17

     முருகேசுவுக்குக் கொழும்பு நகரம் தெரியும். அந்தப் பாவனையுடன் சென்னை சென்டிரல் நிலையத்தில் வந்திறங்கி வெளியே வருகிறான்.

     “உனக்கு சரியாகச் சொல்ல வாராது... இந்தச் சீட்டை போலீசுகாரங்ககிட்ட காட்டினா, சரியான நெம்பர் பஸ்ல ஏறச் சொல்லிக் காட்டுவா. மிச்சம் பொலீசும் மோசம்னு வச்சிடாதீங்க! உதவுவாங்க!” என்று குழந்தை வேலு சொல்லி இருக்கிறான். அதைக் கெட்டியாக முடிந்து கொண்டு, படியருகில் நிற்கும், ‘பொலீசு’ உடை தரித்த ஒருவரிடம் அவன், “இந்த அட்ரசுக்கு எப்பிடிப் போகணும்னு சொல்றீங்களா சார், கொஞ்சம்!” என்று கேட்கிறான்.

     சாதாரண ‘கான்ஸ்டபிலை’ விட உயர்ந்த அதிகாரி போல் அவர் தோன்றுகிறார். நடுத்தர வயசுக்காரர். பார்க்க அச்சுறுத்தும் முகமாக இருந்தாலும், இவனிடம், “இப்படி வெளியே சுரங்க வழியில் போய் ரோடுக்கு அப்பால, அதா பஸ் நிற்கிறதே, அங்கே போயி, பதினஞ்சு நம்பரில் ஏறு!” என்று காட்டிக் கொடுக்கிறார்.

     முருகேசு சுரங்கப் பாதையில் இறங்கிச் சாலையைக் கடக்கிறான். அவன் கண்டிருந்த பெருநகரங்களைக் காட்டிலும் சென்னைப் பட்டினம் மிக மிகப் பெரியதென்று தோன்றுகிறது... பஸ்... பஸ்களில் தேனீக்கள் அடையில் மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டல்லவோ மக்கள் ஒட்டிக் கொண்டு வீதியில் நகருகின்றனர்! பஸ்... ஒன்றா இரண்டா?... கார்கள், டிரக்குகள்... கலுகங்கையில் வெள்ளக் காலத்தில் தண்ணீர் ஓடுவது போலல்லவோ ஓடுகின்றன? முதலும் புரியவில்லை; முடிவும் புரியவில்லை. இப்படி ஒரு மக்கள் கடலினிடையே, குமாருவின் மச்சான் குடியிருக்கும் வீட்டை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறான்?

     ‘காவல் துறைக்கார’ காட்டிவிட்ட நிறுத்தத்தில் பஸ்கள் வருகின்றன, நிற்கின்றன; நகருகின்றன. அலுவலக நேரம், மக்கள் பிதுங்கி வழியத் தொத்திக் கொள்கின்றனர். நீள நெடுக, பஸ்ஸுக்குக் காத்திருப்பவர்களின் தங்குமிடச் சார்புகள் இருக்கின்றன. அவன் தன் கையிலுள்ள விலாசச் சீட்டை மீண்டும் அங்கு நிற்கும் ஒரு பெண்மணியிடம் காட்டுகிறான்.

     “பதினஞ்சு பஸ் எங்கம்மா நிக்கும்?”

     “இதோ... அடுத்த ஸ்டாப்ல நில்லுங்க...”

     அவள் காட்டுமிடம் ஆஸ்பத்திரி வாயிலை ஒட்டி இருக்கிறது.

     அங்கிருந்து ஓர் உடலை, ஓரமாகக் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கிறான். தலைவிரி கோலமாக ஓர் இளம் பெண்... ஒரு முதியவர் இருவரும் கதறி அழுது கொண்டு தொடருகின்றனர்.

     இளம்பிள்ளையா மாண்டவன்...?

     முருகேசு துணுக்குற்று, அந்த இருவரையும் வண்டியையும் மட்டுமே பார்த்துக் கொண்டு நிற்கிறான் சிறிது நேரம்.

     எந்த பஸ்கள் நின்றன, சென்றன என்று கவனிக்கத் தவறியவன் சட்டென்று நினைவில் தன் நிலை உறுத்த நிமிர்ந்து கொள்கிறான்.

     “ஏங்க, பதினஞ்சி பஸ்... வார எடம் சொல்றிங்களா?...”

     “இதா, வந்திட்டது, ஏறு! ஏறு!...”

     முருகேசு தன் பையுடன் கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு ஏறி விடுகிறான்.

     குளிர்காலம் என்பதின் சுவடே இல்லை. வெம்மையும் நெருக்கடியும் நெடிகளும், இரைச்சலும் இறுக்கிப் பிடிக்கின்றன.

     “ஏய்யா! எங்க போவணும்?... நகர்ந்து முன்ன போங்க... முன்ன போங்கய்யா! உள்ளாற எவ்வளவு எடம் இருக்கு!...”

     டிக்கெடெ கேட்டுவரும் நடத்துனர், இவனிடம் மீண்டும் எரிந்து விழுகிறார்.

     “ஏய்யா எங்க போகணும்?...”

     “எக்ஸ்டென்சனுங்க...” இரண்டு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறான்.

     உறுத்துப் பார்க்கிறார். பிறகு ஒரு ரூபாய் அழுக்கு நோட்டையும் ஒரு சீட்டையும் கிழித்து அவனிடம் கொடுக்கிறார்.

     அசைய முடியாத நெருக்கத்தில், பையைப் பத்திரமாக அமுக்கிக் கொண்டு முருகேசு நிற்கிறான். பட்டணம் இனம் புரியவில்லை.

     பெரிய நீண்ட சாலைகளில், நெருக்கடியான கடை வீதிகளில் பஸ் புகுந்து செல்கிறது. எங்கு பார்த்தாலும் மாடி வீடுகள், விளக்குகள்... கடைகள், மனிதர்கள், சீருடை அணிந்து பள்ளிசெல்லும் குழந்தைகள், அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் என்று வண்டி நின்று நின்று, இன்னம் இன்னம் என்று விழிபிதுங்க ஏற்றிக் கொள்கிறது.

     பெரம்பூர்...! வில்லிவாக்கம்! ஐ.ஸி.எஃப்...! அம்பத்தூர் என்று சீட்டைக் கிழித்துக் கொடுக்கிறான்; மாத அட்டைகளைத் துளைத்துத் தருகிறான்.

     பட்டணத்தில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? இவனுக்கும் இங்கே வேலை கிடைக்கும். சடயம்மாவைக் கூடக் கூட்டி வந்திருக்கலாமோ? ஓரிடத்தில் குனிந்து பார்க்கிறான். வளைவு வாயில் தோரணங்கள், வரவேற்பு வைபவம் நிகழ்ந்த அடையாளங்கள்... பானர்களில் ஏதேதோ எழுதிய வாசகங்கள். கறுப்பும் சிவப்புமாக அலங்காரங்கள். இரட்டை இலை வரிசைகள்... முதலமைச்சரின் பெரிய ‘கட் அவுட்’ தெரிகிறது. பல்வேறு சினிமா விளம்பர ஒட்டிகள்... இந்தியா... இந்தியாதான்!

     ஒரு குறிப்பிட்ட இடம் வந்து நின்றதும், “எறங்கு பெரியவரே!” என்று நடத்துனன் உசுப்புகிறான்.

     முருகேசு சட்டென்று பரபரப்புடன் பையைக் கவனமாகப் பற்றிக் கொண்டு இறங்குகிறான்.

     நெருக்கமான சாலை. இருமருங்கிலும் சந்தடி மிகுந்த கடைகள். துணிக்கடை, பாத்திரக்கடை, இரும்புக் கம்பி, சிமிட்டி போன்ற ‘கனரக’ சாதனங்கள் விற்கும் கடைகள்...

     இடையே குறுகலான சாலையில், பஸ்களும் லாரிகளும் போவதும் வருவதுமாக மிகுந்த நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. சாலையே குண்டும் குழியுமாக, அணிமையில் பெயத மழை, புயலின் சின்னங்களை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

     மாவுமில் கிரீச் கிரீச் சென்று, வண்டி வாகனங்களின் இரைச்சலுக்கு மேலாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அடுத்து ஒரு பலசரக்குக் கடை... வாயிலில் ஓர் அம்மாள் நிற்கிறாள். முருகேசு, தன் விலாசச் சீட்டை அவளிடம் காட்டலாமா என்று நினைக்கு முன், ஒரு சேற்றுக் குழியில் இறங்கிய லாரிச்சக்கரம், எழும்புகையில் சர்ரென்று சேற்று நீரை வாரி இறைத்துக் கொண்டு நகருகிறது. தன் சட்டை, வேட்டியில் அந்தச் சேறு தெறித்ததும், முருகேசுவுக்கு மிகவும் ஆத்திரமாக இருக்கிறது. தனது வறுமைக் கோலத்துக்கு இப்படியும் வேறு ஒரு அலங்காரமா என்று வெதும்பிப் போகிறான். போட்டிருப்பது நீலச் சட்டையும் கையில்லாத அந்த அரைக் கோட்டும்... இவனைப் போல் அரைக் கோட்டுத் தரித்தவர் எவரும் அங்கு தென்படவில்லை, என்பதும் அப்போது புலனாக, அதை மெள்ளக் கழற்றி, உட்பையில் உள்ள பர்சும் பணமும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்கிறான். பிறகு கடைப் படியில் ஒதுங்கி, அதைக் கைக்குள் இடுக்கிக் கொள்கிறான்.

     அவன் அணுகிக் கேட்க இருந்த பெண்மணி இதற்குள் மறுபக்கம் போய்விட்டான்.

     முருகேசு அப்போது தான், அந்தச் சாலையின் இடப்புறம் அகன்ற பெரிய சாலையும் இருமருங்கிலும் குடியிருக்கும் மாடி வீடுகளும் இருப்பதைக் காண்கிறான். சாலையில் இரு புறங்களிலும் மரங்கள்... வீடுகளின் முன் பசுமையாகப் பூச்செடிகளும் கோலங்களும் விரியும் வாயில்கள்... சாலை திரும்பும் நடுச்சந்தி முனையில் வண்டியில் சிவப்பும் மஞ்சளுமாக, ஆப்பிள் ஆரஞ்சுப்பழ வியாபாரம் செய்கிறான் ஒருவன். அதை ஒட்டி லாட்டரிச்சீட்டு வண்டி - அருகில் சாராயக் கடை... அதையும் அடுத்துக் கீற்றுத் தடுப்புடன் ஏதோ ஒரு அம்மன் கோயில், சூலம் - உண்டியல்...

     முருகேசு தயங்கித் தயங்கித் தனது விலாசச் சீட்டை எடுத்துக் கொண்டு லாட்டரிச் சீட்டுக்காரப் பையனை நெருங்குகிறான்.

     “இந்த இடம் எங்க தம்பி?”

     அங்கே யாரும் இவன் கேள்வியையே சட்டை செய்யவில்லை.

     முனை திரும்பி வீதிக்குள் நடக்கிறான். வீதியில் இரண்டு சக்கர ஊர்திகள் பட்பட்டென்று பறக்கின்றன.

     வீடுகளில் காலை நேரப் பரபரப்புக்கள்; ...முன் நிற்கும் வாகனங்கள், ஆணும் பெண்ணுமாக ஏற்றிக் கொண்டு நகரும் அவசரங்கள்.

     ஒரு வீட்டின் முன் நிற்கிறான்.

     இது போன்ற ஒரு வீட்டில்... மாடியிலோ கீழோ, குமாருவின் மச்சாள் இருக்கிறாள். அவள் பெயர்... செல்வி... செல்வி அம்மா... செல்வி ராஜசேகரன்... வாசலில் காத்திருந்து, அவன் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு, வெளியே வரும் ஓர் அலுவலகக்காரரிடம் கேட்கிறான். மனைவி வழியனுப்புவது போல் வந்து நிற்கிறாள்.

     “இங்கே செல்வி அம்மான்னு... இருக்காங்களா? ஸிலோன்காரங்க...”

     “தெரியலியேப்பா! அந்தப் பக்கம் போய்க் கேளு!”

     முருகேசு நடக்கிறான். உயர்ந்த சாலை மரங்களில் பச்சையாகத் தோலுரிக்கப் பட்டிருக்கிறது. குழிகளில் நீர்ப் பரப்பில் கூடி மகாநாடு நடத்தும் கொசுவினங்கள் ஒவ்வொரு சக்கரம் பதம் பார்க்கும் போதும் பறந்து போய்த் திரும்பக் கூடுகின்றன. அங்கே பெரிய சிவப்புப்பட்டைக் குறியுடன் ஆசுபத்திரிக் கட்டிடம் ஒன்று இருக்கிறது. வாசலில் பெரிய எழுத்துக்கள், சற்றுச் சிறிய எழுத்துக்கள் என்று பல்வேறு விவரப் பலகைகள் விளங்குகின்றன. அதே சிவப்பு அடையாளத்துடன் ‘அம்புலன்ஸ்’ வண்டியும் நிற்கிறது. காவாய்ப் பாலக்கல்லில் சற்றே உட்காருகிறான். கதிர்காமக் கந்தனையும், மீனாட்சி அம்மனையும் ஒருமுறை கூவி அழைத்துக் கொள்கிறான்.

     ஃபிளாஸ்கும் கையுமாக ஒரு காக்கிச் சட்டைப் பணியாளன் வருகிறான்.

     “இங்க... செல்வி ராஜசேகரன்னு.. ஸ்லோன்காரங்க... எந்த வூடுன்னு சொல்றியளா கொஞ்சம்...?”

     அந்த ஆள் நின்று இவனைப் பார்க்கிறான்.

     “ஸ்லோன் ஆளுங்கல்லாம், அதா, அந்த வூடுங்களுக்குப் பின்னால இருக்காங்க. அங்க போயி விசாரியும்!”

     அம்மாடி! துப்புக் கிடைத்துவிட்டது.

     அவன் காட்டிய திசையில் நடந்து, இந்தப் பெரிய வீட்டு வரிசைகளைத் தாண்டி பின்புறம்... குப்பை மேடுகளும் குடிசைகளுமாக இருக்கும் பகுதியில் வந்து நின்று விழிக்கிறான்.

     ...‘இங்கதா ஸ்லோன் ஆளுங்க’ என்று சொன்னான். ‘ஸ்லோன் ஆளுங்க’ என்றால், இவன் வருக்கத்துத் தோட்டத் தொழிலாளப் பஞ்சைகள் என்றே புரிந்து கொண்டு விட்டானா?

     தனது மடத்தனத்தை நொந்து கொள்கிறான். குமாருவின் மச்சாள், இது போன்ற ஓரிடத்தில் இருப்பாளா?... இல்லை. அவன் ‘ஸ்லோன் ஆளுங்க’ என்ரு பொதுவாகச் சொல்லியிருக்கக் கூடாது. ‘யாழ்ப்பாணக்காரங்க...’ என்று சொல்லி இருக்கலாம்...

     “அண்ணாச்சி?... முருகேசு அண்ணாச்சிதான? எங்க இம்பிட்டுத்தூரம்...? எப்ப இந்தியா வந்திய?...”

     ஒட்டிக் குழி விழுந்த கன்னத்தில் ஒட்டாத மீசையும், காக்கிச் சட்டை, முண்டாசுமாகத் தன்னை இனம் கண்டு கொண்ட மனிதனை முருகேசு விழித்துப் பார்க்கிறான்.

     “ஏங்க, புரியலியா? டிவிசன் மூணுல... கங்காணியா இருந்தன, ராமாயி புருசந்தான நீங்க!... ராமாயிக்கு ஒரு வகையில முறக்காரன்லா!...”

     இவன் கண்களில், ராமாயி என்ற ஒலியே வெம்பனியைக் கசியச் செய்கிறது.

     “...ஆமா...மாணிக்கக் கங்காணியில்ல! நீங்க இங்கதா இருக்கியளா?”

     “ஆமா. அதா, ஆசுபத்திரில வாட்ச்மேன் வேல. இப்பதா வீட்டுக்குப் போயிட்டிருக்கிற, அங்கியே உங்களப் பாத்தேன். சந்தேகமா இருந்திச்சி. அதா, இப்ப இங்க வந்து நின்னு கவனிச்சே. உங்க மகனப் படிக்கப் போட்டீங்க, அவன் தமிழ்ப் பொண்ணக் கட்டிக் கிட்டான், தாய் செத்ததுக்கும் கூட வார இல்லன்னு கேள்விப் பட்டேன். சங்கட்டமா இருந்திச்சி. இப்ப நீங்க எங்கிட்டிருந்து வந்திருக்கிய?...” முருகேசு எல்லா விவரங்களையும் பேசித்தீர்க்கிறான், அங்கே நின்றபடியே. முகவரிச்சீட்டை மாணிக்கம் பார்க்கிறான்.

     “இது பெரியார் நகருங்க. நீங்க அண்ணா நகர் எக்ஸ்டென்சன் விலாசத்த இங்க வச்சிட்டுத் தேடினா?... வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்...”

     இவர்கள் எழுபத்தெட்டில் தாயகம் திரும்பினார்களாம். “இங்க வந்தா என்னமோ தொழில் பண்ணலாம், வூடுவாசல் கட்டலான்னு பெர்மாதமா நினச்சது தா மிச்சம். கைப்பணமும் தின்னு, கடனும் பட்டதுதா மிச்சம்...”

     எருமை மாடும் சகதியும் குப்பை மேடுகளுமாக இருக்கும் சூழலில் குறுகுறுவென்று குழந்தைகள், அழுக்கைப் பற்றிய பிரக்ஞையேயில்லாமல் சொறி நாய்களுக்குச் சமமாகக் காட்சி தருகின்றன. கசாப்புக் கடையிலிருந்து, புதியதாக ஒரு எலும்புத் துண்டைச் சதையோடு கவ்வி வந்திருக்கும் ஒரு நாயுடன் நாலைந்து நாய்கள் மோதுகின்றன. எல்லாவற்றையும் கடந்து, கந்தல் சாக்குப் படுதாத் தொங்கும் ஒரு குடிசை முன் அவன் குனிந்து இவனை வரவேற்கிறான். “வாங்க அண்ணாச்சி?”

     “தேவான...? தேவான...”

     நீலப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து, முகத்தில் திட்டுத் திட்டாகப் பவுடர் தெரிய, பள்ளிக்கூடப் பையுடன் ஒரு பெண் உள்ளிருந்து வருகிறாள்.

     “எங்கடீ, அக்கா? நீ இஸ்கூலுக்குக் கிளம்பிட்ட அதுக்குள்ள?”

     “அக்கா எந்திரிக்கல. தூங்குது...”

     “இன்னுமா எந்திரிக்கல? மணி ஒம்பதாயிடிச்சி? ராவெல்லாம் பையி ஒட்டிச்சிதாக்கும்?...”

     வாசற்பக்கம் குட்டியான தாழ்வரையில் ஒரு கயிற்றுக் கட்டில் நெருங்கிக் கிடக்கிறது. அதில் ஒரு கந்தற்பாய் கிடக்கிறது. கட்டிலின் கீழ், வாளி, கயிறு, மற்றும் சில தட்டு முட்டுக்கள் தெரிகின்றன. “இருங்க அண்ணாச்சி, இந்தப் புள்ள ஏன் தூங்கறான்னு பாக்கிறேன்!”

     அவன் உள்ளே போகிறான்.

     “தேவான...! தேவான...! எந்திரம்மா? புள்ள பாரு, அடுப்புக்கிட்ட நிக்கிது. கோவாலு, தாமோதரன் அல்லாம் எங்க காணம்? கோவாலு இஸ்கூல் போனானா?...”

     ஒன்றரை வயசுக் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு மாணிக்கம் வருகிறான். தேவானையின் குரல் கேட்கிறது.

     “தூங்கிட்டே... ராவெல்லாம் கொசுக்கடி, இந்தப் புள்ள வேற உறங்காம சல்லியம் குடுத்திட்டிருந்திச்சா?...”

     “சரி, நாம் போயி சீனியும் பாலும் வாங்கிட்டு வார. தேத்தண்ணி போடு...” மெதுவான குரலில் கூறிவிட்டு, முருகேசுவை உள்ளே அழைக்கிறான்.

     “வாங்கண்ணாச்சி! உள்ளாற வாங்க!...”

     உள்ளே சதுரமான கூடம், சிமிட்டி போடப் பெற்று இருக்கிறது. சுவரும் வெளுப்பாக வெள்ளையடித்துப் பளிச்சென்றிருக்கிறது. கொடியில் துணிகள் மடித்துப் போடப்பட்டிருக்கின்றன. ‘டிரங்குப் பெட்டி’ ‘இலங்கை’ என்ற முத்திரை குத்தும் இலேசான சதுர மரத் தகட்டுப் பெட்டிகள் இரண்டு எல்லாம் ஓரமாக ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரம்பு செல்ஃபில், பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றறிவிக்கும் புத்தகங்கள் நோட்டுக்கள். அடுக்காக ஒட்டிய பைகள், பசை வைத்த அலுமினிய வட்டை...

     இங்கும் ஒரு கயிற்றுக் கட்டிலில் சாக்கு விரிப்பு இருக்கிறது.

     “உக்காருங்க... இவுரு ஆரு தெரியுமில்ல? மாமன்முறதா... இதுதா என் ரெண்டாவது மக, தேவான. அவ புள்ளதா இவெ... உங்க பேருதா முருகன்னு, இவ ஆத்தா போயி மூணு வருசம் ஆயிட்டுது இந்த அப்பிசியோட...”

     முருகேசு சலனமேயில்லாமல் உட்கார்ந்திருக்கிறான்.

     “அப்ப, தேவான, மாமனுக்குத் தண்ணி தவசி கொண்டாந்து குடு. இதா வந்திடறேன்...”

     பாலுக்கு ஓர் ஏனம் எடுத்துக் கொண்டு மாணிக்கம் வெளியே செல்கிறான். தேவானை பின்புறம் வாளியில் நீர் கொண்டு வைக்கிறாள்.

     பையில், மேட்டுப் பாளையத்தில் வாங்கிய பிஸ்கோத்தும் கமலாரஞ்சிப் பழங்களும் இருக்கின்றன. இந்தக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

     மாணிக்கம் திரும்புவதற்குள் இவன் முகம் கழுவிப் புதுப்பித்துக் கொள்கிறான். நெற்றியில் திருநீற்றை எடுத்து வைத்துக் கொள்கிறான்.

     தேவானை, குண்டு முகத்தில் பெரிய கண்களுடன், தேத்தண்ணீரும், வருக்கி பிஸ்கோத்தும் கொண்டு வைக்கிறாள்.

     குழந்தை அவளைப் போன்ற முகத்துடன் துருதுருவென்றிருக்கிறது. முருகேசு பிஸ்கோத்துப் பொட்டலத்தைப் பிரித்து அதன் கையில் ஒரு பிஸ்கோத்தை எடுத்துக் கொடுக்கிறான். ஆரஞ்சு கம்மென்று மணக்கிறது.

     தேநீரருந்திக் கொண்டு இருவரும் பேசுகிறார்கள்.

     “மருமகன் என்ன செய்கிறான்? எங்கிருக்கிறான்?...”

     “...அந்தக் கதய ஏன் கேக்குறிய அண்ணாச்சி? அங்கேந்து வாரியில, இந்தப் பொண்ணு சமஞ்சிருந்தாளா? அவங்களும் நம்ம சனங்கதா, ஒங்கக்கும் கூட, சுத்தி வளச்சா ஒறமுறையாகும். பதுளப் பக்கம் தோட்டத்தில இருந்தாங்க. கண்டியில பாஸ்போட்டு எடுக்கச் சொல்ல போயிப் பாத்து சிநேகிதமாச்சி. இந்தியா கவுர்மென்டிலே, குடும்பம்னு போனா, தனியா தொழில் பண்ண, வூடுவைக்கப் பணம் தாரான்னு சொன்னாங்கன்னு ரெண்டு வூட்டுக்காரங்களும் ஒரு மாதிரி பேசி செட்டப் பண்ணிட்டோம். இந்தப் பொண்ண அவனுக்குக் கட்டி வச்சாப்பில பேசி அப்படியே பாஸ்போட்டு எல்லாம் வாங்கிட்டு வந்தம். கலியாணமும் பண்ணிவச்சம். அவசரமா, அங்கியே கோயில்ல வச்சி...”

     “மிச்சம் பேரு அப்படித்தான பண்ணினாங்க!”

     “ஆமாம். அவங்க குடும்பத்தில முதப்பையன் கொடைக்கானல் பக்கம் வேலை கெடச்சிப் போயிட்டா. இவங்க அல்லாம் ஒண்ணா வந்தாங்க. எங்கக்கு வந்தவாசி பக்கம் சொஞ்சம் பூமி இருந்திச்சி. அத்த வச்சிட்டுத்தா தொழில் கடன் வாங்கலான்னு வந்தே. அதெல்லாம் ஒண்ணும் சரிவர இல்ல. பெரி... கதை. ஏழாயிரம் செலவு பண்ணி வீடு ஒண்ணு கட்டின. அத்த வித்துப் போட்டு, இவளுக்கு அடுத்தப் பொண்ணக் கட்டிக் குடுத்தேன். பையன் ரெண்டு பேரைப் படிக்கப் போட்டேன்... பின்னால அவ வேற சீக்கு வந்து செத்துப் போனா. பெரிய பையன் பத்துப் படிச்சிட்டு வேலை இல்லாம, இஸ்திரிப் பொட்டி வச்சிட்டு தொழில் நடத்துறான். அவனுக்குக் கல்யாணம் கட்டி தனியா இருக்கிறான்... வூட்டில அப்பிடி இப்பிடி பத்து நபர் சாப்பிடணும். என்ன செய்ய? இங்க தொழில் கடன் வாங்கித் தாரேன், வூட்டுக் கடன் வாங்கித் தாரேன்னு மிச்சம் பேரும் தரகங்க கிட்ட மோசம் போன கத தா. ஆரையும் நம்ப ஏலாது...”

     இந்தக் கதையைக் கேட்கவா முருகேசு வந்தான்?

     “அப்ப உங்க மருமக இந்த ஊருலதா தொழில் செய்யிறானா?”

     “அத்தத்தா சொல்ல வந்தே. மொதல்ல இந்த பக்கந்தா லாரி கிளீனரா இருந்தா. அப்பப்ப, பத்து நுப்பது சம்பாரிச்சித் தருவா. இப்ப... ஒரு ரெண்டு வருசமாச்சி. இந்தப் புள்ள முதல்ல முழுவாம இருந்து ஒரு புள்ள எட்டு மாசத்தில பொறந்து போயிடிச்சி. இதுக்கு ரெண்டு வருசமாயிடுத்து. இந்த வவுத்துல வச்சிருக்கிறப்ப, அவ, நீலகிரிப் பக்கம் மனுசாளிருக்கா, அங்க லொரி ஓட்டப் படிக்கிறேன், தேவானய பின்னாடி கூட்டிப் போறன்னு சொல்லிட்டுப் போனா. நானுங்கூட அங்க டீ தோட்டத்தில நல்லபடியா கிடச்சிச்சின்னா வந்திடறம்னு சொல்லி வச்சே... அதுக்கப்புறம், விலாங்கு மீனாட்ட வழுவிட்டே போறான். காயிதம் போடுறதில்ல. எப்பனாலும் வாரது. ஒரு நேரம் தங்கிட்டு, பத்து இருவது, ஒரு மிட்டாய், சேவுன்னு வாங்கித் தாரது, போயிடறது. இப்ப இங்க வந்து எட்டு மாசமாவுது. இங்க லோடெடுத்திட்டுவாரான். இப்ப, ரெண்டு மாச முன்ன வந்தானாம். அஞ்சாறு கிலோ கிளங்கும் கோசும் கொண்டாந்து குடுத்தானாம். எட்டிப் பாக்க இல்ல. எங்கே போயிச் சொல்லிக்க? நீங்க... அப்ப கோத்தையில இருக்கிறியளாக்கும்? குமாரு அங்க பொண்ணு கட்டினவ, அங்கியே தங்கிட்டானா?...”

     “அதொண்ணும் தெரிய இல்ல. அங்கதா கரச்சல் ரொம்பல்ல போயிட்டுது? புலி புலின்னு நிரபராதிகள ஆமிக்காரன் வந்து சுட்டுத்தள்ளுறானாமில்ல? இவனும் மருமகளும் அதுலல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறாப்பல இருக்கு. குமாரு இங்க இருந்து புஸ்தகமெல்லாம் எழுதி அனுப்புறான். பிள்ளை இங்க மச்சாள் வூட்டில இருக்குதாம். வந்து ஒரு நடை பார்க்கணும்னு அட்ரசு வாங்கிட்டு வந்தேன்...”

     “அண்ணா நகருப் பக்கம் அது. நான் கூட்டிப் போறேன்... இப்பம் இங்க குளிச்சி சாப்பிட்டுப் போகலாம். நீங்க எப்படீன்னாலும், நீலகிரிப் பக்கம் அந்தப் பயலத் துப்புக் கண்டு சொல்லணும். முருகனே அனுப்பிச்சாப்பல வந்திருக்கிறீங்க...”

     “விசாரிக்கலாம். அங்கயும் ஏகத்துக்கு ஸிலோன் ஆளுக, தோட்டத்துக்காரங்க வந்து திண்டாடுறாங்க. ஒண்ணும் சொகமில்ல. இக்கரைக்கு அக்கர பச்ச. அம்புட்டுதா...”

     “இருந்தாலும் மட்ராசு மிச்சம் மோசம் அண்ணாச்சி. இங்க ஆளுங்க ரொம்ப சூதுக்காரங்க. முதமுதல்ல. வந்த புதுசில, வேலு இங்கதா ஆடோ சாப்பில வேலைக்கிருந்தா. நாளொண்ணுக்கு ஏழெட்டுக் கொண்டாருவான். இவனுவ, அவனத் திருட்டுப்பய அது இதுன்னு சொல்லி முதலாளிட்டக் காட்டிக் குடுத்து அடிச்சிப் போட்டா. அதுக்குப் பிறகுதா இங்க வுட்டுப்போனா. நம்மவங்க ஆரும் மின்னுக்கு வர ஏலாது இங்க. நாம வார வழியில எரும பாத்தமில்ல? அதெல்லாம் வங்கிக் கடனுக்குத்தா இவனுவ வாங்கிருக்கா. நமக்கொண்ணும் கிடைக்கிறதில்ல. அதா ரோட்டோரம், கைவண்டி வச்சிட்டிருக்கானே ஒராளு, அவ நா இங்க வாரப்ப, கூலிக்குப் பாலு கறந்து கொண்டு விட்டிட்டிருந்தா. இப்ப, இந்த பக்கம்பூரா வளச்சிப் போட்டிட்டிருக்கிறா. கிழக்கால தெரியிற குடிச அம்புட்டும் அவனுக்கு வாடகை. இந்தப் பக்கத்துக்கே அவந்தா, பெரிய ஆளு. அமைச்சர் வருவாரு, கட்சிக்காரர் வருவாரு, கொடி போடுவாங்க, மைக்குப் போட்டுப் பேசுவாங்க. இதா, இப்ப வெள்ளம் வந்திருச்சி... இங்கொண்ணும் ரொம்ப சேதமில்லன்னாலும், கல்லுவூடு வச்சவன்லாம், அரிசி, வேட்டி, சேலை, ஏனம், பணம் அதெல்லாம் வாங்கிட்டாங்க. அதா இந்த வூட்டுச் செவுரே போயி இப்பதா வச்சே. நம்ம பேரொண்ணும் எழுதமாட்டா... அத்த ஏன் கேக்குறீங்க அண்ணாச்சி! ரோட்டு மரத்துப் பச்சையம் புட்டயும் உரிச்செடுப்பானுவ. தழய தொரட்டியால வெட்டி ஆட்டுக்குப் போட்டு மரத்தை மொட்டயடிப்பாங்க. அவங்கள யாரும் கண்டுக்கமாட்டா. நம்ம புள்ளங்க எங்கனாலும் ஒரு காஞ்ச குச்சி எடுத்திட்டாப் போதும். ஏசு ஏசுன்னு ஏசித் தொரத்துவாங்க. ஆ, ஊன்னா, பொலீசைக் கூட்டு வெரட்டுவம்பாங்க... நமக்காக யாரு கேக்குறது? அவுங்கள அண்டிக்கிட்டுத் தண்ணி குடிக்கிறமில்ல...?”

     மாணிக்கம் மூச்சு விடுகிறான். அப்போது எங்கோ வீட்டு வேலை செய்யப் போயிருந்த அலமேலு தேவானைக்கு இளையவளான பெண், ஒரு அலுமினியம் தூக்கில் மிகுந்த பழைய சோற்றுடன் வருகிறாள்.

     “இவளுக்குக் கலியாணம் கட்டணும். கொலனில ரெண்டு வூடு வேலை செய்யிது. அம்பது ரூபா கெடக்கிது...”

     முருகேசு குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கிறான்.