6

     மாமுண்டி, இளவயசுக்காரனே ஒழிய, மந்த இயல்பினன். இன்னதுக்கின்ன செய்ய வேண்டும் என்ற கூரில்லாதவன். அதுவும் குடித்துக் குடித்துத்தானோ என்னமோ, ஓர் உந்துதலே இவனிடம் காணப்படவில்லை. இந்தப் பயலை ஃபாக்டரிக்காரர் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளியதில் வியப்பில்லை.

     குளிரும் இருளுமாகக் கவியும் சூழலில், சாக்கு மூட்டை, பாய், குண்டான், பெட்டி என்று இறக்கி வைத்துக் கொண்டு அவர்கள் நிற்கின்றனர். அவர்களில் சுகந்திக்கு மட்டுமே சுமாராகப் படிக்கத் தெரியும். அந்த விலாசச் சீட்டில், முத்து வேலு பிள்ளை, குன்சோலை கருபாலத்தருகே, முள்ளிப்பள்ளம்... கோத்தகிரி நீலகிரி என்று இருக்கிறது. கோத்தகிரி வந்து விட்டார்கள்.

     கடை வாசலில் கோட்டும் தலைக்கட்டும் மஃப்ளருமாக நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் முருகேசு அந்த விலாசச் சீட்டைக் காட்டுகிறான்.

     அவர் தமக்குத் தெரியாது என்று சொல்கிறார். முருகேசு இன்னும் இரண்டு மூன்று பேரிடம் விசாரணை செய்த பிறகு, அங்கு கடையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆளிடம் காட்டுகிறான்.

     அவன், இவர்களைப் பார்த்துவிட்டு, “நீங்க ஸ்லோன் ஆளுங்களா?” என்று விசாரிக்கிறான்.

     “ஆமாங்கையா. அலையக் கொலைய வாரம். அந்தப் பிள்ளைகளோட அப்பன் சித்தப்பன் வீட்டுக்காரங்க...”

     “பாலம் இங்க இருக்கு. ஆனா, நீங்க கேக்கற மாதிரி இங்க ஒரு இடமும் இல்ல. மூணு நாலு கிலோமீட்டர் தள்ளிப் போனா, அவங்களுக்கு வூடுகட்ட எடம் குடுத்திருக்காங்க... நீங்க போயி, அங்க ஆபீசு இருக்கு, விசாரியுங்க!...”

     “ஆபீசு எங்க இருக்குங்க...?”

     “...முன்ன கீழ இருந்திச்சி. இப்ப மேல கொண்டிட்டுப் போயிட்டாங்க போல. போர்டக் காணம். நீங்க இப்பிடி மேலே போயி விசாரியுங்க...”

     அவன் காட்டிய பாதை நெட்டுக்குத்தாக, சரளைக் கற்களும் படுக்கைக்கற்களும் நிரம்பியதாக இருக்கின்றது. பெண்கள் எல்லோரும் பழக்கப்பட்ட இடம் - குளிர் என்றாலும் கூட, இப்போது பழக்கம் விட்டுப் போனதாலும், ஒற்றைச் சட்டையும் துணியும் அணிந்து கொண்டிருப்பதாலும், குளிருக்கு இரு கைகளையும் முன்புறம் குறுக்கே போட்டுக் கழுத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். திரும்பி வந்து, “பதனமா இருந்துக்குங்க... மேலே ஆபீசு இருக்குதாம், சாரிச்சிட்டு வரலாம்... மாமுண்டி, வா, நீயும்... பரமு அண்ணே, அப்படி ஓரமா குந்திக்குங்க. போய் விசாரிச்சிட்டு வாரம்... புள்ளங்க பத்திரம்!...”

     மாமுண்டியின் காலில் செருப்பு இருக்கிறது. முருகேசுவுக்குச் செருப்பும் இல்லை. சரளைக்கற்கள் குத்த, மேலே ஏறுகையில் இவனுக்கும் பழக்கமில்லாத நிலையில் மூச்சு வாங்குகிறது. அந்தப் பாதையின் இருமறுங்கிலும் பெரிய பெரிய மாடிக்கட்டிடங்கள் இருக்கின்றன. வருபவர் போகிறவர்கள் நன்கு உடையணிந்தவர்களாக இருப்பதால், இவர்கள் அந்தச் சூழலுக்கே அன்னியமாகின்றனர்.

     கம்பளிச் சட்டையுடன் ஓர் ஆள் இறங்கி வருகிறான்.

     முருகேசு சற்று மூச்சு விட நின்று, “...ஐயா, ...நாங்க ஸ்லோன் காரங்க. தாயகம் திரும்புறவங்களுக்குன்னு ஒரு ஆபீஸ் இருக்குதாமே, அது எங்கங்க இருக்கு?...”

     அவன் வாய் திறந்து பதில் சொல்லாமல் மேலே என்றபடி ஆகாசத்தைக் காட்டினார் போல் கையைக் காட்டி விட்டு இறங்கிப் போகிறான்.

     “இன்னும் மேலியா?...”

     “ஆமாம்... மேல...” என்று பின்னால் வரும் இளவட்டங்கள் இருவரும் சிரிப்பது போல் இவனுக்குத் தோன்றுகிறது.

     சாலையில் நடந்தால், “தோணி... கள்ளத் தோணி...” என்று நையாண்டி செய்தார்கள். இவர்களை இழிவு படுத்தினார்கள். அதே நிலையா இங்கும் என்று மனசில் சுருக்கென்று ஊசி குத்துகிறது.

     மேலே மேலே சென்ற பின், அங்க மைதானம் போல் சற்றே அகலமான ஓரிடத்தில் விளக்குகள் போட்ட ‘டென்ட்’ கொட்டகை ஒன்றிலிருந்து ஒலிபெருக்கி ஏதோ பேச்சை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

     சினிமா கொட்டகையா அது?...

     இல்லை... “தாய்மார்களே, சகோதரர்களே, ஈழ விடுதலை இயக்கச் செய்திக் கண்காட்சி... இலங்கை ராணுவம், ஈழப் போராளிகளை வேட்டையாடுவதாக நிரபராதிகளைக் கொன்று குவிக்க, வெறித்தனமாகக் கட்டவிழ்க்கப்படுகிறது. எமது இளம் வீரப் போராளிகள், அஞ்சா நெஞ்சத்துடன் புரியும் சாகசங்கள், கூலிப் படையினரைத் திகைக்க வைக்கின்றன. செய்திகள் காட்டும் விளக்கப் படங்கள்... கண்காட்சி காண வாருங்கள், கட்டணமில்லை...”

     இதுபோல் எங்கேனும் ஒலிபெருக்கி போட்டு விட்டால் குஞ்சு குழந்தைகள் முதல் ஓடி வருமே?

     இங்கு யாரும் வரவில்லை. நின்று பார்க்கவுமில்லை; கேட்கவும் இல்லை.

     ஒருவேளை இதுவே அவர்கள் தேடி வந்த ஆபீசாகவும் இருக்கலாம் அல்லவா?

     முருகேசு, சாலையோடு இணையும் பரப்பில் நடந்து அந்தக் கூடாரத்துக்கு வருகிறான். வாசலில் ஈழ விடுதலைப் போராளி போல் தொப்பியும் சட்டை, பெல்ட்டும் அணிந்து ஓர் இளைஞன் நிற்கிறான்.

     “ஏம்ப்பா, தம்பி, நாங்க தாயகம் திரும்பிய தோட்டத் தமிழருங்க. ஆபீசு எங்க இருக்கு?... இதா ஆபீசா?”

     அவன் “உள்ளே வந்து பாருங்க...” என்று கூப்பிடுகிறானே ஒழிய, கேட்டதற்கு நேரான மறுமொழி கொடுக்கவில்லை.

     என்றாலும் முருகேசுவும் மாமுண்டியும் உள்ளே செல்கிறார்கள்.

     இருவருக்கும் படிக்கத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொள்ளும் மனநிலையும் இல்லை. திரும்பத் திரும்ப இராணுவம் சுட்டுத் தள்ளிய, எரிந்த கோலங்கள், இடிந்த கட்டிடங்கள், வீழ்ந்த மனித சடலங்கள், கண் நொள்ளைகளாக... அலங்கோலமாக பலியான வீரப்பிள்ளைகளின் படங்கள்...

     இவற்றை எல்லாம் இவன் படங்களில் பார்க்க வேண்டுமா? பேசாலையிலும், மன்னாரிலும் எரிக்கப்பட்ட காட்சிகளை நேராகப் பார்த்தவன் தானே?

     ஆனால் எங்கோ இந்த மலை மூலையில் இவர்கள் கொட்டகை போட்டு கலர் பல்ப் போட்டு, இதை எல்லாம் காட்டுவார்கள் என்று நினைத்துக் கூட அவன் பார்த்திருக்கவில்லை. சாலையில், மேட்டில் எத்தனையோ மக்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். அவர்களில் எவருக்கும் இதற்குள் வந்து பார்க்கும் அவகாசமோ, ஆவலோ இல்லை. இதை விட இரண்டு தலை ஆட்டுக்குட்டி, கை முடமாக பெண் காலால் செய்யும் சாகசம் என்று ஏதேனும் வைத்திருந்தால் கூட்டம் கூடுமாக இருக்கும் என்று அவனே நினைத்துக் கொள்கிறான்.

     “ஏப்பா, நீ ஈழப் போராளியா?...”

     அவன் வாயைத் திறக்காமல் சிப்பாயைப் போல் விறைப்பாக நிற்கிறான்.

     “உங்கிட்ட கேட்டனே, தாயகம் திரும்புறவங்களுக்கான ஆபீசு எங்க இருக்குன்னு?”

     அவன் சிறிதும் அசையாமல், “தெரியல...” என்று சொல்கிறான்.

     முருகேசுவுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வருகிறது. அடக்கிக் கொள்ளும் முயற்சியாக நாவைக் கடித்துக் கொள்கிறான்.

     பாவிப் பயகளா? தெரியல... தெரியாம சுடுகாடாப் போகட்டும்!

     தேன்கூட்டில் தீயச் சொருவின பாவிப்பயக... அந்த நாளில தோட்டக்காட்டான், வடக்கத்தியான்னு எங்கள ஏசினீங்க. இன்னக்கி... இன்னக்கி அந்தப்... பயன் தூத்துகுடியில் கண்டபயன், எவ்வளவு இதமாப் பேசுனான்? எங்க மின்னோர் பண்ண தப்ப நாங்க பண்ணலன்னானே? அவன் வேற, இவன் வேறயா?

     படுபாவிக... தெரியலியாம், தெரியல...

     கண்களில் நீர் கொப்புளிக்கிறது. மூக்கில் நீர் பெருகி வருகிறது. ஒரு பருக்கைக் கல் ஏற்கெனவே வெடித்திருந்த கட்டை விரல் இடுக்கில் குத்திப் பதம் பார்க்கிறது. உடல் வலியைக் காட்டிலும் நெஞ்சுக் காயங்கள் அதிகமாக வேதனைப் படுத்துகின்றன. “சிங்கள ஆமி அடிக்கிது, உதைக்கிதுன்னு சொல்லி இங்க நாயம் கேக்க வந்தாப்புல தான காட்சி போட்டிருக்கிய? அட ஒரு தோட்டத் தொழிலாளி அம்போன்னு வந்து நின்னு அட்ரசு கேக்கறான், அநுகூலமா, ‘மாமா, எனக்குத் தெரியல, விசாரிச்சிச் சொல்றேன்னு’ சொல்லக்கூடாதா? அத்தனிக்குக் கூட ஈரம் இல்லாத நீங்க என்னாடா நாயம் செய்திடப் போறீங்க லட்ச லட்சமான எங்க சனங்களுக்கு?

     அந்த மேல் சாலையில் விளக்குகள் பூத்திருக்கின்றன. சும்மாடு சுமந்த தலைக்கட்டுடன் கூலிக்காரர் சிலர், பெண்கள், திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

     முருகேசு, விரைந்து சென்று ஒருத்தியிடம், “ஏத்தா, நாங்க... ஸ்லோன் தோட்ட ஆளுங்க, தாயகம் திரும்பினவங்களுக்கு ஆபீசு இருக்குதாமே... அது எங்கன்னு தெரியுமா?...”

     அவள் சற்றே நின்று விட்டு, “இதா ரோட்டுல ரெண்டு விளக்குக் கப்பால, இந்திரா அம்மா படம் போட்ட ஆபீசு ஒண்ணு இருக்கு. அங்க விசாரிச்சிக்குங்க...” என்று சொல்கிறாள். அதே குரலுடன், “இப்பிடி அன்னாடம் வந்து வுழுறாங்க, இங்க. நமக்கு இந்தக் கூழிலும் மண்ணடிக்க” என்று சொல்லிக் கொண்டு நடப்பது காதில் விழுகிறது.

     அவள் சொன்ன இடம் அவர்கள் நாடி வந்த அலுவலகம் அல்ல. ஆனால் அங்கே கோட்டும் தொப்பியுமாக நின்ற பெரியவர், தாயகம் திரும்பியவர்களுக்கான ஆபீஸ், பஸ் நின்ற இடத்திலிருந்து நெட்டுக் குத்தாகச் செல்லும் கீழ்ப்பாதையில் சென்றால், ஒரு பாலம் வருமென்றும், பக்கத்தில் கிழங்கு மண்டி ஒன்று இருப்பதாகவும், அங்குதான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். முருகேசு தெம்புடன் ‘முத்துவேல் பிள்ளை’ என்ற முகவரி சீட்டைக் காட்டுகிறான். “அங்க ஆபீசில கேளுங்க, சொல்வாங்க. அதிகமான பேர் இங்க வந்து தோட்டங்களில், மண்டிகளில் வேலை செய்கிறார்கள். போய் விசாரியுங்க.” இறங்குவது கடினமாக இல்லை. இதற்குள் இருட்டிப் போகிறது.

     சடயம்மா, பிள்ளையை இழுத்துத் தலையோடு கால் சேலைத் தலைப்பினால் மூடிக் கொண்டிருக்கிறாள்.

     “கெடச்சிச்சா மாமா?”

     “மேல போன்னாங்க... மேல போனம். இப்ப மீள போன்றாங்க.”

     “போய்ப் பார்ப்பம்...? நம்ம அல்லல் என்னைக்குத் தீருமோ?”

     கீழே நெருங்க நெருக்கமான வீடுகள், சிறு கடைகள், ஏழை எளியவர் நெருங்கும் இடங்களாகப் போகின்றன. லாரிகள், லாரிக்காரர்களின் பேச்சுக்கள் - கள் சாராயக்கடை, குப்பை கூளங்கள், என்று கடந்து பாலம், ஆபீசுக்கும் வந்து விட்டார்கள்.

     ஆனால், அந்த ஆபீசு பூட்டிக் கிடக்கிறது. யாருமே இல்லை.

     அருகில் ஒரு கடை முகப்பில், கந்தலும் வறுமையுமாக ஒரு குடும்பம் இடம் பெற்றிருக்கிறது. முருகேசுவுக்குப் பீதி நாவை அழுத்துகிறது. ஒரு கால் அவர்கள் இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளோ?

     இல்லை. அவர்களிடம் அவன் எதுவும் கேட்கவில்லை. முருகா... மீனாட்சி தாயே ஈசுவரா... எங்கக்கு இனிச்சோதனை வேண்டாம்...

     மீண்டும் அவன் மேலேற வரும் போதுதான் மாமுண்டு தன்னுடன் வரவில்லை என்று புரிந்து கொள்கிறான்.

     “ந்தப்பய எங்க போனான்?”

     வரவேயில்லையா தன் பின்னே?... சோம்பேறிப் பயல்.

     இனியும் எங்கும் போய்த் தேட முடியாது. இரவு எங்கேனும் தங்கிவிட்டு காலையில் விசாரித்துக் கண்டு பிடிக்கலாம். இரவு எங்கே தங்குவார்கள்?...

     கலவர காலத்தில் லயங்களில் தங்க அஞ்சி, மலைமேல் தேயிலைச் செடிகளிடையே, விஷப் பூச்சிகளின் அபாயத்தில் கூடத் தங்கி இருக்கிறார்கள். அப்படி...

     முருகா...

     மனசோடு கூவிக் கொண்டு மேலேறி வருகையில்... பின்னால் மாமுண்டி மெல்ல வருவதைக் கண்டுகொள்கிறான்.

     “எல, எங்கடா போயிட்ட...?”

     அவன் பதில் சொல்லவில்லை. ஆனால்... குடித்து விட்டு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

     அட பாவிப்பயல, ஊருல காலு குத்தியதும் எங்க கள்ளுக்கடை, சாராயக்கடைன்னு பாத்துத் தொலச்சிட்டியா? உருப்பட்டாப்பிலதா!

     முருகேசு துயரங்களை விழுங்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

     அவர்களை நிற்க வைத்த இடத்தில்... சிறுமிகளின் புள்ளிச் சட்டை... முழங்காலுக்குக் கீழே வராத பாவாடை... புலப்படவில்லை. குழந்தைகள்... சடயம்மா, கீழே குந்தியிருந்த பரமு...

     யாரும் இல்லை. பஸ் ஒன்று வந்து மக்கள் யார் யாரோ இறங்குவதும் நடப்பதுமாகச் சந்தடியாக இருக்கிறது. பஸ் சென்ற பின் அவன் அங்குமிங்கும் பார்வையை ஓட்டுகிறான்.

     எங்கே அவர்கள்?... ஏவுட்டி...! சுகந்தி...! சரோசா...!

     பிள்ளைகளை யாரேனும் கடத்திப் போய் விட்டார்களா? பரமு, சடயம்மா, குழந்தைகள்... எங்கே? இங்கே தானே நின்றார்கள்?

     “எல... எண்டா, மரமாட்ட நிக்கிற? பாரு அந்த பக்கம் போயி!” முருகேசு எதிரே இருக்கும் கடைக்காரரிடம், “ஏய்யா, இப்ப பஸ்ஸில வந்து எறங்கி நின்னாங்களே பொண்ணுங்க, ஒரு முடியாத ஆளு எல்லாரும் எங்கே போனாங்க தெரியுமா?...”

     “நா கவனிக்கலியே?...”

     ஆமாம், கவனிக்கிற நேரமா? பகல் வெளிச்சமானாலும் கவனித்திருப்பார்கள்.

     முருகேசு அழுது விடுவான் போல் உடைந்து போகிறான்.

     தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே செல்கையில், பெரிய விளைக்கை வைத்துக் கொண்டு, ஓராள் சுடச்சுட வண்டியில் ஏதோ தீனி விற்கிறான். பச்சியோ, வடையோ...

     அந்தக் கும்பலிலிருந்து சரோ ஓடி வருகிறது.

     “தாத்தா...? தாத்தா...? நாங்க இங்க இருக்கிறம்... இதா பச்சவேலு மாம வந்திருக்கு...”

     “மாமா... இத தாத்தா...!”

     செவிகளில் தேன் பாய்ந்தாற் போல் இருக்கிறது.

     தலையில் பூத்துவாலை. மூடாத கோட்டு, சராய். பளிச்சென்று பற்கள் தெரிகின்றன. “...வணக்கம்... மாமு... நா இங்கதா லோடு ஏத்தி லொரில வந்திட்டிருந்த. பாத்தே... சட்டுனு சுகந்திப்புள்ள மாதிரி தெரிஞ்சிச்சி. எறங்கின. பாத்தா அவுங்கதா...”

     முருகேசுவின் உள்ளம் முருகா, முருகா என்று கரைகிறது.

     முத்துவேல் மாமன் இப்போது அங்கு இல்லை. கூனூர் பக்கம் எங்கோ உருளைக்கிழங்குத் தோட்டத்தில் அவர் தம்பி... சிறியவர் இருக்கிறார். பச்சைவேலு, முத்துவேல் பிள்ளையின் மச்சான் மகன். இவனுடைய தாய் தந்தையர் சென்னையில் இருக்கிறார்கள். இவன் லாரி ஓட்டுவான். சரக்கெடுக்க நீலகிரி முழுவதும் எங்கும் போவான்... அவர்கள் எழுபத்தெட்டு கடைசியில் இந்தியாவுக்கு வந்தார்கள்...

     “எல்லாம் வாங்க, நம்ம வீட்டுக்குப் போவலாம்!”

     ...நம்ம வீடு...

     முகமறியாத இடத்தில் நம்ம வீட்டுக்குப் போகலாம் என்று கூப்பிடுகிறான்... தங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் அவன் அவர்களை எங்கோ கூட்டிச் செல்கிறான். மேட்டில் ஏறி, வரிசையாக லயன் போல் தெரியும் வீடுகளுக்கு முன் நின்று குரல் கொடுக்கிறான்.

     “அம்மா...?”

     ஒரு பையன் தான் கையைக் கட்டிக் கொண்டு வருகிறான்.

     “பொட்டம்மா இல்ல?...”

     “குன்னூரு போயிருக்காவா...”

     “நெம்பர் ரூம்பு சாவி இருக்கா? கொஞ்சம் ஆளுவ வந்திருக்காவ. காலைல எடம் பாத்துட்டுப் போயிருவா... சாவி தா...”

     பையன் சாவி கொண்டு வந்து கொடுக்கிறான். அந்த வளைவுக்குள் விறகோ, சாமானோ போடும் தகரத் தடுப்பு அறை ஒன்று பூட்டப்பட்டிருக்கிறது. அதைத் திறந்து விடுகிறான். மின் விளக்கைப் போடுகிறான். அங்கே கட்டை அடுக்கியிருக்கிறார்கள். அதன் மேல், தட்டுமுட்டு, உடைந்த சைக்கிள் பகுதிகள், குழந்தை விளையாடும் ஆடும் குதிரை என்று கிடக்கின்றன. ஒதுக்கிவிட்டால் நாலும் பேர் தான் படுக்க இடம் தேறும்.

     விறகை வெளியே எடுத்துப் போட்டுப் பெருக்கினால், தாராளமாகப் படுக்கலாம். இளைப்பாறலாம்.

     பின்புறம் குழாய் இருக்கிறது...

     பச்சையே விருவிரென்று சாமான்களை வெளியே வைக்கிறான். விறகை ஆளுக்கு இரண்டு கைகளாக வெளியே எடுத்துப் போடுகிறார்கள். சரசரவென்று வேலையாகிறது. சடயம்மா துடைப்பம் கொண்டு கூட்டி விட்டாள். சுத்தமாகி விட்டது. கதவை மூடிவிட்டால், பெட்டி போலாகிவிடும்...

     “சொந்தக்காரங்க... தெரிஞ்சவங்களா?...”

     “ஆமாம் ரொம்ப நெல்லவங்க. கிழங்கு தோட்டம், தர்க்காரித் தோட்டம் இருக்கு. ரெண்டு புள்ளய அமெரிக்கா போயிட்டா. குன்னூரில மக இருக்கு. போயிருப்பாங்க, இந்த ஊருக்காரங்க...”

     “என்னமோப்பா, முருகனே வந்தாப்பில வந்த... எனக்கு வேறொண்ணும் சொல்லத் தெரியல...”

     “ஏனம் எதுனாலும் இருந்தா குடுங்க. தேத்தண்ணி வாங்கியாற ராவிக்கு சாப்பாட்டுக்கு...”

     “இருக்கு...” என்று சடயம்மா சொல்கிறாள்.

     “வேவிச்ச கெளங்கு வாங்கினம். பன்னு, முருக்கு எல்லாம் வச்சிருக்கே. சோறும் கொஞ்சம் போல இருக்கு... நீங்க ஆம்பிளங்க எதானும் சாப்பிட்டுட்டு வாங்க...”

     “அதெப்படிப் பத்தும்?...”

     அவன் ஏனம் வாங்கிக் கொண்டு போகிறான்.

     “நீங்க வரவேணாம் மாமு. ஆறுதலா இருங்க...”

     “அப்பாடி...” என்று முருகேசு குந்துகிறான்.

     சுகந்தியின் முகத்தில் ஒரு மலர்ச்சி... சந்தோஷம் எட்டிப் பார்க்கிறது. “சடயம்மா, புள்ள ஏ சவண்டு கெடக்கு?... உக்காருங்க... இந்த மட்டும் வந்து சேர்ந்திட்டம்...”

     “புள்ளக்கிக் காயுது...” துணியை மடித்துப் போட்டுக் கீழே விட்டுப் போர்த்துகிறாள்.

     சற்றைக்கெல்லாம் பச்சை சூடாகத் தேநீரும் தோசைப் பொட்டலங்களும் கொண்டு வருகிறான்.

     எல்லோரும் பசியாறி, களைப்பின் மேலீட்டாலும், பயண அலுப்பினாலும் உறங்கிப் போனார்கள். முருகேசு கண் விழிக்கும் போது, பொழுது நன்றாக விடிந்திருக்கிறது. பனிமூட்டமும், பசுமையான சரிவுகளும், வீடுகளும், எதிர்கால நம்பிக்கைகளும் புரியாத நடப்புக்களையும் போல் ஒன்றுக்கொன்று முரண்களாகத் தோற்றுகின்றன.

     குழந்தைகள் அயர்ந்து நெருங்கிப் படுத்துப் பிணைந்து கொண்டு உறங்குகின்றனர். மாமுண்டி பிள்ளைகள், ஒரு பாயில் நெருங்கிக் கிடக்கின்றனர். பரமு இப்போதுதான் எழுந்து குந்தி இருமுகிறான்.

     முருகேசு, சரிவில் இறங்கிப் பார்க்கிறான். நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரம் ஒன்று வெட்டப்பட்டுச் சரிந்திருக்கிறது. புல் நுனிகளில் பனிநீர், வெறும் கால்களில் தேள் கொட்டலாய்க் கடுக்கச் சுரீலென்று பாய்கிறது. ஒற்றைச் சட்டைக்குமேல் இராமநாதபுரத்தில் வாங்கிய போர்வையைப் போர்த்தி இருக்கிறான்.

     இராமேசுவரத்தில் மாற்றிய பணத்தில், ஆயிரம் போல் செலவழித்தாகிவிட்டது. இன்னும் இங்கே தங்க, வீடு எடுக்க வேண்டும். கொஞ்சம் போர்வை துணி வாங்க வேண்டும்... எல்லாவற்றுக்கும் முருகன் இருக்கிறான்...

     பச்சைவேலு அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.