உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 “ரொம்ப நேரம் ஆயிட்டுதில்ல மாமு?... உறங்கினீங்களா?...” முருகேசு ஒன்றுமே பேசாமல் வாளி நீரை எடுத்து வாயிலில் வந்து முகம் கழுவிக் கொள்கிறான். சந்துக்குள் யார் யாரோ விடலைப் பையன்கள் போகிறார்கள்; வருகிறார்கள். தமிழ்ப் பேசுபவர்களாக இல்லை. இலை விரித்து சோறு, சாம்பார் பொரியல் என்று எடுத்து வைக்கிறான். இருவரும் சாப்பிட உட்காருகிறார்கள். இப்படிச் சாப்பிட்டு எத்தனை நாட்களாயின! “இந்தத் தொழில்ல உனக்கு என்ன தம்பி கிடைக்கும்?” “ஒவ்வொரு நாள் பத்து இருபது கிடைக்கும். சில சமயம் வடக்கத்திக்காரங்க வருவாங்க. சேதுக்கரை, திருப்புல்லாணி எல்லாம் கூட்டிட்டுப் போவேன். மாமா, கொஞ்சம் கொஞ்சமா இந்தி, சம்ஸ்கிருதம் படிச்சிட்டிருக்கிறேன். தெலுங்கு கூடப் பேசுவேன். நிறையப் படிக்கணும், மடத்துசாமியாரப் பாத்தீங்கல்ல?... அவருதா என்மேல ரொம்ப அன்பா படிப்பும் சொல்லித்தராரு. இப்ப பாரும், ஒரு நாளக்கி எத்தினி சனம் வந்து விழுது? அங்கியும் இங்கியுமா? சாமிதா எங்க்கெங்கிருந்தோ ஆக்களைத் தருவிச்சி, சாப்பாடு போடுறதும் பிணி தீக்கிறதுமா சேவை செய்யிறாரு. கவுர்மென்ட், கட்சிக்காரங்கல்லாம் விளம்பரத்துக்குச் செய்யிவா. ஆனா, சாமி செய்யிறது, சும்மா சொல்லப்படாது. அங்கங்க கரையில்லாம் ஆக்கள் வந்து எறங்குறதப் பாத்து, எல்லாம் செய்யிறாரு... நீங்க, அவுருகிட்ட விசாரிச்சா, ஒருக்க விசயம் தெரியும். மண்டபம் காம்புல போயிருப்பாங்க...” “எங்க கூட வந்தவங்கல்லாம் மிச்சம் பேரும் வண்டில ஏறிட்டாங்க. எனக்கும் சீட்டுக் குடித்திருக்கா. இந்த மண்ணில முதிச்சிட்டு கோயிலப்பாக்காம போறதா? அதுதா வந்தேன்...” “மாமு, நீங்க சொல்றியலே, எத்தினி தோட்டத் தொழிலாளிய கப்பல விட்டு எறங்கி வந்தாங்க? எத்தினி பேருக்கு இந்தக் கோயிலப் பாக்கணுமின்னு தோணியிருக்கும்? ஒண்ணுமே இல்ல. அப்படியப்படியே மணல்ல குந்தி இருந்து, அவுங்க குடுக்கற தேத்தண்ணியும் சோறும் வாங்கிட்டு அப்படியே ரயில்ல ஏறி மண்டபம் போயிடுவாங்க. அப்படியே அன்னக்கி அடிமையாப் போன ரெத்தம் ஊறி இன்னமும் அப்படியே இருக்காவ. இப்ப இந்தியாவில எங்க பார்த்தாலும் ரெண்டு புள்ளக்கி மேல பெத்துக்காதீங்கன்னு சொல்றா... நினச்சிப் பாத்தா, இந்த நாடு, எனம்ங்கற கரச்சல் எல்லாம் ஏன் வருது?” “ஏ ஏடம், ஓ எடம்னு ஏன் சொல்றாங்க? சனம் பெருத்துப் போனது தான் காரணம். வசவசன்னு பெத்துப் போட்டாங்க. நாமதா இப்படிச் சீம வுட்டுச் சீம வந்து அத்துவானப் படுறோம். துரைக்கும் கண்டாக்குக்கும் கூனிக்கூனி அடிமைப் பொழப்புப் பொழக்கிறோம். நம்ம புள்ளங்க இப்படி இருக்கக் கூடாதுன்னு எத்தினிபேருக்குச் சொரணை இருந்திச்சி? லட்ச லட்சமா இந்த மண்ணில எடமில்ல, இந்தியாவுக்குப் போகணும்னு ஒப்பந்தம் பண்ணிட்டாங்கலே, அதுவே பத்துப் பதினஞ்சு வருசம் ஆவுது. அப்பன்னாலும் இந்த அப்பங்களுக்குச் சொரண இருந்திச்சா? ஒப்பந்த காலத்துல அஞ்சு ஆறூ லட்சம்னா, இப்ப பத்து லட்சமா கூடியிருக்கும். பன்னண்டு வயிசாகுமுன்ன கத்தியக் கையில குடுத்துப் புள்ளயப் புல்லுச்சாக்கோட வேலைக்குச் சேத்திட்டா சாயுச்சியம்னுதானே நெனச்சாங்க?...” அவனுக்கு முகம் சிவக்கப் புரையேறிக் கொள்கிறது. முருகேசன் எடுத்த கவளத்தை வாயில் போடாமல் மலைத்துப் போயிருக்கிறான். அவன் நீரையருந்திச் செருமலைச் சரியாக்கிக் கொள்கிறான். குரல் கம்மிப் போகிறது. “அந்த ஸ்கூல்ல, ஒரு வாத்தியார் இருந்தாரு. குமாரு உழச்சுப் படிப்பான். எனக்கு மார்க்கு வராது. சரித்திரத்தில ரொம்பக் குறைஞ்சு போகும். தோட்டக்காட்டுப் பய, சரித்திரம் வருமா? தரித்திரம்தா வரும்னு ஏசுவாரு. குமரு இப்ப சொன்னா, எனக்குப் பிரஜா உரிமை இருக்கு, ஆனா, அங்க தனி ஈழமில்லாம இருக்க ஏலாதுன்னான். மனுசங்க, அங்க நடத்தப்படும் விதம் பார்த்திட்டு, மனசனுக்கு மனுசன் வாழ உரிமை மறுக்கப்படும் கொடுமையைப் பாத்திட்டு அங்க நான் சுகமா எப்படி இருக்கன்னான். மக்கள் விடுதலை இயக்கம்னு சம்பந்தப்பட்டிருக்கிறான்னு நினைச்சேன். ஒண்டும் விசாரிக்க இல்ல.” இவன் கேட்காமலே செய்திகள் வருகின்றன. செல்லப் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு, தோட்டத்துக் கிளார்க்கா, பதவியை நோக்கி நிற்க மறுத்து, ‘சமுதாயம் மேன்மையா வரணும்னு இலட்சியம்’ என்று சொல்லிப் போனானே, அந்த இலட்சியம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதும் கூடத்தான்... “எனக்கு என்னப்பா தெரியிது? ஆகாசம் உசரமா இருக்கு, ஆமா. ஆகாசம் உசரம். நட்சத்திரம், சூரியன் சந்திரன்லாம். ஏரோபிளேன்ல மனுசன் பறக்கிறான். அப்படியே சந்திரனுக்கும் போயிட்டான்னு இப்ப பேசிக்கிறாவ. அதுதான் எனக்குத் தெரியும்...” இவர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாரே என்பது போல் சுந்தரலிங்கம் பார்க்கிறான். இலையைச் சுருட்டிக் கொண்டு இவன் போகப் புறப்படும் போது, “இருக்கட்டும் மாமு. கைகழுவிட்டு இருங்க. நான் சேத்துக் கொண்டிட்டுப்போற... சாப்பாடு நல்லாயிருந்திச்சா? பிறமணாள் சமைக்கிற சோறு. வழமையாக யாத்ரீகர்களுக்குச் சமைப்பாங்க. ஒரு செட்டுனா, ரெண்டு பேரு சாப்பிடலாம். நா இதே மரக்கறி சாப்பிட்டுப் பழகிட்டேன் மாமு...” “ஒன்னப் பாக்கக் குளிச்சியா இருக்கு சுந்தரலிங்கம். பெரியவங்க ஆசிர்வாதம் ஒனக்கு என்னக்கிம் இருக்கும்...” நா தழுதழுத்துப் போகிறது. அந்த சுகந்திப் பெண் நல்லபடியாக காம்பில் இருந்து அகப்பட்டால்... இவனுக்குக் கலியாணம் கட்டி... பஞ்சையாக மனசு எண்ணிப் பார்க்கிறது. அன்று முழுவதும் முருகேசு இராமேசுவரத்தில் கழித்த பின், அடுத்த நாள் காலையில், மண்டபத்துக்கு இரயிலேறுகிறான். அவனுடைய வங்கி டிராஃப்ட் மாற்றி, பணம் பெறவும் அவன் உதவுகிறான். “எதுனாலும், தேவை, விசயம் அறியணும்னா, தெரிவியுங்க மாமு, நான் செய்யிறேன்” என்று அன்புடன் சொன்ன வார்த்தைகளில் முருகேசு நெகிழ்ந்து போகிறான். இன்று லாஞ்சிகளில் நிறைய மனிதர்கள் வந்திருக்கிறார்கள் போலும்! ரயிலில் கசகசவென்று கும்பல். பாம்பன் தாண்டி, மண்டபமும் தாண்டி, ‘காம்ப்’ என்ற ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். பாம்பனைக் கடக்கும் போது ஆழமில்லாக் கடல் தெரிகிறது. எட்டி... உயர உயர, இன்னுமும் பெரிய நிலைகளைச் சமுத்திரத்துக்கு நடுவே கட்டியிருக்கிறார்கள்... இன்னமும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைகளை இணைத்துப் பாலம், புதிய பாலம் போடப் போகிறார்களாம்... “ட்டேயப்பா!” முருகேசு பிரமித்துப் போகிறான். பனை உயரத்துக்கு மேல், கடல் பொங்கினாலும் சேதம் ஆகாமல் கட்டுகிறார்கள். இந்தியா... இந்தியா... அவனுடைய மூதாதையர், தாய் பிறந்த மண்... தோட்டக் காட்டையும் அடிமைக் கூனலையும் பற்றி இறுகிப் போன அவனுடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தச் சொல்லின் ஒலி அலைகளை சூக்குமமாக உணர்ந்து விட்டாற் போல் பூரித்துப் போகிறது. குமாரு, அவன் இங்கு தான் வந்திருக்கிறான். ‘எனக்குப் பிரஜா உரிமை இருந்தாலும், அங்கே இருக்க முடியாமல் வந்திருக்கிறேன்’ என்றானாம். “பாவி, எனக்கு இந்தியாவில என்னலே இருக்கு? அங்க பிறந்தனா, வளந்தனா, அங்க மனிசன் எச்சி எல பொறுக்கிறானாம். நான் இங்கேயே உழச்சேன், இங்கேயே எங்காயி அப்பன், ராமாயி கூடவே மண்ணாகிக் கிடப்பேன்” என்று அன்று மகனிடம் சொன்னான்... அம்மை மடி தெரியாமல் தோட்டத்துப் பிள்ளைக்காம்பிரா இருட்டிலும் அழுக்கிலும் அடைபட்டுக் கிடந்தவன் தானே? உறவா பாசமா, என்ன மேன்மை அந்த மக்களுக்கு இருந்தது? பெண் வயசுக்கு வந்த சடங்கு, காதுகுத்து, கலியாணம், கருமாதி என்று கூட அவன் உறவு மக்களைக் கொண்டாடவில்லை. முருகேசு, தன் சகோதரி மக்களுக்கென்று ஒரு சீரெடுத்துப் போனானா? அவர்களுக்கு எத்தனை மக்கள் என்பதே தெரியாத அளவுக்கு விட்டுப் போயிற்று. அப்படி இருந்தவன், சரேலென்று பற்றியபிடி, அவனை உதைத்துத் தள்ளிய நிலையில் ஆண்டாளுவின் உறவு கொண்டாடிப் போனான். கைச்சேமிப்பைக் கொடுத்தான். ஆனால்... ஒன்றுமே ஒட்டவில்லை. மூன்று குழந்தைகளும், அக்கரை வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் ஒட்டி இருக்கிறது. கசகசவென்றிருந்த கும்பலில், இளம் பிள்ளைகள், பெண்கள் கடலின் நடுவே பாலம் கட்டுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். “நீங்கல்லாம் எங்கேந்து வரீங்க? லாஞ்சில வந்தியளா?” வட்ட முகமும் சப்பை மூக்குமாக ஒரு பெண்மணி சோகமே உருவாக இருக்கிறாள். அவள் தான் பதில் சொல்கிறாள். “எங்கக்கு பேசாலை. ஆமி வந்து ரெண்டு பொடியனையும் கடத்திப் போயிட்டா...” அவளால் பேச இயலவில்லை. துயரம் கண்களில் தளம் கட்டுகிறது. இளமைப் பூரிப்பு வெளிப்படையாகத் தெரியும் வகையில், ‘கவுன்’ அணிந்திருக்கும் ‘குமரு’கள் இருவர் அவளுடைய சாயலாகவே இருக்கின்றனர். “உங்க மக்களா?...” “ஆமா. இவவுக்காகத்தா இப்ப இங்க வாரம். எத்தினி பெட்டகளைக் கொலச்சிப் போட்டு, அவ நஞ்சுண்டும் கடல்ல விளுந்தும் உசுர விட்டுப் போட்டாங்க!...” அவன் நடுங்கிப் போகிறான். ‘ஏன் பேசினோம்’ என்று தோன்றுகிறது. மண்டபம் காம்ப்... அங்கே இறங்கும் கூட்டத்தை, அங்கேயே ஆட்கள் கண்காணிக்கின்றனர். எல்லோரும் தத்தம் சாமான்களுடன், வேர் பரிந்து வரும் பஞ்சைகளாக, அகதிகளாக மணலில் நடக்கின்றனர். எங்கும் யாரும் பார்க்கும் சந்தேகக் கண்கள். இதற்குள் முருகேசுவுக்குப் பரிதாபமாகிவிட்டது. மணலில் புதிதாக முளைத்த தகரக் கூரைகள் - அவசரமாக அமைந்த கீற்றுக் கொட்டகைகள். ஆங்காங்கு கொட்டகைகளின் வாயிலில் மக்கள் புதிதாக வரும் இவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள். “ஒ... ஸியா? நீங்க எங்கிட்டுப் போயிட்டிய? காங்கல?” நீலத்தில் பூப்போட்ட குப்பாயம் அணிந்திருக்கிறாள். ஒரு நாள் இரவு, லாஞ்சியில் வந்த தோழமை. சிரித்த முகம் முருகேசுவுக்குத் தெம்பளிக்கிறது. “பொலீசு புடிச்சு அடிச்சாங்களா ஸியா?...” மெல்லிய குரலில் கபடமின்றிக் கேட்கிறாள். “எங்கிட்ட ஒண்ணுமில்லியேம்மா ஏன் அடிக்கிறாவ?” “ஸியா, நேத்து மந்திரி வந்து பாத்தா. ஏங்கிட்டப் பேசுனா ஸியா?” அவளுக்கு ஒரே சந்தோஷம். “என்ன பேசுனா?...” “எப்படி யிருக்கீங்க, நல்லாயிருக்கீங்களான்னு கேட்டாங்க. ஒரு பாயி, ஒரு சாரம், சீலை எல்லம குடுத்தாங்களான்னு கேட்டாங்க. ஓம்னு சொன்னம். ஏங்கிட்ட படிக்கிறயான்னு கேட்டாங்க. படிக்கணும், படிப்பிச்சாப் படிப்பேன். சமாதானம் ஆனதும் போறம்னு சொன்னே...” எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கும் வயசு. எல்லாமே புதுமை; சந்தோஷம்... தொலைவில் சாமியாரின் காவி உடை தென்படுகிறது. மணலில் புதையப் புதைய ஓடுகிறான். “சாமி... கும்பிடறேன், வணக்கம், சாமி... நேத்து சொன்னனே, எம்புள்ளக...” “ஆபீசுக்கு வாங்கப்பா...” என்று சொல்லிவிட்டு விரைந்து அவர் போகிறார். ஆபீசு... சமையற் கொட்டடி தெரிகிறது. பெரிய பெரிய அடுப்புக்கள், மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு, வந்து இறங்குகிறது. ‘பொலீஸ்’ நிற்கிறது. கூடையில் பொட்டலம் போட்ட உணவு... ஆபீசு என்ற கொட்டகைக்கு முன் நீள நெடுக வரிசை... எல்லாரும் மண் பெயர்ந்த பரிதாபங்களாய், பஞ்சைகளாய்க் காத்திருக்கின்றனர். இருளில் தெரியும் உருவங்களாய் அவன் கருத்தில், தனித்தன்மை அற்ற வடிவங்களாய் உறைக்கின்றன. கருப்பிணி, முதியவள், இளவட்டம், பொடிசுகள்... குரிசு தொங்கும் சமயத்தினர். அந்த வரிசையில் ஒரு வடிவம், அவனின் ஆழ்ந்த நினைவின் ஒரு பிசிறை நெம்பிக் கொண்டு வருகிறது. பொட்டில் ஒரு பச்சையான மச்சக்குறி. அந்த மூக்கு - கூர்மையாக - முருகலான செம்மை பாய்ந்த கறுப்பு - செவிகள் தொள்ளையாகத் தொங்க, நரை முடியை அள்ளி முடிந்து கொண்டு, வெற்றிலைக் காவி தெரியும் ஒற்றைப்பல் பாகில் போட்ட தேங்காய்ச் சில்லுபோல் துருத்தி நிற்க... “யாரய்யா? பாத்தாப்பில இருக்கு? எங்கிட்டிருந்து வாரிய?...” “...ஆத்தாடி... நீ நீ... பாஞ்சாலியில்ல? பிச்சமுத்து மாமன் மக... உன்ன, அண்ணாவி மகன் சோமுவுக்குக் கட்டினாங்கல்ல...?” “ஞாபகம் வச்சிட்டிருக்கிய, எனக்குத்தா ஆருன்னு தெரியல... நீங்க... ரத்தின புரா தோட்டமா...” “ஆமா... முருகேசு...” முருகா... முருகா... என்று கண்மூடிக் கும்பிட்டவள் கண்களில் நீர் வழிகிறது. “ஐயா, இந்த ஆண்டாளு பேத்திக வந்து நிக்கி - இங்க லாஞ்சில, செறகொடிஞ்ச புறாக்களா. எங்க பாட்டா கூட்டிட்டு வந்தாவ, ஆனா, அவவ இல்லாத சமயத்தில ஆமி வரது குண்டு வைக்கிறான்னு சொல்லி அல்லாம் ஓடுங்க ஓடுங்கன்னு சொன்னாங்களாம், மீன் காரச் சனங்க கூட அலையக் கொலைய அல்லாம் இங்கிட்டு வந்து விழுந்திருக்குதுங்க. வந்த சனம் அம்புட்டும், மீன்காரவச் சனங்க. கூலிப் பிழைப்புக்குப் போன சனங்க. நா எங்க பய்யன் கொழும்பில கடயில இருந்தா. போன ஆடி மாசம் முச்சூடும் சுட்டுப் பொசுக்கிப் பேயாட்டம் ஆடினாவளே? அப்ப, இங்க வந்தம். ஒரு வருசத்துக்கு மேல ஆச்சி. அஞ்சு, புள்ளக. எம்மகன், அவன் பொஞ்சாதி, நா... எங்கூட்டுக்காரருக்கு காலு வெளங்காம போயிருச்சி திடீர்னு... இப்புட்டு நா இங்கதா இருந்தா. இப்ப நேத்து முந்தா நா, திடீர்னு, அல்லாம் தூத்தூடி காம்புக்குப் போங்க, இங்க புது ஆளுங்க வாராங்கன்னு ஏத்தி விட்டுட்டாவ. அவவ, ராமநாதபுரம் ஆசுவத்திரில இருக்காவ... நான் நிக்கேன்...” அவள் பின்னால் என்ன சொன்னாள் என்பது அவன் செவிகளில் விழவில்லை. “முருகா முருகா...” என்று கசிந்து நிற்கிறான். “அம்மா, நா முருகேசு புள்ளக்காம்பறாவில சோறு சமச்சி வெள்ளாடின நாள்ள அம்மாளா சோறு போடுவிய. இன்னக்கி அந்தத்தாய், மீனாட்சி, கோயில்ல கும்படற அம்மனே உன் ரூவத்தில வந்து அந்தப் புள்ளிய இருக்குன்னு சொல்றாப்பல நெனச்சிக்கிற, சுகந்தி, தனம், சரோசா எல்லாரும் இருக்காவளா?” “எல்லாம் இருக்காவ. கூட்டிட்டு வந்தவங்க கூடவே போவுதுங்க. அதுக அழுது அழுது சாவுதுக. பெரிய பொண்ணு சோறே எடுக்குறதில்ல. நா தெனமும் உங்க தாத்தா வந்திருவாரம்மான்னு சொல்லிட்டு இப்பிடிப் புதுசா வாரவுக மூஞ்செல்லாம் பாத்திட்டு நிப்பே...” நெஞ்சுக் கனமெல்லாம் நொடியில் ஆவியாகிப் போகின்றன. தூத்துக்குடியில் இருக்கிறார்கள். பாஞ்சாலி... பாஞ்சாலி...?... அவள் சடங்கான போது இவனுக்குப் பத்து வயசு. போய் விருந்து சாப்பிட்டது நினைவிருக்கிறது. சாமியாரிடம் மகிழ்ச்சியுடன் தன் பேரப் பெண்கள் கிடைத்துவிட்டார்கள் என்று தெரிவிக்கிறான். தாசில்தாரின் அலுவலகத்தில் வரிசை நின்று, தன் சீட்டுக்களைக் காட்டி, தூத்துக்குடிக்கு அனுப்ப வேண்டும் என்று பரபரக்கிறான். “ஏம்பா? நீ ரிஃப்யூஜி இல்ல. ரிபாட்டிரியட்... நீ எங்கயானும் போய்த் தங்கி தொழில் செய்து பிழைக்கலாம். அப்படித்தான் எழுதித் தருவோம். ஒரு மாசத்துக்கு மேல் இங்க முகாமில வைக்க மாட்டாங்க?” “சரிங்கையா?” “அப்ப உனக்கு மூவாயிரம் இப்ப தருவாங்க. தூத்துக்குடி போயி, அந்தப் பிள்ளைகள் உன் குடும்பனு அங்க தாசில்தார் கலக்டர்ட்ட அத்தாட்சி வாங்கிட்டு வா. பணம் குடுத்திடுறோம்...” மூவாயிரம்... ஆம், இந்தியாப் பணம் மூவாயிரம் அரசு கொடுக்கிறது. ஒரு வாசம் வரையிலும் தங்கிச் சாப்பிட உதவித் தொகையும் கொடுக்கிறது. ஒரு எண்ணம்... கையில் மூவாயிரம் கிடைத்ததும், அந்த சுகந்திப் பெண்ணை அழைத்து வந்து, ராமேசுவரம் கோயில் முன் சுந்தரலிங்கத்துக்குக் கட்டினால்... பதவிசான பெண். ஆயியில்லை; அப்பனும் கூறில்லை. இனி நீலகிரிச் சீமை தேடி, அவள் சிற்றப்பன் பெரியப்பன் தேடி எங்கு சென்று ஒப்புவிக்க? அதற்கும் அடுத்த பொடிசுகள் இருக்கிறார்கள்... முருகேசுவின் ஆத்திரம், அவனைத் தூத்துக்குடிக்குச் சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்து விட்டு வரும் வரையிலும் கூடப் பொறுக்கவில்லை. பொதுக்குழாயில் குளித்துச் சுத்தமாய், ராமநாதபுரம் ஆசுபத்திரிக்குச் சென்று பாஞ்சாலி புருசனை அவளுடன் பார்க்கிறான். ஒரு புளிச்சோறு வாங்கிவந்து அவளுக்கும் கொடுத்துவிட்டுப் பசியாறுகிறான். மாலையில் செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு, இராமேசுவரம் போய்ச் சேருகிறான். பனிக்குளிர் சிலிர்க்கிறது; இருட்டில் ஒளிரும் தீப ஒளிகளின் அருகில் அன்று, தெருவில் செல்வோர் முகம் புரியவில்லை. விடுவிடென்று கோயில் பக்கம் நடக்கிறான். உள்ளே சென்று நெஞ்சு குளிரக் கும்பிட்டுவிட்டு, சுந்தரலிங்கம் எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்துக் கொண்டே அவன் அறையை இலக்கு வைத்துக் கொண்டு வருகிறான். அவன் அறைக்கதவு பூட்டியிருக்கிறது. சந்துக்குள் யார் யாரோ பெண்டிர், ஆடவர் நடமாட்டம் தான் தெரிகிறது. வெளியே மீண்டும் வந்து கடைவாயிலில் நிற்கிறான். முப்பது பைசா கொடுத்து இரண்டு பழம் வாங்குகிறான். “தம்பி? இங்க ரூம்புல, சுந்தரலிங்கம்னு கோயில்ல சாமியெல்லாம் காட்டிக்குடுப்பானே, அவ இருக்கானில்ல, இப்ப எங்க போயிருப்பா, தெரியுமா?” அவன் வாய் திறந்து கூடப் பதில் கூறாமல், தெரியாது என்று தலையை மட்டும் ஆட்டுகிறான். அது ஒரு தெரு முனை. ஒரு பழத்தை உரித்துத் தின்ற வண்ணம், மறுபக்கமிருந்து வருபவர்களை அவன் உன்னிப்பாகக் கவனிக்கிறான். அப்போது, கையில் ஒரு சிறு பெட்டியுடன் நீண்ட சட்டையும் வேட்டியுமாக விடுவிடென்று நடந்து செல்பவன்... உணர்வில் உயிரில் பதிந்துவிட்ட நடை அல்லவா அது? குமரு... குமரு...? நெஞ்சு கூவக் குலுங்கிக் கொண்டு இவன் விரைகிறான். அவனைப் பிடிக்க முடியவில்லை. “குமரு ஏலே, குமாரு...” இவன் குரல், குதிரை வண்டிச் சத்தத்தில் அமுங்கி விடுகிறது. புதிய யாத்திரைக் கும்பலில் அவனும் நழுவிப் போகிறான். இல்லை... மூன்று தெருக்களும் சுற்றி விட்டான், அவனில்லை. ...அவன் யாரோ? தனக்கு ஏன் இப்படிப் பிரமை தோன்றுகிறது? மீண்டும் கோயிலைச் சுற்றிக் கொண்டு சந்து வாசலுக்கு வருகையில் சுந்தரம் கதவு திறந்து கொண்டிருக்கிறான். தோளில் பை தொங்குகிறது. “முருகேச மாமா?... என்ன? எப்ப வந்திய?...” “செத்த நேரம் ஆச்சி. உள்ளாற வாப்பா, ஒரு முக்கிய விசயம் பேசணும்னு வந்தே. பிள்ளய கிடச்சிட்டாங்க தூத்துக்குடில பத்திரமா காம்பில தெரிஞ்ச ஆளுவளோட இருக்காங்க. ஆமி வந்து குண்டு வைக்கப் போவுதுன்னு சொன்னாங்களாம். எல்லாம் அலையக்குலய ஓடி வாரப்ப இவுங்களும் வந்திருக்காங்க. பணத்தம்புட்டயும் எடுத்திட்டுப் போகாம குடுத்து வச்சிருந்தனா. அல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சி... இனிமேதா பாக்கணும்...” சுந்தரலிங்கம் பையை ஆணியில் மாட்டுகிறான். கயிற்றுக்கட்டிலில் ஒரு பழுப்பு நிறக் காகிதப்பை இருக்கிறது. “அட...?...” கையில் அதை எடுத்துக் கொண்டு அவன் திகைத்தார் போல் நிற்கிறான். பின்னர், அதில் கைவிட்டு, அழகிய வழுவழுப்பான லேசுகள் தைத்த குழந்தை கவுனை எடுத்துப் பார்க்கிறான். “மாமு... இது... இங்க குமாரு வச்சிட்டுப் போயிட்டான்...” “ஆ...?” நெஞ்சில் சிக்கிக் கொண்ட சந்தேகம் நழுவி வெளிவந்து விட்டது. “அப்ப... குமாரு... அவந்தா, வேட்டி கட்டி, நீளச் சட்டை போட்டிருந்தானில்ல?” “ஆமா. இதா தெருத் திரும்பி கடயண்ட காத்திருக்கயில, பின்னாடி போறதப் பாத்தேன். அவன் நடை எனக்குத் தனியாத் தெரியுமே? உடனே குமாரு குமாருன்னு கத்திட்டு ஓடினே. குதிரவண்டிக்காரன் சத்தம், லொரி ஒண்ணு வந்திச்சி, கூட்டம் கண்டுபுடிக்க முடியல... இங்க வந்திருக்கிறானா?... நா அவனப் பாக்கணும்டால...” “மாமு, எனக்கே எதிர்பார்க்கல. பாத்தேன். நா ஒடன, உங்கப்பாரு வந்திருக்காரப்பா, நேத்துக் காலமதா மண்டபம் காம்புக்கு அனுப்பிச்சேன். இப்படி இப்படின்னு வெவரம் சொன்னேன். ரூமுக்குக் கூட்டி வந்தே. இது புள்ளக்கின்னு வாங்கினா. அவுசரமா யாரையோ பாக்கணும் சோலி இருக்குன்னு அப்பவே போயிட்டா. இன்னிக்கு இங்க மினிஸ்டர் வந்திருக்காரு. நேத்து காம்புக்கு வந்திருந்தா ராம்ல?” “அப்படி, குமாரு என்னியப் பாக்கணும்னு சொல்லல, ஒண்ணும் விசாரிக்க இல்ல?...” “நான் பாக்காம, கூப்பிடாம இருந்தா அப்படியே போயிருப்பான். அப்பா வந்திருக்காருன்னே... அப்பிடியான்னான். பெண்சாதி அங்கேயும், குழந்தை மட்றாசிலும் இருக்கான்னு தெரிஞ்சிச்சி...” “நீ எத்தினி மணிக்குப் பாத்தே?...” “ஒரு நாலு, நாலரை இருக்கும். சாயங்காலமா, நான் படிக்கப் போவேன். சாமியார் கிட்ட புதிசா இந்து பரிஷத்லேந்து ரெண்டு மாஸ்டர்ங்க வந்திருக்காங்க. படிக்கிறேன். இன்னிக்கு அதுக்குதா கெளம்பிட்டிருந்தேன், யதேச்சயாப் பாத்தனா...” “அப்ப என்னப்பத்தி, ஆண்டாளு பேத்திங்களப் பத்தி ஒண்ணுமே கேக்க இல்ல?” “இல்ல, எதோ ஒரு சுமையோட மனசு நெருக்கமா இருந்தாப்பல இருந்தான். நா சொல்ல வேண்டிய விசயத்தச் சொன்னேன். ஒருக்க உங்கள மண்டபத்தில வந்து பாப்பானோ என்னமோ? எதுக்கும் இந்தப் பிள்ளை கவுனை நீங்க வச்சுக்குங்க.” முருகேசு அந்த கவுனைத் தொட்டுப் பார்க்கிறான். வழவழவென்று துரைமார் குழந்தை அணியும் துணி... அவன், குமாரு வருவானோ? மண்டபத்தில் விசாரிப்பானோ?... வந்த விஷயம் இந்த ஆதுரத்தில் மறந்தே போகிறது. அடித்து வைத்த சிலையாகப் போகிறான்... தாயோரிடம் பிள்ளையோரிடமா?... அந்தத் தாய் ஏன் வரவில்லை? ஏன் புருஷனுடன் வரவில்லை? “மாமு, நீங்க என்ன விசயமா வந்தீங்க? அதச் சொல்லலியே?” முருகேசு சரேலென்று இந்தக் கேள்விகளை உதறிக் கொள்பவனாக அவனைப் பார்க்கிறான். இவன் யார்? இவனிடம், அந்தப் பொண்ணைக் கட்டிக் கொள் என்று திடீரென்று சொன்னால்... எப்படி எடுப்பானோ? “என்ன மாமா? என்ன விசயம்? அந்தப் பொண்ணுங்க யாரு கூட வந்து எப்படி இருக்கா?...” அவன் விவரம் சொல்லுகிறான். தூத்துக்குடியில் இருக்கிறார்கள். தெரிந்த மனிதர்கள் பாதுகாவலில். இப்போது இவனுக்குக் குடும்பக்கார்டும், மூவாயிரம் பணமும் கிடைக்கும்... “அப்ப வாங்கிட்டு, எங்கிட்டுப் போயி நிக்கிறீங்க? புள்ளங்களை அவங்க சனம் பாத்து ஒப்புவிக்கணுமில்ல?” “சனம் ஆரு இருக்கா? சித்தப்பன் பெரியப்பன் நீலகிரில இருக்கான்னு சொன்னா. காகிதம் வந்திச்சின்னு காமிச்சா. போயிதா விசாரிக்கணும். மூணு கொமப் பொண்ணுவ, ஒண்ணு சமைஞ்ச பொண்ணு. சுந்தரலிங்கம், நா ஏ வந்தன் தெரியுமா... நீ உன்ன பெத்த மகனுக்கு மேல இப்ப பெரிசா நினைக்கிறேன். என்னியக் கூப்பிட்டு சோறு போட்டு அம்பா ரெண்டு பேச்சுப்பேசி, அனுப்பி வச்ச. எனக்கு இப்ப ஆருமில்ல. இந்த வயசான காலத்துல அந்தப் புள்ளியள எங்க சுமந்துகிட்டுப் போக?... சுகந்திப் பொண்ணு ரொம்ப நல்ல பதவிசான பொண்ணு. ஆறோ ஏழோ படிச்சிருக்கா. நீ... கட்டிக்கிறன்னா, இப்பமே ஒங்கம்மாளக் கூட்டியாந்து, ஒரு சீல வேட்டி எடுத்து, முடிச்சி வச்சிடுவே. தாலி இருக்கு; நாலு சவரன் அட்டியல் இருக்கு. ரெண்டு வளவு இருக்கு, நா கேட்டுட்டுப் போகணும்னுதா வந்தேன்...” சுந்தரலிங்கத்தின் முகம் இறுகிப் போகிறது. “மாமு... மன்னிக்கணும், நான் இப்ப கலியாணம் கட்டுறாப்பில இல்லை. ஆமா... கையில ஒரு முக்காணித்துட்டு நிரந்தரமா இல்லாம, ஒரு புள்ளயக் கட்டினா, அதுக்கு ஒரு நல்லது பொல்லாது வாங்கிக் குடுத்து, சந்தோஷமா வச்சிக்கணும்னா முடியுமா? மாமு, உங்ககிட்ட சொல்லுறதுக்கென்ன? நாங்க நாட்டுக்கு வந்தப்ப, நான் பதினேழு பதினெட்டு வயசுக்காரன். அத்தைமாரு மூணு பேரு. மூணு பேருக்கும் பொம்பிளப் பிள்ளங்க இருக்கிறாங்க. எங்கப்பா, எலங்கையிலேந்து வாரப்ப, தங்கமா, வயிரமாக் கொண்டாருவான்னோ என்னமோ, ‘வந்திருங்க, வந்திருங்கன்னா’ எழுதினாங்க, பூஞ்சோலைய எனக்குக் கெட்டறதுன்னு பெரியத்தை புருஷனும், இல்ல, அடுத்த தம்மகளைக் கட்டிக்கணும்னு இன்னொரு அத்தையும் எழுதினாங்க. அப்பா, சம்பாரிச்சுச் சேத்ததெல்லாம், ஒரு இருவது சவரன் உருப்படியும், ஆறாயிரம் ரூபாயும் தான். ரெண்டு பிள்ளைங்களைக் கலியாணம் கட்டிக் குடுத்ததில அது செலவாகிப் போச்சி. குடும்பத்தக் காப்பாத்த வேண்டிய நிலையில கலியாணமாவது?...ன்னாலும் நானு எங்கெங்கோ வேலையில சேந்து நாலு காசு சம்பாரிக்காம இல்ல. எங்கையா கலியாணப் பேச்சு எடுத்ததும், என்ன ஏசு ஏசினாங்க? மனசு கசந்து போச்சி, நா இப்ப, குடும்பம் இல்லன்னு கஷ்டப்படலன்னாலும், இவங்க கலியாணம் பத்திப் பேசாமயே இருந்திருந்தா, இப்படியெல்லாம் நினைக்கப் போறதில்ல. நாலு காசு சேத்து தங்கச்சியக் கெட்டணும். காசில்லாத தோசமே, ஒரு பெண்ணு கன்யாஸ்திரீயாப் போறாப்பல சேந்துபோச்சி... தயவு செஞ்சி வேற என்னன்னாலும் கேளுங்க மாமு...” தோட்டக்காட்டில் புல்லறுத்த பயல்தான். இவனும் எப்படிப் பேசுகிறான்? இவன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. கல்யாணம், வாழ்வு, இரண்டும் பிரச்னையாகப் போயிற்று. சமைஞ்ச பொண்ணை மொறயாள் தூக்கிப் போவான். கல்யாணம், அவனுக்கும் வேலை அவளுக்கும் வேலை... அது பத்துமா பத்தாதா என்ற லட்சியங்களின்றிப் போன காலமில்லையே? “...சுந்தரம், நீ சொல்றத நா ரொம்ப ஒத்துக்கறேன். ஆனா, உன்னியப் போல எல்லாம் சொல்லிட்டா, அந்தப் பொட்டப்புள்ளிய கெதி என்ன? நல்ல புள்ள, பண்பா ஒரு கவுரவமா சுத்தமாப் பொழக்கிறான்னு எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கி? நீ வேற பொண்ணு எதயானும் மனசில வச்சிட்டிருந்தேன்னா சொல்லு, நான் பேசல. ஆனா, மனசு கசந்து போச்சின்னு உன்னப்போல இருக்கிற பையங்க சொல்லுறது செரியில்ல...” “மாமு, மன்னிச்சிடுங்க. கலியாணப் பேச்சு வாணாம்...” “சரி, உன்னிஷ்டம் நா இதுக்கு மேல இட்டமில்லாதவனக் கசக்கி மோந்து பாக்கிறவனில்ல. அந்தப் பிள்ளைக்குக் கொடுப்பின இல்ல. வாரம்பா...” “அப்ப... தூத்துக்குடிக்குப் போயிட்டு...?...” “அதுங்கள அழச்சிட்டு நீலகிரிப் பக்கம், எதோ அட்ரசு குடுத்திருக்கா. அங்க விசாரிக்கணும்...” “பொண்ணுங்க படிச்சிருக்குதா மாமா?” “எதினாலும் நாலு அஞ்சி படிச்சிருக்குப் போல இருக்கு...” “நீங்க கையில பணம் வந்ததும், கண்டமானிக்கும் செலவு பண்ணிப் போடாம, பதனமா வெச்சுக்குங்க. மாமு, நான் ஏன் சொல்றன்னு நெனக்காதீங்க. நா சின்னவ. ஆனா, கையில நூறு ரூபா முழுசாப் பாத்துத் தெரியாத நம்மாளுவ, ஆயிரக்கணக்காப் பாத்ததும், செலவு செஞ்சி போடுறா. எங்கப்பாவே, பணம் மொத்தமா கையில கிடைக்கிது, ஊரில வந்து கோட்டை கட்டலான்னு நெனச்சிதா மோசம் போனாரு. அது அப்ப. இப்ப... ரொம்ப மோசம். இப்படி வந்தவங்களுக்கு சர்க்காரு தொழில் திட்டமெல்லாம் வெச்சிருக்கா நெறய. அதுவும், பொம்பிளப் புள்ளங்களுக்கு தொழில் பயிற்சி குடுக்கறதுக்கும், அதுங்க பிழைச்சிக்கவும் வகையெல்லாம் செய்திருக்கா. உங்களப் போல தாயகம் திரும்புறவங்களுக்குன்னு ஆபீசு வச்சிருக்கா, மண்ட பத்திலியே பாருங்க. இருப்பாங்க...” “இனி காலமதான வண்டி?...” “ஆமா... வாங்க, போயி எதினாலும் சாப்பிட்டு வரலாம்...” வெளியில் சந்தடி ஓயவில்லை. சந்துக்குள் ஓர் அறைப் பக்கமிருந்து, ஏதோ புரியாத தட்டும் கொட்டுமாகப் பாட்டு கோசமாகக் கேட்கிறது. ஓர் இளம் பெண் முக்காடிட்டுக் கொண்டு போகிறாள். அவள் சென்ற திசையில் இருந்து, மூச்சை இழுத்துப் பிடிக்கும் ‘செண்ட்’ மணக்கிறது. வெளியே நடக்கிறார்கள். ஒன்றும் பேசவில்லை. சாராயக்கடைக் குத்தகையைப் பற்றி இருவர் பேசிச் செல்கின்றனர். “ஏப்பா சுந்தரம், கோயில் தெருவில சாராயக்கடை இருக்கு...?” “மாமு, இந்த ஊரில, இப்ப, என்ன இருக்கு என்ன இல்ல, ஆரு வருவா, வரமாட்டா, ஆரு நல்லவன் ஆரு கெட்டவன்னு ஒண்ணும் சொல்ல ஏலாது. கடத்தல்காரன் வருவா, விடுதலைப் புலியும் இருப்பான். வியாபாரம் பண்றவன் இருப்பான்; வேவு பாக்கிறவனும் இருப்பா. பொண்ணுங்களோட நடக்கிறவன் கூட்டிக் கொடுக்கும் கொத்தனாகவும் இருப்பான். இந்த ராமேஸ்வரம் இன்னிக்கு ராமன் கால் வச்ச புண்ணிய பூமின்னு நினைச்சிராதீங்க. பொலீசுன்னு காக்கி சட்டை போட்டுத் திரியிறவன், கொள்ளையடிக்கிற திருடனாவே கூட இருப்பா. ஒண்ணும் கண்டுக்கக் கூடாது. ஈசுவரா எல்லாம் உம் பாரம்னு, நம்ம வேலையப் பாத்துட்டு ஒட்டாம போயிட்டிருக்கணும்...” சட்டென்று குமருவின் தோற்றம் நடப்பு எல்லாம் மின்னலாக நெஞ்சில் தோன்றுகிறது. ஒரு கிலி அவனுள் பரவுகிறது. முருகா... முருகா என்று கூவிக் கொள்கிறான். |