18

     அவனுக்குக் குளிக்கத் தண்ணீர் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். கோசும் தேங்காயுமாகப் பொரியலும், வெங்காயம் மணக்கப் பருப்பு சாம்பாரும் ஆக்கி, விருந்தாளிக்குப் படைக்கிறார்கள்.

     சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் வாயிலில் பெரிய கூச்சல் கேட்கிறது. தேவானை வெளியே விரைந்து செல்கிறாள்.

     “ஏண்டி தேவுடியா? துணிய மெறிச்சிட்டுப் போயி, நீ தண்ணி புடிச்சிட்டுப் போறா? ஒண்ட வந்த பறக்கயித...” வசைகள் பொல பொலக்கின்றன...

     “எம்மா, நவுத்திவச்ச. பொழுதுக்கும் குழாய நீங்களே ஆளுறீங்க. சர்க்காரு அல்லாத்துக்கும் சேத்துதான, பொதுவா குழா போட்டிருக்கா?”

     “சர்க்காரு போட்டிருக்கா, நீ முந்தி விரிச்ச பன்னாட, பறப்பன்னாட, புருசன ஓட்டி விட்டுட்டு ஊரு மேல போற கயித... சோப்புப் போட்டுத் துணிக் கசக்கி வச்சிட்டு உள்ளேந்து குடம் கழுவி வருமுன்ன, துணிய விசிறி எறிஞ்சி மெதிச்சிட்டுப் போறா! இன்னா திமிரு இருந்தா நீ துணியக் கீழ விசிறுவ...! அடீ... இந்த ஆலயம்மா ஆருன்னு உனுக்கு புரியல...! ராச்சியமா பண்ணுறிய இங்க வந்து! சாணியக் களவாடுறது, எருமுட்டயக் களவாடுறது, அசந்து மறந்தா கோளியக் கூடத் தூக்கிட்டுப் போயி முளுங்கிடற கும்பலு... கேடுகெட்டதுங்க!...”

     “இந்தாம்மா, ஏனிப்படி இல்லாதது பொல்லாததெல்லாம் பேசுறிய?...”

     மாணிக்கம் கையை உதறிவிட்டு, “தேவானை! நீ உள்ளாற வா...” என்று கத்துகிறான்...

     எழுந்து சென்று அவளை உள்ளே தள்ளிவந்து வாயிற் கதவைச் சாத்துகிறான். தேவானை பிழியப் பிழிய அழுகிறாள்.

     “எந்நேரமும் வம்புச் சண்டைக்கு வலிய வருது இந்தப் பொம்பிள... ஆமாப்பா, நா வேலை செய்யிற வூட்டில அந்தப் பொம்பிள தங்கச்சி வேலை செஞ்சிட்டிருந்திச்சா. குளந்த மோதரம் காணாமப் போச்சா. எதுனாலும் சாமான் கிடச்சா, கொண்டாந்து குடுக்கமாட்டாளாம். அவங்க நிப்பாட்டிட்டு என்ன வச்சிட்டாங்களா. அதே கெரு வச்சிட்டுப் போகவரத் திட்டுறா. பொலீச வுட்டு அடிக்கச் சொல்லுவ அப்பிடி இப்பிடின்னுறா...”

     “கெடக்கிறாங்க, விடு. நாம எதுத்துப் பேசக் கூடாது. பதனமா, நம்மமட்டும் அடாவடிக்குப் போகாதவங்களாத்தா பொழக்கணும். நாமெல்லாம் வந்திருக்கக் கூடாது. இந்த மண்ணுல சொந்தம் கொண்டாட நமுக்கு என்னா இருக்கு? நமக்குன்னு பேசுறவங்க யாரிக்கா? நமக்கென்ன கட்சியா, சங்கமா என்ன இருக்கு?... எலக்சன்னா, அந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடு, இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுன்னு வாராங்க. மத்தபடி நமக்கென்ன இருக்கு இங்க?”

     கதவைச் சாத்தினாலும் வெளியே வசைமழை நின்றபாடில்லை. இப்போது புதிய கீச்சுக்குரல் இவர்கள் சார்பில் ஒலிக்கிறது. அலமேலு கிளர்ச்சியுடன் வெளியே கதவைத் திறந்து சாக்கை நீக்கிப் பார்க்கிறாள்.

     “பேசாதடி அறிவு கெட்ட நாயி, சாராயத்த ஊத்தி போலீசுக்கும் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்குவே. நேயி... நேயி... தூ!...”

     “நீ பேசாதடீ பன்னி! நீங்கல்லாம் மனுசங்களா? கண்டவனுக்கும் முந்தி விரிக்கிற பன்னிங்க! பொஞ்சாதியக் கூட்டிவிட்டு வயிறு வளக்கிற பன்னிங்க!... இவளுவ ரோட்டோரமும் சந்தியிலும் மினுக்கிகிட்டு நிக்கிறதும் சீலையத் தூக்கி சிரிக்கிறதும்... துத்தேறி!...”

     “அலமேலு! கதவை மூடு...!”

     முருகேசு நடுங்கிப் போகிறான்.

     மலைமேல் இவ்வளவு சீரழிவு இல்லை.

     எடுத்த கவளச் சோறு உள்ளே செல்ல மறுக்கிறது.

     “ருக்குமணி அக்காதா இவளுவளுக்குச் சரி... நாம பேசாம இருந்தா சும்மா குலச்சுக்கிட்டே இருப்பா...”

     “நீங்க இப்ப கதவத் துறக்க வேணாம். அது இப்பிடித் தான் புகஞ்சிட்டே இருக்கும். பொக்குனு கிளம்பும். நீ நாயி, நீ பன்னின்னு திட்டிப்பா. ஆம்பிளக இதுல தலையே குடுக்க மாட்டா. நெதம் இது பழக்கமாப் போச்சி?”

     “சண்ட போடற பொம்பிளயும் நம்மவங்க தானா?”

     “இல்ல இல்ல. இங்கத்து ஆளுவ. அதா கச்சிக் கொடி போட்டிருக்கே? சாராயக் கடைக்காரன் ஆளுக... இங்க முச்சூடும் ஃபக்டரிங்கதா. தொழிலாளிக்கு நல்ல சம்பளமும் இருக்கு. ஆனா, எல்லாம் குடிச்சிப் போடுவா. வூட்டுப் பொம்பிள மட்டும் நேர்மயா இருக்கணுமின்னா எப்பிடி?... மிச்சூடும் மோச மில்லன்னாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் சரியில்ல. நம்ம ஆளுவளே எதும் பண்ண முடியாம, பொம்பிளயலதா பொழக்கிறா. அதும் இருக்கு. ஏன் மறைக்கணும் அண்ணாச்சி?... மானம் மரியாதி, கவுரவம் ஒழுங்கு அல்லாம் வயித்துக்கில்லன்னா போயிடுது...”

     ஒருவரும் ஒலி எழுப்பவில்லை.

     சாப்பிட்டு முடிந்த பின் பின்பக்கமே கை கழுவிக் கொள்கிறார்கள். பிறகு கட்டிலில் உட்கார்ந்து புகை பிடிக்கிறார்கள். “சமஞ்ச புள்ளய வீட்டில வச்சிக்கவும் முடியாம அனுப்பவும் முடியாம அதா கஷ்டமா இருக்கு. ஒருத்திக்குக் கட்டியே, அந்தப்பய பொஞ்சாதி புள்ளன்ற நெனப்பில்லாம இருக்கிறா. நல்லா உழைப்பா, பேசுவா சிரிப்பா, ஆனா, சூதாடுறா. அதுதா கையில பணம் தங்கறதில்ல. வூட்டுக்கு வாரதில்லன்னு அவாயி சொல்றா. வேற தொடுப்பு கிடுப்பு வச்சித் தொலைச்சிருக்கானோ என்னமோ அதும் தெரியல...”

     “புள்ள அலமேலு!, அந்த படத்தை எடுத்து வா, அண்ணாச்சி கிட்டக் காட்டுவம்...”

     சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை அலமேலு எம்பி மெள்ள மெடுக்கிறாள். அப்படியும் அது கை நழுவி விழுகிறது. கண்ணாடி உடைந்து சிதறவில்லை. என்றாலும் கீறல் விழுந்து இரண்டு பகுதிகளாக நிற்கிறது. மாணிக்கம் எழுந்து போய் எடுக்கிறான். “பதனமா எடுக்கிறதில்ல? கண்ணாடி ஒடஞ்சி போச்சி பாரு?”

     கடிந்த வண்ணம் படத்தை முருகேசனுக்குக் காட்டுகிறான்.

     “இத பாருங்க, அங்க கண்டியில எடுத்த படந்தா இது.”

     முருகேசு கையில் வாங்கிப் பார்க்கிறான்.

     திடுக்கிடுகிறான். எங்கேயோ அரிக்குளிப்பாய்த் தட்டிய நெருடல் திடுக்கென்று குவிந்து முனையாய் நெஞ்சில் வந்து ஒட்டுகிறது; குத்துகிறது.

     இந்தப் பெண்ணின் பக்கத்தில் தலைக்கட்டும் புது வேட்டி சட்டையும் மாலையுமாக நிற்பவன் பச்சைவேலு!

     அட... பாவி!

     அதே பச்சைவேலு! ஏழெட்டு வருசங்களுக்கிப்போது முகத்தில் சிறிது அழுத்தமும் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. மற்றபடி அதே பச்சைவேலு. அதே ஆள். இதனால் தான், இவன் தாய் தகப்பன் யாரையும் கூட்டி வரவில்லை; சொல்லவில்லை. நகையைக் கொண்டு போய் வைத்தது... ஒன்றுமே இல்லாமல் இவர்களைக் குழிபறித்து...

     அட பாவிப் பயலே! கல்லைத் தூக்கிப் போட்டாற் போல காரியம் செய்து விட்டாயே? முருகேசுவினால் அமைதியாக இருக்க முடியவில்லை. படத்தைப் பார்க்க முடியாமல் கண்களைப் படலம் மறைக்கிறது.

     “இந்த... இவம் பேரென்ன?”

     “பச்சைவேலு... வேலுன்னுதா கூப்பிடற பழக்கம். நல்ல பயதா. சாவகாசம் மோசமாப் போயி சூதாடுறா. ரேஸ் போவா. சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கியோ போகுது. எப்படின்னாலும் பொழச்சிக்கிறவ, நாலு தொழிலும் செய்யிவான்னு அவுங்கப்பாவும் சொன்னாரு. அப்ப எட்டு சவரன் தாலிச் செயின் போட்டே. இங்க வந்து மூணு மாசத்துல அத்தக் கொண்டு போயி வித்திட்டா... இதெல்லாம் இப்ப சொல்லிப் பிரயோசனமில்ல. சூழ்நிலை சந்தர்ப்பம் மனிசன் உள்ளாற மிருகமாப் போயிடறா. அதா உங்ககிட்ட இப்ப காணிச்சித்தார. எங்கனாலும் துப்புக் கெடச்சா, காதப் புடிச்சி நீங்க இட்டாரப் பாத்தியத இருக்கு... இது உங்க புள்ளையாட்ட...”

     “இழுத்தாரேப்பா... இழுத்தாரேன்...”

     நெஞ்சு தழுதழுக்கிறது. மனிதன் மிருகமாகிப் போகிறான். இனம் இனத்தையே காலைவாரி விட்டுக் குழி பறிக்கிறது. குடும்பங்கள் குலைந்து, சமுதாயக் கட்டுக் கோப்புகள் உடைந்து, உணர்வுகள் வெறித்தனத்துக்குச் சிதறி...

     முருகேசு அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறான்.

     “இவ புருசன் வீட்டில யாரிருக்காங்க?”

     “அவரு அப்பன் இறந்து போயி ஆறு மாசந்தானாகுது. சாவுக்கு ஆளனுப்பிச்சிருந்தா, போனோம். இவன் வார இல்ல. பாலுக்கு இருந்திட்டு வந்திட்டம். அங்க இருக்க எடமில்ல. மூணு பொட்டப்புள்ள - ஒரு அண்ணன் ரிக்சா வாங்கித் தொழில் செய்யிறான். ஒண்ணும் நிழலுக்கு சாயுறாப்பில இல்ல; குளுருக்குத் தாங்கறாப்பில இல்ல... காட்டுல இலவு வெடிச்சுப் பக்கம் பக்கமா பறக்கிற கெதியா ஆயிட்டம் அண்ணாச்சி!”

     “இதையே சொல்லிட்டிருந்தா ஓயாது. ஒரு நாலுமணி போல உங்கள நா கூட்டிட்டுப் போயி விட்டுப் போட்டு வேலைக்குப் போகணும். செத்தவாணா படுத்து ஒறங்குங்க!”

     முருகேசுவுக்கு உடல் அயர்வாகத்தான் இருக்கிறது. ஆனால் படுத்தால் கண்களை மூட முடிகிறதா?

     இருட்டுக் கடலில் குண்டடியை நினைத்துத் திகிலும், காணாமற் போன பெண்களை நினைத்த பயமுமாகப் பயணம் செய்த போதும் கூட ஏதோ பற்றிக் கொள்ள இலக்கு இருந்தாற் போல் பற்றியிருந்தான். எத்தனை எத்தனை நொடிகள் முழுகிவிடும் அவலத்தில்! முருகா முருகா என்றோ, மீனாட்சி, ஈசுவரா என்றோ எங்கோ இருக்கும் கடவுளரைக் கூவியழைத்தானே? இப்போது அந்தப் பற்றும் கூட அவனுக்குள் முழுகிப் போகிறது. கந்தன், முருகன், ஈசுவரன் தேவி எல்லாம் மனிதனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு தைரியம் கொடுக்க அவனாக ஏற்படுத்திக் கொண்ட ‘தாங்கிகள்’தாம். இப்போது அந்த எல்லையையும் மீறிவிட்டது அவனுக்கு நேர்ந்திருக்கும் துன்பங்கள்... அவன் என்றால், அவனல்ல - மொத்தமாக எல்லாச் சமுதாயத்தினருக்கும்.

     இதற்கெல்லாம் யார் பொறுப்பாளி? சிங்களத்தானா? அரசா? குண்டெறியப் புறப்பட்ட விடலைகளா? யார்?...

     இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனால் யாரையும் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை. இதோ இந்தக் குழந்தை... இதற்கு என்ன தெரியும்? பச்சை வேலுப்பயல் ஏனிப்படித் துரோகம் செய்திருக்கிறான்?

     சூது, குடி, இதெல்லாமும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியிலும், நிகழ்காலத்தை மறக்க வேண்டும் என்ற வெறியிலும் தான் வருகின்றன.

     சிங்களத்தானை நல்லவனாக, நல்ல மனிதனாக அவன் இதயத்தோடு உணர்ந்து இருக்கிறான். அதே சிங்களத்தான் மிருகமாக நிற்கும்போது, இரத்தம் குடிக்கும் பேயாட்டாம் ஆடும் போது இது கனவோ என்று தான் மயங்கிப் போயிருக்கிறான். இதெல்லாம் போய், மனிதன் மனிதனாக எப்போது ஆகப்போகிறான்? இந்தப் போராட்டத்தில், படிப்பு, பணம், பதவி எல்லாமே வெறும் வார்த்தைகளாகப் போகின்றன.