரிமை இல்லாதவர்களாக ஆனாங்க. இந்திய அரசு, தொழிலாளர் மறுப்புக் கோரிக்கை வச்சதெல்லாம் ஏறக்கட்டி வச்சாங்க. அதே மாதிரித்தா, பின்னால இந்திய வம்சாவளிப் பிரதிநிதி மந்திரி சபையில் இருந்தப்ப, வடகிழக்கு மாகாணங்களில் தமிழர் துன்புறுத்தப் பட்டாங்க. ஆனா, அப்ப, ரெண்டு தமிழ் மக்களும், நம்மச் சேர்ந்தவங்க, ஓரினம்னு நினைக்க இல்ல. அதேசமயம், இவரு மந்திரி சபையில தோட்டத்து மக்களுக்காக எழுப்பின கோரிக்கை எல்லாம் அப்படியே தானிருக்கு. ஆனா, ஒரு தமிழனால் பாதிக்கப்பட்டால், பழிவாங்குவதற்கு மட்டும், சிங்கள அரசு ரெண்டு பேரையும் பிரிச்சிப் பாக்கிறதில்ல...”

     “அப்ப, மாஸ்டர், எம்பத்து மூணு கலவரத்தில தோட்டத் தொழிலாளிகளுக்கு சம்பந்த மில்லங்கிறியளா?”

     “அடிச்சுச் தள்ளுறபோது, இவன் தோட்டத் தொழிலாளி, இலங்கைத் தமிழன்னு பாக்கலன்னுதா சொன்னனே? இத, இப்ப இவருமக... குடும்பத்தோட, கதிர்காமம் போயி வாரப்ப வண்டில பெட்ரோல் ஊத்திக் கொளுத்தினாங்கன்னு சொன்னாரு. சாமி கும்பிடப் போனவங்க, அவங்க, என்னய்யா அநியாயம் செஞ்சா?... நான் என்ன சொன்னேன்னா, இவங்க, இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு, தங்க உரிமைகளைக் கோரி அதற்காக உயிரைப் பணயம் வச்சிருந்தா, தீர்வு இருக்கும்ங்கறததா-”

     “அது என்னமோ வாஸ்தவம் மாஸ்டர்...”

     “எம்பத்து மூணு கலவரம் இங்க இந்தியாவில, எத்தனை பெரிய எழுச்சியைக் காட்டிருக்கு? அரசியல் தலைவர்கள் கண்டனம், பத்திரிகைகள், போஸ்டர்கள், எல்லாம், தமிழன் உரிமை மறுக்கப்படுகிறதுன்னு வந்திச்சு. ஆனா, இதுபோல், இன்னிக்கு ஜயவர்த்தனா ஆட்சியைக் கண்டிக்கும் உணர்வு, அன்னிக்கு இந்தியத் தமிழர் உரிமை பறிபோன போது எத்தினி பேருக்கு இருந்தது? இங்கே இந்திய ஆளுகளுக்கு, நம்ம லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர், குடியுரிமை இல்லாமல் மனித உரிமைகளே மறுக்கப்படும் நிலையில் இருப்பது பற்றிய உணர்வு இன்றும் இல்லை. பொருளாதார வறுமை, சமூகத்தில் பின் தங்கித் தாழ்த்தப்பட்ட நிலை, இத்துடன், இவர்கள் கையில் உழைத்துச் சேர்த்த காசு அஞ்சு பத்து வச்சிருந்தா, அத்தையும் பிடுங்கிக் கொள்ளும் மோசடி...”

     “நீங்க என்ன பெரிசா இந்தியா ஆளுங்களச் சொல்லப் போயிட்டீங்க? நம்ம தோட்டத் தொழிலாளிகளுக்கு இருந்திச்சா?...”

     “சும்மா சும்மா தோட்டத் தொழிலாளிக்கு உணர்வு இல்லன்னு சொல்லிப் போடாதீங்க. அவவ அம்பது சதம் அறுபது சதம்னு வாங்குற கூலில, மாசம் முப்பது நாப்பது செலவு பண்ணி புள்ளய எங்கேந்து படிக்கப் போடுவா? பொம்பிளப் புள்ளயக் கட்டிச்சிக் குடுக்கணும். அடுத்தடுத்து நோவு, சீக்கு, வறட்சி, கூலிவெட்டு, கங்காணி கணக்கப்பிள்ளங்களின் தீராத கொடுமை. ஒருத்தருக் கொருத்தன் ஒதவி, எல்லாருக்கும் சேர்ந்து கஷ்டம் வரப்பதா நெனப்பா. தொரப்பிரட்டுன்னு வாரவுந்தா பெரிய கங்காணி ஆடிப்போனா. அதுவரய்க்கும் அவன் தன்னத்தா சீம தொரன்னு நெனச்சா. சொல்லுங்க...”

     மூலையில் உட்கார்ந்திருந்த மீசை நரைத்த ஆள் ஒருவர் சட்டென்று தொழிலாளிகளுக்குச் சாதகமாகக் குரல் கொடுக்கிறார்.

     முருகேசு அவரை உறுத்துப் பார்க்கிறான்.

     “அது சரி, என்னாய்யா புஸ்தகக் கட்டு...?”

     “மட்றாசிலேந்து வந்திச்சி. நா படிச்சுப்பாத்தே. இப்ப மாஸ்டர் சொன்ன விசய மெல்லாந்தா, கே.வி. எளுதியிருக்காரு... இதுவரைக்கும். இந்த நோக்குல ஆரும் பேச இல்ல...”

     வாசற்பக்கம் புதிய குரல் கேட்கிறது.

     “நேத்து ஒரு கேசு. ரெண்டு பொம்பிளங்கள ஃபாரஸ்டு கார்டுங்க கொண்டு போயிக் குலச்சிட்டா. வெறவு வெட்டிட்டு வந்திருக்கு. எப்படியோ தப்பிச்சிட்டு கண்ணுல படாம வந்திருக்கு, பாறமுக்கில வச்சி ஏடாகூடம் பண்ணிப் போட்டானுவ. ஒரு பொண்ணுதா பாடி கெடச்சிச்சி... லபோ திபோன்னு அவ புருசங்காரனும், இன்னொரு பொண்ணோட அப்பனும் வந்து அழுதா... சந்தனக்கட்ட திருடிட்டு வந்தாளுவ, புடிச்சிட்டு வுட்ட. ஆனா அடிச்சிப் போட்டிருக்கும்ங்றானுவ... சந்தேகத்துக்கு இடமில்லாம ரேப்-மர்டர்...”

     “ஆரு சம்முவத்தின் குரல் போல இருக்கு?...”

     சிவப்பாக நரை கலந்த சுருட்டையுடன் அலைந்து திரிந்து கறுத்த முகமாக ஒரு நடு வயசுக்காரன் உள் வாயிற்படியில் வந்து நின்றான்.

     “பழனி வந்திருக்கிறதாச் சொன்னாங்க. என்னப்பா, புதுசா ஆறு குடும்பம் நீலகிரிக்கு வாரதா எட் ஆபிசிலேந்து தகவல் வந்திச்சே? எந்தப் பக்கம் போனாங்க தெரியுமா?”

     “ஆறு குடும்பமா? நூறு குடும்பம்னு சொல்லுங்க! அவுங்க பாட்டில தெரிஞ்சும் தெரியாமயும் அங்கங்க வந்து ரோட்டோரமும் காட்டோரமும் அவதிப்படுறாங்க. அங்கயும் டீத்தோட்டம், நமக்குப் போனதும் வேலை தயாரா இருக்கு, அறுபத்தெட்டில மச்சான் போனான், எழுபத் தொண்ணில சகலை போயிருக்கான்னு விவரமில்லாம வந்திடறாங்க, புள்ளக் குட்டியோட, ஒண்ணும் சமாளிக்கிறாப்பில இல்ல...” என்று பழனி அலுத்துக் கொள்கிறான்.

     சம்முகத்தின் நெற்றியில் ஆழ்ந்த கீறல்கள் இன்னும் ஆழ்ந்து போகின்றன.

     “ரொம்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. வசதியா மேன்மையா வாழ்ந்தவங்க, வெறவு செமக்கிறாங்க. நூறு நூறாக் குடும்பங்க, இங்க யானைக் காட்டில, வெறவு வெட்டிட்டு வந்து கூடலூரு மார்க்கெட்ல வித்துக் கஞ்சி காச்சிக் குடிக்கும் நிலைமை. இந்த ஃபாரஸ்டு ஆளுவ கொடுமை... கேக்க வாணாம், இவனுவளே சந்தனம் திருடறானுவ, கட்டை கடத்தறானுவ. பத்தாக் கொறய்க்கு மேலிடத்தில, காடழியிதுன்னு, இவங்களுக்கு எவிக்‌ஷன் ஆர்டர் குடுத்திருக்கா. நாம தா புரொடஸ்ட் பண்ணி ஒரு ‘ஸ்டே’ ஆர்டர்னாலும் வாங்கணும்!”

     ஒருவரும் பேசவில்லை. சல்லென்று அமைதித் திரை படிகிறது.

     “தமிழீழம் வந்தாத்தா இதுக்கெல்லாம் விடிவு காலம், மாஸ்டர்!”

     முதலில் பேசிய இளைஞன் கூறுகிறான்.

     “அது எப்படி வரும்ங்கறது தான் கேள்வி” என்கிறார் மாஸ்டர்.

     “வந்து தான ஆவணும்? வராம வழி இல்ல. இவ்வளவுக்கு வந்த பெறகு, பின்னுக்குப் போக முடியுமா?”

     “சும்மா ஈழம் ஈழம்னு சொல்லிட்டிருந்தா எப்படிய்யா வரும்? பேச்சு வார்த்தையின்னா ஆளுக்காள் முறச்சிக்கிறா. இருட்டு ரூம்பு, சுருட்டுப் பாயி, மொறட்டுப் பொண்ணுங்கற கதையா இவங்கள ஒண்ணு சேக்கறதுக் குள்ளாற பேச்சு வார்த்தையே முடிச்சிட்டோ, முறிச்சிட்டோ அவம் போயிட்டா...”

     “இத பாருங்கண்ணாச்சி, பேச்சு வார்த்தை எல்லாம் மழுப்பல். இந்தியா படையை அனுப்பிக்கணும்...”

     “அதெப்படி?... நம்ம வம்சாவளி பத்து லட்சம் ஆளுக கதி என்ன? இந்தியா இதுக்கு மேல எதுவும் செய்ய ஏலாது. அந்த வம்சாவளி - ப்ளாக்கா - அப்படியே அத்தன லட்சம் பேரும் ஹோஸ்டேஜ் மாதிரி இருக்காங்க, பச்சையா சொல்லப் போனா...”

     “சோசலிச ஈழம்னு வரணும். தோட்டத் தொழிலாளரும் அங்க பிறந்தவங்க, அவங்களுக்கும் அங்க உரிமையுண்டுன்னு போராடணும் அத்தினி பேரும்...”

     “இது சொப்பனத்தத் தவுர ஒண்ணில்ல. இந்தச் சின்னப் புத்தகத்துல அதுதா இவரும் சொல்றாரு. ஈழப் போராளி யாருன்னு தெரியாம, ஒருத்தனை ஒருத்தன் இவங்களே அடிச்சிட்டுச் சாவுறான். இது, அவங்களுக்கு சாதகமாயிருக்கு. இப்ப ராணுவமே கொன்னிட்டு, புலிகளே அடிச்சிட்டாங்கன்னு சொல்லிடறான். ஒருத்தன ஒருத்தன் உளவாளின்னு சந்தேகப்பட்டுக் கொன்னுக்கிடறாங்க... இதுக்கு என்னதா செய்ய?...” என்று பழனி சோர்வடைகிறான்.

     “குண்டத் தூக்கி எறிஞ்சிட்டு ராச்சியத்தக் கவுத்து, சுதந்தரம் வாங்கிடலாம்னு நெனச்சானுவ. அது வெடலத்தனமின்னு இப்ப ருசுவாயிடிச்சி. இவன் குண்டெறிஞ்சா, அவங்க ராணுவத்த வச்சி சுட்டுத் தள்ளுறான். சித்திரவதை பண்றான். ஆக, ஒண்ணுமறியாத பிள்ளைங்க பொண்ணுங்க சாவுறாங்க. சொத்து பத்து, அல்லாம் படுநாசம். எல்லாம், எண்ணிய கருமம் நுண்ணித் துணியணும். அராசகத்தால ராச்சியம் புடிக்க முடியாது. ருசியப் புரட்சி... ஆனானப்பட்ட ருசியப் புரட்சில எத்தினி பேரு செத்தாங்க தெரியுமா?... ஒம்பது பேரோ, பத்துப் பேரோ தான். முதல்ல மக்கள் மனசில எழுச்சிய ஒருமிச்சு உண்டாக்கணும் - ஆயுதப் புரட்சிங்கறது கடோசில...”

     நரைத்த மீசைப் பெரியவர், தோட்டத் தொழிலாளர் இயக்கத்தில் சம்பந்தப் பட்டவரென்று முருகேசன் தெரிந்து கொள்கிறான்.

     இளைஞனுக்குக் கோபம் வருகிறது.

     “மனசு எழுச்சி எழுச்சின்னு சும்மா உக்காந்திருந்தா வருமா? கெளம்புனாத்தா வரும். இந்திய அரசு, தமிழன் தமிழ் இனம்னு தானே மெத்தனமா இருக்கு. முதல்ல, இப்ப கப்பல் இல்ல, நம்ம தொழிலாளரு எத்தினிபேரோ, வார வழியில்லாம திண்டாடிட்டிருக்கா. இங்கேந்து கப்பல அனுப்பிச்சி நம்ம தொழிலாளிங்களைப் பத்திரமாக் கொண்டு வர ஏலாதா? பின்ன, ராணுவத்த ஏன் அனுப்பிக்கல? பங்ளாதேஷ்ல அனுப்பல...?”

     இளைஞனுக்கு முகம் சிவக்கிறது.

     ஆனால் மாஸ்டர் புன்னகையோடு பேசுகிறார்.

     “ஆ, ஊன்னா பங்களாதேஷ், ராணுவம்ங்கறது தப்பு. அப்ப நிலம வேற. சர்வதேச நிலைமை பதட்டமா நெருக்கடியா இருக்கு. இப்ப போர்னு வத்தி வச்சிட்டா, உலகமே இருக்காது, யார் கெலிச்சது, தோத்ததுன்னு புரிஞ்சிக்கக்கூட... முதல்ல இந்தச் சின்ன விசயம் நினச்சிப் பாருங்க? தமிழருங்க, ஒத்துமயா எப்பல்லாம் இருந்திருக்காங்க? வடக்கு மாகாணத் தமிழர் யு.என்.பி.ய ஒதுக்க ஓட்டுப் போட்டா, தோட்டத்துப் பிரதிநிதிங்க ஆதரிப்பாங்க. தோட்டத்துத் தமிழ்காரன் சிரீலங்கா ஃபெடரல் பார்ட்டிய ஆதரிச்சா, வடக்கு மாகாணத் தமிழன் யு.என்.பி. கூடக் கூட்டுச் சேர்ந்தான். வடக்கு மாநிலக்காரர் ஈழம்னு சொன்னா, மத்தவன் தேசீயம்னு சொல்றான். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிட்டிருக்காங்களா?... ஆதியில், பூர்ஷ்வாவா இருந்த இலங்கைத் தமிழர் தோட்டத்து ஆளுங்களை மதிச்சாங்களா? சமமா நினைச்சாங்களா?... சொல்லப் போனா, ஆதியில், தோட்டத்துத் தமிழனும் சிங்களத் தொழிலாளியும் கூட ஒத்துப் போனா. கலியாணம் காட்சின்னு சம்பந்தம் கூட வச்சிட்டா. ஆனா, அப்படி அந்தத் தமிழாளுவ சம்பந்தம் வச்சிட்டதாச் சரித்திரம் உண்டா?... இதெல்லாம் அடீல இருக்கு...”

     “மாஸ்டர், நீங்கதா இப்பப் பிரிவினை வாதம் பேசுறீர், தமிழினம்னு நினைக்க இல்ல?”

     “உருத்திராபதி, நீ உண்மையில தொழிலாளி வருக்கம் இல்ல. நீ பூர்ஷ்வா. எனம் எனம்னு மக்களத் திசை திருப்பாம, எல்லாரும் மனுஷங்கங்கற அடிப்படையில பாரு! இப்ப, இந்தியாவில, வடக்க, சீக்கியத் தீவிரவாதிங்களால எவ்வளவு நஷ்டம், சேதம்? இந்திரா அம்மாவின் உயிரே பலியாயிருக்கு. நிதம் நிதம், பிரிவினை கூடாது, அராஜக வெறியை எதிர்க்கணும்னு, இந்திய அரசு சொல்லிட்டிருக்கிறாங்க. அப்படி இருக்கறப்ப, அதை மறைமுகமா ஆதரிக்கும் செயல்ல இறங்க முடியுமா?”

     “அப்ப தமிழீழம் சாத்திய மில்லன்னு நீங்க சொல்றியளா மாஸ்டர்? உலகத்தில் சின்னச் சின்ன இனமெல்லாம் கூடத் தனி ராச்சியம் வச்சிருக்கு. தமிழ் உலகத்திலேயே பழய பெருமை உள்ள மொழி. அதைப் பேசுற இனத்துக்கு ஒரு தனி அரசு கட்டாயம் வேணும். இந்தியாவில அது ஏலாதுன்னு ஆயிட்டது. அதுனால இலங்கையில அது அமையணும்...”

     மாஸ்டர் அவன் கடுமையான வாதத்தைக் கேட்டு நகைக்கிறார்.

     “இனம் இனம்னு குட்டயக் குழப்புறீங்க. இருந்தாலும் உண்மையில் பார்த்தால், இந்தியாவில் மானிட இயல் ரீதியா, இன வேறுபாடுகளைத் தோற்றத்தில் கண்டு கொள்ள முடியும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பல்வேறு இனக்கலப்பினரும், ஒரே பண்பாட்டால் பிணைக்கப்பட்டிருக்கிற உண்மையைப் புரிந்து கொள்ளலாம். இலங்கையில் பொதுவாகப் பார்க்கும்போது தோற்றத்தில் இருந்து சிங்களரா, தமிழரா என்று ஆழ்ந்த வேற்றுமை எதுவும் குறிப்பாகச் சொல்லிவிட ஏலாது. என் கணிப்புப் படி, மானிட இயல் ரீதியான வித்தியாசமில்லாமல், மொழி, சமயம் மட்டுமே பிரிவு உண்டாக்கி இருக்கிறது. ஆதியில் கலிங்கத்து அரசகுமாரன் கடத்தப்பட்டு வந்தான். அவங்க சந்ததின்னு சொல்லும்போது கூட, வித்தியாசமான இனமாக அதாவது மானிட இயல் ரீதியா, மங்கோலிய இனம், அல்லது, திராவிட இனம்னு பிரிக்கும்படி இல்லை. அதனால் கலந்து கூட சமரசமாக ஆதித்தமிழரும் வாழ்ந்திருக்கிறார்கள்ங்கற வரலாற்றை மறக்க முடியாது...”

     “நீங்க சுத்திவளைக்கிறீங்க மாஸ்டர். தமிழீழம் சாத்தியமில்லன்னு நீங்களே கருத்துச் சொல்றிய...”

     “நான் அப்படித் தீர்க்க இல்ல. சாத்தியா சாத்தியக் கூறுகள் பார்த்துப் போராடணும்... இப்பக் கூடப்பாருங்க, தமிழீழ விடுதலைப் போராளிகள் பேச்சு வார்த்தையில், தோட்டத் தொழிலாளிகள் பிரதிநிதி யாரானும் இருக்காங்களா? இல்லை. அதை விடுவோம். இலங்கைத் தமிழ் முஸ்லிம்னு ஒரு தனி பிலாக்...”

     “இது, தமிழ் இனத்தாரிடையே வேற்றுமையை விதைக்கும் சூழ்ச்சிதான், வேறென்ன?”

     “சரி, அது இருக்கட்டும். நா ஒரு பேச்சுக்குக் கேக்கிறேன். தமிழ் ஈழம் வந்திடுது. அப்ப, நீங்கல்லாம் நம்ம நாடுன்னு அங்க போயிடுவீங்களா, பழயபடி?”

     “வந்திருக்கிற ரிஃப்யூஜிஸ் போயிடுவாங்க. ரிபாட்ரியட்ஸ் அங்க போறதெப்படி?”

     “...அப்படியா, வழிக்கு. அந்த நாட்டில் உம்ம மூதாதையர் மூணு தலைமுறயா இருந்திருக்கிறிய. ஆனா, அங்க தள்ளி விட்டதும் இங்க வாரதுதா நாயம்னு நினைக்கிறிய. ஆனா, அங்கே போயி என் உரிமையக் கேப்பேன், கொண்டாடுவேன்னு சொல்ல மாட்டிய. அப்ப, நாங் கேக்கிறேன், இந்தியா ராணுவத்த அனுப்பிக்கணும்னு சொல்றீங்களே, இந்தியாக்கு என்ன இன்ட்ரெஸ்ட்?”

     “அப்ப நீங்க எதுதா நியாயம்னு சொல்றிய?”

     “நான் இப்ப எதுக்கும் நியாயம் பேச வர இல்ல. எத்தனையோ முட்டுக் கட்டைகளை பாக்காம வச்சிட்டு, போராட்டம் போராட்டம்னு வெறிய மட்டும் முன்னுக்கு வச்சி விளையாடுறதில, எத்தினி இளம் பிள்ளைக சாவுறது? நிலமயத்தான் ஆராய்ஞ்சு பாக்கணும். இங்கத்த அரசியல்வாதிகள், ஈழ இனப்பிரச்னைன்னு கூக்குரல் போட்டுட்டு, பேரணி போறதும் உண்ணாவெரதம் இருக்கறதும் பள்ளிக்கூடப் பிள்ளைங்களை முடக்கிப் போடறதுமா இருக்காங்களே, நம்மவங்க நெலமைக்கு எத்தினி பேரு பேசறாங்க? இவுங்களே எரியிற வூட்டில புடிங்கினது ஆதாயம்னு தானே நடந்துக்கறா? சிரீலங்கா ஃபைனான்ஸ் ரிபாட்ரியேட் வங்கின்னு எல்லா திட்டத்திலும் இவங்க மோசடி பண்ணிட்டிருக்காங்க... கண்ண மூடிக்கிட்டுத் தமிழினம் தமிழினம்னு அவங்க கூட நாமும் பேசிட்டிருக்கிறதில ஒரு புண்ணியமும் இல்ல. நம்ம மனிசங்களா பாக்கணும்ங்கற கோரிக்கைய நாமும் வச்சிப் போராடணும். நமக்கு நாம பொறந்து வாழ்ந்து வளர்ந்த எடத்துல உரிமை உண்டுன்னு, நாம உணரணும். அத விட்டுட்டு பிச்சை வாங்குறாப்பல, இங்க வந்து எல்லாம் இழந்த நிலையில் ஏன் அல்லல் படணும்?”

     முருகேசு வாயடைத்துச் சிலையாக நிற்கிறான்.

     அந்நாள் ஒப்பந்தக் கூலிகளாகப் போனவர், நூறு நூறு ஆண்டுகளாகத் தம்மையே எண்ணிப் பார்க்காமல் பகடைக் காய்களாகிவிட்ட தலைவிதியைக் கிழித்தெரியும் ஒரு துளிச்சக்தியாகத் தன் மகனும் இந்தக் களத்தில் இருக்கிறான் என்ற எண்ணம் அவனுள் ஒளிப் பொறியின் சுகமான வெம்மையாக வியாபிக்கிறது.