4

     தூத்துக்குடி நகராட்சிப் பள்ளி வளைவில் போடப்பட்டிருக்கும் அந்தக் கீற்றுக் கொட்டகை காற்றடித்தால் கண் மண் தெரியாமல் மணலை வாரி இரைக்கும் கடற்பிடித்து மணலில் கால் கொண்டிருக்கிறது. கசகசவென்று, பல்வேறு தரங்களில் குஞ்சு குருவான்கள்; பிள்ளைகள்... வெற்றிலை வாயும், சுருண்ட முடியும் பலாட்டிய உடற்கட்டுமாகப் பரதவர்கள் என்று சொல்லாமலே விள்ளும் ஆண்கள்... கூடிக் கூடிப் பேசுபவர்கள், எங்களுக்கு வேலை ஏதுமில்லை என்று, அந்த முற்பகல் நேரத்திலேயே மணலில் கீற்றோரச் சிறு நிழலில் புலிக்கட்டம் ஆடும் இளைஞர், பிள்ளையை மடியில் போட்டுக் கொண்டு உறங்கச் செய்யும் பாவனையில் தளைகளற்றுப் பேசிக் கொண்டிருக்கும் பெண்கள்...

     வெளிக்கும்பலில் இவன் தேடி வருபவர்கள் தெரியவில்லை.

     “ஸியா? ஆரு வேணும் உங்கக்கு?”

     ஒரு குமரிப் பெண் வந்து கேட்கிறாள்.

     “இங்கே சுகந்தி, தனம் சரோஜா என்று மூணு பொண்ணுக, அக்கா தங்கச்சிக வந்திருக்காவளா?”

     “...அமலி அம்மான்னு ஒருத்தரு, மன்னாரிலேந்து வந்தவங்க. அவவளா?”

     “ஆ... குட்டையா, தாட்டியா, ஒரு பையன் கூட இருப்பா. ஏழு வயிசில ஒரு பொம்பிளப்புள்ள...”

     “ஆ... இருக்கு. உள்ளாற போங்க?”

     கொட்டகை வாயிலில் யார் யாரோ பெண்கள்...

     உள்ளே எட்டிப் பார்க்கிறான். வண்ண வண்ணச் சேலைகளால் தடுப்புச் செய்து கொண்ட குடும்பங்கள். கலபுலவென்று இரைச்சல் - பேச்சுக்குரல்... முருகேசு திண்டாடிப் போகிறான். “எம்மாடி, தனம், சரோஜா, சுகந்தி...”

     “ஏக்கி...? அவவ... அந்த சரோஜா அவள்த்தாண்டி...! தனம்... இங்க பாருடீ, உங்க தாத்தா?...”

     அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஒரு புதிய அலைபரவி, அவனைச் சூழ்ந்து கொள்கிறது.

     “சுகந்தி குளிக்கப் போயிருக்கு. ஓடிப் போயிக் கூட்டியா?”

     “எங்க தாத்தா எங்கதாத்தான்னு அழுது அழுது கெடந்திச்சி... வந்திடுவாருன்னு சொன்னம், மிச்சமும் வருத்தமாப் போச்சு. எல்லாம் வந்து நோட்டிஸு போட்டாங்க, குண்டு வைக்கப் போறாகன்னு. போயிடுங்கன்னு. இவுவள எப்படி வுட்டுப் போட்டு வார? கடன ஒடன வாங்கிப் போட்டு போட்டு அஞ்சு நூறு குடுத்திட்டுக் கூட்டி வந்திட்டம்...” சுகந்தி குளித்துவிட்டுப் பளிச்சென்ற முகத்துடன் வருகிறாள்.

     ஏதோ ஒரு நீளப் புள்ளிச்சேலை... மண்டபத்தில் கொடுத்தார்களாம், அணிந்திருக்கிறாள்.

     குமரிப் பெண்களும் விடலைப் பையன்களும் வேலையற்ற சோம்பேறி ஆண்களும், இந்த மறைப்பில்லாத கொட்டடியில் அடங்கி இருக்கும் நிலைமையை முருகேசு பார்த்து நாவெழாமல் சிறிது நேரம் நிற்கிறான்.

     “தாத்தா, வெளியே வாங்க. நாம பேசலாம்...”

     மணலில் ஒதுக்குப்புறமாக வருகிறார்கள். சுகந்தி குபீரென்று அழத் தொடங்குகிறாள்.

     “...ந்தாம்மா, சீ... இதென்ன? நாந்தா வந்திட்டனே? ஏ அழுவுற?” அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கருஞ்சிவப்புப் பட்டாக விளங்குகிறது முகம்.

     “நாம இன்னிக்கே இங்க விட்டுப் போயிடலாம் தாத்தா?... இங்க, அவ்வளவும் மோசம், படுக்க, குளிக்க, எதுமே ஏலாது. ஆக்கள் எட்டிப் பாக்கறதும் சல்லியம் செய்யிறதுமா இருக்கா. ராமுச்சூடும், உறங்கவே இல்ல. கையத் தொட்டு இழுக்கா. சீலையப் புடிச்சி...”

     “ஷ்... புரிஞ்சிச்சி. நாம ஒடனே போயிடுவோம்...”

     “இங்க கலட்டரிட்ட, தாசில்தாரிட்ட எழுதி வாங்கிட்டு வாரணும்னாங்க. உங்கக்குக் கார்டு குடுத்திருக்காங்களா?”

     “ஆமா. அகதின்னு குடுத்திருக்கா... பணம் குடுத்தா, அரிசி வாங்கி, தனியே தா சோறு சமச்சுக்கிட்டோம்... அங்க, உங்களத் தெரியும்னு தோட்ட ஆளு ஒரு பாட்டி இருந்தாவ, பாத்தீங்களா தாத்தா? உங்க கூட சின்னப் பிள்ளையில வெளயாடினாங்களாம்... ஆமா அவங்க இங்க வேற காம்புக்குப் போயிட்டா...”

     “அவங்கதா சொன்னாங்க. மேக்கொண்டு நானு இங்க தாசில்தாரப் பாத்து அல்லாம் காட்டி விசாரிச்சிட்டு வார. நாம நீலகிரி போயிரலாம்...”

     ஒரு பெரிய பளு இறங்கினாலும், அடுத்தடுத்துக் குறுகிய தடங்களில் பயணம் செய்யும் போது சுமை மேலும் வந்து விடுவது போல் இருக்கிறது.

     கசகசவென்று அந்தத் தொழில் நகரம், அவனுடைய நினைப்பைக் காட்டிலும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கிறது. வண்டிகளும், லாரிகளும், புழுதியும், சாக்கடையும், இரைச்சலும், ‘ஏற்கெனவே பிதுங்கி வழிகிறேனே, நீங்களும் வேறு இங்கே வந்தீர்களா?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

     உடலுழைப்பு, உணவு உறக்கம் என்ற ஒழுங்குகள் அறவே குலைந்து போய்விட்டன. புதிய ஊரில், எழுத்துப் புரியாத அலுவலகங்களில் மோதப்படுபவனாக நாலைந்து நாட்கள் அலைகிறான்.

     சாய்பாபா மிஷன் என்று சுகந்தியைப் போல் ஒரு பெண், படித்தவள், அன்று அவர்களை எல்லாம் விசாரிக்க வருகிறாள்.

     “அம்மாடி, எனக்கொண்ணும் புரியல. தாசில்தார் வருவாகன்னா, எப்ப எங்க வராருன்னு புரியல இந்தப் புள்ளயளும் நானும் ஒரே குடும்பம்... பாரும்மா...!”

     அந்தக் குழந்தை உதவி செய்கிறாள். மாலை ஏழுமணியுடன் எங்கெங்கோ அலைந்த பின், மறுநாளைக்குக் கிடைக்கும் என்று வருகிறான்.

     நிலவில் மணலில் கொத்துக் கொத்தாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளை சட்டியில் கஞ்சி கலக்கி வைத்துக் கொண்டு, மீன் துண்டோ துவையலோ கையில் வைத்து அநுபவித்துக் கொண்டு வித்தாரமாகக் குடிக்கிறாள். அவளைச் சுற்றி இரண்டு மூன்று விடலைகள், பொடிசுகள் கும்மாளமாக நிற்கிறார்கள்.

     “மாசியா, ஒரு துண்டு குடு...!”

     “சரக்கு வெள்ளை போட்டாவில வராதாம்... இது கஞ்சித் தண்ணிக்குடித்தே?” சரச சல்லாபங்கள், பிணக்குகள், எல்லாம் வெட்ட வெளியில், கட்டவிழ்ந்த நிலையில் விரிகின்றன. வயிற்றுக்கு வழியில்லாமல் சோரம் போகும் பெண்ணும், வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் இளசுகளும் கூட, தேயிலைச் செடிகளின் மறைவிலோ, அடர்ந்த மரம் செடிகளின் பக்கமோ தான் சாடை மாடையாகத் தங்களை வெளியிட்டுக் கொள்வார்கள். இங்கே எதற்கும் மறைவில்லை. இந்தச் சேலை மறைப்புக்கள் சற்றே சாய்ந்தாலும் கட்டவிழ்ந்து போகும்.

     முருகேசு, அந்தக் குழந்தைகளை கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே பாயில் ஒண்டிக் கொள்ளச் செய்து விட்டு, விழித்தும் விழியாமலும் காவலிருக்கிறான். கொட்டகைக்கு வெளியே பனியும் குளிரும் குலுக்குகிறது. பழைய சாரத்தையும் போர்வையையும் இழுத்துப் போர்த்துக் கொண்டு குறுகி உட்காருகிறான்.

     அன்று பகலில் சோறு இல்லை. கிழக்கு வேக வைத்து, ஒரு துவையலும் கூட்டியிருந்தாள். மறுநாள் தான் அரிசி வாங்கவேண்டுமாம்...

     அவனுக்கு வயிறு வேறு சங்கடம் செய்தது.

     சற்று எட்ட கிழவி இருத்தி விழித்திருக்கிறாள். சோகமாக சாவு வீட்டை நினைவுக்குக் கொண்டு வரும் குரலொன்று மெல்ல இழைகிறது. இரவின் அமைதியில், எல்லாரும் உறங்குகிறார்கள் என்பது எவ்வளவு பொய்யானது!... இந்தக் கிழவிக்கு என்ன துயரமோ?

     முருகேசுவுக்கு அவளருகில் சென்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

     சுகந்தி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து உட்காருகிறது.

     “ஏம்மா? படுத்திரு. ஒண்ணும் பயமில்ல...”

     அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள். “படுத்துக்கம்மா?...”

     “நீங்க உறங்கவே இல்லையா?...”

     “நாந்தா இப்படி உக்காந்தே தூங்குவேன். பழக்கம். வயிசானவ இல்ல...?”

     இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கே... முகம் விளங்கவில்லை, மேலே போர்வையும் சராயும் தெரியும் ஓர் உருவம் அவர்களைக் கடந்து செல்கிறது. நடையிலிருந்து இளைஞன் என்று புலனாகிறது. கிழவியின் குரல் டக்கென்று மாறுகிறது.

     “ஆருலே... ராசா...? ராசாவா?...”

     கிழவி எழுந்து குலுங்கக் குலுங்கக் கொட்டகைக்குள் போகிறாள்.

     கசமுசவென்று குரல்கள் எழும்புகின்றன.

     சுகந்தி உற்றுப் பார்த்துவிட்டு, “...தாத்தா, அதாரு தெரியுமில்ல? ரஞ்சியிட அண்ணன்... அவ... ஈழப் போராளி... பத்துப் படிச்சிட்டிருந்தா. போயிச் சேர்ந்திட்டானாம் காட்டில... அவந்தாப் போல...”

     முருகேசு இதுவரையிலும் நேருக்குநேர் அப்படி எந்த இளைஞனையும் சந்திக்கவில்லை.

     “தலைமறைவா வந்திருக்கிறானா?...”

     “இல்ல தாத்தா, ரஞ்சிக்குக் கலியாணம் நிச்சயம் பண்ணி இருக்கா. கலியாணத்துக்கு மின்ன வருவேன்னு சீட்டனுப்பி இருந்தானாம்... அதாப்போல இருக்கு...”

     முருகேசு எழுந்து உள்ளே எட்டிப் பார்க்கிறான்.

     அவனைச் சுற்றிக் குடும்பத்தினர்... தாய் அவனைப் பார்த்துக் குமுறி அழுகிறாள். பிறகு தான் முருகேசு கவனிக்கிறான். அவனுக்கு ஒரு கை இல்லை.

     “நீங்க இப்படி வருத்தப்பட்டுக் கரையிறதானா நான் இப்பவே போயிடுவேன்.”

     “ராசா, கை... இன்னும் ரணம் ஆறலியே...!”

     “ஒண்டுமில்ல; எல்லா நெல்லாயிட்டுது. ஒரு கையால வலிவு கூடிப் போச்சி. ஏன் அழுகிறீர், நீங்க அழுகிறதானா நா நிக்கமாட்டே. தங்கச்சி கலியாணமின்னு வந்தேன்.” ...பையில் இருந்து ஒரு சேலை, சட்டை, இரண்டும் வெளியாக்குகிறான். ...தங்கைப் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுக்கிறான்...

     “இனி, நாம சுதந்தர ஈழத்தில தான் ஒண்ணு சேருவம். இல்ல... சொர்க்கம்...”

     அந்தத் தாயும் கிழவியும் துயரம் வெடிக்கக் கதறுகிறார்கள்.

     “நா எந்திரிச்சிப் போகட்டுமா?... சந்தோசமா இருக்கிற நேரம் இது...”

     அவசரமாக அவர்கள் அடக்கிக் கொள்கிறார்கள்.

     தங்கச்சிப் பெண், அந்தக் கை துண்டான தோளை மெல்லத் தடவுகிறது.

     “குண்ட எடுத்துக் கட்டுப் போட்டாங்க, மதுரையில வந்து ஒரு வாரம் ஊசி போட்டுக்கிட்டேன். இப்ப சரியாப் போச்சி...”

     முருகேசனுக்கு அந்தப் பிள்ளையிடம் பேச வேண்டும் என்ற ஆவல் உந்தித் தள்ளுகிறது.

     “ஏம்பா, தம்பி? இப்படி எத்தினி ரத்தம் பாயணும்? மாவலிகங்கை போல ரத்தம் பெருகியிருக்கும் போல இருக்குப்பா?...”

     “பெரியவரே, சிங்களப் படை வெறும் கூலிப்படை, ஈழம் வந்தே தீரும், நிச்சயம்!”

     இளரத்தத்தின் நிச்சயமும் உறுதியும் அவனைப் பிரமிக்க வைக்கின்றன.

     சூழ்ந்திருப்பவர்களில் யாரோ, “அமுர்தலிங்கம், பார்த்தசாரதி பேச்சுவார்த்தைன்றாங்க, இந்திரா காந்தி அம்மாவால முடியல, அவங்க மகன் தீர்த்து வைப்பான்றாங்க?” என்று கூறுகிறான்.

     “இனி பேச்சு வார்த்தை ஒண்ணும் ஏலாது. ஆப்பு வந்து நடுப்பகுதியில் துண்டாக்கிட்டு நிக்கிது. அது நேராப் போகுமே தவுர பின்னுக்கு வார ஏலது.”

     சுந்தரலிங்கம் சொன்னது முருகேசுவுக்கு நினைவுக்கு வருகிறது.

     “தம்பி, நா ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைச்சிக்காத. நா தோட்டத் தொழிலாளி. எல்லாம் இழந்து வந்திருக்கிற. இந்த இந்திய வம்சாவளிக்காரங்க எட்டு பத்து லட்சம் தொழிலாளியும் என்ன செய்வா? நிரபாதி அம்புட்டுப் பேரையும் சுட்டுக் கொல்றானுவ, ...எல்லாரும் இங்கிட்டு வர்றது சாத்தியமா...”

     “அப்கன்ட்ரி ஆளுங்க எல்லாருக்குமா, நாங்க சோசலிச ஈழத்துக்குத் தான் போராடுறோம். எங்க முன்னோரு செஞ்ச தப்ப நாங்க செய்ய விரும்ப இல்ல. பிரிட்டிஷ் ஆழ்ச்சியில தான் உயர்வு தாழ்வுப் பிரிவினையை வளர்த்தது. நாங்க சோசலிச ஈழ லட்சியத்துக்குத் தான் போராடுறோம்...”

     முருகேசு அரசியல் படிக்கவில்லை; பத்திரிகை படிப்பதற்கும் தெரியாது. ஆனால் நடைமுறைப் பிரச்னைகளில் அரசியல் அவர்கள் வாழ்வைப் பிணித்திருக்கிறதே? லட்சோப லட்சம் தமிழர் வாழும் தேயிலைத் தோட்டங்கள் தமிழீழத்தில் வருமா? சாத்தியமா?...

     அவன் தனியே மணலில் வந்து குந்துகிறான்.

     மனசுக்குள் பல பல கேள்விகள் முளைக்கின்றன.

     இவர்கள் தனி ஈழம் என்று இப்படி எறி குண்டுடன் விளையாடுகின்றனரே?

     ஒப்பந்தக் கூலியாக வந்து, ஒப்பந்த அகதிகளாகத் திருப்பி அனுப்பப்படுகின்றனரே, வம்சாவளித் தொழிலாளர்? இரண்டு அரசுகளும் ஆடுமாடுகளை நடத்துவது போல் அல்லவோ நடத்தியிருக்கின்றன... இவர்களில் இத்தனை லட்சங்களில், எந்தத் தமிழர் தலை நிமிர்ந்து உரிமை கேட்டுப் போராடினர்?

     சொல்லப் போனால், இந்த விடலைப் பிள்ளைகள் வெடியும் குண்டும் எறிந்து விளையாடும் போராட்டத்தில், பாதிக்கப் பெற்ற நிலையில் கூட அந்தத் தன்னுணர்வு வரவில்லை.

     “எங்க முன்னோர் செய்த தப்பை நாங்க உணர்ந்திருக்கிறோம். நாங்க இலட்சியமாக வைத்திருப்பது சோசலிச ஈழம்...”

     சோசலிசம் என்றால் என்ன என்பது பற்றிய விவரம் முருகேசுவுக்குப் பிடிபடவில்லை. இந்த வார்த்தையைத் தொழிற்சங்கத்து ஆறுமுகம் அடிக்கடி சொல்வான்.

     அந்தக் காலத்தில், துரைமார் போன பிறகு அதுதான் சோசலிசம் என்று சாராய நெடியுடன் தோப்பில் உட்கார்ந்து கொண்டு மாயாண்டி கதைத்தது நினைவில் வருகிறது. இதைப் பற்றியெல்லாம் முருகேசு இந்நாள் வரை அலட்டிக் கொண்டதில்லை. இப்போது, இந்த சோசலிச ஈழத்துக்காகக் குண்டெறிந்து, ஒரு கையைப் பறிகொடுத்து விட்டு வந்திருக்கும் இளைஞன்... சந்தித்தால் சுதந்தர ஈழத்தில் சந்திப்போம், இல்லாவிட்டால் சொர்க்கம் என்று சொல்பவன்... பால்வடியும் இளமை...

     சீ, நாமெல்லாம் இந்த மண்ணில் பிறந்து என்ன சாதித்தோம் என்று தோன்றுகிறது அவனுக்கு. அதே சமயம்... குமாரு...

     அவனும் இப்படிக் குண்டெறிந்து விளையாடுகிறானோ? அதனால் தான், அப்பன் மாமன் என்று ஒரு தொடர்பும் வேண்டாம் என்று கத்திரித்துக் கொண்டு போகிறானோ? மயிர்க்கால்கள் குத்திட்டுக் கொள்ள, முருகா, முருகா என்று செபிக்கிறான். தங்கள் தலை முறையினர் செய்யத் தவறிப் போன ஒரு போராட்டம், இப்போது இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்ற நினைப்பில், தனது அல்லல்கள் பெரிதாகப்படவில்லை.

     தாசில்தாரின் சீட்டைப் பெற்றுக் கொண்டு ரயிலேறி மண்டபத்துக்கு வந்து இறங்குகிறார்கள். மாலை மங்கி வரும் நேரம். பாய், மூட்டை அலுமினியக் குண்டான் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு மணலில் நடந்து வருகையில் ஏழெட்டு இளைஞர்களும் பெண்களும் கும்பலாக அலுவலகத்தின் முன் நிற்கின்றனர்.

     முருகேசு, தன்னுடன் படகில் வந்தவர்களென்று அவர்களைக் கண்டு கொள்கிறான். பாம்படம் போட்டுக் கொண்டிருக்கும் கிழவி, ஆக்ரோஷத்துடன் மணலில் துப்புகிறாள்.

     “எங்க பயன், வுடமாட்டா. பொலீசு கிலீசெல்லாம் பயமில்ல.”

     “அங்கதா ஆமிவாரது, கொமப்புள்ளிங்களக் கொலய்க் கிதுன்னா, இங்க அதயும் காட்டிலும் மோசமா இருக்கி. வந்தது வாரதுன்னு அங்கியே கெடந்து செத்திருக்கலாம்... கால மாடனுவ... அம்புட்டும் கொள்ளயடிக்கிறானுவ. என்ன கொண்டாந்த, ஏது கொண்டாந்த...ன்றதும் பூடிசு காலால சவட்டுறதும்?...”

     “ஏ அம்மா? என்னா விசயம்?...”

     “ஒரு புள்ளயப் போலீசுக்காரன் இனிஸ்பெட்டரோ என்னவோ, கொண்டிட்டுப் போயி, கொலச்சிப் போட்டான், பாவி. இவவுங்க, கடய்க்குப் போனபுள்ள திரும்பலியே இருட்டிப் போச்சேன்னு நாலாபக்கமும் தேடறா... அது... பாவம்... அழுதுட்டே பத்து மணிக்கு ஓடியாருது...”

     “அட பாவிகளா?” இப்படியா கழுகுகளும் பருந்துகளுமாக மனிதன் மாறுவான்?

     “யாரு புள்ள...?”

     “தா, அந்தப் பெரியம்மா, அவிய பேத்தி... சின்ன பொண்ணு, கடயில, முட்ட வாங்கிச்சாம். கெட்டுப்போன முட்டய அதிக வெலக்கிக் குடுத்தாங்களாம். இது சண்ட போட்டு காசத்திருப்பிக் குடுன்னிச்சாம். நாங்க அகதிகதான்னு ஏ இப்பிடி எல்லாம் ஏமாத்துறியன்னிச்சாம். அப்ப பொலீசுக்காரரு என்ன கரச்சல்னு வந்தானாம். டேசனுக்குவா, எழுதிக்குடுன்னு கூட்டிட்டுப் போனானாம், பாவி...”

     “ஸியா! மந்திரி வந்தாரு. நல்லா இருக்கீங்களான்னு பேசுனாரு...” என்று குதித்துக் கொண்டு பேசிய பெண்... கள்ள மற்ற குழந்தை... அங்கு, அக்கரையில், கரச்சல், குழப்பம், சண்டை... வெடி... எல்லாம் அடியோடு புரண்டு போயிருக்கிறது. காக்கி உடுப்புக்காரன் மிருகமாகக் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறான். இந்தக் கரையில், பயமில்லை என்று சொல்லிக் கொண்டு உலவும் சூழலில் கொடிய விலங்குகளாய்ப் பாயக் காத்திருக்கும் ‘காவல்’ சிப்பாய்கள்...

     தன் பொறுப்பில் புறாக்களாகப் பதுங்கும் ‘பெட்டைகளை’ தாய்ப்பறவையாக அவன் நினைப்பு கவிந்து கொள்கிறது.