20

     மாலை மயங்கும் நேரம். பெரிய சாலையில் இருசக்கர வண்டிகளும், பேருந்துகளும், கார்களும் நெரிசலைத் தோற்றுவிக்கிறது. அந்தச் சாலை நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கிய அலுவலகப் பெண்கள் வண்ன வண்ணச் சேலைகளும், வாடிய தோற்றமுமாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கிளைத் தெருக்கள், ஆங்காங்கு சற்றே பசுமையாகக் காணப்படும் புற்றரை, எல்லாம் பார்த்துக் கொண்டே முருகேசு, குழந்தையுடன் நடக்கிறான். கூடத் துணைக்கு, நந்தினி வந்து கொண்டிருக்கிறாள்.

     “அடே, ப்ரியா பேபி, எங்கே போகுது?...”

     எதிரே வரும் ஒரு பெண்மணி, குழந்தையைக் கொஞ்சுகிறாள்.

     “பார்க் போறம் ஆன்ட்டி?” என்று நந்தினி கூறுகிறாள்.

     “டாடா... சொல்லு ப்ரியா, ஆன்ட்டிக்கு!”

     கையை மெல்ல அசைக்கிறாள் குழந்தை.

     பூங்காவில், சறுக்கு மரம், ஸீஸா என்ற விளையாட்டுப் பலகை, ஆகிய இடங்களைச் சுற்றிப் பூச் செண்டுகளாகக் குழந்தைகள்.

     சுத்தமாக உடுத்த, உணவுத் தேவையின் பயங்கரங்களை உணராத உலகில் வாழும் குழந்தைகள், இவர்கள் துள்ளி விளையாடுகிறார்கள். பந்து எறிகிறார்கள்; ஊஞ்சல் ஆடுகிறார்கள். அழகிய நாய்க்குட்டி ஒன்று துள்ளிக் குதித்துச் சில பிள்ளைகளுடன் விளையாடுகிறது.

     “ஹாய் ப்ரியா! ப்ரியாடீ!”

     “ப்ரியா, ஊஞ்சலாடலாம் வா!”

     ஆனால் குழந்தை அவன் இடுப்பை விட்டு இறங்க மறுக்கிறாள். மற்ற குழந்தைகளோடு அவள் சேரவில்லை.

     ஆனால் நந்தினி, அங்கே பந்தாடும் குழந்தைகளுடன் ஆடப் போகிறாள்.

     “கண்ணு! உம் பேரு என்ன? அவங்கெல்லாம் என்ன கூப்பிட்டாங்க?”

     “தாத்தா, நீங்க, டாடிகிட்டக் கூட்டிட்டு போங்க...!”

     “போறண்டா கண்ணு. நம்ம, நாளைக்கிப் போயி, சீட்டெடுத்து, பாஸ்போர்ட் எளுதிட்டு, ஊருக்குப் போகலாம்?”

     “நாளக்கி வாணாம். இன்னக்கே போகலாம்!”

     “இன்னக்கி நேரமாயிடிச்சே? இனிமே ஆபீசெல்லாம் மூடிருப்பா, சீட்டுத் தரமாட்டாங்க இல்ல?”

     விலுக்கென்று ஷூ அணிந்த பூங்கால்களை உதறிக் கொண்டு ப்ரியா சிணுங்கி அழத் தொடங்கினாள்.

     “அழுவாதேம்மா, என் ராசாத்தி! நாம நிச்சியமா, அம்மாகிட்ட, அப்பாகிட்டப் போகலாம். நாங்கூட்டிட்டுப் போற உன்ன...”

     “பொய் சொல்லுறீங்களா?”

     “இல்லம்மா, என் கண்ணில்ல?...”

     “தாத்தா... நன்னியக்காவோட டாடிய, சுட்டுப் போட்டா, அவ அளுதுகிட்டே இருந்தா.”

     இவனால் பேச முடியவில்லை. குழந்தையின் மனதில் உள்ள திகில் மட்டும் புரிகிறது.

     “தாத்தா?”

     “உம்...?”

     “நன்னியக்கா இல்ல...? டெந்த் அவின்யூவில, அவள்ட டாடிய உங்களுக்குத் தெரியுமோ?”

     “தெரியாதேம்மா?”

     “எங்க டாடியோட ஃப்ரண்ட். குகா ஆன்ட்டி பாவம் அளுது அளுது கத்தினாங்க. ராவில ஒறங்கறப்ப ஜீப்புல வந்து, துப்பாக்கியக் காட்டி இளுத்திட்டுப் போயிட்டா. சுட்டுட்டாங்கன்னு, டாடியும் ஆன்டியும் கதச்சிட்டிருந்தா. நான் ரகசியமாக் கேட்டனா, ஓம் தாத்தா...!”

     “அப்பிடியாம்மா? அவங்கல்லாம் கொழும்பு ஊரில இருந்தாங்களா?”

     “இல்ல தாத்தா, இங்க டெந்த் அவின்யூ இல்ல, அங்க. நாங்க ஒருக்க நன்னியக்கா பர்த்டேக்குக் கூடப் போனம்...”

     “இங்க வந்தா துப்பாக்கியக் காட்டி இளுத்திட்டுப் போனா? இருக்காதும்மா. இங்க, இந்தியால்ல. அதெல்லாம் இங்க செய்யமாட்டாங்க...”

     “இல்ல... இங்கத்தா. குகா ஆன்ட்டி அளுதிட்டே இருந்தாங்க. நன்னியக்காவும் அளுதாங்க. கூட்டிட்டுப் போயி, ஷூட் பண்ணிட்டாங்க, எங்கப்பாவன்னு அளுதா... எனக்கு இங்க பயமா இருக்கு தாத்தா. மம்மி கிட்டப் போயிடுவம். போவோம் தாத்தா...”

     அவன் முகவாயைத் திருப்பிக் குழந்தை கெஞ்சி வற்புறுத்துகிறாள்.

     அவன் அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்கிறான்.

     “போலாம். இப்ப ஆபீசு மூடிருப்பாங்க கண்ணு, நாளக்கிக் காலம சீட்டெடுத்து...”

     ...

     குழந்தையிடம் காரண காரியச் சமாதானம் செல்லுபடியாகவில்லை.

     அவள் சிறு முனகலிலிருந்து பெரிய அழுகைக்கு ஏறுகிறாள். பூங்காவில் போகிறவர்கள் வருகிறவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் அவள் அழுகையும் முரண்டும் இவனுடைய இயலாமையும் வலிமை பெறுகின்றன.

     நந்தினி ஓடிவருகிறாள். நந்தினியாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு வெறிபிடித்து அழுது அடித்து அடம் பிடிக்கிறாள்.

     இருள் படரும் நேரமாகிறது. “சரி, இப்ப ஆபீசுக்குப் போவம், சீட்டெடுக்க” என்று இவன் ஒத்துக் கொள்கிறான்.

     “இவ உப்பிடித்தான் ஐயா பண்ணுவா. குமார் மாமாகிட்டதா கொஞ்சம் பயப்படுவா. ஸ்கூலில கொண்டு சேர்த்தாங்க. அங்க போக மாட்டேன்னு அங்கியும் அழுவா...”

     தாய் ஒருத்தி எப்படி இந்த மாதிரிப் பிள்ளையைப் பிரிந்து செல்லத் துணிந்தாள்? இந்தப் பிள்ளையின் வளமான சந்தோசமான நல்வாழ்க்கையைக் காட்டிலும் மிகப் பெரிய பொறுப்பா இவள் ஆற்றப் போயிருக்கிறாள்? குண்டெடுத்து அடித்துச் சாகும் பிள்ளைகளுக்கு இவள் உதவி செய்வதும், சிறைக்குப் போய் வதைபடுவதும் தவிர்க்க இயலாத நிர்ப்பந்தங்களா? இந்த மனைவியினால் தான் புருசனும் வேறு வழியில்லாமல் மகளையும், மற்ற தொழில் அலுவல்களையும் கூட விட்டுவிட்டுப் போயிருக்கிறான்...

     முருகேசுவுக்கு எதுவும் புரியவில்லை. அவனுக்கும் அவனைச் சார்ந்த சடயம்மாளுக்கும் பிரச்சினை, அடிப்படைத் தேவைகள் இல்லாத பிரச்சினை; படிப்பு திறமை போன்ற பணம் சம்பாதிக்க வேறு சாதனம் இல்லாத பிரச்சினை. ஆனால், இங்கு... இந்தக் குழந்தைக்கு ஆதாரமே இல்லாத பிரச்சினை. விவரம் புரியாத கள்ளங்கபடு இல்லாத பால் மனசில், அவ நம்பிக்கைகளும், பீதியும் அடைந்து கிடக்கின்றன. இதைத் தாயொருத்தியால் மட்டுமே அகற்ற முடியும்...

     அவனுடைய மார்பிலும் முதுகிலும் அவள் வெறியுடன் அடிக்கிறாள். அவள் என்ன வார்த்தைகள் சொல்லிக் கத்துகுறாள், கதறுகிறாள் என்பதெல்லாம் கவனிப்பவர்களுக்கும் விளங்காது. ஆனால், அவனுக்குப் புரிகிறது. இந்தக் கத்தலுக்கு வார்த்தை முகங்கள் தேவையில்லை.

     ஒட்டு மொத்தமாகத் தன் சக்திகளை எல்லாம் திரட்டிக் கொண்டு, இந்தக் குழந்தை தாயிடம் போக வேண்டும் என்று தன் தாபத்தை வெளிப்படுத்துகிறாள்.

     கீழ்த்தள வாசலுக்கே செல்வி ஓடு வருகிறாள்.

     “ஏண்டா! ஏண்டா இப்பிடி அழுகினம்!... வந்திடும். இப்பிடி... செல்லம்...”

     இந்தக் கொஞ்சு மொழிகள் எதுவும் அந்த வெறியின் முன் எடுபடவில்லை. ஆனால், செல்வி, முருகேசனிடம் இருந்து அவளை விடாப் பிடியாக உரித்தெடுத்துக் கொண்டு கத்தக் கத்த எங்கோ செல்கிறாள்.

     முருகேசன் செய்வதறியாமல் நின்று பார்க்கிறன்.

     அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றிலும் மக்கள் முகங்கள் தெரியாத வண்ணம் இருள் திரையை அவிக்கிறது. தெருவிளக்குகள் இருளில் கோடு கோடாக மனிதரை இனம் காட்டப் பளிச்சிடுகின்றன. ஆனாலும் யாருக்கு யார் என்று புரியவில்லை.

     முற்றிலும் புரியாத சூழலில் அந்நியமாகத் தான் நிற்பதாகப் படுகிறது. தாயின் அருகாமையில்லாத அந்தக் குழந்தையின் உணர்விலேயே தன்னையும் இப்போது அவன் புரிந்து கொள்கிறான்.

     “தாத்தா, உள்ளாற வாருங்க தான? அம்மா வருவாங்க.”

     “கொளந்த இப்படி அழுவுதே? அம்மா என்ன செய்வாங்க?”

     “உப்பிடித்தா அளுவா. முன்ன ஒரு நா அளுது, ஒண்டுமே சாப்பிடாம, முகமெல்லாம் எப்படியோ ஆயிப்போச்சி. டொக்டர் வந்து ஊசி போட்டதும் உறங்கிப் போச்சு...”

     ‘டொக்டர்’ வந்து ஊசி போட்டு உறங்கச் செய்வதா?

     தாய்மார் பிள்ளைக்காம்பராவில் போட்டு விட்டுக் கொழுந்து கிள்ளப் போவார்கள். குழந்தைகள் அழுது கொண்டும் ‘சலம்’ விட்டுக் கொண்டும் கிடக்கும். ஆனால் மாலையானால் தாயின் மடியாகிய சிம்மாதனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கை இல்லாத நிலையில், ஊசிபோட்டு அந்தத் தாபத் தீயை அணைப்பதா?

     அந்தக் கணத்தில் முருகேசுவுக்குக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று பரபரப்பாக இருக்கிறது. நம்பிக்கையை இன்னொரு பெண் தாயாக நின்று பாலாகப் பொழிவதைத்தான் அவனால் நினைக்க முடிகிறது.

     “ஏம்மா, இப்பிடி அளுவுற கொளந்தயத் தாய் தகப்பனவுட்டுப் பிரிச்சா பாவமில்லியா?”

     “பின்னென்ன செய்ய? சித்திக்குக் கனமான பாரந்தான். போராளிகளுக்குச் சேதி சொல்லுறதும் எதுவும் உதவுறதுமா இருக்கறதால, புள்ளயக் கவனிக்க முடியா தெண்டு தான இங்க கொண்டிட்டு வந்தாரு குமாரங்கில்?”

     “... அப்ப ஒங்க... சித்தி, செயில்ல இல்லியா?...”

     “அதாரு சொன்னா உங்களுக்கு?”

     “எனக்கென்னம்மா தெரியும்? கூடலூரில சொல்லிட்டாங்க.”

     “சிரிலங்காவிலா?”

     “இல்லம்மா, இங்கத்தா... நீலகிரில...”

     “அதெல்லாமில்ல. அவங்கள ஆமி ஆரும் புடிச்சிட ஏலாது. போராளிக்கு... உள வெல்லாம் கண்டு சொல்ல ஆக்கள் இருக்கா. அந்தத் தகவல் எல்லாம் ரேடியோ மூலம் அனுப்புவாங்களாம்...”

     “உன் சித்தப்பனும் இதான் செய்யிறானா?”

     “...அவுங்க... பிஸினஸ்... பிஸினஸ் செய்யிறாங்க. அதா இங்க வருவாங்க போவாங்க...”

     “பிஸினஸ்னா, என்ன பிஸினஸு...?”

     சிறிது நேரம் யோசனை செய்வது போலிருக்கும் சிறுமி, “எனக்குத் தெரியாது தாத்தா. அம்மா கிட்ட கேளுங்க...”

     தன் மகன் மீது அவனுக்கு இப்போது கோபம் வருகிறது. பெண்சாதியாகப்பட்டவள் என்ன செய்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டு இவன் போவதாக மனசுக்குள் கடுமை கொள்கிறான். இந்தப் பச்சைக் குழந்தையை எரியில் போடுவதைப் போல் போட்டு வதைத்துக் கொண்டு, ஒரு சன சமூகத்தையே பாழாக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கு என்ன பெயர்? இவன் ‘பிஸினஸ்’ என்று என்ன செய்கிறான்? இந்தியாவில் இருந்து பருப்பும் வெங்காயமும் பூண்டும் கடத்திக் கொண்டு போய் விற்கிறானா? அங்கிருந்து கெசட்டும், அதும் இதும் கடத்தி வந்து...

     பரவலான மக்கள் ‘பிஸினஸ்’ என்றால், இந்த வேலை செய்கிறார்கள் என்பதுதான் பொருள். அவன் இதைத்தான் செய்கிறானா? இவனை சக்கை சாறாக உழைத்துப் படிக்கப் போட்டது இந்தத் தொழில் செய்யவா?

     முருகேசனுக்குள் இப்போது ஒரு வெறியே எழுவது போல் கிளர்ச்சி மூள்கிறது.

     அந்தப் பயல், எப்போது வந்தாலும் அவனைப் பிடித்து உலுக்க வேண்டும். பெத்தபுள்ள, அது வெம்பி நொந்து உருகுது. அத்த விட்டுப் போட்டு, என்னாடா லேய், உங்க போராட்டம்? என்னாடா எளவு போராட்டம்? ஆளுக்காள் குண்டெறிஞ்சு கொல்லுற போராட்டம்?...

     தோளைப் பிடித்து உலுக்குகிறான்... கைகள் பரபரக்கின்றன.

     சரேலென்று நினைவு வருகிறது.

     “ஏம்மா? அது யாரு, சின்னியோ, நன்னியோ அவங்க டாடிய ஜீப்பில வந்து கடத்திட்டுப் போயிட்டான்னு சொல்லிச்சே குளந்த...!”

     “...ஓம் தாத்தா, அவங்க... டென்த் அவின்யூல இருந்தாங்க. அந்த அங்கில் நுவல் கதையெல்லாம் எளுதுவாங்க. யாரோ தெரியாதவங்க வந்து கடத்திற்றுப் போயிட்டா.”

     “இங்க, கூடவா அதெல்லாம் நடக்குது?”

     “ஓம். அவங்க ஸி.ஐ.ஏ.வோ என்னமோ சொன்னாங்க...”

     முருகேசு தனக்குள் நொறுங்கிப் போகிறான். சோற்றுக்கு துணிக்கு இல்லை என்ற வறுமையில் கூட நம்பிக்கையும் வாழும் உறுதியும் சாகாமலிருக்கும். ஆனால், உயிரே பத்திரமில்லை என்ற திகிலில் அவநம்பிக்கை, வாழும் உறுதியையும் குடித்து விடும்... அது அந்தப் பச்சைக் குஞ்சுக்கு நேரிட்டிருக்கிறது.

     செல்வி சொன்னாற்போல் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறாள். வாசற்கதவு திறந்தே இருக்கிறது.

     “நந்தினி! கதவைத் திறந்து போட்டிருக்கிறீர்?... ஏம்மா? தாத்தா எங்க?...”

     அவன் முன்பக்கத்துத் தொட்டி போன்ற சிறு வராந்தாவில், பூந்தொட்டிகளிடையே சிலைபோல் நின்று கொண்டிருக்கிறான்.

     “இத இங்க இருக்காரம்மா?”

     செல்வி உள்ளே படுக்கையறையில் குழந்தையைத் தலையணையை வைத்துப் படுக்க விடுகிறான்.

     “ஏம்மா? குழந்தை தூங்கிட்டாளா? டாக்டரிடம் கொண்டு போனீங்களா?”

     “ஆமாய்யா, ஆனா தூங்கிட்டா. டொக்டர் ஊசி போடுவார்னு பயம். என்ன செய்யிறதுன்னே புரியல... சரியான கவலையாயிருக்கய்யா!”

     “அம்மா, நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. தாய் பிள்ளையப் பிரிப்பது மகா பாவம். பேசாம, வாழ்வோ, சாவோ, அவ அம்மாகிட்ட அனுப்பிச்சு வச்சிடுங்க. அங்க அது தாய்மடில எத்தினி கஷ்டப்பட்டாலும் தெரியாது. இது வேண்டாம்மா...!”

     அவள் பெருமூச்செறிந்து நிற்கிறாள்.

     முருகேசுவின் உள்ளத்தில் இப்போது அந்தக் குழந்தையே வியாபித்து நிற்கிறாள்.

     நீலகிரியும், அந்தப் பெண்களும் அவன் சிந்தையை விட்டே அகன்று போகின்றன. மகனைப் பார்க்காமல் அங்கிருந்து செல்வதற்கில்லை என்று நிற்கிறான்.

     செல்விக்கு, முதியவன் அங்கே வீட்டோடு இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. ஒரு விசுவாசமுள்ள பணியாளனைப்போல, நெருங்கிய உறவினனைப் போல அவன் அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறான். குழந்தையைச் சிறிதும் சலியாமல் பார்த்துக் கொள்கிறான். அவளுடைய மாறும் குணங்களுக்கேற்ப, ஈடு கொடுக்கிறான். செல்வி, ‘கேக்’ வகுப்பு எடுப்பதற்காக முற்பகலிலும் பிற்பகலிலும் வெளியே சென்றாலும், முருகேசுவே வீட்டை முழுவதுமாகப் பொறுப்பேற்றிருக்கிறான்.

     “மாமா, நீங்கள் தெய்வ கிருபையினால இங்க வந்தீர்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனன். உங்களைத் தெய்வம் கொண்டு விட்டது...” என்று அவள் உருகிப் போகிறாள்.

     “அம்மா, இங்க தங்கணும்னு நான் வரல. அங்க என்னை எதிர்பார்த்து ஒரு புள்ள நின்னிட்டிருப்பா. ஆனா, இப்ப, எனக்கு மனசில்ல. போனாலும் நிம்மதி இருக்காது...”

     மாலை நேரங்களில் இவன் அந்தச் சூழலை விட்டுப் புதிய பக்கங்களில் குழந்தைக்குப் போக்குக் காட்டிக் கொண்டு செல்கிறான். அதன் மனசில் இருந்த பயத்தையும் அவநம்பிக்கையையும் விரட்டியடிக்கத் தன் நெஞ்சோடு இணைத்துக் கொண்டு இரவில் விழித்திருக்கிறான்.

     இந்த உலகில், வெளி உலக நடப்புக்கள் தெரியாமலேயே நாட்கள் உருண்டோடுகின்றன. பொங்கல் பண்டிகை வந்தது தெரியாமல் மழை கனத்து, மக்களின் உற்சாகங்களை வடிய வைக்கிறது.

     செல்வி பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு, “மாமா! தோட்டக்காரங்களுக்கு, பிரஜா உரிமை கொடுக்கிறதா ஒத்திட்டிருக்காங்க. இன்னும் பதினெட்டு மாசத்தில், ஆறு லட்சம் பேரும் இலங்கையில் குடியுரிமை பெறப் போறாங்க...” என்று முகம் மலரச் செய்தி தெரிவிக்கிறாள்.

     குழாயில் நீர் பிடித்து வைக்கும் முருகேசு, நிமிர்ந்து பார்க்கிறான்.

     “அப்ப, போராட்ட்ம ஓஞ்சிடுமாம்மா?”

     “...அதொண்ணும் தெரிய இல்ல. இந்தியா கவர்மென்ற்றும், இலங்கை அரசும், மந்திரி தொண்டமானும், இப்படி ஓர் உடன்பாட்டுக்கு வந்து அறிக்கை வந்திருக்கிறது...”

     “அப்ப... அதென்ன பதினெட்டு மாசம்? இப்பவே குடுக்கிறது?”

     “மாமா, வருச வருசமா, தலைமுறை தலைமுறையாப் பொறுத்தவங்க, பதினெட்டு மாசம் பொறுக்கிறது சிரமமா?”

     முருகேசு வானைப் பார்க்கிறான். மேக மூட்டமில்லை. நிர்மலமாக இருக்கிறது.

     குடியுரிமை என்றால், அவனுக்கும் குடியுரிமை உண்டு. அவன் அங்கே பிறந்தவன். தாய் மடியை விட்டு இந்தக் குழந்தை ஏங்கித் தவிப்பதுபோல், அவனும், சடயம்மா, குழந்தைகளும், இந்த வேற்று மண்ணில், வேற்று மக்களிடையே தவிக்கிறார்கள். எல்லோரும் அங்கே போகலாம். மகன் வந்ததும், குழந்தையையும் எடுத்துக் கொண்டு போவார்கள். இனி போராட்டம் இல்லை. மருமகளும் ஆசிரியை, மகனும் கந்தோரில் வேலை செய்வான். கொழும்பிலோ, அல்லது கண்டியிலோ, எங்கோ, ஒரு வீட்டில் அழகான முன் தோட்டமுடைய ஒரு வீட்டில் இவர்கள் இருப்பார்கள். குழந்தை ஓடி விளையாட, புல்தரையை வெல்வெட்டுப் போல், துரைமார் வீட்டு முன் வாயில் களைப்போல் இவன் செய் நேர்த்தி செய்திருப்பான்... பந்தெறிந்து குழந்தையோடு விளையாடுவான்...

     ஆகா... அந்த நினைப்பே எவ்வளவு சுகமாக இருக்கிறது?

     சடயம்மாளும் குழந்தைகளும் கூட வந்து விடுவார்கள். அந்தப் பிள்ளைக்குத் தோட்டத்தில் வேலை. பிள்ளைகள் படிக்க வேண்டும்... பிறகு அந்தக் குழந்தைகள்...? தனம், சரோசா, சுகந்தி...

     எல்லோருக்கும் தான் இங்கு இனி என்ன வேலை? அவரவர் தோட்டத்துக்குப் போய் வேலை செய்ய வேண்டும். முன் போலவா? இப்போது அதிகக் கூலி, அதிகச் சலுகைகள்... உரிமைகள்...

     வேலை, சோறு, துணி, நிழல்... பச்சை வேலுப் பயல் செய்ததை மன்னித்து விடலாம். முருகனே இரண்டு கட்டியிருக்கிறான். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு யோக்கியமாக உழைச்சுப் பிழை என்று சொன்னால் கேட்கக் கூடிய பிள்ளைதான். யாரையும் குறை சொல்லக் கூடாது. நேரம்... நேரம்...

     குழாயில் நீர் நிரம்பி வழிந்தோடுகிறது.

     செல்வி வந்து நிறுத்துகிறாள். “மாமா?...”

     அவள் குரல் கேட்ட பின்னரே நினைவு வர உடலைக் குலுக்கிக் கொள்கிறான். இதெல்லாம் இன்னும் நடக்கவில்லை. கனவுதான்...