19

     இனிப்பு வில்லைகளும், ஏழு ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிப் பையில் வைத்துக் கொள்கிறான் முருகேசு.

     மாணிக்கமும் அவனும் பஸ்ஸில் ஏறி, அந்த முகவரியைத் தேடி வருகிறார்கள்.

     “இந்தப் பக்கம் பிஸ்கற் ஃபக்டரி, சைகிளை ஃபக்டரின்னு, மிச்சம் ஃபக்டரிங்க இருக்கு. தொழிலாளிக்குச் சம்பளம், போனஸ், பகலுக்கு அம்பது காசுக்குச் சாப்பாடு, இனாமா தேத்தண்ணி எல்லாந் தாரா. ஆனா, நமக்கெல்லாம் மூட்ட தூக்கப் போனாக் கூட எடமில்ல. அதுக்கும் ஒரு மேஸ்திரி, நாம எட்டு ரூபா சம்பாதிச்சா, அஞ்சுதாங் குடுப்பான். நாம கங்காணிக்குத் தலைக்காசு கூட அந்த நாள்ள இம்புட்டுக் குடுக்கல...”

     அங்கே சினிமாச் சுவரொட்டிக்கு இடையே, தேயிலை கிள்ளும் ஒரு பெண் மணியின் வாயில் பூட்டுப் போட்ட படம் ஒட்டியிருக்கிறது. ‘வாய்ப்பூட்டுப் போட்ட நாள் - 16.11.48’ என்று எழுதியிருக்கிறது.

     “இது என்னப்பா, மாணிக்கம்?”

     “அதா, நானுங்கூடப் பாக்கிறேன். ஈழப் போராளிங்க படந்தா அங்கங்க ஒட்டிருப்பாங்க... நம்மப் பத்தியும் இப்பதா பார்க்கிறேன். அண்ணாச்சி, எத்தினி கூட்டம், கூச்சல், பேரணி இலங்கைத் தமிழருக்காக நடந்திருக்கு? இது, இப்ப மூணுநா முன்ன, இங்கேந்து ஏதோ கட்சியாளு தெரியாமப் போயிட்டு வந்து அங்க என்னவெல்லாம் கொடுமைப் படுத்தறாங்கன்னு வீடியோ எடுத்திட்டு வந்து போடறாங்கன்னு எம்பய்யன் சொன்னான். இதுவரயிலும் நம்ம விசயத்த, இங்க எந்த அரசியலாளும் கவலப்பட்டுப் பாக்கிறதாத் தெரியல. ‘தமிழினம் சாகிறது; மாநில அரசே தூங்காதே!’ன்னெல்லாம் கூச்சல் போடுறா. அதே கட்சிக் கொடுக்குப் பக்கத்தில, ஒரு குழாத் தண்ணி நமக்குக் குடுக்காம ராச்சியம் பண்றான். ஆரு கேக்கிறாங்க? நாம் ஆம்பிளங்க, எங்கியோ போறம் வாரம்... ஆனா, பொம்பிளப் புள்ளிய என்ன பண்ணுவாங்க அண்ணாச்சி!”

     பெரிய பெரிய மாடி வீடுகள் இருக்கும் அகலச் சாலை... மாடி முகப்புக்களில் வண்ணச் சீலைகள் தொங்குகின்றன; பூஞ்சட்டிகள் அழகு செய்கின்றன. இடை இடையே பல்வேறு நுகர்பொருள் விற்கும் அங்காடிகள்; சலவை நிலையங்கள்;

     “இந்த பக்கம் ஒரு ‘டொக்டர்’ வூட்ல முன்ன தோட்ட வேலை பண்ணிட்டிருந்தேன். அவரு பவுனியா ஆஸ்பத்திரில டொக்டரா இருந்தாராம். அவருதா எனக்கு இந்த வாட்ச்மேன் வேலை சிபாரிசு பண்ணி அனுப்பிச்சாரு... நல்ல கொணமான ஆளு... அங்க கேட்டா வெவரம் சொல்வாரு...”

     “வெவரம் ஏதும் தெரியாம ஒண்ணும் கண்டுபிடிக்க ஏலாது போல...?”

     “ஆமா அண்ணாச்சி. ஒரு மாசமுன்ன வந்திட்டுப் போன, இப்ப அடையாளந் தெரியாது. இங்க அரபு நாடுங்களேந்து வார பணத்தைக் கொட்டி எடம் வாங்கிப் போடுறா! நம்மப் போல ஏழயிங்க எங்க போக? அண்டித்தான் பிழைக்கணும்...”

     வீட்டை ஒரு மாதிரி கண்டுபிடிக்கிறார்கள்.

     அந்தப் பக்கத்தில் இலங்கைத் தமிழர் பலர் இருப்பதாகத் தெரிகிறது. வெளுத்த ஃபிராக் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண், பள்ளியிலிருந்து அப்போதுதான் திரும்பி வருபவள், அவர்களை அழைத்துக் கொண்டு படியேறி முதல் மாடிக்குச் செல்கிறாள். இவர்களை நிற்க வைத்துவிட்டு, “அம்மா...! உங்களை தேடிட்டு ஆரோ வந்திருக்கினம்!” என்று குரல் கொடுக்கிறாள். அது அங்கு ஒலிக்கும் குழந்தையின் அழுகுரலுக்கு மேல் தெளிவாகச் செவிகளில் விழுகிறது.

     “தா, நந்தினி அக்கா வந்திருக்கு. பாரு, பாலொண்டு குடிச்சிட்டு நந்தினி கூட, ஊஞ்சலாடப் போகும்... கண்ணல்ல...!”

     “ஊஞ்சல் வாணாம், மம்மிகிட்ட, டாடிகிட்டப் போவினம்...” அடித்தொண்டையில் இருந்த ஒரு பிடிவாதக் கத்தல்... அழுது அழுது தொண்டை கம்மும் குரல்... குழந்தையின் ஒலி... யாரென்று அவனுக்கு யாரும் விளக்கத் தேவையில்லை. அவனை யாரும் அழைக்கத் தேவையில்லை. அவன் கொடியில் அரும்பிய தளிர்... அது காய்ந்து காய்ந்து கதறுகிறது. மரியாதைப் போர்வைகள் கழன்று வீழ்ந்து அவனை உள்ளே தள்ளுகிறது. உடலும் உள்ளமும் பதற அவன் பையைக் கீழே வைக்கிறான்.

     “...தா, அழுவாதம்மா!... கண்ணில்ல? ஒரு சொட்டு பாலும், சோறும் கூட எடுக்காம இப்படிக் கரைஞ்சா உடம்பு என்ன ஆகும்? தா... ஆரு வந்திருக்காங்கன்னு பாப்பம்...” என்று குழந்தையுடன் வந்து காட்சியளிக்கும் பெண்... மருமகளின் அக்காளா? குழந்தையின் முகம், கறுத்த முகம் அழுது அழுதுச் சிவந்து நனைந்து... அம்மளம்! ராமாயி போலவே இருக்கிறாளே! என் தாயி! என்னப் பெத்த தாயி...!

     முருகேசு அருகில் சென்று கையை நீட்டுகிறான்.

     “நா... உன்ற தாத்தா, பாட்டன்டீ கண்ணு! உங்கப்பன் குமாரு எம்புள்ளை டீ ஆத்தா! வந்திடம்மா!...”

     நல்ல கறுப்பில் உயரமும் பருமனுமாக இருக்கும் அந்தப் பெண்பிள்ளைக்கு, அவன் மருமகளின் சாடை இருக்கிறதோ?... மருமகளே கனவுத் தோற்றம்தானே? விசும்பும் குழந்தையின் முன் மிட்டாய்ப் பொட்டலம், பிஸ்கற்றை வைத்துக் கொண்டு நீட்டுகிறான்.

     “தாத்தா... தாத்தாகிட்டப் போம்மா! பாரு, டாடிதா போயி போயிப் பாத்திட்டு வாங்க, சோலி முடிய இல்லன்னு சொல்லி அனுப்பிச்சிருக்கா. நீங்க சிரீலங்காவிலேந்து தானே வந்திருக்கீங்க?”

     “ஆமாம்மா! உங்கப்பாதா, புள்ளயப் பாத்துட்டு வாங்கன்னு அனுப்பிச்சாரு. இதபாரு...”

     சட்டென்று நினைவு வர, அவன் பையைத் திறந்து அந்தக் குழந்தை ஃப்ராக்கை எடுத்துப் பையுடன் கொடுக்கிறான்.

     “உன் அப்பாதாம்மா வாங்கிக் குடுத்தாரு...!” பெரியவள் அந்த ஃபிராக்கை வாங்கிப் பிரிக்கிறாள். கண்கள் அகல...

     “எவ்வளவு வடிவான பிராக், புள்ளக்கு டாடி வாங்கிக் குடுத்திருக்காரு! இப்பம் இந்தப் பால் குடிப்பீர், பிறகு புதிசு ஃபிராக் போட்டுட்டுப் போகலாம்...”

     குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, அவனை உறுத்துப் பார்க்கிறாள். தனது தந்தையின் உறவு இருக்கிறதா என்று பார்க்கிறாளோ?

     “வந்திடம்மா!... வா...”

     குழந்தை அவனிடம் வருகிறாள்.

     “குடுங்கம்மா அந்தப் பால் கிளாச...”

     அதை வாங்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு பாலைக் குடிக்கச் செய்கிறான். பிறகு, வெதுநீரில் நனைந்த துண்டால் முகம் துடைத்து, சுருட்டையான முடியைச் சீவி, பவுடர் ஒத்தி, அந்தப் புதிய ஃபிராக்கைப் போடுகிறான்.

     “ஐயா, உங்களை இப்பப் பார்க்கலையெண்டா, பிள்ளை அழுது கரைஞ்சு, ஓஞ்சு போயிருப்பா. ஒரு கிளாஸ் பால் குடிச்சி ஒரு பிடி சோறோ, இட்டிலியோ எதுவோ எடுத்து, ஒரு மாசம் ஆகும். என்னன்னு செய்ய? ஒரு நாளைத் தள்ளுவதும் ஏலாம கனமாப் போவும்...”

     குழந்தை பிஸ்கட்டை வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாலும் இன்னமும் அந்தத் தாப அலைகள் ஓயவில்லை.

     அந்தப் பட்டுடலின் தொட்டுணர்வே, முருகேசுவின் இத்தனை நாளைய - பிறவிக் கசடுகளை எல்லாம் கரைக்கும் அமுதமாகச் சிலிர்க்கச் செய்கிறது.

     கவாத்துக் கத்தியும், முள்ளும் கொத்தும் மண்வெட்டியும் பிடித்துக் கரடு தட்டிப் போன கைகளால் இந்த மென்மையான பூ முகத்தையும், தளிர்க்கையையும் தீண்டும் பேற்றுக்காக, இந்த வாழ்நாளில் எந்தச் சுமையையும் சுமந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவன் தனது உறவை, தொடர்பை, முன்பின் அறியாத இந்தப் பெண்மணியிடம் நிலைப்படுத்திக் கொள்ளவோ, தெளிவாக்கிக் கொள்ளவோ எந்தச் சான்றாதாரத்தையும் துணை தேட வேண்டியதாயில்லை.

     இந்தக் குழந்தை, அவனை அங்கீகரித்து விட்டாள்.

     வழுவழுத்த தரையில், சொர்க்க பூமியில் இருக்கும் விநாடிகளாக இந்த அங்கீகாரத்தை அவன் அனுபவிக்கையில், அந்தப் பெண்மணி மன்னிப்புக் கோரும் பாவனையில் பேசுகிறாள்.

     “மாமா, எழுந்து, கதிரையில் உட்காருங்கள். நீங்கள் அங்கேயே நிக்கிறீர்? உள்ளாற வந்து உட்காருங்கள்...! நான் சரியாய் உபசரிக்க ஏலாமல் போச்சு...” என்று மாணிக்கத்தையும் அழைக்கிறாள். அந்தக் கூடத்தை அப்போதுதான் முருகேசு சுற்றுமுற்றுமாகப் பார்க்கிறான். துப்புரவாக இளம்பச்சைச் சாயச் சுண்ணாம்பு அடித்த குளிர்மையான அறை, உட்கார மெத்தை தைத்த இருக்கைகள்; ஓரத்தில் வண்ணச் சீலை போர்த்துக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி. அலமாரியில் புத்தகங்கள்... உயர்தட்டு மக்களின் வீடு. இவன் மகன், தோட்டக் காட்டானின் மகன், இந்தமட்டத்துக்குரியவனாகி விட்டான். மாமா என்று உரிமை கொண்டு இவள் அழைக்கிறாள். அப்படி இவனைத் தூக்கி வைக்கக் காரணமாக இருப்பவள்...

     குழந்தையைக் குனிந்து உச்சிமுகர்ந்து புளகமுறுகிறான்.

     இவர்களைக் கதிரையில் உட்காரச் சொல்லி உபசரித்துவிட்டு அவள் உள்ளே செல்கிறாள்.

     சற்றைக்கெல்லாம் பதினைந்து வயசு மதிக்கத் தகுந்த ஓர் இளைஞனுடன் அவள் வருகிறாள்.

     “இவள் நடராசா, இங்க கல்லூரியில் படிக்கிறான். எங்கட மகன். இவனுக்காகத்தான் நான் ரெண்டு வருசமா இங்க குடும்பம் வைத்தனான். இவனொத்த பெடியன்கள வச்சிட்டு சீவிக்க ஏலாமல் போயிற்று. இவண்ட அப்பா, சவூதியில் இருக்கிறார். ரெண்டு பிள்ளைகளோட இங்க கூட்டி வந்தனன்... பின்ன அங்கே கனத்த கலவரம், பயமெண்டான பெறகு, தவம் பிள்ளைய இங்க அனுப்பிச்சி வச்சது...”

     “உங்க தாய் தகப்பன் எல்லாம்...?”

     “எல்லாம் அங்கதா இருக்காங்க. என்னவானாலும் என்ற பிள்ளைகள் இருக்கிற இடந்தான்னு அம்மாளும் அங்கதா இருக்கா. அங்கங்க திடீர் சோதனை, குண்டு வெடிப்பு... இந்தப் புள்ளய வச்சிற்று எதும் சொல்லறதுக்கில்ல...” என்று உதடுகளை விரல்களால் பொத்திச் சாடையாகத் தெரிவிக்கிறாள்.

     “...இப்ப குமாரு... அங்க சோலியா இருக்கிறானா?...”

     “...இங்க வந்து அச்சகம் வைக்கணும்னு அஞ்சாறு பேராச் சேந்து யோசனை பண்ணினாங்க. அதுக்குள்ள, வேறொரு நடவடிக்கை நடந்திட்டது. ஒண்ணும் சரிப்படல... போர் நிறுத்த நடவடிக்கைன்றா. ஆனா, நித நிதம் எதோ நடந்திட்டிருக்கு...”

     “நிறுத்தமாவது நிறுத்தம்? பாகிஸ்தான்லியும், இஸ்ரேலிலும் ஆளுங்கள அனுப்பிக் கொண்டாரன், அங்க இங்க போயி ஆயுதம் வாங்கிட்டு வாரன். தமிழங்களச் சுட்டுக் கொல்லுறதுக்கு?” என்று இளைஞன் படபடக்கிறான்.

     “நடராசா, நீ போய்ப்படி, உவனுக்குப் பரீட்ச்சை இப்ப... போ!”

     அவனைச் சாதுரியமாக அனுப்புகிறாள்.

     சற்று முன் ஃபிராக்கில் வந்த பள்ளிப் பெண், உள்ளிருந்து பூந்தட்டில் தேத்தண்ணீரும், பணியாரமும் வைத்து எடுத்து வருகிறாள்.

     “எடுங்க...”

     கூச்சம் விடவில்லை. அவனை விட மாணிக்கம் கூசுகிறான்.

     செல்வி வந்து தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். டீபாயை நகர்த்தித் தேத்தண்ணீர் கோப்பைகளை வைக்கிறாள்.

     “மாமா எப்பம் அங்க விட்டு வந்தனீர்...”

     “போன தை மாசம் வந்தேன். அதெல்லாம் மிச்சம் கொழப்பமான கதை. குமாரு வந்து என்ன அப்பமே, இனி நீங்க தோட்டத்தில இருக்க வாணாம்னு இங்க வாரச் சொன்னான் தா. ஆனா, எனக்கென்னமோ இங்கேயே பிறந்து வளந்து கலியாணங்கட்டி, அல்லாரும் இந்த மண்ணிலியே போய்ச் சேந்தா, நானும் வரதில்லன்னு வீராப்பாதா பேசுன...”

     கண்களில் நீர் மல்குகிறது அவனுக்கு.

     “இப்படியெல்லாம் வருமெண்டு ஆரும் நினைக்க இல்லதானே!”

     அவள் எங்கோ பார்த்தவாறு நிற்கிறாள். பிறகு சட்டென்று நினைவு வர, “தேத்தண்ணீர் ஆறிப் போகும்... நான் எதை எதையோ பேசிட்டன்...” என்று அவர்களை உண்ணச் சொல்கிறாள்.

     முருகேசுவுக்குக் கைத்தட்டு கனக்கிறது.

     பணியாரத்தைச் சிறிது விண்டு குழந்தைக்குக் கொடுக்கிறான். பிறகு தானும் சிறிது வாயில் போட்டுக் கொள்கிறான். துரைமார் வீடுகளில் உண்ணும் பணியாரம். உதிர்ந்து வாயில் பூவாகக் கரைகிறது.

     “இங்க நாங்க நாலஞ்சு பேரு கேக் சுடும் வகுப்பு எடுக்கிறம். எல்லாம் இங்க வந்து என்னன்னு செய்து சீவிக்க? எனக்குப் பரவாயில்லதான். ஆனா, ரொம்பப் பேரும் வீடெடுக்கவும், பிள்ளைகளைப் படிக்கப் போடவும் சிரமப்படறாங்க...”

     “அம்மா, அதையேன் கேக்குறிய? மிச்சம் கஷ்டப்படறாங்க, எங்களப் போல தொழிலாளுக. சாஸ்திரி ஒப்பந்தம், கொத்தலாவல ஒப்பந்தம்னு வந்து இங்க வந்து வுழறவங்கள இங்கத்து மனுசங்க சேத்துக்கத் தயாரா இல்ல. அதுதா கசப்பான விசயம். நிசமும் அதுதா. இப்பம், ஒரு புள்ள - எங்க புள்ளபோல நெருக்கமா இருந்தது, இங்க வந்து அப்பன் செத்ததும், புழைக்க வழியில்லாம ஆனைக் காட்டில விறகொடிச்சி சீவியம் பண்ணப் போயிப் புருசனைப் பறிகொடுத்திட்டும் நிக்கிது. நா மனசோடு இங்க குமாரப் பாக்கணும்னு வந்ததும் கூட, அந்தப் புள்ளக்கி எதுனாலும் ஒரு வழி காட்டணுமின்னு, குமாருக்குத் தெரியும். இன்னிக்கி, அவெ, ஒரு கண்ணியமான மதிக்கிற நிலைமைக்கு வந்திருக்கிறான்னா, அதுக்கு எல்லாருந்தா ஒதவி இருக்கா... மானம் மறைக்க, குடல் நனைய, ஒரு மழகுளுருக்குப் பாதுகாப்பா ஒதுங்க, ஒண்ணுமில்லாம தவிக்குதுங்க...”

     அவள் இறுகிப் போய் நிற்கிறாள்.

     “ஆமா, இங்கியும் கூட மிச்சம் சனம் பார்க்கிறம் தான. இப்பவும், உங்களுக் கெல்லாம் பிரஜா உரிமை கொடுக்கோணுமிண்டுதா கேட்டுப் பலதும் கதைச்சிட்டிருக்கா. இப்ப, ‘போய்ஸ்’ உறுதியாத்தான் நிக்கிறாங்க. ஆமி பயப்படுதாம்...”

     குழந்தை உன்னிப்பாய்க் கேட்கிறாள்.

     “இப்ப இந்தியா கவர்மெண்டில, அங்க எங்க ஆளுகளுக்கு சரியான பேருக்கும் பிரஜா உரிமை குடுத்து, இங்க வந்திருக்கிற லட்சம் அகதிகளத் திருப்பிக் கவுரமா அழச்சிட்டாத்தா நாங்க அங்கேந்து வார சனங்கள இங்கிட்டு வரவச்சிப்போம்னு சொல்லியிருக்கில்ல? அதும் ஒரு நல்லதுக்குத்தான?...”

     யாரும் எதுவும் பேசவில்லை. குழந்தைதான் திடீரென்று மவுனத்தைக் கலைக்கிறாள்.

     “டாடி எப்ப வரும்?...”

     முருகேசனை நோக்கிய வினா அது.

     அவன் குழந்தையின் உச்சியை முகர்ந்து விட்டு, “வரும்டா கண்ணு...” என்று சொல்கிறான்.

     “எப்ப வரும்?”

     “இப்ப, நாளைக்கு வரும். ஒங்கம்மாளையும் கூட்டிட்டு, பிளேன்ல வந்து எறங்குவா!”

     “பிளேன் வாணாம்... பிளேன்ல தான குண்டு வெடிச்சது? பிளேன் வாணாம். போட்லதா வரும்...”

     “சரி, போட்ல வரும்...”

     “எப்ப வரும்...?”

     “ப்ரியா, தாத்தாவுக்கு நீ கார்டன்லாம் காட்டிக்குடு. பாரு, தாத்தா வந்து, சறுக்குப்பலகையில ஏத்தி விடுவாரு. புது ஃப்ராக் போட்டிருக்க. குணா, மஞ்சரி, வடிவு ஆன்ட்டி எல்லாரிட்டயும் காட்டிட்டு வா, தாத்தாவக் கூட்டிட்டுப் போயி?”

     இந்தத் திசை திருப்பலில் சிறிது ஒளி கண்களில் மின்னுகிறது. மடியை விட்டிறங்கி, “வா” என்று சொல்கிறாள் குழந்தை.

     மாணிக்கம் குறிப்பறிந்து “அப்ப, அண்ணாச்சி, நீங்க இருந்துக்குங்க, நா வாரன். வரட்டுமா...”

     “வாரம்மா?...”

     அவள் எதுவும் சொல்லாமல் ஒரு செயற்கைப் புன்னகையுடன் தலையசைக்கிறாள். மாணிக்கம் இறங்கிச் செல்கிறான்.

     முருகேசுவுக்கு அந்த இடத்தில் கால்கள் ஊன்றினாலும் பொருந்தவில்லை. ஒரு புறம், அவன் சொந்த வட்டம் அதுதான் என்ற உணர்வு அவனுள் பரபரக்கிறது. மறுபுறம்... அவனால் கத்திரித்துக் கொண்டு செல்ல முடியாதபடி குழந்தை அவனை இழுத்துப் பிடிக்கிறது.

     குழந்தையைத் தூக்கிக் கொண்டு படியிறங்கி வருகிறான். மாணிக்கம் விடைபெற்றுச் செல்கிறான்.