14

     “வாங்க, ஆறுமுகம் வந்துட்டாப்பல, போலாம்...”

     முருகேசன் சுய உணர்வு பெற்றவனாகக் கடைக்குள்ளிருந்து வெளியே வருகிறான்.

     “ஏந்தம்பி... இந்த மாஸ்டர், இன்னும் இவங்கள்ளாம் யாரு?”

     “எல்லாம் நம்மவங்கதா. மாஸ்டர், நல்லா படிச்சவரு... கண்டில கடை வச்சு வாழ்ந்த குடும்பம். இவுரு கலியாணம் கட்டல. படிப்பு படிப்புன்னு இருந்தா. காந்தி, சர்வோதயம்னு ரொம்ப ஈடுபாடு. அந்தக் காலத்துல பிரஜா உரிமைச் சட்டம் கொண்டிட்டு வந்தப்ப, மந்திரிசபை வாசல்ல சத்தியாக்கிரகம் பண்ணினவரு... கோடில உக்காந்திருந்தவரு, அந்த காலத்துல தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்ல ஒரு தலைவரா இருந்தவரு. நாகலிங்கம்னு பேரு. உருத்திராபதியும் கண்டிப் பக்கம் தான். முப்பது ஏகராக்குள்ள சின்னதா சொந்தத் தேயில தோட்டம், வியாபாரம் இருந்திச்சி. திராவிட முன்னேற்ற இயக்கத் தலைவர்களிடம் நெருக்கமா இருந்து அங்கயும் தமிழர் இயக்கம்னு கூட்டமெல்லாம் கூட்டிப் பேசுவான். எல்லாரும் இப்படித்தா இங்க வந்து உக்காந்து நெஞ்சுக் குமச்சலப் போக்கிக்கும்படி பேசுறது. மாஸ்டர் இங்க நம்ம பிள்ளைங்களுக்காக ஒரு ஸ்கூல் மாதிரி நடத்தறாரு...”

     “குமார வேலன்னு சொன்னியே தம்பி, அவரும் இங்க வருவாரா?”

     “...அடிக்கடி வரமாட்டா. இப்படிப் புத்தகம் அனுப்பிச்சிப் படிப்பிச்சி, நம்ம தொழிலாளிகளை உருப்படியா பிரச்னைகளைச் சமாளிக்க வைக்கணும்னு சொல்றாரு. தோட்டத்துக் காரங்களையும் இப்ப தமிழர் போராட்டத்துல ஈடு படுத்துறது அவருடைய தா இருக்கு. ஆனா, என்னங்க. தோட்டங்கள்ளல்லாம் ஆமி புகுந்து அடிக்கிறதும், கூட்டிட்டுப் போறதும்தான் நடக்குது. சின்னச் சின்னப் புள்ளங்க ளெல்லாம் கடத்திட்டுப் போயிடறாங்களாம், சிங்களப்படை...”

     முருகேசு பேசவில்லை.

     சாலையில் இருந்து மேடாக இருக்கும் வீட்டு வரிசைகளுக்கு வெட்டி விட்டிருக்கும் படிகளில் காலை ஊன்றி ஏறுகிறார்கள்.

     முன்பு சாப்பிட்ட கடையைத் தாண்டி அப்பால் ஒற்றை வீடாக இருக்கிறது. வாசலில் ரோஜாச் செடிகளும், பக்கத்தில், மரவள்ளி நட்ட பரப்புமாகப் பசுமை சூழ்ந்திருக்கிறது.

     பெரிய மீசை வைத்துக் கொண்டு, உயரமும் பருமனுமாக, நரை இழைகள் குலுங்கும் அடர்ந்த முன் கிராப்புமாக ஆறுமுகம் நிற்கிறான்.

     “என்னப்பா பழனி?... என்ன விசேசம்?...”

     “வணக்கம் அண்ணாச்சி...”

     முன்னால் நீண்ட தாழ்வரைதான், பாதிச் சுவரும் பாதிக் கண்ணாடியுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. பிரம்புக் கழியினாலான இருக்கைகளுக்கு நடுவே குட்டை மேசையில் தாள்கள் சில இருக்கின்றன. அவர்கள் உட்காருகிறார்கள்.

     முருகேசு நிற்கிறான். “உக்காருங்க,” என்று பழனி ஒரு இருக்கையைக் காட்டுகிறான். பிறந்த நாளிலிருந்து வேர்விட்டு ஊன்றியிருக்கும் தாழ்வுக் கூனல், ஒரே நாளில் நிமிர்ந்து விடுமா?

     இவன் உட்காருவதையோ, உட்காராமல் இருப்பதையோ அவர்கள் பொருட்படுத்தவில்லை.

     “...ஏ.ஜி.என். டிரான்ஸ்போர்ட்ல, கிளீனரா ஒரு பய பச்சவேலுன்னு, தெரியுமில்ல அண்ணாச்சி?...”

     “ஆமாம், நாந்தான ராவுத்தர்ட்ட சொல்லி நல்ல பயன்னு வேலைக்கு வச்சிக்கச் சொன்னேன்?”

     “அவ, இவரிட்டேந்து ஒரு நாலு சவரன் உருப்படிய உங்ககிட்டக் கொண்டாந்து குடுத்திருக்கிறானாமே? நாலு மாச முன்ன?...”

     “ஆமா. அவுசரம்னு ஆயிரம் வாங்கிட்டுப் போனான். வட்டி ஒண்ணும் இதுவரை கட்டல. நா, நம்ம ஆளுவன்னு சும்மா பேருக்கு, மூணு ரூபா ரெண்டு ரூபா தரம் போடுறன்னாலும், நாலு மாசத்துக்கு எம்பது ரூபா ஓடிப்போச்சு. இவங்க அதையே கட்டுறதில்ல. மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சமா கடனும் சேத்து அடச்சிடுங்க, வட்டியும் குறையும், சுமை தெரியாதுன்னா, அழுதுங்க?...”

     “அதா, இவருகிட்ட வங்கில வைக்கிறேன்னு சொல்லிட்டு இங்க உங்க கிட்ட வச்சிருக்கிறான்...” என்று விளக்குகிறான் பழனி.

     “இப்ப... இவர் மூட்டுக்கிறாரா...”

     “இல்லீங்கையா,... எங்க பொண்ண அந்தப்பய கட்டிக்கிறதா இருக்கு. கலியாணச் செலவுக்குன்னு வச்சிருந்த மூவாயிரம்தா, தூக்கிக் குடுத்திட்ட, போயிட்டுது. இப்ப, இத்த ஒரு கிரயம் போட்டு எடுத்துக்கிடுங்க, கடன் போக மீதிப் பணத்தை வச்சி கலியாணத்த முடிச்சிரணும். எனக்கு அதுவே ஒரு பாரமா இருக்கு...”

     “அப்பிடியா? வித்துப் போடுறீங்களா?...”

     “என்னங்க செய்யிறது? வீடு கட்ட லோனு எழுதியிருக்கிறம். அதும் எப்ப வரும், வராது, தெரியாது... எனக்கு... அருமயா பண்ணிப் போட்ட உருப்படி. மருமவளுக்குக் குடுக்கணும்னு ஆசயா வச்சிருந்தா. அவ வந்தப்ப, மொடய்க்கு வச்சுப் பணம் வாங்கிருந்தே. ஒரே மகன்... அதெல்லாம் இப்ப எதுக்கு?... நீங்க உருப்படிய நிறுத்து, ஒரு கிரயம் போட்டு...”

     முருகேசுவுக்குக் குரல் தழுதழுக்கிறது. தளர்ந்த உடல் நடுங்குகிறது. கண்களில் நீர் கசிகிறது. துடைத்துக் கொள்கிறான்.

     ஆறுமுகம் உள்ளே சென்று, பெட்டியுடன் அதை எடுத்து வருகிறான். இரட்டைக் கம்பிகளாக இழைந்து, மாதுளம் முத்துக்களைப் போல் நீரோட்டமுடைய கெம்புப் பதக்கம் விளங்கும் அட்டியல்.

     இது மருமகளுக்காக, என்று சீட்டுப் பிடித்து, தான் சம்பந்தம் செய்யப் போகும் பெரிய இடத்துப் பெண் - ‘ஹேட் கேபி’யின் மகள் என்று பண்ணி வைத்த நகை. இதை மருமகள் வந்தபோது கழுத்தில் போட நினைத்தும் போட இயலவில்லை. மகன் எதிர்பாராமல் மருமகளைக் கூட்டி வந்த போது, அதை வைத்து, ஐநூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தான். ராமாயியின் சீக்குக்காக, பூசாரியார் அறிவுரைப்படி, மந்திரத்தாயத்து ஒன்று வாங்கிக் கட்டியிருந்தாள். அந்த நகை, அப்போதே, ‘ஆவி’ வரவில்லை, விற்றுப் போடலாம் என்ற எண்ணம் இருந்தது... இப்போது அது என்ன நினைத்தும் தங்காது போல் இருக்கிறது. போகட்டும்.

     அவன் அதைப் பண்ணிய காலத்தில், இரண்டாயிரத்துக்குள் தான் அடங்கியது. இப்போது...

     கடை வீதிப்பக்கம், சேட் கடை ஒன்றில் ஏறி அதை நிறுக்கிறார்கள்.

     பதக்கம் மட்டுமே ஆயிரத்துக்கு மேல் கிரயமாகிறது.

     நகையின் கிரயம் அதையும் சேர்த்து, மூவாயிரத்து இருநூற்றுக்கு மேல் போகிறது. வட்டி, அசல் கடன் போக, இரண்டாயிரத்து, எண்பத்தெட்டு ரூபாய், கையில் கிடைக்கையில் இருட்டி விடுகிறது.

     ஆறுமுகத்தின் வீட்டு விறாந்தையிலேயே இரவைக் கழித்துவிட்டு, மறுநாட் காலையில் அவன் வண்டி பிடித்து ஒத்தை வந்து பஸ் ஏறி உச்சிப் பொழுதில் வீடு வந்து சேருகிறான். பழனி முதல் நாளிரவே ஏதோ வரத்துவண்டி பிடித்து வந்திருக்கிறான்.

     “பழனி, இத்தினி தொகையை வீட்டில வச்சிட்டுப் போகக்கூட இப்ப பயமா இருக்கு. நீயே கூட்டிட்டுப் போயி வங்கில கொண்டு போட்டுக் கணக்கு வச்சிக்குடு...”

     பழனி அவனை அழைத்துச் சென்று, வங்கியில் போட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுக்கிறான். இங்கு போட்ட பணத்தைத் தான் ஒரு நொடியில் பச்சைவேலு வாங்கிக் கொடுக்கச் சொன்னான்.

     “பெரியவரே, உங்களுக்கு நல்லத சொல்றேன். நீங்க சட்டுனு ஆரையும் நம்பிடறீங்க. நீங்க ஒண்ணு மட்டும் மறக்காதீங்க. அங்க, இலங்கையில இருந்தப்ப, தோட்டத்துல தாயாபுள்ளயா பழகியிருப்பாங்க. ஆளக்காணுறப்பவே, மாமா, மச்சான்னு கூப்பிடுவாங்க. சாப்பிடுங்க, இருங்கம்பாங்க. ஆனா, அதே ஆளுங்க, இங்கே இன்னிக்கு அந்த மாதிரி கல்மஷமில்லாம இல்ல. மிச்சம் ஆளுங்க ஒருத்தருக்கொருத்தன் அமுக்கிட்டுத் தாம் பிழைக்கறதில தா இருக்கிறாங்க. நீங்க யாரை, யாரு பொலீசில புடிச்சிக் குடுக்கறதுன்னும் புரியாது. அப்பிடியே நாயம் தேடிப் போனாலும் கிடைக்காது. புத்தகம், பதனமா வச்சிக்குங்க...” என்று அறிவுரையும் சொல்கிறான்.

     “முருகன் தான் என்னைக் கொண்டாந்து உங்கிட்டச் சேர்த்தான். தம்பி, உனக்கு ஒரு விசயம் தெரியுமா?”

     “சொல்லுங்க...?”

     “...குமார வேலு... இருக்கான்ல...?”

     “ஆமா...?”

     “அவ... எம்மகன்... என் ஒரே மகன்...!”

     அவன் சிறிது நேரம் உறுத்துப் பார்க்கிறான். “அட...? அப்பிடியா?”

     “ஆமாம். அவன இந்த ரத்தத்தக் குடுத்துப் படிக்கப் போட்டேன். ஒரே புள்ள... நம்ம சீவியந்தா இப்படி லோலுப்பட்டுச் சாவுறம், அவன் துரை கணக்கா, கிளாக்கர், சூபரின்டன்ட்னு வாரணும்னு நெனச்சே. ஆனா அவன் இன்னிக்கு எங்கக்கு எட்டாத ஒசரத்துல எழுதறான், பேசுறான்னு கேட்க அவன் ஆத்தா இல்லாம போயிட்டாளே...?”

     அவன் கண்களிலிருந்து அடக்க முடியாமல் நீர் வழிகிறது.

     “பெரியவரே, நீங்க ஏன் முன்னாடியே சொல்ல இல்ல. இப்படின்னு?”

     “எப்படிப்பா சொல்ல? அததுக்கு நேரம் காலம்னு வரணும். இப்பதா தோணிச்சி. அவ அம்மா சாவுக்குக்கூட வர இல்ல, சொல்லாம போயி நம்மளத் தோட்டக் காட்டான்னு ஏசுற சனத்தில் கட்டிக்கிட்டான்னு வருத்தமா இருந்தேன். பின்னாடி எப்பிடி எப்பிடியோ ஆயிப்போச்சி. இப்ப, அவ, இந்த மொத்த மனிச பந்தத்தையும் ஏத்தி வச்சிட்டிருக்கிறான். அதை ஒண்ணையே பெருமையா நினைச்சுக்கறேன். அதை ஒண்ணையே பெருமையா நினைச்சுக்கறேன். இனிமே, இந்தப் பொண்ணுக்கு ஒரு கலியாணம் கட்டி ஒப்பிச்ச பெறகு, ஒருக்க அவனப் பார்க்கணும். புரிஞ்சுக்காம, ரொம்பக் கடுமையாத் திட்டிப் போட்டே...”

     கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

     மனம் சிறிது இலேசாகிறது.

     கார்த்திகை பிறந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் பச்சைவேலு வருகிறான். கிழங்கு தோண்டி, பூமியெல்லாம் மீண்டும் கிளறிக் கொண்டிருக்கும் காலம். கோசு நாற்று வைத்திருக்கிறார்கள் எங்கும்.

     “ஏண்டாலே, உங்கப்பா, அம்மாகிட்ட சொன்னியா? எப்ப முகூர்த்தம் வச்சிக்கலாம்னாவ? அவங்க இங்க வாராங்களா? இல்ல, நாம போகணுமா?... இங்கேந்து அந்தப் பிள்ளையளயும் கூட்டிட்டுப் போகணும்னா, இப்ப மிச்சம் செலவாகும். பழனி சொல்றா, இங்கியே மாரியம்மன் கோயிலிலோ, இல்லாட்டி, ஒத்தை மலை மேல, முருகன் கோயில் இருக்காம்ல, அங்க வச்சி முடிச்சிட்டு வந்திடலாம்ல?...”

     பச்சை வழக்கம் போல் மீன், காரப் பொட்டலம், கோதுமை அல்வா எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். சுகந்தி, தீவாளிக்குப் பார்வதி மூலமாக, மாசம் பணம் கட்டும்படி ஒரு மினுமினுத்த சேலை எடுத்திருக்கிறாள். அன்றே அதை உடுத்து, தலைசீவிப் பொட்டிட்டுப் புதிய அலங்காரம் செய்து கொண்டு கல்யாணப் பெண்ணைப் போல் விளங்குவதாக முருகேசுவுக்குத் தோன்றுகிறது.

     மீசையை இழுத்துக் கடித்த வண்ணம் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் பச்சை வழக்கம் போல் சிரிக்கிறான்.

     “ஏண்டா? சொன்னியா உங்கப்பா அம்மாகிட்ட? இந்தக் கார்த்திகயிலியே கலியாணத்த முடிச்சிடணும்னு இருக்கிற. பிறகு, புருசன் பாடு, பொஞ்சாதி பாடு...”

     “வச்சிட்டாப் போச்சி. அப்பா அம்மா இப்ப வாராப்பில இல்ல. தங்கச்சி முழுவாம இருக்கு, வூட்டுக்கு வந்திருக்கு. அப்பாவுக்கு மூட்டுவலி, இங்க மலைமேல் வந்தா ஒத்துக்காதுன்னு சொல்லிட்டா... நீங்கல்லாந்தா மனிசங்க இப்ப...”

     மறுபடியும் ஒரு சிரிப்பு.

     “அப்ப, கடோசி ஞாயித்துக்கிழமை நல்லா இருக்கான்னு பாத்திட்டு வச்சிக்கலாமா?...”

     அவனுக்குச் சம்மதம் தான்.

     ‘கல்யாணம்’ என்ற சொல்லே எத்துணை இடைஞ்சல்களுக்கு நடுவே ஒலித்தாலும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைத் தள்ளி வருகிறது.

     தூத்துக்குடி முகாமில் கையிழந்த போராளிப் பையன் தங்கையின் திருமணத்துக்கு முன்னதாக வந்து வாழ்த்திவிட்டுப் போனதை எண்ணிக் கசிகிறான் முருகேசு. வாழ வேண்டிய காலத்தில், அந்த இளைஞனைப் போல் குமருவும் மரணத்தையும் துச்சமாக எண்ணிக் களத்தில் இறங்கியிருக்கிறான்...

     உணர்ச்சி முட்டிக் கண்ணீர் பொங்குகிறது.

     பத்திரிகை வைத்து, மரியாதைப் பட்டவர்களைக் கூப்பிட வேண்டும் என்ற ஆசை சுகந்திக்கு உள்ளூற இருக்கிறது. ஒத்தை முருகன் மலையில் கலியாணம் முடிக்க வேண்டும் என்பது முருகேசனின் தீர்மானம். பொட்டம்மாளோ, மேஸ்திரியோ, பக்கத்து வீட்டுச் சொந்தக்காரக் கிழவியோ, ராமசாமியோ வரப்போவதில்லை. பார்வதியையும் அவள் மகள்களையும் மனதில் வைத்துக் கொண்டு தான் சுகந்தி சொல்கிறாள் என்பது முருகேசனுக்குத் தெரியும். அந்தப் பெண்கள் கூச்ச நாச்சமில்லாமல் உடையணிந்து கொண்டு புறப்படுவதில் இவனுக்கு விருப்பமில்லை.

     “பத்திரிகை எல்லாம் எதுக்கு? அவ தாய் தகப்பன் இங்க இருக்கிறதா இருந்தாலும் வச்சிக் கூப்பிடணும். அவ மனுசா இல்ல. வாரவும் இல்ல. ...அதுக்கு ஒரு முப்பது நாப்பது, அம்பதுன்னு ஆற செலவுக்கு, உருப்படி எதுனாலும் வாங்கினாலும் இருக்கும்...”

     தீர்த்துவிட்டு, வேண்டப்பட்டவர்களை, அவனே அழைத்து விடுகிறான்.

     பொட்டம்மா, முப்பது ரூபாய்க்கு ஒரு ‘ஸில்வர்’ ஏனம் வாங்கிக் கொடுக்கிறாள். சரோஜாவுக்கும் தனத்துக்கு, முன்னதாகவே செய்தி சொல்லி அனுப்பி விட்டார்கள். பச்சைவேலுவின் நண்பன் தங்கராசு, டீக்கடைப்பையன் இரத்தினம் இருவரும் முன்பே கோயிலில் பூசைக்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து திருமணம் முடிந்து அங்கேயே பொங்கல் பிரசாதத்துக்கும் அச்சாரமும் கொடுக்கப் போகிறார்கள்.

     சந்தர்ப்பத்தை எண்ணி, முருகேசு தனத்துக்கும் சரோஜாவுக்கும் துணிகள் வாங்குகிறான். அரக்கும் பச்சையுமாகக் கலந்த இரு வண்ணத்தில் சரிகை போட்ட சின்னாளப் பட்டுச் சேலையும், மாப்பிள்ளைக்குப் பட்டுக்கரை வேட்டி, உருமால், சட்டை துணிமணியும் ஒத்தையில் வாங்கிக் கொண்டபின், டாக்டரம்மாளையும், அவள் தங்கை, அவள் புருசர் ஆகியோரையும் பார்த்துக் கும்பிட்டுக் கல்யாணத்துக்கு அழைக்கிறான்.

     டாக்டரம்மாள் மிகவும் சந்தோஷத்துடன், மணமக்களைக் கூட்டி வரும்படி சொல்கிறாள்.

     தனம் முன்னைவிட இப்போது முகமும் மேனியும் தெளிந்து மலர்ச்சியுடன் இருக்கிறால். மலைமீது உற்சாகத்துடன் ஏறுகிறார்கள்.

     ராமாயி போட்டுக் கொண்டிருந்த தாலியில் மஞ்சள் குங்குமம் வைத்து, புதிய மஞ்சட்சரட்டில் கோத்து, குருக்களுக்கு முன், பழம் வெற்றிலை பாக்கு, தேங்காய், பூமாலைகள் வைத்த தட்டில் வைக்கிறான்.

     குருக்கள் முருகன் சந்நிதியில் வைத்துப் பிரார்த்தனை செய்து, ஆசி மொழிந்து, தருகிறார்.

     “அம்மாளம், தெய்வமாயிட்ட உன் அம்மாளையும் ஊரிலிருக்கிற அப்பனையும் கும்பிட்டுக்க” என்று மாலையை எடுத்து அவள் கையில் கொடுக்கிறான். மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர். திடீர் வியப்பாக, தங்கராசுவிடம் இருந்து சிறு பெட்டியை வாங்கி, அதில் மின்னும் ஒரு தாமரைப் பூப்போட்ட மோதிரத்தை பச்சைவேலு, சுகந்தியின் விரலில் போடுகிறான்.

     “சொல்ல இல்லையே...”

     மகிழ்ச்சி பூரிக்கிறது.

     ஒரு குமரிப் பெண்ணுக்கு அவள் விரும்பும் இளைஞனைப் பார்த்து மண முடிப்பதின் இனிய அநுபவம் அவனுள் நிறைவாக இருக்கிறது.

     “ஆண்டாளு, எப்பிடியோ, மலையேறி, ஒரு வாக்கைக் காப்பாத்திட்டேன்...” என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு விழி நீரை ஒத்திக் கொள்கிறான். தாலியை அவன் அவள் கழுத்தில் அணிவித்ததும், குலவையிடக் கூடப் பெரிய பெண்கள் யாருமில்லை. பார்வதியை அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை உணர்ந்தாற்போல், சரோஜாவும், தனமும் குலவையிட்டு மகிழ்கிறார்கள்.

     பிரசாதமான பொங்கலும் புளியோதரையும் வடையும் உண்டு மகிழ்ந்து களித்தபின், பொழுதோடு மணமக்களை அழைத்துக் கொண்டு டாக்டரம்மா வீட்டுக்கு வருகிறான். அங்கே அவள் தங்கையும் இருக்கிறாள். அவர்களுக்கு இனிப்பு பர்பியும் காராபூந்தியும் வைத்துக் கொடுக்கிறாள். சரோஜாவும் தனமும் போய் எல்லாருக்கும் தேநீர் வழங்குகிறார்கள்.

     பச்சையும் சுகந்தியும் உட்காரக் கூசினாலும், “உக்காருங்க, சும்மா?” என்று டாக்டரம்மா உபசரிக்கிறாள்.

     தங்கராசு விரைந்து கீழே மார்க்கெட் கடை வீதிக்குச் சென்று, ஆரஞ்சும் மலைவாழைப் பழங்களும் வாங்கி வந்து வைக்கிறான். பால்கோவாத் துண்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறான். மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து பணிகின்றனர்.

     “என்னத்துக்கப்பா இதெல்லாம்?...”

     “ஆம்மா? ஊரில்லா ஊரில, எங்கக்கு நீங்க பெத்த தாய்க்கு மேல தெய்வமா இப்ப இருக்கிறீங்க. எங்க நன்றிய எப்படிக்காட்ட? காசுபணம் வேணும்தா. ஆனா, அதுக்கெல்லாம் மேல, நொந்து வந்த மனசுக்கு, இதமா முகமும், பேச்சும், மனுஷாபிமானமுந்தா. அதை நாங்க இந்த நேரத்தில மதிக்கிறாப்பல, உணருராப்பல, யாருக்கும் இருக்குமான்னு தெரியல. இருக்கட்டும் மா, புள்ளங்கள வாழ்த்துங்க...”

     நூற்றியொரு ரூபாயும் ரோஜாப் பூக்களும் வைத்துக் கொடுக்கிறார்கள்.

     ஒத்தையிலிருந்து அவர்கள் வீடு திரும்புகையில் மணி ஒன்பதடித்து விடுகிறது. எல்லோரும் விடைபெற்றுப் போய் விட்டார்கள். பார்வதியும் அக்கம்பக்கம், ருக்கு, தேவானை என்ற பெண்களும் வந்து ஆலம் சுற்றி மணமக்களை வரவேற்றுக் குலவை இடுகிறார்கள்...

     எல்லாரும் வந்து பேசிச் சென்ற பின், முருகேசு வெளியறையில் போர்வையைப் போர்த்துக் கொண்டு படுக்கிறாள். உள்ளே, அந்தக் கட்டில் - அறை சோபன அறையாக மாறியிருக்கிறது. அவர்களின் மெல்லிய குரலும் சிரிப்பொலியும், மௌன இருளின் இடையே எங்கிருந்தோ விழும் ஜன்னல் வெளிச்சம் போல் இதமளிக்கிறது.

     மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு மாதிரி தகுந்த இடங்களில் ஒப்படைத்து விட்டான். இனி ஒரு நடை... அந்தக் குழந்தையை... அவன் மகனின் குறுத்தான குழந்தையை மார்புற அணைத்து...

     இந்த இதமான நினைவுடனேயே தூங்கிப் போகிறான். வெகு நாட்களுக்குப் பிறகு அயர்ந்த உறக்கம்.

     இவன் கண் விழிக்கையில், பச்சை வேலு எழுந்து குளித்து, சாமி கும்பிட்டுத் திருநீறு தரித்திருக்கிறான். அவளும் நீராடிக் கூந்தல் ஈரம் விரிய, குங்குமமும் மஞ்சளுமாக, தேங்காய் துருவுகிறாள்.

     “அம்மளம்? எம்புட்டு நேரம் உறங்கிட்டேன்? சூரியன் உதிச்சிரிச்சே? எளுப்பக் கூடாது?...”

     “சூரியன் உதிக்கில தாத்தா, பனி மூட்டம் குளுருது உறங்குங்க...”

     பச்சை வேலு தலை சீவிக்கொண்டு, சிரிக்கிறான்.

     சுகந்தி... பார்த்தும் பாராமலும் களிகொண்ட முகத்துடன் வட்டையில் இருக்கும் கோதுமை மாவில் திருவிய தேங்காயைத் தட்டுகிறாள். முருகன் கோயிலில் முதல் நாள் உடைத்த தேங்காய் மூடி...

     அடுப்பில் கட்டை எரிந்து கணகணவென்று தணல் விழுந்திருக்கிறது. முதல் இரவானதும் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும் என்று யாரோ இந்தப் பெண்ணுக்குச் சொன்னார்கள்?

     “இன்னிக்கு லாரி லோடு எடுத்திட்டு மேட்டுப்பாளையம் போவணும் மாமா... நீங்க நாளக்கிதான வேலக்கிப் போறீங்க?...”

     “...எல, நா ஒருக்க மட்றாசிக்குப் போயி வந்திரணும்னு இருக்கே.”

     அவன் சட்டென்று விழிகள் நிலைத்துப் போகக் கையில் சீப்புடன் பார்க்கிறான்.

     “மட்றாசில என்ன மாமா விசேசம்? அங்க வேலை ஒண்ணும் கிடைக்காது. சீவிக்கிறது செரமம். நா அடிக்கடி லோடு எடுத்திட்டுப் போயிருவ. நீங்க இங்கியே இருந்திருக்கிறியன்னுதா, நா கலியாணம் கட்டவே சம்மதிச்சே...”

     “அட, அங்கிய போயி இருந்திட மாட்டன்ல, ஒரு நடை போயி பாத்திட்டு வந்திருவே...”

     “அங்க போயி லோனுக்கு எதுனாலும் ஏற்பாடு பண்ணணும்னு பழனி அண்ணாச்சி சொன்னாரா?”

     “அதெல்லாம் ஒனக்குத் தெரிஞ்சு என்னல ஆவணும்?”

     “என்ன மாமா? மட்றாசில முன்ன பின்ன தெரியாம எங்கிட்டுப் போயித் தங்குவிய, மோசடியும் புரட்டும் மிச்சம் உள்ள இடம் மட்றாசி. முளிச்சுக் கிட்டிருக்கறப்பவே முளிய எடுத்திடுவாங்க, ஆளுக...”

     “என்னல, பயமுறுத்தற? பொண்ண குடுத்த சம்பந்தக்காரு வீட்டில போயி தங்குவ. உங்கப்ப ஆயியப் பாத்துப் பேசிட்டு, எனக்கும் ஒரு காரியம் இருக்கு, பாத்திட்டு மறு வண்டில திரும்பிடுவ. உங்க வீட்டில போயி உக்காந்திடுவன்னு நினச்சிப் பயந்து போனியால?”

     அவன் சிரிக்கிறான். “அதுக்கில்ல மாமு, நீங்க எத்தினி நா வோணாலும் இருங்க, எனக் கொண்ணுமில்ல, இவ தனியா இருப்பாளேன்னு தா ரோசிச்சே...”

     “ஒரு நாலு நா இருக்க மாட்டாளா, கலியாணம்னு கட்டி ஒரு காப்புக்கவுறு விழுந்திட்டா, தயிரியம் வந்திடும். அதுக்குதா இவ்வளவு விரிசா நானும் கலியாணம் கட்டணும்னு நினைச்சது?”

     முருகேசு பல்துலக்கிவிட்டு வருகையில், சுகந்தி, அடுப்பை எரிய விட்டு, விரல் பருமனுக்கு ரொட்டியைத் தட்டிப் போடுகிறாள். மணம் ஊரைத் தூக்குகிறது.

     அருகில் உட்கார்ந்திருக்கும் கணவனுக்கு, சூடாக இருக்கும் அந்தப் பெரிய ரொட்டியில் பாதியைப் பிட்டு, பொட்டுக்கடலையும் தேங்காயும் வர மிளகாயையும் வைத்து அறைத்த சட்டினியையும் எடுத்து வைக்கிறாள்.

     தாத்தாவை அவள் கவனிக்கவே மறந்து போனாற் போல், புருசன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     பெண்ணாகப் பிறந்ததன் பயனே இதுதானோ என்று முருகேசு உளம் கரைகிறான். அவனுடைய ராமாயி, இப்படி அவனுக்கு இதேபோல், நிரம்பத் தேங்காய் திருகிப் போட்டு, ரொட்டியைத் தட்டிப் போடுவாள். மாசி மீன் சம்பலும் வைப்பாள்...

     அவன் கண்களில் நீர் மல்க, பச்சைவேலுவின் உருவம் கரைகிறது. ஆனால்... அங்கே குமருவை உருவகப்படுத்திப் பார்க்கிறது மனசு. அவன்... அந்த பழனியாண்டியின் மகள் அலமேலுவைக் கட்டியிருந்தால், கும்பலோடு கும்பலாக இப்படி வந்து விழுந்து அல்லாடிக் கொண்டிருந்திருப்பார்கள். தோட்டக் காட்டானாகவே அழுந்தி, அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள்... இப்போது, லட்சத்தில் ஒருவனாக அவன் பிறந்த மண்ணில் நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கிறான்.

     “தாத்தா, தேத்தண்ணி குளுந்து போயிடும் எடுத்துக்கும், ரொட்டி... முருகேசு கீழே உட்காருகிறான். பச்சவேலு தலையில் அந்த வண்ணத்துண்டைச் சுற்றிக் கொண்டு, “சுகந்தி, வாரன், பத்திரம், ராவுல இல்ல, விடியக்காலம் வந்திருவ. வார, மாமா...!” என்று விடைபெற்றுக் கொண்டு படி இறங்குகிறான். சுகந்தி எழுந்து வாசலில் போய் நின்று பார்க்கிறாள். திருமணம் இளமையின் இனிய அநுபவங்களின் தோரணவாயிலாக, புதிய மெருகுகளை அழியாமல் வைக்கும் உணர்வுகளாக, லட்ச லட்சமான மலர்க் குவியல்களை முகிழ்க்கச் செய்திருப்பதை அந்த வறுமையில் கால்கொண்ட சாம்ராச்சியத்திலும் முருகேசு தரிசிக்கிறான்.