16

     அந்த வீட்டைக் கண்டுபிடித்து, அவரைச் சந்தித்தே தீருவேன் என்ற உறுதியுடன், எத்தனை பேரிடம் கேட்பது என்ற தயக்கமும் சடைவும் இன்றிக் கேட்டுக் கேட்டு ஒரு மேட்டில் அந்த ஒற்றைக் கட்டிடத்தைக் கண்டுபிடித்து விடுகிறான்.

     வளைவு வாயிலில் ‘இங்கிலீசு’ எழுத்துக்கள். இரண்டு மூன்று பையன்கள், தோட்டத்தில் ஏதோ கொத்திக் கொண்டிருக்கின்றனர்.

     முருகேசு படியேறி நிற்கிறான். சற்றே மூச்சு விட்டு, நிதானத்துடன், “தம்பிங்களா, மாஸ்டர்... மாஸ்டர் இருக்காருங்களா?” என்று கேட்கிறான்.

     “மாஸ்டர் கிளாஸ் எடுக்காரு. முடிஞ்சதும் வருவாரு, இருங்க...”

     சொற்கள் இதமாக இருக்கின்றன.

     காத்திருக்கிறான். சந்தைப் பேட்டைச் சந்தியில், ஒரு முழுச்சேலைக்கும் இல்லாதவளாகிப் போன சடயம்மாவும் குழந்தைகளும் பிச்சைக் கோலங்களாகக் காத்திருக்கும் கோலத்தை நெஞ்சில் உறைய வைத்துக் கொண்டு உள் வாயிலில் விழிகளைப் படித்தபடி, வராந்தா ஓரம் நிற்கிறான். பத்துப் பன்னிரண்டு வயசுச் சிறுவர் சிறுமியர் உள்ளிருந்து வருகின்றனர். ஒரே மாதிரியான காக்கியும் வெள்ளையும் பையன்கள் அணிந்திருக்கின்றனர்; பெண்கள் பச்சையும் வெள்ளையும் அணிந்திருக்கின்றனர். தொடர்ந்து அவரும் வெளியே வருகிறார்.

     “வணக்கம் ஐயா!... கும்பிடறேன்...”

     “என்னப்பா விஷயம்?... உன்னை எங்கோ பார்த்தேன் போல இருக்குது?”

     “அன்னைக்குக் கடையில், பழனிவேலுவோட வந்தேன் சாமி...”

     “ஆமாம், சிரீலங்கா பைனான்ஸ்ல ஏமாந்து போனே, பிறகு... எதோ நகையக் குடுத்து வேறு ஏமாந்திட்டே இல்ல?”

     “...ஆமாம் சாமி... இப்ப எனக்கு முக்கியமா, ஒரு ரொம்ப கயிஷ்டமான விஷயம்... நம்ம பொண்ணு... பொண்ணு போல தா. இங்க பொழக்க வழியில்லாம காட்டில வெறவு வெட்டிச் சீவிக்கிறதுங்க, புருசன ஆனை முதிச்சிடிச்சி... எனக்கு... லோனொண்ணும் தொழில் பண்ணக் கிடய்க்கல, கிடச்சதக் கொண்டு குடுத்திட்ட. அத்தோட நிரந்தரமா வேலை ஒண்ணும் இல்ல. இந்தப் புள்ள ரெண்டு குழந்தைங்கள வச்சிட்டு பராரியா நிக்கிது. ஒரு வேலை... எங்கனாலும் ஒரு வேலை... சாமி, இத்தினி கஷ்டப்பாடுன்னு தெரியாம வந்திட்டம். திருடுறது, பிச்சையெடுக்கிறது, ரெண்டும் கேவலம். ஆனா, ரெம்ப சனங்க ரெண்டுக்கும் தள்ளிவிடப் பட்டிருக்காங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலய்யா!”

     வெள்ளி பிரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அவர் அதைக் கழற்றிவிட்டுத் துண்டால் கண்களை மூடித் துடைத்துக் கொள்கிறார்.

     “அந்தப் பொண்ணு... அவங்க எங்க...? இங்க வந்திருக்காங்களா?”

     “சந்தப் பேட்டயில உக்காத்தி வச்சிட்டு உங்க எடத்தைத் தேடிட்டு வந்தே ஐயா. இன்னொண்ணு உங்ககிட்டச் சொல்லணும். நா முதல்லியே சொல்லாததினால், எல்லாம் நம்பமாட்டேங்குறாங்க. நீங்க பேசிட்டிருந்தீங்க, மதிப்பா... அந்தக் குமாரவேலு எம் மகன்... சொந்த மகன். முதுகொடியத் தேயிலத் தோட்டத்தில அவன் ஆத்தாளும் நானும் உழச்சிப் படிக்கவச்சோம். கள்ளுத்தண்ணி பக்கம் போனதில்ல. புல்லுக்கன்ட்ராக்டு வேணுன்னு கூனிக்கூனி யாருயாருக் கெல்லாமோ வேலை செஞ்சேன். சதம் சதமா எண்ணிக் காசு சேத்து, மாசம் முப்பது நாப்பது அம்பதுன்னு குடுத்து அவனைப் படிக்கப் போட்டேன். வீண் போக இல்ல... அவனால் பேச முடியவில்லை.

     “பெரியவரே, உள்ள வாங்க. வந்து இருங்க... ஆறுதலா... ஆறுதலா...” உள்ளே சென்று அவர் ஒரு நாற்காலியை எடுத்து வந்து வராந்தாவில் போடுகிறார். அவன் அதற்குள், “வேணாமுங்க... நீங்க நின்னுக்கிட்டு, நா... உக்காருறதாவது. உக்காந்து பழக்கமில்லீங்க...” என்று அவர் கையிலிருந்து நாற்காலியை வாங்கி ஓரமாகப் போடுகிறான்.

     “...குடும்பத்தில் ஏதேதோ மனத்தாபப் பட்டுட்டு கடுமயாப் பேசிட்டேன். நீரடிச்சி நீர் விலகாதும்பாங்க. நீரடிச்சி ரெண்டு மண்ணையும் பிரிச்சி, இன்னிக்கு சொந்த பந்தம் இல்லாத ஒரு சுழலில சிக்கிட்டாப்பல அல்லாடுறோம். எனக்கு ஒருக்க அவனப் பாக்கணுமய்யா, பேசக்கூட வாணாம். தோட்டக்காட்டு அடிமை, இந்தப் புத்திதான அப்பனுக்கு இருக்குன்னு அவ வேதனைப் பட்டிட்டிருப்பா. அது இல்லேன்னு தெரிஞ்சிக்கணும்...’ அவ எங்கருக்கான்னு வெவரம் சொல்லிக்குடுங்க... ஒருக்க மட்ராசி போயிப் பாத்துட்டு வார... அதுவரய்க்கும், இந்தப் புள்ளியளுக்கு ஒரு வேலையும்... குடுக்கணும்...”

     அவர் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை.

     “குமாரவேலு உங்க மகன்னு இப்பதா நாலஞ்சு நா மிந்தி ஆறுமுகம் பேச்சுவாக்கில் சொன்னாரு. நீங்க வர விருப்பப் படலன்னு அஞ்சாறு மாசம் முன்ன இங்க வந்திருந்தப்ப குமாரு சொல்லியிருந்தார். மகனிடம், சுயநல பரமாப் பாசமும் உரிமையும் வைச்சிருக்காத உங்களைப் பார்க்கிறப்ப, இப்பிடியும் மனிசர் இருக்கிறார்னு கண்ணில தண்ணி வந்திரிச்சி. அவரு சம்சாரம், இப்ப... உங்களுக்குத் தெரியுமா...?”

     “என்னங்கய்யா? தெரியாதே? சொல்லுங்க?”

     “காண இல்லண்ணு தகவல். சிறையில இருக்காங்களோ, தலமறவாப் போயிட்டாங்களோ தெரிய இல்ல. இவுரு, தோட்டத் தொழிலாளிகள், தமக்கு உரிமையில்லாமல் வாய்ப் பூட்டுப் போடப்பட்ட அந்த 48, நவம்பர் பதினஞ்ச இப்ப, முழுதுமா அர்த்தால் அனுஷ்டித்து நினைவு கூறணும், போராடணும்னு திட்டம் வச்சிட்டு அங்க போகப் போறதாச் சொன்னாரு. குழந்தைய அதனாலதா மட்றாசில கொண்டு வந்து விட்டுப் போட்டேன்னாரு. மட்றாசில மச்சான் குடும்பம் கொண்டு வச்சிருக்கிறா. இன்னும் அவ சொந்தக்காரங்களும் இருக்காங்க போல இருக்கு. சின்ன பிரஸ் ஒண்ணு பார்த்திட்டிருக்கிறோம்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் கதைச்சாரு. இப்ப நமக்கு இப்படி அறிக்கைகள் வர தகவல்தான். மெட்றாசிலேந்து கல்லூரி மாணவர்கள் ஆய்வு பண்ணி ஒரு குழு வந்திருந்தாங்க. அவங்க கிட்டயும் விசாரிச்சேன். தோட்டங்களில் இலங்கையில் நம் தொழிலாளர் விழிப்புணர்வோடு போராடுறதாத் தகவல் வந்திட்டிருக்கு. எப்படியும் ஒரு திருப்பம் வந்துதானாகும்னு தோணுது. நீங்க... இப்ப என்ன செய்யப் போறீங்க...!”

     ...தவம்... அந்தப் பெண்... இவன் மருமகள்... சிறையில்... தலைமறைவு... இவனால் சீரணிக்கவே முடியவில்லையே!

     படிப்பு, வேலை, எல்லாம் இருக்கும் போது, ஒரு பெண், போராட வந்திருக்கிறாள். யாருக்காக? எதற்காக?

     ஐயோ? சிறையில் என்னென்ன கொடுமைகள் இழைப்பார்கள் என்பதை எல்லாம் தூத்துக்குடியில் அன்று சொன்னார்களே? இந்தப் பூப்போன்ற பெண்ணை எப்படியெல்லாம் பாடுபடுத்தியிருப்பார்களோ? குமாருவும் அந்தக் களத்தில் தான் போராடிக் கொண்டிருப்பான்...! முருகா! கதிர்காமக் கந்தா!... இவனுக்கு நா எழவில்லை. சடயம்மாவையும் குழந்தைகளையும் இந்த நெக்குருகலில் தாற்காலிகமாக மறந்து போகிறான். பெற்ற தாயின் கடைசி முகம் பார்க்கக் கூட வரவில்லை என்று அல்லவோ பொங்கினான்? எல்லாம் அற்பங்களாகி விட்டன.

     அவர் உள்ளே சென்று ஏதோ புத்தகத்தைக் கொண்டு வந்து புரட்டுகிறார். அதில் இருந்து அந்தச் சென்னை விலாசத்தைப் படிக்கிறார்.

     செல்வி ராஜசேகரன், ஏழாம் குறுக்குத் தெரு... பாரதி நகர்,... அண்ணாநகர் எக்ஸ்டென்ஷன்...

     “இந்த இடத்தில் தான் பிள்ளைய விட்டிருக்கிறதாகச் சொன்னா. ‘மாஸ்டர், உங்ககிட்ட இந்த அட்ரஸ் இருக்கட்டும்... உங்க ஸ்கூல் நல்லபடியாக நல்ல தாபனமா வரும்..’னு சொல்லிட்டுப் போனாரு. சொந்த பந்தம், பிள்ளை, தகப்பன், எல்லாப் பாசங்களையும் கழற்றிப் போட்டு விட்டு, நீதி கேட்கக் களம் இறங்கியிருக்கிறாங்க. நீங்க இங்க வந்திருக்கிறீங்கன்னு தெரிஞ்சா, ஆறுதலாயிருப்பாராக இருக்கும்...”

     இராமேசுவரத்தில் சுந்தரலிங்கம் பார்த்துச் சொன்னதாகச் சொல்லவில்லையா? அப்போது ஏன் நிற்கவில்லை...?

     முருகேசுவுக்குத் தோட்டத்துத் தேயிலை நிரைகளும், அந்தப் பிராந்திய வளைவு பாதைகளும் தான் தெரிந்தவை. அவனுடைய அறிவுக் கண்கள் இதற்குமேல் விரிவு பெறாதவை. அவனுக்குப் புரியவில்லை. ஆனால், சந்திரனின் மேடு பள்ளங்களும் நிழலும், பின் நிலவு வெளிச்சத்திலும் கூட நினைவு வருவதில்லையே? அவன் மகனும் மருமகளும், தோட்டக்காட்டுத் தமிழர்களிடையே புதிய சரித்திரம் படைக்கப் போயிருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் கணக்கப்பிள்ளை, கங்காணி, காலைச் சங்கு, பிரட்டுக்களம், கள்ளுக்கடை என்று சிறுமைக்குள் அழுத்தும் சுழலை விட்டு வெளியேறத் தெரியாமலேயே உதிரம் தேய்ந்து, மாண்டு மடிந்து அந்தத் தேயிலைக்கே உரமாகிப் போனவர்களின் சந்ததிகளைப் புதிய மனிதர்களாக்க இவர்கள் போயிருக்கிறார்கள்.

     இந்த நினைப்பில் மயிர்க்கூச் செறிகிறான்.

     “...யாரோ, உங்க பொண்ணு, காட்டுல விறகொடிக்கயில ஆளை முதிச்சிப் போட்டுதுன்னு சொன்னீங்களே? கூட்டிட்டு வாருங்க!...”

     இவனுக்குப் பிறகுதான் நிகழ்காலம் - நினைவுக்கு வருகிறது.

     இறங்கிச் சென்று, சந்தைப் பேட்டையில், மண்டியருகில் நின்ற சடயம்மாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருகிறான். மாஸ்டர், “எட்வர்ட்! எட்டி...?” என்று கூப்பிடுகிறார். வெள்ளைச் சட்டையும் அரைச் சராயும் அணிந்த பையன் வருகிறான்.

     “ஆறு பேருக்கு, தேத்தண்ணி வச்சிக் கொண்டாங்க, காந்தம்மா இருக்கில்ல?”

     “சரி, மாஸ்டர்!” என்று பையன் உள்ளே செல்கிறான்.

     மாஸ்டர் செல்லியையும் விழிகள் பொங்கி மூக்கு ஒழுகும் பையனையும் பார்த்து இரங்குகிறார்.

     “உம்பேரென்ன பையா?...”

     “வேலு...”

     “தங்கச்சி பேரு...?”

     “செல்லி” என்று செல்லியே துடிப்பாகச் சொல்லுகிறது. உள்ளே சென்று அவரே ஒரு வட்டையில் சுடுநீர் கொண்டு வருகிறார். ஒரு துண்டும் கையில் இருக்கிறது.

     “நல்லாக் கழுவிக்கிங்க... கழுவி விடும்மா... தேத்தண்ணி கொண்டாருவா...”

     சுடுநீரில் கழுவிக் கொள்வதே ஆடம்பரமாகி விட்ட வாழ்க்கையாகி விட மானுடம் அடித்தளத்துக்கு வந்து விட்டது.

     தட்டில் வருக்கி பிஸ்கோத்தும், கடலை உருண்டையும் எடுத்து வந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார். “இருங்க... உக்காந்துக்குங்க...”

     கண்ணாடிக் கிளாசில், தேத்தண்ணீர் ஊற்றி வந்து எட்டியும், பாவாடை சட்டைப் பெண் காந்தம்மாவும் கொடுக்கிறார்கள்.

     சடயம்மா, குறட்டோரம் உட்கார்ந்து தேநீரையும் பிஸ்கோத்துகளையும் குழந்தைகளுக்கும் கொடுத்துத் தானும் உண்ணுகிறாள்.

     பிறகு மாஸ்டர், காகிதமும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு அவளிடம் விவரம் கேட்கிறார். அவள் சொல்வதெல்லாம் குறித்துக் கொள்கிறார்.

     “ஏம்மா, ‘சுண்டி’ப் பக்கத்தேந்து தான வார? காட்டுலேந்து சந்தனக்கட்டை எல்லாம் திருடி வித்துப் போடுறாங்க, இலங்கை யாளுவங்கறாங்களே?”

     “சாமி, அதெல்லாம் நெம்பர் போட்ட மரமுங்க, நாங்க ஏங்க அதெல்லாம் தொடப்போறம்? கிட்டக் கூடப் போக மாட்டம். அதும் அவிய பாரஸ்டாருட்ட பாஸ் வாங்கி வச்சிருந்தா. இத்துப் போயிவுளும் கட்ட, குச்சி, காஞ்ச கொம்பு இதெல்லாந்தா வெட்டிட்டு வருவோம். இதுக்கே ஃபாரஸ்டாளு செலப்ப, காசு கொடுக்கலன்னா வம்பு பண்ணுவா...”

     “ஆன எப்பிடி வந்திச்சி?”

     “அது ஒத்த ஆனயிங்க. ஆரோ சுட்டிருக்காங்க போல இருக்கு. நெடு நெடுன்னு வந்து கொம்பெல்லாம் ஒடிச்சிப் போடும். முன்ன, ஒரு பொம்பிளயும் பயனும் ஓடக்கரயில சோறு தின்ன உக்காந்திருக்கச்சே வந்து சவட்டிப் போட்டுதாம்... பையன் எந்திரிச்சி ஓடிட்டான். பொம்பிள... தா அம்புட்டுக்கிட்டா. அல்லாம் கத சொல்றாப்பில ஆயிப் போச்சிங்க. இவங்க மரத்துமேல குந்திட்டு, காஞ்ச கிளைய ஒடிச்சிட்டிருந்தாங்க போல. ஆனை ஆனைன்னு சுத்துவட்டும் அம்புட்டுப் பேரும் ஓடிட்டாங்களாம். நாங்க பொம்பிளங்க இன்னொரு பக்கம் செம கட்டிட்டிருந்தம்..., அம்போ கும்போன்னு எல்லாரும் ஓடி வந்தம், இவங்கள மட்டும் காங்கல. சரி, எங்கிட்டின்னாலும் ஒளிஞ்சிட்டிருப்பா, வந்திருவான்னு ராமுச்சூடும் தவிச்சிட்டிருந்தே. ஒருக்க மரத்துமேல இருப்பா. ராமுச்சூடும் ஆன கீன நீக்கும்னெல்லாம் வர எலாதுன்னு அல்லாம் தயிரியம் சொன்னா. அடுத்த நா முச்சூடும் வர இல்ல. ஃபாரஸ்டாபீசில சொன்னம். பின்னாடி பார்த்தா, ஆனை பொரட்டி அளுவிப்போன ஒடம்பு தா கிடச்சிச்சி... ‘ஆனை சல்லியம் குடுத்தாலும் ஏன் இங்க வந்து சாவுறிய! காலி பண்ணிட்டுப் போங்க’ன்னு அல்லாம் வெரட்டுறாங்க. நூறு நூறாக் குடும்பங்க இருக்குங்க, எங்கிட்டுப் போவ?...”

     “அந்த ஒத்தையானை இது வரை நிறைய ஆளுங்களைக் கொன்னிடிச்சி. அதைச் சுடக்கூட ஆர்டர் குடுத்தாச்சின்னு சொன்னாங்க...” என்று அவர் தெரிவிக்கிறார்.

     “ஆனக் காட்டுல வந்து சாவனுமின்னு விதி போட்டிருக்கு...”

     இந்தச் சொல்லே ஈட்டி முனையாக வெந்த புண்ணில் உரைக்கிறது. அவனுக்கு வேலை... அத்தனை பேருக்கும் வேலை இல்லை. உடலை வருத்தி உழைக்க வேலை. பூமி... நிழல்... எதுவுமே இல்லை! ஆயிரம் ஆயிரமாகக் குடும்பங்கள் இப்படி நிலை குலைந்து குற்றுயிராக சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

     “இதுக்கு எங்கனாலும் ஒரு வேலை பார்த்துக் குடுங்கையா... ரொம்பப் புண்ணியமாப் போகும். இந்தப் புள்ள, இவக்கா, அம்மா அப்பா அல்லாரும் ஒரு குடும்பம் பொல இருந்தம். குமாரு ஒருத்தனப் படிக்கப் போட்டன்னா, அதுக்கு இவங்களும் கூட ஒத்துழச்சாங்க. இன்னிக்கு எப்படீன்னாலும் ஒரு உதவி நீங்க செய்யணும் சாமி...!”

     “...பிள்ளைங்க ரெண்டயும் பள்ளிக் கூடத்தில போடலாம், இங்க இருந்துக் கிடலாம். அதும் கஷ்டந்தா. இவங்களுக்குத்தான் பாதுகாப்பா எடம் வேணுமில்ல? நீங்க இருக்கிற எடத்துக்கு இப்ப கூட்டிட்டுப் போங்க, நா தகுந்த எடமா வேலை பாத்துச் சொல்லுறே...!”

     வேறு வழியில்லை. இருந்தாலும் அசுவாசமாக இருக்கிறது.

     குழந்தைகளை அங்கு விடுவது கஷ்டமாக இல்லை. தேநீரும் பிஸ்கட்டும் தந்தார்கள். பசி தெரியாமல் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை, தாயின் மீதிருக்கும் பிணைப்பையும் கூடத் தாற்காலிகமாக வென்று விடுகிறது.

     பஸ் ஏறிச் சென்று, கானகத்தின் ஓரம் முட்டு முட்டாக இவர்களின் பஞ்சை குடிசைகளைப் பார்க்கிறான். குஞ்சு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாகக் காட்டு விலங்குகளும் நச்சரவங்களும் நடமாடும் இடங்களில் ‘வாழ’ வந்திருக்கிறார்கள்!

     இது போன்ற கானகங்களில் நடந்து, காடுதிருத்திப் பசுமைக் கண்டு, பொன்னைக் கொழிக்க வைத்து, சீமைத் துரைமாரும் சின்னத்துரை வருக்கங்களும் நாகரிக பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை வாழத் தங்களைத் தேய்த்தவர்கள், இன்று தங்கள் சந்ததிக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் துடைத்து மீண்டும் இந்தக் கானகங்களில் தங்களை முடித்துக் கொள்ளும் அவலத்துக்கு நிறுத்தியிருக்கிறார்கள்...

     மூங்கிலை நட்டு மண்ணை அப்பித் தேய்த்து காய்ந்த காட்டுப் புற்களை வேய்ந்த வீட்டில், கதவுகூட ஒழுங்காக இல்லை. ஏழைக்கு அலுமினியம் சட்டியும் உடைந்த பிளாஸ்டிக்கும் கூடத் தங்கமாயிற்றே? சிம்னியில் சிறிது எண்ணெய்த்திரி இருக்கிறது. அதை ஏற்றி வைக்கிறாள் சடயம்மா.

     “இந்த வெளக்கு இல்லன்னா, விஷப்பூச்சி வாரது கூடத் தெரியாது. எதுனாலும் நஞ்சு கலக்கிக் குடிச்சிட்டுப் போயிரலாம்னுதா தோணும். ஆனா, ...இந்தப் பிள்ளங்கள எப்பிடிக் கொல்லலாமின்னு நினைச்சா...”

     நெஞ்சு கம்மிப் போகிறது.

     “...அழுவாத அழுவாதம்மா. கதையில சொல்லுவாங்க. பாரதயுத்தத்துக்கு மேல இது பெரிசு. அப்ப ஜப்பான்காரன் ஜர்மன்காரன் குண்டு போட்டான்னாங்க. நம்ம தோட்டம் வரய்க்கும் அப்பக் கூடத் தட்டுப்பாடு இப்பிடி இல்ல. அரிசிக்குத் தட்டுப்பாடுன்னாக்கூட, சோமபாலாவும் பொடிசிங்கோவும், பலாக்காயும் கிழங்குமாக் கொண்டு வந்து குடுத்திருக்கா. தண்ணி விட்டுக் கழுவித் தோலை உரிச்சி வெட்டி வேக விடுவோம். தேங்காய்த் திருவிக் கொட்டினால் என்ன ருசியா இருக்கும்! அவங்களுக்கு அரிசியே கிடைக்காது. எஸ்டேட் அரிசி. துரை எங்கிருந்தாலும் தருவிச்சி ரேசன்ல போடுவதை, அப்ப இப்ப கொஞ்சம் டீத்தூளும் கூடக் குடுத்தா, கோணியோட கொண்டாந்து கொட்டுவா... விலையே இல்லாமல் குடுத்திருக்கா, வரிக்கான் தேன்களை... பத்து வருசம் பழை இல்லாம இருந்தாலும் பலாக்காயும் மரவள்ளியும் ஈடு கொடுக்கும். பாக்குமரம் தன்னால் கொட்டிக் கிடக்கும். நூறு இருபது சதம், தப்பினா முப்பது சதம்... அந்தக் காலம் எல்லாம் ஏன், எப்படிப் போச்சி? அதே சிங்களவங்க, எப்பிடி மாறிப்போனா? ஆய் ஊய்னு கத்திட்டு வந்து தீயே வச்சு, கந்தன் கோயிலுக்குப் போயிட்டு வந்த சனங்களை... குஞ்சும் குளந்தையுமா எரிச்சிப் போட்டானுகளே? பாவிக...”

     எதை எதையோ நினைத்து நிகழ்காலத்துத் திகில் பள்ளங்களை மூட முயன்று இரவைக் கழிக்கிறார்கள்.

     “சுகந்திய பச்சைக்குத்தா கட்டி வச்சிருக்கு. அங்க உன்ன ஒருவாரம் பத்துநாப் போல வுட்டுவச்சிட்டு, ஒருநட மட்றாசிக்குப் போயி, அந்தப் புள்ளயப் பாக்கணும்னிருக்கு. தாபமா இருக்கு சடயம்மா. மாஸ்டர் சொல்றாரு, தவம்... தவம், குமாருவோட பொஞ்சாதி ஜெயில்ல இருக்கும்னு. இவன், இங்கியும் அங்கியும்னு, எந்த நிமிசமும் குண்டடி பட்டுச் சாவுற சோலியில குளந்தய விட்டுப்போட்டுப் போயிருக்கிறானாம். கேட்டதிலேந்து மனசு ரொம்பத் தவிக்குது...”

     “குமருவா...?”

     “ஆமாம். அன்னன்னிக்கு குண்டடிபட்டு செத்திட்டிருக்கிறாங்க சனங்க. எலிகோப்டரில இருந்து சுடறாங்களாம். பேப்பர் படிக்கிறவங்க, பேசிப்பாங்க. ஆனா, அதெல்லாம் நமக்கு இல்லன்னு நான் காதில போட்டுக்கிட்டதில்ல. ஆனா, நேத்து விசயம் கேட்ட பிற்பாடு... ரொம்பத் தாவமா இருக்கு...”

     “மாமா, எம் புள்ளங்கள ஒரு எடத்துல ஒப்பிச்சிட்டம். எப்பிடியோ அதுங்க புழச்சிக்கிடட்டும். இனி எனக்குக் கவல இல்ல. என்னப்பத்திக் கவனிக்காம நீங்க போயிவாங்க...”

     “சுகந்திப் பொண்ணு அப்பப்ப கோவமா ஏறுமாறா நடந்துட்டாலும் நீ மனசில வச்சுக்காத. சொல்லி வைக்கிறேன்... அட, பொட்டம்மா வூட்டில போயி அஞ்சு தடவைக்கு நாலு தடவியாக் கேட்டா, எங்கனாலும் உன் வயிறு புழக்க வேலை கிடைக்கும். நம்புவோம்...”

     முருகேசு தன் எண்ணங்களையே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால், சடயம்மா ஒப்பவில்லை. “மாமு நீங்க தப்பா நெனச்சிக்காதீங்க. துப்புன எச்சிய முழுங்குற மாதிரி நா மறுக்க அங்க வரதுக்கில்ல. நீங்க ஊருக்கெல்லாம் போயி வாங்க. நா இப்ப புள்ளங்க கவல இல்லாததால, எப்பிடியோ கஞ்சி காச்சிக் குடிச்சிப்ப... இப்ப நானு கோத்தகிரிப் பக்கம் வர இல்ல...”

     முருகேசு வேறு வழியின்றித் திரும்புகிறான்.